2022

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2022-இல் – குறிப்பாக ஆண்டின் பின்பகுதியில் – மனச்சோர்வு எல்லாம் ஒரு வழியாக குறைய ஆரம்பித்திருக்கிறது. வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் நூலகத்துக்கு ஐந்து வருஷங்கள் கழித்து முதல் முறையாகச் சென்றேன். 🙂 அங்கே போனால் நான் வாங்கிக் கொடுத்த தமிழ்ப் புத்தகங்களைக் காணோம், தூக்கிக் கடாசிவிட்டார்கள் போலிருக்கிறது. இரண்டு மூன்று வருஷம் கழித்து ஒரு (மகாபாரதச்) சிறுகதை – பிரதிபிம்பம் – எழுதினேன், அது சொல்வனம் இதழில் பதிவாயிற்று.

ஆனால் படிப்பும் குறைந்துவிட்டது. சிறிய எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை, வரவர அச்சுப் புத்தகங்களைப் படிக்க இது ஒரு மனத்தடையாக இருக்கிறது.

இந்த வருஷம் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம் அல்பேர் காம்யூ எழுதிய Stranger (1942). என் கண்ணில் மியூர்சால்ட் நாயகத் தன்மை உடையவன் அவன் வாழ்க்கையின் என்னென்னவோ நடக்கிறது, அவ்வளவுதான். ஏன் நடக்கிறது, எதற்காக கொலை செய்தான் என்று கேள்விக்கெல்லாம் அர்த்தமே இல்லை. வெறுமையான வாழ்க்கை போல சித்தரித்துவிட்டு அப்படி வாழ்பவன் நாயகன் என்று உணர வைப்பதில்தான் கம்யூவின் திறமை இருக்கிறது. மியூர்சால்ட் ஏன் கொலை செய்கிறான்? கோபத்தால் அல்ல. பகையால் அல்ல. பின் எதற்காக? கடுமையான வெயிலால்தான்; கண்ணைக் கூச வைக்கும் பிரகாசமான சூரிய ஒளியால்தான்; வியர்வை ஓடுவதால்தான். இதை நீங்களே உணர்ந்தால்தான் உண்டு, வார்த்தைகளில் சொல்லி மாளாது.

இந்த வருஷம் மிகவும் ரசித்துப் படித்த படைப்பு டம்பாச்சாரி விலாசம் (1847). கண்ணும் கொஞ்சம் பிரச்சினை, மின்பிரதியின் தரமும் கொஞ்சம் குறைவு, அதனால் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. நாடகத்தின் நடையும், மொழியும், முன்னோடித் தன்மையும், அன்றைய சமுதாயத்தைப் பற்றிய குறுக்குவெட்டுப் பார்வையும் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தன. இலக்கியம், நாடகம், தமிழின் வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

பிடித்துப் படித்த இன்னொரு பழைய நாவல் பொற்றொடி (1911). பெண் கல்வியை வலியுறுத்தும் முன்னோடி நாவல். எனக்குப் பிடித்த அம்சம் கொஞ்சம் கூட லாஜிக் பற்றி கவலைப்படாமல் பெருசு கதை சொல்வது போல எழுதப்பட்டிருப்பதுதான். உதாரணமாக “கொலை” நடந்த பத்து நாட்களுக்குள் புலன்விசாரணை, வழக்கு, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு, மேல் கோர்ட்டில் அப்பீல், அங்கும் தீர்ப்பு, எல்லா “குற்றவாளிகளுக்கும்” சிறை. பத்து நாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டவன் திரும்பி வந்தும் விடுகிறான்!

