தமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு

சாமிநாத சர்மாவை இப்போது மறந்தே போய்விட்டோம். பல மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதி கலக்கி இருக்கிறார். ஒரு நாற்பது வருஷத்துக்கு முன் கூட அவருடைய தாக்கம் உள்ளவர்களை பரவலாகப் பார்க்க முடிந்தது. அவர் கார்ல் மார்க்ஸ் பற்றி எழுதிய புத்தகம் ஓரிரு தலைமுறைகள் முன்னால் மிகவும் முக்கியமான ஒன்று. நான் கண்ட நால்வர் ஒரு அருமையான memoir.

சர்மா அந்த காலத்துக்கு powerful நாடகங்களை எழுதினார். உண்மையில் இவரை விடப் புகழ் பெற்ற அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பாணியில் இவர் தாக்கம் தெரிகிறது. இவருடைய நடையை, கதை சொல்லும் விதத்தைத்தான் வேலைக்காரி, ஓரிரவு, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம், பராசக்தி, மனோகரா திரைப்படங்களில், நாடகங்களில் பின்பற்றி இருந்தார்கள். நீள நீள உணர்ச்சி பொங்கும் வசனம், ஒரு அஜெண்டாவை வைத்து எழுதப்படும் நாடகங்கள் எல்லாமே சர்மாவில் நாடகங்களில் இருந்து பெறப்பட்டவையே.

சிறு வயதில் பாணபுரத்து வீரன் நாடகத்தைப் பற்றி ரேடியோவில் ஏ.பி. நாகராஜன் பேசக் கேட்டிருக்கிறேன். நாகராஜன் அதில் ஸ்திரீபார்ட்டாம். எஸ்.வி. சஹஸ்ரநாமம் வாலீசனாக நடிப்பாராம். வாலீசன் என்றால் வில்லியம் வாலஸ் (பிரேவ்ஹார்ட் திரைப்படம் வில்லியம் வாலசைப் பற்றித்தான்.), கதாநாயகன் புரேசன் என்றால் ராபர்ட் ப்ரூஸ் (சிலந்தி மீண்டும் மீண்டும் வலை பின்னுவதைப் பார்த்து inspire ஆகி ஏழாவது முறையும் போரிட்ட ஸ்காட்லாண்டு மன்னன்) அவர்களை இந்தியாவுக்கு குடி பெயர்த்து எழுதப்பட்ட நாடகம். ஐம்பதுகளில் சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். மாதிரி யாரையாவது வைத்து சினிமா எடுத்திருந்தால் ஓடி இருக்கும்.

டி.கே. சண்முகம் இந்த நாடகத்தை நடத்த விரும்பினார். நாடகத்தில் வாலீசனும் புரேசனும் தேசபக்தி பொங்கும் வசங்களை பேசுவார்கள், அதனால் நாடகம் தடை செய்யப்பட்டிருந்தது. என்ன செய்வது? நாடகத்தின் பேரை “தேசபக்தி” என்று மாற்றினார்கள், பாணபுரத்து வீரனுக்குத்தான் தடை, தேசபக்திக்கு இல்லை! அப்படி நடத்தப்பட்ட நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று சண்முகம் அண்ணாச்சி குறிப்பிடுகிறார். சஹஸ்ரநாமம் சொல்கிறார்:

அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந்தேன். அவர் நடத்திய ‘தேசபக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத்சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள். முதல்முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

அபிமன்யு கதை தெரிந்ததுதான். அதைத்தான் வீரம் என்ற ஃபார்முலாவை வைத்து எழுதி இருக்கிறார்.

உண்மையை சொல்லப் போனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாடகங்கள் இல்லை. ஆனால் முன்னோடி நாடகங்கள். பாட்டை அடிப்படையாக வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட நாடகங்கள் பெரிய தாகத்தை உண்டாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். முன்னோடி என்பதற்காக, அதுவும் அண்ணா-கருணாநிதி ஸ்டைல் நாடக/திரைப்பட எழுத்துக்கு முன்னோடி என்பதற்காகத்தான் படிக்க வேண்டும். எனக்கு பா. வீரன் மீது கொஞ்சம் நாஸ்டால்ஜியா உண்டு, அதனால்தானோ என்னவோ எனக்கு அந்த நாடகம் பிடித்திருக்கிறது.

