மோடிக்கு இன்னொரு ஜே!

சிறுவர்களுக்கு, பதின்ம வயதினர் எழுதுவதை உற்சாகப்படுத்த இந்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இது உருப்படுமா, ஒன்றிரண்டு எழுத்தாளர்களாவது கிளம்பி வருவார்களா என்பதெல்லாம் அடுத்த விஷயம். இதெல்லாம் முக்கியம் என்று பிரதமர் மோடி உணர்ந்திருக்கிறார்; ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்; முயற்சிக்கிறார் என்பதுதான் முக்கியம்.

உங்கள் பிள்ளைகள், உறவுக்கார குழந்தைகள், நண்பர்களின் பிள்ளைகள், தெரிந்த சிறுவர் சிறுமியர் யாராக இருந்தாலும் பங்கேற்கச் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

ரண்டாமூழம்

ரண்டாமூழம் எனக்கு அறிமுகமானது பிரேம் பணிக்கர் எழுதிய பீம்சேன் மூலமாகத்தான். பீம்சேனை ரண்டாமூழத்தின் transcreation என்று சொல்லலாம், அதே கண்ணோட்டத்தை சில மாற்றங்களோடு எழுதினார் என்று சொல்லலாம்.

பீம்சேனைப் படித்து பத்து வருஷமிருக்கும். அப்போதிலிருந்தே ரண்டாமூழம் நாவலைப் படிக்க வேண்டும் என்று எண்ணம், சமீபத்தில்தான் முடிந்தது.

எனக்கு மகாபாரதப் பித்து உண்டு. மகா செயற்கையான, நாடகத்தனமான என்.டி. ராமாராவ் நடித்த மகாபாரதத் திரைப்படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன். மகாபாரதத்தின் மறுவாசிப்புகளைப் படிப்பதென்றால் எனக்கு லட்டு சாப்பிடுவது மாதிரிதான். எனக்கு ரண்டாமூழம் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை. இந்த நாவலைப் பற்றிய என் கணிப்பு சமநிலையானதுதானா என்று நீங்கள்தான் கவலைப்பட வேண்டும்.

ரண்டாமூழம் மகாபாரதத்தை பீமனின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது. அவ்வளவுதான் கதை.

பீமன் என்ன செய்தாலும் அது இரண்டாம்பட்சம்தான், அது பெரிதாகக் கருதப்படுவதில்லை, he was always taken for granted என்பதுதான் கதையின் அடிநாதம். க்ஷத்ரிய தர்மப்படி துரியோதனனை வென்றவன்தான் அரசனாக வேண்டும். பாரதத்திலேயே போர் முடிந்ததும் யுதிஷ்டிரன் தனக்கு கிரீடம் வேண்டாம் என்று மறுக்கும் ஒரு காட்சி உண்டு. அது அப்படியே காற்றோடு போய்விடும். பணயம் வைத்தபோதே அண்ணனை மறுத்துப் பேசாத தம்பிகள்; அண்ணனை வற்புறுத்தி அரசனாக்கினார்கள் என்பதுதான் சாதாரணமான புரிதல். இங்கே பீமன் அரசனானால் திரௌபதி அரசியா என்ற கேள்வியை எம்டி எழுப்புகிறார்; திரௌபதிக்கு ஒரு குறைவு வரவேண்டாம் என்றுதான் பீமன் அரியணையை மறுத்தான் என்று புனைகிறார். அதே போல அபிமன்யுவுக்காக அத்தனை பேரும் கொதித்தெழுகிறார்கள். கடோத்கஜன் இறந்தால் கிருஷ்ணன் வெளிப்படையாக மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். கஷ்டப்பட்டு சௌகந்திகப் பூவைக் கொண்டு வந்தால் அதை திரௌபதி யுதிஷ்டிரனுக்குத் தருகிறாள். பீமனுக்கு எப்போதும் இரண்டாம் இடம்தான். ஆட்சி அதிகாரமாகட்டும், திரௌபதி மீது உரிமை எல்லாவற்றிலும் யுதிஷ்டிரனுக்குத்தான் முதல் இடம். புகழ் என்றால் அர்ஜுனனுக்கு அடுத்த இடம்தான். எல்லா தகுதிகளும் இருந்தும் காலம் முழுவதும் இரண்டாம் இடத்திலேயே வாழ்பவனின் எண்ணங்கள் என்று சொல்லலாம்.

