நாகசாமி – அஞ்சலி

தொல்லியல் நிபுண்ர் நாகசாமி தனது 91-ஆவது வயதில் மறைந்தார் (ஜனவரி 23, 2022).

நாகசாமி பத்மபூஷன் விருது பெற்றவர். தமிழ்நாட்டின் தொல்லியல் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லவர். சோழர் கால செப்பு சிற்பங்களைப் பற்றிய முதன்மை நிபுணர். சிவபுரம் நடராஜர் சிலை ஒன்று லண்டனுக்குக் கடத்தப்பட்டபோது இவரைத்தான் நிபுணர் சாட்சியாக விசாரித்தார்கள். அந்த நீதிபதி இவரது சாட்சியத்துக்குப் பிறகு விசாரிக்க ஒன்றுமே இல்லை, சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்புங்கள் என்று தீர்ப்பளித்தார்.

அவர் எழுதிய புத்தகங்கள், தொல்லியல் துறை தலைவராக இருந்தபோது அவர் அமைத்த கண்காட்சிகள், சென்னை அருங்காட்சியக அதிகாரியாக (தலைவர்?) இருந்தபோது அவர் அமைத்த காட்சிகள் எல்லாவற்றிலும் அடிநாதமாக இருந்தது இவை அநிபுணர்களிடம் – சாதாரணர்களிடம் – போய்ச் சேர வேண்டும் என்ற விழைவு. அருங்காட்சியகத்தில் பணியாற்றியபோது பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளை ஒரு காட்சியாக அமைத்தார். எட்டயபுரத்தில் பாரதியாரின் வீடு ஏதோ சிறு தொழிற்கூடமாகவே இருந்திருக்கிறது, அதை மீட்டெடுத்து சீரமைத்தார்.  அரசு அலுவலகங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த திருமலை நாயக்கர் மஹாலை ஒளி அமைப்புகளை ஏற்பாடு செய்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார்.

அதுவும் அவர் அறுபது எழுபதுகளில் எழுதியவற்றில் புகைப்படங்கள் நிறைந்திருக்கும். புகைப்படங்களை புத்தகத்தில் பதிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், சாதாரணர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது எளிதல்ல. குறிப்பாக, புகைப்படங்களுக்காகவே அவரது Art of Tamil Nadu புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். சுட்டியை கிளிக்கினால் சில புகைப்படங்களைப் பார்க்கலாம். முழுப் புத்தகமும் இங்கே கிடைக்கிறது.

ஆனால் அவரது எல்லா புத்தகங்களும் சாதாரணர்களுக்கு அல்ல, சில நிபுணர்களுக்கு மட்டும்தான். ஆனால் சாதாரணர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார். எடுத்துக்காட்டாக தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற புத்தகம் பெரிய கோவில் கல்வெட்டுக்களை புரியும் வகையில் சொற்களைப் பிரித்து பதிக்கப்பட்டிருக்கிறது.  ஏறக்குறைய கோனார் நோட்ஸ். வரலாற்றை நம் போன்றவர்களுக்கு அருகில் கொண்டு வர முயற்சி எடுத்தார், அந்த ஒரு காரணத்துக்காகவே அவரை நினைவு கூரலாம்.

என் தங்கையின் மாமனார். முதல் முறை அவர் வீட்டுக்குப் போனபோதே அவரைப் பற்றி புரிந்துவிட்டது. அவரது அறையின் சுவர் முழுக்க புத்தக அலமாரிகள். அலமாரிகள் பற்றாமல் அங்கங்கே இறைந்து கிடந்த புத்தகங்கள். கண்ணை எடுக்க முடியவில்லை. தங்கையின் நிச்சயதார்த்தம் பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க நான் காலேஜில் கட் அடிப்பது போல நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவ்வப்போது கட் அடித்துவிட்டு அவர் நூலகத்தில் உட்கார்ந்திருந்தேன்.

அவருடன் தஞ்சை பெரிய கோவிலுக்குப் போனது மறக்க முடியாத அனுபவம். சுற்றுப் பிரகாரத்தில் இருந்த கல்வெட்டுகளை நான் தினத்தந்தி படிப்பது போல படித்துக் காட்டிக் கொண்டே போனார். அவர் தயவில்தான் தஞ்சை பெரிய கோவில் ஓவியங்களைப் பார்க்க முடிந்தது.

முதுமை அவரை கொஞ்சம் பாதித்திருந்தது. உடல் தளர்ந்துவிட்டது. ஆனால் கடைசி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும்தான் இருந்தார். அதுவும் பெரிய பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய நிலை, ஆனால் படிப்பது கடைசி வரை நிற்கவே இல்லை.