புதுமைப்பித்தன் ஒரு மேதை என்பதை நான் என் பதின்ம வயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். அவரது பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். என் அம்மாவோடு பதின்ம வயதுகளில் உட்கார்ந்து அலசி இருக்கிறேன். அவரது சிறுகதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று என் ஆழ்மனதில் சின்ன கர்வம் இருந்தது. அ. முத்துலிங்கம் அதை நான்கு வரிகளில் உடைத்துவிட்டார். அவர் பரிந்துரைத்த பொய்க்குதிரை சிறுகதையை நான் எளிமையான சிறுகதை என்றுதான் கருதி இருந்தேன். அந்தக் கதையில் தெரியும் உண்மையான சோகம் முத்துலிங்கம் எடுத்துச் சொன்ன பிறகுதான் எனக்குப் புலப்பட்டது. அது சரி, முத்துலிங்கம் போன்ற ஜாம்பவானுக்கே பத்து முறை படித்த பிறகுதான் அது தெரிந்ததாம், என்னைப் போன்ற அரை வேக்காட்டுக்கு அது தெரியாமல் போனதில் என்ன வியப்பு? வியப்பு ஒன்றுதான் – இலக்கியத்தைப் பற்றி எனக்கு யாராவது எடுத்துச் சொல்லி புரிந்துவிடுவது அபூர்வம், இவர் எழுதிய நாலு வரி படித்தவுடன் மீண்டும் சிறுததையைத் தேடிப் படிக்கவும் வைத்தது, புரியவும் புரிந்துவிட்டது.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் திருப்பதி போன்ற ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதே கேள்வியை சுப்பு ரெட்டியார் வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் எழுப்பி இருப்பதைப் படிக்கும்போது சரி நாம் முழுமுட்டாள் இல்லை என்று உணர்ந்தேன். ரெட்டியார் இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.

இந்த வருஷம் படைப்புகளில் எனக்கே பிடித்திருந்தவை, முக்கியமானவை என்று நான் கருதுவன:

சிங்காரவேலு பாலசுப்ரமணியம் பல ஜாம்பவான்களின் சிறுகதைகள் யூட்யூபில் பதிவேற்றுகிறார். என் சிறுகதைகளைக் கூட விடவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

இந்த வருஷம் மகிழ்ச்சி தந்த செய்திகள் – பாவண்ணனுக்குக் கிடைத்த இயல் விருது, கி.ரா.வுக்கு ஸ்டாலின் அரசு சிலை வைத்திருப்பது.

இந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி புத்தகத்துக்கு கிடைத்திருக்கிறது. சுப்ரபாரதிமணியன் இன்னும் இந்த விருதைப் பெறவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. விஷ்ணுபுரம் விருது சாரு நிவேதிதாவுக்கு.

பா. செயப்பிரகாசம், தெளிவத்தை ஜோசஃப், பீட்டர் ப்ரூக், ஜாக் ஹிக்கின்ஸ், நாகசாமி ஆகியோரை இந்த ஆண்டு இழந்தோம்.

தமிழ் விக்கி இந்த ஆண்டின் சாதனைகளில் ஒன்று. நானும் கொஞ்சம் பங்களிக்க முயன்றேன், ஆனால் ஜெயமோகனின் வேகத்தில் பத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கில்லை என்பது கொஞ்சம் மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கொஞ்சம் பிரச்சினைகள். இந்த ஆண்டாவது பங்களிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

என் பெண்ணுக்காக குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தேன், 8 பாடல்களோடு நிற்கிறது. இந்த வருஷமாவது…

குறைவாக இருந்தாலும் 2022-இல் படித்த, மீண்டும் படித்த நல்ல/சுவாரசியமான படைப்புகளின் பட்டியல்.

வகை படைப்பாளி படைப்பு குறிப்புகள்
நாவல் லூயி லமூர் Sackett Brand Western
காலின் டெக்ஸ்டர் Last Bus to Woodstock Mystery
தேவன் ஸ்ரீமான் சுதர்சனம்
அல்பேர் காம்யூ Stranger இந்த வருஷம் படித்த மிகச் சிறந்த படைப்பு
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் There is a Hippie on the Highway நான் படித்த முதல் ஆங்கில நாவல்
ஜெயகாந்தன் பிரம்மோபதேசம்
ராஜாஜி திக்கற்ற பார்வதி
ஜாக் ஹிக்கின்ஸ் Eagle Has Landed
தமிழ்பிரபா பேட்டை
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை பொற்றொடி
அபுனைவு க.நா.சு. படித்திருக்கிறீர்களா? அழிசி பதிப்பகம் மீள்பதித்திருக்கிறது
அரவிந்தன் நீலகண்டன் கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
ராம்நாராயண் Third Man கிரிக்கெட் புத்தகம்
ராஜாஜி திண்ணை ரசாயனம்
நாகசாமி Art of Tamil Nadu, மாமல்லை
நாடகம் ஷேக்ஸ்பியர் Richard III
சிறுகதை புதுமைப்பித்தன் பொய்க்குதிரை
ஜெயமோகன் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)
ம.ந. ராமசாமி கதை உலகில் ஒரு மேதை
சுஜாதா திமலா அறிவியல் சிறுகதை
சுஜாதா தமிழாசிரியர் அறிவியல் சிறுகதை
பா. செயப்பிரகாசம் நிஜமான பாடல்கள்
பா. செயப்பிரகாசம் வளரும் நிறங்கள்
தெளிவத்தை ஜோசஃப் மீன்கள்
தெளிவத்தை ஜோசஃப் மழலை
தெளிவத்தை ஜோசஃப் அம்மா
கவிதை ஆலங்குடி வங்கனார் கழனி மாஅத்து குறுந்தொகை 8

