பாலகுமாரன்: ஆனந்த வயல்

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு. ஒரிஜினல் பதிவு இங்கே.

balakumaranஎன் கணிப்பில் பாலகுமாரன் நல்ல இலக்கியவாதியாக வந்திருக்கக கூடியவர், அதற்கான திறமை உள்ளவர். ஆனால் அவருக்கு தெரிந்த வெற்றி என்பது வாரப் பத்திரிகை உலக வெற்றிதான். தி.ஜா. அவரது ஆதர்சம் என்று சில சமயம் தோன்ற வைத்தாலும் அவருடைய ஆதர்சம் சுஜாதாதான், அவருடைய கனவு சுஜாதா போல பிரபலமாவதுதான் என்றுதான் நினைக்கிறேன். தொடர்கதைகளின், மாத நாவல்களின் வடிவமைப்பு அவரது வீச்சை குறுக்கிவிட்டது. பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது, அவரும் நீர்த்துப் போய்விட்டார். அதுவும் தொழில் நுட்ப ரீதியாக அவர் வளரவே இல்லை. எப்போதும் உரையாடல்கள் மூலம்தான் கதை நகரும். சொல்லாமல் சொல்வது போன்ற நுணுக்கங்கள் (subtlety) அறவே கிடையாது. அவரது நல்ல படைப்புகளைப் படிக்கும்போது இவர் முதல் வரிசை இலக்கியவாதியாக பரிணமிக்காமல் போய்விட்டாரே என்ற வருத்தம் (regret) அவ்வப்போது ஏற்படுகிறது.

ஆனால் சில இடங்களில், சில நாவல்களில் – குறிப்பாக ஆரம்ப கால நாவல்களில் அவரது திறமை மிளிர்கிறது. அப்படிப்பட்ட நாவல்களில் ஒன்று ஆனந்த வயல்.

ஆனந்த வயல் உலகத்தரம் வாய்ந்த நாவல் என்று சொல்வதற்கில்லை. குறைகள் இல்லாத நாவல் இல்லை. மெலோட்ராமா அதிகம். அங்கங்கே வலிந்து sexual references-ஐ புகுத்தி இருக்கிறார். ஆனால் எந்த ஒரு நாவலுக்கும் வேண்டிய அடிப்படைத் தேவையான சுவாரசியம் இருக்கிறது. பாத்திரங்களில், உரையாடல்களில் நிஜம் தெரிகிறது. சம்பவங்களில்தான் கொஞ்சம் செயற்கைத் தன்மை. முதலிலேயே திட்டமிட்டு எழுதாமல் வாராவாரம் தொடர்கதையாக எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன், அதனால் அவ்வப்போது கதையை எப்படி கொண்டு போவது என்ற குழப்பம் தெரிகிறது. ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் போகப் போகக் குறைந்துவிடுகிறது.

ஆனந்த வயலை முதல் முறையாகப் படிக்கும்போது – 25, 30 வருஷங்களுக்கு முன் – குறைகள் தெரிந்தாலும் அவை பெரிதாகப் படவில்லை. மறுவாசிப்பில் குறைகள்தான் தெரிகின்றன. இருந்தாலும் சில காட்சிகள், பாத்திரப் படைப்பு இந்த நாவலை இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம் ஆக்குகிறது என்றுதான் கருதுகிறேன்.

ஆனந்த வயலின் பெரிய பலம் பாத்திரங்கள். அதுவும் குறிப்பாக நாயகன் பன்னீர்செல்வத்தின் மாமியார். இந்த மாதிரி ஆட்கள் இப்போதும் இருப்பார்கள் என்று தோன்றவில்லை, ஆனால் சிறுவனாக இருந்த காலத்தில் நான் பார்த்து பழகி இருக்கிறேன். பதினைந்து பதினாறு வயதுக்குப் பின் – லுங்கி கட்ட ஆரம்பித்த பின் – நான் அவர்களுக்கு திடீரென்று வேற்று மனிதனாகிவிட்டது அதிசயப்படுத்தியது. அந்த மாதிரி மனிதர்களை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு கிராமத்து “பெரிய” மனிதர்கள் சூழல், மிகுந்த அன்புள்ள கணவன் மனைவி, “பங்காளிகளுக்குள்” உள்ளுக்குள் புழங்கும் கடுப்பு எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

அதே போல சில காட்சிகளும் – கப்பலோட்டிய தமிழன் படத்தை இலவசமாகத் திரையிடும் பன்னீர், அடிக்க வந்த செண்பகாவின் உறவினர்களுக்கு சுக்குக்காப்பி வைத்துக் கொடுக்கும் பன்னீரின் அப்பா, கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் செல்லும் பன்னீர் – நன்றாக இருக்கும்.

இதெல்லாம் இருந்தாலும் கதை கொஞ்சம் பலவீனமானது. கதையில் முடிச்சை எப்படிப் போடுவது என்று சரியாகப் புரியாமல் என்னவோ பழைய கதை, பங்காளி கதை என்றெல்லாம் இழுத்திருப்பார்.

என்ன கதை? ஊர் பெரிய மனிதர் குடும்பம். மகன் பன்னீர், மருமகள் செண்பகா. காதல் திருமணம். முதலில் இரு குடும்பங்களும் எதிர்த்தாலும் திருமணம் நடக்கிறது. சில வருஷங்கள் ஆகிவிட்டன, ஆனால் குழந்தை இன்னும் இல்லை. அது குடும்பத்தில் அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. செண்பகாவே இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள், பன்னீர் கடுமையாக மறுக்கிறான். பன்னீர் பெரிதும் மதிக்கும் செண்பகாவின் தாயார் இறக்கும்போது இன்னொரு பெண் வாசனையே கூடாது என்று பன்னீரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். பன்னீரின் அப்பா தான் இறக்கும்போது நீ இன்னொருத்தியை மணப்பாயோ, வைப்பாட்டியாக வைத்துக் கொள்வாயோ, எனக்கு வாரிசு உருவாக வேண்டும் என்று பன்னீரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இதற்கிடையில் அப்பாவின் தொடுப்பு, தொடுப்பு மூலம் பிறந்த மகன் சுப்ரமணி பற்றி பன்னீருக்கு தெரிய வருகிறது. சுப்ரமணியின் மகனை பன்னீர்-செண்பகா தத்து எடுத்துக் கொள்ள முயல, வார்த்தைகள் தடித்து ரசாபாசமாகிவிட, சுப்ரமணி இறந்துவிட, தொடுப்பை வெளிப்படையாக தன் அம்மா ஸ்தானம் என்று பன்னீர் ஏற்றுக் கொள்கிறான். தத்தும் எடுத்துக் கொள்கிறான். செண்பகாவும் கருவுறுகிறாள். சுபம்!

குறைகள் உள்ள நாவல்தான். இருந்தாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: பாலகுமாரனின் தளம்

பாலகுமாரன்: பந்தயப்புறா

20-25 வருஷங்களுக்கு முன் படித்தபோது இந்த நாவலைத்தான் பாலகுமாரனின் மிகச் சிறந்த படைப்பாக மதிப்பிட்டிருந்தேன். இதன் தாக்கத்தில், அவர் தனது உச்சத்தை அடைந்திருந்த வேறு சில புத்தகங்களின் தாக்கத்தில், சில பல மாதங்களாவது பாலகுமாரனை தி.ஜா.வை விடவும் உயர்ந்த நிலையில் மதிப்பிட்டிருந்தேன். என் அதிர்ஷ்டம், வெகு சீக்கிரத்தில் புத்தி தெளிந்துவிட்டது.

