காந்தி பற்றி ஜெயமோகன்

எனக்கு காந்தி மேல் விமர்சனங்கள் உண்டு. முக்கியமான விமர்சனம் காந்தியின் வழியில் நடப்பது, சமரசம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம் என்பதுதான். நேருவும் ராஜாஜியும் படேலும் கூட அப்படி சமரசம் இல்லாமல் தங்கள் வாழ்வை நடத்த முடியவில்லை. என் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி முடியும்? காந்தி என் கண் முன்னால் தினமும் இருந்தால், என் பிரக்ஞையில் எப்போதும் இருந்தால் சமரசம் குறையலாம். ஆனால் காந்தி போன்ற உன்னத மனிதர்கள் அபூர்வமாகவே பிறக்கிறார்கள் உருவாகிறார்கள், தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர் போய் எழுபது வருஷம் ஆகிவிட்டது, வாழ்வின் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்சினைகளில் காந்தியை எங்கிருந்து நினைவில் வைத்துக் கொள்வது?

எனக்கு விளக்க உரைகள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கோனார் நோட்ஸ் எதற்கு, அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நேராகப் படித்துக் கொள்கிறேனே என்றுதான் நினைப்பேன். அதிலும் வீடியோ எல்லாம் பார்க்க எனக்கு பொறுமையே இருப்பதில்லை. வரி வடிவத்தில் (transcript) இருந்தால் விரைவில் படித்துக் கொள்ளலாமே என்று தோன்றும். ஆனால் காந்தியின் எழுத்துக்களை படிப்பது எனக்கு சுலபமாக இல்லை. ஜெயமோகன் ஒருவருடைய விளக்கங்களை மட்டுமே விரும்பிப் படிக்கிறேன். காந்தியை இன்னும் நெருக்கமாக உணர வைத்தவர் அவர் ஒருவரே.  அவரது வீடியோ உரைகளையும் பார்க்க எனக்கு சாதாரணமாக பொறுமை இருப்பது இல்லைதான், ஆனால் என்னையும் இந்த உரை கட்டிப் போட்டு வைத்தது.

காந்தியம் எங்கே தோல்வி அடைகிறது என்பதைப் பற்றி அருமையாக உரை ஆற்றி இருக்கிறார். எனக்கு ஏற்கனவே இவர் சொல்வதைப் போன்ற எண்ணங்கள்தான் – ஆனால் என் எண்ணங்களை எனக்கே தெளிவாக்கிவிட்டார்.

அதிகம் விவரிக்க விரும்பவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்

புறநானூறு 349

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கூடிய கூறும் வேந்தே, தந்தையும்
நெடிய வல்லது பணிந்து மொழியலனே
இஃதிவர் படிவமாயின் வையெயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
மரம்படு சிறுதீ போல
அணங்காயினள்தான் பிறந்த ஊர்க்கே.

மருதன் இளநாகனார், புறநானூறு, காஞ்சித்திணை

கூரிய வேலின் நுனியால்
நெற்றி வியர்வையைத் துடைத்தபடி
கடுஞ் சொற்களைச் சொல்கிறான் மன்னன்
இவள் தந்தையும்
பேச்சை நீட்டுகிறானேயன்றி
சற்றும் பணிந்து போகிறவனாக இல்லை
இப்படியே போனால்
கூரிய பற்களும்
மழை மேகமெனக் கறுத்த விழிகளும்
மாந்தளிர் நிறமும்
உள்ள இப்பெண்
காட்டின் மரப்பொந்தில் விழுந்த
தீத்துளி போல
பிறந்த ஊருக்கு
கொற்றவையாக ஆகிவிடுவாள்

ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு (சங்க சித்திரங்கள் புத்தகத்தில்)

தகப்பன் மறுப்பது பெண்ணுக்கு விருப்பமில்லை என்றா இல்லை பெண்ணுக்கும் விருப்பம்தான், ஆனால் காதல் கத்திரிக்காய் என்று எப்படி நீ வரலாம் என்று கோபமா? முதலில் பெண்ணுக்கு விருப்பமா இல்லையா என்று யாராவது கேட்டார்களா இல்லையா? எப்படி இருந்தால் என்ன? வேல் கொண்டு நெற்றி வியர்வையைத் துடைக்கும் மன்னன். அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை. மரம்படு சிறு தீ. கண்முன் விரியும் காட்சி. என்ன அற்புதமான கவிதை!

மரம்படு சிறு தீ. பாரதிக்குக் கூட இந்த இரண்டு வாரத்தையை விவரிக்க நாலைந்து வரிகள் தேவைப்படுகின்றன.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டினில் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

உண்மையில் சங்கக் கவிதைகளில் இருக்கும் நயத்தை, நாலைந்து வரிகளில் காட்சிகளை சித்தரிக்கும் திறமையை, மொழியை வெகு சுலபமாக மீறிச் செல்லும் கவித்துவத்தை நான் இது வரை வேறு எங்கும் காணவில்லை. குறைவாகவே படித்திருக்கும் கம்பனிடமும் வள்ளுவரிடமும் நிறையவே படித்திருக்கும் பாரதியிடமும் கூட அபூர்வமாகவே காண்கிறேன். யார் இந்த மருதன் இளநாகனார்? வேறு என்ன எழுதி இருக்கிறார்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

மோடிக்கும் மாரியப்பனுக்கும் ஒரு ஜே!

பழைய செய்திதான், ஆனால் இப்போதுதான் என் கண்ணில் பட்டது.

