பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

(மீள்பதிவு, முதல் பதிவு ஜனவரி 2011-இல்)

பிரபஞ்சனுக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் –

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தாசாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல. கதை நடப்பது 1730-களின் பிற்பாதியில். டூமா என்பவர் புதுச்சேரியின் ஃபிரெஞ்சு கவர்னர். துபாஷிகள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. அடுத்த துபாஷாக வருவோம் என்று எதிர்பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு ஏமாற்றமே. தஞ்சையில் மராத்திய அரசுக்கு பெரும் போட்டி, பணம் கொடுத்து சந்தாசாஹிப் முதலியோரின் ஆதரவை நாடும் போட்டியாளர்கள். பணம் கொடுக்க வரி நிறைய கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த mercenary படைகள் சர்வசாதாரணமாக வயல்களை, கிராமங்களை சூறையாடுகின்றன. நிலையான ஆட்சி இல்லை. டூமா ஓரளவு நியாயமாக நடந்துகொள்கிறார். சந்தாசாஹிபின் மனைவிக்கு அடைக்கலம் கொடுக்கிறார். நாட்டில் ஜாதி, மதமாற்றப் பிரச்சாரம், கலவரங்கள் என்று பல உரசல்கள் ஏற்படுகின்றன. பிள்ளை இவை எல்லாவற்றையும் தன் நாட்குறிப்புகளில் எழுதி இருக்கிறாராம். அதை வைத்து இலக்கியம் படைத்திருக்கிறார் பிரபஞ்சன்.

அரசு சண்டைகள் பற்றி நிறைய வந்தாலும் கதையின் focus சாதாரண மக்களின் வாழ்வு முறையே. அதுவே இந்தக் கதையின் பெரிய பலம்.

நாவலில் குறைகள் இல்லாமல் இல்லை. பெரிய பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன் சம்பந்தியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான். தொடர்பில்லாத பல கிளைக்கதைகளை தொகுத்திருப்பது போல இருக்கிறது.

ஆனால் மிக அருமையான முயற்சி. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு) கல்கி போட்ட கோட்டிலிருந்து வெளியே வெற்றிகரமாக வந்திருக்கிறார். ஒரு புதுப் பாணியை உருவாக்கி இருக்கிறார். கல்கி நமக்கு காட்டுவது ஒரு fantasy உலகம். இவர் காட்டுவதுதான் நிஜமாக இருக்கிறது.

ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது சிறந்த தமிழ் இலக்கிய லிஸ்டில் இடம் பெறும் ஒரே சரித்திர நாவல் இதுதான். அவரது வார்த்தைகளில்:

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.

எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.

பிரபஞ்சன் வானம் வசப்படும் என்றும் இன்னொரு நாவல் எழுதி இருக்கிறார். அது இன்னும் கிடைக்கவில்லை…

ஆனந்தரங்கரின் டைரி இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா? (பத்ரி சேஷாத்ரி கொடுத்திருக்கும் லிங்க் இப்போது வேலை செய்யவில்லை) நண்பர் ராஜ் சந்திரா ஒரு சுட்டியைக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த பகுதி – பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து ஒரு excerpt – மதுவிலக்கு உத்தரவு
இன்னொரு excerpt – காலைக்கடன் உத்தரவு

பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவல்

ஆனந்தரங்கரின் டைரி

ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய விக்கி குறிப்பு
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகம் தலைவர் பத்ரி சேஷாத்ரி

தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்), பகுதி 3 (படிக்க விரும்புபவை)

பிரபஞ்சன் – அஞ்சலி

பிரபஞ்சனின் மறைவு வருத்தம் தந்த செய்தி. இரண்டு சிறந்த நாவல்களை எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைத்தவர். ஆனால் நான் படித்த வரைக்கும் அவர் எழுதிய பிற நாவல்கள் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. உலகியல் காரணங்களுக்காக இதழியலில் ஈடுபட்டது, வாழ்வின் பிரச்சினைகள் அவரை கொஞ்சம் முடக்கிவிட்டன என்று கேள்வி. அவரது சிறுகதைகள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, ஆனால் என் கண்ணில் படித்தே ஆக வேண்டிய முதல் வரிசை சிறுகதைகள் அல்ல.

மானுடம் வெல்லும் முன்னுரையில் அவர் சொல்வது:

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

நானே என் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிரபஞ்சன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டும் என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

வானம் வசப்படும் மானுடம் வெல்லுமின் நீட்சியே. இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கும். 1995-ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருதை வென்றது. ஆனால் என் கண்ணில், coherence குறைவாக இருந்தாலும் மானுடம் வெல்லுமே கலை ரீதியாக அதிக வெற்றி பெற்ற நாவல்.

