தேசபக்திப் பாடல்கள்

இன்று ஒரு esoteric விஷயத்தைப் பற்றி பதிவு. 1947-க்கு முன்னால் நாடகங்களிலும் தனிப் பாடல்களாகவும் தேசத் தலைவர்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பற்றி. இதற்கான உந்துதல் தமிழ் இணைய நூலகத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பல பாடல் புத்தகங்களால் ஏற்பட்டது. (எடுத்துக்காட்டாக: சர்தார் பகவத் சிங் தேசீய சங்கீர்த்தனம்)

எனக்கு பழைய தமிழ் நாடகங்களின் – பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் – மீது ஆர்வம் உண்டு. அவற்றை அந்தக் காலத்தில் விரும்பிப் பார்த்த ரசிகர்களின் மனநிலை, அவர்களின் அறிவுப்புலம் பற்றி கொஞ்சம் வியப்புண்டு. இன்று வசதிகளும் படிப்பும் உள்ள என்னை, என் தலைமுறையினரை விட கர்நாடக சங்கீதத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். மணிக்கணக்காக இசையை கேட்கும் பொறுமை உள்ளவர்கள்.

அவர்களின் அரசியல் அறிவு, நாட்டு நடப்பு பற்றி புரிதல் பற்றியும் எனக்கு குழப்பம்தான். “பண்டித மோதிலால் நேருவை பறிகொடுத்தோமே” என்று யாரோ ஒரு ராஜபார்ட் நாடகத்தில் பாடினால் அந்த நாடகத்தைப் பார்க்க காலணா அரையணாவுக்கு டிக்கெட் வாங்கி எங்கோ பின்னால் உட்கார்ந்து பார்க்கும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு யார் இந்த மோதிலால் நேரு என்று கேள்வி எழுந்திருக்குமா? அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்திருக்குமா? படிப்பறிவு குறைவான காலத்தில், செய்தித்தாள்கள் பரவலாகாத காலத்தில் இந்த செய்திகள் எல்லாம் கிராமங்களை எப்படி சேர்ந்தன?

காந்தியைப் பற்றி பாடல்கள் பிரபலமாக இருந்தன, அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் காந்தியை வைத்து நலங்கு, ஊஞ்சல் பாடல்கள் வரை எழுதி இருக்கிறார்கள். பகத்சிங் ஓரளவு பிரபலமாக இருந்தால் அதுவும் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. உள்ளூர் தலைவர்கள் ராஜாஜி பற்றி பாட்டுக்கள் எழுதப்பட்டால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர் கிச்லூ? மௌலானா ஷௌகத் அலி? சி.ஆர். தாஸ்? டி.எஸ்.எஸ். ராஜன்? இந்த நூலகத்தில் பார்த்த பாடல்களின் தலைவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. யார் யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அனுபந்தம் இருக்கிறது. (தந்துகூரி பிரகாசம், ருக்மிணி லக்ஷ்மிபதி, அன்றைய எம்.எல்.ஏ. அஞ்சலை அம்மாள், ரத்தினசாமி தேவர், கிருஷ்ணசாமி பாரதி…) நான் நினைப்பதை விட அதிகமாக தேசீய இயக்கம் கிராமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

இன்னொரு சுவாரசியம். யாரைப் பற்றி பாட்டு இருந்தாலும் அதில் காந்தி மகான் என்று இரண்டு வரி வந்துவிடுகிறது. அது காந்தீய வழியை நிராகரித்த பகத்சிங் பற்றிய பாட்டாக இருந்தாலும் சரி!

எனக்கு இந்தப் பாடல்கள் பற்றிய அறிமுகம் என் சிறு வயதில் மறைந்த இயக்குனர் ஏ.பி. நாகராஜன் நடத்திய ஒரு வானொலி நிகழ்ச்சியிலிருந்து கிடைத்தது. தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், மதுரகவி பாஸ்கரதாஸ், சாப்ஜான் போன்ற பேர்களை முதன்முதலாக அப்போதுதான் கேள்விப்பட்டேன். “கதர் கப்பல் கொடி தோணுதே” என்று எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய ஒரு பாடல் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பிற்காலத்தில் வெ. சாமிநாத சர்மா, டி.கே.எஸ். சகோதரர்கள், எஸ்.வி. சஹஸ்ரநாமம், தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் போன்றியவர்களின் பங்களிப்பைப் பற்றி அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். Truly fascinating.