அவரது கருத்துக்கள் சில – தமிழ் மரபு வைதீக மரபின் வளர்ச்சியே, திருக்குறள் வேதங்களின் தொடர்ச்சியே, மஹாபலிபுர சிற்பங்கள், கோவில்களைக் கட்டியது நரசிம்மவர்ம பல்லவர் அல்லர், அவரது பேரனான ராஜசிம்ம பல்லவர் – போன்றவை எனக்கு வியப்பளித்தன. ஆனால் அவற்றைப் பற்றி அவருடன் வாதிடும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. தமிழ் மரபைப் பற்றியும் வைதீக மரபைப் பற்றியும் நுனிப்புல் மேய்ந்திருக்கும் நான் அவற்றை கரைத்துக் குடித்திருக்கும் அவரிடம் என்ன வாதிட? குடும்பத்துப் பெரியவர் என்ற மரியாதை வேறு குறுக்கே நின்றது. அதனால் என் கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவரிடம் எதுவும் பேசியதில்லை.

அதுவும் மாமல்லை, New Light on Mamallapuram என்ற புத்தகங்களில் மஹாபலிபுர சிற்பப் பொக்கிஷங்களை நிறுவியவர் நரசிம்மவர்மர் அல்லர், ராஜசிம்மரே என்ற வாதங்கள் வலுவாகத்தான் இருந்தன. இதைப் போலவே தமிழ் மரபு பற்றியும் அவர் வலிமையான வாதங்களை முன்வைத்திருக்கலாம், அவர் எழுதிய Tamil Nadu: The Land of Vedas போன்ற புத்தகங்களை புரட்டியாவது பார்த்த பிறகுதான் அவருடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.

அவரது புத்தகங்களின் நான் பரிந்துரைப்பது Art of Tamil Nadu, மாமல்லை, New Light on Mamallapuram, சொல்மாலை, தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள். (நான் படித்தவை வெகு சிலவே.) இவற்றுள் மாமல்லை மாதிரி பள்ளிப் பருவத்தில் வரலாற்றைப் படித்திருந்தால் அது மனதில் பதிந்திருக்கும். சிறப்பான புத்தகம். மாமல்லபுரத்தின் அரசியல் வரலாறு, இலக்கியச் சான்றுகள், கோவில்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் அருமையாக, புரியும்படி விவரித்திருக்கிறார். சொல்மாலை பல கோவில் கல்வெட்டுகளை புரியும்படி விளக்குகிறது. தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பெரிய கோவில் கல்வெட்டுக்களை புரியும் வகையில் சொற்களைப் பிரித்து பதிக்கப்பட்டிருக்கிறது.

நாகசாமியின் மகனான மோகன் நாகசாமி அவர் எழுத்துக்களுக்காகவே தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி என்ற தளத்தை நடத்தி வருகிறார். மோகனுக்கு அவரது எல்லா எழுத்துக்களையும் இணையத்தில் ஏற்றிவிட வேண்டும் என்ற பெரிய விழைவு உண்டு, அது பூர்த்தி ஆகட்டும்!

நாகசாமியின் பல புத்தகங்கள் தமிழ் இணைய நூலகத்திலும் (சுட்டி 1, சுட்டி 2, சுட்டி 3) ஆர்க்கைவ் தளத்திலும் (சுட்டி 1, சுட்டி 2) கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புள்ள சுட்டிகள்:

எம்.டி. முத்துகுமாரசாமி பட்டியல்கள்

முத்துகுமாரசாமி நாட்டுப்புறவியல் அறிஞர். சிறந்த நவீனத்துவ/பின்நவீனத்துவ சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தார். வசதிக்காக கீழே.

நவீனத்துவ கட்டுமானத்தை உருவாக்கிய சிறுகதைகள்:


பின்நவீனத்துவ கதையாடல்களை சட்டகப்படுத்திய சிறுகதைகள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

உண்மையான 5 SF கணிப்புகள்

நிலவுக்கு போவது: 1865, ஜூல்ஸ் வெர்ன், From the Earth to the Moon: A Direct Route in 97 Hours, 20 Minutes. வெர்ன் 97 மணி நேரம் என்று எழுதினார், உண்மையில் 75 மணி நேரம்தான் ஆயிற்று. 🙂 வெர்ன் எழுதியது போல பீரங்கியிலிருந்து ராக்கெட் ஏவப்படவில்லை. ஆனால் அவர் காலத்திற்கு அது நல்ல கற்பனைதான்.