பிரபஞ்சனின் மொத்த பங்களிப்பும் இந்த இரண்டு நாவல்கள் மட்டுமே என்றுதான் நான் கருதுகிறேன். ஜெயமோகன் தனது seminal நாவல் பரிந்துரைகளில் மானுடம் வெல்லுமுக்கு பத்தாவது இடத்தை அளிக்கிறார். வானம் வசப்படும், மற்றும் மஹாநதி என்ற நாவல்களை தனது இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் மானுடம் வெல்லும் மற்றும் சந்தியா இடம் பெறுகின்றன.

மனசு, அப்பாவின் வேஷ்டி, மற்றும் கருணையினால்தான் என்ற சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. எஸ்ராவின் சிறுகதை பரிந்துரைகளில் அப்பாவின் வேஷ்டி மற்றும் மரி என்கிற ஆட்டுக்குட்டி என்ற சிறுகதைகள் இடம் பெறுகின்றன. மீன் என்ற சிறுகதையை சுஜாதா பரிந்துரைத்தார் என்று நினைவு.

மனசு யூகிக்கக் கூடிய கதைதான் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. அ. வேஷ்டியில் வேஷ்டியை அப்பாவின் குறியீடாக மாற்றி இருக்கிறார். கருணையினால்தான் கதையில் கோபத்தில் கொலை செய்தாலும் அழகை ரசிக்கும் இளைஞன் நல்ல பாத்திரப் படைப்பு. மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதையில் தனக்கிருக்கும் கடுப்பால் மற்றவர்களை கடுப்பேற்றும் பதின்ம வயதுப் பெண் அன்புக்குக் கட்டுப்படுவது நன்றாக விவரிக்கப்படுகிறது. மீன் எல்லாம் என்ன சிறுகதை என்றே புரியவில்லை. மிச்ச எல்லாம் நல்ல சிறுகதைகள்தான். இவற்றைத் தவிர பிரும்மம் என்ற சிறுகதையும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று என்றாவது ஒரு தொகுப்பு வெளியிட்டால் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

அவருடைய பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம். என்றாவது படிக்க வேண்டும். அவரது சிறுகதைகள் அவரது பிற நாவல்களை விட நன்றாக எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது.

மா. வெல்லும், மற்றும் வா. வசப்படும் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்ததால் வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்த புத்தகங்களின் தரம் – மகாபாரத மாந்தர்கள், காதலெனும் ஏணியிலே, நானும் நானும் நீயும் நீயும், சுகபோகத் தீவுகள், உள்ளங்கையில் ஒரு கடல், ஈரம் எல்லாம் சுமார்தான்.

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம். மகாபாரத மாந்தர்கள் என்ற தொடர் பல பாத்திரங்களை சுருக்கமாக விவரிக்கிறது. படிக்கலாம்தான், ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை.

காதலெனும் ஏணியிலே: நாயகன் சேது நல்லவன், வல்லவன். அவன் மீது உயிரையே வைக்கும், அவன் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும் ஏறக்குறைய தன் சொத்தை அவன் மேல் எழுதி வைக்கும் நாயகி சுமி. Go-getter ரேகா. முக்கோணக் காதல். வாரப் பத்திரிகைகளில் பெண்களை குறி வைத்து எழுதப்படும் தொடர்கதைகள் தரத்தில்தான் இருக்கிறது, சுவாரசியமே இல்லை. தவிர்க்கலாம்.

நானும் நானும் நீயும் நீயும்: திருமணம் நிச்சயமான பிறகு தனக்கு வேண்டியது என்ன என்பதை உணரும் பெண். டக்கென்று முடித்துவிட்டார்.

உள்ளங்கையில் ஒரு கடல்: நல்ல இயக்குனர் மூர்த்தி சினிமாத்துறையை விட்டு ஒதுங்குகிறான். ஒரு நிருபி அவனை மீட்டுக் கொண்டு வருகிறாள். இதே போன்று ஒரு நீளமான சிறுகதையைப் படித்த நினைவும் இருக்கிறது. சுமார்.

சுகபோகத் தீவுகள்: அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்கும் ஓரளவு படித்த மானேஜர் போன்ற ஒருவனை முன்னால் வைத்து (தொண்ணூறுகளின்) அரசியல் நிலையை நமக்கு சொல்ல ஒரு முயற்சி. கிராமத்து படித்த இளைஞன் தன் அரசியல்வாதி மாமாவிடம் வந்து சேர்கிறான். குறுகிய காலத்தில் விவசாயிகளை ஏமாற்றி நிலம் வாங்கும் ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்திக் கொடுக்கிறான். தலைவர் மாமாவை பின் தள்ளிவிட்டு இவனை முன்னே கொண்டு வருகிறார். விரைவில் நம்பகமான ஆலோசகன் ஆக மாறிவிடுகிறான். இன்னொரு முன்னாள் நடிகை, இந்நாள் அரசியல்வாதியின் மகளிடம் ஏற்படும் காதல் கொஞ்சம் குற்ற உணர்வைத் தருகிறது. காதல் வலுக்க வலுக்க கடைசியில் அரசியலை விட்டுவிடுகிறான். சுமாரான த்ரில்லர். அரைகுறையாக இருக்கிறது. அவரது திறமைதான் இதை காப்பாற்றுகிறது. அரசியல் நிகழ்வுகள் நன்றாக வந்திருக்கின்றன, அதை இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கலாம். நாவல் அனேகமாக வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

ஈரம் என்ற மினி-தொடர் சகிக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் இரண்டு நல்ல நாவல்கள், சில நல்ல சிறுகதைகள் எழுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறார்.

