பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள்

சிறு திருத்தங்களுடன் மீள்பதிவு.  ஒரிஜினல் பதிவு இங்கே.

கார்ன்வெல்லின் நாவல்களுக்கு நான் பரம ரசிகன். அவர் காட்டும் உலகம் – போர் வீரர்களின் உலகம் – இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கிறது.

இத்தனைக்கும் இவை வணிக நாவல்கள்தான். நேரடியாக சொல்லப்படும் சாகசக் கதைகள்தான். Subtlety என்ற பேச்சே கிடையாது. ஆனால் ஏதோ ஒன்று – நம்பகத்தன்மையா, சுவாரசியமா, இன்று இல்லாத வேறொரு உலகமா – அவற்றை இலக்கியத்துக்கு அருகே கொண்டு செல்கின்றன. இத்தனைக்கும் இந்தியப் பின்புலம் உள்ள சில கதைகளில் அவரது ஆராய்ச்சியின் குறைபாடுகள் தெரிகின்றன, அவரே சில முன்/பின்னுரைகளில் சரித்திரத்தை என் வசதிக்காக மாற்றிக் கொண்டேன் என்று ஒத்துக் கொள்கிறார்.

king_arthur_and_the_round_tableஆர்தர் நாவல்களின் பின்புலம் சரித்திரம் இல்லை. தொன்மம். ஆர்தர் என்று ஒரு அரசன் இருந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் ராமனும் கிருஷ்ணனும் தெய்வங்களாக்கப்பட்ட நிஜ மனிதர்கள் என்று நம்புவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகளைப் போலத்தான் ஆர்தரும் தொன்மமாகிவிட்ட நிஜ மனிதன் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள்.

ஆர்தர் நாவல்களின் இன்னொரு சுவாரசியம் இவை அந்தத் தொன்மத்தை மறுவாசிப்பு செய்வதுதான். உதாரணமாக தொன்மங்களில் வரும் லான்சிலாட் மாவீரன், உன்னத மனிதன். இதில் வரும் லான்சிலாட் ‘சூதர்களிடம்’ பணம் கொடுத்து தன் வீர சாகசங்களைப் பற்றி கதைகளைப் பரப்புகிறான், போர் என்று வந்தால் ஓடிவிடுகிறான்!

மிகச் சுருக்கமாக ஆர்தர் தொன்மம் – ஆர்தர் தான் இளவரசன் என்று தெரியாமல் வளர்க்கப்படுகிறான். உண்மையான இளவரசன் மட்டுமே எடுக்கக் கூடிய, வேறு யாராலும் உருவ முடியாத, பாறையில் செருகி இருக்கும் வாளை உருவி இங்கிலாந்தின் அரசனாகிறான். கினிவரை மணக்கிறான். அவனுக்கு ‘ராஜகுருவாக’ மந்திரவாதி மெர்லின். லட்சிய வீரர்களை தனது Round Table-இல் அணிவகுக்க வைக்கிறான். அவர்கள் கொடியவர்களை எதிர்க்கிறார்கள். ஏசுவின் ரத்தம் சேகரிக்கப்பட்ட கோப்பையான Holy Grail-ஐத் தேடி அலைகிறார்கள். ஆனால் லான்சிலாட்-கினிவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. உறவினனான மார்ட்ரெட் ஆர்தரை எதிர்த்துப் போரிடுகிறான். ஆர்தர் இறக்கவில்லை என்றும் அவலான் என்ற தீவில் உறங்குவதாகவும் இங்கிலாந்துக்கு அபாயம் ஏற்பட்டால் மீண்டு வந்து போரிடுவான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கதைகளிலோ ஆர்தர் கிறிஸ்துவனே அல்ல. Holy Grail ஆங்கிலேயர்களின் தொல்மதத்தின் கடவுள் ஒருவர் கொடுத்தப் புனிதப் பொருள், ஏசுவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தத் தொல்மதத்துக்கும் கிறிஸ்துவ மதத்துக்கும் தகராறு. கிறிஸ்துவர்கள் அந்தத் தொல்மதத்தை அழிக்க வேண்டும், எல்லாரையும் கிறிஸ்துவர்களாக்க வேண்டும் என்று இடைவிடாமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். தொல்மதத்தினர் நீ யாரை வேண்டுமானாலும் கும்பிடு, எல்லா மதங்களுக்கும் இடம் உண்டு என்று நினைக்கிறார்கள். மெர்லின், அவனது சிஷ்யை நிம்யூ இருவரும் புனிதப் பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்து சடங்குகளை செய்தால் தொல்மதக் கடவுள்கள் மீண்டு வந்து இங்கிலாந்தை சொர்க்கபுரி ஆக்குவார்கள் என்று நம்புகிறார்கள்.

இந்தக் கதைகளில் வரும் ஆர்தர் ‘பிரிட்டிஷ்காரன்’. இன்றைய தென் இங்கிலாந்து பகுதிகளில் ஒரு அரசை நிர்வாகிக்கிறான். அவனுடைய எதிரி சாக்சன்கள். கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் வாழ்பவர்கள். பிரிட்டிஷ் அரசுகளை ஒன்றிணைத்து சாக்சன்களை எதிர்க்க முயற்சிக்கிறான்.

