தமிழ் மொழிபெயர்ப்புகள்: Words without Borders

Words without Borders பல மொழிகளிலிருந்து படைப்புகளை மொழிபெயர்க்கும் ஒரு அமைப்பு. தமிழைப் பற்றிய அவர்களது ஒரு இதழுக்கான இணைப்பு இங்கே.

அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, முத்துலிங்கம், இமையம், திலிப்குமார் என்று பலரது படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்

 

 

அண்ணாதுரையின் நாடகம் – வேலைக்காரி

(மீள்பதிவு, சில திருத்தங்களுடன்)

A Raisin in the Sun நாடகம் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன். என் கண்ணில் இது இரண்டாம் வரிசை நாடகம் மட்டுமே. ஆனால் இந்தத் தரத்தில் இருக்கும் நாடகம் கூட எதுவும் தமிழில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

தமிழில் பொருட்படுத்தக் கூடிய நாடகங்களை எழுதியவர்கள் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, ஜெயந்தன், சோ ராமசாமி, அண்ணாதுரை, மெரீனா மட்டுமே. (ஜெயமோகன் நாடகங்கள் எதுவும் நடிக்கப்படவில்லை, அதனால் நான் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்துக் கொண்டாலும் அவரது நாடகங்களையும் ஷேக்ஸ்பியர், செகாவ், இப்சன், ஷா, ப்ரெக்ட் வரிசையில் வைக்க வேண்டியவையாக நான் கருதவில்லை.) நான் படித்த வரையில் இவற்றில் வெகு சிலவே இந்த இரண்டாம் வரிசைத் தரத்தை எட்டுகின்றன.

அண்ணாதுரையின் முக்கியத்துவம் அவருடைய முன்னோடித்தனம்தான். தன் இயக்கத்தின் நோக்கங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலிருந்தால் அவரால் இன்னும் நல்ல நாடகங்களை எழுதி இருக்க முடியும் என்று நம்மை நினைக்க வைப்பதுதான். அவரது நாடகங்களில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது ஓரிரவைத்தான். ஆனால் 
வேலைக்காரிதான் அண்ணாதுரை எழுதிய நாடகங்களில் சிறந்தது என்று சொல்கிறார்கள். படிப்பதை விட பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கத்தினர் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி – எழுதிய நாடகங்கள் எல்லாமே பிரச்சார நாடகங்கள்தான் என்று நினைக்கிறேன். பிரசார நோக்கம் வரிக்கு வரி தெரிந்தாலும் பார்த்த, படித்த வரையில் அண்ணாவின் எழுத்துகளில் செயற்கைத்தனம், அலங்காரத் தமிழ் ஓரளவு குறைவாக இருக்கிறது. அடுக்குமொழி வசனங்களைக் காணோம். அதெல்லாம் கருணாநிதி ஸ்பெஷல் போலிருக்கிறது. நாடகத்தில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் மிக அதிகம் – ஆனால் அது அந்த நாளைய நாடகங்களில் சகஜம் என்று நினைக்கிறேன்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக சர்ச்சையை எழுப்பி இருக்கும். குறிப்பாக தன் பகைவனுக்கு மேலும் மேலும் வெற்றி என்று தெரிந்து கதாநாயகன் பேசும் வசனங்கள் மிக நன்றாக இருந்தன. நல்லவர்களுக்கு கஷ்டங்கள் ஏன் என்பது பைபிளின் ஜாப் காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்விதான் என்றாலும் இங்கே ஆவேசம் வார்த்தைகளில் அப்படியே தெறிக்கிறது. காளி கடவுள் இல்லை, வெறும் கல்தான் என்று சொல்லும் இடத்தில் அந்நாளில் விசில் பறந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வட்டிக்கு பணம் தரும் வேதாசல முதலியார். அவர் மகள் சரசா, மகன் பெயர் மறந்துவிட்டது மூர்த்தி. அவரது ஏச்சு தாங்கமுடியாமல் ஆனந்தனின் தந்தை தூக்கில் தொங்கிவிடுகிறார். ஊரிலிருந்து திரும்பி வரும் ஆனந்தன் காளிக்கு பூஜை செய்து அப்பாவின் சாவுக்கு காரணமான முதலியாரை தண்டிக்குமாறு வேண்டுகிறான். முதலியாரோ ஜமீந்தார் ஆகிவிடுகிறார். ஆனந்தன் காளியை ஏசுகிறான். நண்பன் மணியின் உதவியோடு வெகு நாள் முன் ஊரை விட்டுப் போன ஒரு அந்தஸ்தான குடும்ப வாரிசு என்று சொல்லி திரும்பி வருகிறான், எல்லாரும் நம்பிவிடுகிறார்கள். சரசாவை மணக்கிறான், பிறகு முதலியாரை தண்டிப்பதற்காக சரசாவை கொடுமைப்படுத்துகிறான். குடி, கூத்தி என்று அலைகிறான். முதலியார் வீட்டு வேலைக்காரி அமிர்தத்துக்கும் அவர் மகனுக்கும் காதல். வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அமிர்தம் இறந்துவிட்டாள் என்று நினைத்து மூர்த்தி ஒரு ஆசிரமத்தில் சேருகிறான். அங்கே வழக்கம் போல சாமியாரின் சல்லாபம். சாமியாரைக் கொன்றுவிடுகிறான் மூர்த்தி. அவனுக்காக மாறுவேஷத்தில் கோர்ட்டில் வாதாடி ஆனந்தன் அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறான். இதற்குள் அமிர்தம் ஒரு பணக்காரருக்கு மகளாக போகிறாள். அமிர்தம்-மூர்த்தி திருமணம், ஆனந்தனின் க்ளைமாக்ஸ் பேச்சு, முதலியாரின் மனம் திருந்துதல், சுபம்!