அபுனைவுகள் விளக்கக் கட்டுரைகள் என்று எழுதித் தள்ளி இருக்கிறார். தான் அறிந்த அனைத்தையும் தமிழில் எழுதி தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் இருந்திருக்கிறது, அதற்காக தளராமல் முயற்சித்திருக்கிறார். அவருடைய சரளமான நடை இந்த முயற்சிகளுக்கு பெரிய பலம்.

ஆனால் அவற்றில் பலவற்றை இன்று படிக்கவே முடிவதில்லை. காந்தியும் ஜவஹரும், காந்தி யார்? போன்றவை இன்று காலாவதி ஆகிவிட்டன். சுதந்திர முழக்கம் என்று ஒன்று எழுதி இருக்கிறார், அய்யோ அய்யய்யோ! இக்கரையும் அக்கரையும், மனிதன் யார்? போன்ற புத்தகங்களை புரட்டிப் பார்க்கவே தம் கட்ட வேண்டி இருக்கிறது. இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் படித்தார்களா என்று வியந்தேன். ஆனால் பார்லிமெண்ட், நமது தேசியக்கொடி, ஐக்கிய தேச ஸ்தாபனம், அரசாங்கத்தின் பிறப்பு போன்றவற்றுக்கு ஒரு காலத்தில் தேவை இருந்திருக்கும். ரூஸ்ஸோ, ருஷ்ய சரித்திர வரலாறு, சோவியத் ரஷ்யா, கிரீஸ் வரலாறு போன்றவற்றை இன்னும் படிக்கலாம். இவை சிறந்த அறிமுகப் புத்தகங்கள்.

சர்மா எழுதுவதற்காகவே வாழ்ந்தவர். அவர் மனைவி இறந்த பிறகு அவளைப் பற்றி பத்து கடிதங்கள் எழுதி அதையும் “அவள் பிரிவு” என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பின்னால் புத்தகமாக வெளியிடப் போகிறோம் என்ற பிரக்ஞையுடன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சாமிநாத சர்மாவைப் பற்றி உங்கள் யாருக்காவது ஏதாவது நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: சாமிநாத சர்மா பற்றி தினமணியில்

கலைஞர் எழுதிய குறளோவியம்

கலைஞர் கருணாநிதியின் புனைவுகள் மோசமானவை, இலக்கியத் தரமற்றவை என்று குறிப்பிட்டிருந்தேன். அதே பதிவில் அவர் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி எழுதி இருக்கும் உரைகளை நான் படித்ததில்லை என்றும் தமிழனுக்கு இந்த இலக்கியங்களைக் கொண்டு செல்ல முயலும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியவையே என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

நான் கவிதைகளில் தேடுவது எனக்கு அபூர்வமாகவே கிடைக்கிறது. அதனால் நான் கவிதைகளை பொதுவாக தவிர்த்துவிடுவேன். ஆனால் குறுந்தொகையில் பல பாடல்களை (அவரோ வாரார் முல்லையும் பூத்தன, நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று, நனந்தலை உலகமும் துஞ்சும், வில்லோன் காலன கழலே தொடியோள்) படித்துவிட்டு ‘இது கவிதை!’ என்று உணர்ந்திருக்கிறேன். என்ன பிரச்சினை என்றால் பல வார்த்தைகள் புரிவதில்லை. ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி‘ என்று யாராவது ஆரம்பித்தால் கொங்குதேர் என்றாலும் என்ன என்று தெரியாது, அஞ்சிறை என்றாலும் என்ன என்று தெரியாது. வாழ்க்கையும் தும்பியும் மட்டும்தான் தெரிந்த சொற்கள். அதனால் உரைகள் தேவைப்படுகின்றன.

