கம்பனை ஆதரித்த வள்ளல் பிறந்த ஊர் – என் சொந்த ஊர்!

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள்சேர்
வெண்ணெயூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மெளலி!

என்று ஒரு கம்பன் பாடல் உண்டு. கம்பன் சோழ அரசின் கவி என்றாலும் அவனை முதலில் ஆதரித்தவர் திருவெண்ணைய்நல்லூர் சடையப்பர். சடையப்பரைப் பற்றி கம்ப ராமாயணத்தில் சில இடங்களில் வரும். குலோத்துங்க சோழனைப் பற்றி எங்கும் வருவதாக நினைவில்லை.

இந்த திருவெண்ணைய்நல்லூர் இன்றும் அதே பேரில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்தில் எங்காவது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பாஸ்கரத் தொண்டைமான் கம்பன் சுயசரிதம் என்ற கட்டுரையில் அது கதிராமங்கலம் என்கிற ஊர்தான் என்கிறார்.

கடுமையான மழை பெய்தபோது கம்பனின் வீடு ஒழுக இரவோடு இரவாக வயலில் இருந்த கதிரை அறுத்து சடையப்பர் கம்பனே அறியாமல் அவனது வீட்டுக் கூரையை வேய்ந்து கொடுத்தாராம். அதனால் கதிர்வேய்மங்கலம் என்று ஊருக்கு பேர் வந்ததாம். பிற்காலத்தில் கதிராமங்கலம் என்று மருவி இருக்கிறது. கதிராமங்கலம் வனதுர்கையே அப்படி வேய்ந்ததாகவும் ஒரு ஐதீகம் உண்டாம். கம்பன் வனதுர்கை கோவிலில் வழிபட்டான் என்கிறார்கள்.

கதிராமங்கலம் எங்கள் பூர்வீக ஊர். ஆனால் என் தாத்தா 1908-இலேயே சென்னை வந்துவிட்டார். எங்கள் தாத்தா வாழ்நாளிலேயே கதிராமங்கலம் தொடர்பு அறுந்துவிட்டது. அதுவும் காஞ்சி சங்கராசாரியரின் ஆலோசனையில் பேரில் போக வர வசதி உள்ள வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதஸ்வாமி கோவில் எங்கள் குலதெய்வமாக மாறிவிட்டது என்று என் அப்பா சொல்லுவார்.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால்தான் நான் முதன்முறையாக அந்த ஊருக்குப் போயிருந்தேன். வழக்கம் போல பேசாமல் இங்கே கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்து வாழலாமே என்று ஒரு பகல் கனவு வந்தது. 🙂

அங்கே இருந்த வனதுர்கை கோவிலுக்கும் எங்கள் குலதெய்வமான ஐயனார் கோவிலுக்கும்தான் போனேன். கவனிக்க, பிராமணக் குடும்பத்தின் குலதெய்வம் அபிராமண பூசாரி பூஜை செய்யும் ஐயனார் கோவிலாக இருந்திருக்கிறது, குலதெய்வத்தையே மாற்றிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

அது கம்பன் வாழ்ந்த ஊர் என்று இப்போதுதான் தெரிகிறது. விரைவில் ஏதாவது ஒரு கூரை வீட்டை புகைப்படம் பிடித்து இதுதான் கம்பன் வாழ்ந்த வீடு, இதுதான் சடையப்பர் வேய்ந்த கூரை என்று அடித்துவிடலாம் என்று இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

அம்பை

ஏப்ரல் மாத சொல்வனம் அம்பை சிறப்பிதழாக வந்திருக்கிறது. அப்போதே அம்பை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் விரும்பிய அளவுக்கு மீள்வாசிப்பு செய்யமுடியவில்லை. சரி நினைவிலிருப்பதை எழுதுவோம் என்றுதான் இதை எழுதுகிறேன்.

சொல்வனம் இதழில் வெங்கட் சாமிநாதன், எஸ்ரா, எம்.ஏ. சுசீலா, இ.பா. என்று பலரும் அம்பையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். நல்ல எழுத்தாளரை கௌரவித்ததற்காக சொல்வனம் குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” புத்தகத்தை நான் முதன்முதலாக படித்தபோது எனக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம். அது வரையில் பெண், பெண்ணிய எழுத்தாளர்கள் என்றாலே அய்யோ அய்யய்யோ என்று ஓடிவிடுவேன். சுப்ரபாரதிமணியன் அப்போதெல்லாம் செகந்தராபாத்தில் இருந்தார், வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி ஒன்றை கஷ்டப்பட்டு நடத்துவார். அவர் பரிந்துரையில் வாங்கிய புத்தகம். அதன் tattered copy இன்னும் கூட என் புத்தக அலமாரியில் எங்கோ இருக்கிறது. நான் குமுதம் விகடன் அவ்வப்போது கல்கி கலைமகள் என்று வாரப்பத்திரிகை படித்து வளர்ந்தவன். அன்று பிரபலமாக இருந்த லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களின் எழுத்து எனக்கு மகா சின்னப்பிள்ளைத்தனமாகத்தான் தெரிந்தது. என் கண்ணில் முதன்முதலாகப் பட்ட பெண் என்ற அடைமொழி தேவையில்லாத பெண் எழுத்தாளர் அம்பைதான். அந்தப் புத்தகத்திலிருந்த பல கதைகள் என் முகத்தில் அறைந்தன.

