ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I

இத்தனை நாள் எழுதியதில் என்ன புத்தகங்களைப் பற்றி திருப்பி எழுதலாம் என்று புரட்டிப் பார்த்தபோது முதலில் வந்தது நினைவு வந்தது இந்தப் புத்தகம்தான். 2010-இல் எழுதியது, ஒரு எழுத்தைக் கூட இன்றும் மாற்ற வேண்டியதில்லை.


நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் எப்படி இருக்கும், என் references என்ன என்றெல்லாம் எழுதியாயிற்று. ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

என் சிறு வயதில் படித்த நல்ல புத்தகங்களில் “ஜயஜய சங்கர” ஒன்று. இதை படித்தபோது காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது மரியாதை அதிகரித்தது. சமீபத்தில் மறு வாசிப்பு செய்தபோது இது நல்ல புத்தகம் என்பது எனக்கு உறுதிப்பட்டது. காஞ்சி சந்திரசேகரர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதே தெரிந்திருக்கலாம். எனக்கு அவரைப் பற்றி இருக்கும் இமேஜை இந்தப் புத்தகம் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர் மீது மரியாதையும் அதிகரிக்கிறது.

பதிவு நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக போட உத்தேசம்.

கதைக்கு உன்னத மனிதர்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். கதையில் வரும் பலரும் noble souls, லட்சியவாதிகள். இந்த நாவலே லட்சியவாதத்தை தூக்கிப் பிடிப்பதுதான்.

கதை நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 1975 வாக்கில்.

நாயகன் ஆதி ஹரிஜன். (இந்த புத்தகம் வரும்போது தலித் என்ற வார்த்தை பரவலாகவில்லை.) சுதந்திரப் போராட்டத்தின்போது மகாலிங்க ஐயர் என்பவர் சேரியில் ஒரு காந்தி ஆசிரமம் நடத்துகிறார். அங்கே படித்து பெரியவனாகும் ஆதி ஐயரின் மகள் சுதந்திர தேவியையே மணந்து கொள்கிறார். ஒரு வளர்ந்த பையன், ஒரு வளர்ந்த பெண், ஒரு சிறு பையன் என்று குடும்பம் இருக்கிறது. மூத்தவன் மகாலிங்கத்துக்கும் ஆதிக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதில் தகராறு. ஆதி அதை பயன்படுத்தக் கூடாது என்கிறார், மகாலிங்கமோ அதை வைத்து வேலையில் சேர்கிறான். தான் உயர்வாக கருதிய/கருதும் விழுமியங்களை இந்தக் காலத்தில் யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல் ஆதிக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

ஆதியின் சிறு வயது நண்பன் சங்கரன். இன்றைய “சுவாமிகள்” – சங்கராச்சாரியார்தான். சிறு வயதில் ஆற்றோடு போக இருந்த சங்கரனை தொட்டு காப்பாற்றியது ஆதிதான். எப்போதும் இறைவனை ஆதியின் உருவில்தான் பார்க்கிறார் சுவாமிகள். காலம் அவர்களை வேறு வேறு பாதையில் செலுத்திவிட்டாலும் ஆதியை அவர் நினைக்காத நாளில்லை.

சிங்கராயர் பழைய காலத்து சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு இடிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டில் கஷ்டங்களோடு வசிக்கிறார்.

அவரது ஒரே மகன் சத்தியமூர்த்தி. மகா அறிவாளி. இப்போது ஜெயிலில். எமர்ஜென்சி ஆரம்பிக்கும் முன்பே ஜெயில், அதனால் சித்திரவதையை அனுபவிக்கவில்லை. மேலும் ஜெயிலராக இருக்கும் மூர்த்தி சத்தியமூர்த்தியால் கவரப்படுகிறான், தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

ஆதியின் மகன் மகாலிங்கம் இவர்களோடுதான் இருக்கிறான். அவன் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டதற்கு காரணமே இந்த கூட்டத்துக்கு விவரம் சேகரித்துத் தரத்தான். இவர்களைத் தவிர, உமா என்று போராளிப் பெண், ஆதியின் குடும்பம், மகாலிங்க ஐயரின் அண்ணனும், சுவாமிகளின் பூர்வாசிரம அப்பா – சமஸ்காரங்களில் ஊறியவர் – என்று பல “சின்ன” பாத்திரங்கள்.

கதை முக்கியமே இல்லை, பாத்திரங்கள்தான் முக்கியம் – இருந்தாலும் கதை என்ன என்று கேட்பவர்களுக்காக: ஆதி தன் சிறு வயது மகனை மீண்டும் வேதம் படிக்க வைத்து உண்மையான பிராமணன் ஆக்குங்கள் என்று சுவாமிகளை கேட்கிறார். சுவாமிகள் முதலில் உன் பெரிய மகனை அணைத்துக் கொள் என்று சொல்கிறார். மகாலிங்கத்தின் காரணங்களை ஆதி புரிந்துகொள்கிறார். அவர், சிங்கராயர் மற்றும் பலர் ஒரு காந்தி ஆசிரமம் நடத்த முன் வருகிறார்கள்.