டாப்லெட் கம்ப்யூட்டர்கள்: 1968, ஆர்தர் சி. க்ளார்க், 2001: A Space Odyssey. கறாராகச் சொன்னால் முதலில் திரைப்படம்தான் வந்தது, பிறகுதான் அதை க்ளார்க் நாவலாகவும் எழுதினார். திரைக்கதையை அமைத்ததில் ஸ்டான்லி குப்ரிக்குக்கும் பங்குண்டு என்று நினைவு. க்ளார்க் இவற்றுக்கு வைத்த பேர் நியூஸ்பாட். இன்று ஐபாட்கள். அவர் செய்திகள் மட்டுமே படிக்கப்படும் என்று காட்சியை வடிவமைத்திருந்தார். இணைத்துள்ள வீடியோவைப் பாருங்கள், இன்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சி (ஐபாடுக்கு பதிலாக ஃபோன்களை நோண்டிக் கொண்டிருக்கிறோம்)

இன்டர்நெட்: இதுவும் கொஞ்சம் ஏமாற்றுதான். ஆனால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை உடனுக்குடன் பார்ப்பது, தெரிந்து கொள்வது என்று மார்க் ட்வைய்னின் இந்தக் கதையில் – From the ‘London Times’ of 1904– வருகிறது.

அலைபேசிகள்: என் தலைமுறைக்காரர்கள் அனேகருக்கு ஸ்டார் ட்ரெக்தான் அலைபேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.

ஹோலோகிராம்: என் தலைமுறைக்காரர்களுக்கு ஸ்டார் வார்ஸ்தான். சுஜாதா ரசிகர்கள் கொலையுதிர்காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலக்கட்டுரை இங்கே. சிலிகன்ஷெல்ஃபில் திரைப்படங்களையும் சேர்ப்பது கொஞ்சம் ஏமாற்று வேலைதான், இருந்தாலும் நான் உத்தமன் இல்லையே!

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

சுஜாதா: செப்டம்பர் பலி

செப்டம்பர் பலி எழுபது-எண்பதுகளில் வாரப் பத்திரிகை தொடர்கதையாக வந்தது என்று நினைவு. அப்போது அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன்.

இன்று முழுமையாகப் படிக்கும்போது வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் அவ்வப்போது ஏற்படும் கச்சிதக் குலைவு இல்லாமல் சீராகச் செல்வது தெரிகிறது. சினிமாத்தனமான நிகழ்ச்சிகளிலும் நம்பகத்தன்மை இருக்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச் தெரிகிறது. ஆனால் எளிமையான வணிக நாவல் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

என்ன கதை? பெங்களூர். எளிய மனிதன் தங்கசாமி மீது கொலைக்குற்றம் ஜோடிக்கப்படுகிறது. மூன்று வருஷம் சிறை. பணக்காரப் பெண் வினோதினியோடு தற்செயலாக பழக்கம். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நிழலான முதலாளியைத் தேடுகிறான். வினோதினி உதவுகிறாள். காதல். அவளது அப்பாவும் சம்மதிக்கிறார். முடிவில் வழக்கமாக தமிழ்ப்படங்களில் வருவது போல வில்லன் யார் என்று ஒரு திடுக்கிடும் திருப்பம். தங்கசாமியால் ஒன்றும் செய்யமுடியாது. வில்லன் கோஷ்டியோடு கைகோர்ப்போம், செப்டம்பருக்குள் அவர்களை பலி கொடுப்போம் என்று வினோதினி அவனுக்கு தைரியம் தருகிறாள்.

ஓட்டைகள் இல்லாமல் இல்லை. முதலாளியைத் தேடும் தங்கசாமி தனக்குத் தெரிந்த சின்ன லெவல் வில்லன் கோஷ்டி ஆசாமிகள் – பட்டர், வக்கீல் – மூலம் அடுத்த நிலை வில்லன்கள் பக்கம் போக முயற்சியே எடுப்பதில்லை. இன்னொரு ஓட்டையை விவரித்தால் வில்லன் யார் என்று தெரிந்துவிடும், அதனால் வாயைப் பொத்திக் கொண்டுவிடுகிறேன்.

சுஜாதாவின் டச் சில இடங்களில் தெரிகிறது. பெண் பாத்திரங்கள் – வினோதினி, கிருஷ்ணவேணி – நன்றாக வந்திருக்கின்றன. நடைமுறையில் நடக்காதுதான், ஆனாலும் வினோதினி-தங்கசாமி ஈர்ப்பு இயல்பாக இருக்கிறது. சிறையில் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரி, போலீஸ் விசாரணைகள் இயல்பாக இருக்கின்றன(ர்).

இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றிய எண்ணம் இதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை என்பதுதான். இது நல்ல மூலக்கதை. விஜய் போன்றவர்களை நாயகனாக வைத்து மாஸ் திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ் போன்றவர்களை நாயகனாகப் போட்டு நடிக்கவும் வைக்கலாம். யாராவது உதவி இயக்குனர்கள் இந்தப் பக்கம் வந்தால் யோசிங்கப்பா!