உங்கள் கண்ணில் வேறு நல்ல புத்தகங்கள் ஏதாவது எழுதி இருக்கிறாரா? நீங்கள் எவற்றை பரிந்துரைப்பீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அஞ்சலிகள், பிரபஞ்சன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை”

(மீள்பதிவு, முதல் பதிவு நவம்பர் 2014-இல்)

kaaviyath_thalaivanமுதல் பதிவு வசந்தபாலன் இயக்கி, ஜெயமோகன் வசனம் எழுதி, சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்த காவியத் தலைவன் திரைப்படம் வெளியான தருணத்தில் எழுதப்பட்டது. படம் ஓடவில்லை என்று நினைவு. திரைப்படத்தின் களன் 1940களின் நாடக உலகம்.

எனக்குத் தெரிந்த வரையில் அந்தச் சூழலைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் டி.கே. ஷண்முகம் எழுதிய “எனது நாடக வாழ்க்கை“தான். பழைய பதிவை இங்கே மீள்பதித்திருக்கிறேன். மின்னூலுக்கும் சுட்டி இருக்கிறது, படித்துப் பாருங்களேன்!

டி.கே. சண்முகம் யாரென்று தெரியாதவர்களுக்கு: தமிழ் நாடகத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் நடித்த அவ்வையார் போன்ற நாடகங்கள் பெரும் வெற்றி பெற்றன. நாடக பாரம்பரியம் உள்ள குடும்பம். அப்பா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி எல்லாருமே நாடக நடிகர்கள், பாடகர்கள், நிர்வாகிகள் இத்யாதிதான். சினிமாவிலும் இவரும் தம்பி டி.கே. பகவதியும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சுப்பிரமணிய சிவாவாக நடித்தார். எம்.எல்.சி.யாக இருந்திருக்கிறார். கமலஹாசன் இவரை கவுரவப்படுத்தத்தான் ஒரு திரைப்படத்துக்கு “அவ்வை ஷண்முகி” என்று பேர் வைத்தார். சென்னையில் ஒரு காலத்தில் லாயிட்ஸ் ரோட் என்று அழைக்கப்பட்ட சாலை இன்று அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

எனது நாடக வாழ்க்கை சமீபத்தில் ஜெயமோகன் பரிந்துரைத்த தமிழ் தன் வரலாறுகளில் ஒன்று.

புத்தகம் ஒரு லூப் மாதிரி போகிறது. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை

  • சண்முகம் நடிக்கும் ஒரு நாடகக் குழு ஒரு ஊருக்குப் போகும்.
  • நாடகத்துக்கு துட்டு வரும்/வராது.
  • அடுத்த ஊர்

அவ்வளவுதான் புத்தகம். டி.கே.எஸ். மீண்டும் மீண்டும் இதையேதான் எழுதுகிறார்.

பிறகு எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா? நிகழ்ச்சிகள் முக்கியமே இல்லை. அந்த நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கப்படும் அன்றைய நாடகச் சூழல்; மற்றும் சில ஆளுமைகள் மட்டுமே புத்தகத்தில் முக்கியமானவை.

அன்றைய நாடகச் சூழல் இன்றைய சினிமா சூழலை ஓரளவு ஒத்திருக்கிறது. நாடகத்தை எழுதுபவர்கள், பாடி நடிக்கும் ஸ்டார்கள் ஆகியவர்களுக்குத் தேவை இருந்திருக்கிறது. நாடகம் தயாரிக்க, நாடகக் குழு நடத்த நிறைய முதலீடு தேவைப்பட்டிருக்கிறது. ரிஸ்க் அதிகம், ஆனால் நல்ல லாபம் வரலாம். நடிகர்களைச் சுற்றி கொஞ்சம் ஒளி வட்டம் இருந்திருக்கிறது. ஸ்டார்களை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குக் ஹைஜாக் செய்ய முயற்சிகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகிகள் நினைத்தால் ஏமாற்றலாம், ஏமாற்றுகிறார்கள். ஆசிரியர்/ஸ்டார்களின் ஈகோ எப்போதும் பிரச்சினை. (ஜே.ஆர். ரங்கராஜு ராயல்டி விஷயத்தில் பயங்கர கறாராக இருக்கிறார்) எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் திடீரென்று வசூல் ஆகாமல் போகலாம், சாப்பாட்டுக்கே திண்டாடலாம். புராணக் கதைகள், பாட்டுகளுக்குக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து கொண்டே போய் சமூக நாடகங்கள் முக்கியத்துவம் பெறுவது, சினிமா அலையில் நாடகம் அழியத் தொடங்குவது ஆகியவையும் சொல்லப்படுகின்றன. இந்த சூழலை genuine ஆக சித்தரித்திருக்கிறார். பழைய சினிமா ரசிகர்கள் பல நடிகர்களின் பேர்களை – எம்.கே. ராதா, ஃப்ரென்ட் ராமசாமி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஆர். சாமிநாதன், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், பி.டி. சம்பந்தம் இத்யாதி – இங்கே recognize செய்யலாம். பொதுவாக எல்லாரும் சினிமாவுக்குப் போக முயற்சித்திருக்கிறார்கள்.

