சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”

சுஜாதாவை இலக்கியவாதி என்றோ பொழுதுபோக்கு எழுத்தாளர் என்றோ சுலபமாக வகைப்படுத்த முடியாது. வணிக எழுத்தை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக எழுதுவார், அதில் இலக்கியத்தின் சாயை தெரியும். சில சமயம் இலக்கியம் படைக்க வேண்டும் என்று முயன்று எழுதுவார், ஆனால் வெற்றி பெறமாட்டார். (மத்யமர் சிறுகதைகள் ஒரு நல்ல் உதாரணம்).

எனக்கு அவரிடம் இருக்கும் ஈர்ப்புக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல் காரணம் நாஸ்டால்ஜியா. சிறு வயதில் ஏற்படும் ஈர்ப்பு சுலபமாக அழிவதில்லை. குறைந்தபட்சம் எனக்கு அழிவதில்லை. இரண்டாவது நடை. சுஜாதாவின் நவீன நடை இன்று வரை எவருக்கும் கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை. மூன்றாவது விறுவிறுப்பு. பல புத்தகங்களை எடுத்தால் கீழே வைக்க முடியாது.

புகழ் பெற்ற எழுத்தாளர்தான், ஆனால் அவரது கணேஷ்-வசந்த் நாவல்கள் அவருக்குத் தந்திருக்கும் ஒளிவட்டத்தில் பிரமாதமான சில முயற்சிகள் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவரை இலக்கியவாதியாகப் பார்ப்பவர்களும் ஸ்ரீரங்கத்துக் கதைகளையும் அவரது நாடகங்களையும் தாண்டுவதில்லை. கணேஷும் வசந்தும் இல்லாமல் வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ அல்லது மாத நாவல்களாகவோ வந்ததாலேயே வைரங்கள், ஒரே ஒரு துரோகம், பூக்குட்டி, ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், மண்மகன், 24 ரூபாய் தீவு என்று பல இலக்கியத் தரமுள்ள படைப்புகள் சுஜாதாவின் பரம ரசிகர்களாலும், இலக்கிய விமர்சகர்களாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. (வேறு நாவல்களை நினைவு கூர்பவர்கள் தவறாமல் பின்னூட்டம் எழுதுங்கள்!)

என் கண்ணில் அவர் ஒரு (இரண்டாம் பென்ச்) இலக்கியவாதியாகத் தெரிவது இந்த மாதிரி நாவல்களால்தான். வசந்த காலக் குற்றங்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். Arthur Haileysque நாவல் எழுத முயற்சித்திருக்கிறார். அதாவது ஒரு பின்புலத்தை எடுத்துக்கொண்டு கதை என்னும் சட்டத்தில் பல நுண்விவரங்களை காட்டி நம்மை பிரமிக்க வைப்பது. Police Procedural என்றும் சொல்லலாம். அதாவது போலீஸ் துறையின் தினசரி வாழ்க்கையின் நுண்விவரங்களை நிறைய கொடுத்து போலீஸ் எப்படி வேலை செய்கிறது என்று நமக்கு உணர்த்துவது. மொத்தத்தில் நல்ல புத்தகம். ஆங்கிலத்தில் இந்த மாதிரி நாவல்கள் பிரபலம்.

களம்: எண்பதுகளின் பெங்களூர். ஒரு லோகல் கால் எண்பது பைசா. இந்திரா நகரே நகரத்துக்கு வெளியே இருந்திருக்கும். டெக்னாலஜி கிடையாது. இந்த நிலையில் போலீசுக்கு வரும் சவால்கள்.