எங்கோ நாட்டின் தென்மூலையில் யாரோ ஒரு நாவிதர் தன் கடையிலேயே ஒரு நூலகம் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து அந்தத் தகவலை நாட்டின் பிரதமரிடம் கொண்டு போய் சேர்த்த பெயர் தெரியாத அந்த பிரதமரின் உதவியாளருக்கு முதல் ஜே!

இந்த மாதிரி விஷயங்கள் எனக்கு முக்கியமானவை, நாட்டுக்கும் அவை முக்கியமானவையாக இருக்க வேண்டும், நாட்டு மக்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் முக்கியமானவை என்று உணர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தன் உதவியாளர்களிடம் புரிதலை ஏற்படுத்தி இருக்கும் பிரதமர் மோடிக்கு இரண்டாவது ஜே!

தகவலை சும்மா போகிற போக்கில் ஒரு வரியாக சொல்லிவிட்டு கடந்து போகாமல் மாரியப்பனை அழைத்துப் பேசியதற்கும்; மாரியப்பனுக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலம் தெரியாமல் இருக்கலாம் என்பதால் அவரிடம் முயன்று தமிழில் பேசியதற்கும்; மாரியப்பனின் பதில்கள் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக அவற்றின் ஹிந்தி மொழிபெயர்ப்பை எடுத்துச் சொன்னதற்கும்; மோடிக்கே இன்னுமொரு ஜே, மூன்றாவது ஜே!

கடைக்கு வருபவர்களுக்காக ஒரு நூலகத்தை ஏற்படுத்தியதற்கும்; அதில் புத்தகத்தை எடுத்துப் படிப்பவர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி தந்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும்; இன்றில்லாவிட்டால் நாளை பிரதமர் நம்மை அழைத்துப் பேசுவார் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல், புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, பிரபலத்துக்காகவோ இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை செய்வதற்காக மாரியப்பனுக்கு எல்லார்க்கும் போட்டதை விட பெரிய ஜே, கடைசி, நான்காவது ஜே!

பின்குறிப்பு: மாரியப்பனுக்கு பிடித்த புத்தகம் திருக்குறளாம். என் கண்ணில் பட்ட சில புத்தகங்கள் – சுந்தர ராமசாமி சிறுகதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், வீரபாண்டியன் மனைவி, தொல்காப்பியப் பூங்கா, திருவாசகம், திருமந்திரம், திவ்யப் பிரபந்தம். எஸ்ராவின் புகைப்படம் ஒன்றை மாட்டி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

சில கிரிக்கெட் புத்தகங்கள்

இந்தியாவின் முதல் காப்டனாக நான் கருதுவது பட்டோடியைத்தான். பட்டோடிக்கு முன் ஒரு சில நல்ல வீரர்கள் இருந்தார்கள், ஆனால் இந்தியாவை ஒரே டீமாக மாற்றியது பட்டோடிதான். அவருடைய வாழ்வே ஒரு போராட்டம்தான். ஒரு கண்தான் தெரியும், விபத்தில் இன்னொரு கண்ணில் பார்வை போய்விட்டது. அந்த ஒற்றைக் கண்ணை வைத்துக் கொண்டு அவர் இத்தனை தூரம் ஆடியது மிகப் பெரிய விஷயம். அதே போல அவர் காலத்தில் வலுவான வீரர்கள் இல்லை. உம்ரீகரும் குப்தேயும் அவர் காப்டனான் உடனேயே ஓய்வு பெற்றுவிட்டார்கள். காவஸ்கரும் விஸ்வநாத்தும் இன்னும் வரவில்லை. வேகப்பந்து வீச்சாளர் என்ற பேச்சே கிடையாது. பேடியும் பிரசன்னாவும் வர நாட்கள் இருந்தன. டீமில் தான் சுமாரான பாட்ஸ்மன்தான் என்று குறிப்பிடுகிறார், ஆனால் இவரை விட சிறந்த பாட்ஸ்மன் அறுபதுகளில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்ததை வைத்துக் கொண்டு போராடினார். அதனால்தான் பலரது இதயங்களைத் தொட்டுவிட்டார். எஞ்சினியர், ஜெய்சிம்ஹா போன்ற சக வீரர்களின் அன்பைப் பெற்றிருந்தார். பேடி, பிரசன்னா, விஸ்வநாத் போன்ற இளைஞர்களுக்கு அவர் ஏறக்குறைய தெய்வம். எதிரணி வீரர்கள் அவரது போர்க்குணத்தாலும் தலைமைப் பண்பாலும் கவரப்பட்டார்கள். குசும்புத்தனமான நகைச்சுவை பலரை கவர்ந்தது.