பல ஆளுமைகளைப் பற்றி பேசினாலும் தனியாக நிற்பது இரண்டு. ஒன்று சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் அபார திறமை உள்ளவர். அனேகமாக எல்லா நடிகர்களிடமும் அவரது தாக்கம் உண்டு. கடைசி காலத்தில் வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசக் கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். பாட்டும் வசனமும் எழுதுவதும் சொல்லித் தருவதுமே வாழ்க்கையாக இருந்தவர் பேச, எழுத முடியாமல் கடைசி நாட்களைக் கழித்தது சோகம்தான். இரண்டு என்.எஸ்.கிருஷ்ணன். என்.எஸ்.கே. எவ்வளவோ உயர்ந்த நிலைக்குப் போன பின்னும் இவர்கள் கம்பெனியைத்தான் தன கம்பெனியாக கருதி இருக்கிறார், கடைசி வரை நட்போடு இருந்திருக்கிறார். அவரது விசுவாசம் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

இது முதல் பகுதியே. 1950-களின் முற்பாதி வரை cover செய்திருக்கிறார். அதற்கப்புறமும் இருபது வருஷம் இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தைப் பற்றி இரண்டாம் பகுதி எழுதத் திட்டம் இருந்திருக்கிறது, அதைப் பற்றி பல இடங்களில் சொல்லவும் சொல்கிறார். ஆனால் எழுதுவதற்கு முன் இறந்துவிட்டார்.

புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

இதைத் தவிரவும் நாடகக் கலை, நாடகச் சிந்தனைகள், சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, தமிழ் நாடகத் தலைமையாசிரியர், கலை கண்ட மலாயா (1973) ஆகிய புத்தகங்கள் கிடைக்கின்றன. தகவல்கள் இவற்றில் ஓரளவு மீள்பதிவு செய்யப்படுகின்றன. எல்லா புத்தகங்களும் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் (Tamil Virtual University) மின் புத்தகங்களாகக் கிடைக்கிறன.

படிக்கலாம் என்ற அளவில்தான் மதிப்பிடுவேன். Genuineness, ஒரு தொழில் சூழலின் சித்தரிப்பு இரண்டும்தான் இதன் பலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

வைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”

(மீள்பதிவு, முதல் பதிவு அக்டோபர் 6, 2010 அன்று)

பஷீரை வகைப்படுத்துவது கஷ்டம். அவரும் சரி, அவருடைய கதைகளும் சரி, வரையறைகளை மீறுபவை. அவருடைய கதைகளை எல்லாம் அனுபவிக்கணும், ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது. அவர் எழுதுவது பின்நவீனத்துவமா, நவீனத்துவமா, சர்ரியலிசமா, எதார்த்தமா மாதிரி கேள்விகளை எல்லாம் நான் அறிஞர்களுக்கு விட்டுவிடுகிறேன். எனக்கு பஷீர் அனேகமாக புரிகிறது, பிடிக்கிறது, அவ்வளவுதான்.

உலகப் புகழ் பெற்ற மூக்கு என்ற இந்த தொகுதியில் கதை மாதிரி சில கட்டுரைகள் இருக்கின்றன. கட்டுரை மாதிரி சில கதைகளும் இருக்கின்றன. சர்ரியலிசம் மாதிரியும் தெரிகிறது. யதார்த்தம் மாதிரியும் தெரிகிறது. பல கதைகள் கச்சிதமான வடிவத்தை – ஒரு இலக்கு, கடைசி வரி, கதையின் க்ளைமாக்ஸ் நோக்கி மட்டுமே பயணிக்கவில்லை. இவை எல்லாம் குறைகளாகவே தெரியவில்லை. மேதைகளுக்கு வேறு விதிகள்தான்! பஷீர் விதிகளுக்கு உட்படுபவர் இல்லை, விதிகளை உருவாக்குபவர்.