இதில் நடக்கும் பல சம்பவங்கள் இன்று cliche-க்கள் ஆகிவிட்டன. ஆனாலும் கோர்வையாகத் தொகுத்திருப்பது தெரிகிறது. நண்பன் மணி நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம்.

வேலைக்காரி 1949இல் ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு தயாரிப்பில் திரைப்படமாகவும் வந்தது. கே.ஆர். ராமசாமி ஆனந்தன்; பாலையா மணி; நம்பியார் மூர்த்தி; எம்ஜிஆரை மணந்து கொண்ட வி.என். ஜானகிதான் கதாநாயகி அமிர்தம். இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

தமிழ் நாடகங்கள் எப்படி இருந்தன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நாடகம். முக்கியமான நாடகம். நல்ல ஆவணம். மற்றவர்கள் படிப்பதை விட திரைப்பட வீடியோ கிடைத்தால் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

A Raisin in the Sun – Groundbreaking Play

லொரெயின் ஹன்ஸ்பெர்ரி எழுதிய A Raisin in the Sun (1959) அமெரிக்க நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. கறுப்பினப் பெண் எழுதி, ஒரு கறுப்பர் – லாய்ட் ரிச்சர்ட்ஸ் – இயக்கிய நாடகம் பிராட்வேயில் அரங்கேறுவது அதுவே முதல் முறை. (பிராட்வே நியூ யார்க்கில் நாடகங்கள் அரங்கேறும் இடம். அங்கே ஒரு நாடகம் நடத்தப்படுவது பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.) ஆனால் அதை விட எனக்கு முக்கியமாகத் தெரிவது கறுப்பர்கள் பெருவாரியான பாத்திரங்களாக ஒரு நாடகத்தில், அதுவும் பிராட்வே நாடகத்தில் இடம் பெறுவது அதுவே முதல் முறை. ஒரே ஒரு கதாபாத்திரம்தான் வெள்ளை இனத்தவர் என்று நினைக்கிறேன்.

கச்சிதமாக எழுதப்பட்ட நாடகம். ஏறக்குறைய டெம்ப்ளேட் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இத்தனை சுவாரசியமாகவும் இலக்கியத் தரத்தோடும் நாடகத்தை உருவாக்க முடியும் என்று ஹன்ஸ்பெர்ரி காட்டுகிறார். நடிக்க நிறைய ஸ்கோப் உடையது. நல்ல நடிகர்கள் புகுந்து விளையாடலாம். முதல் முறை நாடகமாக நடிக்கப்பட்ட போது நாயகனாக நடித்தவர் சிட்னி பாய்டியர். படிக்கும்போதே இத்தனை பிரமாகமாக இருப்பது நல்ல நடிப்பும் சேர்ந்துகொண்டால் எங்கேயோ போய்விடும்.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலம். சிகாகோவில் கீழ் மத்திய தர வர்க்க, கறுப்பர் குடும்பம். ஒண்டுக் குடித்தனத்தில் பாட்டி லேனா, அப்பா வால்டர் லீ, அம்மா ரூத், அத்தை பெனதியா, சிறுவன் ட்ராவிஸ் என்று வாழ்கிறார்கள். பணப் பற்றாக்குறை எப்போதும் உண்டு. லேனாவிற்கு இன்ஷூரன்ஸ் பணம் பத்தாயிரம் வர வேண்டும். வால்டர் லீ கார் ட்ரைவராக வேலை செய்கிறார். எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்ற துடிப்பு. பணம் இல்லாமல் எந்த பிசினசிலும் இறங்க முடியாத நிலை. அம்மா அந்தப் பணத்தை தனக்கு தரமாட்டாளா, அதை வைத்து இந்த அடிமை வேலையை விட்டு ஒழித்துவிட்டு முன்னேற மாட்டோமா என்று பரிதவிக்கிறார். வால்டரின் மனைவி ரூத் எல்லாரையும் அரவணைத்து செல்கிறார், ஆனால் வாழ்க்கை – குறிப்பாக ஒண்டுக் குடித்தன வாழ்க்கை – அவரை தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. இளைஞி பெனதியா அண்ணனோடு சண்டை போட்டுக் கொண்டு, இரண்டு இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

வால்டர் லீ அம்மாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதுக்கடை வைக்க விரும்புகிறார். அம்மாவுக்கோ இஷ்டமில்லை. பணம் வந்தவுடன் ஒரு வீட்டை வாங்க அட்வான்ஸ் கொடுக்கிறாள். ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை விட்டு வெளியேறலாம் என்ற எண்ணமே ரூத்திற்கு புது உற்சாகம் தருகிறது. பணம் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் வால்டருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. அவரது தவிப்பைக் கண்டு லேனா வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ், பெனதியாவின் படிப்புக்கு கொஞ்சம் பணம் எடுத்து வைத்துவிடலாம், மிச்சத்தை நீ வைத்துக் கொள் என்று வால்டரிடம் கொடுத்துவிடுகிறாள். வால்டர் புது மனிதராக மாறுகிறார். உற்சாகத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

லேனா அட்வான்ஸ் கொடுத்த வீடு வெள்ளையர்கள் வாழும் ஒரு காலனி. அங்கே குடி போகப்போகும் முதல் கறுப்பர் குடும்பம் இதுதான். கறுப்பர் குடும்பம் அங்கே வருவதை விரும்பாத அந்த காலனி மக்கள், உனக்கு மேலே கொஞ்சம் பணம் தருகிறோம், வீட்டை எங்களுக்கே விற்றுவிடு என்று பேரம் பேசுகிறார்கள். வால்டர் லீ அவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகிறார்.