ஆர்தர் முந்தைய அரசன் ஊதர் பெண்ட்ராகனுக்கு முறையான வழியில் பிறக்காத மகன். கதையில் ஆரம்பத்தில் அவன் நேர்வழி வாரிசு மார்ட்ரெடுக்கு பாதுகாவலனாக பொறுப்பேற்கிறான். ஆர்தருக்கு அரசாளும் ஆசையே இல்லை. மாவீரனாக இருந்தாலும் அவன் கனவு எல்லாம் அரசு பொறுப்புகளை உதறிவிட்டு தானுண்டு தன் நிலமுண்டு, அதில் விவசாயம் செய்து வாழ்வோம் என்பதுதான். ஆனால் அவன் காலம் எல்லாம் சாக்சன்கள், பிரிட்டிஷ் எதிர்களை சமாளிப்பதிலேயேதான் செல்கிறது. அரசு என்பது மக்களுக்காக என்று நினைக்கும் அபூர்வப் பிறவியாக இருக்கிறான், வலிமையானவனுக்குத்தான் நீதி என்றூ இருக்கக் கூடாது என்பதை முடிந்தவரை அமுல்படுத்துகிறான்.

கதை டெர்வல் என்ற வீரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. புனித டெர்வல் என்று கிறிஸ்துவ மதத்தில் ஒரு புனிதர் உண்டு, அவர்தான் இவர்.

கதையின் பெரிய பலம் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. டெர்வல், டெர்வலின் காதலி, ஆர்தரின் நம்பிக்கையான வீரர்கள், கினிவர், மெர்லின் என்று பலரும் மிகச் சிறப்பான பாத்திரங்கள். பொன்னியின் செல்வனின் பாத்திரங்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கின்றன.

shield_wallஇரண்டாவதாக போர்களின் சித்தரிப்பு. கேடயச் சுவர் (shield wall) உத்தி விவரிக்கப்படுவதை குறிப்பாகச் சொல்ல வேண்டும். பல போர்களைச் சொல்லலாம் என்றாலும் முதல் நாவலான Winter King (1995)-இன் இறுதியில் வரும் லுக் பள்ளத்த்தாக்குப் போரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக அன்றைய வாழ்க்கையின் சித்தரிப்பு. உதாரணமாக என்னதான் போர் என்றாலும் அறுவடைக்காலத்தில் போரிட முடியாது, வீரர்கள் எல்லாம் வயலுக்குப் போய்விடுவார்கள்.

ஹிந்துத்துவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். எப்படி அன்றைய கிறிஸ்துவ மதம் மற்ற மதங்களை அழித்தது என்பது விவரிக்கப்படும் பகுதிகள் அவர்கள் கட்டாயமாக ரசிப்பார்கள்.

மூன்று புத்தகங்கள் வந்திருக்கின்றன. Winter King (1995), Enemy of God (1996), Excalibur (1998)

மறுவாசிப்பு என்றால் பெரிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் சுவாரசியம், நம்பகத்தன்மை, வாழ்க்கை முறையைக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதுவே பிரமாதமாகத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

பெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீஸ்)

இந்த சீரிசின் அடுத்த நாவலான Sword of the Kings (2019) -ஐப் படித்தததால் மீள்பதித்திருக்கிறேன்.

Sword of the Kings மற்ற நாவல்களைப் போலவேதான் இருக்கிறது. அதே மாதிரி கொஞ்சம் வரலாற்றுப் பின்னணி, சில பல போர்க்காட்சிகள், அதே மாதிரி நல்ல மசாலா நாவல். வித்தியாசமாக எதுவுமில்லை. என்ன வரலாறு? ஆல்ப்ரெடின் மகன் எட்வர்ட் இறந்துவிட வாரிசு சண்டை. அதெல்ஸ்டான் தென் இங்கிலாந்தின் மன்னனாகிறான். ஆல்ஃப்ரெடின் கனவு – ஆங்கிலம் பேசும் எல்லாரையும் ஒரே ராஜ்ஜியத்தில் இணைக்க வேண்டும் – கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. இன்னும் வட இங்கிலாந்துதான் (இன்றைய யார்க்‌ஷையர் பகுதி) பாக்கி.

bernard_cornwellராஜா ஆல்ஃப்ரெட் ஒன்பதாம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்தை ஆண்ட மன்னன். இன்று நாம் இங்கிலாந்து என்று குறிப்பிடும் நிலப்பரப்பு அன்று வேல்ஸ், வெஸ்ஸெக்ஸ், மெர்சியா, கிழக்கு ஆங்கிலியா, நார்த்தம்பர்லாண்ட் என்று பலவாகப் பிரிந்து கிடந்தது. (தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த மாதிரி). இவற்றை எல்லாம் இங்கிலாந்து என்ற ஒரே ராஜ்ஜியமாக இணைத்தது ஆல்ஃப்ரெட். இந்த நாவல் சீரிசைப் படித்த பிறகு ஆல்ஃப்ரெட் அவற்றை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலையை ஆரம்பித்தாலும் அப்படி ஒன்றாக இணைய இன்னும் இரண்டு தலைமுறை ஆனது என்று தெரிய வருகிறது. அந்தக் காலகட்டத்தில் டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து சாரிசாரியாக வீரர்கள் வந்து ஆல்ஃப்ரெட் மற்றும் பல மன்னர்களோடு போரிட்டிருக்கிறார்கள். சில ராஜ்ஜியங்களை கைப்பற்றியும் இருக்கிறார்கள். சோழர்களும் சாளுக்கியர்களும் போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி.

கார்ன்வெல்லே விளக்குகிறார் – ஆங்கிலேயர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – இங்கிலாந்து எப்போதுமே இருந்த ஒரு அமைப்பு என்று எண்ணுகிறார்கள், இங்கிலாந்து எப்படி உருவானது என்ற சரித்திரப் பிரக்ஞை அவர்களுக்கு இல்லை. அந்தப் பின்புலத்தை விளக்கவே இந்த நாவல்களை எழுதினாராம்.