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

என் சிறுகதையின் இன்னொரு வடிவம்

நண்பர் ரெங்காவுக்கு என் பிரதிபிம்பம் சிறுகதை பிடித்துவிட்டது, அதே கரு, அதே பாத்திரங்கள், அதே நிகழ்வுகளோடு மறு ஆக்கம் செய்திருக்கிறார். படித்துப் பாருங்கள்!

இந்தக் கதையை எழுதும்போது இது நாடக வடிவத்தில் எழுதப்பட வேண்டும், நாடக மேடையை இரண்டு பகுதியாகப் பிரித்து ஒரு பகுதியில் துரோணர்-அஸ்வத்தாமா, மறு பகுதியில் துருபதர்-திருஷ்டத்யும்னன் என்று காட்டப்பட வேண்டும், ஒளியை இரண்டு பகுதிகளிலும் மாற்றி மாற்றி செலுத்த வேண்டும், ஏறக்குறைய அதே வசனங்கள் இரு பகுதிகளிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது நல்ல தாக்கத்தை உருவாக்கும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சரி சிறுகதை எழுதவே ததிங்கிணத்தோம், புதிய வடிவங்களைப் பற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ரெங்காவின் ஆக்கத்தில் இரண்டு பகுதிகளிலும் வசனங்கள் ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்று வருகின்றன, அது இன்னும் இறுக்கமான காட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கிருஷ்ணனையும் குசேலரையும் உள்ளே நுழைத்திருப்பது நல்ல touch!

ரெங்காவுக்கு என் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: என் மூலச் சிறுகதை

2022 இயல் விருது பாவண்ணனுக்கு

2022க்கான இயல் விருது பாவண்ணனுக்கும் லெ. முருகபூபதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் புனைவுலகம் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு பாவண்ணனைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் இங்கே படித்துக் கொள்ளுங்கள். சிறந்த புனைவுகள் பல எழுதி இருந்தாலும், அவர் பேசப்படுவது திண்ணை தளத்தில் எழுதிய எனக்குப் பிடித்த கதைகள் தொடராலும் (என் ஆதாரப் பதிவுகளில் – ஆதாரப்பதிவு என்றால் என்ன என்று குழம்புபவர்களுக்கு – reference-ஐத்தான் இப்படி தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்) ஒன்று. பைரப்பாவின் பர்வா புத்தகத்தை கன்னடத்திலிருந்து சிறப்பாக மொழிபெயர்த்ததாலும்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதாவது அவரது விமரிசனங்களும் மொழிபெயர்ப்புகளும் அவரது புனைவுத்திறனை அத்தனை பிரபலம் அடையாமல் தடுக்கின்றனவோ என்று ஒரு சந்தேகம்.

அவரது பாய்மரக்கப்பல் நாவலை ரொம்ப நாளாகத் திறக்காமல் வைத்திருக்கிறேன், இந்த உந்துதலிலாவது படிக்க வேண்டும்.

ஜெயமோகன் அவரது சிறந்த நாவல்கள் பட்டியலில் (என் இன்னொரு ஆதாரப் பதிவு) பாவண்ணனின் சிதறல்கள் (1990) நாவலை சேர்க்கிறார். பேசுதல், முள் ஆகிய சிறுகதைகளை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு பாய்மரக்கப்பல் நாவல், மற்றும் விளிம்பின் காலம் சிறுகதை

முருகபூபதி புலம் பெயர்ந்த ஈழத் தமிழர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. இனி மேல்தான் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பாவண்ணன் தளம்
பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் தொடர்
தமிழ் விக்கியில் பாவண்ணன், முருகபூபதி
பாவண்ணன் பேட்டி

மு. ராஜேந்திரனுக்கு சாஹித்ய அகடமி விருது

2022-க்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி (2021) புத்தகத்திக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலா பாணி என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. காலா பானியைத்தான் ஒரு வேளை காலா பாணி என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. அதுவும் நாடு கடத்தலைப் பற்றிய புத்தகம் என்றால் அந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது. ஆனால் இத்தனை எளிய எழுத்துப் பிழையை யாரும் அவரிடம் சொல்லாமலா இருப்பார்கள்?

