ஷோபா சக்தி: எம்ஜிஆர் கொலை வழக்கு

ஷோபா சக்தியை நான் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்தால் நிச்சயம் நிறைய வாங்கிக் குவித்திருப்பேன், படித்திருப்பேன். அது என்னவோ மின்பிரதிகளை வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு விசித்திர மனத்தடை. காகிதமாக வாங்கி வீட்டில் குப்பையாக குவிந்து கிடந்தால்தான் திருப்தியாக இருக்கிறது. நல்ல வேளையாக இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைத்தது…

ஷோபா சக்தியின் பெரும் பலம் அவதானிப்பு. அவரால் சிறு விவரிப்புகள் மூலம் ஒரு காட்சியை கண் முன்னால் கொண்டு வர முடிகிறது. சம்பிரதாயமான கதை – ஆரம்பம், சிக்கல், கடைசி சில வரிகளில் திருப்பம் – என்பது பல சமய்ம் இல்லை. உச்சம் என்று அவர் கொண்டு வருவது உக்கிரமான காட்சியாக இருக்கிறது. அவரது கதைகளை ஓரிரு வரிகளில் சுருக்குவது கஷ்டமாக இருக்கிறது. இந்தத் தொகுப்பிலும் சில சிறுகதைகளை விவரிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்…

அவரது பல சிறுகதைகளில் மெல்லிய (subtle) ஆன black humor வெளிப்படுகிறது. அசோகமித்திரன் அளவுக்கு இல்லைதான், ஆனால் அந்தப் பாணி. கூர்மையான அவதானிப்புகளால், அபத்த நிகழ்ச்சிகளால் வெளிப்படும் நகைச்சுவை.

அவரது பின்புலம் – ஈழ விடுதலைப் போராளி, பாரிசில் அகதி – அவரது கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. இதுவும் அவருக்கு ஒரு பெரிய பலம்.

எம்ஜிஆர் கொலை வழக்கு என்று பார்த்ததும முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்றுதான் முதலில் நினைத்தேன். எம்ஜிஆர் – அதாவது எம்ஜிஆரின் ரசிகர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் கதையை விவரிப்பது கஷ்டம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் எனக்குப் பிடித்த சிறுகதை திரு. முடுலிங்க. ஏறக்குறைய கதையின் இறுதியில்தான் முடுலிங்க என்றால் அ. முத்துலிங்கம் என்றும் சிறுகதையில் வரும் ஊரான கொக்கோ வில்லி உண்மையில் கொக்குவில் என்றும் புரிந்தது. புரிந்த கணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முத்துலிங்கத்தின் கதாபாத்திரம் ஒருவர் கண்ணில் முத்துலிங்கம் எப்படித் தெரிவார்? அதை அருமையாக எழுதி இருக்கிறார். கதையின் பாணியும் எனக்கு முத்துலிங்கமே எழுதுவது போலத்தான் இருந்தது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

வெள்ளிக்கிழமை சிறந்த சிறுகதை. பாரிஸின் மெட்ரோ நிலையம் ஒன்றின் அருகில் 50-55 வயதானவர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலையில் பிச்சை எடுக்கிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு குத்துவிளக்கு வாங்குகிறார். மெட்ரோ நிலையத்தில் அதை ஏற்றுகிறார், சீர்காழியின் பாட்டு ஒன்றை டேப் ரெகார்டரில் போடுகிறார். அப்புறம்?

விலங்குப் பண்ணை கூர்மையான அவதானிப்புகள் உள்ள கதை. ஏழைச் சிறுவன். சாப்பாட்டுக்கு கஷ்டம். பள்ளி வேளையில் அனேகமாக பசியோடுதான் இருப்பான். ஆனால் கெத்துக்காக தன் வசதியானவன் என்று பொய் சொல்லுக் கொள்வான். இன்னொரு ஏழைச் சிறுவனை, பசிக்கிறது என்று உண்மையைச் சொல்பவனோடு நட்பு ஏற்படுகிறது. பசியின் விவரிப்பு இந்தக் கதையை என் கண்ணில் உயர்த்துகிறது.

தமிழ் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்க வைத்த சிறுகதை. நாயகன் தான் பல நாடுகளில் பார்த்த வேசிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகிறார். தமிழில் ஆணுறைகளைப் பற்றிய ஒரு சுவர் அறிவிப்பைப் பார்த்ததும் அப்படிப்பட்ட சுவர் அறிவிப்புகளைப் பற்றி எழுதிய அப்பாவின் நினைவு வருகிறது. வாழ்க்கை என்னதான் மாறினாலும் சிறு வயது நினைவுகள் அழியாது என்கிறாரா? (சில மாதங்களுக்கு முன் செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாட்டைக் கேட்கும்போது கண்ணீர் பெருகியது!) அப்பாவின் நினைவால் குற்ற உணர்வா? புலிகள் வேசிகளுக்கு மரண தண்டனை அளித்த நினைவுகளால் ஏற்பட்ட அச்சமா? எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்…

ரம்ழான் சிறுகதை ஒரு கற்பனைத் திரைப்படத்தை விவரிக்கிறது. நல்ல திரைக்கதையாக வரக் கூடியது. Crossfire சிறுகதை புலிகள் என்று உண்மையாகவோ பொய்யாகவோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கும் சிறை, “முறையீடு” செய்யும் தமிழ்க்கார மந்திரி என்று சில நல்ல் அவதானிப்புகளை உடையது. F இயககம், குண்டு டயானா சிறுகதைகளில் மெல்லிய black humor நன்றாக வெளிப்படுகிறது. உதாரணமாக ஒவ்வொரு இயக்கத்துக்கும் A இயககம், B இயககம் என்று பேர் வைத்துக் கொண்டே போனால் மிஞ்சுவது F என்ற எழுத்துதான். பரபாஸ் சிறுகதையை விவரிப்பது கஷ்டம். கடைசி சில வரிகளில் அதன் தளமே மாறிவிடுகிறது. அனாயாசமாக நாலு வரியில் ஒரு மாயத்தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறார். திடீரென்று ஏன் இந்தக் கிராமம் அழிந்துவிட்டது, யார் இத்தனை நாள் திருடினார்கள், தண்டிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்று கேள்விகள் எழுகின்றன…

சில கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. யானைக்கதையின் கறுப்பு நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கருங்குயில் நல்ல சிறுகதை. பாப்லோ நெருடா தன் சுயசரிதையில் இலங்கையில் ஒரு பறைய ஜாதிப் பெண்ணுடன் வலிந்து உறவு கொண்டதாக எழுதி இருக்கிறார், அதைத்தான் இவரும் சிறுகதையாக எழுதி இருக்கிறார். One Way, கண்டிவீரன் ஆகியவை எனக்குப் பிடித்த சிறுகதைகள். வர்ணகலா என் கண்ணில் சுமார்தான்.

ஈழ எழுத்தாளர்கள் என்று குறுகிய அடையாளம் எல்லாம் ஷோபா சக்திக்குப் போதாது. வசதிக்காக அப்படி குறுக்கினால், அவரை முத்துலிங்கத்துக்கு அடுத்த இடத்தில் வைப்பேன். என்னைப் பொறுத்த வரை அவர் முக்கியத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவ்வளவுதான்.

இந்தத் தொகுப்பைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷோபா சக்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி பக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.