மூன்று கிளைக்கதைகள்.
ஆறுமுகம் திறமை வாய்ந்த திருடன். திறக்க முடியாத பூட்டே கிடையாது. பூட்டுக்கு மறு சாவி தயாரித்து திறந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்வது இவன் ஸ்டைல், முத்திரை. இந்த முத்திரையை வைத்தே போலீஸ் இவன்தான் திருடினான் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஜெயிலிலிருந்து திரும்பி வந்திருக்கிறான், இந்த முறை சாவியை தான் தயாரித்து, தனக்கு ஒரு அலைபி உருவாக்கிக் கொண்டு, கூட்டாளியை வைத்து அதே முத்திரையுடன் திருட திட்டமிடுகிறான். கூட்டாளி ஒரு “கேஸ்”.
சுனில் பணக்கார வீட்டுப் பையன். கஞ்சா கேஸ். பொழுது போகாமல் கிக்குக்காக பிரேமலதா என்று பெண்ணை ஃபோனில் கூப்பிட்டு ஆபாசமாக மிரட்டுகிறான். விவகாரம் முற்றிப் போய் பிரேமலதாவின் ஏழு வயதுப் பெண்ணை கடத்துகிறான்.
ரேகா-பிரசன்னா காதல். அப்பா அம்மாவுக்கு பிடிக்கவில்லை. போலீஸ் உதவியை நாடுகிறார்கள்.

இந்த மூன்றும் போலீஸ் கமிஷனர் கவனத்துக்கே வருகிறது. ரேகா-பிரசன்னா கேசில் கோட்டை விடுகிறார்கள். கடத்தல் கேசை சிறப்பாக கண்டுபிடிக்கிறார்கள். திருட்டு கேஸ் குற்றவாளிகளின் திறமையின்மையால் மாட்டிக் கொள்கிறது.

மிக அருமையாக எழுதி இருக்கிறார். அவரது சாதனைகளில் ஒன்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா

ராமானுஜர் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், பி.ஸ்ரீ.யின் புத்தகம்

சமீபத்தில் பி.ஸ்ரீ. எழுதிய ராமானுஜர் என்ற புத்தகத்தைப் படித்தேன். 1965-இல் இந்தப் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய இ.பா. தொகுத்திருக்கும் குருபரம்பரைக் கதைகளைத்தான் தொகுத்திருக்கிறார். ஆனால் பி.ஸ்ரீ. எழுதுவதற்கும் பழைய குருபரம்பரைக் கதைகளை நேராகப் படிப்பதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. புத்தகத்தைப் பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஏறக்குறைய ஒரு காலட்சேபத்தைப் படிப்பது போல இருந்தது. இதற்கு சாஹித்ய அகாடமி விருது என்று தெரிந்தபோது எவண்டா இதைப் பரிந்துரைத்தான் என்று கடுப்புதான் வந்தது.

pi_sriபி.ஸ்ரீ.யின் ராமானுஜர் ஒரு தொன்மத்தின் நாயகர். ஆனால் இ.பா.வின். ராமானுஜர் நம் காலத்தவர் – உண்மையில் எந்நாளும் சம்காலத்தவராகவே தோன்றுவார். காந்தி போன்றவர். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் படிக்கும்போது இ.பா. இந்த நிகழ்ச்சியை எப்படி விவரித்திருக்கிறார் என்றுதான் மனம் போய்க் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இ.பா.வின் நாடகம் எப்படியோ என் மனதில் ராமானுஜர் தொன்மம்+வரலாற்றுக்கு gold standard ஆகி இருக்கிறது! இத்தனைக்கும் குருபரம்பரைக் கதைகள் வரலாற்றை தொன்மமாக மாற்றுகின்றன என்றுதான் நினைக்கிறேன். வரலாற்று நிபுணர்கள் இந்த குருபரம்பரைக் கதைகளில் பலவற்றை மறுக்கிறார்கள். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் கட்டுரையைப் பாருங்கள்.

பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் பற்றி எழுதுவதை விட இ.பா.வின் நாடகத்தைப் பற்றி எழுதுவது உத்தமம் என்று அக்டோபர் 2010-இல் எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

ராமானுஜர் நான் admire செய்யும் ஆன்மீகவாதிகளில் ஒருவர். அவருடைய ஆன்மீகத்தை – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் – பற்றி பேசும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய எந்த ஆன்மீகவாதியும் என் பெருமதிப்புக்குரியவரே. எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் வைணவம் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், ஆனால் காலம் போகப் போக அந்த குடைக்கு கீழே வந்தவரெல்லாம் பிராமணர் – அதுவும் அய்யங்கார் – ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (பசவருக்கும் இப்படித்தான் ஆனது.) திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை ராமானுஜர் மற்றவருக்கு சொல்லும் கதை உண்மையோ பொய்யோ – ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது. இந்திரா பார்த்தசாரதியையும் ராமானுஜரின் சமூக நோக்கு கவர்ந்திருக்கிறது. அந்த நோக்கை emphasize செய்து ராமானுஜர் பற்றிய சுவாரசியமான வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளை (legends) அவர் ராமானுஜர் என்ற நாடகம் ஆக்கி இருக்கிறார்.