பட்டோடி இறந்தபோது இப்படிப்பட்ட பலரிடமும் கேட்டு வாங்கிய கட்டுரைகளை சுரேஷ் மேனன் Pataudi: Nawab of Cricket என்று ஒரு தொகுத்திருக்கிறார். பட்டோடி எத்தனை பேரின் நெஞ்சைத் தொட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சஞ்சய் மஞ்ஜ்ரேகரை இன்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஒரு காலத்தில் அவர் பெரிய லெவலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில மாட்ச்களில் மட்டுமே ஜொலித்தார். அவருடைய தன்வரலாறான Imperfect-ஐ பரிந்துரைக்கிறேன். புத்தகம் முழுக்கத் தெரிவது நேர்மை. குறிப்பாக தன்னைப் பற்றி. தான் ஏன் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்பதை மிகவும் நேர்மையுடன் அணுகுகிறார். அப்பா விஜய் மஞ்ஜ்ரேகர் அந்தக் காலத்தில் பெரிய பாட்ஸ்மன். ஆனால் கிரிக்கெட் விளையாடிய காலத்திற்கு பிறகு அவரைப் பெரிதாக சீந்துபவர் எவருமில்லை. அந்தக் கோபம், அந்தக் காலத்து ஆணுக்கு உரிய விழுமியங்கள் எல்லாம் அவரை பெரிய கோபக்காரராக மாற்றி இருக்கிறது. பிள்ளைகளுக்கும் அம்மாவுக்கும் அவரைக் கண்டாலே பயம்தான். அந்த அச்சம் தன் குணாதிசயங்களை எப்படி மாற்றியது என்பதை உண்மையாக விவரிக்கிறார். பாகிஸ்தானோடு விளையாடிய போட்டிகளில் பெரிய வெற்றி அடைந்ததும் தனக்கு ஏற்பட்ட ஆணவம், அந்த ஆணவத்தை பம்பாய் கிரிக்கெட் வீரர்களிடம் வெளிப்படுத்திய விதம், தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திண்டாடியது எதையும் மறைக்கவில்லை. அன்று மேற்கு-வடக்கு இந்திய வீரர்களுக்கு உள்ளே இருந்த பூசல்கள், கபில்தேவ் போன்றவர்கள் காட்டிய வெட்டி பந்தாக்கள் எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார். அவரது அகச்சிக்கல்களை உண்மையாக விவரிக்கிறார். சிறந்த தன்வரலாறு.

சச்சின் டெண்டுல்கரைப் பற்றி புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன்? காவஸ்கர், திராவிட், செவாக், கோலி என்ற வரிசையில் அவரே first among equals. ஆனால் அவரது Playing It My Way புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். இந்த மாட்சில் சென்சுரி அடித்தேன், இதிலே அடிக்கவில்லை என்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? மிக கவனமாக சர்ச்சைகளைத் (க்ரெக் சாப்பல் தவிர) தவிர்த்திருக்கிறார். அது போரடிக்கிறது.

சௌரப் கங்குலியே இந்தியாவின் தலை சிறந்த காப்டன் என்று நான் கருதுகிறேன். இத்தனைக்கும் கங்குலி கிரிக்கெட்டின் நுணுக்கங்களை பூரணமாக உணர்ந்தவர் என்றோ சிறந்த மேலாண்மை திறமை (management skills) கொண்டவர் என்றோ நான் கருதவில்லை.சிறந்த தலைமைப் பண்பு (leadership skills) கொண்டவர். எந்த சூழ்நிலையிலும், வெளிநாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி ஜெயிக்க முடியும் என்ற தன் நம்பிக்கையை அணியின் தன்னம்பிக்கையாக மாற்றியவர் அவர்தான். ஒரு போட்டியில், இரண்டு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் அத்தோடு காலி என்ற பயத்துக்கு முடிவு கட்டியவர் அவர்தான். அவருக்கு சச்சின், திராவிட், லக்ஷ்மண், கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற சீனியர்களும், கோச்சாக இருந்த ஜான் ரைட்டும், அணியின் இளைஞர்களான செவாக், யுவராஜ், பார்த்திவ் படேல், ஹர்பஜன், ஜாஹிர் கான் போன்றவர்களும் பெரிய பலமாக இருந்தார்கள். இன்னும் சிலருக்கு – முக்கியமாக சடகோபன் ரமேஷுக்கு – இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 11 பேர்தான் விளையாட முடியும் என்ற நிலையில் யாருக்காவது வாய்ப்பு மறுக்கப்படுவது சகஜம்தான்.

கங்குலியின் A Century Is Not Enough புத்தகம் அவரது பலங்களையும் பலவீனங்களையும் ஒருசேரக் காட்டுகிறது. 92-இல், 19 வயதில், அவருக்கு ஆஸ்திரேலியா செல்ல ஏன் வாய்ப்பு தரப்பட்டது என்பது புரியாத புதிர். அவருக்கு பதிலாக ராமன், ராபின் சிங் என்று யாராவது போயிருந்திருக்க வேண்டும். 96-இல் காம்ப்ளி சொதப்பாமல் இருந்திருந்தால் அவருக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. அதற்குப் பிறகு அவர் குழுவில் நிரந்தரமாக பங்கேற்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் சொதப்பி ஓரிரு போட்டிகளில் drop செய்யப்படுவதை எல்லாம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகத்தான் கருதுகிறார். தான் சரியாக விளையாடவில்லை என்று ஒரு முறை கூட இந்தப் புத்தகத்தில் அவர் ஒத்துக் கொள்வதில்லை. அவர் கேப்டனாக விளையாடியபோது டெஸ்ட் போட்டிகளில் அவரது பாட்டிங் சுமார்தான். திராவிட்தான் தன் தோள்களில் டீமை சுமந்தார். சச்சினும் லக்ஷ்மணும் அவருக்கு பெருமளவில் உதவினார்கள். செவாக் அவ்வப்போது போட்டிகளின் போக்கையே மாற்றினார். கங்குலியின் பாட்டிங் பங்களிப்பு இவர்களோடு ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால் க்ரெக் சாப்பல் அதை சுட்டிக் காட்டியதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதே போல IPL போட்டிகளில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் அதையும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த combativeness-தான் அவரை ஒரு சிறந்த காப்டன் ஆக்கியது என்று நான் கருதுகிறேன்.