இன்று பந்தயப் புறாவை மீண்டும் வாசிக்கும்போது குறைகள் நன்றாகவே தெரிகின்றன. பாலகுமாரனுக்கு subtlety என்பது சுட்டுப் போட்டாலும் வரவில்லை. சொல்லாமல் சொல்வது என்றால் என்ன என்று தெரியவே இல்லை. அனேக பாத்திரங்களுக்கு அவர்களை விட்டால் உலகத்தில் எவருமில்லை. இத்தனைக்கும் இப்படி தான் தான் என்று எண்ணங்கள் தன்னையே சுற்றி வருவது மிக இயற்கையான விஷயம், ஆனால் பாலகுமாரனுக்கு அதில் வேறுபடுத்தி எழுதவே தெரியவில்லை, அக உலகத்தை அவர் காட்டுவது மிகத் தட்டையாக இருக்கிறது.

ஆனால் புத்தகத்தின் நிறைகளும் தெரிகின்றன. எண்பதுகளின் பின்பகுதியில் சென்னையில் கல்வி நிலையில் பின் தங்கி இருக்கும் சோழிய வெள்ளாளர் ஜாதியில் ஒரு இளம்பெண். அவளின் துடிப்பு, மீன் குழம்பு-மிளகு ரசம் உலகத்தை விட்டு எப்படியாவது வெளியே வரமாட்டோமா என்று அவள் தவிப்பது, அவள் சந்திக்கும் தடைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் ஒரு சிறு அலுவலகத்தின் உட்பூசல்கள் நன்றாகக் காட்டப்படுகின்றன. புற உலகச் சித்தரிப்பில் நுண்விவரங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் “உறவுகள்” – அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களோடு, அண்ணிக்கும் நாத்திக்கும் இடையே, துபாய் போய் வந்த அண்ணனின் உலகம் விரிந்துவிடுவது போன்றவற்றை நன்றாக விவரித்திருக்கிறார்.

என்ன கதை? திருவளர்செல்விக்கு வயது 19. ப்ளஸ்டூவோடு படிப்பை நிறுத்தியாயிற்று. அவள் சமூக வட்டத்தில் அடுத்த படி திருமணம்தான். கொஞ்சம் பணப்பிரச்சினையால் தள்ளிப் போகிறது. செல்விக்கு பாலகுமாரனின் புத்தகங்கள் பிடித்திருக்கின்றன – குறிப்பாக அகல்யா. சிவசுவைப் போல அன்பு செலுத்தும் யாராவது உண்டா என்று கனவு காண்கிறாள்.

இந்த சூழலிலிருந்து வெளியேற செல்வி வேலைக்குப் போக விரும்புகிறாள். அதை அவள் அண்ணி மூர்க்கமாக எதிர்க்கிறாள். அண்ணன் ஆதரவால் வேலை. வேலையில் பூசல்கள், சச்சரவுகள். செல்வி வெகு விரைவாக சாமர்த்தியமாக நடந்து கொள்ள கற்றுக் கொள்கிறாள். மேலே படிப்பு, பணம், முன்னேற்றம் என்று பறக்க ஆரம்பிக்கிறாள்.

இன்றும் செல்வி போன்ற சமூக நிலையில் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி முனைந்து எழுதியதற்கு, அவர்கள் உலகத்தை காட்டியதற்கு பாலகுமாரனுக்கு நிச்சயமாக சபாஷ் போடலாம். ஆனால் அவருக்கு எழுதுவதின் நுட்பங்கள் தெரியவே இல்லையோ, இல்லை நமக்குத் தெரிந்ததற்கு மேல் எதுவுமில்லை என்று நினைத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. மீள்வாசிப்பில் இதே கருவை தி.ஜா. எழுதி இருந்தால் இன்னும் எத்தனை காத்திரமாக இருந்திருக்கும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. (முதல் வாசிப்பில் அப்படி எல்லாம் தோன்றவில்லை.)

நொட்டை சொன்னாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பாலகுமாரனின் படைப்புகளில் இதை இன்னும் மிகச் சிறந்த ஒன்றாகவே மதிப்பிடுகிறேன். இன்னும் கொஞ்சம் நயத்துடன் எழுதி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரன்: தாயுமானவன்

பாலகுமாரனின் ஆரம்ப் கால கதைகளில் ஒன்று. தொடர்கதையாக வந்தது என்று நினைவு.

என்ன கதை? பி.எஸ். மோட்டார் தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவன். கம்பெனிக்கு நஷ்டமும் வரக்கூடாது, தொழிலாளர் பிரச்னைகளும் தீர வேண்டும், தொழிலாளிக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன், நடத்திக் காட்டுபவன். ஒரு முறை கௌரவப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வேலையை விடும்படி நேர்கிறது. மனைவி வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. இன்று கூட மனைவி வேலைக்குப் போய் கணவன் வீட்டு வேலை பார்த்தால் புருவத்தை தூக்குகிறார்கள். இது முப்பது முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய நாவல். அதில் பல பிரச்சினைகள். கடைசியில் பி.எஸ்சுக்கு பம்பாயில் வேலை கிடைப்பதோடு முடிகிறது.

பால்குமாரனின் தொடர்கதைகளில் வழக்கமாக நடப்பது ஒன்று உண்டு. அருமையாக ஆரம்பிப்பார்; பாதி தொடர்கதை வந்த பிறகு கதையை எப்படி தொடர்வது என்று தெரியாது. கதைப்பின்னல் அங்குமிங்கும் அலைபாயும். பல முறை அவசர அவசரமாக முடித்துவிட்ட மாதிரி தெரியும். இது வாரப் பத்திரிகை தொடர்கதைகளின் பிரச்சினையாகக் கூட இருக்கலாம். சுஜாதா தொடர்கதைகளிலும் இது அவ்வப்போது தெரியும்.

தாயுமானவனிலும் அப்படித்தான். ஆரம்ப அத்தியாயங்கள் அருமை. அன்றைய தொழிற்சாலை, பொறுப்புள்ள தொழிலாளர் தலைவன், தொழிற்சங்கம்-நிர்வாகம் பேரங்கள், தொழிற்சாலையில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகள், பாசமுள்ள குடும்பம் எல்லாம் மிக அருமையாக சித்தரித்திருப்பார். அன்றைக்கு அஷோக் லேலண்டோ கிர்லோஸ்கரோ இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறார். பி.எஸ்ஸுக்கு வேலை போவதும், மனைவி வேலைக்குப் போக தான் வீட்டில் இருப்பதும் நல்ல திருப்பம். அதற்கப்புறம் சொதப்ப ஆரம்பிக்கிறார். அங்கங்கே இழுக்கிறார். தேவை இல்லாமல் பி.எஸ்சை சைட் அடிக்கும் பெண் ஒருத்தி வேறு. எப்படா முடியும் என்று நினைக்க வைக்கிறார். நல்ல வேளையாக முடிவு நன்றாக அமைந்துவிட்டது. வீட்டுக்குப் போய் என்ன கிழிக்கப் போகிறோம், தெரிந்த வித்தையை செயல்படுத்த கிடைத்த வாய்ப்பை விடுவானேன் என்று பி.எஸ். காரை ரிப்பேர் செய்யும் காட்சி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வணிக நாவலா இலக்கியமா என்று தீர்மானமாகச் சொல்வது கஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் முதல் பாதியின் மெய்நிகர் அனுபவம் இந்த நாவலை இலக்கியம் ஆக்குகிறது – வாரப் பத்திரிகை தொடர்கதையின் எல்லா பலவீனங்களும் இருந்தால் கூட. கதை சுவாரசியமாகப் போகிறது. அதனால் நொட்டை சொன்னாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரனின் “கரையோர முதலைகள்”

பாலகுமாரன் ஒரு intriguing எழுத்தாளர். அவருடைய திறமை அவரது எழுத்தில் முழுதாக வெளிப்படவில்லை. வெற்றி என்பதை அவர் வாரப் பத்திரிகை உலகில் வெற்றி என்றே புரிந்துகொண்டிருந்தார். பிராபல்யத்துகான தேடல், வாசகனை அதிர்ச்சிக்குண்டாக்க வேண்டும் என்ற விழைவு, கொஞ்சம் பெரிசு ஆனதும் உபதேசம் செய்யும் மனநிலை இவை எல்லாம் அவரை நீர்த்துப் போகவைத்துவிட்டன என்றேதான் கருதுகிறேன்.