இ.பா.வின் வார்த்தைகளில்:

தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சமகாலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம். ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது.

குரு பரம்பரைப்படி: ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சி யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் கற்கிறார். சிஷ்யன் போகும் போக்கு பிடிக்காததால் காசிக்கோ எங்கோ போகும்போது யா. பிரகாசர் ராமானுஜரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் ராமானுஜர் தப்பிவிடுகிறார். அவர் மனைவி தஞ்சம்மா. தஞ்சம்மா ராமானுஜரின் சமூக நோக்கை ஏற்பவர் அல்ல, ஜாதி வித்தியாசம் பார்ப்பவர். ராமானுஜரின் பிராமண ஜாதியில் பிறக்காத குருமார்களை தஞ்சம்மா அவமதிப்பது அவர் துறவறம் ஏற்க இன்னுமொரு தூண்டுதலாக அமைகிறது. ஆளவந்தார் அவரை வைஷ்ணவர்களின் அடுத்த தலைவராக, தன் வாரிசாக நியமிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி என்று பல ஆசிரியர்கள். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ரகசியமான வைணவ தத்துவங்களை கற்கச் செல்கிறார் ராமானுஜர். தி. நம்பி இவற்றை யாருக்கும் சொல்லக்கூடாது, சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று எச்சரிக்கிறார். ஆனால் ராமானுஜரோ கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லாருக்கும் சொல்லித் தருகிறார். இத்தனை பேர் பிழைக்கும்போது நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார். தலித் மாறனேர் நம்பிக்கு உதவி செய்ததால் பிராமண பெரிய நம்பியை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் ரங்கநாதன் உற்சவமாக ஸ்ரீரங்கம் வீதிகளில் வரும்போது தேர் அவர் வீட்டு வாசலிலிருந்து நகரமாட்டேன் என்கிறது. பெரிய நம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை வாபஸ் வாங்கிய பிறகுதான் தேரை நகர்த்த முடிகிறது. பல ஜாதிக்காரர்களான முதலியாண்டான்+கூரேசர் (பிராமணர்கள்), உறங்காவில்லி-பொன்னாச்சி (மறவர்?) என்று பல சிஷ்யர்கள். ஜாதி சம்பிரதாயம் உடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் எதிரியான நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜன் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை ஸ்தாபிக்கிறார்/வலுப்படுத்துகிறார். துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயதில் மரணம்…

இ.பா. இந்த குரு பரம்பரைக் கதையை நாடகம் ஆக்கி இருக்கிறார். பல supernatural legends-ஐ சாதாரண நிகழ்ச்சிகளாக காட்டுகிறார். (ராமானுஜர் பேய் ஓட்டும் காட்சி) ராமானுஜரின் சமூக சீர்திருத்த உணர்வுகளை தூக்கிப் பிடிக்கிறார். ராமானுஜர் வைணவத்தை ஆன்மீகமாக மட்டும் இல்லாமல் சமூகத்தை மாற்றும் ஒரு சக்தியாக பார்ப்பதாக நமக்கு தோன்ற வைக்கிறார் இ.பா. இது historically accurate-தானா என்று எனக்கு கேள்விகள் உண்டு. ராமானுஜருக்கு ஆன்மீகமே முக்கியம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவை இரண்டாம் பட்சமே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ராமானுஜரின் ஆன்மீகத்தைப் பற்றி – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி – எனக்கு தெரிந்தது பூஜ்யமே. இ.பா.வுக்கு என்னை விட ராமானுஜர் பற்றியும், அவரது ஆன்மிகம் பற்றியும், பொதுவாக வைஷ்ணவம் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ராமானுஜரின் வாழ்க்கை legends பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு revelation ஆக இருக்கலாம். படிப்பதை விட இந்த நாடகம் பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். ஆனால் இ.பா. எழுதி இருக்கும் விதம் அவ்வளவு exciting ஆக இல்லை. அதே போல நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்கும் கூரேசரிடம் ஆயிரம் ராமானுஜன் ஒரு கூரேசனுக்கு சமம் ஆகார் என்று சொல்லும் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்று. இவற்றை underplay செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இ.பா. அப்படி நினைக்கவில்லை. 🙂

இந்த நாடகத்துக்காக இ.பா. சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கிறார்.

