2022 இயல் விருது பாவண்ணனுக்கு

2022க்கான இயல் விருது பாவண்ணனுக்கும் லெ. முருகபூபதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் புனைவுலகம் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு பாவண்ணனைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் இங்கே படித்துக் கொள்ளுங்கள். சிறந்த புனைவுகள் பல எழுதி இருந்தாலும், அவர் பேசப்படுவது திண்ணை தளத்தில் எழுதிய எனக்குப் பிடித்த கதைகள் தொடராலும் (என் ஆதாரப் பதிவுகளில் – ஆதாரப்பதிவு என்றால் என்ன என்று குழம்புபவர்களுக்கு – reference-ஐத்தான் இப்படி தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்) ஒன்று. பைரப்பாவின் பர்வா புத்தகத்தை கன்னடத்திலிருந்து சிறப்பாக மொழிபெயர்த்ததாலும்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதாவது அவரது விமரிசனங்களும் மொழிபெயர்ப்புகளும் அவரது புனைவுத்திறனை அத்தனை பிரபலம் அடையாமல் தடுக்கின்றனவோ என்று ஒரு சந்தேகம்.

அவரது பாய்மரக்கப்பல் நாவலை ரொம்ப நாளாகத் திறக்காமல் வைத்திருக்கிறேன், இந்த உந்துதலிலாவது படிக்க வேண்டும்.

ஜெயமோகன் அவரது சிறந்த நாவல்கள் பட்டியலில் (என் இன்னொரு ஆதாரப் பதிவு) பாவண்ணனின் சிதறல்கள் (1990) நாவலை சேர்க்கிறார். பேசுதல், முள் ஆகிய சிறுகதைகளை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு பாய்மரக்கப்பல் நாவல், மற்றும் விளிம்பின் காலம் சிறுகதை

முருகபூபதி புலம் பெயர்ந்த ஈழத் தமிழர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. இனி மேல்தான் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பாவண்ணன் தளம்
பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் தொடர்
தமிழ் விக்கியில் பாவண்ணன், முருகபூபதி
பாவண்ணன் பேட்டி

மு. ராஜேந்திரனுக்கு சாஹித்ய அகடமி விருது

2022-க்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி (2021) புத்தகத்திக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலா பாணி என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. காலா பானியைத்தான் ஒரு வேளை காலா பாணி என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. அதுவும் நாடு கடத்தலைப் பற்றிய புத்தகம் என்றால் அந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது. ஆனால் இத்தனை எளிய எழுத்துப் பிழையை யாரும் அவரிடம் சொல்லாமலா இருப்பார்கள்?

ராஜேந்திரன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதற்கு முன்னும் வடகரை, 1801 ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். 1801, காலா பாணி இரண்டும் மருது சகோதரர்களை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன.

நடுவர் குழு திலகவதி, கலாப்ரியா, மற்றும் ஆர். வெங்கடேஷ் இருந்திருக்கிறார்கள். வெங்கடேஷ் யாரென்று தெரியவில்லை. குற்ம்பட்டியலில் ராஜேந்திரனின் இன்னொரு நாவலான 1801-உம் இருந்திருக்கிறது. குறும்பட்டியலில் இருந்த மற்ற புத்தகங்கள்:

  1. ஞானசுந்தரம் எழுதிய ராமன் கதை (இலக்கிய விமர்சனம்)
  2. ஷண்முகம் எழுதிய ஏற்பின் பெருமலர் (கவிதைகள்)
  3. சந்திரசேகரன் எழுதிய கருவறை தேசம் (கவிதைகள்)
  4. குமரிமைந்தன் எழுதிய குமரிக் கண்ட வரலாறும் அரசியலும் (வரலாறு)
  5. சுப்ரபாரதிமணியன் எழுதிய மூன்று நதிகள் (சிறுகதைகள்)
  6. கோணங்கி எழுதிய நீர்வளரி (நாவல்)
  7. ராஜாராம் எழுதிய நோம் சோம்ஸ்கி (வாழ்க்கை வரலாறு)
  8. சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் (தன் வாழ்க்கை வரலாறு)
  9. முத்துநாகு எழுதிய சுளுந்தீ

சுப்ரபாரதிமணியனுக்கு இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. கோணங்கிக்கும் இன்னும் கிடைக்கவில்லையா? பாமா, யுவன் சந்திரசேகருக்கும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாரும் இன்னும் என்னதான் எழுத வேண்டும்? இந்தியக் குடிமகன் என்ற விதி எதுவும் இல்லாவிட்டால் இவர்களுக்கும் முன்னால் கௌரவிக்கப்பட வேண்டியவர் முத்துலிங்கம்!