கார்ன்வெல் வழக்கம் போல இவற்றை ஒரு போர் வீரனின் பார்வையிலிருந்து விவரிக்கிறார். இந்த முறை அந்த வீரனின் பேர் உத்ரெட். உத்ரெட் சின்ன வயதில் டேனிஷ் பிரபு ராக்னாரால் கைப்பற்றப்படுகிறான். சின்னப் பையனாக இருந்தாலும் அவன் தைரியத்தை கண்டு வியக்கும் ராக்னார் உத்ரெட்டை தன் மகன் போலவே வளர்க்கிறான். உத்ரெட் கிறிஸ்துவனாகப் பிறந்தவன். ராக்னார் தோர், ஓடின் போன்ற ஸ்காண்டிநேவியக் கடவுள்களை வழிபடுபவன். டேனிஷ் மதம் வாழ்க்கையை அனுபவி, போரிடு, இறந்தால் வீர சொர்க்கம் போவாய், அங்கே மற்ற வீரர்களோடு போரிட்டு காலத்தைக் கழிக்கலாம், சுருக்கமாக என்ஜாய் என்கிறது. கிறிஸ்துவ மதமோ எல்லாமே பாவம், ஏசு மட்டுமே உன்னை ரட்சிக்க முடியும் என்கிறது. உத்ரெட் ராக்னாரை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறான், டேனிஷ் மதத்தைத்தான் கடைப்பிடிக்கிறான். ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் அவன் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களுக்காக, டேனிஷ் படைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறான். ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பட்டம் பதவி எல்லாம் அவன் கிறிஸ்துவன் இல்லை என்பதால் அவனுக்கு முழுதாகக் கிடைப்பதில்லை. உள்ளுணர்வின்படி டேனிஷ்காரனான உத்ரெட் டேனிஷ் படைகளை வென்று கிறிஸ்துவ அரசை நிலைநிறுத்தும் முரண்பாடுதான் இந்த நாவல்களின் அடிநாதம்.

இந்த முறை ஒன்பது 12 நாவல்கள் வந்திருக்கின்றன. Last Kingdom (2004), Pale Horseman (2005), Lords of the North (2006), Sword Song (2007), Burning Land (2009), Death of Kings (2011), Pagan Lord (2013), Empty Throne (2014), Warriors of the Storm (2015), Flame Bearer (2016), Warrior of the Wolf (2018), Sword of the Kings (2019)

இவை எவையும் இலக்கியம் அல்ல. சரித்திர அடிப்படை கொண்ட சாகசக் கதைகளே. இவற்றின் முக்கியக் குறை என்று நான் கருதுவது ஒன்பது நாவல்களும் ஒரே நாவலைத் திருப்பி திருப்பி எழுதியது போல இருக்கிறது என்பதுதான். ஒரு வேளை நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருந்தால் எனக்கு அப்படி தோன்றாமல் இருக்குமோ என்னவோ. (சாண்டில்யன் நாவல்கள் எல்லாம் எனக்கு வேறு வேறாகத்தான் தெரிகின்றன.)

ஆனால் பிரமாதமான மசாலா கதைகள். அவற்றின் ஊடாக ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக் கொண்டே இருக்கிறது. (மெர்சியாவின் அரசியாக ஏதல்ஃப்ளாட் பதவி ஏற்கும் காட்சி, ஆல்ஃப்ரெட்டின் அறிமுகக் காட்சியில் தன் பெண் பித்தின் ‘பாவச்சுமையை’ ஆல்ஃப்ரெட் உணரும் விதம், மறைந்த புனிதர்களின் அடையாளச் சின்னங்களைத் தேடும் கிறிஸ்துவ மதம் (வாந்தி எடுத்து துடைத்த துணி எல்லாம் புனிதச் சின்னமாகக் கருதப்படுகிறது). கார்ன்வெல்லின் ட்ரேட்மார்க்கான நம்பகத்தன்மை உள்ள போர்க்காட்சிகள் நிறைந்திருக்கின்றன. உத் ரெட்டின் துணைவர்களாக வருபவர்கள் (ஐரிஷ்காரனான ஃபினன், பெரும் பலசாலியான ஸ்டீபா, அவனது சின்ன வயது வாத்தியாரான மதகுரு பியோக்கா, ஆல்ஃப்ரெடின் முறைதவறிப் பிறந்த மகன் ஆஸ்ஃபெர்த், உத்ரெடின் மகனான உத்ரெட்) எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள்.

இந்தக் கதைகளில் ஆல்ஃப்ரெட் அரசனாகிறான். போர்த்திறமைக்கு மட்டுமல்ல, படிப்பறிவு, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறான். கிறிஸ்துவ மதத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அது மதகுருக்களின் மீதும் நம்பிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. உத்ரெட் செய்யும் சேவைகளுக்கு அவன் தான் இறக்கும் தருணம் வரை முழுவதாக பரிசு, பட்டம் வழங்கவில்லை. உத்ரெட்டின் போர்த்திறமை எல்லாருக்கும் தெரிந்திருந்தும், மதகுருக்களின் எதிர்ப்பினால் ஆல்ஃப்ரெட் அவனை தன் தளபதி ஆக்கவில்லை. அவன் மகள் ஏதல்ஃப்ளாடுக்கும் உத்ரெட்டிற்கும் ஏற்படும் உறவு ஆல்ஃப்ரெட்டுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உத்ரெட் தன் போர்த் திறமையால் மீண்டும் மீண்டும் டேனிஷ் படைகளை வெல்கிறான். ஆர்தரின் பேரனான ஏதல்ஸ்டானை உத்ரெட் வீரனாக வளர்க்கிறான். தனிப்பட்ட கதைகள் முக்கியமே அல்ல, ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்து நல்ல படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