அதிலும் ஆரம்பத்தில் இருந்த சூடு, படைப்புகளில் இருந்த நேர்த்தி எல்லாம் காலம் காலம் போக குறைந்துவிட்டது. நீர்த்துப் போய்விட்டார். ஒரு காலத்தில் – மெர்க்குரிப் பூக்களையும், ஆனந்த வயலையும், இரும்புக் குதிரைகளையும், கரையோர முதலைகளையும், பந்தயப் புறாவையும், அகல்யாவையும் மட்டுமே நான் படித்திருந்த காலத்தில் – இவரால் திருப்பித் திருப்பி ஒரே சூழலை எழுதும் தி.ஜா.வை மிஞ்ச முடியும் என்றே நான் கணித்திருந்தேன். தி.ஜா.வின் அருகே இவரால் நிற்கக் கூட முடியாது என்று இப்போது தெரிகிறது. அப்படி குறுகிய காலத்துக்கு நினைத்தது என் முட்டாள்தனத்தைத்தான் காட்டுகிறது!

கரையோர முதலைகள் அவரது பொற்காலத்தில் – எண்பதுகளின் பிற்பாதி, தொண்ணூறுகளின் முற்பாதி – எழுதப்பட்டது. வாரப்பத்திரிகையில் (விகடன்?) தொடர்கதையாக வந்தது. செக்ஸ் பற்றி கொஞ்சம் விவரித்து – அன்றைய வாரப் பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சம் மீறி – நம்மை எல்லாம் ஷாக் செய்யும் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது. அம்மா பெண்ணைப் பார்த்து “சூடான சாம்பலை வைத்து தேய்த்துக்கொள்” என்று சொல்வாள். அந்தக் காலத்தில் அதுவும் விகடனில் அப்படி ஒரு வரி அதிர்ச்சிதான். ஆனால் அப்படி பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சூண்டு மீறுவது பல வருஷஙகளாக சாண்டில்யனும் சுஜாதாவும் புஷ்பா தங்கதுரையும் செய்து கொண்டிருந்ததுதான். இப்படி எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக மீறி ஐம்பது வருஷத்துக்கு முன்பிருந்த எல்லைகள் இப்போது கண்ணுக்கே தெரிவதில்லை.

சரளமான, சிம்பிளான, நேரடியான கதை. நாயகி ஸ்வப்னா இரண்டு பேரால் ஏமாற்றப்படுகிறாள். அது அவளிடம் பெரிய வன்மத்தைக் தூண்டி இருக்கிறது. இன்று உத்தமக் கணவன், நல்ல நட்பு எல்லாம் இருந்தாலும் அந்த வன்மம் அவ்வப்போது பிறரிடம் வெடிக்கிறது. அவர்களைப் பழி வாங்க முயல்கிறாள்.

பாலகுமாரனின் வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் ஒரு pattern உண்டு. ஆர்ப்பாட்டமாக ஆரம்பிப்பார், படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவார், எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறுவார். செயற்கையாக ஒரு crisis-ஐ உருவாக்கி அதை climax ஆகக் காட்டுவார். அகல்யா, ஆனந்தவயல் என்று பல நாவல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதிலும் அப்படித்தான். கடைசி பழி வாங்கும் முயற்சிகள், பாய்ஃப்ரெண்ட் வேறு திருமணம் வேறு என்று பேசும் இளம்பெண் எல்லாம் செயற்கையாக இருக்கின்றன.

இந்தக் கதைக்கு அன்றிருந்த தாக்கத்தை இன்று உணர்வதே கஷ்டம். கோபக்காரி நாயகிகளே அப்போதெல்லாம் அபூர்வம். இவளோ நடு ரோட்டில் செருப்பைக் கழற்றி அடிக்கிறாள். இரண்டு பேரோடு பழகிய பிறகு உத்தமக் கணவன் என்றால் அலுவலகத்துக்கு மதிய உணவு கட்டிக் கொண்டு வாரப் பத்திரிகையை ரயிலில் படிக்கும் பெண்கள் கூட்டம் கவரப்படும். பழி வாங்கத் துடிக்கும் நாயகி என்பது புதுமை. அங்கங்கே பாலியல் வர்ணனைகள் வேறு. (அப்போதெல்லாம் கழுத்துக்கே கீழே கை போனது என்று படித்தாலே கிளர்ச்சி அடையும் பருவம்). நடுநடுவே கவிதை வேறு. அதுவும் முதலைகளைப் பற்றி. தொடர்கதை பெரிய வெற்றி பெற்றது.

இன்றைக்கு மீண்டும் படிக்கும்போது ஸ்வப்னா அலுவலகத்தில் உண்டாக்கும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்மையாகத் தெரிகின்றன. கோபக்கார மனைவி, மனைவியை சாந்தப்படுத்த கணவனின் முயற்சிகள், போலீஸ் கேஸ் வேண்டாம் என்று நகர்ந்து போக முயற்சிப்பது எல்லாம் உண்மையாகத் தெரிகின்றன. அதாவது ஸ்டீரியோடைப் – ஸ்டீரியோடைப் என்பது முற்றிலும் சரியல்லதான், ஆனால் கோபக்கார மனைவி, உத்தமக் கணவன் என்பது அவர்களை விவரித்துவிடுகிறது – படைப்பையும் மீறி உண்மையான சித்தரிப்பு தெரிகிறது. அதனால்தான் இதை பாலகுமாரனின் வெற்றியாகக் கருதுகிறேன்.

கரையோர முதலைகளை ஜெயமோகன் தனது சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் வைக்கிறார். ஜெயமோகனுக்கு நேரடித்தன்மை, சரளம் போன்றவை குறைகள். எனக்கு அவை உத்திகள். எனக்கு இது முதல் நிலை இலக்கியம் அல்லதான், ஆனால் இலக்கியமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
பாலகுமாரன் பற்றி ஜெயமோகன்

இயக்குனர் ஷங்கர் பாலகுமாரனின் “கடலோரக் குருவிகள்” நாவலுக்கு எழுதிய முன்னுரை

பாலகுமாரன் மறைந்தபோது இதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன், இப்போதுதான் முடிந்தது.

பாலகுமாரனை ஆசானாக ஏற்ற ஒரு பெரிய கூட்டமே உண்டு. அவரது தாக்கம் பெரிதாக இருந்த காலம் இருந்தது. இயக்குனர் ஷங்கர் அவரது எழுத்தில் மிகவும் impress ஆகி எழுதிய முன்னுரை இந்தத் தாக்கத்தை நன்றாகவே காட்டுகிறது. ஓவர் டு ஷங்கர்!

‘இந்தியன்’ ஷூட்டிங் நெருங்கிடுச்சு. போட்ட திட்டப்படி ஷூட்டிங் நடத்தத் தயாராய் இருந்தாலும் வெளியே ஏகப்பட்ட பேச்சு. ஆரம்பிக்குமோ ஆரம்பிக்காதோ? ஆகஸ்ட்லதான் ஷூட்டிங்காமே? பிரச்சினைதான், கஷ்டம்தான் என்கிற பேச்சு.