காவல் துறை கெடுபிடி அதிகம், அதனால் கொஞ்சம் குறியீடாக சொல்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. கே.பி. சுந்தராம்பாள் வள்ளியாக வந்து வெள்ளைக் கொக்குகளை விரட்டினால், அது வெள்ளையர்களை விரட்டுவதாக புரிந்து கொண்டு கை தட்டி இருக்கிறார்கள். சஹஸ்ரநாமம் வாலீசனாக (William Wallace) நடித்து அரசுக்கு எதிராக புரட்சி செய்து தூக்கு தணடனை விதிக்கப்பட்டால் (பாணபுரத்து வீரன்) அது பகத்சிங்கை குறிப்பதாக சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடகத்தை காவல்துறை தடை செய்தால், உடனே நாடகத்தின் பேரை மட்டும் மாற்றி அதையே அரங்கேற்றி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் வெளிப்படையாகவும் எழுதி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக.

பூனை இது பூனை – இது
வெள்ளைக்காரப் பூனை
நம்மைக் கொல்ல வந்த பூனை

இந்தப் பதிவு எல்லாருக்கும் சுவாரசியப்படும் என்று தோன்றவில்லை. ஆனால் உங்களுக்கு ஏதாவது நினைவுகள், இல்லை கருத்துகள் இருந்தால் கட்டாயம் சொல்லுங்கள்

பின்குறிப்பு: பாடல் புத்தகங்களில் எனக்கு அதிசுவாரசியமாக இருந்தது விளம்பரங்கள். அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்டது கொக்கோகம் புத்தகம்! புத்தக விளம்பரங்கள் அந்தக் காலத்து “செக்ஸ்” புத்தகங்கள் பற்றிதான். “தாய்க்கிழவிகள் தளுக்கு”, “படுக்கை அறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லி”, அமிர்த சஞ்சீவி தாதுவிருத்தி லேகியம், ஜெகமெங்கும் புகழ் பெற்ற ஜெயலக்ஷ்மி கூந்தல் வளரும் பரிமளத் தைலம் என்று பல. காந்தியைப் பற்றிய பாடல் புத்தகத்தில் இந்த மாதிரி ஒரு விளம்பரம் வருவதின் நகைமுரணை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மதிமோசக் களஞ்சியம் என்ற புத்தக விளம்பரத்தில் வழக்கமான “தேவடியாள் மோசம்”, “தட்டுவாணி மோசம்”, “மார்வாடி மோசம்”, தவிர “மூர்மார்க்கெட் சன்னியாசிகள் மோசம்”, “திருப்பதி போகும் உத்தியோகஸ்தர் மோசம்” என்று வருகிறது, அது என்னடா மோசம் என்று மண்டையைக் குடைகிறது!

அண்டப் புளுகனை அதட்டி ஆகாயப் புளுகனை விரட்டி திடீர் புளுகனை துரத்தி ஜண்டப் புளுகன் வண்டிப் புளுகன் மதராஸ் புளுகன் முதலிய பிரபல புளுகர்களை ஜெயித்து புளுகர்களுக்கு அரசனாக விளங்கிய நிமிஷப் புளுகனை வென்ற நிஜப்புளுகன்

என்ற புத்தகத்தை படிக்க உண்மையிலேயே ஆவலாக இருக்கிறது. அது என்னங்க நிஜப்புளுகன்!

பின்குறிப்பு 2: காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது இன்றே கஷ்டம். அன்றைய ஆசிரியரின் ஆங்காரம்!

உண்மையாய் ஒருவனுக்கு உத்தமி பெற்றிருந்தால்
அன்புடன் எனது நூலை அச்சிட மனதில் எண்ணான்
முன்னூறு பேர் சேர்ந்து மூதாரி முண்டை பெற்றால்
என் நூலை அச்சிட எண்ணம் கொள்வான்தானே

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

மீண்டும்…

மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. என் குறைகள் பூதாகாரமாகத் தெரிகின்றன, வாழ்க்கையில் ஒன்றுமே கிழிக்கவில்லை, இதில் பதிவு போட்டு ஏன் என் நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணடிக்கிறோம் என்று தோன்றுகிறது.

ஏன் படிக்கப் பிடிக்கும் என்று நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மேற்கோள் கிடைத்தது. என் சிறு வயது புத்தகப் பித்தை நினைத்து புன்முறுவல் கொள்ள வைத்தது. எங்கே படித்தேன் என்பதுதான் நினைவில்லை, படித்ததை எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன்.

My love for books sprang from my need to escape the world I was born into, to slide into another where words were straightforward and honest, where there was clearly delineated good and evil, where I found (boys) and girls who were strong and smart and creative and foolish enough to fight dragons, to run away from home to live in museums, to become child spies, to make new friends and build secret gardens.