வால்டரின் நண்பன் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிடுகிறான். வால்டர் தோல்வியின் சுமையைத் தாங்க முடியாமல் உட்கார்ந்திருக்கிறார். சரி வீடு வேண்டாம், பணம் கொடுங்கள் என்று காலனி சங்கத்து நிர்வாகியிடம் பேசுகிறார். லேனா அடிமைகளாக வாழ்ந்த நினைவிருக்கிறது, எப்போது ஏழைகளாகத்தான் இருந்தோம், ஆனால் நீ எங்களோடு சரிக்கு சமமாக வாழத் தகுதி அற்றவன்(ள்) என்ற இழிநிலையை என்றுமே ஏற்றதில்லை, இப்போதும் கூடாது என்று கடுமையாக ஆட்சேபிக்கிறாள். வால்டர் லீ நம் போன்றவர்களுக்கு இதுதான் விதி, நம்மால் என்றுமே இந்த இழிவை மீற முடியாது என்று தளர்ச்சியோடு சொல்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் வால்டர் லீயின் மனம் மாறுகிறது. நாங்கள் அங்கேதான் குடியேறப் போகிறோம் என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். சுபம்!

பெனதியா வால்டர் லீ பணத்தை கோட்டை விட்டதற்காக நீ எல்லாம் ஒரு மனிதனா ரேஞ்சில் வால்டர் லீயைக் கழுவி ஊற்றும்போது லேனா சொல்வது எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்.

Child, when do you think is the time to love somebody the most? When they done good and made things easy for everybody? Well then, you ain’t through learning—because that ain’t the time at all. It’s when he’s at his lowest and can’t believe in hisself ’cause the world done whipped him so! When you starts measuring somebody, measure him right, child, measure him right. Make sure you done taken into account what hills and valleys he come through before he got to wherever he is.

உண்மைதானே! உண்மையான உறவுகளும் நண்பர்களும் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்!

வெய்யிலில் கிடக்கும் திராட்சை சுருங்கிப் போவது போல ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளில், மன அழுத்தத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களும் சுருங்கிப் போகிறார்கள் – அதனால்தான் ஹன்ஸ்பெர்ரி A Raisin in the Sun என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. வால்டர் லீ, ரூத், லேனாவுடன் மனம் ஒன்ற முடிகிறது.

கறுப்பர் பின்புலம் முக்கியமானதுதான். ஆனால் இதை எந்தப் பின்புலத்திலும் பொருத்திக் கொள்ளலாம். கலிஃபோர்னியாவில் வாழும் உணவு விடுதி வெயிட்டர் குடும்பத்துக்கோ, சென்னையில் வாழும் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்துக்கோ இது அன்னியமானதல்ல.

கட்டாயம் பாருங்கள், குறைந்தபட்சம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்கள்

எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்.

ஆர்.எம். வீரப்பன் எம்ஜிஆர் யார் என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் எம்ஜிஆரை விட ஜெயலலிதா பற்றிதான் அதிகம் எழுதி இருக்கிறார். ஜெ மீது எப்போதும் எம்ஜிஆருக்கு ஒரு soft corner இருந்திருக்கிறது. ஜெ தான் எம்ஜிஆரின் ‘துணைவி’, தன்னால் எம்ஜிஆரை அடக்கி ஆள முடியும் என்று காட்ட அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் முயன்றாராம். ஆர்எம்வீயின் தலையீட்டால்தான் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்க முடியாமல் போயிற்றாம். ஆர்எம்வீ ஜெவை நீங்கள் அழைத்துச் சென்றால் உங்கள் கீப்பை அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போகிறீர்கள் என்றுதான் பேச்சு வரும் என்ற் வெளிப்படையாகவே எம்ஜிஆரிடம் சொன்னாராம். அப்போது ஆரம்பித்த உரசல் அரசியலிலும் நீடித்திருக்கிறது.

முன்னாள் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் – எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர் – எழுதிய MGR: The Man and the Myth புத்தகத்தில் புதிதாக எதுவுமில்லை. அந்தக் காலத்து செய்தித் தாள்களைத் தொகுத்தது போலத்தான் இருக்கிறது.

ரவீந்தர் எம்ஜிஆருடன் கூடவே இருந்திருக்கிறார். எம்ஜிஆருக்காக பல ட்ரீட்மென்ட்களை எழுதி இருக்கிறார், அவற்றில் வெகு சிலவே படமாகி இருக்கின்றன என்று தெரிகிறது. நாடோடி மன்னன் படத்தில் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. எம்ஜிஆரைப் பற்றி வேதநாயகன் எம்ஜிஆர் என்று ஒரு புகழ்மாலை எழுதி இருக்கிறார். ஆனாலும் அதில் அங்கங்கே எம்ஜிஆரின் பழி வாங்கும் குணம் வெளிப்படத்தான் செய்கிறது. தியாகராஜ பாகவதர் அசோக்குமார் திரைப்படத்தில் எம்ஜிஆர் நடிப்பதை விரும்பவில்லையாம், முதல்வராக இருந்தபோது அவரது மனைவியை காத்துக் கிடக்க வைத்திருக்கிறார், கடைசியில் அரசு மூலம் ஏதோ சிறு உதவி செய்திருக்கிறார். வில்லன் நடிகர் அசோகன் ஏதோ சொல்லிவிட்டார் என்று அவரை பழி வாங்கி இருக்கிறார். மஞ்சுளா போட்ட ஒப்பந்தத்தை மீறி வெளிப்படங்களில் நடித்ததற்காக அவரை விரட்டி இருக்கிறார். தன் இமேஜில் வெகு கவனமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

நாடோடி மன்னன் திரைப்படத்தை எம்ஜிஆர் தயாரித்து இயக்கியது தெரிந்ததே. திரைப்படத்திற்கு பங்களித்த பலரைப் பற்றி எம்ஜிஆரே எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. படிக்கலாம்…

இவற்றில் எதுவும் படித்தே ஆக வேண்டிய புத்தகமில்லை. (ஆர்எம்வீ புத்தகம் கொஞ்சம் பரவாயில்லை) தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இவை சுவாரசியப்படவும் போவதில்லை. ஆனால் எம்ஜிஆர் பற்றிய பிம்பம் இன்னும் உறுதிப்படுகிறது. என்றைக்காவது எம்ஜிஆரைப் பற்றிய நடுநிலையான, உண்மைகளை மட்டுமே பிரதானப்படுத்தும் வாழ்க்கை வரலாறு வராதா, தமிழில் ராஜ்மோகன் காந்தியும் ராமச்சந்திர குஹாவும் சர்வபள்ளி கோபாலும் என்றுதான் அவதரிக்கப் போகிறார்கள் என்ற ஏக்கம் எழுகிறது. அது சரி, உண்மையை எழுதினால் தொ/குண்டர் படை வீட்டுக்கு அனுப்பப்படலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

திருலோக சீதாராம்: கவிதையின் கலை

திருலோக சீதாராம் பற்றி எனக்குத் தெரிந்ததை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிவிடலாம் – பாரதி குடும்பத்தோடு ஓரளவு நெருக்கமானவர், கவிஞர், அவ்வளவுதான். அவரது மகன் திருலோக சுப்ரமணியத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது இதை சாக்காக வைத்து சில பல வருஷங்களாக அபூர்வமாகவே சந்திக்கும் சிலிகன்ஷெல்ஃப் நண்பர்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன். பாலாஜியும் சுந்தரேஷும் வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள், எதிர்பார்த்த ராஜனும் விசுவும் முகினும் வரமுடியவில்லை. ஆனால் அந்த ஏமாற்றத்தைத் தாண்டி தி. சீதாராம் என்ற சுவாரசியமான ஆளுமையை கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ரவி சுப்ரமணியம் எடுத்த டாகுமெண்டரி நன்றாக இருந்தது. டாகுமெண்டரியைப் பார்த்த பிறகு பாரதி குடும்பத்தோடு ஓரளவு அல்ல, நிறையவே நெருக்கமானவர் என்பதும் தெரிந்தது.

என் மனதைத் தொட்ட கவிதைகள் மிகக் குறைவு. தமிழில் ஒரு 25-30 கவிதை இருந்தால் அதிகம். ஆங்கிலத்தில் பத்து கூட தேறுமா என்று தெரியவில்லை. இது என் குறையாகவே இருக்கலாம் – எனக்கு கவிதையின் nuances அபூர்வமாகவே புரிகின்றன. நான் மொழியைத் தாண்ட முடியாதது கவிதை அல்ல என்று கருதுவதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. என் கண்ணில் பாரதியின் வசன கவிதை மட்டுமே மொழியைத் தாண்டக் கூடியது. குயில் பாட்டு கூட தாண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. படித்த வரையில் (ஐம்பது-நூறு பாடல் படித்திருந்தால் அதிகம்) கம்பன் தமிழைத் தாண்ட முடியாது என்றுதான் நினைக்கிறேன். குறுந்தொகைக்கு – குறிப்பாக ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்புக்கு – மொழி தடையில்லை. பாரதியையும் கம்பனையும் பற்றியே இப்படி நினைப்பவன் பிற கவிஞர்களால் – அதுவும் சென்ற, இந்த நூற்றாண்டுக் கவிஞர்களால் பெரிதாகக் கவரப்படப் போவதில்லை.

திருலோக சீதாராம் கவிதையை வேறு விதத்தில் அணுகி இருக்கிறார். கவிதையை நிகழ்த்துகலையாக மாற்றி இருக்கிறார். கவிதைகளை – குறிப்பாக பாரதி, பாரதிதாசன் கவிதைகளை – மனப்பாடம் செய்து அவற்றை மேடையில் படித்தும் பாடியும் இருக்கிறார். கதாகாலட்சேபம் மாதிரி, வில்லுப்பாட்டு மாதிரி. கேட்டவர்கள் – அசோகமித்திரன், க.நா.சு., ஜெயகாந்தன் உட்பட்ட பலர் – மெய்மறந்து போயிருக்கிறார்கள். நான் மொழி என்ற கோட்டைத் தாண்டுகிறதா என்பதையே கண்குத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்கிறேன், அவரோ அந்தக் கோட்டுக்குள் நின்றுகொண்டு எப்படி கவிதையை ரசிப்பது, எப்படி அந்த ரசனையைப் பரப்புவது என்று முனைந்திருக்கிறார். அதுவும் ஒரு பிரமாதமான, valid அணுகுமுறையே. ஒலி நயத்தை, சந்தத்தை, கவிதையின் உத்வேகத்தை முன் வைக்கும் அணுகுமுறை. சிறுவயதில் நான் பாரதி கவிதைகளைப் படித்தது அப்படித்தான். அவரும் பாரதி, பாரதிதாசன் கவிதைகளைத்தான் முன்னிலைப் படுத்தி இருக்கிறார். என் கண்ணில் பாரதிதாசன் சிறந்த கவிஞர் இல்லைதான், ஆனால் சந்தம் அவருக்கு கை வந்த கலை. திருலோக சீதாராமின் நிகழ்த்துகலைக்கு உத்வேகம் நிறைந்த பாரதி பாடல்களும் ஒலி நயம் நிரம்பிய பாரதிதாசன் பாடல்களும் மிகப் பொருத்தமானவை. எஸ்.வி. சஹஸ்ரநாமம் பாஞ்சாலி சபதத்தை நாடகமாக அரங்கேற்றியபோது இவர்தான் பாடல்களைப் பாடிக் காண்பித்திருக்கிறார், அப்போதெல்லாம் நாடகக் குழுவோடு செல்வாராம்.

சீதாராமின் ஒரு உரை கூட இன்று கிடையாது. (1973-இல் மறைந்துவிட்டார், வானொலி உரைகள் கூட இன்று இல்லையாம்.) ஆனால் கேட்டவர்கள் விவரிப்பது கூட அவருடைய தாக்கத்தை புரிய வைக்கிறது. வானொலியில் ஏதாவது உரை கிடைத்துவிடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.

சீதாராம் வேறு பல தளங்களிலும் பணியாற்றி இருக்கிறார். பாரதி குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். செல்லம்மாள் பாரதி இவர் மடியில்தான் மறைந்தாராம். இன்றும் அவரது சந்ததியினர் பாரதியின் சந்ததியினருடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஏவிஎம் செட்டியாரின் கட்டுப்பாட்டிலிருந்த பாரதி பாடல்கள் நாட்டுடமை ஆவதில் பங்காற்றி இருக்கிறார். சிவாஜி என்ற சிறுபத்திரிகையை முப்பது நாற்பது வருஷங்கள் தொடர்ந்து நடத்தி இருக்கிறார். நோபல் பரிசை வென்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர், தெலுங்கு ஓரங்க நாடகங்களை சாஹித்ய அகடமிக்காக மொழிபெயர்த்திருக்கிறார். ஜி.டி. நாயுடுவைப் பற்றி உழைப்பின் உயர்வு என்று ஒது புத்தகம் எழுதி இருக்கிறார்.

சுவாரசியமான ஆளுமையும் கூட. பலதரப்பட்ட மனிதர்களிடமும் உண்மையான நட்பு பாராட்டி இருக்கிறார். ஜி.டி. நாயுடுவும் நெருங்கிய நண்பர் – அதுவும் பத்தாயிரம் பணம் அனுப்பும் என்றால் அவர் அனுப்புவாராம், அந்த அளவுக்கு நெருக்கமான நட்பு – பக்கத்தில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்த சர்தார்ஜியும் நெருங்கிய நண்பர். காமராஜையும் நன்றாகத் தெரியும், அண்ணாவும் அக்ரஹாரத்தில் இன்னொரு அற்புத மனிதர் என்று பாராட்டி இருக்கிறார். பாரதி குடும்பத்தில் ஒருவராகப் பழகி இருக்கிறார், பாரதிதாசனின் மதிப்பிற்குரியவராக இருந்திருக்கிறார். எம்எல்ஏ தேர்தலில் போட்டி இட்டிருக்கிறார் (தோல்வி, பத்தாயிரம் ரூபாய் அந்தக் காலத்தில் கையை விட்டு செலவழித்தாராம்) சொற்பொழிவாற்றினால் ஒரு சவரன் (8 கிராம் தங்கம், இன்றைய விலைமதிப்பில் கிட்டத்தட்ட 25000) தரவேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார், ஆனால் கண்டிப்பாக இருந்து அதை வசூலித்தாரா என்று தெரியவில்லை, வாழ்க்கையை நடத்த அச்சகத்தைத்தான் நம்பி இருந்திருக்கிறார். ஜி.டி. நாயுடுவிடம் சில ஆயிரம் கடன் வாங்கினேன், திருப்ப முடியவில்லை என்கிறார். நாயுடு அதை தள்ளுபடி செய்ததும் அல்லாமல் மேலும் பணம் தந்திருக்கிறார்.

அவர் எழுதிய இலக்கியப்படகு என்ற புத்தகத்தைப் படித்தேன். சரளமான, சுவாரசியமான எழுத்து. பாரதியின் கட்டுரைகளை நினைவுபடுத்தியது.

டாகுமெண்டரியில் உள்ள ஒரு கவிதை இங்கே பாந்தமாக இருக்கிறது.

The Arrow and the Song – Longfellow

I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.

I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?

Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend.

அவரைப் பார்த்து, அவர் பேசியதையும் பாடியதையும் கேட்ட தலைமுறை அவரை மறக்காது என்று தெரிகிறது, ஆனால் அந்தத் தலைமுறை இன்று அனேகமாக இல்லை. ஆனால் என்றோ அவர் பாடியதும் பேசியதும் எழுதியதும் இன்றும் எங்கோ ஒரு உள்ளத்தைத் தொடத்தான் செய்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

சாண்டில்யன் எழுதிய யவனராணி

சாண்டில்யனின் நாவல்களில் மிகவும் பிரபலமானவை யவனராணியும் கடல் புறாவும்தான். எனக்கு முந்தைய தலைமுறையினர் பலரும் யவன ராணியையே ஒரு மாற்று அதிகமாக எடை போட்டார்கள், சாண்டில்யனின் மாஸ்டர்பீஸாக கருதினார்கள்.

யவனராணியைப் படிக்கும்போது எனக்கு எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்த படைப்பு. குறிப்பாக கடலில் மூழ்கும் நாயகன் கடல் ஆமையோடும் சுறாக்களோடும் சண்டையிடும் காட்சி. பிறகு ஆயுதங்களை வீசக்கூடிய யவனப் பொறிகள் என்ற ஐடியாவே த்ரில்லிங் ஆக இருந்தது. பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு மூன்று பெண்கள், சதிக்கு மேல் சதி என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்றும் இளவயதினர் படிக்க ஏற்ற புத்தகம், காமிக்ஸாக வெளியிட்டால் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

சாண்டில்யனைப் படித்த தலைமுறைகளுக்கு வயதாகிவிட்டதால் கதைச்சுருக்கத்துக்கு தேவை இருக்கலாம். சோழ அரசன் இளஞ்சேட்சென்னி சதியால் கொல்லப்பட்டவுடன் வாரிசு சண்டை. இளவரசன் கரிகாலனைக் கொல்ல சதி நடக்கிறது. அவன் பக்கம் இருக்கும் படைத்தலைவன் இளஞ்செழியன். இதற்கிடையில் புகார் நகரத்தை யவனர் டைபீரியஸின் தலைமையில் கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்களின் ராணிக்கு இளஞ்செழியன் மேல் காதல். டைபீரியஸ் இளஞ்செழியனை கப்பலில் ஏற்றி கிரேக்கத்துக்கு அனுப்பிவிடுகிறான். அங்கே தப்பி, அடிமையாக விற்கப்பட்டு, அரேபிய சிறு நாடு ஒன்றில் மாட்டிக்கொண்டு, மீண்டும் தப்பி, தமிழகம் வந்து, டைபீரியஸை சமாளித்து, கரிகாலனை மன்னனாக்க உதவுகிறான்.

இன்று யோசித்துப் பார்த்தால் என்ன இத்தனை பூ சுற்றுகிறாரே என்று தோன்றுகிறது. இளஞ்செழியனை மயக்கமருந்து கொடுத்து கப்பலில் ஏற்றி, அங்கேயே முடிந்தால் கொன்றுவிடுமாறு டைபீரியஸ் உத்தரவிடுகிறான். இவனே கூட கொஞ்சம் விஷத்தைக் கொடுத்திருக்கலாம். தமிழகம் திரும்பும் இளஞ்செழியன் தான் டைபீரியஸுக்கு உதவ வந்திருக்கும் யவனக் கப்பல் படைத்தலைவன் என்று சொல்லிக் கொண்டு டைபீரியஸை பல முறை சந்திக்கிறான். ஆனால் எப்போதும் முகத்தில் கவசத்துடன், அதனால் டைபீரியஸுக்கு இவன்தான் இளஞ்செழியன் என்று தெரியவில்லையாம். கழட்டுடா என்று ஒரு முறை கூடவா சொல்லமாட்டான்? எல்லாவற்றையும் விடுங்கள், எந்த யவனன் (கிரீஸ் நாட்டுக்காரன்) டைபீரியஸ் என்று பேர் வைத்துக் கொள்வான்? டைபர் ஆறு ஓடுவது ரோம் நகரத்தில். சாண்டில்யன் தமிழர்களுக்கு பிற நாடுகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் ரோமாபுரிக்காரர்களைத்தான் யவனர் என்று குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

குமுதம் பத்திரிகையின் பெருவெற்றிக்கு சாண்டில்யனின் தொடர்கதைகள் ஒரு முக்கிய காரணம். யவன ராணி, கடல் புறா போன்றவையே அந்த தொடர்கதைகளில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்தவை என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

இலக்கியம் அல்லதான்; குறைகள் உள்ள வணிக நாவல்தான். ஆனால் இள வயதினருக்கு படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய நாவல். பதின்ம வயதினரைப் படிக்க வையுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’

உ.வே.சா.வின் என் சரித்திரம் ஒரு காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஆவணம். அவருடைய உண்மையான தேடலை எடுத்துக் காட்டுகிறது. அவரது குணாதிசயம் மிக நன்றாகப் புரிகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

உ.வே.சா., உ.வே.சா.வின் குருநாதரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சமகாலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதியார், ஏன் உ.வே.சா.வின் அப்பா கூட  19-ஆம் நூற்றாண்டின் பாணர்கள். அவர்களுக்கு தமிழில் புலமை, சங்கீதத் திறமை, செய்யுள் எழுதும் திறன், கீர்த்தனங்கள் எழுதும் திறன் என்று ஏதாவது ஒன்று இருந்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்ட கிராமங்களில் கச்சேரி, கதாகாலட்சேபம், உரைகள், எதையாவது நடத்தி இருக்கிறார்கள். மிராசுதார்கள், பண்ணையார்கள், சமஸ்தான அதிபதிகள், ஆதீனங்கள் யார் தயவாவது வேண்டி இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் பண்டிதர்கள் மெதுமெதுவாக அரசு வேலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படி புரவலர் ஆதரவில் வாழ்ந்தவர்களின் கடைசி பிரதிநிதிகளில் ஒருவர். உ.வே.சா. மெதுமெதுவாக அரசு வேலைகள் பக்கம் நகர்ந்தவர்களின் முதல் பிரதிநிதிகளில் ஒருவர்.

சிறு வயதிலேயே உ.வே.சா.வின் மனம் தமிழில் ஈடுபட்டுவிட்டது. யாராவது ஏதாவது சொல்லித் தரமாட்டார்களா, எந்த நூலையாவது கற்றுக் கொள்ள மாட்டோமோ என்று அலைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் முதன்மையான தமிழ் பண்டிதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. முட்டி மோதி கடைசியில் அவரிடம் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக பிள்ளையின் முதன்மை சீடர் ஆகி இருக்கிறார். பிள்ளையின் மறைவுக்குப் பிறகு பிள்ளை இருந்த ஸ்தானத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவில் வாழ்ந்திருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிவது உ.வே.சா. பணம், பதவி உள்ளவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வது. சில பல அவமானங்களை சகித்துக் கொள்வது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவரை விடுங்கள், பிள்ளையே வளைந்து கொடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.

தெளிவாகத் தெரியும் இன்னொரு விஷயம் ஜாதி ஆசாரம். உ.வே.சா. பிராமணர். குருநாதர் மீது எத்தனை மரியாதை, அன்பு இருந்தாலும் பிள்ளை வீட்டில் இவர் சாப்பிட முடியாது, பிராமணர் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் ஓரளவு நெகிழ்வுத்தன்மையும் தெரிகிறது. பிள்ளையின் சீடர்கள் பல ஜாதியினர். ஏன், கிறிஸ்துவரான சவேரிநாதப் பிள்ளை பிள்ளையின் முதன்மை சீடர்களில் ஒருவர்.

சில காலத்துக்குப் பிறகு தியாகராஜ செட்டியார் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிகிறார். அப்போதும் கல்லூரி முதல்வர் தன் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் இருந்திருக்கிறது. அதாவது, கல்லூரி முதல்வர் தன் சொந்தப் பணத்தை இவருக்கு சம்பளமாகத் தரவில்லை என்றாலும், அவர்தான் இப்போது உ.வே.சா.வுக்கு புரவலர், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.

தமிழில் பல பிரபந்தங்கள், உலாக்கள் போன்ற கொஞ்சம் பிற்கால நூல்களைப் படித்திருந்தாலும் உ.வே.சா. சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பல நூல்களைப் பற்றி கேட்டதே இல்லை. அது வரை தமிழ் நூல்களைப் படிப்பது என்றால் குரு சீடருக்கு தலைமுறை தலைமுறையாக சொல்லித் தந்து வருவதுதான். சிறந்த தமிழறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றவர்களே சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் சரியாக புரியவில்லை என்று விட்டுவிட்டார்களாம். இந்த நூல்களைப் படிக்கும் சரடு எப்படியோ அறுந்து போயிருக்கிறது.

தற்செயலாக சேலம் ராமசாமி முதலியார் மூலம் இந்த நூல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிந்தாமணியைப் புரிந்து கொள்ள பல வருஷம் உழைத்திருக்கிறார். சிந்தாமணியில் பல ஜைன மதம் சார்ந்த குறிப்புகள் உண்டாம். உ.வே.சா. பல ஜைனர்களிடம் சென்று பாடம் கேட்டிருக்கிறார்.  உ.வே.சா. பட்டினியோடு போராடவில்லை என்றாலும் பணக்காரர் அல்லர். பதிக்க பணம் வேண்டும். சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னால் பணம் புரட்ட முடியும்,  தான் பதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். தன் உழைப்புக்கு சி.வை.தா. புகழ் பெறுவதில் உ.வே.சா.வுக்கு சம்மதமில்லை, ஆனால் அவருக்கு நல்ல பதவியில் இருப்பவரை மறுப்பது சுலபமாகவும் இல்லை. தான் பணம், பதவி உள்ளவர்களின் ஆதரவில் வாழும் பாணன் என்ற மனப்பான்மை அவரை கடைசி வரையில் விடவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல போராட்டங்களுக்கு பின்னால் சிந்தாமணி பதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையே இதுதான் – ஏடுகளைத் தேடுவது, பதிப்பது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்று புத்தகத்திற்கு மேல் புத்தகமாக பதித்திருக்கிறார். புகழ் பெற்றிருக்கிறார். இன்றும் பழைய புத்தகங்களைப் பதித்தவர்களில் முதல்வர் அவரே.

வளையாபதியின் முழு வடிவத்தை திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறு வயதில் பார்த்ததாகவும் ஆனால் புத்தகங்களைப் பதிக்க ஆரம்பித்த பிறகு அது கிடைக்கவில்லை என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

உ.வே.சா.வின் வாழ்க்கையின் முதல் தாக்கம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரை ஆதரித்தவர் திருவாவடுதுறை சுப்ரமணிய தேசிகர். அவருடைய அருமை தெரிந்து அவரை உயர்த்தப் பாடுபட்டவர் தியாகராஜ செட்டியார். அவரது வாழ்க்கையை மாற்றியவர் சேலம் ராமசாமி முதலியார். படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஜாதி ஆசாரம் மிகுந்து இருந்த நாட்களில் ஒரு பிராமணரின் வாழ்க்கைக்கு பிள்ளை, செட்டியார், முதலியார் என்று பலரும் கை கொடுத்திருக்கிறார்கள்!

வேறு சில இடங்களில் உ.வே.சா. பிராமணர்களுக்கு மட்டுமே தமிழ் சொல்லித் தருவார் என்றும் படித்திருக்கிறேன். அவருடைய முதன்மை சீடர் கி.வா. ஜகன்னாதன் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாரண. துரைக்கண்ணனின் தமிழறிவைப் பாராட்டினாலும் துரைக்கண்ணன் சூத்திரன், சூத்திரனுக்கு தமிழ் சொல்லித் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இது உண்மையாக இருந்தால் ஆச்சரியம்தான் – மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஏறக்குறைய பக்தியே உள்ளவர், சவேரிநாதப் பிள்ளையையும் தியாகராஜ செட்டியாரையும் ராமசாமி முதலியாரையும் தன் உயிர் நண்பர்களாகக் கருதியவர், செட்டியார் வீட்டிலும் முதலியார் வீட்டிலும் பல காலம் தங்கியவர், சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரா? ஒரு வேளை துரைக்கண்ணனுக்கு தமிழ் சொல்லித் தரக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம், அது இப்படி பிராமணன்-சூத்திரன் என்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

உ.வே.சா. பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார். அவருடைய ஆப்தரான தியாகராஜ செட்டியார் மீது, அவருக்கு சில காலம் சங்கீதம் கற்றுக் கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் மீது எல்லாம் எழுதி இருக்கிறார்.

புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்றவை அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. Charming ஆக இருந்தது.

‘என் சரித்திரம்’ புத்தகத்தை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

1827-இல் தமிழ் பாடம்

1827-இல் வெளியிடப்பட்ட Sixth Book of Tamil Language-இலிருந்து ஒரு பகுதி. வெளியிட்டவர் ‘சென்னப்பட்டணம் கல்விச் சங்கத்து செக்கிரட்டரி’ ஹென்றி ஹார்க்னஸ்.

ஒரு சிறு பிள்ளை உண்டு. அவன் பேர் ராஜகோபாலன். அவன் தகப்பனாரும் தாயாரும் அனுப்பினார்கள, அவனைப் பள்ளிக்கூடத்துக்கு.  அப்புறம் ராஜகோபாலன் ஒரு நல்ல யுக்திசாலி. எந்நேரமும் தன் சுவடியின் பேரிலேயே ஆசையாய் இருந்தான். தன் வகுப்பிலே அவன் முதல் எண்ணில் வந்தான். ஆகையினாலே அவன் தாயார், ஒரு நாள் கோழி நேரத்திலே எழுந்திருந்து, வேலைக்காறிச்சி கருப்பாத்தாளை அழைத்து, கறுப்பாத்தே, நாம் ஒரு பருப்புத் தேங்காய் ராஜகோபாலனுக்காக சுட வேணும். ஏனென்றால் அவன் தன் சுவடியை மெத்த நன்றாய் கற்றுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள். கறுப்பாத்தாள் சொன்னாள், ஆம் அப்படியே நானும் நினைக்கிறேன் என்று.

அப்பிரகாரமே அவர்கள் பண்ணினார்கள் ஒரு நாணயமான பருப்புத் தேங்காய் அவனுக்காக. அது மெத்தப் பெரிசாய் இருந்தது. வேண்டிய மட்டும் நிறைய சம்பாரிக்கவும் திணிக்கவும் பட்டிருந்தது. திவ்விய திராக்ஷாப்பழம், முந்திரிப்பருப்பு, வாதுமைப்பருப்பு, கசகசா, லவங்கம், சாதிக்காய், சாபத்திரி, சுக்கு, ஏலரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெண்ணைய் இதுகளினாலே அதன் மேல்புறம் எங்கும் கல்கண்டினாலே பாகு செலுத்தப்பட்டிருந்தது. அது சிகரத்திலே பனியைப் போலே வெண்மையும் மழமழப்பும் உடையதாய் இருந்தது. அப்படியே இந்தப் பருப்புத் தேங்காய் அவன் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது.

அதை அந்த சின்ன ராஜகோபாலன் பார்த்த உடனே வெகு சந்தோஷப்பட்டான். ஆனந்தத்தினாலே குதித்தான். அதிலே ஒரு துணுக்கை அறுக்க சூரிக்கத்தியை எடுக்கிற மட்டும் பொறுக்கமாட்டான். தெப்பென்று அதை பற்களால் கடித்தான். அப்படியே பாடவேளை ஆனமட்டும் அவன் தின்றான். பாடவேளைக்குப் பிறகு மறுபடியும் தின்றான். அவன் படுக்கைக்குப் போனமட்டும் தின்றான். அல்லாமலும் அவன் தலைக்காணியின் கீழே அதை வைத்துக் கொண்டான். அர்த்தராத்திரியில் அதிலே கொஞ்சம் தின்ன எழுந்திருந்தான். இந்தப்படிக்கு அது எல்லாம் ஆய்ப்போன மட்டும் அவன் அதைத் தின்றான்.

ஆனால் வெகு சீக்கிரத்திலே இச்சிறுபையன் மெத்த நோவிலே விழுந்துவிட்டான். அவனவன் சொன்னான், ஆ,ஆ, ராஜகோபாலன் உடம்புக்கு என்ன முகாந்தரத்தினாலே நோவு வனதது, அவன் சுறவையாய் இருந்தானே, மற்ற பசங்களைப் பார்க்கிலும் சொஸ்தமா விளையாடிக் கொண்டிருந்தானே, இப்ப அவன் முகம் மினுமினுத்து மிகவும் பிணியாய் இருக்கிறான் என்று ஒருத்தன் சொன்னான். ராஜகோபாலனுக்கு ஒரு ஜம்பமான பருப்புத் தேங்காய் அகப்பட்டிருந்தது, அதையெல்லாம் அவன் வெகு துரையாய் சாப்பிட்டுப் போட்டான், அதுதான் இவனுக்கு நோவு உண்டாக்கினது என்று.

ஆகையினாலே அவர்கள் பரியாரியை அழைப்பித்தார்கள். அவன் கொடுத்தான் மருந்து அவனுக்கு. அப்ப, அப்ப, நான் அறியேன் அது எவ்வளவு கசப்பு உள்ளதோ. அளிய ராஜகோபாலனுக்கு அது எவ்வளவும் சம்மதியில்லை, ஆனால் அதைச் சாப்பிடும்படியாய் அவன் கட்டாயப்படுத்தப்பட்டான். இல்லாவிட்டால் இத்தனை நாள் அவன் செத்துப் போயிருப்பான் அறிவையா. ஆகையால் கடைசியிலே மறுபடியும் அவன் சொஸ்தப்பட்டான். ஆனால் அவன் தாயார் சொன்னாள், நான் இனிமேல் அவனுக்கு அனுப்பமாட்டேன் பணியாரங்கள் என்று.

சீனி. வேங்கடசாமியின் கட்டுரை ஒன்றில் – அந்தக் காலத்து ஐரோப்பிய நடை – இது காணப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழி

 

 

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

பொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்

பொங்கல் வாழ்த்துக்கள்!

போன வருஷப் பொங்கல் தருணத்தில் சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த வருஷம் வேலை மிச்சம், அந்தப் பதிவையே மீள்பதித்திருக்கிறேன்.

பொங்கல் புனைவு என்றவுடன் முதலில் நினைவு வந்தது மண் சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். எனக்கே நிறைய ஆங்காரம் இருக்கிறது. மேலும் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்