Guest Post – ரா.கி. ரங்கராஜன், குமுதம் பற்றி சந்திரபிரபா

சந்திரபிரபா சமீபத்தில்தான் சிலிகன் ஷெல்ஃப் பக்கம் வந்திருக்கிறார். அவர் எழுதிய மறுமொழி சிலவற்றில் ரா.கி.ர. பற்றி அலசி இருந்தார், அதையே ஒரு பதிவாகப் போட்டிருக்கிறேன். சில இடங்களை தமிழில் paraphrase செய்திருக்கிறேன். Over to Chandra!


ரா.கி.ர.வுக்கு ஆர்வியும் ஒரு விசிறி என்பதில் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தேன். உங்களுக்குப் பிடித்திருந்த இரண்டு நாவல்கள் எனக்கும் பிடித்தவையே. ராத்திரி வரும் நாவலை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். ஆர்த்தி தங்கச்சிலையாக மாறிவிடுவது உண்மையிலேயே திகில் ஏற்படுத்தும் காட்சி.

மனுஷன் நல்ல ரீல் விட்டிருக்கிறார் என்று பின்னாளில் புத்தகத்தை சயனில் ஒரு கண்காட்சியில் வாங்கிய போது புரிந்து கொள்ள முடிந்தது. பிர்ஜு மகாராஜ் அப்படி இப்படி என்று நல்ல கதை விட்டு இருக்கிறார். அப்போது கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இப்போது மனுஷன் நன்னா பூ சுற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நாவலில் பிடித்த விஷயம் அவர் சென்னையையும் அடையாறையும் விவரித்து இருந்ததுதான். அடையாறில் அப்படி ஒரு கட்டிடம் இருக்குமா என்று ஆவல் எனக்குள் உண்டானது என்னவோ வாஸ்தவம்.

ஜனா என்பவன் ஆர்த்தியின் தங்கையை கைப்பிடிப்பதாக முடிவு. வில்லன் பிர்ஜு மகாராஜ் என்று எண்ண வைத்து ஏமாற்றி விடுவார் மனுஷன். ஆனால் அந்த காலத்து சென்னையை நம் கண் முன்னே நிறுத்தியதால் நாவல் மனதை விட்டு நீங்கவில்லை.

கையில்லாத பொம்மையை நான் அப்போது படிக்கவில்லை. ஆனால் சயனில் நடந்த புத்தக கண் காட்சியில் வாங்கினேன். அந்த முதல் அத்தியாயம் நெஞ்சை அப்படியே உலுக்கி விடும். மாட்டுப்பெண் மாமனார் ஜெயிலில் விடுதலை ஆகி வந்திருப்பார் – அவருக்கு அப்படி பசிக்கும். ஆனால் குக்கர் வைக்கும் மருமகள் மாமனாரை சாப்பிடுங்கள் என்று சொல்லமாட்டாள். இத்தனைக்கும் அவர் பண்ணிய குற்றம் ஃபோர்ஜரி பண்ணியது. ஆனால் வயத்துக்கு வஞ்சனை பண்ணலாமா, சொல்லுங்கள்.

அவர் பிள்ளை மணிகண்டனை செருப்பால் அடித்தால் என்ன என்று கூட தோன்றும். ஆனால் நடுநடுவே நீங்கள் சொல்வது மாதிரி கதை எங்கேயோ போய் விடும். ரீல் நிறைய சுற்றி இருப்பார். பக்கத்தை நிரப்புவதுதான் நோக்கமோ?

அதுவும் செங்கம் என்கிற பாத்திரம். மனுஷன் சும்மா extramarital affair-ஐ நியாயப்படுத்துவார். ரொம்பவே இழுத்து இருப்பார். சென்னை பாஷையை ஒரு ஐயங்கார் எப்படி சரளமாக எழுதினார் என்று புரியவில்லை.

கதையில் பிடித்தது

  1. அந்த மூன்று கைதிகளுக்கும் இடையே இருந்த அன்யோன்யம்
  2. அந்த வயதானவரை ஒருவர் எதிர்பாராத விதமாக காப்பாற்றும் இடம் – அவரது மகனும் மருமகளும் திருந்துவதாக காட்டுவார்கள்.
  3. கதைக்கு ஏன் கையில்லாத பொம்மை என்று பெயர் வைத்தார்? Only for effect என்றே எண்ணுகிறேன். இத்தனைக்கும் அந்த வயதானவர் பேத்தி ரேகாவின் மேல் வைத்திருக்கும் பாசம் மனதை நெகிழ செய்யும்.
  4. பிடித்த கேரக்டர் என்றால் ஆளவந்தார். அவரது மென்மையான காதல் கதை அனுபமாவுடன். இன்னிக்கும் ஆளவந்தாரின் பங்களா சென்னையில் எங்கே இருக்கிறது என்று பார்க்க ஆசை. ஆளவந்தார் வரும் இடமெல்லாம் சுவாரஸ்யம்தான்.
  5. முடிவுதான் சற்றே ஏமாற்றம். ஆளவந்தார் மறுபடியும் ஜெயிலுக்கு போவார். உள்ளே ஒரு கிராதகன் அவரை பழி வாங்க காத்துக்கொண்டு இருப்பான். மற்ற எல்லார் முகத்திலும் கலவரம் இருக்கும். என்னதான் அவர் செங்கத்தை காப்பாற்றினாலும் போலி டாக்டர் போலி டாக்டர்தானே.