ராஜேந்திரன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதற்கு முன்னும் வடகரை, 1801 ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். 1801, காலா பாணி இரண்டும் மருது சகோதரர்களை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன.

நடுவர் குழு திலகவதி, கலாப்ரியா, மற்றும் ஆர். வெங்கடேஷ் இருந்திருக்கிறார்கள். வெங்கடேஷ் யாரென்று தெரியவில்லை. குற்ம்பட்டியலில் ராஜேந்திரனின் இன்னொரு நாவலான 1801-உம் இருந்திருக்கிறது. குறும்பட்டியலில் இருந்த மற்ற புத்தகங்கள்:

  1. ஞானசுந்தரம் எழுதிய ராமன் கதை (இலக்கிய விமர்சனம்)
  2. ஷண்முகம் எழுதிய ஏற்பின் பெருமலர் (கவிதைகள்)
  3. சந்திரசேகரன் எழுதிய கருவறை தேசம் (கவிதைகள்)
  4. குமரிமைந்தன் எழுதிய குமரிக் கண்ட வரலாறும் அரசியலும் (வரலாறு)
  5. சுப்ரபாரதிமணியன் எழுதிய மூன்று நதிகள் (சிறுகதைகள்)
  6. கோணங்கி எழுதிய நீர்வளரி (நாவல்)
  7. ராஜாராம் எழுதிய நோம் சோம்ஸ்கி (வாழ்க்கை வரலாறு)
  8. சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் (தன் வாழ்க்கை வரலாறு)
  9. முத்துநாகு எழுதிய சுளுந்தீ

சுப்ரபாரதிமணியனுக்கு இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. கோணங்கிக்கும் இன்னும் கிடைக்கவில்லையா? பாமா, யுவன் சந்திரசேகருக்கும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாரும் இன்னும் என்னதான் எழுத வேண்டும்? இந்தியக் குடிமகன் என்ற விதி எதுவும் இல்லாவிட்டால் இவர்களுக்கும் முன்னால் கௌரவிக்கப்பட வேண்டியவர் முத்துலிங்கம்!

பெருமாள் முருகனின் பூனாச்சி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தற்காக என். கல்யாணராமனுக்கும், கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதிய யாத் வேஷம் நாவலை தமிழில் மொழிபெயர்த்தற்காக கே. நல்லதம்பிக்கும் மொழிபெயர்ப்பு விருது கிடைத்திருக்கிறது. எம்.ஏ. சுசீலா (அருண் ஷர்மா எழுதிய அஸ்ஸாமிய நாவல் ஆஷிர்வாதர் ரங்), கே.வி. ஷைலஜா (ஷாபு கிளித்தட்டில் எழுதிய மலையாள தன்வரலாற்று நாவல் நிலாச்சோறு) இருவரும் குறும்பட்டியலில் இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு விருதுக்கான குறும்பட்டியலில் இருக்கும் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் ஜெயமோகன்! அவரது யானை டாக்டர் (பகுதி 1, 2, 3) புதினத்தை மலையாளத்தில்  மொழிபெயர்த்தற்காக!

யுவபுரஸ்கார் விருது பி. காளிமுத்துவுக்கு அவரது கவிதைத் தொகுப்பான தனித்திருக்கும் அரளிகளின் மத்தியம் என்ற நூலுக்கும் பாலபுரஸ்கார் விருது ஜி. மீனாட்சிக்கு அவரது சிறுகதைத் தொகுப்பான மல்லிகாவின் வீடு என்ற நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

எல்லா மொழிகளுக்குமான விருது விவரங்கள் இங்கே, இங்கே (மொழிபெயர்ப்பு), இங்கே (யுவபுரஸ்கார்), இங்கே (பாலபுரஸ்கார்)

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

எழுத்தாளர் வலைப்பூக்கள், தளங்கள்

என் கண்ணில் பட்டவை, உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்கள்!

ஜெயமோகன்: நான் அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் தளம்

மறைந்த எழுத்தாளர்கள்:

ஃபேஸ்புக் பக்கங்கள்:

மற்றவை:

இன்னும் நிறைய இருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

கி.ரா.வுக்கு சிலை

கி.ரா.வுக்கு சிலை, நினைவரங்கம் கோவில்பட்டியில் திறக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி தந்த செய்தி.