சாகசத்துக்காகப் படிக்கலாம், சரித்திரத்துக்காகவும் படிக்கலாம். நான் இரண்டு காரணங்களுக்காகவும் படித்தேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

பெர்னார்ட் கார்ன்வெல்லின் ‘Starbuck Chronicles’

கார்ன்வெல்லின் இந்த சீரிஸ் 1860-64-இல் நடைபெற்ற அமெரிக்க Civil War-ஐ பின்புலமாக வைத்து எழுதப்பட்டது. கார்ன்வெல்லின் எல்லா பலங்களும் பலவீனங்களும் இந்த நாவல்களில் வெளிப்படுகின்றன.

கார்ன்வெல் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதுவது சரித்திர நாவல்கள். அனேகமாக ஒரு போர்வீரனை முன்னால் வைத்து எழுதப்பட்டவை. அந்த வீரனை வைத்து சரித்திர நிகழ்ச்சிகளை சுவாரசியமாக எழுதுகிறார். நல்ல சித்தரிப்புகள், பாத்திரங்கள் கொண்டவை. ஆனால் இலக்கியமா? உங்களுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் இலக்கியம் என்றால் இவையும் ஏறக்குறைய இலக்கியம்தான். எனக்கு ஹோம்ஸ் இலக்கியம், ஆனால் இரண்டாம் நிலை இலக்கியம். இவையும் அப்படித்தான்.

சீரிஸின் ஒவ்வொரு நாவலும் அமெரிக்க சிவில் போரின் ஒன்றிரண்டு யுத்தங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. சிவில் போரில் அமெரிக்காவின் வடபகுதி பொருளாதார ரீதியில் மிக வலிமையான பகுதி. ஆள் பலமும் அதிகம். தென்பகுதி விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. போர் செய்ய ஆண்கள் போய்விட்டால் விவசாயம் பாதிக்கப்படும். பணபலமும் குறைவு. ஆனால் க்ராண்டும் (Ulyssess S. Grant) ஷெர்மனும் (William T. Sherman) தளபதிகளாகும் வரை வடபகுதிக்கு சரியான தலைமை இல்லை. அதனால் போர் இழுத்தடிக்கிறது. எந்த யுத்தத்திலும் யாருக்கும் முழு வெற்றி என்பதே இல்லை. தெற்கு தாக்குப்பிடிப்பதே அதற்கு வெற்றியாக இருக்கிறது. வடக்கு வெல்ல முடியாததே அதற்கு தோல்வியாக இருக்கிறது.

Rebel (1993) இந்த சீரிஸின் முதல் நாவல். பாஸ்டனில் பிறந்து வளர்ந்த நதானியேல் ஸ்டார்பக் – அப்பா அடிமை முறையை ஒழித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்பவர் – Civil War ஆரம்பிக்கும்போது தற்செயலாக விர்ஜினியா மாநிலத்தில் மாட்டிக் கொள்கிறான். பிறகு தென் மாநிலங்களுக்காக போரில் ஈடுபடுகிறான். அவனை முதலில் காப்பாற்றி, படையில் வேலை கொடுக்கும், வெட்டி பந்தா காட்டும் பணக்கார ஃபால்கனர், அவரது மகனும் நதானியேலின் நண்பனுமான ஆடம், ஃபால்கனரின் மைத்துனனான பெக்கர் பேர்ட், சார்ஜெண்ட் ட்ரஸ்லோ, ட்ரஸ்லோவின் மகளும் இன்று ஹை க்ளாஸ் வேசியாகவும் இருக்கும் சாலி என்று பல பாத்திரங்கள் கச்சிதமாக வடிக்கப்படுகின்றன. நாவலின் உச்சக்கட்டம் First Battle of Bull Run. சிறப்பான சித்தரிப்பு. பின்புலமாக இருப்பது First Battle of Bull Run.

Copperhead (1994) நாவலில் நதானியேல் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனர் எதிரியாக இருக்கிறார். ஆடம் ஃபால்கனர் வடபகுதியின் உளவாளியாக இருக்கிறான். ஸ்டார்பக்கிற்கும் அவனுடைய சார்ஜெண்டாக இருக்கும் ட்ரஸ்லோவின் மகளும் இன்றைய ஹை க்ளாஸ் வேசியுமான சாலிக்கும் உறவு. ஸ்டார்பக்தான் வடபகுதிக்கு உளவறிகிறான் என்ற சந்தேகத்தில் அவன் சித்திரவதை செய்யப்படுகிறான். அவன் இல்லை என்று உறுதியானதும் அவனே வடபகுதிக்கு தென்பகுதியின் உளவாளியாக அனுப்பப்படுகிறான். ஆடம் வடபகுதியின் ராணுவத்தில் வெளிப்படையாக சென்று சேர்ந்துவிடுகிறான். பின்புலமாக இருப்பது Battle of Ball’s Bluff மற்றும் Battle of Seven Pines.

