மீள்மீள்பதிவு, இந்த முறையும் தேதி தவறிவிட்டது. அக்டோபர் 2 அன்று பதிக்க நினைத்திருந்தேன்…
(மீள்பதிவு, காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று மீள்பதிக்க நினைத்திருந்தேன், தவறிவிட்டது)
சமீபத்தில் படித்த கட்டுரை. மனதைக் கவர்ந்த ஒன்று.
டூஃபான் ரஃபாய் 1921-இல் ஏழை பக்கிரி குடும்பத்தில் பிறந்தவர். காந்தியை சிறு வயதில் சந்தித்திருக்கிறார். இரண்டு விரல்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். எப்படியோ கலை பயின்றிருக்கிறார். வேலைக்குப் போயிருக்கிறார், ஓய்வும் பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பின்னர், 1979 வாக்கில், அவருக்கு 58-59 வயது இருக்கும்போது ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் கண்ணில் தற்செயலாகப் பட்ட ஒரு சிறு புத்தகம் – வனஸ்பதியோன் நூ ரங் – அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. காந்தி எழுதிய புத்தகம்! எதைப் பற்றி? இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு, வேதிப் பொருட்கள் (chemicals) சேர்க்காமல் வண்ணங்களை உற்பத்தி செய்வது பற்றி! கதர் துணிகளுக்கு செயற்கைச் சாயங்களை வைத்து வண்ணம் தருவதை காந்தி விரும்பவில்லையாம், அதனால் இயற்கைச் சாயங்களைப் பற்றி யோசித்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். டூஃபானுக்கு இந்தப் புத்தகம்தான் கீதை, குரான், பைபிள் எல்லாமே.
புத்தகம் கண்ணில் பட்ட நாளிலிருந்து டூஃபான் இலை, வேர், மரப்பட்டை, பூ, வெங்காயச் சருகு, மாதுளம் விதை இன்ன பிறவற்றிலிருந்து சாயங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றை வைத்து ஒரு புடவைக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார். அது இந்திரா காந்தியிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. டூஃபானுக்கும் அவரது சாயங்களுக்கும் கிராக்கி அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சாயம் தயாரிப்பது, துணிகளுக்கு வண்ணம் தருவது ஆகியவற்றை கற்றுத் தந்திருக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கைச் சாயங்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு சாயம் பசு மூத்திரத்திலிருந்து!
92 வயதில்தான் – மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்னால்தான் இறந்திருக்கிறார். அவரது பேட்டியை, குறிப்பாக பள்ளி மாணவனாக காந்தியை சந்தித்தது பற்றிய பகுதியைத் தவற விடாதீர்கள்! காந்தி ‘ஏண்டா என் உயிரை வாங்குகிறாய்’ என்று அலுத்துக் கொள்வதும், ஏழைச் சிறுவன் ஒரு தொப்பிக்கு மேல் ஒருவரிடம் எப்படி இருக்க முடியும் என்று குழம்புவதும் மிக அருமையாக விவரிக்கப்படுகின்றன.
காந்தியைப் பற்றிய வியப்பும் பிரமிப்பும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தலைக்கு மேலே வேலை, இந்தியா மாதிரி பெரிய நாட்டின் பெரிய பிரச்சினைகள் தோள் மேலே பாரமாகக் குவிந்திருக்கின்றன, இத்தனைக்கு நடுவில் இந்தாள் மலம் அள்ளுவது, துணிக்கு சாயம் போடுவது, இயற்கை வைத்தியம், கதர், ராட்டை என்றெல்லாம் யோசித்து அதை செயல்படுத்தியும் இருக்கிறார்! அவரது சிந்தனைகளின் தாக்கத்தால் எத்தனை பேர், எத்தனை துறைகளில் இப்படி மன நிறைவோடு சாதித்திருக்கிறார்கள்! வனஸ்பதியோன் நூ ரங் புத்தகத்தைப் படித்தேன், அதில் உள்ள கருத்துக்களை செயல்படுத்தினேன், அவ்வளவுதான் என் வாழ்க்கை, என் சாதனை என்று ரஃபாய் சாப் சொன்னதைப் படித்ததும் மனதில் ஆங்கிலத்தில் politicaly incorrect வாக்கியம் ஒன்றுதான் ஓடிற்று. அதைத்தான் ‘வக்காளி இந்தாளு மனுசந்தானா!’ என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறேன். 🙂
வாழ்க்கை மிக எளிமையானது, சுலபமானது, அற்புதமானது. அதை காந்தி முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். நம் போன்ற சராசரிகள்தான் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம், நம்மால் முடிந்தவற்றில் ஒரு சதவிகிதம் கூட செய்வதில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்
தொடர்புடைய சுட்டி: டூஃபான் ரஃபாயின் பேட்டி
நானும் இது குறித்து எழுதியிருக்கிறேன். மிக அற்புதமான மனிதர் காந்தி.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.
அருமை. எல்லாமே.
LikeLike