பெருமாள் முருகனின் பூனாச்சி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தற்காக என். கல்யாணராமனுக்கும், கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதிய யாத் வேஷம் நாவலை தமிழில் மொழிபெயர்த்தற்காக கே. நல்லதம்பிக்கும் மொழிபெயர்ப்பு விருது கிடைத்திருக்கிறது. எம்.ஏ. சுசீலா (அருண் ஷர்மா எழுதிய அஸ்ஸாமிய நாவல் ஆஷிர்வாதர் ரங்), கே.வி. ஷைலஜா (ஷாபு கிளித்தட்டில் எழுதிய மலையாள தன்வரலாற்று நாவல் நிலாச்சோறு) இருவரும் குறும்பட்டியலில் இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு விருதுக்கான குறும்பட்டியலில் இருக்கும் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் ஜெயமோகன்! அவரது யானை டாக்டர் (பகுதி 1, 2, 3) புதினத்தை மலையாளத்தில்  மொழிபெயர்த்தற்காக!

யுவபுரஸ்கார் விருது பி. காளிமுத்துவுக்கு அவரது கவிதைத் தொகுப்பான தனித்திருக்கும் அரளிகளின் மத்தியம் என்ற நூலுக்கும் பாலபுரஸ்கார் விருது ஜி. மீனாட்சிக்கு அவரது சிறுகதைத் தொகுப்பான மல்லிகாவின் வீடு என்ற நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

எல்லா மொழிகளுக்குமான விருது விவரங்கள் இங்கே, இங்கே (மொழிபெயர்ப்பு), இங்கே (யுவபுரஸ்கார்), இங்கே (பாலபுரஸ்கார்)

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

ஜெயமோகன் நாவலை மொழிபெயர்க்க நிதிக்கொடை

வெள்ளை யானை எனக்குப் பிடித்த ஜெயமோகன் நாவல்களில் ஒன்று. அது சரி, பிடிக்காத ஜெயமோகன் நாவல் அபூர்வ்ம்தான்.

வெள்ளை யானை நாவலை மொழிபெயர்க்க PEN அமைப்பு நிதிக்கொடை அளித்துள்ளது. அறிவிப்பிலிருந்து:

Priyamvada Ramkumar’s translation from the Tamil of White Elephant by B. Jeyamohan

From the judges’ citation: Within the vast sub-genre of anticolonialism literature, White Elephant, a novel by the Tamil author and literary activist B. Jeyamohan, is a rarity because it gives us a fictionalized account of, arguably, the earliest Dalit uprising in India. Set in 1878 against the backdrop of the great famines in British India, the story unfolds, interestingly, from the point of view of an Irish police officer of the British Crown. Most importantly, through the character of Kathavarayan, the novel brings to the fore the forgotten legacy of Pandit C. Iyothee Thass, the first anti-caste leader from the Madras Presidency, who laid the groundwork for several other Dalit leaders like B. R. Ambedkar. Jeyamohan is a prolific and much-lauded Tamil writer, but he is mostly unknown to the Anglophone readership. This landmark historical novel, translated with much care by Priyamvada Ramkumar (who recently published the first ever book-length English translation of Jeyamohan) is a crucial intervention in our understanding of subaltern lives in India and a much-needed inclusion in anticolonial literature.

PEN அமைப்பு இலக்கியம் + மனித உரிமை, அதிலும் குறிப்பாக கருத்துரிமை இரண்டும் ஒன்றின் மூலம் மற்றொன்று முன்னே செல்லவேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் இவர்களுக்கு மாதொருபாகனுக்கும் வெள்ளை யானைக்கும் உள்ள தர வித்தியாசம் தெரியுமா என்று ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் எந்த வழியாக ஜெயமோகனின் எழுத்து ஆங்கிலம் பேசும் மேலை உலகுக்கு சென்றாலும் அதை முழு மனதாக வர்வேற்கிறேன். பிரியம்வதாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்ப்ட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
PEN அமைப்பின் அறிவிப்பு
ஜெயமோகன் குறிப்பு

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

2022-க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சாரு நிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.