Battle Flag (1995) நாவலில் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனரின் தூண்டுதலால் நிறைய தொந்தரவு கொடுக்கும் கர்னல் ஸ்வின்யர்ட் சாக இருந்து பிழைக்கிறார். அவர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு குடிப்பதை நிறுத்திவிடுகிறார். ஃபால்கனரின் பேச்சைக் கேட்க மறுக்கிறார். ஃபால்கனர் தன் ஆணையை அட்சர சுத்தமாக கடைப்பிடிக்கவில்லை என்று ஸ்வின்யர்ட், ஸ்டார்பக் இருவரையும் கைது செய்கிறார். ஆனால் ஃபால்கனர் செய்த குளறுபடியால் படைக்கு பெரும் நாசம் ஏற்படுகிறது. ஃபால்கனர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஸ்வின்யர்டுக்கும் ஸ்டார்பக்கிற்கும் பதவி உயர்வு கிடைக்கிறது. ஆடம் ஃபால்கனர் வடபகுதி ராணுவத்திற்காக முழுமூச்சாகப் போரிடுகிறான். ஸ்டார்பக் மிகச் சிறப்பாகப் போரிட்டு தனது படைக்கு உண்மையான தலைவனாகிவிடுகிறான். ஸ்டார்பக்கின் அப்பா இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். பின்புலமாக இருப்பது Battle of Cedar Mountain மற்றும் Second Battle of Bull Run

Bloody Ground (1996) இந்த வரிசையின் கடைசி நாவல். Battle of Antietam பின்புலத்தில் செல்லும் நாவல். சிறப்பான போர் சித்தரிப்பு. ஸ்டார்பக் ‘கோழைப்படை’ என்று பெயர் வாங்கிய படை ஒன்றுக்கு தலைவனாக நியமிக்கப்படுகிறான், ஆனால் அதை நன்றாகவே நடத்திச் செல்கிறான்.

எனக்கு இந்த நாவல்களின் takeaway என்பது எப்படி வட மாநிலங்களின் ராணுவம் ஆள் பலம், படை பலம், பண பலம் எல்லாவற்றிலும் தென் மாநிலங்களை மிஞ்சி இருந்தாலும் சுலபமாக வெல்ல முடியவில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் George McLellan-இன் படைத்தலைமைதான் காரணம் என்கிறார் கார்ன்வெல். பல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்.

கார்ன்வெல்லின் பல நாவல்கள் இலக்கியத்துக்கு அருகேயாவது வருபவை. ஆனால் இலக்கியம் என்று சொல்லிவிடவும் முடியவில்லை. எப்படி இருந்தால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்

பெர்னார்ட் கார்ன்வெல் எழுதிய ‘Agincourt’

battle_of_agincourtஅசின்குர் (Agincourt) போர் ஐரோப்பிய வரலாற்றில் முக்கியமான ஒன்று. 1415-இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் நடந்தது. நம்மூரில் பல்லவர்கள்-சாளுக்கியர்கள், பல்லவர்கள்-பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள்-பாமினி அரசர்கள் இடைவிடாது போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி இங்கிலாந்தும் ஃப்ரான்சும் நூறு வருஷங்களுக்கு மேலாக போரிட்டன. அந்த நீண்ட வரலாற்றில் இங்கிலாந்தின் அதிசயத் தக்க வெற்றிகளில் இது ஒன்று.

என்ன அதிசயம்? இங்கிலாந்துப் படை ஃப்ரான்சில் இருக்கிறது. ஐயாயிரம், ஆறாயிரம் வீரர்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஃப்ரெஞ்சு வீரர்கள் முப்பதாயிரம் பேராம். போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் பக்கம் நூற்று சொச்சம் பேர்தான் இழப்பாம். ஃப்ரான்சுக்கு குறைந்தது ஏழாயிரம் பேர் இறந்து போனார்களாம்! தன்னைப் போல ஐந்தாறு மடங்கு பெரிய படையை வென்றது பெரிய ஆச்சரியம் இல்லையா? அதனால்தான் இந்தப் போர் இன்னமும் நினைவு கூரப்படுகிறது.

bernard_cornwellஎன்னுடைய ஃபேவரிட் சரித்திர மசாலா எழுத்தாளரான பெர்னார்ட் கார்ன்வெல் இந்தப் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் நாவல் இது.

வழக்கம் போல ஒரு போர் வீரன். நிக்கோலஸ் ஹூக். வில்லாளி. இவனுக்கு அதிகாரியாக இருக்கும் ஒரு பாதிரி ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும்போது ஹூக்கின் மண்டைக்குள் ‘தடு’ என்று ஒரு குரல் கேட்கிறது. கடவுளே பேசுவது போல இருக்கிறது. பாதிரியை அடிக்கிறான். ஹூக்கைக் கட்டி வைத்துவிட்டு கற்பழிப்பு நடந்தேறுகிறது. பிறகு ஹூக்குக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இன்னொரு உயர் அதிகாரியின் உதவியால் இங்கிலாந்திலிருந்து தப்பி ஃப்ரான்ஸுக்கு ஓடுகிறான். அங்கே ஸ்வாசோ (Soissons) நகரில் ஒரு ஆங்கிலேய வில் வீரர்களின் கூலிப்படையில் வில்லாளியாக சேர்கிறான்.

ஃப்ரான்சின் உள்நாட்டுப் போரில் ஸ்வாசோ நகரம் தாக்கப்படுகிறது. மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆங்கிலேய வில்லாளிகளின் விரல்கள் வெட்டப்படுகின்றன. ஏறக்குறைய எல்லாருமே கொல்லப்படுகிறார்கள். ஹூக் நாயகன், அதனால் தப்பித்துவிடுகிறான். மெலிசாண்டே என்ற ஒரு பெண்ணையும் – நாயகி – காப்பாற்றுகிறான்.

