டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை”

(மீள்பதிவு, முதல் பதிவு நவம்பர் 2014-இல்)

kaaviyath_thalaivanமுதல் பதிவு வசந்தபாலன் இயக்கி, ஜெயமோகன் வசனம் எழுதி, சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்த காவியத் தலைவன் திரைப்படம் வெளியான தருணத்தில் எழுதப்பட்டது. படம் ஓடவில்லை என்று நினைவு. திரைப்படத்தின் களன் 1940களின் நாடக உலகம்.

எனக்குத் தெரிந்த வரையில் அந்தச் சூழலைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் டி.கே. ஷண்முகம் எழுதிய “எனது நாடக வாழ்க்கை“தான். பழைய பதிவை இங்கே மீள்பதித்திருக்கிறேன். மின்னூலுக்கும் சுட்டி இருக்கிறது, படித்துப் பாருங்களேன்!

டி.கே. சண்முகம் யாரென்று தெரியாதவர்களுக்கு: தமிழ் நாடகத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் நடித்த அவ்வையார் போன்ற நாடகங்கள் பெரும் வெற்றி பெற்றன. நாடக பாரம்பரியம் உள்ள குடும்பம். அப்பா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி எல்லாருமே நாடக நடிகர்கள், பாடகர்கள், நிர்வாகிகள் இத்யாதிதான். சினிமாவிலும் இவரும் தம்பி டி.கே. பகவதியும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சுப்பிரமணிய சிவாவாக நடித்தார். எம்.எல்.சி.யாக இருந்திருக்கிறார். கமலஹாசன் இவரை கவுரவப்படுத்தத்தான் ஒரு திரைப்படத்துக்கு “அவ்வை ஷண்முகி” என்று பேர் வைத்தார். சென்னையில் ஒரு காலத்தில் லாயிட்ஸ் ரோட் என்று அழைக்கப்பட்ட சாலை இன்று அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

எனது நாடக வாழ்க்கை சமீபத்தில் ஜெயமோகன் பரிந்துரைத்த தமிழ் தன் வரலாறுகளில் ஒன்று.

புத்தகம் ஒரு லூப் மாதிரி போகிறது. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை

  • சண்முகம் நடிக்கும் ஒரு நாடகக் குழு ஒரு ஊருக்குப் போகும்.
  • நாடகத்துக்கு துட்டு வரும்/வராது.
  • அடுத்த ஊர்

அவ்வளவுதான் புத்தகம். டி.கே.எஸ். மீண்டும் மீண்டும் இதையேதான் எழுதுகிறார்.

பிறகு எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா? நிகழ்ச்சிகள் முக்கியமே இல்லை. அந்த நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கப்படும் அன்றைய நாடகச் சூழல்; மற்றும் சில ஆளுமைகள் மட்டுமே புத்தகத்தில் முக்கியமானவை.

அன்றைய நாடகச் சூழல் இன்றைய சினிமா சூழலை ஓரளவு ஒத்திருக்கிறது. நாடகத்தை எழுதுபவர்கள், பாடி நடிக்கும் ஸ்டார்கள் ஆகியவர்களுக்குத் தேவை இருந்திருக்கிறது. நாடகம் தயாரிக்க, நாடகக் குழு நடத்த நிறைய முதலீடு தேவைப்பட்டிருக்கிறது. ரிஸ்க் அதிகம், ஆனால் நல்ல லாபம் வரலாம். நடிகர்களைச் சுற்றி கொஞ்சம் ஒளி வட்டம் இருந்திருக்கிறது. ஸ்டார்களை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குக் ஹைஜாக் செய்ய முயற்சிகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகிகள் நினைத்தால் ஏமாற்றலாம், ஏமாற்றுகிறார்கள். ஆசிரியர்/ஸ்டார்களின் ஈகோ எப்போதும் பிரச்சினை. (ஜே.ஆர். ரங்கராஜு ராயல்டி விஷயத்தில் பயங்கர கறாராக இருக்கிறார்) எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் திடீரென்று வசூல் ஆகாமல் போகலாம், சாப்பாட்டுக்கே திண்டாடலாம். புராணக் கதைகள், பாட்டுகளுக்குக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து கொண்டே போய் சமூக நாடகங்கள் முக்கியத்துவம் பெறுவது, சினிமா அலையில் நாடகம் அழியத் தொடங்குவது ஆகியவையும் சொல்லப்படுகின்றன. இந்த சூழலை genuine ஆக சித்தரித்திருக்கிறார். பழைய சினிமா ரசிகர்கள் பல நடிகர்களின் பேர்களை – எம்.கே. ராதா, ஃப்ரென்ட் ராமசாமி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஆர். சாமிநாதன், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், பி.டி. சம்பந்தம் இத்யாதி – இங்கே recognize செய்யலாம். பொதுவாக எல்லாரும் சினிமாவுக்குப் போக முயற்சித்திருக்கிறார்கள்.

பல ஆளுமைகளைப் பற்றி பேசினாலும் தனியாக நிற்பது இரண்டு. ஒன்று சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் அபார திறமை உள்ளவர். அனேகமாக எல்லா நடிகர்களிடமும் அவரது தாக்கம் உண்டு. கடைசி காலத்தில் வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசக் கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். பாட்டும் வசனமும் எழுதுவதும் சொல்லித் தருவதுமே வாழ்க்கையாக இருந்தவர் பேச, எழுத முடியாமல் கடைசி நாட்களைக் கழித்தது சோகம்தான். இரண்டு என்.எஸ்.கிருஷ்ணன். என்.எஸ்.கே. எவ்வளவோ உயர்ந்த நிலைக்குப் போன பின்னும் இவர்கள் கம்பெனியைத்தான் தன கம்பெனியாக கருதி இருக்கிறார், கடைசி வரை நட்போடு இருந்திருக்கிறார். அவரது விசுவாசம் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

இது முதல் பகுதியே. 1950-களின் முற்பாதி வரை cover செய்திருக்கிறார். அதற்கப்புறமும் இருபது வருஷம் இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தைப் பற்றி இரண்டாம் பகுதி எழுதத் திட்டம் இருந்திருக்கிறது, அதைப் பற்றி பல இடங்களில் சொல்லவும் சொல்கிறார். ஆனால் எழுதுவதற்கு முன் இறந்துவிட்டார்.

புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

இதைத் தவிரவும் நாடகக் கலை, நாடகச் சிந்தனைகள், சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்கள் கிடைக்கின்றன. விஷயங்கள் இவற்றில் ஓரளவு ரிபீட் ஆகின்றன. எல்லா புத்தகங்களும் தமிழ் Virtual பல்கலைகழகத்தில் (Tamil Virtual University) மின் புத்தகங்களாகக் கிடைக்கிறன.

படிக்கலாம் என்ற அளவில்தான் மதிப்பிடுவேன். Genuineness, ஒரு தொழில் சூழலின் சித்தரிப்பு இரண்டும்தான் இதன் பலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்