(மீள்பதிவு)
நாடகங்களைப் பற்றிய என்னுடைய புரிதல் கொஞ்சம் மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன். King Stag போன்ற நாடகங்களை நாலைந்து வருஷம் முன்னால் பரிந்துரைத்திருக்கமாட்டேன் என்று தோன்றுகிறது. நாடகம் நடிக்கப்பட வேண்டும், படித்து உணர்வது கொஞ்சம் அரைகுறைதான் என்பதை முன்னைவிட இப்போது கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். காரணம் என் மூத்த மகள் ஸ்ரேயா நடித்த பள்ளி நாடகங்களைப் பார்த்ததுதான்.
சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் வேறு இந்த நாடகங்களைப் பற்றி எழுதி இருந்தார். பழைய பதிவும் கண்ணில் பட்டது. இதையெல்லாம் நடித்துத்தான் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மீள்பதித்திருக்கிறேன்.
மகேந்திரவர்ம பல்லவர் “மத்தவிலாச பிரகசனம்” என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஓரங்க நாடகம் எழுதியதாகப் படித்திருக்கிறேன். இதெல்லாம் எங்கே கிடைக்கப் போகிறது என்று நான் தேடியது கூட இல்லை. தற்செயலாக வரலாறு.காம் தளத்தில் பார்த்தேன். (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5). அதைத் தவிர அவர் எழுதிய “பகவத்தஜுகம்” என்ற இன்னொரு ஓரங்க நாடகமும் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5) கிடைத்தது. எம்.சி. லாக்வுட் என்பவர் மொழிபெயர்த்ததை இங்கே பதித்திருக்கிறார்கள். தளம் நடத்துபவர்கள் – கமலக்கண்ணன், ராமச்சந்திரன், லாவண்யா, கோகுல், கிருபாஷங்கர் வாழ்க!
ஆனால் ஏழாம் நூற்றாண்டில் – கிட்டத்தட்ட 1400 வருஷங்களுக்கு முன்னால் எழுதப்படவில்லை என்றால் இந்த நாடகங்களை யாரும் சீந்தக் கூட மாட்டோம். அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது. அதாவது அன்று சிரித்திருக்கலாம்.
பிரகசனம் நாடகத்தில் கபாலிகனின் திருவோட்டைக் காணோம். புத்த பிக்ஷு, பாசுபதன், பைத்தியக்காரன், கபாலிகன் எல்லோரும் திருவோட்டுக்கு சண்டை போடுகிறார்கள். அவ்வளவுதான் நாடகம். நாடகத்தின் முக்கியத்துவம் எழுதியது மகேந்திரவர்மரே என்று சூத்திரதாரி அழுத்திச் சொல்வது, காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலைக் குறிப்பிடுவது, கபாலிக, பாசுபத, ஜைன,புத்த மதங்களின் நடப்புமுறையை விவரிப்பது போன்றவைதான். ஒரு இடத்தில் திருவோட்டை துணியில் மறைத்திருப்பதைக் குறிப்பிடுவது இரட்டை அர்த்த வசனம் மாதிரி இருக்கிறது.
பகவத்தஜுகம் நாடகத்தில் நகைச்சுவை என்பது சாமியார் உடலில் கணிகையின் உயிரும் கணிகையின் உடலில் சாமியார் உயிரும் புகுந்துவிட அவர்கள் பேசுவதுதான். இன்று குழந்தைத்தனமாக இருக்கிறது. இருந்தாலும் அன்று பார்த்தவர்கள் சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகத்தை பல்லவர் எழுதினாரா இல்லை போதாயனர் எழுதினாரா என்று சந்தேகம் இருக்கிறதாம். இருந்தாலும் மாமண்டூர் கல்வெட்டு பல்லவர் எழுதியதுதான் என்று உறுதியாகச் சொல்கிறதாம்.
நாடகங்கள் இன்னும் கேரளத்தில் நடிக்கப்படுகின்றனவாம்.
நாடகத்தின் தரத்துக்காக அல்ல, வயதுக்காக கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சின்ன நாடகம்தான். பத்து நிமிஷத்தில் படித்துவிடலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
மத்தவிலாசப் பிரகசனம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5)
பகவத்தஜுகம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5)
மத்தவிலாசப் பிரகசனம் – விக்கி குறிப்பு
2 thoughts on “மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய நாடகங்கள்”