அம்பையின் சிறுகதைகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. ராஜஸ்தானி குடும்பத்தின் சமையலறையை வைத்து காலம் காலமாக ஒடுக்கப்படும் பெண், அதை பெண்கள் அதை ஏற்றுக் கொள்ளும், எதிர்கொள்ளும், circumvent செய்யும் விதங்களை மிகச் சிறப்பாக காட்டிவிடுகிறார். அபாரமான சிறுகதை, தமிழ் மட்டுமல்ல, உலக அளவில் நான் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் என்னை பாதித்த சிறுகதைகளில் ஒன்று. அதைப் பற்றி இங்கே.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை வெளிப்பாடு.

நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை…

என்ற ஒரு வரி எனக்கு என்றும் மறக்காது. I realized how much I take my mother for granted in the instant I read that sentence. இந்த வரியை ஜெயமோகன் கிண்டலடிப்பார். 🙂 இன்று வரை அதில் கிண்டலடிக்க என்ன இருக்கிறது என்று புரிந்ததில்லை. அவரிடமே கேட்டும் இருக்கிறேன். 🙂

டக்கென்று இந்தக் கணம் நினைவு வரும் அருமையான சிறுகதைகள் கறுப்பு குதிரை சதுக்கம் மற்றும் மல்லுக்கட்டு.அம்பையின் குரல் எப்போதும் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும். ஆனால் மல்லுக்கட்டு மிகவும் subtle ஆக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று.

ஆனால் பெரிதும் சிலாகிக்கப்படும் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையை நான் பெரிதாக ரசித்ததில்லை. தேய்வழக்காகத் (cliche) தெரிந்தது. தோழி அருணா ஒரு முறை நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் அந்தக் கதையை ஒரு வேளை புரிந்து கொண்டிருக்கலாம் என்று சொன்னார். அடுத்த ஜன்மத்தில்தான் பார்க்க வேண்டும்.

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தன் seminal சிறுகதை பரிந்துரைகளில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான் சிறுகதைகளை தமிழின் சிறந்த 100 சிறுகதைகளில் இரண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அம்பையின் பெண்ணிய நோக்கு, முற்போக்கு அரசியல் நிலை சில சிறுகதைகளில் வலுவான பிரச்சார நெடியாக வெளிப்படத்தான் செய்கிறது. உதாரணமாக புனர். அது என் ஆண் பார்வையின் கோளாறாக இருந்தாலும் இருக்கலாம்.

அம்பையின் சமீபத்திய சிறுகதைகளில் தென்படும் ஒரு கரு முதுமையை எதிர்கொள்வது. சில கஷ்டமான, தனிப்பட்ட முறையில் நான் எதிர்கொள்ள விரும்பாத கேள்விகளை சாம்பல் மேல் எழும் நகரம் போன்ற சிறுகதைகளில் கேட்கிறார். ஆனால் குரல் உரத்து ஒலிக்கிறது, அதனால் முழுமை கூடவில்லை என்று கருதுகிறேன்.

அம்பையின் பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

கோவில் ஓவியங்கள்

சுவரோவியங்கள் உள்ள தமிழகக் கோவில்கள் என்று ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. இந்தப் பட்டியலில் பத்து பனிரண்டு கோவில்களுக்குப் போயிருந்தாலும் தஞ்சை பெரிய கோவில் ஓவியங்களைத் தவிர நான் வேறு எதையும் பார்த்ததில்லை.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு சமீபத்தில்தான் போயிருந்தேன், சிற்பங்களைப் பார்த்து பிரமித்து நின்றுவிட்டதாலோ என்னவோ, ஓவியங்களைப் பார்த்த நினைவே இல்லை!

உத்திரமேரூருக்கு அருகில் பல வருஷங்கள் வசித்திருக்கிறோம், ஒரு முறை கூட சுந்தரவரதப் பெருமாள் கோவிலுக்குப் போனதில்லை!