இந்த சூழ்நிலையில கடைசி நேரத்தில கழுத்தறுத்தான் கூடவே உழைச்ச டெக்னீஷியன். உங்க படத்தில நடிக்கறதே பெரிய பாக்கியம்னு நெளிஞ்சு வழிஞ்சு நடிக்க ஒத்துக்கிட்ட ஆர்டிஸ்ட் கடைசி நிமிஷத்தில ஏகப்பட்ட பணம் கேட்டு தட்டிக் கழிச்சாங்க. வேற சில விஷயங்களும் திருப்தியா வரலே.

சோர்ந்து போயிருந்தபோது உங்க புத்தகத்தை – கடலோரக் குருவிகள் – எடுத்தேன். டக்குனு அந்த கர்ப்பிணி மேட்டர் கண்ணில பட்டு மறுபடி மறுபடி படிச்சேன்.

படிக்கப் படிக்க ஒரு பக்கம் மனசுக்குள்ளே அடுத்தடுத்து கேள்விங்களா வருது. உடனேயே அதுக்குண்டான பதில்களையும் அடுத்தடுத்து சொல்லி இருக்கீங்க பாலா.

31, 32, 33-ஆவது அத்தியாயத்தை எடுத்து ஒரு ஆள் தன் ட்ரஸ்ஸிங் டேபிள்ல ஒட்டிக்கலாம். டெய்லி சோர்வடையும்போது டானிக்கோ க்ளூக்கோசோ மருந்தோ தேவையில்லை. உங்க எழுத்தே போதும்.

வாழ்க்கைல பல ஸ்டேஜ்ல உங்க எழுத்து என் சிந்தனையை பாதிச்சிருக்கு. மாத்தியிருக்கு. என்னுடைய தற்போதைய வெற்றிக்கு நிச்சயம் உங்க எழுத்தும் ஒரு காரணம். உஙக எழுத்தைப் படிச்சா போதும், நல்ல ஆரோக்கியமான சிட்டிசன்ஸ் உருவாயிடுவாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. சினிமாவில பிஸியானாலும் உங்க எழுத்தைப் படிக்கற ஆர்வம் எனக்கு குறையல.

பத்து வருஷம் நான் மோல்டாயிட்டிருக்கிற ஸ்டேஜ்ல உங்க எழுத்துக்களைப் படிச்சதாலதான் நான் மன ஆரோக்கியமுள்ள ஆளானேன். இதுக்கு நீங்க காரணம்கறதை என்னால மறுக்க முடியாது. மறக்க முடியாது.

பத்து வருஷம் கழிச்சு இப்ப இருக்கிற மனநிலைக்கும் மெச்சூரிட்டிக்கும் உங்க எழுத்து ஆறுதலா பொருந்தி வரதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. You are always a good teacher, a friendly teacher.

பதினஞ்சு வயசுக்கு மேல ஆயுசு வரைக்கும் எந்த ஸ்டேஜ்ல உங்க எழுத்தைப் படிச்சாலும் நீங்க படிக்கறவங்களுக்கு உபயோகமாறீங்க. இது ரொம்பப் பெரிய விஷயம்.

உங்க எழுத்தைப் படிக்கற அத்தனை பேருக்கும் ஒரு true friend கிடைக்கறது நிச்சயம். பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு true friend-ஆ ஒருத்தர் வாழறது எவ்வளவு பெரிய விஷயம்! இது யாருக்குக் கிடைக்கும்!

உங்க எழுத்தை எல்லாரும் படிக்கணுமேன்னு ஆதங்கமாவும் கவலையாவும் இருக்கு.

வேலையில் perfection முக்கியம் என்று சொல்வது, நம்மைச் சுற்றி திருடர்கள், பொய்யர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று அறிவுறுத்துவது, நேர்மையற்ற வெற்றி கண்டு மயங்காதே என்று தேற்றுவது, நல்லவர்கள் தாங்குவது என்று நிறைய நிறைய இந்த நாவலில் சொல்லித் தருகிறீர்கள்.

எப்படி ஒருவன் தன்னை உருவாக்கிக்கணும்னு எவ்வளவு அன்பா, அழகா, வக்கணையா சொல்லிக் கொடுக்கறீங்க!

ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித் தரணும்னு நினைச்சு தள்ளிப் போயிக்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படிக்க, ஆட்டோமாட்டிக்கா முன்னுரை லெட்டர் எழுத உட்கார்ந்துட்டேன். அடிமனசுலேருந்து ஒரு பொங்கு பொங்கி எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுதான் உங்க வெற்றி பாலா. You moved me so many times, so many occasions, as also right now. உங்க எழுத்து ஒரு சொத்து பாலா. எல்லாரும் மனசுங்கற bank-ல fixed deposit-ஆ போட்டு வச்சிக்கணும்.

என்றென்றும் அன்புடன்
ஷங்கர்

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

இரும்பு குதிரைகள் முன்னுரை

எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் பாலகுமாரனின் இரும்பு குதிரைகளுக்கு எழுதிய முன்னுரை. பாலகுமாரனுக்கு அஞ்சலியாக இதைப் பதிக்கலாம் என்று மீண்டும் படித்தபோது நான் படித்த இரும்பு குதிரைகள் புத்தகத்தைத்தான் இவரும் படித்தாரா, என்னவோ இத்தனை சிலாகிக்கிறாரே என்று தோன்றியது. 🙂 முன்னுரையை எழுத நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. கல்கியில் தொடர்கதையாக வந்தபோது நிறைய கவனம் பெற்றது என்று நினைவு, மாலனும் புல்லரித்துப் போயிருக்கிறார்.

பாலா, நினைவிருக்கிறதா உனக்கு?

உணக்கையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்த ஜூன் மாதம். நடுங்கி ஒடுங்குகிற குளிரோ, புழுங்க அடிக்கிற சூடோ இல்லாத இதம்.

நினைத்துக் கொண்டாற்போல கிளம்பி நீ தஞ்சாவூர் வந்தாய். திடுமென்று என் ஆஃபீஸில் பிரசன்னமானாய். அந்த க்ஷணமே ஆஃபீஸை உதறினோம். அடுத்த நிமிஷம் பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டோம்.

நிசப்தம் இசையாய் பெருகி நதியாய் ஓடுகிற திருவையாறு. ‘களுக் களுக்’ என்று பக்கத்தில் சுருள்கிற ஆற்றின் சிரிப்பிலும், பனித்துளியாய் பெய்கிற பலாப்பூவிலும், எங்கேயோ சோற்றுக்கு கரைகிற காகத்தின் குரலிலும் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற தியாகப் பிரம்மம்.

எத்தனை பெரிய உயிர்! சங்கீதத்திலும் தவத்தையும் உருக்கத்தையும் ஒன்றாய் இணைத்த மனுஷன். எளிமையும் இனிமையும் கலந்த வடிவம். சொல்கிற விஷயத்துக்கு ஏற்ற வடிவம். புரண்டு புரண்டு கற்ற கல்வி. உயிர் தொட்டுப் பெற்ற அனுபவம். மனம் குவித்துத் தேறிய சிந்தனை. அடிபட்டுத் துடித்த வலி எதுவுமில்லாது வெறும் பொழுதுபோக்காகவே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் மூடனுக்குக் கூட, நாம் கூட பாடிவிடலாம் என நம்பிக்கையும், பிரமிப்பும், சந்தோஷமும் தரும் உருவங்களைப் படைத்த கலைஞன்.