ஸ்வாசோ நகரப் படுகொலையை நேரில் பார்த்தவன் என்பதால் ஹுக்கின் சாட்சியம் ஆங்கிலேய அரசுக்கு முக்கியமாக இருக்கிறது. பல அதிகாரிகள் அவனது சாட்சியத்தை எழுதிக் கொள்கிறார்கள். அரசன் ஐந்தாம் ஹென்றியே அவனிடம் வந்து பேசுகிறான். அவன் பாதிரியை அடித்த குற்றம் மன்னிக்கப்படுகிறது. ஹூக் ஒரு பிரபுவின் படையில் சேர்கிறான். பெரும்படை ஃபிரான்சுக்கு கிளம்புகிறது.

ஆனால் முதல் போரே படு சிரமம். ஹார்ஃப்ளர் என்ற கோட்டையைக் நீண்ட முற்றுகைக்குப் பிறகுதான் கைப்பற்ற முடிகிறது. அதற்குள் பாதிப் படைக்கு பயங்கர பேதி. இந்தப் போரில் கோட்டையைப் பிடிக்க ஒரு சுரங்கம் தோண்டுகிறார்கள். அதற்குள் நடக்கும் சண்டை சிறப்பான சித்தரிப்பு.

மழைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது, ஆனால் இந்தக் கோட்டைக்கான போரே இழுத்துவிட்டதால் நாடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஹென்றி ஃப்ரெஞ்சு அரசை வெறுப்பேற்றுவதற்காக கடலோரமாகவே சும்மா வேறு ஒரு நகரத்துக்கு – Calais – தன் படையை நடத்திச் செல்கிறான். உன் நாட்டில் நான் படை நடத்துவேன், உன்னால் என்னை என்ன செய்ய முடியும் எனறு பந்தா காட்டுவதற்காக.

நடுவில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். பாலங்கள் கிடையாது. இறங்கித்தான் கடக்க வேண்டும். ஃப்ரெஞ்சுப் படை அவர்களைத் தடுத்து நிற்கிறது. வேறு வழியில்லாமல் கொஞ்சம் உள்ளே போய் கடக்க வேண்டி இருக்கிறது. கொண்டு வந்த உணவு தீர்ந்துவிடுகிறது.

இப்போது பெரும்படை அவர்களை எதிர்த்து நிற்கிறது. ஆனால் மழை பெய்திருக்கிறது. சேறு சகதியில் ஃப்ரெஞ்சு குதிரைகளும் வீரர்களும் சுலபமாக நடந்து வந்து ஆங்கிலேயர்களை தாக்க முடியவில்லை. ஆங்கில வில்லாளிகளின் அம்பு மழையில் வீரர்கள் செத்து விழுகிறார்கள்.

கார்ன்வெல்லின் அத்தனை பலங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. அவரது போர்களில் ரத்தம் தெறிக்கிறது. மலமும் சிறுநீரும் பங்கு வகிக்கின்றன. (போரின் நடுவில் பேதியால் அவதிப்படும் வீரர்கள் என்ன செய்வார்கள்?) உணவுக்காக அல்லல்படுகிறார்கள். நாயகி தவிர்த்த மற்ற பெண்கள் போகப் பொருட்கள்தான். பாதிரிகள் பொன், பெண் என்று அலைகிறார்கள். இவை அனைத்தும் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன.

இலக்கிய தரிசனம் என்று தேடுபவர்கள் இதையெல்லாம் தவிர்த்துவிடலாம். ஆனால் எனக்கு இது இலக்கியத்துக்கு மிக அருகிலாவது இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்

பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள்

bernard_cornwellகார்ன்வெல்லின் நாவல்களுக்கு நான் பரம ரசிகன் ஆகிவிட்டேன். வணிக நாவல்கள்தான். Subtlety என்ற பேச்சே கிடையாது. நேரடியாக சொல்லப்படும் சாகசக் கதைகள்தான். ஆனால் ஏதோ ஒன்று – நம்பகத்தன்மையா, சுவாரசியமா, இன்று இல்லாத வேறொரு உலகமா – அவற்றை இலக்கியத்துக்கு அருகே கொண்டு செல்கின்றன. இத்தனைக்கும் இந்தியப் பின்புலம் உள்ள சில கதைகளில் அவரது ஆராய்ச்சியின் குறைபாடுகள் தெரிகின்றன, அவரே சில முன்/பின்னுரைகளில் சரித்திரத்தை என் வசதிக்காக மாற்றிக் கொண்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் அவர் காட்டும் உலகம் – போர் வீரர்களின் உலகம் – இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கிறது.

king_arthur_and_the_round_tableஆர்தர் நாவல்களின் பின்புலம் சரித்திரம் இல்லை. தொன்மம். ஆர்தர் என்று ஒரு அரசன் இருந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் ராமனும் கிருஷ்ணனும் தெய்வங்களாக்கப்பட்ட நிஜ மனிதர்கள் என்று நம்புவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகளைப் போலத்தான் ஆர்தரும் தொன்மமாகிவிட்ட நிஜ மனிதன் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள்.

ஆர்தர் நாவல்களின் இன்னொரு சுவாரசியம் இவை அந்தத் தொன்மத்தை மறுவாசிப்பு செய்வதுதான். உதாரணமாக தொன்மங்களில் வரும் லான்சிலாட் மாவீரன், உன்னத மனிதன். இதில் வரும் லான்சிலாட் ‘சூதர்களிடம்’ பணம் கொடுத்து தன் வீர சாகசங்களைப் பற்றி கதைகளைப் பரப்புகிறான், போர் என்று வந்தால் ஓடிவிடுகிறான்!