ஆனால் ஒரு ஸ்டார் பேட்ஸ்மன் அணியிலிருந்து விலக்கப்படும்போது அவரது எதிர்காலம் என்ன, அவர் திரும்ப வழி உண்டா என்று யாரும் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது எத்தனை முட்டாள்தனமான செயல்? அதேதான் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதை மனதைத் தொடும் வகையில் விவரித்திருந்தார்.

கங்குலி match-fixing, அசாருதீன்-டெண்டுல்கர் காலத்து தகராறுகள் ஆகியவற்றைப் பற்றி கவனமாக எதுவும் சொல்லாமல் தவிர்க்கிறார்.

Rahul Dravid: Timeless Steel எனக்கு மிகப் பிடித்த இன்னொரு கிரிக்கெட் வீரரைப் பற்றிய தொகுப்பு. திராவிட் 2000-2006 காலகட்டத்தில் – ஆறேழு வருஷத்துக்கு – இந்திய கிரிக்கெட் டீமின் முதுகெலும்பு. சச்சினும் லக்ஷ்மணும் செவாகும் கூட இவருக்கு அடுத்த படியில்தான். ஆனால் சச்சின், லக்ஷ்மண், செவாக், ஏன் கங்குலி கூட இவரை விட அழகாக விளையாடக் கூடியவர்கள். எப்போதும் எப்படி தன் ஆட்டத்தை உயர்த்துவது என்று சிந்தித்து அதை செயல்படுத்தினார். ஆனால் இந்தப் புத்தகம் அதிதீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

Nice Guys Finish First திராவிடின் வாழ்க்கை வரலாறு. போர். தவிர்த்துவிடலாம்.

வி.வி.எஸ். லக்ஷ்மணின் 281 and Beyond புத்தகத்தில் தெரிவது அவரது insecurity. இரண்டு மாட்சில் சரியாக ஆடவில்லை என்றால் நம்மை தூக்கிவிடுவார்கள் என்ற பயம் அவரது career முழுக்க வியாபத்திருந்ததாம். பிரச்சினை வேறு – அவர் நுழைந்தபோது சச்சின், அசார், திராவிட், கங்குலி, சித்து ஐவரும் தங்கள் இடத்தை ஸ்தாபித்திருந்தார்கள். இவர் ஆறாவது பாட்ஸ்மனாகத்தான் வர முடியும். இல்லை என்றால் ஓபனராக வர வேண்டும். 281க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் நிலைபெற்றார், ஆனால் ஒரு நாள் போட்டிகளில் நித்யகண்டம் பூர்ணாயுசுதான். 2003 உலகக் கோப்பை போட்டியில் தினேஷ் மாங்கியா அல்லது சஞ்சய் பங்கருக்கு பதிலாக அவர் விளையாடி இருக்க வேண்டும். காப்டன் கங்குலியும் கோச் ஜான் ரைட்டும் எடுத்த தவறான முடிவு அது. டெஸ்ட் போட்டிகளில் அவரும் தனக்கு ஒரு இடத்தைப் பிடித்த பிறகும் சச்சின், திராவிட், கங்குலி, செவாக் ஆகிய நால்வரும் நிலைபெற்றுவிட்டார்கள். கங்குலி காப்டனாக இல்லாதபோதுதான் அவருடைய பாட்டிங் பங்களிப்பு என்ன என்று பார்க்க முடிந்தது. அருமையான பாட்ஸ்மனாக இருந்தாலும் இவர் நான்காவது இடத்தில்தான் இருந்தார். தன்னுடைய இடம் உறுதியானது இல்லை என்ற அச்சம் அவரை முழுவதும் பரிணமிக்கவிடாமல் செய்துவிட்டது. படிக்கக் கூடிய புத்தகம்.

பரத் சுந்தரேசன் எழுதிய Dhoni Touch புத்தகம் தோனியின் ஆளுமையை விவரிக்க முயற்சிக்கிறது. அடுத்தவர் சொன்னதைக் கேட்டுக் கொள்வார், ஆனால் முடிவுகள் அவருடையது மட்டுமே; நண்பர்களை ஒரு நாளும் மறக்க மாட்டார் என்று சொல்கிறது. படிக்கலாம்.

யுவராஜ் சிங்கின் Test of My Life அவரது கான்சர் நோய் காலத்தை விவரிக்கிறது. கங்குலி ஓய்வு பெற்ற பிறகு யூவிக்கு அந்த இடத்திற்கான வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யூவியின் திறமை டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுதாக வெளிப்படவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பல முறை ஏன் யூவி சொதப்புகிறார் என்று தோன்றி இருக்கிறது, ஆனால் அவரது உடல் நிலை கடைசி சில வருஷங்களாகவே சீராக இல்லை என்று தெரிகிறது.

மொத்தத்தில் Pataudi: Nawab of Cricketமற்றும் Imperfect புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன். 281 and Beyond, A Century Is Not Enough, Test of My Life, மற்றும் Dhoni Touch படிக்கக் கூடியவை, படித்தே ஆக வேண்டியவை அல்ல.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட்

அஞ்சலி – க்ரியா ராமகிருஷ்ணன்

crea_ramakrishnanக்ரியா ராமகிருஷ்ணன் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தப்பட வைத்தது. என் அம்மாவின் தலைமுறையினருக்கு வாசகர் வட்டம் பதிப்புகளோடு ஒரு பந்தம் இருந்தது என்றால் என் தலைமுறையினருக்கு – குறைந்தபட்சம் எனக்கு – க்ரியா பதிப்பகம்தான். க்ரியா புத்தகம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம் என்ற மனநிலையில்தான் ஒரு காலத்தில் இருந்தேன். எனக்கு அடுத்த தலைமுறையினருக்கு கிழக்கு பதிப்பகம் என்று நினைக்கிறேன். அப்போது வாங்கிய தற்கால தமிழகராதி எங்கே போயிற்று என்று தெரியவில்லை. புதிய பதிப்பு ஏதாவது வந்தால் வாங்க வேண்டும்.