பஷீரின் பலம் படிப்பவர்கள் முகத்தில் ஒரு புன்னகையை விடாமல் தொடரச் செய்வது. மிக சிம்பிளான கதைகள். நாட்டுப்புற கதைகளின் வாசனை, உண்மையான மனிதர்கள், மனிதர்களின் ஸ்மால் ஸ்கேல் அகம், ஈகோ, பந்தா, கயமை, அன்பு எல்லாவற்றையும் இரண்டு மூன்று வரிகளில் கொண்டு வந்துவிடுவார். அவர் கதைகள் சில சமயம் ramble ஆகின்றன. ஆனால் அது ஒரு குறையாகத் தெரிவதே இல்லை. அவருக்கு ஈடாக வேண்டாம், அவர் பாணியில் எழுதக்கூடிய யாரும் எனக்கு தமிழில் தெரியவே இல்லை. கி.ரா. ஒரு வேளை கொஞ்சம் கிட்ட வரலாம்.

ஜென்ம தினம், ஐசுக்குட்டி, அம்மா, மூடர்களின் சொர்க்கம், பூவன் பழம், தங்கம், எட்டுக்காலி மம்மூஞூ போன்றவை யதார்த்தக் கதைகள். இதில் மனித இயல்பு மிக தத்ரூபமாக ஒரு ஃபோட்டோ மாதிரி காட்டப்படுகிறது. ஜென்ம தினத்தில் நாயகனுக்கு பிறந்த நாள், சாப்பாடு இல்லை, பசி கொல்கிறது. பசியில் தவிக்கும் ஒருவனிடம் கம்யூனிச பேச்சு எவ்வளவு அர்த்தமற்றது என்று காட்டுகிறார். ஆனால் சுயப் பரிதாபமோ, ஓ இழிந்த சமூகமே என்ற புலம்பல்களோ இல்லை. ஐசுக்குட்டியில் தன் ஓரகத்திக்கு பிரசவம் பார்க்க டாக்டர் வீட்டுக்கு வந்தது போல தனக்கும் வந்தால்தான் பிரசவிப்பேன் என்று அடம் பிடிக்கும் நாயகி. அம்மாவில் விடுதலைப் போராட்டத்தில் ஜெயிலுக்கு போன மகன் எப்போது வருவான் என்று தெரியாது – ஆனால் தினமும் இரவு சோறு சமைத்து வைத்து காத்திருக்கும் அம்மா. மூடர்களின் சொர்க்கம் கொஞ்சம் சுமார்தான். ஒரு ஏழைப் பெண்ணால் கவரப்படும் ஒருவன், அவளே இவனை படுக்கைக்கு கூப்பிடுகிறாள், அவள் குடும்பத்தின் வறுமையைக் கண்டு இவன் பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பிவிடுகிறான். இதை சீர்திருத்த நெடி இல்லாமல் எழுதும் கஷ்டமான காரியத்தை செய்திருக்கிறார். இவை அனைத்திலும் irony, நகைச்சுவை புகுந்து விளையாடுகிறது. தங்கம் ஒரு காதல் கதை. நன்றாக இருக்கிறது. எட்டுக்காலி மம்மூஞூவில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பூவன் பழம்தான். வாய்விட்டு சிரித்தேன். கணவனை துரத்தி அடித்து பூவன் பழம் வாங்கி வர சொல்கிறாள். எங்கும் கிடைக்கவில்லை, ஆரஞ்சுதான் கிடைக்கிறது. அப்புறம்? அதை சொல்லி வாசிப்பு அனுபவத்தை கெடுக்க முடியாது, நீங்களே லிங்கை க்ளிக்கி படித்துக் கொள்ளுங்கள்! சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு.

நீல வெளிச்சம் ஒரு பேய்க்கதை. பேயோடு நட்பு! உலகப் புகழ் பெற்ற மூக்கு ஒரு சர்ரியலிச கதை. எனக்கு ஒன்றும் பிரமாதமாகத் தெரியவில்லை. ஒரு வேளை பிடிபடவில்லையோ என்னவோ. சிங்கிடி முங்கன், சிரிக்கும் மரப்பாச்சி இரண்டும் எனக்கு ஒரு ஸ்பெஷல் நிறைவைத் தந்தன. சிம்பிளான, கொஞ்சம் fantasy கலந்த கதைகள்.

பகவத் கீதையும் சில முலைகளும் மிக அருமையான memoir. பாயிண்டே இல்லை, அதனால் என்ன? ஆனை முடி கதையா, நிஜமா என்று சொல்ல முடியவில்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். புனித ரோமம் ஒரு யதார்த்தக் கட்டுரை. முகமது நபியின் ஒரு முடி காஷ்மீரில் ஒரு மசூதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதைப் பார்த்த அனுபவம். பூமியின் வாரிசுதாரர்களும் நிஜமா கதையா என்று சொல்ல முடியவில்லை. நன்றாக இருக்கிறது.

பூவன் பழத்துக்கு அடுத்தபடி எனக்கு பிடித்த கதை பர்ர்... அங்காடித் தெரு பார்த்தீர்களா? அதில் நாயகனின் முதல் காதலை நினைவுபடுத்துகிறது. ஜெயமோகனுக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனோ என்னவோ.

குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்த்திருக்கிறார். எனிக்கு மலையாளம் அறியில்லா. என்றாலும் என்னவோ மொழிபெயர்ப்பு பஷீரின் மொழியை கொண்டு வந்திருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பஷீர் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
பூவன் பழம் சிறுகதை
பாவண்ணன் ஐஷுக்குட்டி கதையை அலசுகிறார்

நாமெல்லாம் பாரதியின் வாரிசுகளே! – ஜெயகாந்தன்

எனக்கு முதன்முதலில் இலக்கியம் என்று அறிமுகமானது பாரதியாரின் கவிதைகள்தான். எது கவிதை, எது கவிதை இல்லை என்று பிற்காலத்தில் எத்தனையோ தீர்மானமான முடிவுகளுக்கு வந்தபோதும், அந்த பரீட்சைக்கெல்லாம் பாரதியாரின் கவிதைகளை உட்படுத்த முடிந்ததில்லை. அதே போல புனைவுகள் என்று எடுத்துக் கொண்டால் அனேகமாக எனக்கு முதன்முதலாக அறிமுகமான இலக்கியவாதி ஜெயகாந்தனாகத்தான் இருக்க வேண்டும்.

ஜெயகாந்தனைத்தான் நான் பாரதியின் நேரடி வாரிசு என்று கருதுகிறேன். நிச்சயமாக பாரதிதாசனை அல்ல. எழுத்தில் அதே உத்வேகம். அதே தார்மீகக் கோபம். அதே பாரதிக்கு இருந்த தாக்கம் ஜெயகாந்தனாலும் ஏற்பட்டது. எழுத்து மட்டுமல்ல, அதே போன்ற ஆளுமையும் கூட. சிங்கங்கள். மீசையில் கூட ஒற்றுமை இருக்கிறது. கஞ்சாவிலும் கூட. 🙂

இந்தக் கட்டுரை ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் இருந்த பிணைப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தினமணியில் மூன்று நான்கு மாதங்கள் முன் வந்த கட்டுரையாம். ஒரு நண்பர் எனக்கு அனுப்பி இருந்தார். தினமணிக்கு நன்றி! வசதிக்காக கீழே பதித்திருக்கிறேன்.

(வ.உ.சி. நூலகம் வெளியிட்ட ‘மகாகவி பாரதியார் கவிதைகள்‘ நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை)

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால் பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான சமூக சிந்தனாவாதி; சமூக விஞ்ஞானி; இந்த உலகத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த சிற்பி.

எங்களுடைய நண்பர்கள் சபையில் நாங்கள் அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. ‘பாரதியாரை நீ எப்படி பரிச்சயம் கொண்டாய்? முதலிலே உனக்கு என்ன பாடல் தெரியும்?’ இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்லுகிற பொழுது, எப்படி பாரதி வேரிலேயிருந்து இந்தப் புதிய தலைமுறை பரிணமித்து வந்திருக்கிறது என்கிற சமூக உண்மையை அறிந்து கொள்கிற ஞானம் பெற முடியும்.

இந்த கேள்வியை என்னைக் கேட்டபோது, எனக்கு பதிலே தெரியவில்லை. அறிவறிந்த பருவத்திலிருந்து, நந்தன் கதையிலே ‘காலில் நகம் முளைத்த நாள் முதலாய்’ என்று சொல்வான், அது மாதிரி, ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடலைக் கேட்கின்ற பருவத்திலேயிருந்து, அவரது பகவத்கீதை உரையைப் பயில்கிற பக்குவம் வரை பாரதி நம்முடைய அறிவில், சிந்தையில், ஊனில், உயிரில், உடலில் கலந்து கலந்து நம்மைக் காலந்தோறும்உ யிர்ப்பித்துக் கொடுப்பதனை உணர்கிற பலரில் நான் ஒருவன்.

நம்மையெல்லாம் – காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களையெல்லாம் – ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தி மகாகவி பாரதி என்பதனை அவரது எழுத்துகள் சொல்லும். சைபீரியப் பாலைவனத்திலிருந்து பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் வடித்து அழுகின்ற பெண்கள் வரை அவரது உலகப் பார்வை வியாபித்திருந்தது. தமிழர்காள்! மகாகவி பாரதியின் பார்வை படாத இந்தப் பிரபஞ்சத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.

பாரதியைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவரது காலம் ரொம்பக் குறுகியது. 39 ஆண்டுதான். நாற்பது வயது கூட ஆகவில்லை. சிலரைப் படிக்கிறபோதுதான் நமது உள்ளத்திலேயிருந்து அந்த சொற்கள் வருகின்றன என்று தோன்றும். எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். பாரதியாரை விடக் கூட நன்றாகக் கவிதை எழுதுபவர்கள் இருப்பதாக நினைப்பவர்களும் நிரூபிப்பவர்களும் கூட உண்டு. ஆனால், அவரை மாதிரி காலத்தைப் பிணைக்கிற ஒரு மகத்தான சக்தியாய் யார் இருக்கிறார்கள்? கவிஞன் என்றால் சோம்பித் திரிபவர்கள்; சுருண்டு கிடப்பவர்கள்; குனிந்து நடப்பவர்கள்; நிமிர்ந்து நிற்க முடியாதவர்கள்; அழுக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் இக்காலத்தில் பல கோலங்கள் காட்டுகின்ற பொழுது, பாரதி சற்றுக் குனிந்து நடக்கிறவனைப் பார்த்தால் ‘அடே நிமிர்ந்து நட!’ என்பார்.