பீமன் அடிப்படையில் ஒரு காட்டு மனிதன் என்பதாக சித்தரிக்கிறார். நாகரீகப் பூச்சு மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவு. இடும்பியோடு வாழ்ந்த காலமே மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதெல்லாம் பீமனின் சித்திரத்தை உயர்த்துகிறது.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள் இரண்டு. அண்ணன்காரன், வீராதிவீரன், கர்ணனை தேரோட்டி மகன் என்று இழிவுபடுத்தினோமே என்று பீமன் வருந்தும்போது, குந்தி கர்ணனை உண்மையிலேயே ஒரு அழகான தேரோட்டிக்குத்தான் பெற்றேன் என்று ஒத்துக் கொள்ளும் இடம்; வாயுபுத்திரன் உண்மையிலேயே ஒரு பலசாலியான காட்டு மனிதனின் மகன் என்று குந்தி சொல்லும் இடத்தில் தோன்றும் வெறுமை. இவை இரண்டும் அபாரமான இடங்கள்.

பலவீனங்கள்? பீமனைத் தவிர கதையில் வேறு யாருமில்லை. மற்றவர்கள் கண் வழியாகவும் பீமனைக் காட்டி இருந்தால் நாவல் எங்கோ போயிருக்கும்.

நாவல் பிடித்திருந்தாலும் இந்த நாவலை நான் கூட எழுதி இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. என்னாலேயே எழுத முடியும் என்றால் நான் கொஞ்சம் குறைத்துத்தான் மதிப்பிடுவேன். 🙂

1984-இல் எழுதப்பட்ட நாவல். கீதா கிருஷ்ணன்குட்டியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. Bhima: Lone Warrior என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

நாவலைக் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் பிரேம் பணிக்கரின் பீம்சேனையும் படியுங்கள். வித்தியாசங்கள் ரசிக்கும்படி இருக்கும்.

இன்னொரு பீமன் கண்ணோட்ட நாவலைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். விகாஸ் சிங் எழுதிய “Bhima: The Man in the Shadows” ரெண்டாமூழம் நாவலால் inspire ஆனது என்று தோன்றுகிறது. இதில் பீமனுக்கு அர்ஜுனன் மீது கொஞ்சம் சகோதரக் காய்ச்சல். அதிலும் தான் விரும்பும் திரௌபதி மிகவும் விரும்புவது அர்ஜுனனைத்தான் என்பதால் resentment அதிகமாகிறது. மகாபாரதப் பிரியர்களைத் வெறியர்க்களைத் தவிர மற்றவர்கள் ரெண்டாமூழத்தையே படித்துக் கொள்ளலாம். நாவலில் நினைவிருக்கப் போவது சில தியரிகள்தான். தேவர்கள் – இந்திரன், வாயு எல்லாரும் – வேற்றுக் கிரகவாசிகள், அவர்களது அறிவியல் அதிமுன்னேற்றம் அடைந்திருக்கிறது. வாயு பகவானின் ஜீன் ஒன்றால் அவருக்கு தன் உருவத்தை பெரிதாகவோ சிறிதாகவோ மாற்றிக் கொள்ள முடிகிறது, அந்த ஜீன் ஹனுமானுக்கு வந்திருக்கிறது, பீமனில் dormant, கடோத்கஜனுக்கு வந்திருக்கிறது. இந்த மாதிரி சில தியரிகள் புன்னகைக்க வைத்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: மஹாபாரதப் பக்கம்

தேவதாஸ்

தேவதாஸ் இந்தியர்களின் பிரக்ஞையில் இன்னும் ஒரு படிமம்தான். அனேகமாக எல்லா இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வந்திருக்கிறது. கே.எல். சைகல் நடித்து 1935-இல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம், ஏ.என்.ஆர்-சாவித்ரி நடித்து 1953-இல் வெளிவந்த தெலுகு திரைப்படம், திலீப்குமார் நடித்து 1955-இல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஆகியவை மைல்கல்களாக கருதப்படுகின்றன. ஆனால் அது மங்கலாகிக் கொண்டிருக்கிறது, அதன் தாக்கம் குறைந்து கொண்டேதான் போகிற்து.

தேவதாஸ் என்றால் என் மனதில் முதலில் வரும் நினைவு ஓஓஓஓ தேவதாஸ் பாடல்தான்.

