லூயி லமூர் எழுதிய கௌபாய் (Western) சாகச நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.
லமூர் பல சாக்கெட் பெருகுடும்ப (clan) எழுதி இருக்கிறார். அவற்றின் பின்புலமாக கற்பனை வரலாறு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சுருக்கமாக – அயர்லாந்திலிருந்து 1600களிலேயே அமெரிக்காவுக்கு குடியேறும் சாக்கெட்கள் பல்கிப் பெருகுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக நிலம் தேடி அலைபவர்கள். வந்த சண்டைகளை விடாதவர்கள். துப்பாக்கிகளை நன்றாக பயன்படுத்தக் கூடியவர்கள், காடு, மலை என்று வாழ்வதை விரும்புபவர்கள்.
இப்போது 1800கள். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு. டெல் சாக்கெட் அரிசோனா பக்கம் settle ஆக விரும்பி தன் புது மனைவி ஆங்கேயுடன் சென்று கொண்டிருக்கிறான். அவனுக்கு இரண்டு தம்பிகள், இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். திடீரென்று அவனை சுடுகிறார்கள், அவன் அறுநூறு அடி கீழே உள்ள ஆற்றில் விழுகிறான். அவனைத் தேடி வருபவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறான், இரண்டு பெயர்கள் மட்டும் காதில் விழுகிறது. எப்படியோ பிழைத்து வந்தால் அவன் மனைவி கொல்லப்பட்டிருக்கிறாள், அவனது குதிரைகளையும் காணோம். வண்டி எரிக்கப்பட்டிருக்கிறது. மனைவியின் அழகில் மயங்கி யாரோ அவளை பலவந்தப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள், அவள் இணங்காததால் கொல்லப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. அந்த வில்லன் ஒரு “பண்ணையார்”, தன்னை டெல் கொல்லப் பார்த்ததாக பொய் சொல்லி தன்னிடம் வேலை பார்க்கும் கௌபாய்களை கிளப்பிவிடுகிறான். தங்கள் முதலாளியை கொலை செயய் முயற்சி செய்த டெல் சாக்கெட்டைக் கொல்ல எல்லாரும் துடிக்கிறார்கள். டெல் தன் மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறான். லமூரின் உலகத்தில் பெண் கொலையைப் – அதுவும் வெள்ளைத்தோல் பெண் கொலையைப் போன்ற கொடிய செயல் வேறெதுவும் இல்லை. அதனால் சில பேர் டெல் சாக்கெட்டை கொல்ல எடுக்கும் முயற்சி சரிதானா என்று ஊசலாடுகிறார்கள்.
இது வரை சர்வசாதாரணமான கதைதான். ஆனால் கதை குறிப்பிட வேண்டிய ஒன்றாக மாறுவது இங்கேதான். ஏதோ ஒரு சாக்கெட்டுக்கு பிரச்சினை என்று அரசல்புரசலாக செய்தி பரவுகிறது. எங்கோ சீட்டாடிக் கொண்டிருக்கும் ஆர்லாண்டோ சாக்கெட் என்ற தூரத்து உறவுக்காரன் காதில் செய்தி விழுகிறது. அவன் உடனே டெல் சாக்கெட்டுக்கு துணை நிற்க கிளம்புகிறான். நோலன் சாக்கெட்டும் அவ்வாறே. அவன் டெல்லின் சகோதரர்களுக்கு செய்தியும் அனுப்புகிறான். அவர்கள் போட்டது போட்டபடி கிளம்புகிறார்கள். அதே போல கிளம்பும் ஃப்ளாகன் மற்றும் காலோவே சாக்கெட் வழியில் ஃபால்கன் சாக்கெட்டை சந்திக்கிறார்கள். அவர்களிடமிருந்து செய்தியைத் தெரிந்து கொள்ளும் ஃபால்கன் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். பர்மாலீ சாக்கெட்டும் கிளம்பி வருகிறான். கிளம்பி வருபவர்களில் பலர் டெல் சாக்கெட்டை பார்த்ததே இல்லை. அவன் பேரைக் கூட கேட்டதில்லை. ஆனால் ஒரு சாக்கெட்டுக்கு பிரச்சினை என்று கேட்ட அடுத்த நிமிஷம் எல்லா சாக்கெட்களும் அவனுக்கு துணை நிற்க கிளம்பி வரும் சித்திரம்தான், சாக்கெட் பெருகுடும்பத்தின் பந்தத்தின் சித்தரிப்புதான் இந்த நாவலை உயர்த்துகிறது.
அப்புறம் என்ன? தெரிந்ததுதான், வில்லன்கள் தோற்று சாக்கெட்கள் வெல்கிறார்கள்.
லமூரின் எழுத்துத் திறமை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. அவர் தனது கருக்களை, கதைப் பின்னல்களை வெளிப்படுத்துவார். இதிலும் அப்படித்தான். ஆனால் அவருக்கு காடு மலை தனிமை மீது உண்மையிலேயே ஆசை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வர்ணனைகள் இத்தனை உண்மையாகத் தெரியாது.
சாக்கெட் என்ற பேர் மட்டுமே இப்படி பெருகுடும்பத்தினரை இணைக்கும் வலிமையான வலைப்பின்னல் என்ற கருவுக்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
லூயி லமூர் நாவல்கள்
ஹோண்டோ
லூயி லமூர் விக்கி குறிப்பு