முந்தைய அரசுகளோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் அரசுக்கு இலக்கியம் பற்றி கொஞ்சம் பிரக்ஞை இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே ஒரு பத்மஸ்ரீ விருதுக்கும் பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்! அரசுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கி.ரா. பக்கம்

யானை டாக்டர்கள்

ஜெயமோகனின் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)எனக்குப் பிடித்த புனைவுகளில் ஒன்று. ஊருக்கே பிடித்த புனைவுதான். அதன் நாயகரும் யானை டாக்டருமான டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) உண்மை மனிதர் என்பது அந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகம் ஜேனி சோடோஷ் எழுதிய “Elephant Doctor“. “கதாபாத்திரங்களின்” பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். வழக்கம் போலவே டாக்டர் கே என்றோ கிருஷ்ணமூர்த்தி என்றோ நினைவில்லை, யானை டாக்டர் என்றுதான் நினைவிருந்தது. அவரைப் பற்றிய புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். இவர் பெயர் டாக்டர் கேகே (கே.கே. சர்மா). கே, கேகே என்ற பெயர்களில் குழம்பி ஜெயமோகனின் உண்மை நாயகன்தானாக்கும் என்று படித்துப் பார்த்தேன்.

இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் அதிசயப்பட வைக்கின்றன. கேகே அஸ்ஸாமியர். கே தமிழர். கேகேவுக்கு குடும்பம் உண்டு. கேவுக்கு யானைகள்தான் குடும்பம் போலிருக்கிறது. கேகேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. கேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்காததுதான் யானை டாக்டர் சிறுகதையின் முன்புலம் (foreground). கேகேதான் மயக்கமருந்தை துப்பாக்கி போன்ற ஒரு கருவியின் மூலம் யானைகளுக்கு செலுத்துவதில் முன்னோடி. கே யானைகளின் சவப்பரிசோதனையின் முன்னோடி என்று யானை டாக்டர் கதையில் சொல்லப்படுகிறது. கேகே சர்க்கஸ் யானைகளின் பராமரிப்பு பரிசோதனைக் குழுவின் உறுப்பினர், சர்க்கஸ் யானைகளின் உடல் நலத்தைப் பேண பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறார்; கே கோவில் யானைகளுக்கு “விடுமுறை” போல காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று போராடி வென்றிருக்கிறார். கேகே காட்டு யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார், ஆனால் அவரது பணி பொதுவாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுடன்தான். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது, ஆளைக் கொல்கிறது, அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் கேகேவைத்தான் அழைப்பார்களாம். கேவின் பணி காட்டு யானைகளுடன்தான் அதிகம் போலிருக்கிறது, தமிழகம்/கேரளப் பகுதிகளில் அவர்தான் யானை டாக்டர். யானை டாக்டர் புனைவில் கே அழுகிய சடலம் ஒன்றை ஆராயும்போது அவர் உடல் முழுதும் புழுக்கள்; ஒரு யானைக்கு எனிமா கொடுத்து 10-15 கிலோ யானை மலம் கேகே மேல் கொட்டி இருக்கிறது. கே வயதில் மூத்தவர் – 1929-இல் பிறந்திருக்கிறார். கேகே 1961-இல்.