இத்தனை வயதாகியும் இன்னும் அந்த சிறுவன் எங்கோ என்னுள்ளே இருக்கிறான், அதனால்தான் இன்னும் ஹாரி பாட்டர் உள்ளிட்ட Young Adult புத்தகங்கள், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள் எல்லாவற்றையும் படிக்கப் பிடிக்கிறது. வால்டர் மிட்டியும் சுப்பையா பிள்ளையும் அதனால்தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஆரம்பித்துத்தான் பார்ப்போமே, எத்தனை நாள் ஓடுகிறதோ ஓடட்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: சிசிஃபஸ்

பீட்டர் ப்ரூக்: அஞ்சலி

பிரபல நாடக, திரைப்பட இயக்குனர் பீட்டர் ப்ரூக் நேற்று மறைந்தார்.

பீட்டர் ப்ரூக்கை நான் மகாபாரத நாடக/திரைப்பட இயக்குனராக மட்டுமே அறிவேன். அவரது ஒன்பது மணி நேர திரைப்படம் (நாடகத்தின் ஒளி வடிவம் என்றும் சொல்லலாம்) மகாபாரதத்தை வேற்று கலாசாரத்தவர் எப்படி உள்வாங்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சமாவது புரிய வைக்கும்.

யோசித்துப் பாருங்கள், நாம் – குறைந்தபட்சம் என் தலைமுறை இந்தியர்களுக்கு – பீமன் யார், அர்ஜுனன் யார், திரௌபதி யார், கிருஷ்ணன் யார், ராமனும் ராவணனும் அனுமனும் யார் யார் என்றெல்லாம் விளக்க வேண்டியதில்லை. எந்த வித சிரமமும் இல்லாமல் அவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறோம். அர்ஜுனன் வில்லு என்று பாட்டு ஆரம்பித்தால் அது யாருப்பா அர்ஜுனன் என்று கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் ஒரு சராசரி ஐரோப்பியருக்கு இதெல்லாம் முடியாது அல்லவா?

ப்ரூக்கின் சவால் அதுதான். மகாபாரதம் போன்ற ஒரு சிக்கலான கதைப்பின்னல் உள்ள கதையை மேலை நாட்டு பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அதை தான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மகாபாரதத்தை இலக்கியமாக அணுகுவதா, மதச்சார்புள்ள தொன்மமாக அணுகுவதா, கிருஷ்ணனின் மாயாஜாலங்களை எப்படி விளக்குவது என்பதை எல்லாம் மனதில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்பது மணி நேரம் (இடைவேளைகளுடன் 11 மணி நேரம்) உட்கார்ந்து பார்ப்பது என்பது மேலை நாட்டவருக்கு மட்டுமல்ல, நமக்குமே சிரமம்தான். ஒன்பது மணி நேரம் பார்வையாளர்களை கட்டிப் போடுவது என்பது அசாதாரணம். ஆனால் ஒன்பது மணி நேரம் என்பது மகாபாரதத்துக்கு மிகக் குறைவு. அந்த ஒன்பது மணி நேரத்தில் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியத்தின் சாரத்தை புரிய வைக்க வேண்டும். நம்மூர் என்றால் பாரதத்தில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம், போரிலிருந்து ஆரம்பிக்கலாம், யாருக்கும் பின்புலம் என்ன, முன்கதை என்ன என்று தெரியும். அதுவும் முடியாது.

ப்ரூக் அந்த சவாலை வென்றிருக்கிறார். பாரதத்தை எனக்கு திருப்தியாக காட்டிய ஒரே நாடக/திரைப்பட வடிவம் இதுதான் பி.ஆர். சோப்ரா மகாபாரதம் கலாபூர்வமான வெற்றி அல்ல, ஆனால் அதுவே இந்திய முயற்சிகளில் சிறந்தது என்று கருதுகிறேன். மாயாபஜார் போன்ற திரைப்படங்கள் சிறு பகுதியை, கிளைக்கதையை காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அவை முழுவடிவம் இல்லை. எனக்கு மகாபாரதப் பித்து நிறையவே உண்டு, தானவீரசூர கர்ணா மாதிரி காலாவதி ஆகிவிட்ட மிகை நடிப்பு திரைப்படங்களையும் விடமாட்டேன், அதனால் என் வெற்றி தோல்வி கணிப்பை எல்லாம் ரொம்ப நம்பக் கூடாது.

ப்ரூக் பாத்திரங்களுக்கு இந்தியர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. என் நினைவு சரி என்றால் திரௌபதியாக நடித்த மல்லிகா சாராபாய் மட்டுமே இந்தியர். (சாராபாயின் நடிப்புக்கு ஒரு ஜே!) பீமனாக, பீஷ்மராக நடித்தவர்கள் கறுப்பர்கள் என்று நினைக்கிறேன். அர்ஜுனன் ஐரோப்பிய நடிகர். துரோணர் ஜப்பானியர் என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இது வெறும் gimmick மட்டுமே. ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் மகாபாரதம் உலகத்தின் பொக்கிஷம் என்பதை வலியுறுத்தவும் செய்கிறது.

