பிடித்த கவிதை – அவரோ இல்லை, பூத்த முல்லை

கம்பராமாயணம் பற்றி எழுதும்போது கண்ணில் பட்டதால் மீள்பதிவு


அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னி
சூடிய எல்லாம் சிறுபசு முகையே
– குறுந்தொகை 221(உறையூர் முதுகொற்றனார்)

அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்ற வரியை விட சிறந்த கவிதையை அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். இடையர்கள் பாதி மொட்டாகவே இருக்கும் முல்லையைச் சூடிக் கொண்டு செல்கிறார்கள் என்ற வரிகளும் பிரமாதம்தான். ஆனால் முதல் வரியே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த வரியில் தெரியும் ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் தனிமையையும் ஆற்றாமையையும் தாண்டி அடுத்த வரிக்குக் கூட போக முடியவில்லை. இடையர்களைப் பற்றிய வர்ணனை எத்தனைதான் பிரமாதமாக இருந்தாலும் அது எனக்கு ஆன்டி-க்ளைமாக்சாகத்தான் இருக்கிறது.

அவரோ வாரார். ஏன்? பணம் சம்பாதிக்க வெளியூருக்கு போயிருக்கிறானா, வசந்த காலம் பிறந்த பிறகும் வரவில்லையா? ஊடலா, இன்னும் வந்து சமாதானம் செய்யவில்லையா? இல்லை ஏதோ தற்செயலாக கொஞ்சம் தாமதம் ஆனதைக் கூட இவளால் தாங்க முடியவில்லையா, நை நை என்று நச்சரிக்கும் ஜாதியா? இல்லை விஷயம் கொஞ்சம் சீரியசா? இவளைக் கழற்றி விட்டுவிட்டானா படுபாவி? வேறு பெண் பின்னால் சுற்றுகிறானா? அவரோ வாரார், முல்லையும் பூத்தன, கண்டவனும் பூ வச்சுக்கிட்டு சுத்தறீங்க, எல்லாரும் நாசமாப் போங்கடா மயிராண்டிங்களா!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்