  1. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
  2. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  3. திருப்பருத்திக்குன்றம் சந்திரப்பிரபா கோவில்
  4. உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோவில்
  5. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்
  6. வீடூர் ஆதிநாதர் கோவில்
  7. செஞ்சி வெங்கடரமணஸ்வாமி கோவில்
  8. சித்தாமூர் பார்ஸ்வநாதர் கோவில்
  9. பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில்
  10. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
  11. திருமலை சமணக் கோவில்
  12. திருக்கோவிலூர் திரிவிக்ரமப்பெருமாள் கோவில்
  13. சிதம்பரம் நடராஜர் கோவில்
  14. விருத்தாசலம் பழமலைநாதர் கோவில்
  15. குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில்
  16. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
  17. மதுரை மீனாட்சி கோவில்
  18. அழகர்கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில்
  19. திருக்கோஷ்டியூர் சௌந்தரநாராயணப் பெருமாள் கோவில்
  20. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  21. மடவார்வளாகம் வைத்யநாதஸ்வாமி கோவில்
  22. சித்தன்னவாசல் சமணக் கோவில்
  23. குடுமியான்மலை குடுமிநாதர் கோவில்
  24. நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில்
  25. திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்
  26. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்
  27. கும்பகோணம் ராமஸ்வாமி கோவில்
  28. முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம்
  29. பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோவில்
  30. திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்
  31. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்
  32. ஆடுதுறை ஆபத்சகாயஸ்வேரர் கோவில்
  33. திருமங்கலங்குடி பிரணநாகேஸ்வரர் கோவில்
  34. திருவையாறு ஐயாறப்பன் கோவில்
  35. தஞ்சை பெரிய கோவில்
  36. வேதாரண்யம் சிவன் கோவில்
  37. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவில்
  38. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
  39. ராமநாதபுரம் ராமலிங்க விலாசம்
  40. உத்தரகோசமங்கை மங்களேஸ்வர ஸ்வாமி கோவில்
  41. குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
  42. ஆழ்வார் திருநகரி ஆதிநாதஸ்வாமி கோவில்
  43. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
  44. திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில்
  45. திருப்புல்லாணி ஆதிஜகன்னாதர் கோவில்
  46. வரகுணமங்கை பெருமாள் கோவில்
  47. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
  48. சுசீந்திரம் ஸ்தாணுமாலயன் கோவில்
  49. அதமன்கோட்டை சென்ராயன் கோவில்
  50. மலையடிப்பட்டி பெருமாள் குடைவரைக்கோவில்
  51. இடைக்கால் தியாகராஜர் கோவில்
  52. கங்கைகொண்டசோழபுரம் கங்கை கொண்ட சோழீச்சுரம்
  53. திட்டக்குடி சிவன் கோவில்
  54. வேப்பத்தூர் பெருமாள் கோவில்

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

பட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்

நீங்கள் புதிதாக ஒரு நூலகத்தைத் திறந்தால் – அதற்காக 100 புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால், எவற்றை வாங்குவீர்கள்? வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், எல்லா நூலகங்களிலும் அனேகமாக இருக்கும் புத்தகங்கள் எவை? அதற்கும் ஒரு பட்டியல்Worldcat தளத்திலிருந்து இதற்கான தரவுகளை எடுத்திருக்கிறார்கள்.

டாப் டென் மட்டும் வசதிக்காக கீழே. அனேகமாக நாம் எல்லாருமே இவற்றைப் படித்திருப்போம். Alice, Huckleberry Finn, Pride and Prejudice, Moby Dick ஆகியவை கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.

  1. Don Quixote by Miguel de Cervantes
  2. Alice’s Adventures in Wonderland by Lewis Carroll
  3. The Adventures of Huckleberry Finn by Mark Twain
  4. The Adventures of Tom Sawyer by Mark Twain
  5. Treasure Island by Robert Louis Stevenson
  6. Pride and Prejudice by Jane Austen
  7. Wuthering Heights by Emily Brontë
  8. Jane Eyre by Charlotte Brontë
  9. Moby Dick by Herman Melville
  10. The Scarlet Letter by Nathaniel Hawthorne

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

தமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்

கி.வா.ஜ. உ.வே.சாமிநாதய்யரின் அணுக்க சீடர். சம்பிரதாயமான தமிழ் பண்டிதர். சிலேடையாகப் பேசுவதில் வல்லவராம். ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.‘, ‘கி.வா.ஜ. சிலேடைகள்‘ என்று அவரது சிலேடைப் பேச்சை புத்தகமாகவே போட்டிருக்கிறார்கள். கலைமகள் ஆசிரியராக வெகு நாள் இருந்தவர். வீரர் உலகம் என்ற புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அவரது புத்தகங்கள் பொதுவாக ஏதாவது சங்கக் கவிதை விளக்கமாகவோ, அல்லது முருகன் துதி விளக்கமாகவோ இருக்கும். சம்பிரதாயமான இலக்கிய விளக்கம் எல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம், ஜெயமோகன் மாதிரி ஆள்தான் சரிப்பட்டு வருகிறது. அவரை மறந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