படிக்கும்போது ஒரு மாபெரும் ஓவியத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

சின்ன வயதில் இதை நான்கு தனித்தனி மாத நாவலாக படித்திருக்கிறேன். இதில் வரும் சங்கரன் – சுவாமிகள் – காஞ்சி சந்திரசேகரரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாத்திரம் என்பது படித்தால் சுலபமாக புரிந்துவிடும். ஜெயகாந்தன் சந்திரசேகரரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. இதில் வரும் சித்திரம் அவர் மீது மரியாதையை அதிகரிக்கும். அன்று எனக்கும் அதிகரித்தது. இன்றும் அப்படித்தான்.

சிறு வயது சங்கரனும் ஆதியும் நண்பர்கள். ஆனால் தவறுதலாகக் கூட கை படக்கூடாதென்று இருவரும் கவனமாக இருப்பார்கள். ஆற்றோடு போகும் சங்கரனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை இழுத்து வரும்போது மட்டுமே அந்த ஆசாரம் உடைகிறது. வயதான பிறகு தன் “சொந்த” கிராமத்துக்கு வரும் சுவாமிகளை ஆதி தொலை தூரத்திலிருந்துதான் பார்க்கிறார். மடத்துக்கு வர முயல்வதில்லை. சுவாமிகள் ஆதியை கூட்டி வரும்படி ஒரு மடத்து காரியக்காரரிடம் சொல்கிறார். அவரிடம் ஆதி தான் ஹரிஜன் என்று சொல்ல, அதை நேராக வந்து சுவாமிகளிடம் அவர் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் சொல்லும் பதில் – “அவன் ஹரிஜன்னா மத்தவாள்ளாம் சிவஜனோ?” அப்புறம் ஆதி வழக்கமான பரிகாரமான பசுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சுவாமிகளைப் பார்க்க வருகிறார். சுவாமிகள் வேறு ஒரு இடத்தில் விதவைகள் கையில் ஒரு குழந்தையோடு வந்தால் தரிசனம் கொடுப்பேன் என்று ஒரு பரிகாரம் சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதில் வரும் சுவாமிகளின் சித்திரம் உண்மையான ஞானம் நிறைந்த ஒரு மகான், தன் சொந்த நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை உடைக்க விரும்பாத, அவற்றை ஓரளவு வளைக்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு மதத் தலைவர். மாற்றங்கள் தானாக ஏற்பட வேண்டும், அதை ஏற்படுத்த ஒரு மதத் தலைவர் முயலக் கூடாது என்று நினைப்பது போல இருக்கிறது.

இந்த உன்னத மனிதர்கள் எல்லாருமே பொதுவாக அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தனக்கு உரிமை இருந்தபோதும், அதை பிடுங்குவதில்லை. ஆதி கோவில்களுக்குள் நுழைவதில்லை. என்று அவரை முழு மனதாக ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று போனால் போதும் என்று இருக்கிறார். ஆதி தன் குடும்பத்தவரிடம் – குறிப்பாக மூத்த மகனிடம் மட்டுமே தன் கருத்தை திணிக்க முயற்சிக்கிறார், மற்ற அனைவரையும் அரவணைத்துப் போகவே முயல்கிறார்.

ஜெயகாந்தனிடம் இது ஒரு பெரிய மாற்றம். இங்கே தெரியும் ஜெயகாந்தன் அக்னிப்ரவேசத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் தாயை உருவாக்கியவர் இல்லை; யுக சந்தியில் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பேத்திக்கு துணை போகும் பாட்டியை உருவாக்கியவர் இல்லை. ஆனால் அந்த மனிதர்களிடம் இருக்கும் மனித நேயம், பரஸ்பர அன்பு எல்லாம் இவர்களிடமும் இருக்கிறது. அதனால் இவர்கள் அநியாயங்களை எதிர்த்து, நியாயங்களை ஆதரித்து கூப்பாடு போடவில்லை, they try to work around it. எமர்ஜென்சியை எதிர்த்து மட்டுமே கொஞ்சம் போராடுகிறார்கள். நமக்கு இந்த கதைகளில் தெரிவது போராளி ஜெயகாந்தன் இல்லை, ஒரு mellowed down ஜெயகாந்தன்.

அருமையான பாத்திரப் படைப்புகளுக்காக இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இதற்கு ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற sequel உண்டு.

இன்னும் ஒரு sequel கூட – ஹர ஹர சங்கர – வந்திருக்கிறதாம். அதை நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • ஜய ஜய சங்கர – ஒரு அலசல் பகுதி 2
  • ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரோ நாம்
  • அழியாச்சுடர்கள் தளத்தில் யுகசந்தி சிறுகதை
  • (ஜெயகாந்தனின் பிற படைப்புகள் பற்றி):

  • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
  • “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
  • One thought on “ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I

    மறுமொழியொன்றை இடுங்கள்

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

    Connecting to %s

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.