படிக்கலாம். ஆனால் எளிய வணிக நாவல்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

Kurunthokai 8

Continuing my translations for my daughter, Sreya…

Reiterating that these poems usually feature very few players, repeat very few actions. There is the hero, heroine (wife or lover), friend of the heroine, mother of the heroine and sometimes the “other” woman, a courtesan. How many interactions are possible between these? Kurunthokai brilliantly comes with endless varieties…

The verses are usually categorized by the landscape where it takes place. There are 5 categories – hilly landscape, grazing pasture, agrarian landscape, seashore and desert. Among these, the courtesan, the “other” woman is a recurring motif in the agrarian landscape.

The courtesan says:

He who owns the fields where the fish catch the ripe mangoes
Speaks big, trying to impress me
But like a puppet that moves its arms and legs as the puppeteer moves the strings
Always obeys the mother of his son

By Alangudi Vanganar, Agrarian Landscape (Marutham)

Obviously, it is the “other” woman, the courtesan, who speaks these words. Her contempt for the man comes out brilliantly. The images evoked by this verse makes me smile. The fish that catches ripe mangoes = mangoes are that low on the tree or the fishes just jump up and catch falling mangoes; the wife, nay, the mother of his children as the puppeteer!

Why the fish image? At first, it feels like there is no connection between the courtesan’s irritation and the fish. First if there are fishes in the fields, the hero must own very fertile fields which are well irrigated. And if mangoes are easily available to fish and nobody is actually plucking them, then the hero must be rich, making him attractive for courtesan. And the courtesan is irritated that such a good “catch” is under the thumb of his wife, and his promises turn out empty…

பரத்தை கூற்று:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே

— ஆலங்குடி வங்கனார், மருதத்திணை

தண்ணீரில் விழும் மாம்பழத்தை உண்டு மகிழும் வாளை மீன்கள் நிறைந்த வயல்களை உடைய தலைவன் ஆகாயத்தைக் கொண்டு வருவேன் என்று பெரிதாக நிறைய பேசுவான்; ஆனால் அவன் மகனின் தாய் ஆட்டுவிக்கும் படி கைகாலைத் தூக்கி ஆடும் பொம்மைதான் அவன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: குறுந்தொகை பக்கம் (Kurunthokai)

வண்ணநிலவன்: கம்பாநதி

கம்பாநதி ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம், எப்படியோ விட்டுப் போய்விட்டது. ஆனால் படித்த பிறகு இத்தனை நாள் படிக்கவில்லையே என்று வருத்தம் ஏற்படவில்லை. தமிழில் ஒரு டிக்மார்க், எனக்கு அவ்வளவுதான்.

கதை மிகவும் எளிமையானது. திருநெல்வேலி பக்கத்தில் எழுபதுகள் காலகட்டத்தில் ஒரு சிறு உலகத்தின் (microcosm) சித்தரிப்பு. வேலை இல்லா இளைஞர்கள், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவர் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தன் தேவைகளையும் சமாளிப்பது, காதல், உறவுகள், நண்பர்கள். மெய்நிகர் சித்தரிப்பு. அவ்வளவுதான். ஒரு விதத்தில் பார்த்தால் அன்பான, கனிவான, பலவீனங்கள் நிறைந்த போரடிக்கும் மனிதர்கள். ரஜோகுணம் இல்லாமல் ரொம்ப சாத்வீகமாக இருந்தால் புனைவுகள் சுவாரசியப்படுவதில்லை. இதுவும் எனக்கு அப்படித்தான் இருந்தது.

வண்ணநிலவன் சித்தரிக்கும் உலகம் – வேலை இல்லா இளைஞர்கள், பணப்பற்றாக்குறையால் தடுமாறும் குடும்பம் எனக்கு பரிச்சயமானதுதான், நான் பார்த்தது/அனுபவித்ததுதான். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து பல வருஷம் ஆயிற்று. இப்போதெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதில்லை, பணப்பற்றாக்குறை வேறு லெவலில் இருக்கிறது. 🙂 ஆனால் இப்படி தேங்கிக் கிடப்பதின் சித்தரிப்பை பார்க்கும்போது இத்தனை தடுமாறினால் அதை நீயேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் பலம் மெய்நிகர் சித்தரிப்பு. பலவீனம் சுவாரசியமின்மை. சிறந்த பகுதி பாப்பையாவும் கோமதியும் நடந்து போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பது.