வளைந்து கிடக்கிற மனிதனைப் பார்க்கப் பொறாத மனம். ‘பன்றிப் போத்தை சிங்க ஏறாக்குதல் வேண்டும்’ என்கிற மனம். அது மொழி கடந்த மனம். அதனால்தான் அவருக்கு அச்சம் வருகிறது. தான் தமிழன், தான் தமிழன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிறப்பெல்லாம் தமிழுக்கு வந்து சேருதல் வேண்டும். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’. இந்தச் சொல்லுக்குப் பழுதில்லை. இங்கே தமிழிலே என்ன சொற்கள் வந்து கலந்த போதிலும் இந்த சமுத்திரம் எல்லாவற்றையும் இழுத்து ஈர்த்து தனக்குள்ளே வயப்படுத்திக் கொள்ளும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்றால், எல்லாக் கலாசாரமும் வந்து இங்கு கலக்கட்டும், அந்தச் சவாலை இந்த மொழி ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லுகிற தெம்பு இருந்தது. ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று அந்தப் பேதை உரைத்தான் என்றான். அது பேதையர் சொல். இங்கு கூறத் தகாதவர்கள் கூறுகின்ற சொல். ‘கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்’.

என்ன விபரீதம்! ஆன்றோர்களும், சான்றோர்களும், புலவர்களும், கற்றோர்களும் இன்று மெத்தத்தான் கவலைப்படுகிறார்கள் தமிழ் செத்துப் போகுமென்று. அது சாகாத மொழி! ‘என்றுமுள தென்றமிழ்’. ‘என்றும்’ என்றால் மூன்று காலம். இது இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்று சொல்லத் தகுந்த சொரூபம் உடையது.

எனவே, நான் கற்றதெல்லாம் நான் சிந்தித்ததெல்லாம் நான் பெற்றதெல்லாம் பாரதியிடமிருந்துதான். ஒரு வாரிசை இந்த விஷயத்தில் உரியவனே உருவாக்குவதில்லை. அவனுடைய சொற்கள். அவன் வாழ்ந்த வாழ்க்கை. ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று’. அதனால்தான் பாரதியைப் பற்றி செய்தி பரவுதல் வேண்டும். அது தமிழனைப் பற்றிய செய்தி. தமிழனைப் பற்றிய செய்தி என்றால் அது இந்தியாவின் சிறப்பான சிந்தனையின் சாரம் என்று அர்த்தம்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினள்

என்று சொல்வது இந்த தேசத்தை மட்டுமல்ல; இந்த மொழியை. ஆகவே, இந்த மொழியின்பால் அக்கறை கொண்ட அன்பர்கள் வேறு நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வேற்று மொழியிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு துறைகளிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். இதெல்லாம் பாரதியார் கண்ட கனவு. அவர் கனவுகள் எல்லாம் பலித்திருக்கின்றன. அவர் கண்ட கனவு பலித்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அன்று பாழ்பட்டு நின்றது பாரதம். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரதத்தில் அவர் கனவு கண்டார். இன்றைய பாரதம் உலகுக்கெல்லாம் ஞானதானம் செய்கின்ற நாடாக உயர்ந்திருக்கிறது. பாரதியின் கனவுகள் எல்லாம் பலித்ததன் விளைவு நாம்.

நல்ல சந்ததியினர் பித்ருக்களை மறக்காமல் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, பிதுர்க்கடனையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள். திருலோக சீதாராம் என்ற நண்பர், பாரதி புத்திரர். நாம் எல்லாம் பாரதியின் புத்திரர்கள். பாரதியாருக்கு ஆண் வாரிசு கிடையாது. அது திருலோக சீதாராமுக்கு ரொம்ப வருத்தம் தந்தது. பாரதியார் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றி வந்தார்.

நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருக்கிறதை நம்புங்கள். கடவுள் இல்லை என்று யோசிப்பவர்களுக்குத்தானே நம்பலாமா கூடாதா என்பது. இருக்கிற எல்லாவற்றிலும் ‘எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்’ என்று எழுத்தாளர்களுக்கெல்லாம் மந்திரம் போல் சொல்லைக் கற்றுத் தந்தவன் மகாகவி பாரதி. எனவே அவன் புகழைப் பாடுவதற்கு நேரம் கிடையாது; காலம் கிடையாது; நாள் கிடையாது.