ஜேனி சோடோஷின் புத்தகம் சிறுவர்களைத்தான் குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதையைப் படித்திராவிட்டால் இதைப் புரட்டிக் கூட பார்த்திருக்கமாட்டேன். புத்தகம் பெரியவர்களுக்கு சுவாரசியப்படாது என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் தகவல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தன. சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றோடு சில வருஷம் வாழ்ந்ததால் யானை என்றால் கேகேவுக்கு கொள்ளை இஷ்டம். நன்றாகப் படித்திருக்கிறார், டாக்டராகப் போ என்று குடும்பத்தார் சொல்ல இவரோ கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். யானை மருத்துவம் அப்போது படிக்கும் நிலையில் இல்லை. (கே எழுதி இருந்தால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.) இருந்தாலும் இவர் ஆடு/மாடு/நாய்/பூனைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலாக யானைக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் யானையை நெருங்க முடியாத நிலை. மிருகக்காட்சி சாலை அதிகாரியின் உதவியுடன் மயக்கமருந்து தரும் துப்பாக்கியை பழகிக் கொண்டு யானையை மயக்கம் அடைய வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார். இவரது மைத்துனர், வனத்துறை அதிகாரி நாராயண் மதம் பிடித்த யானை ஒன்று மக்களைத் தாக்குகிறது என்று இவரை அழைக்க, இவர்கள் எல்லாரும் மயக்கமருந்து துப்பாக்கியோடு யானையை நெருங்கி இருக்கிறார்கள், யானை இவரது மைத்துனரை மிதித்தே கொன்றுவிட்டது. யானைகளுக்கு இலவச முகாம் எல்லாம் நடத்தி இருக்கிறார். மின்சாரம் தாக்கி காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் மருத்துவம் செய்த யானை ஒன்று 15-20 வருஷங்களுக்குப் பிறகு சர்க்கஸ் யானையாக இருக்கும்போதும் இவரை நினைவில் வைத்துக் கொண்டு துதிக்கையால் அணைத்துக் கொண்டிருக்கிறது!

மேன்மக்கள், வேறென்ன சொல்ல? சிறுவர் புத்தகமாக இருந்தாலும் என்னைப் போலவே நீங்களும் தகவல்களால் கவரப்படலாம். யானை டாக்டர் கதையைப் படிக்கவில்லை என்றால் தவறவிடாதீர்கள்!

(டாக்டர் கேயின் புகைப்படம் கிடைக்கவில்லை)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், இந்திய அபுனைவுகள், சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சொல்வனத்தில் என் சிறுகதை

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை (பிரதிபிம்பம்) – மகாபாரதப் பின்புலத்தில் -எழுதினேன். அதை சொல்வனம் இணைய இதழில் பதித்திருக்கிறார்கள். ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி!

வழக்கம் போல என் குருட்டு யோசனைகளில் ஒன்றுதான். வளம் மிகுந்த பாஞ்சால நாட்டின் அரசன் துருபதன் தன் சிறு வயது நண்பனுக்கு கேவலம் ஒரு பசுவைத் தர ஏன் மறுக்க வேண்டும்? மகாபாரதத்தின்படி அது வெறும் அற்பத்தனம்தான். வேறு ஒரு காரணத்தை கற்பனை செய்திருக்கிறேன். இதற்கு மூலம் ராஜாஜியின் வியாசர் விருந்தில் வரும் ஒரு வரிதான் – ஏதோ ஒரு நாள் போரில் துரோணர் திருஷ்டத்யுமனோடு போரிடுவதைத் தவிர்ப்பார். வியாசர் விருந்தின்படி திருஷ்டத்யும்னன் கையால்தான் தனக்கு இறப்பு என்பதால் தவிர்ப்பார், நான் வேறு மாதிரி எழுதி இருக்கிறேன்.

எழுதி ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது; மகாபாரத சிறுகதை என்றால் தமிழ்ஹிந்து தளத்தில்தான் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்வேன். யாரோ ஒரு ஹிந்துத்துவ மேதாவி பெண்களை பத்து பனிரண்டு வயதில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எழுதிய கட்டுரையை அவர்கள் பதித்ததிலிருந்து, அப்படி பதித்தற்கு ஜடாயு சப்பைக்கட்டு கட்டிய பிறகு, வெறுத்துப் போய்விட்டது, அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதே நின்றுவிட்டது. ஒரு வருஷத்திற்குப் பிறகுதான் சொல்வனம் இதழிற்கு அனுப்பலாம் என்று தோன்றியது. நம்ம சாமர்த்தியம் அப்படி!

படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: பிரதிபிம்பம் சிறுகதை

லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள்

சமீபத்தில் வெளிவந்த No Plan B புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன். இதுவும் ஆண்ட்ரூ சைல்ட் லீ சைல்டின் படைப்பைத் தொடர்வதுதான். மகா மோசமான நாவல். வில்லன்கள், அடியாள்கள் எல்லாரும் ஒவ்வொருவராக பிரசாதம் வாங்கிக் கொள்வது போல வரிசையாக வந்து மரண அடி வாங்குகிறார்கள். இதில் 3 சரடுகளை ஒன்றிணைக்க வேறு முயன்றிருக்கிறார். ரீச்சர் தற்செயலாக ஒரு கொலையை – விபத்து போல ஜோடிக்கபப்டுவதை பார்த்துவிட்டு தோண்ட ஆரம்பிக்கிறான். பதின்ம வயதினன் ஒருவன் தன் அப்பாவைத் தேடுகிறான். கல்லீரல் மாற்று சிகிச்சையில் இறந்த இளைஞனின் கொலைகார அப்பா வஞ்சம் தீர்க்க கிளம்புகிறான்.