அது என்ன கம்பாநதி? தேங்கி, மறைந்தே போய்விட்ட நதியாம். இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்று சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

கம்பாநதி எஸ்ராவின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. ஜெயமோகன் பட்டியலில் இல்லை. அவர் இதை அற்பமான நாவல் என்று விமர்சித்திருக்கிறார். ஞாபகம், சரியாக நினைவில்லை. என் ஞாபகம் தவறாக இருக்கலாம். அவரே  இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கவும் செய்திருக்கிறார்.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை. என்னைக் கேட்டால் வண்ணநிலவனின் சிறுகதைகளே – குறிப்பாக எஸ்தர் – அவரை தமிழ் வாசகனின் நினைவில வைத்திருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்

எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

எஸ்.வி. சஹஸ்ரநாமம் பெயர் நினைவிருந்தால் உங்களுக்கு நாற்பது வயதாவது இருக்க வேண்டும். மிக இயல்பான நடிகர். திரைப்படங்கள் மூலம்தான் இன்று கொஞ்சமாவது நினைவில் இருக்கிறார், ஆனால் நாடகம் நாடகம் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பசுபதி சார் தளத்தில் அவர் 1981-இல் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது, அவருக்கு நன்றி! பாரதியை அவர் எப்படி எல்லாம் தனது நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுதி இருக்கிறார். பாரதிக்கும் முன்னால் இருந்த நாடக உலகம் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

கனபரிமாண காட்சி முறையை அவரது நாடகம் ஒன்றில் கலை இயக்குனர் கலாசாகரம் ராஜகோபால் அறிமுகப்படுத்தினாராம். அது என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வசதிக்காக கட்டுரையை தட்டச்சி இருக்கிறேன். ஓவர் டு சஹஸ்ரநாமம் சார்!


தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நான் சேர்ந்த புதிதில் அநேகமாக எல்லா நாடகங்களும் புராண, இதிகாச வகைகளாக இருந்தன. அத்துடன் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியனவாகவும் இருந்தன. பிறகு கால மாறுதலுக்கேற்ற வகையில் சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மேடைக்கு வர காரணமாக இருந்தவர் நாடக மேதை எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான். நடிகர் எம்.கே. ராதா அவர்களின் தந்தை.

நான் கம்பெனியில் சேரும்போது அவர் இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்தார்கள். அவரால் தயாரான சமூக நாடகங்கள் ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன்; இவ்வளவும் ஜே.ஆர். ரங்கராஜு அவர்களால் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டவை. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மேனகாவும் கந்தசாமி முதலியார் அவர்களால்தான் மேடையில் நாடகமாக ஆக்கப்பட்டது. அவர்தான் எனது குரு. நாடக ஆசிரியர். எனக்கு நல்ல பாத்திரங்களை அளித்து அதிலே, பயிற்சி அளித்து பிறர் பாராட்டைப் பெறும் பாக்கியமும் நான் பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான்.

தேசீய விடுதலைப் போராட்டம் மும்முரமாகத் தொடங்கியபோது சமுதாயத்தின் ஒரு பகுதியான கலைஞர்களும் தங்கள் தொழில் மூலம் தேசீயப் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நாடகங்கள் எதுவானாலும் தேசியக் கிளர்ச்சிக்குத் தேவையான பணிகளில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும்படியாக தங்கள் நடிப்பு, இசை அனைத்தையும் பயன்படுத்தலானார்கள். தேசியப் போராட்டத்தில் தமிழகத்துக் கலைஞர்களுக்கு பெரும் பங்குண்டு. பாரதியாரின் பல பாடல்கள் நாடகங்களில் பாடப்பட்டன.

1946-ஆம் ஆண்டில் என்.எஸ்.கே. நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது புதிதாக நாடகம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ப. நீலகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். “தியாக உள்ளம்” என்ற ஒரு கதையைக் குழுவில் படித்துக் காண்பித்தார். அந்தக் கதை கருத்துடையதாகவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தூண்டுவதாகவும் இருந்தது. இரண்டொரு பாத்திரங்களை புதிதாக உருவாக்கி “நாம் இருவர்” என்று அந்நாடகத்துக்கு பெயரிட்டு தயாரிக்க ஏற்பாடு செய்தோம். இதில் இடம் பெற்ற பாரதியின் பாடல்கள் வெற்றிக்கு வழி காட்டின. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியடிகள் சென்னை வந்திருந்தார்கள். அப்போது பிரார்த்தனைக் கூட்டத்தில் நாங்கள் குழுவுடன் கலந்து கொள்வோம். எந்த நேரமும் புதிய நாடகத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் எனக்கு மகாத்மா தரிசனமும் நாடக வெற்றிக்கான வழியைக் காட்டியது. அதன் பலன்… மூன்று நான்கு காட்சிகளும் தேசியப் பாடல்களும் ஒரு சகோதரியின் பாகமும் உருவாகின. மகாத்மாவின் சிலையும் நாடகத்தில் முக்கியப் பங்கேற்றது. நாடகம் மிக வெற்றிகரமாக மேடை ஏறியது.