ஆனால் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றிய அனேக தெளிவுரைகள் கவிதையின் சாரத்தைப் பிழிந்து எடுத்துவிட்டு சக்கையை மட்டுமே தருகின்றன என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. பள்ளி காலத்தில் கோனார் நோட்ஸ் மதிப்பெண் வாங்கப் பயன்படலாம், ஆனால் இன்று கோனார் நோட்சுக்கு தேவை இல்லை, கவிதையின் அழகை என்னிடம் கொண்டு வர வேண்டும். வெறுமனே வார்த்தைகளுக்கு பொருள் தருவது, இல்லை என்றால் ஏழெட்டு வயது சிறுவன்/சிறுமி லெவலில் எழுதப்படும் ஒரு ‘கதை’ மூலம் கவிதையை விளக்க முயல்வது எல்லாம் எரிச்சல்தான் தருகின்றன, கவிதையைப் படிக்கும் அனுபவத்தில் குறுக்கே நிற்கின்றன. சாதத்தில் மீண்டும் மீண்டும் கல் கடிபடுவது போல.

இது வரையில் இரண்டே இரண்டு விளக்கங்களை மட்டுமே என்னால் ரசிக்க முடிந்திருக்கின்றது. ஏ.கே. ராமானுஜனின் Interior Landscape, ஜெயமோகனின் சங்க சித்திரங்கள். இது என் குறையாக இருக்கலாம். என் குறையாகவே இருந்தாலும், அதை மீறி எனக்கு அந்தக் கவிதையைக் கொண்டு வரக் கூடிய விளக்கங்களையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ரொம்ப நாளாகவே கலைஞரின் தலையாயப் படைப்பாக சொல்லப்படும் குறளோவியத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதன்மைப் படைப்பு என்றால் முழுமோசமாக இருக்காது என்று ஒரு நினைப்பு.

குறளின் மொழி குறுந்தொகையின் மொழியை விட ஓரளவு புரிவது. கணிசமான குறள்களுக்கு எனக்கு உரை தேவைப்படாது. அதனால் இவர் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்பதில்தான் ஆர்வம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. சர்வசாதாரணமான விளக்கங்கள். சின்னப் பிள்ளைத்தனமான கதைகள் மூலம் சில பல குறள்களை விளக்கி இருக்கிறார். கோனார் நோட்சிலிருந்து வித்தியாசப்படுத்துவது அவருடைய அலங்காரத் தமிழ் மட்டுமே.

சிலவற்றுக்கு வழக்கமாக சொல்லப்படுவதிலிருந்து வேறு விளக்கம் தருகிறார். அது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்றால் மனைவியை வள்ளுவர் மழைக்கு ஒப்பிடுகிறார், மனைவி சொன்னால் மழை பெய்யும் என்று பொருளில்லை என்கிறார்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்

என்பதில் எச்சம் என்றால் பிள்ளை பெண் பேரன் பேத்திகள் அல்ல, அவரவர் சொற்கள் என்கிறார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று எழுதியவர் ஜடாமுடியும் தாடியுமாக இருந்திருக்க மாட்டார் என்று வாதிடுகிறார், ஆனால் கலைஞரின் ஆட்சியில் வள்ளுவரின் உருவம் இப்படித்தான் என்று ஓவியங்கள், சிலை மூலம் நிறுவியேவிட்டார்!

ஆனால் தண்டம் என்று இந்தப் புத்தகத்தை புறம் தள்ள முடியாது. ஏனென்றால் கலைஞர் ரசிகர்! அவர் தேர்ந்தெடுத்திருக்கும் குறள்கள் மிக அழகானவை. அதுவும் காமத்துப்பாலிலிருந்து அவர் எடுத்திருக்கும் குறள்களில் பல ரசிக்கக் கூடியவை. வள்ளுவர் விவரிக்கும் காதல் பதின்ம வயதுக் காதலாக, இன்னும் மன முதிர்ச்சி அடையாத காதலாக, முதல் காதலாகத்தான் இருக்குமோ? இவர் தேர்ந்தெடுத்திருப்பவற்றில் பல அந்த உணர்வைத்தான் கொடுக்கின்றன. குறிப்பாக பெண்ணின் சித்திரம்.

அவர் தேர்ந்தெடுத்திருக்கும் குறள்களில் பலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்

அழல் போலும் மாலைக்கு தூதாகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை

தாம் வீழ்வோர் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக்கண்ணன் உலகு?

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பினகத்து

கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுந்தரும்

வழுத்தினாள் தும்மினேனாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீரென்று

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூரவர்

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

கோட்டுப்பூ சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூடினீர் என்று

நினைத்து இருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர்
யார் உள்ளி நோக்கினீர்

ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

மின்பிரதி இங்கே கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்