விஷ்ணுபுரம் விருது பிரபலமான ஒருவருக்கு அளிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். பூமணியையும் ஞானக்கூத்தனையும் ஒரு சிறு வட்டத்திற்குள்தான் தெரியும், சாருவின் பெயரை ஆயிரத்தில் ஒரு தமிழனாவது கேள்விப்பட்டிருப்பான்/ள் என்றுதான் கணிக்கிறேன். ஆனால் சாருவும் இது வரை விருது என்றெல்லாம் அங்கீகாரம் பெறாதவர்தான்.

என் எண்ணத்தில் முத்துலிங்கமே இந்த கௌரவத்துக்கு உரியவர், அவருக்குப் பிறகுதான் மற்றவரெல்லாம். ஆனால் நானா விருது யாருக்கு என்று முடிவெடுக்கிறேன்? 🙂

சாருவை நான் அதிகமாகப் படித்ததில்லை, படித்த வரை அவர் என் மனதை பெரிதாகக் கவர்ந்ததில்லை என்றாலும் அவரும் விருதுக்கு தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பெரிதாக மனதைக் கவராத எழுத்தாளர் விருதுக்கு தகுதியானவர் என்பது முரண்பாடாக இல்லையா என்று நீங்கள் கேட்க்லாம். சில சமயம் அப்படித்தான். உதாரணமாக காஃப்கா எனக்கான எழுத்தாளர் அல்லர். Metamorphosis நாவலை என்னால் ரசிக்க முடியவில்லை. aதனால் அவரின் எழுத்தின் தரம் தாழ்வானது அல்ல.

For the record: சாருவின் புனைவுகளில் நான் ஜீரோ டிகிரி மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும். ஜெயமோகன் சொல்வது போல பிறழ்வெழுத்துதான். படிக்கும்போது சித்தரிப்புகளால், குறிப்பாக பாலியல் சித்தரிப்புகளால் அதிர்ச்சி அடையத்தான் செய்தேன். ஆனால் அந்த முதல் அதிர்ச்சி அடங்கியதும் வாசகனை அதிர்ச்சி அடையச் செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டவை என்றுதான் மதிப்பிட்டேன். அப்படிப்பட்ட எழுத்துகளுக்கு என் மனதில் பெரிய மதிப்பு இல்லை. அதனாலேயே நான் அவரது பிற புனைவுகளைத் தேடிப் பிடித்து படிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது பழுப்பு நிறப் பக்கங்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களை நான் அறிமுக நூலாகவே மதிப்பிடுகிறேன். விரிவான அலசலாக அல்ல. இந்த மாதிரி அறிமுகங்களை நான் கூட எழுத முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அசட்டு நம்பிக்கையாக இருக்கலாம் 🙂 நானே எழுதக் கூடியது என்று மதிப்பிடுபவை எனக்கு சாதனைகளாகத் தெரிவதில்லை 🙂 க்ரௌச்சோ மார்க்ஸ் சொன்ன மாதிரிதான் –

I refuse to join any club that would have me as a member!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்
விஷ்ணுபுரம் விருது தமிழ் விக்கி பக்கம்

அம்பைக்கு சாஹித்ய அகடமி விருது

2021க்கான சாஹித்ய அகடமி விருது அம்பைக்கு தரப்பட்டிருக்கிறது.  சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்திற்காக. என்னவோ என் ஒன்றுவிட்ட அக்காவுக்கு விருது கிடைத்த மாதிரி சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதைத் தொகுப்பை முதல் முறையாகப் படித்தபோது எனக்கு 22 வயது இருக்கலாம். சுப்ரபாரதிமணியன் பரிந்துரையினால்தான் வாங்கினேன். பத்து பக்கம் படிப்பதற்குள் – முதல் சிறுகதையான வெளிப்பாடு – எனக்கு அப்போது இருந்த value system-த்தை தாக்கியது. குறிப்பாக எத்தனை தோசை சுட்டேன் என்று கணக்கெடுக்கும் வரி. “காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” என்ற கருத்து புரட்சி என்று நினைத்திருந்தது ஒரே கணத்தில் மாறி அதன் போதாமை புரிந்தது. கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதைகள்.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் இன்னொரு நல்ல சிறுகதை, எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமானதும் கூட.

