ராம்நாராயண்: Third Man – ரஞ்சி கிரிக்கெட் நினவுகள்

எனக்கு கிரிக்கெட் பற்றி பிரக்ஞை ஏற்பட்டது 1975 பொங்கல் சமயத்தில் சென்னையில் நடந்த கிரிக்கெட் மாட்சின்போது. யாரென்றே தெரியாத ஒருவர் வீட்டில் மந்தைவெளியில் டிவியில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்த்தேன். டிவியைப் பார்ப்பதே அதுதான் வாழ்க்கையில் முதல் முறை. ஆங்கிலமும் புரியவில்லை. கிரிக்கெட்டும் தெரியாது. ஸ்க்வேர் லெக், ஃபைன் லெக் என்றால் எத்தனை கால்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒன்றுமே தெரியாவிட்டாலும் விஸ்வநாத் விளையாடுவது வேறு லெவலில் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அன்றிலிருந்து நான் தீவிர விஸ்வநாத் விசிறி.

நாங்கள் அப்போது மானாம்பதி என்ற கிராமத்தில் வசித்தோம். நண்பர்கள் கிரிக்கெட் ஆட முயற்சித்து தோல்விதான். மட்டை, பந்து எல்லாம் வாங்க காசு ஏது? எப்போதாவது உடற்பயிற்சி ஆசிரியர் அந்தோணிசாமி பழைய பிய்ய ஆரம்பித்துவிட்ட பேஸ்பால் பந்தை எங்களுக்குக் கொடுத்தால் அது முழுதும் பிய்ந்து இரண்டு பாதிகள் ஆகும் வரை – இரண்டு மூன்று நாள் – விளையாடுவோம். (அதிசயமாக பேஸ்பால் எங்கள் பள்ளியில் விளையாடப்பட்டது) எங்களுக்கு கில்லிதாண்டுதான் சாஸ்வதம்.

ஆனால் விஸ்வநாத் உபயத்தில் கிரிக்கெட் மனதைக் கவர்ந்துவிட்டது. கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள இரண்டே வழிகள்தான். ஹிந்து பத்திரிகை, ரேடியோ. ஹிந்து பத்திரிகையின் பத்திகளை திருப்பி திருப்பிப் படித்திருக்கிறேன். எப்போதாவது பழைய ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைம் பத்திரிகை கிடைத்தால் பொக்கிஷமாக வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு ஆங்கிலம் சரளமாகப் படிக்க வந்ததற்கு ஹிந்து பத்திரிகையின் கிரிக்கெட் பத்திகள்தான் முதல் காரணம்.

அப்போதெல்லாம் ரஞ்சி போட்டி பற்றி எல்லாம் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். நியூசிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் சென்ற குழுவில் சுதாகர் ராவை தேர்ந்தெடுத்ததற்கு பதில் மைக்கேல் டால்வியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று என் அப்பாவிடம் கத்தி போய் படிக்கற வேலையைப் பாருடா என்று திட்டு வாங்கியதெல்லாம் நினைவிருக்கிறது. முதன்முதலாக் தமிழில் ரஞ்சி போட்டி ஒன்றுக்கு – தமிழ்நாடு vs கர்நாடகா – தமிழில் கமெண்டரி கேட்டு புல்லரித்துப் போனதெல்லாம் உண்டு. அந்த கமெண்டரியில் இன்னும் சில வரிகள் நினைவிருக்கின்றன – “சந்திரசேகர் மட்டையை மிக அழகாக சுற்றினார். ஒரே ஒரு பிரச்சினை பந்து மட்டையில் படவில்லை”, “பாண்டவர்களுக்கு அர்ஜுனன் போல கர்நாடகாவுக்கு விஸ்வநாத்”.

ராம்நாராயணின் கிரிக்கெட் பத்திகள் அந்தக் காலகட்டத்தை மிக அழகாக விவரிக்கின்றன. சுமாராகவே எழுதி இருந்தாலும் நாஸ்டால்ஜியாவால் இந்தப் புத்தகம் மனதைக் கவர்ந்திருக்கும். ராமோ born raconteur. கடந்துபோன ஒரு காலத்தை மிக அருமையாக விவரிக்கிறார்.

ராம் எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னணி offspinner. அவரது காலகட்டம் சுழற்பந்து வீச்சாளர்களின் பொற்காலம். பேடியும் பிரசன்னாவும் சந்திரசேகரும் வெங்கடராகவனும் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்கள். ஷிவால்கர், கோயல், வி.வி. குமார், ஹன்ஸ், இவர், ஏன் பின்னாளில் விளையாடிய திலிப் தோஷி உட்பட்ட பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளே நுழையவே முடியவில்லை. அதுவும் பிரசன்னா, வெங்கட் இருவருமே offspinner-கள். அவர்கள் இரண்டு பேரும் இடத்தை காலி செய்தால்தான் இவருக்கு வாய்ப்பு. அப்படி ஒரு சின்ன window கிடைத்தபோது அதை ஷிவ்லால் யாதவ் தட்டிக்கொண்டு போய்விட்டார். இளைஞர் என்று அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ராமின் புத்தகத்துக்கு Third Man என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது அவர் ப்ரசன்னா, வெங்கட்டுக்கு அடுத்த படியில் இருந்த offspinner, ஆனால் அவரால் மேலே ஏற முடியவே இல்லை என்பதை குறிக்கத்தான்.