கி.வா.ஜ.வின் சொந்த வாழ்க்கை அன்றைய தமிழ் பண்டிதர்களின் வாழ்க்கைக்கு ஒரு ஜன்னல். ஏழை பிராமணக் குடும்பம். சிறு வயதில் தமிழார்வம், பக்தி. பள்ளிப் படிப்பு முடிக்கவில்லை. கவிதை எழுத வந்தது. கிராம மிராசுதார்களின் தயவில் 20-25 வயது வரை வாழ்க்கை. கிராமத்து குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொற்பொழிவுகள் ஆற்றி, நாலு பெரிய மனிதர்களை புகழ்ந்து கவி பாடி, வெள்ளைக்காரர் ஒருவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, ஐந்தும் பத்தும் சம்பாதித்து வாழ்க்கை ஓடி இருக்கிறது. உ.வே.சா.விடம் சேர வேண்டும் என்று ஆசை. உ.வே.சா.வும் பெரும் பணக்காரர் அல்லர். அவர் என்னிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம், ஆனால் நிலைத்து இருக்க வேண்டும், உன் செலவுக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டி இருக்கிறார். பிறகு மீண்டும் பெரிய மனிதர்கள் அவ்வப்போது உதவுவது. உ.வே.சா. ஒரு கட்டத்தில் இவருக்கு மாத சம்பளம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். விகடன் உட்பட்ட சில இடங்களில் வேலைக்கு கூப்பிட்டிருக்கிறார்கள், ஆனால் இவருக்கு குருபக்தி அதிகம், உ.வே.சா.வை விட்டு போக மறுத்திருக்கிறார். கலைமகளில் பகுதி நேர வேலை, நினைத்தபோது வரலாம், போகலாம் என்றதும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிறகு கலைமகள் ஆசிரியராகி, பேச்சாளராகி…

கி.வா.ஜ. மந்தவெளியில் வாழ்ந்தவர். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். கட்டை குட்டையாக இருப்பார். அப்போதெல்லாம் கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவற்றைப் பற்றி சொற்பொழிவுகள் பிரபலமாக இருந்தன. கந்தரலங்காரம் பற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு – தனி வீடு – ஒன்றை நாஸ்டால்ஜியாவுக்காக புரட்டிப் பார்த்தேன். இனி மேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அவரது சில புத்தகங்களை கொஞ்சம் தம் கட்டிப் பிடித்தேன். அவற்றைப் பற்றி:

புது மெருகு: பல தொன்மக் கதைகள் – எல்லாம் புலவர்கள் பற்றியது. தொல்காப்பியரிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்திருந்தது.

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜ.வுக்கு கல்கியே தமிழ் நாவலின் உச்சம். அவரது கருத்துகளை இன்றைக்கு பொருட்படுத்த வேண்டியதில்லைதான், ஆனால் ஓரளவு ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல தமிழ் நாவல்களைப் பற்றி கொஞ்சம் விவரம் கிடைக்கிறது.

தமிழ் நூல் அறிமுகம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி சிறிய, படிக்கக் கூடிய அறிமுகங்களைத் தருகிறது

தமிழ்த் தாத்தா: உ.வே.சா.வைப் பற்றிய சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு. இதை விட உ.வே.சா.வின் சுயசரிதையையே படித்துக் கொள்ளலாம்.

என் ஆசிரியப்பிரான்: உ.வே.சா.வைப் பற்றிய துதி நூல் என்றே சொல்லலாம். கி.வா.ஜ.வைப் பற்றியும் குறை சொல்வதற்கில்லை, உ.வே.சா. அவருக்கு ஏறக்குறைய தெய்வம்தான். ஆனால் உபயோகமான தகவல்கள் எதுவும் இல்லை, உ.வே.சா.வை யார் பாராட்டினார்கள், என்ன சொன்னார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

வாருங்கள் பார்க்கலாம்: பாடல் பெற்ற சிவஸ்தலங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவாமூர், திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை என்று பல ஸ்தலங்கள். எனக்கும் இப்படி கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் என்று இப்போதெல்லாம் ஒரு ஆசை இருக்கிறது. ஜெயமோகனால் வந்த வினை. அதே போல இலங்கை பயண அனுபவங்களை கதிர்காம யாத்திரை என்று ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.

அறப்போர், காவியமும் ஓவியமும், எல்லாம் தமிழ், மனை விளக்கு, அதியமான் நெடுமான் அஞ்சி, இன்பமலை, கன்னித்தமிழ், புது வெள்ளம் போன்றவை சங்கப் பாடல்களின் விளக்கங்கள் மற்றும் புலவர்கள் பற்றிய குறிப்புகள். என் கண்ணில் இவற்றுக்கான தேவை இன்னமும் இருக்கிறது. ஆனால் அவரது விளக்கங்கள் சம்பிரதாயமானவையே. கோனார் நோட்சை சுவாரசியமாக எழுதும் முயற்சி, அவ்வளவுதான். ஆனால் வாழும் தமிழ் என்ற புத்தகத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தொல்காப்பியத்துக்கு – அது கூட இல்லை, அதில் சில பகுதிகளுக்கு – நல்ல அறிமுகம்.

