தவறுதலாக – பி.ஆர். ராஜம் ஐயர் எழுதியது என்று நினைத்துத்தான் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதை எழுதியவரோ டி.எஸ். ராஜம் ஐயர். நான் கேள்விப்பட்டதே இல்லை.
1912-இல் வெளிவந்த நாவல். (அன்றைய விலை ஐம்பது பைசா) மொழியைக் கொஞ்சம் புதுப்பித்தால் ஐம்பதுகளின் லக்ஷ்மி நாவல் போல இருக்கும். நாவலின் புதுமை என்பது பத்து பனிரண்டு வயது இந்துலீகாவுக்கு 32 வயது நரேந்திரபாபு, அவள் வயதுக்கு ஓரளவு நெருக்கமான சுகுமாரன் இருவர் மேலும் ஈர்ப்பு ஏற்படுவதுதான். இன்று கூட ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இருவர் மீது ஈர்ப்பு என்று வருவது அபூர்வம்தான்.
ஐம்பது அறுபது பக்கம் படிக்கும்வரை இந்த நாவலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். (நாவல் நூறு பக்கம் இருந்தால் அதிகம்). அப்போது படித்த வரிகள்:
பால்ய விவாகம் கூடாதென்றும் சமபந்தி போஜனம் வேண்டுமென்றும் விதவாவிவாகம் செய்வது உசிதமென்றும் ஸ்த்ரீகளுக்கு கல்வி அத்யாவஸ்யமென்றும் மாத்திரம் முறையிடும் ஆசார சீர்திருத்தக்காரர்களைக் கண்டு அனேகர் பயப்படுவதோடு அவர்களுக்கு ஒத்தாசையும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசார சீர்திருத்தக்காரர்களில் ஒருவரையும் நமது சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்றுணர்ந்த மற்றொருவரையும் நம்முடைய பிரதிநிதிகளாக ஏற்பாடு செய்தால் அவர்கள் இருவரும் கலந்து எந்தெந்த சாஸ்திரங்கள் ஆதிகாலம் முதல் மாற்றப்படாமல் இருக்கின்றனவோ அவற்றைத் தொடாமல் எவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு நம்முடைய சௌர்ய சௌகர்யங்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனவோ அவைகள் அனைத்தையும் சம்யோஜிதமாக மாற்ற வேண்டியது. இவைகளினால் மட்டுமே நாம் முன்னுக்கு வந்து பழைய ஞானத்தை அடைந்து அஞ்ஞானமாகிய இருளை வென்று நான் ஆரியன் என்று கௌரதையாக சொல்லிக் கொள்ளலாம்
உதாரணமாக அந்தணர்கள் சிரார்த்தங்களில் மது மாமிசம் படையல் வைத்தார்கள், இப்போது இல்லை என்கிறார்.மாறாத அறநெறி, மாற்றக் கூடிய சடங்குகள்/பழக்கங்கள் என்று அவர் சிந்தித்திருப்பது எனக்கு வியப்பை உண்டாக்கியது. இன்று கூட முன்னோர் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரு காரணம் போதும், சடங்குகளை மாற்றவே கூடாது என்று சொல்பவர்களைப் பார்க்கலாம். “பால்ய விவாகம் நல்ல விஷயம்” என்றே ஒருவர் 2021-இல் – இந்தப் புத்தகம் வந்து 109 வருஷம் கழித்து – சொன்னதைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ராஜம் ஐயருக்கு மனதார ஜே போட்டதை பதிவு செய்யத்தான் இதை எழுதுகிறேன்.
இந்த ராஜம் ஐயர் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் எழுதுங்கள்!
பழைய புத்தகம் என்ற curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்
அந்தப் புத்தகத்தின் பக்கத்தை இங்கே பகிர வேண்டி அப்படியே டைப் செய்யும் அவஸ்தை இருக்கிறது பாருங்கள்.. அது கொஞ்சம் சிரமம்.
LikeLike