இவனை ராஜாக்கள் கும்பிட்டார்கள். வித்வான்கள் விற்றுப் பிழைத்தார்கள். வியாபாரிகள் கேட்டு இளைப்பாறினார்கள். ஜனங்கள் கேட்டு நெகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு தாசி அல்லவோ கோவில் கட்டினாள்!

தாசி மாதிரிதான் காவிரி புரள்கிறது. பூணூல் மாதிரி ஒடுங்கின காவிரியைப் பார்த்திருக்கிறோம். கணுக்காலைத் தொட்டு வணங்கிப் போன காவிரியைப் பார்த்திருக்கிறோம். பாலத்தின் முதுகின் மீது சீற்றத்துடன் துப்பிவிட்டு விரைகிற காவிரியைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அன்றைக்கு காவிரி புரள்கிறது. தாசி மாதிரி புரள்கிறது. காலை அகட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு வெட்கமில்லாமல் சிரிக்கிறது. மோகம் கொண்ட பொம்மனாட்டி காரணமின்றி பின்னலை முன் வீசி, பிரித்து கால் மாற்றிப் பின்னியது போல சந்தேகம் பேசுகிறது. புத்திசாலிப் பெண் போல வதைக்கிறது. தொடுவாயோ என்று சீண்டுகிறது. தொட்டால் மாட்டிக் கொண்டாய் என மிரட்டுகிறது.

நமக்குத் தாங்கவில்லை. இறங்கிவிட்டோம். உடுத்தின துணியை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு அவர் அகத்திலேயே துண்டு வாங்கிக் கொண்டு இறங்கிவிட்டோம்.

நெஞ்சு வரை இறங்கிவிட்டோம். காவிரிக்கு இணையாகத் துளைந்தோம். கையில் நீர் வாரி வான் நோக்கி இறைத்தோம். நாசித் துளையைப் பொத்தி தலை நனைத்து சிலும்பிச் சிலும்பி மூழ்கிக் களித்தோம். இடுப்புத் துண்டைக் காவிரி உருவிற்று. மனம் தளை அறுந்து காற்றில் மிதந்தது. நாம் கற்ற பாசுரங்களை இறைத்தோம். நெஞ்சில் இறங்கி ஊறின பாரதியைத் துப்பினோம். முறை வைத்து கவிதை கட்டி காற்றில் ஊதினோம். மனசு அடங்கவில்லை. தமிழின் புதிய ருசி புரிந்தது. வழக்கமான வார்த்தைகளுக்கு வேறு புதிய அர்த்தங்கள் துலங்கின.

அன்றைக்கு காவிரியின் சுழிகளை எனக்கு அடையாளம் காட்டினாய். அதன் நெளிவுசுளிவு பற்றி கற்றுக் கொடுத்தாய்.

காவிரியை விடப் பெரிய இன்னொரு நதியை அடையாளம் காட்டி சொல்லித் தந்தான் இன்னொருவன்.அதுவும் மோகம் கொண்டு அழைக்கிற நதிதான். இறங்கினால் ஆளைப் புரட்டி விடுகிற நதிதான். இந்த வண்டல் சேர்ந்துவிட்டால் பிறகு எதை முழுங்கினாலும் பசேல் என்று கிளைத்து எழுந்து நிற்கும். புத்தகப் படிப்பு, எழுத்து, கவிதை, இலக்கியம் என்று சின்னச் சின்னதாய் ஓடைகள் சேர்ந்து பெருகின வாழ்க்கை நதி அது.

படிப்பை முடித்துக் கொண்டு ஒரு வேலையை சம்பாதித்துக் கொண்டு சென்னை வந்த எனக்கு ஏற்பட்ட முதல் ஸ்னேகம் அவன்தான். அது அதிருஷ்டம்தான். அவன்தான் உன்னை எனக்குச் சொன்னான். என்னை உனக்குச் சொன்னான். சின்னப் பத்திரிகை, நல்ல சினிமா என்று ஒரு கதவைத் திறந்தான். புத்தகப் படிப்போடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. வெறுமனே பேசிக் களைத்து ஓய்ந்துவிடவில்லை. தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறது என்ற பிரமையில் கிறங்கிப் போய் உட்கார்ந்துவிடவில்லை. கற்றதை எழுத்தில் வடித்துக் காண்பித்தான்.

சுறுசுறுவென்று, ஆனால் உறுத்தாத கூர்மையும் ஒளியும் கொண்ட எழுத்து அவனுடையது. அவன் குரலைப் போலவே அவன் எழுத்தும் உரத்து நான் பார்த்ததில்லை. ஆனால் சொல்வதைத் தீர்மானமாக, அழுத்தமாக, நயமாக சொல்கிற எழுத்தாய் அது இருக்கும். அரைப் பக்க சினிமா விமர்சனம் ஆனாலும் சரி, நாலு வரி கேள்வி பதிலானாலும் சரி, கவிதை, சிறுகதை, நாவல் என்று கனமான விஷயங்கள் ஆனாலும் சரி.

ஞாபகம் இருக்கிறதா? கணையாழி கடைசிப் பக்கத்தில் சுஜாதா ஒரு மானசீகத் தொகுப்பு வெளியிட்டார். கு.ப.ரா., லா.ச.ரா., புதுமைப்பித்தன் என்று பெரிய பெயர்களோடு தொடங்கிய பட்டியலில் நமது தலைமுறையில் இருந்தது அவன் பெயர் ஒன்றுதான். தி. ஜானகிராமன் நன்றாய் எழுதுகிற புதியவர்கள் பற்றிய தில்லி இலக்கிய உரையாடலில் ஸ்பான்டேனியஸாகச் சொல்லிய பெயர் அவனுடையதுதான்.

அவனை இன்று ஆஃபீஸ் தின்றுவிட்டது. லேடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆஃபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆஃபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப் போனான். அவனைக் கண்டு வியந்துபோய் இங்கே நீ அவனை நாவலாக்கி இருக்கிறாய். அவனை நாயகனாக்கி இருக்கிறாய்.

கவிதையும் இலக்கியமும் வாழ்க்கையும் ஒன்றாய் இருந்த காலங்கள் காணாமல் போய்விட்டன. வெகு வருடங்களுக்கு முன்னால், அம்மா அவளுக்கு வேண்டிய சாந்தை அவளே தயாரித்துக் கொண்டிருந்தாள். அதை வைப்பதற்கென்றே தனியாகப் பாத்திரங்கள் கூட இருந்தன. வெண்கலத்தில், வெள்ளியில். தேங்காய் சிரட்டையில் ஊற்றி வைத்த சாந்து முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும். மேலே பாத்திரம் ஜவ்வு கட்டி இருக்கிற அந்த சின்னச் சின்ன வட்டங்களில் ரேகை பார்த்தது மெத்தென்ற சுகமான அனுபவம். சின்ன வயதில் என் ரேகைகளின் அத்தனை அழகையும் பார்க்கக் கிடைத்த அந்தச் சிரட்டைகள்தான் எத்தனை விதம்! இனி மேல் அந்த சாந்துச் சிரட்டைகள் நமக்கு பார்க்கக் கூட கிடைக்காது.

இது பிளாஸ்டிக் குப்பிகள் யுகம். மாஸ் ப்ரொடக் ஷன் யுகம். நம்முடைய கையின் பதிவுகள் நமக்குக் கவிதைகளாய்க் கிடைத்துக் கொண்டிருந்த காலங்கள் தொலைந்து போய்விட்டன.