கரிகால் வளவன் என்ற புத்தகத்தையும் குறிப்பிட வேண்டும். இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கரிகாலனின் வாழ்க்கையை விவரிக்கிறார்.

நாயன்மார் கதை போன்றவை முக்கியமானவை. பெரிய புராணத்தை சுருக்கமாக தரும் முயற்சி.

சகலகலாவல்லி போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. குமரகுருபரர் இயற்றிய செய்யுள்களை விளக்கி இருக்க்கிறார். இவர் போன்றவர்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு பாடல் இருப்பதே நமக்கெல்லாம் தெரியப் போவதில்லை.

ஒரு சாண் வயிறு, நல்ல சேனாபதி போன்ற புத்தகங்களின் முக்கியத்துவம் கவிதைகள் நம் ரேடாரில் பட வைக்கிறது என்பதுதான். இவையெல்லாம் முக்கியமான பங்களிப்பு என்பது வயதாக வயதாகத்தான் தெரிகிறது.

பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் – செவ்வியல் இலக்கியங்களோடு நின்றுவிடாமல் நாட்டுப் பாடல்களையும் தொகுத்திருக்கிறார். மலை அருவி அப்படிப்பட்ட ஒரு தொகுப்பு.

பாண்டியன் நெடுஞ்செழியன் (1956) எனக்கு பயனுள்ள புத்தகம். நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவற்ற்றைப் பற்றி ஒரு அட்சரமும் தெரியாது. இரண்டும் தலையாலங்கனத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வைத்துப் பாடப்பட்டவை. நெடுநல்வாடை நக்கீரராலும் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாராலும் எழுதப்பட்டவை. முன்னது நெடுஞ்செழியனின் மனைவி குளிர்காலத்தில் போருக்கு சென்றிருக்கும் மன்னனைப் பிரிந்து வாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. பின்னது அரசனின் போர் வெற்றிகளை விவரித்து ஆனால் நாட்டின் நலத்தை – விவசாயம், நீர்வளம், வணிகம் – ஆகியவற்றிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறது.

பரம்புமலை வள்ளல், எழுபெரு வள்ளல்கள், குமண வள்ளல் வரலாறு, கோவூர் கிழார் போன்ற புத்தகங்கள் பள்ளி மாணவர்களைக் குறி வைத்து எழுதப்பட்டவை போலத் தெரிகின்றன. கோவூர் கிழார் புத்தகத்தை 2012-இல் சரியாக ஏழாம் வகுப்புக்கு துணைப்பாடமாகவும் வைத்திருக்கிறார்கள்.

கவிதைகளையும் சிறுகதைகளையும் முயற்சித்திருக்கிறார். அறுந்த தந்தி, கலைஞனின் தியாகம், குமரியின் மூக்குத்தி, கோவில் மணி, மூன்று தலைமுறை, வளைச்செட்டி, கலைச்செல்வி என்ற சிறுகதைத் தொகுப்புகள் கிடைத்தன. அறுந்த தந்தி சுமார்; மற்ற எதுவும் குறிப்பிடும்படி இல்லை. சிறுவர் நூல்களைக் கூட விடவில்லை. (நல்ல பிள்ளையார், நாலு பழங்கள்)

கலைமகள் ஒரு காலத்தில் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகள், நாவல்களைப் பதித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (எழுபதுகளில் அப்படி எல்லாம் இல்லை.) அதற்கு அவரது பங்களிப்பும் இருந்திருக்கும். அவர் வீடு சென்னை மந்தவெளியில் இருந்தது. சிறு வயதில் ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். அதற்கப்புறம் நான் தமிழ் எழுத்தாளர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க ரொம்ப நாளாயிற்று. 🙂

கி.வா.ஜ. போன்ற பண்டிதர்கள், தமிழறிஞர்கள் தேவை. இல்லாவிட்டால் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி யாரிடம் போய் கேட்பது? அவர் போன்றவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்தால் தமிழில் கொஞ்சம் ஊக்கம் அதிகரித்திருக்கும் வியக்க வைக்கும் ஒரு விஷயம் அவர் இலக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் நாடோடிப் பாடல்கள் மீதும் கவனம் செலுத்தி சேகரித்திருப்பது. சில காலமாவது கலைமகளை இலக்கியப் பத்திரிகையாக நடத்தி இருக்கிறார். ஆனால் அவர் பொருட்படுத்தப்பட வேண்டிய புனைவு எழுத்தாளர் அல்லர். அதனால் ஒரு குறைவுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

அஞ்சலி: கிரீஷ் கார்னாட்

கார்னாட் இறந்துவிட்டார் என்றதும் ஒரு நிமிஷம் நம்பவே முடியவில்லை. என் மனதில் இருக்கும் கார்னாடின் உருவம் வம்சவிருக்‌ஷாவில் நடித்த இளைஞர்தான். அதற்கப்புறம் அவரை வேறு திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் எப்போதும் இளைஞராகவே தோற்றம் அளித்தார். அவருக்கு 81 வயதாகிவிட்டதா என்று தோன்றியது.