சமீபத்தில் 2021-இல் வெளிவந்த Blue Moon புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

Blue Moon ஜாலியான மசாலா கதை. ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. பயணத்தில் படிக்க ஏற்றது. வழக்கம் போல தனி மனிதனான ஜாக் ரீச்சர் ஊரில் போட்டி போடும் இரண்டு மாஃபியா கும்பல்களையும் அழிக்கிறான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த For a Few Dollars More திரைப்படத்தை கொஞ்சம் நினைவுபடுத்தியது. விஜய், அஜித் எல்லாம் இதை மூலக்கதையாக வைத்து படம் எடுக்கலாம், கொஞ்சம் பெட்டராக இருக்கும்.

லீ சைல்ட் (Lee Child) ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் கதைகளின் ஹீரோ ஜாக் ரீச்சர் (Jack Reacher). ஜாக் ஒரு எக்சென்ட்ரிக். முன்னாள் ராணுவ வீரன். கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். ஜாக் எந்த ஊரிலும் வாழ்வதில்லை, அட்ரசே கிடையாது. கால் போன போக்கில் போவான். போகிற இடத்தில் எல்லாம் பிரச்சினை வரும், துப்பறிந்து, சண்டை போட்டு தீர்ப்பான். டைம் பாஸ் நாவல்கள், ப்ளேனில் படிக்க ஏற்றவை.

ரீச்சரை ஒரு விதத்தில் வெஸ்டர்ன் ஹீரோ என்று சொல்லலாம். எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருவைத்தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய கதை இல்லை. டிபிகல், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. Pulp fiction. ஆனால் அந்த எங்கிருந்தோ வரும் வெஸ்டர்ன் ஹீரோ இமேஜில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

jack_reacherஒவ்வொரு கதைக்கும் கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்கு முக்கியமானவை இல்லை. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் One Shot என்ற கதையை பரிந்துரைப்பேன். ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை. இது திரைப்படமாகவும் வரப்போகிறது வந்துவிட்டது, டாம் க்ருய்ஸ் நடிக்கப் போகிறார் நடித்திருக்கிறார்.

Killing Floor என்ற கதையையும் படிக்கலாம். இதுதான் முதல் நாவல். தற்செயலாக ஒரு சின்ன ஊரில் ரீச்சர் இறங்குகிறான். Of course, ஊரில் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ரீச்சர் கொலை செய்துவிட்டான் என்று கைது செய்யப்படுகிறான். ஜெயிலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் திரில்லிங் ஆக இருக்கும். வெளியே வந்த பிறகு அவனுக்கு இறந்தவன் தன் அண்ணன் என்று தெரிகிறது. பிறகு வழக்கம் போல சண்டை, எல்லா வில்லனையும் ஒழித்துக் கட்டுகிறான்.

சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது Tripwire என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் பாஸ் கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான்.

சமீபத்திய கதைகளை – Sentinel, Better off Dead – தன் தம்பி ஆண்ட்ரூ சைல்டோடு இணைந்து எழுதி இருக்கிறார்.

இது வரை 27 நாவல்கள் வந்திருக்கின்றன.

  1. Killing Floor, 1997
  2. Die Trying, 1998
  3. Tripwire, 1999
  4. Running Blind, 2000
  5. Echo Burning, 2001
  6. Without Fail, 2002
  7. Persuader, 2003
  8. The Enemy, 2004
  9. One Shot, 2005
  10. The Hard Way, 2006
  11. Bad Luck and Trouble, 2007
  12. Nothing to Lose, 2008
  13. Gone Tomorrow, 2009
  14. 61 Hours, 2010
  15. Worth Dying For, 2010
  16. Affair, 2011
  17. A Wanted Man, 2012
  18. Never Go Back, 2013
  19. Personal, 2014
  20. Make Me, 2015
  21. Night School, 2016
  22. No Middle Name, 2017
  23. Midnight Line, 2017
  24. Past Tense, 2018
  25. Blue Moon, 2019
  26. Sentinel, 2020
  27. Better off Dead, 2021
  28. No Plan B, 2022

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்