திருநெல்வேலிக்குப் போயிருக்கிறாயோ, பாலா? டிங்கர் வொர்க்ஸ், சா மில், ஸ்கூட்டர் வொர்க்‌ஷாப், லாரி கம்பெனி என்று வரிசையாய் பட்டறைகளாய் இருக்கும். சத்தமும் குப்பையும் குவிக்கிற பட்டறைகள். இரும்புத் துரு, வெட்டின தகடு, க்ரீஸ் எண்ணெய் என்று அழுக்கும் பிசுக்குமாய் குவிந்து கிடக்கிற பட்டறைகள். இத்தனை குப்பைக்கு அடுத்தாற்போல், சட்டென்று பெரிய பெரிய வயல்வெளிகள் விரிந்திருக்கும். இடைவெளி தெரியாமல் கிண்ணங்களாய் நெருக்கி அடித்து மண்டிக் கொண்டு நீரைப் போர்த்தி இருக்கிற ஒரு குளம் வரும். நெருக்கமான பச்சை நடுவில் குவளையா, அல்லியா இன்னதென்று தெரியாத நீலப் பூக்கள் பூத்திருக்கும். வெள்ளையாய் நாரையும் கொக்கும் குளத்தைச் சுற்றி வரும்.

இந்த ஊரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நம் தலைமுறை ஞாபகம் வரும். கடை, ஆஃபீஸ், ஃபாக்டரி என்று அலைந்துவிட்டு, அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதும் காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்து கதை, நாவல் எழுதுகிற காலம்.

இது முன்னேற்றமா? துரதிருஷ்டமா? இதை துக்கம் எனப் புரிந்து புலம்புவதா? சோகம் எனச் சுருண்டு கொள்வதா?

நம்முடைய இந்த நண்பன் சுப்ரமணிய ராஜு – இந்த நாவலின் விஸ்வநாதன் – தன்னுடைய அம்மா இறந்து போன இரண்டாம் நாள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தான். படிக்கிறவனை கதற் அடித்துவிடுகிற கடிதம் அது. தன் துக்கம் முழுக்கச் சொன்ன அந்தக் கடிதம் புலம்பவில்லை. ‘எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம், irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல.’

உன்னுடைய நாவலும் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் எனச் சொல்கிறாய். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும் அபத்தமும் தோல்வியும் சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்து கொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்துக்கும் உத்தியோகத்துக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு பேசுகிறது.

எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளிவிடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்று லட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடிப் போவது தற்காப்பா? நம்பிக்கை துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன் ஒரு இரவில் நொடித்துப் போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபசாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்துக்கு ஈடாய் வந்த பணத்தில் விபசாரம் செய்வதும் வயிற்றுப் பிழைப்பா? வக்கிரமா? பிரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவுபசாரப் பணத்தை கணக்கு பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? கணவனின் கவிதையைப் பொறுத்துக் கொள்ளாத மனைவியும் மனைவியின் அவஸ்தையை புரிந்து கொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக் கொள்வது காதலா? காமமா?

எல்லாமே இயற்கை. இயல்பு. சுபாவம். அதைப் புரிந்து கொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் புரிதல் இல்லை என்றால் என்ன கஷ்டம்?

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை, இதன் இயல்பைப் புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? இந்த கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிதல் இல்லாமல் போனால் இருத்தலே இம்சையாகும். எதிலும் தெளிவின்றி எப்போதும் சுலபமின்றி இருக்கும் வாழ்க்கை நரகமாகிவிடாதா? தன்னையும் துன்புறுத்திக் கொண்டு உடன் வாழ்பவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?

இந்தப் புரிதல் இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அன்னியமாதல் பற்றி பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்று சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள். எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர் விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இன்னொரு வகை இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த முதல் படி தாண்டியவர்கள். இந்த வாழ்க்கையின் முரண்பாடு பற்றி தெரிந்தவர்கள். இது இயல்பு என்று விளங்கியவர்கள்.

சரி புரிந்துவிட்டது. ஆனால் இந்த முரண்பாடுகளும் அநீதிகளும் வக்கிரங்களும் இப்படியே இருக்கத்தான் வேண்டுமா? இவற்றை என்ன செய்வது? ‘சும்மா இரு’ என்கிறாய். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘just be’ என்று சொன்ன தொனியில், பொருளில் சும்மா இருக்கச் சொல்கிறாய். காஞ்சிப் பெரியவர் ‘மௌனமாய் இருப்பது என்றால் பேசாமல் இருப்பது மட்டும்தானா?’ என்று கேட்ட அர்த்தத்தில் சொல்கிறாய்.

எனக்கு சும்மா இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதால் சாத்தியமில்லை. செயலற்று சும்மா இருப்பது முறைதானா என்று எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இவை எல்லாம் இங்கே புறம்பான விஷயங்கள். வேறு ஒரு சமயம் பேசித் தெளிய வேண்டிய கேள்விகள். என்னைத் துலக்க இன்னொரு நாவல் எழுது.

இந்த நாவலை அற்புதமாக எழுதி இருக்கிறாய். ஒவ்வொரு வரியும் இழைத்து இழைத்துப் பூட்டின மணியாக விழுந்திருக்கிறது. மெருகு பொலிய எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பக்கம் பக்கமாக நான் உதாரணம் காட்ட முடியும். வேண்டாம். தன் ரசனையை மெய்ப்பிப்பதற்காக கம்பனை அக்கக்காகப் பிரித்த தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது. சுயமாக ஒன்றினை அறிதலும் புரிந்து கொள்ளலும் ரசிக்கக் கற்றலும் மகா பாக்கியம். உன் வாசகர்கள் ரசனைக்கு நடுவே நான் குருவியாகப் பறக்க வேண்டாம். உன் எழுத்துக்கள் மறுபடி மறுபடி எனக்கு ஒன்றை நிச்சயிக்கின்றன. ‘உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும்’.

எத்தனை காலமாக உன் உரைநடையை நான் அறிவேன்! எதிரே உட்கார்ந்து பேசுகிற பேச்சாகப் பெருகுகிற நடை அது. உன்னைப் போல கம்பீரம் கொண்ட நடை. உன் கவிதைகளை நான் காதலிக்கிறேன். யாப்புதான் கவிதை என்கிற மௌடீகத்தையும் வார்த்தைகள்தான் கவிதை என்கிற ரொமான்டிசிஸத்தையும் தாண்டிய சரியான கவிதைகள். தி. ஜானகிராமன் சொல்கிற மாதிரி சரியான் ஆண்பிள்ளை அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள். இந்த நாவலை கவிதையும் உரைநடையுமாக ஊடும் பாவுமாக நெய்திருக்கிறாய். ஆணும் பெண்ணும் புணர்தல் போல சரியான முறையில், சரியான இடத்தில், சரியான அளவில் கவிதையும் உரைநடையும் கலந்திருக்கின்றன. முறையும் இடமும் அளவும் தவறினால் விகாரமாகும். மிகுந்தால் ஆபாசமாகும். குறைந்தால் நோய் காணும். தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குவதற்குள் இந்த வார அத்தியாயத்தைப் படித்து முடித்து ஜீரணமும் செய்து கொள்ள வாசகன் ஆசைப்படுகிற காலம் இது. இதில் கவிதையிலேயே ஒரு அத்தியாயம் எழுதி இருக்கிறாய். என்ன அதிசயம் இது!

ஒரு முறை ஒரு நண்பனைப் பார்க்க அரசூர் சென்றிருந்தேன். மெயின் ரோட்டில் இறங்கி கிளைச் சாலையில் நடக்க வேண்டும். மையிருட்டு. ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்மினி. தூரத்தில் ‘களக் களக்’ என்று சுண்ணாம்புக் காளவாய். நடக்கத் தயங்கி நின்றிருந்தபோது டயரைக் கொளுத்தி கையில் பிடித்தபடி எதிரே ஒருவன். நின்று நிதானித்து எரிகிற ரப்பர் சுடர். லேசில் அணையாத ஜோதி.