படிக்கலாம். தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. அதனால் நிச்சயமாக படிக்கலாம். ஆனால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது.

பின்குறிப்பு: பி.ஸ்ரீ. எழுதிய மணிவாசகர் சரித்திரம் என்ற புத்தகமும் கிடைத்தது. இதுவும் தெரிந்த விஷயங்களைத்தான் திரும்பக் கூறுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், விருதுகள், இ.பா. பக்கம்

தொடர்புடைய பக்கம்: ராமானுஜரும் குலோத்துங்க சோழனும் – டாக்டர் ஆர். நாகசாமி

கசுவோ இஷிகுரோவுக்கு நோபல் பரிசு

இந்த வருஷத்துக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கசுவோ இஷிகுரோவுக்கு கிடைத்திருக்கிறது. நோபல் தேர்வுக் கமிட்டி அவரைப் பற்றி இப்படி சொல்கிறது:

who, in novels of great emotional force, has uncovered the abyss beneath our illusory sense of connection with the world

இஷிகுரோவின் படைப்புகளை நான் படித்ததில்லை. நண்பர் பாலாஜி அவரது ஒரு புத்தகம் (மட்டும்) – Remains of the Day (1989) – மிகச் சிறப்பானது என்கிறார். அதுதான் மிகவும் புகழ் பெற்றது. திரைப்படமாக வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏழெட்டு நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார்.

யாராவது படித்திருக்கிறீர்களா? தமிழ் கூறும் நல்லுலகுக்காக ஒரு அறிமுகம் எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

யூக்ளிடின் ஜன்னல் (Euclid’s Window)

(மீள்பதிப்பு, மூலப்பதிப்பு அக்டோபர் 12, 2010-இல்)

லியனார்ட் ம்ளோடினோ (Leonard Mlodinow) அறிவியல் கருத்துக்களை அறிவியலில் வலுவான அடிப்படை இல்லாதவர்களும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்காக புத்தகங்கள் எழுதுபவர். இந்தத் துறையில் தமிழில் மிகச் சிறப்பாக எழுதியவர் சுஜாதாதான். ஒரு காலத்தில் பெ.நா. அப்புசாமி எழுதிய புத்தகங்களைப் படித்து எனக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது/பெருகியது. இன்று யாராவது முயற்சிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.

இந்தப் புத்தகம் வடிவகணிதத்தின் (geometry) அடிப்படைகளை விளக்குகிறது. வடிவகணிதம் என்றால் ஓடுபவர்கள் கூடப் புரட்டிப் பார்க்கலாம். அத்தனை தெளிவாக எழுதப்பட்டது.

யூக்ளிட் என்ற மனிதரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர் ஆண் என்பது கூட வெறும் யூகம்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் எழுதிய Elements புத்தகம்தான் ஐரோப்பிய அறிவியலின் மூல நூல். கணிதத்தின் இன்றைய rigor – அதாவது மிக தெளிவாக தேற்றங்களை (theorems) நிரூபிப்பது – பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் இருப்பது பெரிய அதிசயம். (இந்திய கணிதத்தில் பொதுவாக இந்த rigor குறைவு)

Elements புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது. புள்ளி (point) என்றால் என்ன, கோடு (line) என்றால் என்ன மாதிரி சில வரையறைகள் (definitions), நிரூபிக்கத் தேவை இல்லாத சில அடிப்படை முடிவுகள் (postulates) – இரண்டு புள்ளிகளை ஒரு கோட்டால் இணைக்கலாம் மாதிரி – தெளிவாக வைக்கப்படுகின்றன. பிறகு இந்த முன் முடிவுகளின் அடிப்படையில் சில தேற்றங்கள், அந்த தேற்றங்களின் வைத்து வேறு சில தேற்றங்கள் என்று போகிறது. வீடு கட்டும்போது அஸ்திவாரம், பிறகு வீடு, பிறகு முதல் மாடி என்று போவதில்லையா? அந்த மாதிரி.

