தேவன்: ஸ்ரீமான் சுதர்சனம்

என் கணிப்பில் தேவன் இலக்கியம் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் அல்லர். அவருக்கு விகடன் வாசகர்களுக்கு பிடித்த வகையில் எழுத வேண்டும் என்பதுதான் நோக்கம். வணிக எழுத்தைத் தாண்டி எழுத வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் அவர் திறமை உள்ள எழுத்தாளர். அதனால் சில சமயம் வாரப் பத்திரிகைகளின் வரம்புகளை அவரால் மீறி இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், சில சமயம் குழந்தைகளின் விவரிப்புகள், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகியவை என் கண்ணில் minor classics.

ஸ்ரீமான் சுதர்சனம் என்னைக் கவர முக்கியமான காரணம் அதில் விவரிக்கப்படும் பற்றாக்குறை பிரச்சினை நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டிருப்பதுதான். குடும்பம் நடத்த பணப் பற்றாக்குறை என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரிந்த, நானே உணர்ந்த பிரச்சினைதான். சுதர்சனம் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற, தன்/மனைவியின் குடும்பத்தினருக்காக எதிர்பாராத செலவுகளை ஏற்றுக் கொள்ள படும் சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தது. எந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் இது நன்றாகவே புரியும். அந்த உண்மையான சித்திரத்துக்காகவே இந்தப் புத்தகத்தை மேலாக மதிக்கிறேன்.

சுஜாதா கூட இதுதான் தனக்குப் பிடித்த தேவன் புத்தகம் என்று எங்கோ சொல்லி இருக்கிறார். அவரும் பணக் கஷ்டத்தை சந்தித்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

என்ன கதை? சுதர்சனம் 125 ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தா. அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு சரியான அங்கீகாரம் இல்லை, அவன் மேலதிகாரி கங்காதரம் பிள்ளை அவனை கொஞ்சம் அமுக்கி வைத்திருக்கிறார். பணப் பற்றாக்குறை. கொஞ்சம் வசதி உள்ள வீட்டுக்கு வாடகைக்கு போக ஆசை, ஆனால் கட்டுப்படி ஆகாது. கடைசியில் அலுவலகத்த்ல் திருடுகிறான். அவன் அதிர்ஷ்டம், அந்தத் திருட்டு நிறுவனம் தள்ளுபடி செய்யும் ஒரு கடனில் அது அமுங்கிவிடுகிறது. மனைவியின் பெற்றோர் மருத்துவம் செய்து கொள்ள ஊரிலிருந்து வருகிறார்கள். செலவு அதிகரிக்கிறது, மீண்டும் திருடுகிறான். மாமியார் மாமனாருக்கு செலவழிக்கிறான், நமக்கு செலவழித்தால் என்ன என்று இவன் உறவினர் ஊரிலிருந்து வருகிறார்கள். மீண்டும் திருட்டு. இதற்குள் முதலாளிக்கு அவன் வேலையின் தரம், உழைப்பு எல்லாம் தெரிய வருகிறது. ஒரு திருட்டிலிருந்து 80000 ரூபாயை வேறு காப்பாற்றுகிறான். அவனுக்கு முதலாளி 2000 ரூபாய் பரிசு தருகிறார். சுதர்சனத்துக்கு மனம் உறுத்துகிறது. தன் குற்றத்தை ஒத்துக் கொள்கிறான், பரிசை மறுக்கிறான். முதலாளி எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார். அவனை மன்னித்து உத்தியோக உயர்வும் தருகிறார்.

கதையின் பிரமாதமான உத்தி செலவுகளை பட்டியல் போடுவதுதான். என்ன செலவு, எத்தனை ரூபாய் தேவை என்று மீண்டும் மீண்டும் விவரிப்பதுதான். மனைவி கணவனோடு அன்னியோன்னியமாக இருந்தாலும் பணப் பிரச்சினைகளை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதும் உண்மையான சித்தரிப்பு. என் தலைமுறையில் கூட புருஷன் என்ன சம்பாதிக்கிறான் என்று தெரியாத மனைவிகள் உண்டு.

கடைசியில் deux ex machina ஆக முதலாளி மன்னிப்பது கூட செயற்கையாகத் தெரியவில்லை. அதிலும் சுதர்சனம் தான் புதிய நிறுவனத்தில் வேலைக்குப் போவதாக நினைத்திருக்க, அந்த நிறுவனத்தின் “முதலாளி” சுதர்சனத்தின் வேலைக்கு மனு போட்டிருப்பது நல்ல டச்!

அன்றைய வணிகப் பத்திரிகைகளின் கல்கி உட்பட்ட மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் தேவனின் பாத்திரங்கள் ஓரளவு நிஜமானவை. இதிலும் சுதர்சனம், அவனது உறவினர்கள், மாமனாருக்கு கண் வைத்தியம் பார்க்கும் மருத்துவர், முதலாளி பரமேஸ்வர முதலியார், மேலதிகாரி கங்காதரம் பிள்ளை என்று பலரும் உண்மையான் பாத்திரங்கள். நாகநந்தி போன்ற அதீதங்கள் கிடையாது. லட்சியம் பேசிக் கொண்டு பூமிக்கு இரண்டு அங்குலம் மேலேயே நடப்பவர்கள் இல்லை. (ஆனால் தேவனின் நாவல்களில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் நிறையவே உண்டு…)

ஸ்ரீமான் சுதர்சனம் 1951-52 வாக்கில் எழுதப்பட்ட நாவல் (என்று நினைக்கிறேன்.) அப்போது மாதம் 125 ரூபாய் என்பது சென்னை நகரத்தில் கணவனும் மனைவியும் வாடகை கொடுத்து வாழ்வதற்கே பத்தாது என்றால் வியப்புதான். 1960களில் ஆசிரியை வேலைக்குப் போன என் அம்மாவுக்கு இளம் வயது கனவே 100 ரூபாய் சம்பளம்தான். எழுபதுகளின் இறுதியில் கூட என் அத்தை பெண்கள் 300-400 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். சுகவாழ்வுக்கு வாய்ப்பில்லை, ஆனால் இத்தனை பற்றாக்குறையா என்று தோன்றியது.

ஸ்ரீமான் சுதர்சனம் எனக்குப் பிடித்த தேவன் படைப்புகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பக்கம்: தேவன் பக்கம்