சிவாஜி கணேசனைத் தாக்கும் நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது

மீள்பதிவு, முதல் பதிவு 2010-இல்.

நா.பா. எழுதிய சமுதாய வீதி 1968-இல் வெளிவந்தது. 1971-இல் சாஹித்ய அகடமி பரிசு பெற்றது.

இந்தப் புத்தகம் சிவாஜி கணேசனை கடுமையாகத் தாக்குகிறது. நாவலின் “வில்லன்” கோபால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறான். போக் ரோட்டில் வசிக்கிறான். நாடக மன்றம் வைத்து பலருக்கு சம்பளம் தருகிறான். நாவலின் நாயகன் முத்துக்குமரன் நா.பா.வேதான் என்பதும் தெளிவு. கதாசிரியன், அழகன், நீண்ட பாகவதர் ஸ்டைல் முடி, தான் சிறந்த எழுத்தாளன் என்ற செருக்குடையவன். கதை நா.பா.வின் wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது.

காமராஜின் காங்கிரசில் அந்தக் காலத்தில் சிவாஜி பெரும் சக்தி. ஜெயகாந்தன், நா.பா. போன்றவர்கள் ஸ்டார் பேச்சாளர்கள். 68-இல், காமராஜின் தோல்விக்குப் பிறகு வெளிவந்த புத்தகம். ஒரு வருஷம் முன்னால் கூட இருவரும் ஒரே மேடையில் முழங்கி இருப்பார்கள். என்ன தகராறோ? ஒரு வேளை சிவாஜி நா.பா.வை தனக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்லி அதில் இரண்டு பேருக்கும் ஏதாவது உரசலா, யாருக்காவது தெரியுமா? திருப்பூர் கிருஷ்ணன் மாதிரி யாருக்காவது தெரிந்தால் உண்டு.

அறுபதுகளில் நா.பா. ஒரு ஸ்டார் எழுத்தாளர். அவருடைய குறிஞ்சி மலர் எக்கச்சக்க பிரபலம். அதைப் படித்துவிட்டு குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பேர் வைத்தவர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி பேர் இருந்தால் அவர்களுக்கு அனேகமாக நாற்பத்து சொச்சம் வயது இருக்கும். ராணி மங்கம்மாள், பொன் விலங்கு, மணிபல்லவம் போன்ற புத்தகங்களும் புகழ் பெற்றவை. சமுதாய வீதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.

நா.பா.வின் புத்தகங்களில் நாயகன் எப்போதுமே லட்சியவாதி. சமுதாய அவலங்களைக் கண்டு பொங்குவான். இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று பக்கம் பக்கமாக பொருமுவான். அவருடைய கனவு நாயகி “காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவையும் கை கொடுப்பவள்”. நாயகனின் அழகு, ஆண்மை, திமிர், லட்சியங்கள் எல்லாவற்றையும் கண்டு சொக்கிக் கொண்டே இருப்பாள். சுதந்திரத்துக்குப் பிறகு தெருக்களில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவு உடைந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களை அவர் தன் எழுத்தில் கொண்டு வந்தது ஒன்றே அவரது எழுத்தின் பலம். ஆனால் எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறாக இருக்கின்றன.

இன்று கறாராக மதிப்பிட்டால் என் கண்ணில் அவர் ஒரு வணிக எழுத்தாளரே. சில சமயம் சுவாரசியமாக இருக்கும், அன்றைய தமிழ் உலகம் எதை விரும்பியது என்று தெரிந்து கொள்ள உதவும் கதைகளை எழுதி இருக்கிறார். வணிக எழுத்தாகக் கூட அவர் எழுத்து காலாவதி ஆகிவிட்டது. சமுதாய வீதி போன்ற நாவலுக்கெல்லாம் சாஹித்ய அகடமி பரிசா என்றுதான் தோன்றுகிறது. 71-இல் க.நா.சு.வுக்கும், சி.சு. செல்லப்பாவுக்கும், எம்.வி. வெங்கட்ராமுக்கும், லா.ச.ரா.வுக்கும், பிச்சமூர்த்திக்கும் கூட கொடுக்கப்படவில்லை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே. எழுதி இருக்கிறார்.

ஆனால் நா.பா. நல்ல எழுத்து என்றால் என்ன என்று நன்றாகவே அறிந்தவர். அவர் சாஹித்ய அகடமி விருதுக் குழுவில் இருந்தபோது இலக்கியம் படைப்பவர்களுக்கு பரிசு கிடைக்கப் பாடுபட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவரால் நல்ல இலக்கியத்தைப் படைக்கவே முடியவில்லை என்பதுதான் வாழ்வின் நகைமுரண்.

எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறு என்றால் சுவாரசியத்துக்கு வேறு ஏதாவது காரணம்தான் தேட வேண்டி இருக்கிறது. சமுதாய வீதியின் சுவாரசியம் கதைப்பின்னல் அல்ல, பாத்திரங்கள் மிகவும் வெளிப்படையாக நிஜ மனிதர்களைத் தாக்குவதுதான் என்று கருதுகிறேன்.

நாவலில் முத்துக்குமரன் ஒரு நாடக ஆசிரியன். அவன் குழுவில் அந்தக் காலத்தில் ஸ்திரீபார்ட் வேஷங்களில் நடித்த கோபால் – இவனுடன் நெருங்கிப் பழகிய நண்பன் – இன்றைக்கு பெரிய திரைப்பட கதாநாயகன். முத்துக்குமரன் கோபாலைப் பார்க்க வருகிறான். கோபால் முத்துவை ஒரு நாடகம் எழுதித் தரச் சொல்கிறான். கதாநாயகி மாதவிதான் நாடகத்திற்கு நாயகி. அவள் முத்துவைப் பார்த்த அடுத்த நிமிஷத்திலிருந்து அவன் அழகிலும் திமிரிலும் மயங்குகிறாள், மாதவிக்கும் முத்துவுக்கும் காதல் உருவாகிறது. கோபாலின் “போலித்தனம்” மெதுமெதுவாகத் தெரிகிறது. முத்து கோபாலிடம் சில சமயம் முறைத்துக் கொள்கிறான். கோபாலுக்கு பழகிய தோஷத்தாலும், முத்து மீது அந்தக் காலத்திலிருந்து இருக்கும் பயம் கலந்த மரியாதையாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. முத்து அங்கங்கே கோபாலின் “சின்னத்தனத்தை” கண்டு பொருமுகிறான். கோபாலுக்கு விபத்து ஏற்படும்போது முத்துக்குமரன் தானே நாடகத்தில் நாயகனாக நடிக்கிறான். அப்புறம் தன் வழியே காதலியுடன் போய்விடுகிறான். இதுதான் கதை.

கோபால் அப்படி ஒன்றும் தவறாக நடந்துகொண்ட மாதிரியும் தெரியவில்லை. கோபால் தன்னை மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் முத்து, கோபாலை மரியாதையாக நடத்துவதில்லை. பலர் முன் எடுத்தெறிந்து பேசுகிறான். மாதவி முத்துவைக் கண்டு மயங்கிய பிறகு கற்புக்கரசி மாதிரி நடந்தாலும் அதற்கு முன் அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கோபால் முன் மாதிரியே பெரிய மனிதர்களிடம் மாதவி “அட்ஜஸ்ட்” செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது முத்துவுக்கு தவறாகத் தெரிகிறது. மாதவியின் மனம் மாறும் என்று கோபால் எப்படி யூகிப்பது?

நாவல் காலாவதி ஆகிவிட்டது, படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிவாஜியை வம்புக்கு இழுத்திருப்பது கிசுகிசு படிப்பதைப் போல சுவாரசியமாக இருக்கிறது.

சமுதாய வீதி இணையத்தில் கிடைக்கிறது. ஜெயமோகன் இந்த நாவலை நல்ல social romance என்று குறிப்பிடுகிறார்.

சில வருஷங்களுக்கு முன் ஜெயமோகன் தொந்தி தொப்பி என்று எழுதியதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் கொதித்தெழுந்தது. அன்றைக்கு சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கிய காலத்தில் இதைப் பற்றி சர்ச்சை எதுவும் எழவில்லையா? நினைவிருப்பவர் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
சமுதாய வீதி – மின் புத்தகம்
எஸ். கிருஷ்ணமூர்த்தியின் விலாவாரியான அலசல்

3 thoughts on “சிவாஜி கணேசனைத் தாக்கும் நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது

  1. நா.பா. சரியான ஆஷாடபூதி. சுயசொறிதல் அதிகம் உடையவர்.

    முன்னாள் சமஸ்தான ராஜா இறந்ததும் அவர் மகன் எஸ்டேட்டை செட்டில் செய்ய வருவதாக ஒரு சிறுகதை வரும்.

    பிறகு அதையே நாவலாக எக்ஸ்டெண்ட் செய்தபோது, இந்தச் சிறுகதையையும் அதில் புகுத்தி, அக்கதையை “அற்புதமான கதை” என சுய புகழ்ச்சியும் செய்து கொண்டார்.

    தினமணி கதிர் ஆசிரியராக செயல் புரிந்த போது ஒரு கேள்வி பதிலில் மேதைகளின் லட்சணங்கள் பற்றி பேசியிருப்பார், அப்போது மேதை மாதிரி தன் படத்தையே அதில் போட்டுக் கொண்டார்.

    அவரை எனக்குப் பிடிக்காது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.