ரஞ்சியில் கூட வாய்ப்பு கிடைக்க ராம் பெரிதும் போராட வேண்டி இருந்தது. ஏறக்குறைய இவரது சமவயதினரான வெங்கட் தமிழகத்தில் நிலைபெற்று விட்டார். சீனியர் வி.வி. குமாருக்கு இன்னொரு இடம் போய்விட்டது. ராம் ஆந்திராவில் வங்கி ஊழியராக சேர்ந்தார். ஆனால் ஹைதராபாத் அணியிலும் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. நௌஷேர் மேத்தா என்ற இன்னொரு offspinner அப்போது ஹைதராபாத் அணிக்கு நன்றாகவே விளையாடினார். க்ளப் போட்டிகளில் தான் வேலை பார்த்த வங்கிக்கு விளையாடுவார். அதிலும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்காது. கடைசியாக ரஞ்சிக்கு அடுத்த நிலை போட்டி ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதைப் பிடித்துக் கொண்டு ரஞ்சிக்குப் போனார்.

ராம் ரஞ்சி போட்டிகளில் ஒரு ஐந்தாறு வருஷம் கலக்கினார். ஆனால் என்ன கலக்கி என்ன பயன்? அப்போதெல்லாம் இரண்டு அணிகள் மட்டுமே ரஞ்சியின் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். தென்னிந்தியாவில் மூன்று வலிமையான அணிகள் இருந்தன. தமிழ்நாடு, ஹைதராபாத், கர்நாடகா மூன்றில் எந்த இரண்டு அடுத்த நிலைக்கு செல்லும் என்பது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அடுத்த நிலைக்குப் போனால் வருஷத்துக்கு ஏழெட்டு மாட்சுகள் விளையாடலாம். போகாவிட்டால் ஐந்தாறுதான். அதில் என்னதான் பிரமாதமாக விளையாடினாலும் முப்பது விக்கெட் எடுக்கலாம், அவ்வளவுதான். நிலைபெற்றுவிட்ட பேடி, சந்திரசேகர், பிரசன்னா, வெங்கட் ஆகியோரை தாண்ட முடியாது.

என் கண்ணில் ராமுக்கு 1978-79-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவோ (அதுவும் சென்னையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்), குறைந்தபட்சம் 1979-80-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவோ அல்லது பாகிஸ்தானுக்கு எதிராகவோ வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அப்போது 32-33 வயது இருக்கும். அந்த வயதுக்காரரான தோஷிக்கு வாய்ப்பு தரப்பட்டது, அவரும் அதை தக்க வைத்துக் கொண்டார். இவருக்கு பதிலாக இளஞரான ஷிவ்லால் யாதவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பினார். அப்போதாவது இவருக்கு ஒரு சின்ன வாய்ப்பு தரப்பட்டிருக்கலாம். விளையாட்டில் வாய்ப்பு கிடைக்காமல் போவது சாதாரணமான, குரூர நிகழ்ச்சி.

ஆனால் ராம் ஹைதராபாத்துக்கு விளையாடிய காலம் மிகச் சிறந்த ஆளுமைகள் ஹைதராபாத்துக்கு விளையாடிய காலம். ஜெயசிம்ஹா, பட்டோடி ஆகியோரின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அபிட் அலி, நரசிம்மராவ் போன்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ராமுக்கு இவர்கள் மீது அன்பு, மரியாதை, பக்தி, நட்பு எல்லாம் நிறைய. பெரிய பந்தம் உருவாகி இருக்கிறது. அதிலும் ஜெய், பட்டோடி, அபிட் அலி போன்றவர்கள் காரக்டர்கள். அவர்களின் ஆளுமையை மிக அருமையாக விவரிக்கிறார்.

அவர் விளையாடிய காலம் அமெச்சூர் கிரிக்கெட்டின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ரஞ்சி கோப்பை போட்டிகளை விடுங்கள், க்ளப் லெவல் போட்டிகளுக்குக் கூட கூட்டம் அம்மும். ஆனால் பொருளாதார ரீதியில் பெரிதாக லாபம் இல்லை. ஏதாவது அரசுப் பணி, வங்கிப் பணி என்று கிடைக்கும். ராம் தான் மும்முரமாக கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கூட வங்கிப் பணியையும் செய்ய வேண்டி இருந்ததை இயல்பாக விவரிக்கிறார்.

ராம் ஒரு பிறவி கதைசொல்லி. ரஞ்சி நினைவுகளை விடுங்கள், கல்லூரி லெவல் கிரிக்கெட், க்ளப் லெவல் கிரிக்கெட் போன்றவற்றைக் கூட சுவாரசியமாக விவரிக்கிறார்.

ராமின் சகோதரர் சிவராமகிருஷ்ணன் இவரை விட கொஞ்சம் அதிர்ஷ்டக்காரர். ரஞ்சியில் விளையாட அவர் பெரிதாக போராடவில்லை. ஆனால் அவருக்கும் டெஸ்ட்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராம் எனக்கு தூ………ரத்து உறவினரும் கூட.

என் கணிப்பில் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பைத்தியங்களுக்கு மட்டுமானதல்ல. நாஸ்டால்ஜியாவால் மனம் உருகுபவர்களுக்கு மட்டுமானதல்ல. கடந்து போன ஒரு உலகத்தை காட்டுகிறது. அது எல்லாருக்குமே பிடிக்கும் என்றுதான் கணிக்கிறேன். கிரிக்கெட் பைத்தியம் இருந்தால், ரஞ்சி கிரிக்கெட் முக்கியமாக இருந்த காலகட்டத்தில் நீங்கள் வளரிந்திருந்தால் இன்னமும் ரசிப்பீர்கள், அவ்வளவுதான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட் பக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.