எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். வர வர சங்கக் கவிதைகளாவது படிக்க முடிகிறது, ஆனால் பாரதியாரைத் தவிர்த்த நவீனக் கவிஞர்களை அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட என்னை இந்த எளிமையான கவிதை எப்படி இத்தனை சுலபமாக அசைத்துவிடுகிறது?
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையம் தரும் இவ்வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
(கடைசி வரி அனாவசியம்)
ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். (பிள்ளை ஆங்கிலத்தில்தானே படித்திருப்பார்?) எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரல்டின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பில்:
Here with a loaf of bread beneath the bough,
A flask of wine, a book of verse – and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise now
தமிழில் வையம் தரும் இவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ என்ற வரி தேவை இல்லாததாகத் தெரிகிறது. ஆனால் ஆங்கிலத்தில் ‘And wilderness is paradise now‘ என்பது கவிதை! ஆங்கிலத்தில் மற்ற வரிகள் எனக்கு சுமார்தான். ரசனை விசித்திரங்கள்!
தேசிகவினாயகம் பிள்ளை எழுதியது, உமர் கய்யாமின் ருபையாத்தில் வரும் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பாம். நான் ருபையாத்தையும் படித்ததில்லை, இந்த மொழிபெயர்ப்பையும் முழுதாகப் படித்ததில்லை. பிள்ளைவாளின் வேறு எந்தக் கவிதையும் என் ரேடாரில் பட்டதும் இல்லை.
கண்டசாலா இசையமைத்து பானுமதியோடு சேர்ந்து பாட்டாகப் பாடிய காட்சி, கள்வனின் காதலி (1955) திரைப்படத்தில் இடம் பெறுகிறது. ஒரே பிரச்சினை, மதுவுண்டு என்பதை அமுதுண்டு என்று bowdlerize செய்திருக்கிறார்கள். ஒரிஜினல் கவிதை மட்டுமல்ல, பாடலும் என் மனதைக் கவர்ந்த ஒன்றுதான். சிவாஜிக்கு கண்டசாலா குரல் பொருந்தவில்லையே என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்