நமது சுவாசம் பாரதி. நாமெல்லாம் பாரதியின் வாரிசுகள். நான் எப்போதுமே பாரதியின் வாரிசு என்று நானாகவே எண்ணிக் கொண்டிக்கிறேன். எப்படி திருலோக சீதாராம் பிதுர்க்கடன் நிறைவேற்றி தன்னை வாரிசு என்று நினைத்துக் கொண்டாரோ அது போல்.

பாரதியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அவர் என்ன சொன்னார்? தெளிவாகத் தெரிந்து கொள். அப்புறம் இன்னொருவருக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக சொல்லு. தெளிவுறவே அறிந்திடுதல். ‘தெளிவு பெற மொழிந்திடுதல்’. சொல்லுவதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். புரியாத விஷயங்களெல்லாம் எனக்கு சம்பந்தமல்லாததென்று இந்தக் காலத்திலும் நான் ஒதுக்கிவிடுவேன். அது ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கலாம். கணக்கு எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால், இந்தக் கணக்கு இல்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் இல்லை என்றறிகிறபோது நான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, மைதானம் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்று சொல்லிக் கொடுத்தால் ‘இது ஏண்டா நமக்கு’ என்று தோன்றும். நான் எங்கே மைதானத்தை அளக்கப் போகிறேன். நிறுத்தவும், அளக்கவும் விற்கவும் வாங்கவும் கணக்கு வேண்டும். நான் ஏன் கணக்கு படிக்க வேண்டும்? ஒரு கணக்கனுக்கு இவையெல்லாம் வேண்டும். ஒரு விஞ்ஞானிக்கு இதெல்லாம் வேண்டும். அப்புறம் எனக்குத் தோன்றியது. அடடே, பாரதியாரும் நம்ம கேசுதான். அவருக்கும் கணக்கு பிடிக்காதாம். ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று எழுதி வைப்பாராம். இப்படி பாரதியாரோடு ஒரு ஒற்றுமை கண்டேன்.

அதற்கு மேலே என்னவென்றால் நம்மை மாதிரியே, வெளியே சொல்ல வெட்கம். இளம் வயதில், அரும்பு மீசை கூட முளைக்காத பருவத்தில் ஒன்பது வயதுப் பொண்ணு மேலே காதல்.
பாரதியார் சொல்கிறார்:

ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோதுகாதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்’
என்செய் கேன் ? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?

என்று பிள்ளைப் பிராயத்தில் நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே போனால் நம்மை எங்கெங்கோ கொண்டு போகிறது. உலகத்தை எல்லாம் காட்டித் தருகிறது ஒரு சிறு புத்தகம். கிறிஸ்துவர்க்கு எப்படி பைபிளோ, இஸ்ஸாமியருக்கு எப்படி குரானோ, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அது போல் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது.

அதிலே திருக்குறள் இருக்கிறது. அதில் கம்பர் இருக்கிறார். வள்ளுவர் இருக்கிறார். இவர்களைப் பற்றி எல்லாம் பாரதியார் சொல்லவில்லை என்றால் எனக்கு அவர்கள் மீது மரியாதை வந்திருக்காது. இப்படி தானறிந்த, தன்னை உயர்த்திய அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு எப்படிப் பெற்றோர் சொல்வார்களோ அது மாதிரி தமிழ்ச் சந்ததியினருக்கு பாரதியார் தந்து போயிருக்கிறார். தமிழ் பேசுகிற, தமிழிலே சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், ஜெயகாந்தன் பக்கம்

இடைவெளி

சில பல சொந்தப் பிரச்சினைகளால் இந்தத் தளத்தில் எழுதுவதை நிறுத்தி இருந்தேன். எழுதுவதை விடுங்கள், என் வாழ்வில் முதல் முறையாக படிப்பதே கூட நின்றுவிட்டது. கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் நம் போன்ற எறும்புகள் வாழும் புற்றுகளுக்குள் நடந்து செல்லும் மதயானைக் கூட்டம் மாதிரிதான் இருக்க வேண்டும். சாரமில்லாத வாழ்க்கை என்று ஒரு கவிஞன் எழுதியது பொருத்தமாக இருக்கிறது

Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning.

ஆனால் என் வாழ்வின் முதல் கவிஞன், முதல் இலக்கியவாதி இப்படிச் சொல்கிறான்.

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

எனக்குப் பிடித்த கவிதைதான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முடியவில்லை. இன்று பிறந்த அந்தக் கிறுக்குப் பிடித்த கவிஞனாலும் முடிந்ததா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது பொய் சொல்லி, அசட்டுத் தத்துவம் பேசினாலாவது கொஞ்சம் தெம்பு வருமா என்று பார்க்க வேண்டியதுதான். அந்தக் கிறுக்கனின் வாழ்க்கையைப் பார்த்தால் அவனும் அப்படித்தான் செய்தாற்போலத் தெரிகிறது.

கவிதை அலர்ஜி என்று அலட்டிக் கொள்ளும் எனக்கும் என் உணர்வுகளை பிரதிபலிக்க கவிதைதான் கடைசியில் கை கொடுக்கிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்