அம்மா ஒரு கொலை செய்தாள் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத் தந்த  சிறுகதை. ஆனால் அது எனக்கு தேய்வழக்காகத்தான் தெரிந்தது. தோழி அருணா அதைப் புரிந்து கொள்ள நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும், அப்போதுதான் புரியும் என்பார். 🙂

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள்,  கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான்.

அவருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை.  தாமதம் ஆனாலும் சரியான தேர்வு. தேர்வுக்குழுவினரான இமையம், பேராசிரியர் ராமகுருநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம், விருதுகள் பக்கம்

இ.பா. இப்போது சாஹித்ய அகடமி ஃபெல்லோ

சாஹித்ய அகடமி ஃபெல்லோவாக இந்திரா பார்த்தசாரதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இ.பா.வுக்கு 91 வயது ஆகிவிட்டதாம். ஏதோ இப்போதாவது தேர்ந்தெடுத்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழுக்காக இது வரை ஐந்தே பேர்தான் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜாஜி (1969), தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (1975), ஜெயகாந்தன் (1996), கமில் சுவலபில் (1996), இப்போது இ.பா.

கி.ரா., அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜா. போன்றவர்களுக்கு இந்த கௌரவம் கொடுத்திருக்கப்பட வேண்டும். அது என்ன ஓரவஞ்சனையோ தெரியவில்லை. சரி, பூமணிக்காவது அடுத்த முறை கொடுத்துவிடுங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், விருதுகள்

கடுப்பேற்றும் சாஹித்ய அகடமி விருது

வாழும் வள்ளுவம் (1987) 1988-இல் சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.

நான் கி.வா.ஜ.வின் வீரர் உலகம் போன்றவற்றுக்கெல்லாம் விருதா என்று குறைப்பட்டுக் கொண்டேன். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது கொடுத்தார்களே என்று மூக்கால் அழுதேன். இந்தப் புத்தகத்தை விருதுக்கு தேர்ந்தெடுத்தவர்களோடு ஒப்பிட்டால் அவற்றை தேர்ந்தெடுத்தவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். என்ன எழவுக்குடா இதற்கெல்லாம் விருது?

நான் குழந்தைசாமியை குறையே சொல்லமாட்டேன். அவர் நல்ல பொறியாளர், கல்வியாளர். அவருக்கு குறள் பிடித்திருக்கிறது. நாலு கட்டுரை எழுதினார். அவரது கருத்துகள் நேர்மையாகத்தான் இருக்கின்றன. உதாரணமாக குறளில் இல்லாதது எதுவுமில்லை என்பதெல்லாம் உயர்வு நவிற்சி என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். கற்பு, பெண் பற்றிய விழுமியங்கள் மாறிவிட்டன , தெய்வம் தொழாள் எல்லாவற்றையும் இன்று ஏற்பது கொஞ்சம் கஷ்டம் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் புதிய கண்ணோட்டம் எதுவுமில்லை. விருதை மறுத்திருக்கலாம் என்று வேண்டுமானால் குறை சொல்லலாம், ஆனால் அவரும் மனிதர்தான், அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.

தவறு எல்லாம் தேர்ந்தெடுத்தவர்கள் மேல்தான். அனேகமாக ஜால்ராக்கள் தேர்வுக்குழுவில் இருந்திருக்க வேண்டும், செல்வாக்குடையவர் என்று தெரிந்து அவருக்கு விருதைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்கள் யாரென்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள், ஆசை தீர நாலு வார்த்தை திட்டிக் கொள்கிறேன். அயோக்கியப் பசங்களா!

பொதுவாக இந்த மாதிரி இலக்கியத் திறனாய்வுக்கு விருதே கொடுக்கக் கூடாது. அதிலும் இத்தனை சாதாரணமான கட்டுரைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் அடுத்தபடி எனக்கும் சிலிகான்ஷெல்ஃபில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதற்கு சாஹித்ய அகடமி விருதைக் கொடுத்துவிடலாம்.

பயங்கரக் கடுப்பாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது

இந்த வருஷத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் நல்லுலகில் விஷ்ணுபுரம் விருது முக்கியமானது. ஆரம்பித்த நாளிலிருந்து தரம் உணர்ந்து விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விக்ரமாதித்யனும் விஷ்ணுபுரம் விருதும் இந்த விருதளிப்பால் பரஸ்பரம் தங்களை கௌரவித்துக் கொண்டிருப்பார்கள்.

