பொங்கல் வாழ்த்துக்கள்!
போன வருஷப் பொங்கல் தருணத்தில் சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த வருஷம் வேலை மிச்சம், அந்தப் பதிவையே மீள்பதித்திருக்கிறேன்.
பொங்கல் புனைவு என்றவுடன் முதலில் நினைவு வந்தது மண் சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். எனக்கே நிறைய ஆங்காரம் இருக்கிறது. மேலும் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…
மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்