இன்றைக்கு சூழ்ந்திருக்கிற இருளுக்கு நடுவில் மொய்க்கின்ற மின்மினிகளுக்கு நடுவில் பயம் காட்டுகிற காளவாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வழி காட்டுகிற சுடராகப் பொலிகிறது உன் நாவல். இருட்டு மண்டுகிறபோது வெளிச்சம் காட்டுவது முக்கியம். இதற்கு நெய்ப்பந்தம்தான் சிலாக்கியம் என்று மரபு பேசுவது காலவிரயம். எல்லா ரோடுகளுக்கும் எலக்ட்ரிக் பல்ப் என்பது மிகுந்த யோக்கியமான சிந்தனை என்றாலும் உடனடியாகச் சாத்தியமாகாத காரியம். குழம்பிச் சோர்ந்துவிடாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு சுடரை ஏற்றி இருக்கிறாய். உனக்குள்ளே ஆகுதி சொரிந்த காலங்காலமாய் வளர்ந்த யாகத் தீயில் ஏற்றிய சுடர்.

இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரன் – அஞ்சலி

ஒரு காலத்தில் – சில மாதங்களாவது – நான் பாலகுமாரனை தி.ஜா.வுக்கும் மேலாக எடை போட்டிருந்தேன். பிறகு மூளை தெளிந்து நம்ம ரசனை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று நொந்தும் கொண்டேன்.

என்ன தற்செயலோ தெரியவில்லை, அந்த நேரத்தில்தான் தி.ஜா.வின் சில படைப்புகள் – மரப்பசு, நளபாகம் – போன்றவை என்ன இந்த ஆள் அரைத்த மாவையே அரைக்கிறாரே என்று ஒரு சின்னக் கடுப்பை கிளப்பிவிட்டன. அப்போது நான் படித்த பாலகுமாரனின் புத்தகங்கள் – மெர்க்குரிப் பூக்கள், பந்தயப் புறா, ஆனந்த வயல், அகல்யா, பல தரப்பட்ட ஜாதி, ஊர், தொழில் பின்புலங்களில் எழுதப்பட்ட மாத நாவல்கள் (நீ பௌர்ணமி, இரவல் கவிதை, காதல் வெண்ணிலா, என்னருகே நீ இருந்தால்… ), சின்னச் சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள் போன்ற சிறுகதைகள் எல்லாமே பிடித்திருந்தன. இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், கடல் பாலம் போன்றவற்றில் குறைகள் தென்பட்டாலும் நல்ல கூறுகள் இருந்தன.

இன்று அந்த பாலகுமாரனையே – தி.ஜா.வையே விஞ்சக் கூடியவர் என்று தோன்ற வைத்தவரையே – நினைவு கூர விரும்புகிறேன்.

பாலகுமாரனின் பலம் எந்தத் தருணத்திலும் மனதில் ஓடும் எண்ணங்களை சிறப்பாக எழுதுவது. பல சூழல்களை நம்பகத் தன்மையோடு விவரிப்பது. அவரது பலவீனம் கட்டுக்கோப்பான கதை இல்லாதது. ஆரம்ப காலத்தில் வாசகனை – குறிப்பாக அன்றைய விகடன்/குமுதம் வாசகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு. தொடர்கதை எழுதி பிரபலமான எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு.

அவருடைய பங்களிப்பை மூன்று பங்காகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் – வாரப் பத்திரிகையில் எழுதி வரும்போது அங்கங்கே செயற்கைத்தனம் தென்பட்டாலும் உணர்ச்சிகள் பொங்கும் மனிதர்களை நம்பகத்தன்மையோடு சித்தரித்தார். அனேகமாக அவை படிக்கக் கூடிய படைப்புகளே. குறைகள் உள்ள படைப்புகள்தான், ஆனால் இலக்கியம் என்றுதான் மதிப்பிடுவேன்.

இரண்டாம் பகுதியில் – மாத நாவல்களாக எழுதிக் குவித்த காலம் – பலதரப்பட்ட சூழல்களை, ஜாதிகளை, பின்புலங்களை, தொழில்களை சித்தரித்தார். ஒரு நாவல் வேர்க்கடலை – இல்லை இல்லை மல்லாட்டை – பயிரிடும் பின்புலத்தில் இருக்கும். இன்னொன்று மேல்மருவத்தூரை நினைவுபடுத்தும். ஒன்று அச்சுத் தொழிலைப் பற்றி இருக்கும். இன்னொன்று ஜெம்பை கோவில் கல்வெட்டைப் பற்றி இருக்கும். அடுத்தது அந்தக் காலத்தில் சென்னையில் கண்காட்சி (exhibition) என்று ஒன்று நடக்கும், அதைப் பற்றிய Arthur Haileysque நாவலாக இருக்கும். பெருங்களத்தூரின் ஸ்டாண்டர்ட் மோட்டார்சில் வேலை பார்க்கும் இரு தொழிலாளிகளைப் பற்றி ஒன்று வரும். வீட்டுத் தரகுத் தொழில், அபார்ட்மெண்ட் கட்டும் தொழில், பட்டிமன்றச் சூழல், கவிதை எழுதி பிரபலமாகும் கல்லூரி மாணவன் என்று ரவுண்ட் கட்டி அடித்தார். எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இத்தனை பின்புலங்களைப் பற்றி எழுதியதில்லை. அதே நேரத்தில் (அனேகமாக) தரமான படைப்புகள். இன்று பாலகுமாரனைப் புகழ்ந்து எழுதுபவர்கள் கூட அவரது இந்த முகத்தை கண்டுகொள்வதில்லை.

மூன்றாவது பகுதியை நான் நினைவு கூர விரும்பவில்லை. நினைவு கூரும் அளவுக்கு அது வொர்த்தும் இல்லை. முழுவதுமாக நீர்த்துப் போனார் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தக் காலத்தில்தான் உடையார் எழுதினார். எனக்கு திறக்க பயமாக இருக்கிறது, ஆனால் அதுதான் அவரது சாதனை என்று சொல்லப்படுகிறது. அப்படி சாதனையாகவே இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

பாலகுமாரனின் இன்னொரு குறிப்பிட வேண்டிய பங்களிப்பு அவரது சரித்திர நாவல்கள். அரண்மனைச் சதி genre-இலிருந்து வெளியே வந்தார் என்பது தமிழ் சூழலில் பெரிய விஷயம்.

என் கண்ணில் அவர் இலக்கியவாதியே. ஆனால் அவர் இன்னும் சிறப்பாக எழுதி இருக்க முடியும். இன்று தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் எங்கோ பின்னால்தான் வருவார். இலக்கியத்தில் அவருடைய தாக்கம் என்பது பெரிதாக இல்லை, நாள் செல்லச் செல்ல மறக்கப்படுவார் என்றுதான் மதிப்பிடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பதெல்லாம் அவன் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். ஆனால் எழுத்தைத் தாண்டி பாலகுமாரனை ஆசானாகக் கருதிய ஒரு கூட்டம் இருந்தது. ஆசானை இழந்து நிற்கும் வாசகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பை எதிர்கொள்ளும் மனோதிடத்தை ஆண்டவன் அருளட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரனின் ‘இரும்பு குதிரைகள்’

இரும்பு குதிரைகள் கல்கியில் தொடர்கதையாக வந்தது என்று நினைவு. தொடர்கதையாகப் படிக்கும்போது மனதில் ஆழமாகப் பதிந்தது மன்னார்குடி வாத்தியார் ஒருவர் தான் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசுவது. போதும் போதாமல் இருக்கும் சம்பளமும் போய்விட்டால் ஏழை வாத்தியாரின் கதி என்ன என்ற கேள்வி மிக நிஜமானது. என் அம்மா/அப்பா பள்ளி ஆசிரியர்கள்தான். என் அத்திம்பேர் (அபிராமண மொழியில் அத்தையைக் கட்டிய மாமா) மன்னார்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது இருப்பதைப் போல ஓய்வூதியத்தில் சௌகரியமாக எல்லாம் வாழ்ந்துவிட முடியாத காலம். என்னை தாக்கிய உரை அது.