அவருக்கு அஞ்சலியாக அவருடைய பழைய கட்டுரை ஒன்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். நீங்கள் ஏன் இலவசமாகவே புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கக் கூடாது என்ற லெவலில் அவரைக் கேள்வி கேட்டு கடுப்படித்திருக்கிறார்கள்…


செகந்தராபாதில் தங்கி இருந்த காலங்களில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அங்கே வருஷாவருஷம் புத்தகக் கண்காட்சி நடத்துவார். அவருக்கு கூடமாட உதவி செய்யலாம் என்று தோன்றவே தோன்றாதது என் வாழ்க்கையின் நீங்காத வருத்தங்களில் ஒன்று. அங்கேதான் முதன்முதலாக “க்ரியா” பதிப்பகம் கொண்டு வந்த நேர்த்தியான புத்தகங்களைப் பார்த்தேன்.

அது வரையில் எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பகம் வானதி பதிப்பகம்தான். பத்து முறை புரட்டினால் பைண்டிங் பிரிந்து வந்துவிடும். அட்டை போட்டு, முடிந்தால் நாமே தனியாக பைண்ட செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில பேப்பர்பாக் புத்தகங்களின் கட்டுமானம் கூட இருக்காது. ஆனால் மற்ற பதிப்பகங்களோடு ஒப்பிட்டால் அவர்கள் வெகு உயரத்தில் இருந்தார்கள்.

க்ரியா பதிப்பகம் என் போன்ற பணம் அதிகமில்லாத இளைஞர்களும் வாங்கக் கூடிய விலையில் நல்ல புத்தகங்களை தரமான கட்டுமானத்தில் கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த “தற்காலத் தமிழகராதி” இன்னும் பேசப்படுகிறது. க்ரியா புத்தகம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். கண்காட்சியில் வாங்கிய பிச்சமூர்த்தி கவிதைகள் ரொம்ப நாள் என்னிடம் இருந்தது. இரவல் வாங்கிப் போய்த் தொலைத்துவிட்ட என் அத்தை மகன் ரமேஷ் ஒழிக!

சரி மலரும் நினைவுகள் போதும் என்று நினைக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரை ஒன்று இங்கே, கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தியோடோர் பாஸ்கரன்

தியோடோர் பாஸ்கரன் சினிமா ஆர்வலர். குறிப்பாக தமிழ் சினிமா ஆர்வலர். அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Message Bearers (1981) விடுதலைப் போராட்டத்தில் நாடக, திரைப்படங்களின் பங்களிப்பை விவரிக்கிறது. சிறப்பான ஆய்வு. பாடல்கள், குறிப்பாக நாடகப் பாடல்கள் போராட்டம் என்ற செய்தியை மக்களுக்கு சுலபமாக எடுத்துச் சென்றிருக்கின்றன. ஆனால் தியாகபூமி திரைப்படத்தைத் தவிர திரைப்படங்களுக்கு பெரிய பங்கு இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியமூர்த்தி ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் பாடல்கள், நாடகங்கள், சினிமாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதல் இருந்ததாகவும் தெரியவில்லை.

Eye of the Serpent (1996) விருது பெற்ற புத்தகம். நல்ல அறிமுகப் புத்தகம். தமிழ் சினிமாவைப் பற்றிய பருந்துப் பார்வை கிடைக்கிறது. குறிப்பாக, ஊமைப்படங்கள், 1950-க்கு முற்பட்ட படங்களைப் பற்றி பல அரிய தகவலகளைத் திரட்டி இருக்கிறார். திராவிட இயக்கங்கள் சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டன என்ற விமர்சனத்தை இன்று பரவலாகக் காண்கிறோம். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அதையேதான் செய்தாராம். அவர் இறப்புக்குப் பிறகு ராஜாஜி, காமராஜ் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். எனக்குப் பிடித்திருந்த பகுதிகளில் ஐம்பது சினிமாக்களைப் பற்றிய குறிப்புகள், பிரபல பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் பற்றிய அத்தியாயங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இரண்டு புத்த்தகங்களையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள், திரைப்படங்கள்

எரிக் செகல் எழுதிய “Love Story”

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நாவல்கள் என்று எனக்கு ஒரு சின்ன லிஸ்ட் உண்டு. Pride and Prejudice, Right Ho Jeeves, Secret Ways (அலிஸ்டர் மக்ளீன்), To Kill A Mockingbird, சமீபத்தில் வண்ணக்கடல் (வெண்முரசின் மூன்றாவது நாவல்). இந்தப் பட்டியலில் உள்ள நாவல் Love Story.

Erich Segal 1970 in Berlin, Deutschland / Personen, Promi, Celebrity, Portrait, Portr‰t, Schriftsteller, Autor, author, writer, Germany

கறாராக மதிப்பிட்டால் Love Story வணிக நாவலே. மிகை உணர்ச்சி நாவலே (melodrama). ஸ்டெல்லா ப்ரூசின் எழுத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் இந்த நாவலை நானும் பத்து முறையாவது படித்திருப்பேன். கடைசிப் பக்கத்தைப் படிக்கும்போது கண் கலங்காமல் இருந்ததே இல்லை.