கையில்லாத பொம்மையின் முன்னுரையில் ரங்கராஜன் எழுதி இருந்தார் –

எப்படி இந்தக் கதையை எழுதினேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. பல கிரைம் நாவல்களைப் படித்ததன் விளைவாக இருக்கலாம்.

ஆனால் கையில்லாத பொம்மை ஒரு சுவாரஸ்யமான நாவல் என்பதை மறுப்பதற்கு இல்லை.

இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தர்மங்கள் சிரிக்கின்றன. ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை தெரியவில்லை. அதில் காமராஜர் மாதிரி ஒரு பாத்திரப்படைப்பு. இந்து, பாசு மற்றும் இந்துவின் ஏழை அத்தை பையன். கொல்கத்தா முதல் அமைச்சர் பேரை கதாநாயகனுக்கு வைத்துவிட்டார்.

இந்த இரண்டு கதைகளும் தொலைக்காட்சி தொடராக பண்ணலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது? அதுவும் லக்ஷ்மியின் தேடிக்கொண்டே இருப்பேன் கூட திரைப்படமாக ஆகி இருக்கலாம். தமிழ் தயாரிப்பாளர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள்.

செல்லப்பா என்றொரு சினிமா நிருபர் இருந்தார். அவர் தான் சினிமா தகவல்களை ரங்கராஜனுக்கு கொடுப்பார். இவர் அதை வினோத் என்ற பெயரில் எழுதி வந்தார். குரு பட ஷூட்டிங் போது கமலஹாசனுக்கு அடிபட்டது என்று ஏதோ எழுதப்போக கமலுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டானதாம். பின்னாளில் மகாநதி படத்தின் திரைக்கதையை எழுத கமல் ரங்கராஜனைத்தான் அணுகினார் என்று எண்ணுகிறேன். ஆனால் பாவம் இவர் ஒரு staunch குமுதம் loyalist (அபிமானி) போல.

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் ரங்கராஜன் எழுதி வந்தார். எதற்காக இத்தனை புனைப்பெயர்கள் என்றே புரியவில்லை. மார்க்கெட்டிங் உலகில் சொல்வது போல் தனித்தனியாக பிராண்டிங் பண்ணுவதற்காக எஸ்ஏபிதான் புனைபெயரை பிரயோகம் பண்ணச் சொன்னாரோ?

எஸ்ஏபி ரொம்ப கண்டிப்போ என்று கூடத் தோன்றியது.

குமுதம் அவருக்கு பொன் விலங்கு மாட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். அவரே ஹிந்துவில் கொடுத்த பேட்டியில் நிறைய விருதுகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் புனைபெயர்களில் எழுதியதுதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மறைவு எனக்குள் ஒரு சொல்ல முடியாத சோக உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

இவர் பாலகுமாரன் மாதிரியோ தேவிபாலா மாதிரியோ பணம் பண்ணவில்லை என்றே தோணுகிறது. சுஜாதாவும் “என் கதைகளை கொலை பண்ணி விட்டார்கள்” என்று மூக்கால் அழுதாலும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தனது கதையை விற்று க்கொண்டு தான் இருந்தார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கூட தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதி துட்டு பார்த்து விட்டார். இந்திரா சௌந்தரராஜன் நன்றாக எழுதினாலும் கதையை ரம்பம் மாதிரி இழுத்து ஒரு வழி பண்ணி விடுவார்.

ரங்கராஜன் நல்ல மனிதர். பிழைக்கத் தெரியாதவர் என்று கூட கூறலாம். மன்னிக்கவும் – இப்படி கூறியதற்கு.

எஸ்ஏபியின் மகன் இவர்களை சரியான முறையில் நடத்தினாரா என்று தெரியவில்லை. பாவம் – பத்திரிகை உலகில் என்ன பெரிதாக சம்பாதித்து இருக்க முடியும் என்று தோன்றியது. பல வருடங்கள் குமுதத்தில் வேலை பார்த்து விட்டு வெளியே வந்தபோதும் அவரது ஆசிரியர் மீது நன்மதிப்பையே வைத்து இருந்தார் ரங்கராஜன். எல்லோராலும் குமுதத்தில் வேலை பார்த்திருக்க முடியாதுதான். பிரபஞ்சன் ஒரு முறை எழுதியிருந்தார் – காலையில் குமுதம் ஆசிரியக்குழு அமரும் – பகவத்கீதையை பற்றி பேசிவிட்டு, பிறகு அட்டையில் எந்த பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்தைப் போடலாம் என்று ஆலோசனை செய்வார்கள் என்று.

எஸ்ஏபியின் மறைவுக்கு பிறகு அவரது மகனும் பார்த்தசாரதியின் மகனும் சண்டை போட்டு நாறியது எல்லாருமே அறிந்ததுதான். புதிதாக வந்தவர்கள் குமுதத்தின் தரத்தை தரை மட்டத்துக்கு ஆக்கிவிட்டார்கள் – குமுதத்தின் தரம் ஒன்றும் ஒசத்தி இல்லைதான். ஆனால் பிரியா கல்யாணராமன் போன்றோர் வந்த பிறகு கழுதை கெட்டால் குட்டிச்சுவார் கேஸ் என்றாகி விட்டது. தவிர brand extensions வேறு – பக்தி, சிநேகிதி என்று…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து