அன்று அந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்று, நாடகத்தை மிக மிக அழகாக ரசித்துப் பாராட்டி ஆசிரியரையும் கலைஞர்களையும் வாழ்த்தியவர் திரு. வ.ரா. அவர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன்னால், எனது எண்ணங்களில் கலக்கமும், செயலிலே தடுமாற்றமும், பார்வையில் சூன்யமும் இருந்தன. அந்தப் பெரியாரின் நட்பும் உறவும் கிடைத்த பின் எனது எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டது; செயலிலே நிதானம் ஏற்பட்டது; பார்வையிலே பிரகாசம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு திரு. ப. நீலகண்டன் அவர்களால் கொடுக்கப்பட்டது “இரத்த சோதனை” என்ற ஒரு நாடகம். அதை ஆதாரமாகக் கொண்டு பல மாற்றங்களுடன் “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகத்தின் மூலம் திரைப்படத்திலும் நான் முக்கிய பாத்திரமேற்று நடித்து, திரைக்கதை வசனமும் எழுதியதில் வெற்றியும் புகழும் கிடைத்தன; திரைப்பட வாழ்க்கைக்கு இது வழிகாட்டியது.

திரைப்படத்தில் நடிப்பதும், நாடகத்தில் நடிப்பதுமாகச் சில நாட்கள் சென்றன. திரைப்படத்து வருமானம் நாடக மேடையில் புதிய முறையில் நாடகங்களை நடத்தவும், காட்சிகளை அமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

1952-ஆம் ஆண்டு எங்களது சொந்தக் குழுவான சேவா ஸ்டேஜ் நாடக சபா ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியத் தரம் படைத்த பல எழுத்தாளர்களை நாடக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த வரிசையில் திரு என்.வி. ராஜாமணி, திரு. தி. ஜானகிராமன், குகன், கு. அழகிரிசாமி, திரு. கோமல் சுவாமிநாதன், திரு. தாமரைமணாளன், திரு. மல்லியம் ராஜகோபால், திரு. எம்.கே. மணி சாஸ்திரி, திரு. கௌசிக் போன்றவர்கள்.

திரு. கலாசாகரம் ராஜகோபால் அவர்கள் கலை இயக்குனராக பணி மேற்கொண்டு, புதிய முறையில் காட்சி அமைப்புகளில் பலரும் பாராட்டும்படி சாதனைகள் செய்தார். கனபரிமாண காட்சி முறையை முதன்முதலில் தமிழக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் சுழலும் காட்சியையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக “நாடகக் கல்வி நிலையம்” ஒன்று ஆரம்பித்து, நடிப்பு – நாடகத் தயாரிப்பு – நாடகம் எழுதுவது – நாடகக் காட்சி அமைப்பு, என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் 16 மாணவ மாணவியர் பயிற்சி பெற வழி செய்தோம். அதில் தோன்றியவர்தான் இன்று புகழடைந்துள்ள நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன். நடிகையர் வரிசையில் டி.கே. வசந்தாவும் தேர்ச்சி படைத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை உண்டு.

இந்த நாடகக் கல்வி நிலையத்தில் நடிப்புப் பயிற்சி அளிப்பது என்னுடைய கடமையாக இருந்தது. எனது வெகு நாளைய ஆசை மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை ஏற்ற வேண்டும் என்பது. அதற்காக நானாகவே மஹாகவியின் கவிதைகளில் வர்ணனைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நாடக உணர்ச்சிகளுக்கு வேண்டிய உரையாடல்களை மட்டும் தொகுத்து, கல்வி நிலைய மாணவர்களுக்கு மொழிப் பயிற்சிக்கு வலிமை ஊட்டுவதற்காகப் பயன்படுத்தினேன்.