லவ் ஸ்டோரி காதல் கதை. ஹார்வர்டில் படிக்கும் பணக்கார, சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள பாரெட், மத்தியதர வர்க்க ஜென்னியை காதலிக்கிறான். தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி மணந்து கொள்கிறான். ஜென்னியின் அப்பாவுக்கு பரிபூரண சம்மதம். சட்டப்படிப்பு படிக்க வேண்டும், அதற்கான பணம் இல்லை. ஜென்னி வேலை செய்து அந்த சம்பளத்தில் படிக்கிறான், பற்றாக்குறை வாழ்க்கை. படிப்பு முடிந்ததும் பெரிய வேலை கிடைக்கிறது. பணக் கவலைகள் தீர்கின்றன. ஆனால் ஜென்னிக்கு கான்சர். மருத்துவச் செலவுக்காக அப்பாவிடம் கடன் வாங்குகிறான், ஆனால் என்ன தேவை என்று சொல்லவில்லை. ஆனால் அப்பா என்ன என்று கண்டுபிடித்து மருத்துவமனைக்கு ஓடோடி வருகிறார். அதற்குள் ஜென்னி இறந்துவிடுகிறாள். பாரெட் முதல் முறையாக தன் அப்பாவின் தோள்களில் உடைந்துபோய் அழுகிறான்.

லவ் ஸ்டோரி என்னைப் பொறுத்த வரையில் காதல் கதை இல்லை. பாரெட்டுக்கும் ஜென்னிக்கும் உள்ள உறவு சுவாரசியமானதுதான். ஆனால் அது மட்டுமே கதையாக இருந்தால் எனக்கு இரண்டு முறை படிக்கக் கூட பொறுமை இருந்திருக்காது. என் மனதைத் தொடுவது பாரெட்டுக்கும் அவன் அப்பாவுக்கும் உள்ள உறவுதான்.

என் அப்பா இன்றில்லை. இருந்த வரையிலும் அவரிடம் என்னால் மனம் திறந்து பேச முடிந்ததில்லை. அவரிடம் பேசும்போதெல்லாம் ஜாக்கிரதை உணர்வுடன்தான் பேசி இருக்கிறேன். இரண்டொரு முறை யோசிக்காமல் வாய் தவறி பேசியபோது அவரது மனதைப் புண்படுத்தி இருக்கிறேன். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் ஏண்டா நீ ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். வருகிற சம்பளத்தை எல்லாம் குடும்பக் கடனை அடைக்கவே உங்களிடம் தந்துவிட்டால் எங்கிருந்து ஸ்கூட்டர் வாங்குவது என்று யதார்த்தமாக சொன்னேன். வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்த பிறகுதான் என்ன சொன்னேன் என்பதை உணர்ந்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ஏதோ ஒரு முறை ஏம்பா பேத்தறீங்க என்று சொல்லிவிட்டேன். அவர் பாவம், ரொம்பவே வருத்தப்பட்டார்.

பதின்ம வயதைக் கடந்த காலத்திலிருந்து அப்படித்தான் எங்கள் உறவு இருந்திருக்கிறது. அப்பாவிடம் பேச முடியாத நிறைய விஷயங்கள் உண்டு என்று உணர்ந்த காலத்தில்தான் இந்தப் புத்தகத்தை முதன்முதலாகப் படித்தேன். அப்பாவிடம் முறைத்துக் கொள்ளும் மகன், அப்பாவிடம் கடன் வாங்கும், ஆனால் என்ன பணத்தேவை என்று அவரிடம் சொல்ல முடியாத மகன், அப்பாவின் தோள்களில் முகம் புதைத்து அழும் மகன் என்ற காட்சிகள்தான் அன்றும் இன்றும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்தன, பதிந்து கொண்டிருக்கின்றன.

சில சமயம் அப்படித்தான். சில புத்தகங்கள் எங்கோ ஆழ்மனதில் ஒரு நரம்பைத் தொட்டுவிடுகின்றன. எனக்கு இந்தப் புத்தகம், To Kill A Mockingbird இரண்டும் அப்படித்தான்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

தீபாவளி சிறுகதை – கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

Deepavali

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த சிறுகதையை முதலில் படிக்கும்போது எனக்கு இருபத்திரண்டு வயது இருக்கலாம். அன்றிலிருந்து தீபாவளி என்றால் இந்த சிறுகதை கட்டாயமாக நினைவு வரும்.  தீபாவளி என்றால் இந்த சிறுகதையைப் பற்றி எழுதுவது பழக்கமாகவே ஆகிவிட்டது.

ku. azhagirisamiமனதை நெகிழ வைக்கும்படி எழுதுவதில் அழகிரிசாமியே ஒரு ராஜாதான்.

சிறுகதையை விடுங்கள். நான் வளர்ந்த சூழலில் மாப்பிள்ளை வரவைக் குறிக்க ‘ராஜா வந்திருக்கிறார்‘ என்று சொல்வதில்லை. முதல் வாசிப்பில் எனக்குப் புரிய ஒரு நிமிஷம் ஆனது. ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற சொல்வடையில் தொக்கி நிற்கும் அன்றைய சூழல் – மாப்பிள்ளையின் மதிப்பு, ஆண் ஒரு படி மேலே நிற்பது – எல்லாம் ஒரு கணத்தில் புரிந்தது. ஒரு சாதாரண சொல்வடை சமூகத்தின் சித்திரத்தையே காட்டிவிட்டதே என்று வியந்தது நினைவிருக்கிறது.