மிகச் சுருக்கமாக ஆர்தர் தொன்மம் – ஆர்தர் தான் இளவரசன் என்று தெரியாமல் வளர்க்கப்படுகிறான். உண்மையான இளவரசன் மட்டுமே எடுக்கக் கூடிய, வேறு யாராலும் உருவ முடியாத, பாறையில் செருகி இருக்கும் வாளை உருவி இங்கிலாந்தின் அரசனாகிறான். கினிவரை மணக்கிறான். அவனுக்கு ‘ராஜகுருவாக’ மந்திரவாதி மெர்லின். லட்சிய வீரர்களை தனது Round Table-இல் அணிவகுக்க வைக்கிறான். அவர்கள் கொடியவர்களை எதிர்க்கிறார்கள். ஏசுவின் ரத்தம் சேகரிக்கப்பட்ட கோப்பையான Holy Grail-ஐத் தேடி அலைகிறார்கள். ஆனால் லான்சிலாட்-கினிவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. உறவினனான மார்ட்ரெட் ஆர்தரை எதிர்த்துப் போரிடுகிறான். ஆர்தர் இறக்கவில்லை என்றும் அவலான் என்ற தீவில் உறங்குவதாகவும் இங்கிலாந்துக்கு அபாயம் ஏற்பட்டால் மீண்டு வந்து போரிடுவான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கதைகளிலோ ஆர்தர் கிறிஸ்துவனே அல்ல. Holy Grail ஆங்கிலேயர்களின் தொல்மதத்தின் கடவுள் ஒருவர் கொடுத்தப் புனிதப் பொருள், ஏசுவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தத் தொல்மதத்துக்கும் கிறிஸ்துவ மதத்துக்கும் தகராறு. கிறிஸ்துவர்கள் அந்தத் தொல்மதத்தை அழிக்க வேண்டும், எல்லாரையும் கிறிஸ்துவர்களாக்க வேண்டும் என்று இடைவிடாமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். தொல்மதத்தினர் நீ யாரை வேண்டுமானாலும் கும்பிடு, எல்லா மதங்களுக்கும் இடம் உண்டு என்று நினைக்கிறார்கள். மெர்லின், அவனது சிஷ்யை நிம்யூ இருவரும் புனிதப் பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்து சடங்குகளை செய்தால் தொல்மதக் கடவுள்கள் மீண்டு வந்து இங்கிலாந்தை சொர்க்கபுரி ஆக்குவார்கள் என்று நம்புகிறார்கள்.

இந்தக் கதைகளில் வரும் ஆர்தர் ‘பிரிட்டிஷ்காரன்’. இன்றைய தென் இங்கிலாந்து பகுதிகளில் ஒரு அரசை நிர்வாகிக்கிறான். அவனுடைய எதிரி சாக்சன்கள். கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் வாழ்பவர்கள். பிரிட்டிஷ் அரசுகளை ஒன்றிணைத்து சாக்சன்களை எதிர்க்க முயற்சிக்கிறான்.

ஆர்தர் முந்தைய அரசன் ஊதர் பெண்ட்ராகனுக்கு முறையான வழியில் பிறக்காத மகன். கதையில் ஆரம்பத்தில் அவன் நேர்வழி வாரிசு மார்ட்ரெடுக்கு பாதுகாவலனாக பொறுப்பேற்கிறான். ஆர்தருக்கு அரசாளும் ஆசையே இல்லை. மாவீரனாக இருந்தாலும் அவன் கனவு எல்லாம் அரசு பொறுப்புகளை உதறிவிட்டு தானுண்டு தன் நிலமுண்டு, அதில் விவசாயம் செய்து வாழ்வோம் என்பதுதான். ஆனால் அவன் காலம் எல்லாம் சாக்சன்கள், பிரிட்டிஷ் எதிர்களை சமாளிப்பதிலேயேதான் செல்கிறது. அரசு என்பது மக்களுக்காக என்று நினைக்கும் அபூர்வப் பிறவியாக இருக்கிறான், வலிமையானவனுக்குத்தான் நீதி என்றூ இருக்கக் கூடாது என்பதை முடிந்தவரை அமுல்படுத்துகிறான்.

கதை டெர்வல் என்ற வீரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. புனித டெர்வல் என்று கிறிஸ்துவ மதத்தில் ஒரு புனிதர் உண்டு, அவர்தான் இவர்.

கதையின் பெரிய பலம் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. டெர்வல், டெர்வலின் காதலி, ஆர்தரின் நம்பிக்கையான வீரர்கள், கினிவர், மெர்லின் என்று பலரும் மிகச் சிறப்பான பாத்திரங்கள். பொன்னியின் செல்வனின் பாத்திரங்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கின்றன.

shield_wallஇரண்டாவதாக போர்களின் சித்தரிப்பு. கேடயச் சுவர் (shield wall) உத்தி விவரிக்கப்படுவதை குறிப்பாகச் சொல்ல வேண்டும். பல போர்களைச் சொல்லலாம் என்றாலும் முதல் நாவலான Winter King (1995)-இன் இறுதியில் வரும் லுக் பள்ளத்த்தாக்குப் போரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக அன்றைய வாழ்க்கையின் சித்தரிப்பு. உதாரணமாக என்னதான் போர் என்றாலும் அறுவடைக்காலத்தில் போரிட முடியாது, வீரர்கள் எல்லாம் வயலுக்குப் போய்விடுவார்கள்.