பிற்காலத்தில் அந்த வாத்தியார் பாத்திரம் கரிச்சான் குஞ்சுவால் inspire ஆனது என்று தெரிய வந்தது ஒரு சின்ன சுவாரசியம்.

ஆனால் அப்போதே அடுத்தடுத்த பகுதிகளில் என்ன இந்த ஆள் பெண்கள் பற்றிய தன் கனவுகளை (fantasies) கதையில் வலிந்து புகுத்துகிறாரே என்று தோன்றியது. நாயகி மணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவாள். குழந்தையின் உயிரியல் தந்தைக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இன்றே அப்படி ஒரு விருப்பம் சமூகத்தில் புருவத்தைத் தூக்க வைக்கும். அன்று மகா செயற்கையாக இருந்தது. மீண்டும் இந்தப் பதிவுக்காகப் படித்துப் பார்த்தேன், வெறுமனே வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக – பகல் உணவை டப்பாவில் கட்டிக் கொண்டு கையில் விகடனையோ கல்கியையோ எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு பஸ்ஸிலோ ரயிலிலோ சென்று கொண்டிருந்த அன்றைய டிபிகல் மத்திய தர வர்க்க வாசகனை, குறிப்பாக முப்பத்தி சொச்சம் வயது வாசகியை, ‘பாருடீ இப்படி எல்லாம் எழுதறான்’ என்று லேசான கிளுகிளுப்புடன் அங்கலாய்த்துக் கொள்ள வைப்பதற்காக – வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான முடிச்சு என்று நிச்சயமாகத் தெரிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த செயற்கையான முடிச்சு இல்லாவிட்டால், வாத்தியாரின், அவரது மகள் காயத்ரியின், கவிதை எழுதும் நாயகனின் சித்தரிப்பு கதையின் தரத்தை உயர்த்தி இருக்கும்.

சமூகத்தில் உள்ள விழுமியங்களை, பிம்பங்களை தன் எழுத்தால் கட்டுடைக்க வேண்டும் என்ற விழைவுக்கும் வாசகர்கள் தன் எழுத்தால் அதிர்ச்சி அடைய வேண்டும் என்ற விழைவுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. புதுமைப்பித்தன் பொன்னகரத்திலும், ஜெயகாந்தன் அக்னிப்பிரவேசத்திலும் தி.ஜா. அம்மா வந்தாளிலும் அந்தக் கோட்டை அனாயாசமாகத் தாண்டுகிறார்கள். திறமை இருந்தும் பாலகுமாரனால் அந்தக் கோட்டை என்றுமே தாண்ட முடிந்ததில்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த மாதிரி உறவு வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை வலிந்து புகுத்திவிடுகிறார், அது அவரது சில நல்ல படைப்புகளையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

நண்பர் ரெங்கசுப்ரமணி இதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு லாரித் தொழிலின் பின்புலம் இந்த நாவலின் பலங்களில் ஒன்று, அதைக் குறிப்பிட மறந்துவிட்டோமே என்று தோன்றியது.

பாலகுமாரன் ஏன் நல்ல இலக்கியவாதி இல்லை என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ் – நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

sujathaமுன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.

கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சுக்க!

முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.

ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.

இதுதான் ஆரம்பம். இனி அடுத்த பாரா.

அவன் தலையை யாரோ வெட்டிட்டாங்க. முண்டம் மட்டும் நடந்துபோய் விழுந்ததுன்னு சொல்லு. இல்லை… அவன் தலைல பானைய கவுத்துக்கிட்டுப் போயிருந்தான்னு சொல்லு. தடால்னு ஆரம்பி கதையை.

பலபலவென்று விடிந்தது. சார் போஸ்ட் என்று குரல் கேட்டது.

அன்று தீபாவளி. சரசு புதுப்புடவை சரசரக்க ஹாலுக்கு வந்தாள்னு ஆரம்பிக்காதே.

கதை ஆரம்பிச்சிட்ட. என்ன சொல்லப்போற? முடிஞ்சவரைக்கும் சிறுகதை நடக்கற காலத்தை ஒன் அவர், டூ அவர்ல வச்சுக்க. ஒரு இம்பாக்ட் மட்டும் போறும். ஒரு சிறுகதைல மூணு தலைமுறை சொல்லாதே.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில் என்றூ முடிக்காதே. நீதி சொல்றது தப்பில்லை. உள்ளடக்கமா அமைதியா இருக்கட்டும். ஒரு சின்ன சண்டை, அதில ஒரு க்ளைமாக்ஸ், அதுல கிடைச்ச இம்பாக்ட் சிறுகதைக்குப் போறும்.

balakumaranடீடெய்ல்ஸ் எங்க தரணும் தெரியுமா? ஒரு ஹால் பத்தி எழுதினா அந்த ஹால் எப்படி இருந்ததுன்னு எழுது. படிக்கறவங்க மனசுல டிராயிங் மாதிரி விழட்டும். ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலர்ல ஆரம்பிக்காதே. நான் தூங்கி எழுந்தபோது இருட்டாகி விட்டிருந்ததுன்னு எழுதாதே. தள்ளி நின்று அவன் எழுந்தபோது இருட்டாய் இருந்ததுன்னு எழுது. உன்னை பாதித்த விஷயம் பத்தி எழுது. உன்னை உன்கிட்டேர்ந்து தள்ளிப் பார்த்து எழுது. எழுதிட்டு மறுவாரம் வரைக்கும் பொட்டில வச்சுட்டு மறுபடி பார். உன் தப்பு உனக்கே தெரியும்.

பாலகுமாரன் பற்றி ஹரன் பிரசன்னா

balakumaranபாலகுமாரனைப் பற்றி ஹரன் பிரசன்னா எழுதிய இந்த ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது. அவர் பாலகுமாரன் பற்றி சொல்வதில் எனக்கு நிறைய இசைவு உண்டு. பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று எப்போதும் நான் நினைத்ததில்லைதான், ஆனால் தி.ஜா.வை விட பாலகுமாரன் நல்ல எழுத்தாளர் என்று சில சமயம் கருதியதுண்டு. கொஞ்சம் புத்தி தெளிந்த பின்னால் அடச்சே நம்ம ரசனை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று அருவருப்படைந்ததும் உண்டு. ஹரன் மீது பாலகுமாரனுக்கு இருந்த தாக்கத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு இருந்ததில்லை, ஆனாலும் என் பதின்ம பருவத்தில் சுஜாதாவின் தாக்கம் இந்த ரேஞ்சில்தான் இருந்திருக்கும். அவரது உணர்வுகளை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

வசதிக்காக இங்கே பதித்திருக்கிறேன்.

haran_prasannaநீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம் நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப் போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்தன்மையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக் காட்ட வேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள் மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்று வரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்த வகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கை கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார்.

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே கடந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம் வரவைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடி நேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாற முடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல் காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவு கூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல் காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்