இந்தக் கவிதை நாடகப் பயிற்சி நடக்கும் சமயம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் வகுப்பு முடிந்து போகும்போது, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு, இந்தக் கவிதை நாடகத்தை, தொழில்முறை நாடகம் நடத்தும் உங்கள் நடிகர்களைக் கொண்டு மேடை ஏற்றினால் பெருமையாக இருக்குமே எனத் தெரிவித்தார். பிறகு இதே கவிதை நாடகத்தை திரு. பி.எஸ். ராமையா அவர்களிடம் கொடுத்து தொழில் நடிகர்களான நாங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் நாடக உணர்ச்சியும் பண்பாடும் மெருகேற்றித் தொகுத்தளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி அவரும் செய்து கொடுத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற ஆதரவுடன் நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். இது வரை எங்களுக்குக் கிடைக்காத பாராட்டும் வாழ்த்துக்களும் மஹாகவியின் கவிதை நாடகத்தில் நாங்கள் பெற்றோம். அமரர் அவ்வை சண்முகத்துக்கு எனது மானசீகமான அஞ்சலியை நான் இப்போதும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த மஹாகவியின் பாஞ்சாலி சபதம் எங்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரங்களிலெல்லாம் பெருமையும், புகழும் ஏற்படக் காரணமாக இருந்தது. டில்லி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பான முதல் தமிழ் நாடகம் என்ற சிறப்பையும் அடைந்தது. கல்கத்தாவில் மஹாகவி தாகூர் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் நடத்தும் நல்வாய்ப்பையும் பெற்றோம். பெரிய அளவில் அரங்கம் அமைத்திருந்தார்கள். நாடகம் முடிந்ததும் பல வங்காள ரசிகர்கள், கலைஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மேடையில் உள்ளே வந்து, எங்களை நேரடியாகப் பாராட்டினார்கள். அவர்கள் “எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், இனிமையான சொற்களை இசை போலக் கேட்க முடிந்தது, காட்சிகளும் நடிப்பும், வெகுவாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின, இந்த நாடகம் எங்கள மனத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தென்னகமும் வடநாடும் மட்டுமல்லாமல் பாரதியார் கவிதை மூலம் என்னுடன் ரஷ்யாவுக்கும் பயணமானார். ஆம்! 1961-ஆம் ஆண்டில் பாரதீய நாட்டிய சங்கத்தார் நாடகக் கலையை அறிவது சம்பந்தமாக கலைத் தூதுக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதில் தமிழகத்தின் சார்பில் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னுடன் வங்காள நாட்டு மின்சார நிபுணரான திரு. தபன் சென் அவர்களும் உடன் வந்தார்கள். இவர் மத்திய சர்க்காரது நாடகப் பயிற்சிப் பள்ளியில் சிறந்த நாடகத் தயாரிப்பாளர். நான் வயதில் மூத்தவனாக இருந்தபடியால் என்னை அந்தக் கலைத் தூதுக்குழுவின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

ரஷ்யா செல்லும்போது பாரதியின் கவிதை நாடகமான பாஞ்சாலி சபதத்தை எங்கள் குழு நடிகர்களைக் கொண்டு டேப்பில் ஒலிப்பதிவு செய்து எடுத்துப்போய் மாஸ்கோ வானொலி நிலையத்தில் கொடுத்தேன். அதற்கு அவர்கள் உடன் ஒரு தொகையையும் கொடுத்துவிட்டார்கள். இரு முறை பாஞ்சாலி சபதத்தை ஒலிபரப்பியதாக என் ரஷ்ய நண்பர் திரு. செம்பியன் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் வெளிநாட்டிலும் எனக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.

எனது நாடகக்கலை அனுபவத்தில் எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றாலும் திருச்சியில் 1959-ஆம் ஆண்டில் கலை இலக்கியப் பெருமன்றம் ஆதரவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடைபெறும்போது அவர்கள், செப்பேடு தகட்டில் “பாரதிக் கலைஞன்” என்று பொறுத்துக் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கரத்தால் பாராட்டி வழங்கச் செய்ததை நான் இன்னும் பெரிதாக மதித்துப் போற்றி வருகிறேன்.

பாரதியாருக்கு நாடக உணர்வுகள் மிகுதியாக இருந்திருக்கின்றன. பாஞ்சாலி சபதம் இரண்டாவது சூதாட்டச் சருக்கம் ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்து வருகிறது. அது நாடகக் கலைக்கு இலக்கணம் யாத்துள்ளதைப் போலுள்ளது. அதை இங்கே எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
கவிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ!
ஒளிவளருன் தமிழ்வாணீ! அடியேனேற் கிவையனைத்தும் உதவுவாயே!

நாடக உணர்வுகளைத் தட்டி எழுப்பவும் மஹா கவிஞர் தவறவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

நெருங்கிய உறவினர் கல்கி

என் தங்கையின் (அருணா) மூத்த மைத்துனரின் (விசு) இளைய மருமகளின் (சாரதா) அப்பாவின் கஸின் (அத்தான்? அம்மாஞ்சி? ஒன்று விட்ட அண்ணா/தம்பி?) ராம்நாராயணின் (முன்னாள் கிரிக்கெட் வீரர் உட்பட பல முகங்கள் கொண்டவர்) மனைவியின் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகி கௌரி ராம்நாராயண்) தாத்தா கல்கி!

ஆங்கிலத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கிறேன்.

I am Kalki’s granddaughter’s husband’s first cousin’s daughter’s father-in-law’s sister-in-law’s elder brother! Just 7 hops! MS is just a couple more hops away!

