இமையத்துக்கு சாஹித்ய அகடமி விருது

இமையத்துக்கு 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறதுசெல்லாத பணம் என்ற நாவலுக்காக. தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

சு. வேணுகோபால் எழுதிய வலசை, சுப்ரபாரதிமணியன் எழுதிய ரேகை, தேவிபாரதி எழுதிய நடராஜ் மகராஜ், கே. பஞ்சாங்கம் எழுதிய அக்கா ஆகிய நாவல்களும், கோவை ஞானி (என்றுதான் நினைக்கிறேன்) எழுதிய என் கையெழுத்துப் படிகளிலிருந்து இலக்கியத் திறனாய்வு, டி.எஸ். நடராஜன் எழுதிய தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் ஆகிய திறனாய்வு நூல்களும், கலாப்ரியா எழுதிய பனிக்கால ஊஞ்சல் என்ற கவிதைத் தொகுப்பும், ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய பனைமரமே! பனைமரமே! என்று பண்பாட்டு நூலும் பரிசீலனையில் இருந்திருக்கின்றன. சுப்ரபாரதிமணியனுக்கும் வேணுகோபாலுக்கும் கலாப்ரியாவுக்கும் இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

பிற மொழிகளில் கேள்விப்பட்டிருந்த ஒரே பெயர் – வீரப்ப மொய்லி! மொய்லி முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக்விஜயம் என்ற காவியத்தை கன்னடத்தில் எழுதி இருக்கிறாராம், அதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

இமையத்தை நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில சிறுகதைகளும் என் மனதில் நிற்கவில்லை. ஆனால் படித்தபோது இலக்கியம் படைத்திருக்கிறார் என்றுதான் மதிப்பிட்டிருக்கிறேன்.

மனதில் நின்றது இரண்டு விஷயங்கள்தான். இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இரண்டாவதாக தனது நாவலில் வரும் பெண்கள் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு

2 thoughts on “இமையத்துக்கு சாஹித்ய அகடமி விருது

  1. நான் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளை அதிகம் வாசித்ததில்லை. விரும்பி வாசித்தவை, வாசிப்பவை எல்லாம் அசோகமித்திரன், வண்ணநிலவன், திலீப் குமார், வண்ணதாசன், கு.ப.ரா, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கந்தர்வன், ஆதவன், சுஜாதா போன்ற 60 வயதைத்தாண்டிய எழுத்தாளர்களைத்தான். இவர்களை முடித்துவிட்டு சம காலத்திற்கு வருவோம் என்று subconscious’ஆகவே ஏற்பட்ட‌ எண்ணம். விதிவிலக்கு : இமையம்.

    சில ஆண்டுகளுக்குமுன், யதேச்சையாக, இமையத்தின் சிறுகதையை உயிர்மையில் வாசித்துப் பிடித்துப் போக, அதன் பிறகு இமையத்தின் சிறுகதை என்றால் முதலில் அதைத்தான் வாசிக்கத் தொடங்குவேன். ஒரு சிறுகதை வாசித்த பல நாட்களுக்குப் பிறகும் உங்களின் நினைவில் இருந்தால் அது நல்ல சிறுகதை என்பார் சுஜாதா. நான் வாசித்த இமையத்தின் சிறுகதைகள் அவ்வகைதான். வாசித்து சில பல ஆண்டுகள் ஆகியும், அந்த கதை, கதாபாத்திரங்கள் எனக்கு மறக்காமல் இருக்கிறது. பொதுவாக, இமையத்தின் சிறுகதை உயிர்மையில் அதிகம் வரும். இப்போதும் விகடனிலும் வருகிறது. அப்படி, சமீபத்தில்-மார்ச் மாதத்தில், விகடனில் வந்த நல்லதொரு சிறுகதை “தாலி மீது சத்தியம்”. கடை வாசலில் விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ‘இமையம்’ என்ற பேர் கண்ணில் பட்டவுடனே ஒரு துள்ளலான மகிழ்ச்சி, ஆர்வம்.

    கதைஇதுதான் : பஞ்சாயத்து போர்டு தேர்தலில் தோற்றவன், வோட்டுக்கு கொடுத்த பணத்தை, வீடு வீடாகச் சென்று திருப்பி வசூலிப்பதுதான் கதை. சிறுகதையை பல்வேறு விதத்தில் எழுதலாம் : கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக, மனவோட்டங்களின் பதிவாக(Stream-Of-Conscious) அல்லது வாசகனோடு நேராக பேசுவது போல. இந்தக் கதையில், கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக கதை, சூழல், விவரிக்கப்படுகிறது. அலமேலு கதாபாத்திரத்திற்கு ஏற்படும் பதட்டமும், பயமும் வாசகனுக்கும் கடத்தப்படுகிறது. கதை முடிகிறவரை அந்த தீவிரம் குறையவில்லை. இதற்கு மேல் ஒரு சிறுகதையில் என்ன வேண்டும் ? இமையம் ஆசான்தான்!

    https://www.vikatan.com/arts/literature/short-story-18th-march-2020?artfrm=v2&fbclid=IwAR0krh0SpRAZ_FdQNvmC_bki3mDOaOaWimxypNHMAeCH2yja6hvgYKMCrBE

    Like

    1. மஹேஷ், உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நான் படிப்பவர்களுக்கும் ஐம்பது வயதுக்கு மேல்தான், ஆனால் அது இளம் எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாத குறை.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.