அந்த அம்மா பாத்திரம் அபாரமானது. அதுவும் இப்படி பரந்த மனம் இருப்பது அபூர்வ நிகழ்ச்சியாக இல்லாமல் சாதாரண நிகழ்ச்சியாக காட்டப்படுவது இன்னும் மனதை நெகிழ வைத்தது. கணவனுக்கு துண்டு இல்லையே என்று கொஞ்சம் தடுமாறும் அம்மாவிடம் வந்திருக்கும் ‘ராஜாவுக்கு’ துண்டைக் கொடு என்று குழந்தை மங்கம்மாள் சொல்லும் இடம் ஒரு மாஸ்டர் டச்.

இன்று ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற சொல்வடை எல்லாருக்கும் புரியுமா? தீபாவளிக்கு ‘ராஜா’ வருவது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

தீபாவளி என்றால் உங்களுக்கு வேறென்ன சிறுகதை நினைவு வரும்? எனக்கு என்றென்றும் நினைவு வரும் இன்னொரு சிறுகதை லா.ச.ரா.வின் பாற்கடல். உங்களுக்கு நினைவு வருவதை கட்டாயம் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அழகிரிசாமி பக்கம்

சுந்தர ராமசாமி சிறுகதை – பிள்ளைகெடுத்தாள்விளை

பல வருஷங்களாக இந்த சிறுகதையைப் பற்றி விமர்சனங்களைக் கேட்டிருக்கிறேன். சுராவின் பிராமண ஜாதி மேட்டிமைத்தனம் வெளிப்படும் சிறுகதை என்பார்கள். உதாரணத்துக்கு இங்கே ஒரு விமர்சனம்.

சுராவின் எழுத்தில் பிராமண ஜாதி மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது என்றால் எனக்கு ஆச்சரியம்தான். நானும் அவரது நாற்பது ஐம்பது சிறுகதைகள், இரண்டு நாவல்கள், நினைவோடை அபுனைவுகள், கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வரியில் கூட இது வரை நான் கண்டதில்லை. என்றாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஜெயமோகன் சமீபத்தில் சுட்டி கொடுத்திருந்தார். கட்டுரையைக் கூட படிக்கவில்லை, நேராக சிறுகதைக்குப் போய்விட்டேன். படித்த பிறகு முதலில் தோன்றிய எண்ணம் – “இத்தனை தற்குறிகளாடா நீங்கள் எல்லாம்!”. உண்மையில் இந்தச் சிறுகதையில் ஜாதி மேட்டிமைத்தனத்தை கண்டுபிடிக்க அபாரத் திறமை வேண்டும்.

சுருக்கமாக கதை – தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த தாயம்மா கிறிஸ்துவப் பாதிரியாரின் உதவியால் கிராமத்திலேயே நன்றாகப் படிக்கிறாள். கிராமத்தில் பள்ளி கட்டப்படும்போது தாழ்ந்த ஜாதி என்ற உறுத்தல்கள் இருந்தாலும் அவளை தலைமை ஆசிரியை ஆக்குகிறார்கள். மெத்தப் படித்தவளுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. நாலாம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் உறவு கொண்டதாக பழி – அது உண்மையா பொய்யா என்பது உங்கள் வாசிப்பைப் பொறுத்தது. அடி வாங்கி ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறாள். இறுதிக் காலத்தில் மீண்டும் அங்கே வந்து அனாதையாக சாகிறாள்.

விமர்சனம் இதுதான் – சுரா சொல்ல வருவது எத்தனை படித்தாலும் தலித் பெண் “இழிவானவள்தான்”. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்றுதான் சுரா சொல்லாமல் சொல்கிறார்.

சிறுகதையில் வெளிப்படுவதோ அடக்குமுறைக்கு எதிரான உணர்வு. தாயம்மா அடிபடும்போதும் சரி, சாவதற்கு ஒரு இடம் கொடு என்று கெஞ்சும்போதும் சரி, பகலில் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டால் இரவில் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளிக்கும்போதும் சரி, அய்யோ என்று மனம் பதைக்காமல் இருக்க முடியாது. ஜாதீய மேட்டிமைத்தனத்துக்கு எதிரான எழுத்து என்பதை விட ஆண் என்ற மேட்டிமைத்தனத்துக்கு எதிர்ப்பு என்றுதான் எனக்குப் படுகிறது.

சிறுகதையை மேலோட்டமாகப் படித்தால் கூட கதையை எழுதுபவரின் sympathies யாருடன் இருக்கிறது என்று புரியாமல் இருக்க முடியாது. தாயம்மா அடிபட்ட காட்சியை தங்கக்கண் விவரிக்கும்போது கேட்பவர்களின் reactions –

“பாவிகெ கைகளெ முறிக்க ஆளில்லையா?”

“படைச்சவனே, நீ பாத்துக்கிட்டிருந்தையா?”

தங்கக்கண்ணின் குரல் தழுதழுக்கிறது.

இந்த வரிகளைப் படித்த பிறகுமா ஜாதீய மேட்டிமைத்தனம் என்றெல்லாம் உளறுகிறார்கள்? மண்டையில் இருப்பது மூளையா புண்ணாக்கா?

எனக்கும் சிறுகதை மேல் விமர்சனம் உண்டு. கலைவடிவம் கூடவில்லை என்றே கருதுகிறேன். இதை விட சிறந்த சிறுகதைகளை சுராவே எழுதி இருக்கிறார். அதுவும் தங்கக்கண்ணுக்கு சம்பளம் 40 ரூபாய், காலம் என்று சில இடங்களில் சொதப்பிவிட்டார்.