கார்னாடின் முக்கியப் பங்களிப்பு அவர் எழுதிய நாடகங்கள். அவரது திரைப்பட பங்களிப்பு என்னைப் பொறுத்த வரையில் இரண்டாவது இடம்தான் வகிக்கிறது. இத்தனைக்கும் அவர் இயக்கிய வம்சவிருக்‌ஷா, தப்பலியு நீனடே மகனே, மந்தன், உத்சவ் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

கார்னாடின் நாடகங்களில் எனக்கு எப்போதும் ஏதோ குறைகிறது என்பதை சொல்ல வேண்டி இருக்கிறது. கார்னாடின் வேர்கள் இந்தியாவில் – அதுவும் கர்நாடகத்தில்தான் இருக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரிடம் ஒரு அன்னியத் தன்மை தெரிகிறது. பார் நான் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதுகிறேன் என்று அவர் வலிந்து சொல்வது போலத் தோன்றுகிறது. எனக்கு இதை சரியாக விளக்கத் தெரியவில்லை. விஜய் டெண்டுல்கரின் நாடகங்களிலோ, பாதல் சர்க்காரின் நாடகங்களிலோ எனக்கு இப்படித் தெரிவதில்லை.

துக்ளக் (1964), ஹயவதனா (1972), நாகமண்டலா (1988), தலேதண்டா (1990), அக்னி மட்டு மலே (1995), திப்பு சுல்தான் கண்ட கனசு (1997), பலி ஆகிய நாடகங்களைப் படித்திருக்கிறேன். யயாதி (1961) நாடகத்தைப் படிக்க விரும்புகிறேன். நான் படித்தவற்றுள் சிறந்த நாடகம் துக்ளக்தான். துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா, தலேதண்டா ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

எப்போதாவது விவரமாக எழுதவேண்டும். இப்போதைக்கு தலேதண்டாவைப் பற்றி முன்னால் எழுதிய ஒரு பதிவை மீள்பதித்திருக்கிறேன்.


girish_karnadதலேதண்டா எழுதப்பட்ட காலத்தில் நான் பெங்களூருவில் நாடகமாகப் பார்த்திருக்கிறேன். நல்ல நாடகம்தான், ஆனால் ஏதோ குறைகிறது என்று உணர்ந்தேன். பல வருஷங்களுக்குப் பின் மீண்டும் படிக்கும்போதும் அப்படியேதான் தோன்றுகிறது.பொதுவாகவே கிரீஷ் கார்னாட் எழுதிய நாடகங்கள் எனக்கு என்னவோ குறையுது என்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகின்றன.

தலேதண்டா என்றால் literal ஆக ‘தலை தண்டம்’ அதாவது என் தலையை வெட்டிக் கொள்ளலாம் என்று அர்த்தமாம். ‘ராமஜன்ம பூமி-பாபர் மசூதி’ பிரச்சினை இருந்த காலத்தில் எழுதப்பட்டது. கார்னாட் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டதை எதிர்ப்பவர் (நானும்தான்), ஆனால் அந்த அரசியல் எண்ணத்தை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்துவது அதன் இலக்கியத் தரத்தை குறைக்கிறது என்று கருதுகிறேன்.

basavaபசவர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைய கர்நாடக மாநிலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டு காலத்தில் சிவனடியார்களுக்குள் ஜாதி வேற்றுமை இல்லை, எல்லாரும் சமம் என்று ஒரு இயக்கத்தை தொடங்கினார். இன்றைய லிங்காயத்து ஜாதியினர் பசவர்தான் தங்கள் ஜாதியை உருவாக்கினர் என்று பெருமை பேசுவது நகைமுரண். அவரைப் பற்றிய சில கர்ணபரம்பரைக் கதைகளை கார்னாட் நாடகம் ஆக்கி இருக்கிறார்.

நாடகம் ஆரம்பிக்கும் காலத்தில் பசவரின் இயக்கத்தில் இரண்டு லட்சம் சரணர்கள் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சரண் என்று சொல்லி வணக்கம் சொல்வதால் அவர்கள் சரணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாதி இல்லை, குறைந்த பட்சம் மேலோட்டமாக இல்லை. பசவர் ராஜா பிஜ்ஜலனிடம் மந்திரியாக இருக்கிறார். பசவரை வீழ்த்த ஒரு கூட்டம் முயன்று கொண்டிருக்கிறது. சரணர்களில் ஒரு பிராமணப் பெண்ணுக்கும் செருப்பு தைப்பவர் குடும்பப் பையனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பசவரே தயங்குகிறார். அவருக்கு ஜாதி மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் இந்த இருவராலும் வாழ முடியுமா என்று சந்தேகிக்கிறார். பிஜ்ஜலன் திருமணத்தை தடுக்காததால் சுமுகமாக நடந்துவிடுகிறது. பசவர் உலக வாழ்க்கையை விட்டு சன்னியாசி ஆகிறார். பிஜ்ஜலனை சிறைப்படுத்தும் அவன் மகன் சோவிதேவன் பையன், பெண் இருவருடைய அப்பாக்களையும் குரூரமாகக் கொல்கிறான். பசவர் இறந்தும் போகிறார்.