இந்த அடிப்படை முடிவுகளில் ஐந்தாவது அடிப்படை – the famous fifth postulate – ஒரு தேற்றமாக இருக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எல்லாருக்கும் ஒரு நினைப்பு இருந்தது. அதை ஆங்கிலத்திலேயே தருகிறேன். – Given any straight line and a point not on it, there “exists one and only one straight line which passes” through that point and never intersects the first line, no matter how far they are extended. தமிழில் சொன்னால்: ஒரு கோடு, அந்த கோட்டில் இல்லாத ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் முதல் கோட்டை வெட்டாத ஒரே ஒரு கோடுதான் வரைய முடியும். இன்னும் சுலபமாக சொன்னால் ஒரு கோடு, ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் ஒரே ஒரு இணைகோடுதான் (parallel line) வரைய முடியும்.

ஆனால் parallel என்றால் என்ன? நம் எல்லாருக்கும் இது புரிகிறது, ஆனால் கணிதத்தில் இதை எப்படி சொல்வது? அதைத்தான் “வெட்டாத ஒரு கோடு” என்கிறார். நீங்கள் ஒரு காகிதத்தில் ஒரு கோட்டை வரைந்து, கொஞ்சம் தள்ளி ஒரு புள்ளியை வைத்தால் அட ஆமாம், இந்தப் புள்ளியை உள்ளடக்கி ஒரே ஒரு இணைகோடுதான் வரைய முடியும் என்று சொல்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக கணித வல்லுனர்கள் பலருக்கும் இது அடிப்படை முன்முடிவாக இருக்க வேண்டாம், இது நிரூபிக்கக் கூடிய தேற்றம்தான் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இதைத் தேற்றமாக நிரூபிக்க பலரும் படாத பாடுபட்டனர். ஆனால் பப்பு வேகவில்லை. ஏனென்றால் இது சில வடிவகணிதத்தில்தான் பொருந்தும்! காகிதத்துக்கு பதிலாக ஒரு பந்தில் ஒரு “கோடு” போடுங்கள். இந்த கோடு உண்மையில் ஒரு வட்டம் – பந்தை சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இல்லையா? இதை வெட்டாத இன்னொரு “கோடு”, ஆனால் பார்த்தாலே இணையாக ஆக இல்லாத கோடு வரைய முடியாதா? இந்த படத்தில் இருக்கும் சிவப்பு “கோடும்” பச்சை “கோடும்” இணையானவை என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால் அவை ஒன்றை ஒன்று வெட்டுவதில்லை!

ஒன்றும் புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். என்னை விட ம்ளோடினோ நன்றாக எழுதி இருக்கிறார், அது புரிந்துவிடும். கணிதம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட வடிவகணிதத்தை அடிப்படையாக வைத்துதான் ஐன்ஸ்டீன் தன் ரிலேடிவிட்டி தியரியை உருவாக்க முடிந்தது என்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: பி.ஏ. கிருஷ்ணன் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை எழுதி இருக்கிறார் – அ. முத்துலிங்கம் தொகுத்த கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற புத்தகத்தில் படிக்கலாம்.

பின்பின்குறிப்பு: கணிதம், வடிவகணிதம், இணைகோடு என்பதற்கெல்லாம் இன்னும் நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கின்றனவா? எனக்கு வடமொழி வார்த்தைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை, (இணைகோடு வடமொழி இல்லை என்றுதான் நினைக்கிறேன்) ஆனால் நல்ல தமிழ் வார்த்தையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக இருந்தால் உத்தமம். கணிதம், வடிவகணிதம் என்பதெல்லாம் பழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் என்று தோன்றவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணிதம்

தொடர்புடைய சுட்டிகள்:
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது தொகுப்பு பற்றி அ. முத்துலிங்கம்
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது புத்தகம் வாங்க