ப்ரூக் ஆஸ்கர் விருது பெற்ற ழான்-க்ளாட் காரியருடன் கிட்டத்தட்ட பத்து வருஷம் இந்த நாடகத்தை உருவாக்க உழைத்திருக்கிறார். இந்தியாவின் பல இடங்களில் பல வடிவங்களைப் பார்த்து படித்து ஆராய்ந்திருக்கிறார். குறிப்பாக கேரள கதகளி வடிவங்கள், தமிழகத்தின் தெருக்கூத்து வடிவங்களை இவருக்கும் காரியருக்கும் பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. காரியர் இந்த அனுபவங்களை Big Bhishma in Madras புத்தகத்தில் சுவாரசியமாக (குறைந்தபட்சம் எனக்கு சுவாரசியமாக) விவரித்திருக்கிறார். 1985-இல் நாடகம் ஃப்ரெஞ்சு மொழியில் அரங்கேறி இருக்கிறது. நாடகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 16 நடிகர்கள். நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களி ஏற்று நடித்திருக்கிறார்கள். முன்னர் சொன்ன மாதிரி ஒன்பது மணி நேர நாடகம், இடைவேளைகளுடன் சேர்த்து 11 மணி நேரம்.

நாடகம் நான்கு வருஷங்கள்தான் நடந்திருக்கிறது. 1987-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வருஷம். நாடகத்தில் மூன்று பாகங்கள் – Game of Dice, Exile in the Forest, War. 1989-இல் தொலைக்காட்சி தொடராக ஆறு மணி நேர நிகழ்ச்சியாக சுருக்கப்பட்டிருக்கிறது. பிறகு மூன்று மணி நேர திரைப்படமாக சுருக்கப்பட்டிருக்கிறது. நான் பார்த்தது தொலைக்காட்சித் தொடர் என்று நினைக்கிறேன், மூன்று மணி நேரம் அளவு சின்ன நிகழ்ச்சி இல்லை.

மகாபாரதத்தை மேலை நாட்டவருக்கு “மொழிபெயர்க்கும்” முயற்சியில் அதன் சாரத்தை விட்டுவிட்டார், இது தோல்வி, ப்ரூக்கின் காலனிய மனப்பான்மைதான் தெரிகிறது என்றெல்லாம் சில விமர்சனங்களைப் பார்த்திருக்கிறேன். நான் அவற்றை வன்மையாக மறுக்கிறேன். வியாசரே மகாபாரதத்தை முழுமையாக எழுதவில்லை என்று குறை சொல்லலாம், ப்ரூக் தனக்கென வகுத்துக் கொண்ட நேரத்தில் பாரதத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

மீண்டும் ஒரு முறை; இலியட், ஆடிஸி, பியோவுல்ஃப், கில்கமேஷ் போன்ற காவியங்களில் அகச்சிக்கல்கள் குறைவு. பியோவுல்ஃப் எல்லாம் பீமன், பகாசுரன், இடும்பன் மாதிரி நாலு பேர் மட்டுமே உள்ள ஒரு காவியத்தை எழுதுவது போலத்தான். இத்தனை குறைந்த நேரத்தில் மகாபாரதத்தின் சாரத்தை புரிய வைப்பது உலக மகா கஷ்டம். அதில்தான் ப்ரூக் வெற்றி பெற்றிருக்கிறார்.

ப்ரூக் பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள், Lord of the Flies உள்ளிட்ட பல நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மகாபாரத இயக்குனர் என்பதைத் தாண்டி நான் அதிகம் அறியேன். குருக்ஷேத்திரப் போரை மையமாக வைத்து Battlefield என்று ஒரு நாடகத்தையும் எழுதி இயக்கி இருக்கிறாராம், அதையாவது பார்க்க/படிக்க வேண்டும்.

ப்ரூக்க்கு 2021-இல் பத்மஸ்ரீ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த அரசுக்கு ஒரு ஜே! இத்தனை நாள் தாமதத்துக்கு ஒரு boo!

நானே சிலிகன்ஷெல்ஃபில் எழுதுவதை சில மாதங்களாக நிறுத்தி வைத்து ஏறக்குறைய வனவாசத்தில்தான் இருந்தேன். ஆனால் பீட்டர் ப்ரூக் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உத்வேகம்…


தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், மகாபாரதம்

தொடர்புடைய சுட்டிகள்:
தொலைக்காட்சித் தொடர்
பீட்டர் ப்ரூக் விக்கி குறிப்பு