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

நாட்டுடமை ஆன எழுத்து: சி.பி. சிற்றரசு

சி.பி. சிற்றரசு தி.மு.க.வில் தீவிரப் பணியாற்றியவர். நாடகங்கள் பல எழுதி இருக்கிறார். புனைவுகள், அபுனைவுகள் – அதுவும் வெளிநாட்டு வரலாற்றை விளக்கி சில அபுனைவுகள் எழுதி இருக்கிறார். கட்சிக்காரர், நாலு புத்தகம் எழுதினார் என்று அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

சிற்றரசின் சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

அறுபதுகளில், ஏன் எழுபதுகளில் கூட பள்ளிகளில் விரும்பி நடிக்கப்பட்ட பல காட்சிகள் உடைய நாடகம் விஷக்கோப்பை. அதுவும் நான் படித்த பள்ளிகளில் வருஷாவருஷம் இதைதான் நடிப்பார்கள். சாக்ரடீசின் வாதங்கள் அப்படி ஒன்றும் அபூர்வமானவை இல்லை என்றாலும் இன்றும் படிக்க முடிகிறது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் இதை மட்டுமே பரிந்துரைப்பேன்.

மதி என்று ஒரு நாடகம் எழுதி இருக்கிறார். படுசுமார்.

இவற்றைத் தவிர சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் (வழக்கமான பிராமண எதிர்ப்பு), சாய்ந்த கோபுரம் (மாஜினியின் வாழ்க்கை வரலாறு) நூல்களும் படித்தேன். இவற்றை எல்லாம் யார் படித்தார்கள் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று இது போன்ற வரலாற்று அறிமுக நூல்களுக்குத் தேவை இருந்திருக்க வேண்டும். ராஜாஜி, சாமிநாத சர்மா, கே.ஆர். ஜமதக்னி எல்லாரும் எழுதி இருக்கிறார்கள், மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். 1906-இல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். கலைஞர் கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலத்தில் மேல்சபைத் தலைவர். திராவிடர் கழகம், திமுக, அதிமுக என்று அரசியல் பயணம்.

சிற்றரசுக்கு தரப்பட்டிருக்கும் கௌரவம் அதிகப்படியானது. வழக்கமான, நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லாத திராவிடக் கழக எழுத்து. விஷக்கோப்பை நாடகம் மட்டுமே என் கண்ணில் கொஞ்சம் பொருட்படுத்தக் கூடிய படைப்பு. என் பள்ளி நாட்கள் நினைவாலும், ஆரம்ப கால தமிழ் நாடகங்களில் எனக்குப் புதிதாகப் பிறந்திருக்கும் ஆர்வத்தாலும் படித்தேன். இப்படி ஏதாவது உங்களுக்கும் காரணம் இருந்தால் மட்டுமே படியுங்கள்…

தொகுக்கப்பட்ட பக்க்ம: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து

ஒபாமாவின் 2021 பரிந்துரைகள்

புத்தகம், இசை, திரைப்படப் பரிந்துரைகள். புத்தகப் பட்டியல் மட்டும் கீழே வசதிக்காக.

நான் இவற்றில் ஒன்றைக் கூட படித்ததில்லை. முக்கால்வாசி எழுத்தாளர்களைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. நீங்கள் யாராவது எதையாவது படித்திருக்கிறீர்களா?

  • Matrix — Lauren Groff
  • How the Word Is Passed — Clint Smith
  • The Final Revival of Opal & Nev — Dawnie Walton
  • The Lincoln Highway — Amor Towles
  • Invisible Child: Poverty, Survival & Hope in an American City — Andrea Elliott
  • Harlem Shuffle — Colson Whitehead
  • Cloud Cuckoo Land — Anthony Doerr
  • These Precious Days — Ann Patchett
  • Crying in H Mart — Michelle Zauner
  • Aftershocks — Nadia Owusu
  • Crossroads — Jonathan Franzen
  • The Love Songs of W.E.B. Du Bois — Honorée Fanonne Jeffers
  • Beautiful Country — Qian Julie Wang
  • At Night All Blood Is Black — David Diop
  • Land of Big Numbers — Te-Ping Chen
  • Empire of Pain — Patrick Radden Keefe
  • Project Hail Mary — Andy Weir
  • When We Cease to Understand the World — Benjamín Labatut
  • Under a White Sky: The Nature of the Future — Elizabeth Kolbert
  • Things We Lost to the Water — Eric Nguyen
  • Leave The World Behind — Rumaan Alam
  • Klara and the Sun — Kazuo Ishiguro
  • The Sweetness of Water — Nathan Harris
  • Intimacies — Katie Kitamura

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்