அதுவும் பி. லீலா “பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த அய்யா மஹா வேதாந்தி” என்று பாடும்போது அந்தக் குரலின் துள்ளல் மனதைக் கவர்ந்துவிடுகிறது.

படிக்க வேண்டிய புத்தகம் என்று நினைத்திருந்தாலும், வெறும் மெலோட்ராமாவாக இருக்கும், மிஞ்சி மிஞ்சிப் போனால் முன்னோடி வணிக நாவலாக இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தது. காரணம் திலீப்குமார் நடித்த ஹிந்தித் திரைப்படமும், ஏ.என். நாகேஸ்வரராவ், சாவித்ரி நடித்த தெலுகு திரைப்படமும்தான். ஏறக்குறைய caricature என்றே சொல்லக்கூடிய அளவு தட்டையான பாத்திரங்கள் என்றுதான் தோன்றியது. அதுவும் சந்திரமுகி, சூனிலால், தேவதாஸின் அப்பா என்று பல துணைப்பாத்திரங்கள் cliche-க்கள் என்றே தோன்றியது. அதனால் சரத்சந்திரரையே தவிர்த்துக் கொண்டே இருந்தேன். திலீப்குமார், சாவித்ரி இவர்கள் இருவரின் நடிப்பும் பிடித்திருந்தாலும் கூட.

கடைசியாக ஒரு வழியாகப் படித்துவிட்டேன். இத்தனை நாள் தள்ளிப்போட்டோமே என்று தோன்றியது.

நாவலின் பலம் என்பது தேவதாஸ்-பாரோவின் இளமைப் பருவ சித்தரிப்புதான். சிறு வயதிலிருந்து ஒருவர் மேல் இன்னொருவருக்கு இருக்கும் ஈர்ப்பு, அது என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இளமை நிலை, திடீரென்று மனக்குழப்பங்கள் தீர்ந்து தனக்கான துணை அவன்(ள்)தான் என்று இருவரும் (வேறு வேறு தருணங்களில்) புரிந்து கொள்வது எல்லாம மிக அருமையாக வந்திருக்கின்றன.

மெய்நிகர் உலகையும் உருவாக்கி இருக்கிறார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம், ஜமீந்தார்கள், படிப்பதற்காக நகரத்திற்காக செல்லும் இளைஞர்கள், மேல்வர்க்கப் பெண்களுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்ற எண்ணம், எல்லாம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இன்று இந்த உலகம் இல்லைதான், ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது.

கதையின் பலவீனம் என்று நான் கருதுவது பல துணை கதாபாத்திரங்கள், கதைப்போக்குகள் இன்று தேய்வழக்குகளாக மாறிவிட்டிருப்பதுதான். காதல் தோல்வியால் குடித்தே இறக்கும் நாயகன், நாயகனை உண்மையாக நேசிக்கும் வேசி, நாயகனை “கெடுக்கும்” நண்பன், அந்தஸ்து பார்க்கும் அப்பா என்று பல. அன்று சகஜமாக இருந்திருக்கக் கூடியவை இன்று வியப்புற வைக்கின்றன. 13-14 வயதுப் பெண்ணை அவளது கணவனின் 20 வயது மகன் அம்மா என்று அழைப்பதெல்லாம் என் தலைமுறையையே புருவத்தை உயர்த்த வைக்கும்.

சரத்சந்திரர் வணிக எழுத்தாளர் அல்லர் என்று தெளிவாகத் தெரிகிறது. பரிநீதா கிடைக்குமா என்று தேட வேண்டும்…

பின்குறிப்பு: ஜமீந்தாரிணி குறுநாவல் லக்ஷ்மி நாவல்களை திருப்பிப் போட்டது போல இருக்கிறது. இந்த முறை ஏழைக் கணவனைப் புரிந்து நடக்காத ஜமீந்தார் குடும்பத்துப் பெண் மனம் மாறுகிறாள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

இமையத்துக்கு சாஹித்ய அகடமி விருது

இமையத்துக்கு 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறதுசெல்லாத பணம் என்ற நாவலுக்காக. தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

சு. வேணுகோபால் எழுதிய வலசை, சுப்ரபாரதிமணியன் எழுதிய ரேகை, தேவிபாரதி எழுதிய நடராஜ் மகராஜ், கே. பஞ்சாங்கம் எழுதிய அக்கா ஆகிய நாவல்களும், கோவை ஞானி (என்றுதான் நினைக்கிறேன்) எழுதிய என் கையெழுத்துப் படிகளிலிருந்து இலக்கியத் திறனாய்வு, டி.எஸ். நடராஜன் எழுதிய தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் ஆகிய திறனாய்வு நூல்களும், கலாப்ரியா எழுதிய பனிக்கால ஊஞ்சல் என்ற கவிதைத் தொகுப்பும், ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய பனைமரமே! பனைமரமே! என்று பண்பாட்டு நூலும் பரிசீலனையில் இருந்திருக்கின்றன. சுப்ரபாரதிமணியனுக்கும் வேணுகோபாலுக்கும் கலாப்ரியாவுக்கும் இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

பிற மொழிகளில் கேள்விப்பட்டிருந்த ஒரே பெயர் – வீரப்ப மொய்லி! மொய்லி முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக்விஜயம் என்ற காவியத்தை கன்னடத்தில் எழுதி இருக்கிறாராம், அதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

இமையத்தை நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில சிறுகதைகளும் என் மனதில் நிற்கவில்லை. ஆனால் படித்தபோது இலக்கியம் படைத்திருக்கிறார் என்றுதான் மதிப்பிட்டிருக்கிறேன்.

மனதில் நின்றது இரண்டு விஷயங்கள்தான். இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இரண்டாவதாக தனது நாவலில் வரும் பெண்கள் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு

பரிந்துரை: ஜெயமோகனின் “கந்தர்வன்”

இன்று படித்த சிறுகதை – கந்தர்வன்.

என்னைக் கவர்ந்த அம்சங்கள்:

சங்கட ஹர்ஜி! ஹர்ஜ் என்பது ஹிந்தியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. எங்களுக்கு சங்கடங்கள் இருக்கின்றன என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்களாம். ஒரு பிராதை அரசனிடம் சேர்ப்பதில் எத்தனை பிரச்சினைகள்! சாமி முன்னால் நின்று வரம் கேட்பதற்கு முன் ஆயிரம் பூசாரிகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. இன்றும் அப்படித்தானே! இதை மிகச் சிறப்பாக சித்தரிக்கிறார்.

நுண்விவரங்கள்: காராய்மைக்காரர் (விவசாயி) vs ஊராய்மைக்காரர் (ஊர் அதிகாரி?) சங்கட ஹர்ஜியில் அத்தனை பூசாரிகளையும் அரசனையும் புகழ வேண்டி இருக்கிறது. வரி கட்டுவதில் பிரச்சினைகள் மட்டுமல்ல, அனுகூலங்களும் இருக்கின்றன. கோவிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவனுக்கு கொள்ளி போட்டால் முதல் மரியாதை கிடைக்க நல்ல வாய்ப்பு. வெள்ளிக் கண்டிகை குலச்சின்னம், ஜாதிச் சின்னமாக இருப்பது. சொல்லிக் கொண்டே போகலாம். மெய்நிகர் உலகத்தை உருவாக்கி இருக்கிறார்.

எனக்கு பெரிய மானிட தரிசனம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். ஜெயமோகன் கதையின் முடிச்சு பெரிய தரிசனம் தரும் என்று நினைத்திருக்கலாம். அதிலும் முருகப்பனின் உருவத்தைப் பற்றிய சிறு சித்தரிப்பு (இழுத்து இழுத்து நடப்பது, குலுங்கும் தொந்தி), இளைஞன் அணஞ்ச பெருமாள் ஊரில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பதைப் பற்றி பெரிய விவரிப்பு இரண்டையும் அப்படி மானுட தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவே எழுதி இருக்கலாம். எனக்கு இவை இரண்டிலும் தொழில் நுட்பத் திறமை மட்டும்தான் தெரிகிறது.

நானும் எப்படியாவது மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் – ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது – என்று பார்க்கிறேன். ஒரு நாள் படித்தால் அடுத்த ஒன்பது நாள் படிக்க முடிவதில்லை. இந்த மாதிரி நாலு கதை வந்தால் எண்ணம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிறேன்.


கந்தர்வனின் தொடர்ச்சியாக இந்த சிறுகதை – யட்சன். நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னைப் பொறுத்த வரை இதன் கவர்ச்சி என்பது இது கந்தர்வனின் தொடர்ச்சியாக இருப்பதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்