ஹிந்துத்துவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். எப்படி அன்றைய கிறிஸ்துவ மதம் மற்ற மதங்களை அழித்தது என்பது விவரிக்கப்படும் பகுதிகள் அவர்கள் கட்டாயமாக ரசிப்பார்கள்.

மூன்று புத்தகங்கள் வந்திருக்கின்றன. Winter King (1995), Enemy of God (1996), Excalibur (1998)

மறுவாசிப்பு என்றால் பெரிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் சுவாரசியம், நம்பகத்தன்மை, வாழ்க்கை முறையைக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதுவே பிரமாதமாகத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள்

bernard_cornwellகார்ன்வெல் நல்ல மசாலா எழுத்தாளர். விறுவிறுப்பான சரித்திரக் கதைகளை எழுதுபவர். இந்த நான்கு நாவல்களில் (Harlequin அல்லது Archer’s Tale, Vagabond, Heretic, 1356) அவர் 1300களின் நடுப்பகுதியில் தொடங்கிய 100 Years War-ஐ பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார்.

100 Years War நூறு வருஷங்களுக்கும் மேலாக, ஐந்தாறு தலைமுறைகளாக இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்கும் நடந்த போர். இங்கிலாந்தின் மன்னர் பரம்பரை தாய் வழியாக ஃப்ரான்சுக்கு உரிமை கொண்டாடியது. அதனால் ஏற்பட்ட போர். முதல் பாதியில் இங்கிலாந்து பெருவெற்றி பெற்றாலும், கடைசியில் ஃப்ரான்ஸ் வென்று இங்கிலாந்து மன்னர்களை இங்கிலாந்திலேயே முடக்கியது.

longbow_crossbowஇந்தப் போர்களில் longbow என்று அழைக்கப்பட்ட (ராமன் கையிலிருக்கும் வில்தான் longbow), ஆளுயுர வில்தான் இங்கிலாந்துக்கு முதலில் வெற்றிகளைத் தேடித் தந்தது. ஃப்ரென்சுக்காரர்கள் அப்போது பெரும்பாலும் குதிரை மீதிருந்து போர் புரியும் வீரர்களைத்தான் (knights) தங்கள் பிரதான பலமாக வைத்திருந்தார்கள். ஆங்கிலேய longbow வில்லாளிகள் எதிரிகளின் குதிரைகள் மீது அம்புகளை எய்து அவர்களை சுலபமாக வெற்றி கொள்ள முடிந்தது. ஃப்ரென்சுக்காரர்களும் விற்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் பயன்படுத்தியது crossbow. அவை இன்னும் தூரம் செல்லக் கூடிய அம்புகளை எய்தாலும் அவற்றைப் பயன்படுத்துவது கஷ்டம். crossbow வில்லாளிகள் ஒரு அம்பு விடுவதற்குள் longbow-காரர்கள் நான்கு அம்புகளை எய்ய முடிந்ததாம்.

கதையின் நாயகன் தாமஸ். வில்லாளி. இங்கிலாந்தின் patron saint ஆன புனித ஜார்ஜ் கையிலிருந்த ஈட்டியைக் கைப்பற்ற தாமசின் அப்பா கொல்லப்படுகிறார். அப்போது வில்லாளியாக மாறி, அந்த ஈட்டி, holy grail (ஏசுவை சிலுவையில் அறைந்தபோது கொட்டிய அவரது ரத்தம் இந்த சட்டியில் பிடிக்கப்பட்டது என்று ஐதீகம்) போன்றவற்றை தேடிக் கொண்டிருக்கும் எதிரிகளோடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். அவனுடைய சாகசங்கள், போர்கள் ஆகியவை இந்த நாவல்கள் மூலம் விவரிக்கப்படுகின்றன. பல சரித்திர நிகழ்ச்சிகள் (Crecy போர், Poitiers போர்) மிக சுவாரசியமான முறையில் காட்டப்படுகின்றன.

புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை அன்றைய நகர அமைப்புகள். ஒவ்வொரு நகரமும் தன் பாதுகாப்புக்காக ஒரு கோட்டையை எழுப்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிலம்தான் அந்தஸ்து, பணத்தை அளிக்கிறது. ஆனால் சுயமாக சம்பாதித்து (வியாபாரம்தான் ஒரே வழி) பணக்காரன் ஆனாலும் அந்தஸ்து வராது. இரண்டாதாக படை அமைப்பு. பத்து பேர் கொண்ட படை இருந்தால் அனேகமாக பிரபு. கோட்டையைக் கைப்பற்ற ஆறு பேரால் கூட முடியும். நூறு வில்லாளி இருந்தால் அது பெரிய படை. அவர்களால் ஒரு நகரத்தைப் பிடிக்க முடியும். ஐயாயிரம் பேர் இருந்தால் அது மாபெரும் படை. இது உண்மையாகத்தானே இருக்க முடியும்? தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துக்கு எத்தனை பேர் அடங்கிய படையை கூட்டிச் சென்றிருப்பான்? சில நூறுகள்? ஆயிரம் பேர்?

இவை வணிக நாவல்கள்தான். இவை காட்டும் சரித்திரமும், வரலாற்று நிகழ்ச்சிகளும் நமக்கெல்லாம் அன்னியமானவைதான். ஆனாலும் பாத்திரங்கள் சுவாரசியமானவர்கள். போர்கள், அமைப்புகளின் சித்திரம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்