ஆனால் பல அருமையான இடங்களும் உண்டு. தாயம்மா வயதுக்கு வந்ததும் பாதிரியாரின் வீட்டுக்குப் போய் படிப்பது நின்றுவிடுகிறது. பாதிரியார் தாயம்மாவின் வீட்டுக்கு வருகிறார்.

“தாயம்மா மிகவும் கெட்டிக்காரி. தினமும் இங்கு வந்து தென்னை மரத்தடியில் உட்கார்ந்து பாடம் சொல்லித் தருகிறேன்” என்கிறார் பாதிரியார். பெண்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். “அய்யா, நீங்க போட்டிருக்கிற செருப்பாலே எங்க கன்னத்திலே அடியுங்க அய்யா. இப்பமே புள்ளையைக் கூட்டிக்கிட்டுப் போங்க. ஆசை தீர மட்டும் சொல்லிக்கொடுங்க” என்று எல்லாப் பெண்களும் சேர்ந்து
கத்தியிருக்கிறார்கள்.

.

கவித்துவமான இடம். இதற்கு சமமாக வெண்முரசில் திரௌபதி துகிலுரியப்படும்போது கௌரவர் வீட்டுப் பெண்கள் அனைவரும் தங்கள் மேலாடைகளை திரௌபதி மேல் வீசும் இடத்தைத்தான் சொல்வேன்.

ஊரிலேயே அதிகம் படித்த தாயம்மாவை புதிதாகத் திறக்கப்படும் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் போடலாமா என்று கேள்வி எழுகிறது.

இப்படியும் ஒரு யோசனையா? போடலாமாவா? போட வேண்டும். அவளுக்கிருக்கும் யோக்கியதை உங்களில் எந்த நாய்க்கு இருக்கிறது? தாழ்ந்த ஜாதிப்பிள்ளை. தாழ்ந்த ஜாதிப்பிள்ளைதான். அதற்காக? அந்தப் பிள்ளையைத் தலைமையாசிரியையாகப் போடவில்லையென்றால் நான் கமிட்டியிலிருந்து வெளியே போகிறேன் என்கிறார் மோகன்தாஸ். அவர் சுதந்திரத் தியாகி. மூன்று வருடம் கடுங்காவலில் வாடியவர். அவருக்கு ரத்தம் கொதிக்கிறது.

ஜெயமோகனின் கட்டுரையை அப்புறமாகப் படித்தேன். எனக்கே புரிகிறது என்றால் அவர் வேறென்ன சொல்லப் போகிறார்? கூடுதலாக இது எத்தனை தூரம் உண்மை என்ற கேள்வியை எழுப்புகிறார். தாயம்மாளின் கதையை விவரிக்கும் தங்கக்கண் கதை அளக்கக் கூடியவன் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். அவரது கண்களில் சுரா வரலாறு எப்படி உருவாகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். எனக்கோ இது உண்மையா பொய்யா என்ற கேள்வியே அர்த்தமற்றதாக இருக்கிறது.

ஆனால் என் வாசிப்பில் சிறுவனுடன் உறவு என்பதும் பொய்யாகத்தான் தெரிகிறது என்பதையும் பதிவு செய்கிறேன். சிறுவன் கன்னம் வீங்கி இருக்கிறது என்ற குறிப்பிலிருந்து அவனுக்கு அடி விழுந்தது என்றே நான் புரிந்து கொள்கிறேன். உறவு கொண்டால் கன்னம் ஏன் வீங்கப் போகிறது?

சுரா இந்த சிறுகதையை 2005-இல் எழுதினாராம். எதிர்வினைகளால் மிகவும் நொந்துபோனாராம். இதெல்லாம் ரொம்பக் கொடுமை. சுரா மாதிரி ஒரு புத்திசாலி பிராமண ஜாதி மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்த எண்ணி இருந்தால் அது இன்னும் subtle ஆக வெளிப்பட்டிருக்கும்!

இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், காலம், சம்பளம் போன்றவற்றில் சொதப்பாமல் இருந்திருந்தால், இது சுராவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுரா பக்கம்

அஞ்சலி – Jeopardy’s Alex Trebek

படிப்புக்கும் அலெக்ஸ் ட்ரெபெக்குக்கும் நேரடி தொடர்பு இல்லைதான். இருந்தாலும் அவருக்கு ஒரு அஞ்சலிக் குறிப்பு எழுத விரும்புகிறேன். சில சமயம் அப்படித்தான். (எஸ்பிபிக்கும் எழுத வேண்டும் என்று தோன்றியது, ஆனால் எஸ்பிபி மறையவில்லை என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.)

அமெரிக்க டிவியில் நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி Jeopardy. இது ஒரு வினாடிவினா (quiz) நிகழ்ச்சி. 1984-இலிருந்து இறக்கும் வரை இந்த நிகழ்ச்சிக்கு அவர்தான் நடத்துனர் (anchor). திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் ஏழிலிருந்து ஏழரை வரை. அலுவலகலத்திலிருந்து திரும்பி வந்து அப்பாடா என்று உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை தினமும் சில ஆண்டுகளாவது பார்த்திருக்கிறேன். என்றாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை உண்டு. அவரும் இந்த நிகழ்ச்சியும் அமெரிக்க பிரக்ஞையில் பிரிக்க முடியாதவை. கோபிநாத்தும் நீயா நானா நிகழ்ச்சியும் போல.

நெட்ஃப்ளிக்சும் அமேசான் ப்ரைமும் வந்த பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே நின்று போய்விட்டது. ட்ரெபெக்கின் நினைவுக்காகவாவது மீண்டும் பழைய நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்