கொண்டிருக்கிறார்கள் என்று எழுதாமல் கொண்டிருப்பார்கள் என்று எழுத ஒரே காரணம்தான். நற்றிணை, குறுந்தொகை என்று ஆரம்பித்திருந்தாலும் எனக்கு இன்னும் கவிதைகள் உலகம் கொஞ்சம் தூரம்தான். ஆனால் சமகாலக் கவிஞர்கள் வரை ஒரு நாள் வந்துவிடலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.

அழியாச்சுடர்கள் தளத்திலும் எழுத்து தளத்திலும் அவரது சில கவிதைகள் கிடைக்கின்றன. எனக்கே இன்னும் படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்த கவிதை தட்சிணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்
சுருட்டு பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடை வராதது பொறாமல்
பதினெட்டாம் படி விட்டிறங்கி
ஊர் ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்த காலக் கைத்த நினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

கவிஞருக்கு ஒரு தளம் இருந்தாலும் அது செயல்படவில்லை. கடைசி பதிவு 2009-இல்.

விக்ரமாதித்யன் கவிஞர் என்றே அடையாளம் காணப்படுகிறார். ஆனால் அவர் சில சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். அங்கே இருந்து ஆரம்பிப்பது என் போல கற்பூர வாசனை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கலாமோ என்னவோ. நேர்ந்தது என்ற சிறுகதை இங்கே கிடைக்கிறது.

கவிஞருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

முதல் சாஹித்ய அகடமி விருது

1955-இல் சாஹித்ய அகடமி விருதுகள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழுக்கான முதல் விருது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்டது. மின்புத்தகம் இங்கே.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். தமிழின்பம் பிள்ளைவாள் ஆற்றிய பல உரைகள், பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு. பிள்ளை தமிழறிஞர். அவரது தமிழ் அலங்காரத் தமிழ். சுகமான நடை. கேட்பதற்கு சுவையாக இருந்திருக்கும். ஆனால் அங்கும் இங்கும் பாடல்களை எடுத்து விளக்குவதற்கு எதற்கு விருது?

தமிழ் சாஹித்ய அகடமி விருதுகளின் பிரச்சினையே இதுதான். படைப்புகளை விட அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுக்குதான் பரிசு அதிகமாகக் கிடைத்தது. அதுவும் முதல் 25 வருஷங்களில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தது. விமர்சனங்கள், விளக்கங்கள், அறிமுகங்கள் முக்கியமானவைதான். ஆனால் அறிமுகத்தை விட படைப்பல்லவா முக்கியம்?

என் கண்ணில் சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியமானவை. அதுவும் இந்தியா போன்ற பல மொழிகள் பழக்கத்தில் இருக்கும் நாட்டில் ஒரு மொழியில் இலக்கியம் வேற்று மொழிக்காரர்களுக்கு பரிச்சயம் ஆவதற்கு சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. புத்தகத்துக்கு விருது என்றால் அடுத்தபடி மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். வேற்று மொழியினரைப் போய்ச் சேரும் என்று நப்பாசைப்படலாம். நம்மூரில் ராமலிங்கம் எழுதிய உரைநடை வளர்ச்சி, தண்டாயுதம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் சாஹித்ய அகடமி விருது கொடுக்கிறார்கள். உரைநடையை நன்றாகப் படித்த வேற்றுமொழியினருக்கு உரைநடை எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கலாம். வேதநாயகம் பிள்ளை முதல் நாவலை எழுதினார் என்று தெரிந்து கொண்டு என்ன லாபம்? என்ன சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதவா வேற்று மொழியினர் இந்த மாதிரி புத்தகங்களை படிக்கிறார்கள்? பிரதாப முதலியாரின் சரித்திரத்தைப் படித்தால்தானே தமிழ் இலக்கியம், உரைநடை எப்படி பரிணமித்தது என்று புரிந்து கொள்ளலாம்? நம்மூரில்தான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புத்தகத்துக்கு முதலில் விருது கொடுத்துவிட்டு நாலைந்து வருஷம் கழித்துத்தான் புதுக்கவிதை புத்தகம் ஒன்றுக்கு முதன்முதலாக விருது கொடுக்கும் முட்டாள்தனம் எல்லாம் நடக்கிறது.

சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காகவும் விருது கொடுக்கப்படலாம். அதுவும் முக்கியமே, ஆனால் என் கண்ணில் அது இரண்டாம் பட்சம்தான். தமிழில் பல முறை அப்படி நடந்துவிடுகிறது. பாரதிதாசனுக்கு கொடுப்போம், சமீபத்தில் என்ன புத்தகம் வந்ததோ அதற்குக் கொடுத்துவிடுவோம், அது பிசிராந்தையார் மாதிரி வெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடக்கிறது.

சேதுப்பிள்ளைக்கு அப்படித்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அவரது வானொலி உரைகள், கூட்டத்தில் பேசியவை, தீபாவளி மலருக்காக எழுதியவை என்று பலதையும் கலந்து கட்டி ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். அதற்கு விருது வேறு.

ஆனால் ஒன்று. பிள்ளைவாளிள் புத்தகம் ஆங்கிலத்தில், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், தேவாரம், கம்பன், குற்றாலக் குறவஞ்சி, பாரதி என்று பலருக்கும் நல்ல அறிமுகமாக இருந்திருக்கும். ஏன், இன்றைய தமிழனுக்குக் கூட பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒரு வேளை அப்படி நினைத்துத்தான் பரிசு கொடுத்தார்களோ என்னவோ.

பிள்ளைவாள் அவரது trademark பாணியில் இயற்கைக் காட்சிகள், சிலம்பின் காலம், வள்ளல்கள், கர்ணன்-கும்பகர்ணன், குகன்-கண்ணப்ப நாயனார், பாரதி பாடல்கள் என்று பல தலைப்பில் பேசி எழுதி இருக்கிறார். நிச்சயமாகப் படிக்கலாம். இப்படி சுகமான தமிழில் சுவையாக விடாமல் பேசியதும் எழுதியதும்தான் அவரது முக்கியப் பங்களிப்பு. இதற்கு பரிசு ஏன் என்பதுதான் விளங்கவில்லை. புதுமைப்பித்தன் போய் சில வருஷம் ஆகிவிட்டதுதான், ஆனால் கு.ப.ரா., தி.ஜா., க.நா.சு. எல்லாரும் எழுதிக் கொண்டிருந்தார்களே? குறைந்த பட்சம் கல்கி, பாரதிதாசனுக்காவது கொடுத்திருக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: தமிழின்பம் மின்பிரதி

இமையத்துக்கு சாஹித்ய அகடமி விருது

இமையத்துக்கு 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறதுசெல்லாத பணம் என்ற நாவலுக்காக. தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

சு. வேணுகோபால் எழுதிய வலசை, சுப்ரபாரதிமணியன் எழுதிய ரேகை, தேவிபாரதி எழுதிய நடராஜ் மகராஜ், கே. பஞ்சாங்கம் எழுதிய அக்கா ஆகிய நாவல்களும், கோவை ஞானி (என்றுதான் நினைக்கிறேன்) எழுதிய என் கையெழுத்துப் படிகளிலிருந்து இலக்கியத் திறனாய்வு, டி.எஸ். நடராஜன் எழுதிய தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் ஆகிய திறனாய்வு நூல்களும், கலாப்ரியா எழுதிய பனிக்கால ஊஞ்சல் என்ற கவிதைத் தொகுப்பும், ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய பனைமரமே! பனைமரமே! என்று பண்பாட்டு நூலும் பரிசீலனையில் இருந்திருக்கின்றன. சுப்ரபாரதிமணியனுக்கும் வேணுகோபாலுக்கும் கலாப்ரியாவுக்கும் இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

பிற மொழிகளில் கேள்விப்பட்டிருந்த ஒரே பெயர் – வீரப்ப மொய்லி! மொய்லி முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக்விஜயம் என்ற காவியத்தை கன்னடத்தில் எழுதி இருக்கிறாராம், அதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

இமையத்தை நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில சிறுகதைகளும் என் மனதில் நிற்கவில்லை. ஆனால் படித்தபோது இலக்கியம் படைத்திருக்கிறார் என்றுதான் மதிப்பிட்டிருக்கிறேன்.

மனதில் நின்றது இரண்டு விஷயங்கள்தான். இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இரண்டாவதாக தனது நாவலில் வரும் பெண்கள் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு