ரண்டாமூழம் எனக்கு அறிமுகமானது பிரேம் பணிக்கர் எழுதிய பீம்சேன் மூலமாகத்தான். பீம்சேனை ரண்டாமூழத்தின் transcreation என்று சொல்லலாம், அதே கண்ணோட்டத்தை சில மாற்றங்களோடு எழுதினார் என்று சொல்லலாம்.
பீம்சேனைப் படித்து பத்து வருஷமிருக்கும். அப்போதிலிருந்தே ரண்டாமூழம் நாவலைப் படிக்க வேண்டும் என்று எண்ணம், சமீபத்தில்தான் முடிந்தது.
எனக்கு மகாபாரதப் பித்து உண்டு. மகா செயற்கையான, நாடகத்தனமான என்.டி. ராமாராவ் நடித்த மகாபாரதத் திரைப்படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன். மகாபாரதத்தின் மறுவாசிப்புகளைப் படிப்பதென்றால் எனக்கு லட்டு சாப்பிடுவது மாதிரிதான். எனக்கு ரண்டாமூழம் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை. இந்த நாவலைப் பற்றிய என் கணிப்பு சமநிலையானதுதானா என்று நீங்கள்தான் கவலைப்பட வேண்டும்.
ரண்டாமூழம் மகாபாரதத்தை பீமனின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது. அவ்வளவுதான் கதை.
பீமன் என்ன செய்தாலும் அது இரண்டாம்பட்சம்தான், அது பெரிதாகக் கருதப்படுவதில்லை, he was always taken for granted என்பதுதான் கதையின் அடிநாதம். க்ஷத்ரிய தர்மப்படி துரியோதனனை வென்றவன்தான் அரசனாக வேண்டும். பாரதத்திலேயே போர் முடிந்ததும் யுதிஷ்டிரன் தனக்கு கிரீடம் வேண்டாம் என்று மறுக்கும் ஒரு காட்சி உண்டு. அது அப்படியே காற்றோடு போய்விடும். பணயம் வைத்தபோதே அண்ணனை மறுத்துப் பேசாத தம்பிகள்; அண்ணனை வற்புறுத்தி அரசனாக்கினார்கள் என்பதுதான் சாதாரணமான புரிதல். இங்கே பீமன் அரசனானால் திரௌபதி அரசியா என்ற கேள்வியை எம்டி எழுப்புகிறார்; திரௌபதிக்கு ஒரு குறைவு வரவேண்டாம் என்றுதான் பீமன் அரியணையை மறுத்தான் என்று புனைகிறார். அதே போல அபிமன்யுவுக்காக அத்தனை பேரும் கொதித்தெழுகிறார்கள். கடோத்கஜன் இறந்தால் கிருஷ்ணன் வெளிப்படையாக மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். கஷ்டப்பட்டு சௌகந்திகப் பூவைக் கொண்டு வந்தால் அதை திரௌபதி யுதிஷ்டிரனுக்குத் தருகிறாள். பீமனுக்கு எப்போதும் இரண்டாம் இடம்தான். ஆட்சி அதிகாரமாகட்டும், திரௌபதி மீது உரிமை எல்லாவற்றிலும் யுதிஷ்டிரனுக்குத்தான் முதல் இடம். புகழ் என்றால் அர்ஜுனனுக்கு அடுத்த இடம்தான். எல்லா தகுதிகளும் இருந்தும் காலம் முழுவதும் இரண்டாம் இடத்திலேயே வாழ்பவனின் எண்ணங்கள் என்று சொல்லலாம்.
பீமன் அடிப்படையில் ஒரு காட்டு மனிதன் என்பதாக சித்தரிக்கிறார். நாகரீகப் பூச்சு மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவு. இடும்பியோடு வாழ்ந்த காலமே மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதெல்லாம் பீமனின் சித்திரத்தை உயர்த்துகிறது.
நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள் இரண்டு. அண்ணன்காரன், வீராதிவீரன், கர்ணனை தேரோட்டி மகன் என்று இழிவுபடுத்தினோமே என்று பீமன் வருந்தும்போது, குந்தி கர்ணனை உண்மையிலேயே ஒரு அழகான தேரோட்டிக்குத்தான் பெற்றேன் என்று ஒத்துக் கொள்ளும் இடம்; வாயுபுத்திரன் உண்மையிலேயே ஒரு பலசாலியான காட்டு மனிதனின் மகன் என்று குந்தி சொல்லும் இடத்தில் தோன்றும் வெறுமை. இவை இரண்டும் அபாரமான இடங்கள்.
பலவீனங்கள்? பீமனைத் தவிர கதையில் வேறு யாருமில்லை. மற்றவர்கள் கண் வழியாகவும் பீமனைக் காட்டி இருந்தால் நாவல் எங்கோ போயிருக்கும்.
நாவல் பிடித்திருந்தாலும் இந்த நாவலை நான் கூட எழுதி இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. என்னாலேயே எழுத முடியும் என்றால் நான் கொஞ்சம் குறைத்துத்தான் மதிப்பிடுவேன். 🙂
1984-இல் எழுதப்பட்ட நாவல். கீதா கிருஷ்ணன்குட்டியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. Bhima: Lone Warrior என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
நாவலைக் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் பிரேம் பணிக்கரின் பீம்சேனையும் படியுங்கள். வித்தியாசங்கள் ரசிக்கும்படி இருக்கும்.
இன்னொரு பீமன் கண்ணோட்ட நாவலைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.
விகாஸ் சிங் எழுதிய “Bhima: The Man in the Shadows” ரெண்டாமூழம் நாவலால் inspire ஆனது என்று தோன்றுகிறது. இதில் பீமனுக்கு அர்ஜுனன் மீது கொஞ்சம் சகோதரக் காய்ச்சல். அதிலும் தான் விரும்பும் திரௌபதி மிகவும் விரும்புவது அர்ஜுனனைத்தான் என்பதால் resentment அதிகமாகிறது. மகாபாரதப் பிரியர்களைத் வெறியர்க்களைத் தவிர மற்றவர்கள் ரெண்டாமூழத்தையே படித்துக் கொள்ளலாம். நாவலில் நினைவிருக்கப் போவது சில தியரிகள்தான். தேவர்கள் – இந்திரன், வாயு எல்லாரும் – வேற்றுக் கிரகவாசிகள், அவர்களது அறிவியல் அதிமுன்னேற்றம் அடைந்திருக்கிறது. வாயு பகவானின் ஜீன் ஒன்றால் அவருக்கு தன் உருவத்தை பெரிதாகவோ சிறிதாகவோ மாற்றிக் கொள்ள முடிகிறது, அந்த ஜீன் ஹனுமானுக்கு வந்திருக்கிறது, பீமனில் dormant, கடோத்கஜனுக்கு வந்திருக்கிறது. இந்த மாதிரி சில தியரிகள் புன்னகைக்க வைத்தன.
தொகுக்கப்பட்ட பக்கம்: மஹாபாரதப் பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...