நாடகத்தின் பலம் பாத்திரங்களின் நம்பகத்தன்மை. இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறார் கார்னாட். ஆனால் கதையின் ஊடாக கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கிறது. பல இடங்களில் நம்பகத் தன்மையை அதிகரிக்க பாத்திரங்கள் இப்படி இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க முடிகிறது. கலையம்சம் என்னைப் பொறுத்த வரையில் குறைவாக இருக்கிறது. நடுவில் ஒரு இடத்தில் அல்லம பிரபு தனக்கு காண்பித்த mystical காட்சி என்று பசவர் நாலு வரி சொல்கிறார். அதை விவரித்திருந்தால் நாடகம் எங்கோ போயிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி விவரிப்பார், கார்னாடுக்கு மத ஒற்றுமை பற்றி பேச வேண்டுமே!

சராசரிக்கு மேல் உள்ள நாடகம்தான். படிக்கலாம்தான். ஆனால் படித்தே ஆக வேண்டிய நாடகம் இல்லை. பார்ப்பது இன்னும் உத்தமம்.

தலேதண்டாவுக்கு 1994-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.

பிற்சேர்க்கை: திப்பு சுல்தான் கண்ட கனசு திப்புவின் “நல்ல” பக்கத்தை மட்டும் காட்டுகிறது. திப்பு பட்டு, சந்தனம் ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்ய முயன்றார். மராத்தியர்களும் நிஜாமும் அவர் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் ஆங்கிலேயர்களை ஜெயித்திருப்பார். அதைத்தான் அவர் கனவு கண்டதாக எழுதி இருக்கிறார். படிக்கலாம், பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். பலி எனக்கு pretentious ஆகத் தெரிந்தது. எனக்கான நாடகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

அஞ்சலி: க்ரேசி மோகன்

நான் வளர்ந்தது கிராமங்களில். அங்கே நாடகம் என்றால் வருஷத்துக்கு ஒரு முறை நடக்கும் கூத்து, பள்ளி ஆண்டு விழாவில் எப்போதும் நடிக்கப்படும் சாக்ரடீஸ் நாடகம் அவ்வளவுதான். என்றாலும் விடுமுறைக்கு சென்னையில் பெரியம்மா, அத்தை, மற்ற உறவினர் வீடுகளுக்கு வரும்போது அவர்கள் தயவில் சில நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் சென்னை சபா சர்க்யூட்டில் தமிழில் நகைச்சுவை, பொழுதுபோக்கு நாடகங்களின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. க்ரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் ஒரு முறை, சென்னையில் வருஷாவருஷம் நடக்கும் பொருட்காட்சியில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தை எழுதித்தான் மோகன் க்ரேசி மோகன் ஆனார். அந்த நாடகத்தில் அவரும் கடத்தப்படும் சிறுவனின் அப்பாவாக ஒரு முக்கிய பாத்திரத்தில் அப்போதெல்லாம் நடிப்பார். பிறகு எஸ்.வி. சேகர் தனியாக நாடகம் நடத்தி கொடி கட்டிப் பறந்தார். ஆனால் அந்த வயதிலேயே கூட மோகனின் நகைச்சுவை, வார்த்தை விளையாட்டு எல்லாம் இன்னும் நயமாக இருந்ததை கவனித்திருக்கிறேன்.

ஆள் மாறாட்டம் என்று வந்துவிட்டால் மோகனை கையில் பிடிக்க முடியாது. அசத்திவிடுவார். அவரை விட சிறப்பாக இந்தக் கருவை கையாளக் கூடியவர் பி.ஜி. வுட்ஹவுஸ் ஒருவரே.

நல்ல நடிகர்கள் கிடைத்துவிட்டால் அவரது படைப்புகள் இன்னும் உச்சத்திற்கு சென்றுவிடுகின்றன. மைக்கேல் மதனகாமராஜன், காதலா காதலா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் பார்த்து சிரிக்காதவர் யார்?

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு வரை க்ரேசி மோகனின் படைப்புகள் என் கண்ணிலேயே பட்டிருக்காது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அது மேட்டிமை மனநிலையோ, blind spot-ஓ நானறியேன். என் மூத்த பெண் பள்ளியில் King Stag (1762) என்ற நாடகத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாள். அந்த நாடகத்தைப் படித்தபோது க்ரேசி மோகனின் நாடகங்கள், தனிப்பட்ட முறையில் நான் விரும்பும் சங்கரதாஸ் ஸ்வாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் எழுதியவை இதை விட ஒரு மாற்று உயர்ந்தவை என்றுதான் தோன்றியது. Arsenic and Old Lace, Blithe Spirit ஏன் Pirates of Penzance போன்றவற்றுக்கும் சபாபதி, க்ரேசி தீவ்ஸ், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

எங்கோ ஒரு புள்ளியில் கேளிக்கை எழுத்து இலக்கியமாகிவிடுகிறது. Arms and the Man, Importance of Being Earnest போன்றவை அந்தப் புள்ளியை தாண்டி இருக்கின்றன. க்ரேசி மோகன் அந்தப் புள்ளியைத் தாண்டவே இல்லை. தாண்ட முயற்சி செய்யவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் இலக்கியம் படைக்கவில்லை. அவரது நாடகங்கள் பொழுதுபோக்கு எழுத்து மட்டுமே. ஆனால் அதனால் அவருக்கு ஒரு குறைவும் இல்லை. அவர் பாணி எழுத்துக்கு என்றும் தேவை இருக்கிறது, இருக்கும். எத்தனையோ முறை சிரிக்க வைத்தவருக்கு மன்மார்ந்த நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டி: க்ரேசி மோகனின் இலக்கிய மதிப்பு

நாராய் நாராய் செங்கால் நாராய்

(மீள்பதிவு) – பாடலுக்கு யூட்யூப் சுட்டி கிடைத்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

சிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.

கவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.

வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்
ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

இது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

ஒரு மங்கலான நினைவு -“எங்கள் வாத்தியார்ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.

தகவல் தந்த சாரதாவுக்கு நன்றி! பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி! பாடலுக்கு யூட்யூப் சுட்டி தந்த சந்திரனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

மறக்க முடியாத வரிகள்

81 Staggering Lines என்ற ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. ஷேக்ஸ்பியர் இல்லாமல் எப்படி 81 வரிகளைத் தொகுத்தார் என்று புரியவில்லை. இருந்தாலும் சில தேர்வுகள் என் மனதிலும் பதிந்தவைதான். சிலவற்றை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிவு அந்தக் கட்டுரையைப் பற்றி அல்ல. தமிழ் புனைவுகளில் அப்படி என்ன வரிகள் மனதில் பதிந்திருக்கின்றன? எனக்கு ஒன்றே ஒன்றுதான் சட்டென்று தோன்றியது.

கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!

வேறு ஒரு வரியும் தோன்றவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? நினைவில் கொள்ளுங்கள், அந்த வரி கதைக்கு முக்கியமா என்பதை வைத்து தேர்வு செய்யாதீர்கள். அந்த வரி அதன் மட்டிலுமே striking ஆக இருக்க வேண்டும். எதிர்மறை உதாரணமாக ‘எனக்கு டகர் பாயிட் வருங்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க’ என்பது முக்கியமான வரிதான். ஆனால் அந்த வரியை மட்டுமே பார்த்தால் ஒன்றும் பிரமாதமில்லை. தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் இல்லாமல் போகாது, என் மரமண்டைக்குத்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது.

முகின்? பாலாஜி? விசு? சுந்தரேஷ்? பக்ஸ்? ராஜன்? ராஜ் சந்திரா?

உதாரணங்கள் கீழே:

Pride and Prejudice:
It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife.

A Tale of Two Cities:
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair.

Glass Menagerie:
Time is the longest distance between two places.

Gone With the Wind:
My dear, I don’t give a damn.

Fellowship of the Ring:
All we have to decide is what to do with the time that is given us.

Anna Karenina:
All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

One Hundred Years of Solitude:
Many years later, as he faced the firing squad, Colonel Aurelio Buendía was to remember that distant afternoon that his father took him to discover ice.

1984:
It was a bright cold day in April, and the clocks were striking thirteen.

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” – கோட்சேயின் விளக்கம்

(மீள்பதிவு)

nathuram_godseகோட்சேயின் விளக்கத்தை நான் 200% நிராகரிக்கிறேன். ஆரம்பப் புள்ளி தவறானது என்றால் அதன் மேல் கட்டப்படும் எந்த வாதமும் சரியாக இருக்கப் போவதில்லை. காந்தி எப்போதும் தன் அரசியலை நடைமுறை அரசியலை விட உயர்ந்த தளத்தில் வைத்திருக்க முயன்றார் என்பதை கோட்சேயால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் கோட்சேயின் வாதங்கள் முக்கியமானவை, ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்று கருதுகிறேன். அவற்றைப் படிக்கும்போது காந்தியின் தளமே வேறு, அவர் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பது இன்னும் நன்றாகப் புரிகிறது. ஏதோ என்னாலானது அதற்கு சுட்டி தந்திருக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்