கணேஷ்-வசந்த்: ஒருத்தி நினைக்கையிலே

கேள்விப்பட்டே இராத கதை. இத்தனைக்கும் சுஜாதா அவரது புகழின் உச்சத்தில் இருந்தபோது – 1981-இல் – தொடர்கதையாக வந்திருக்கிறது. ஆனால் குமுதம்-விகடன்-கல்கியில் வரவில்லை. ராணியில் வந்திருக்கிறது! சுஜாதா ராணி பத்திரிகையைக் கூட விடவில்லை. யாராவது கதை வந்தபோதோ இல்லை பிறகோ படித்திருக்கிறீர்களா?

நான் படித்தது பத்திரிகையில் இருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதை. கதை போர். சுஜாதாவின் டச் எதுவுமே இல்லை. பத்திரிகையில் அங்கங்கே வந்திருந்த துணுக்குகள்தான் – வெற்றி சித்திர நடிகை பற்றிய கிசுகிசு மாதிரி பல – கதையை விட சுவாரசியமாக இருந்தன.

கிராமத்து பெண்ணும் அவள் அண்ணனும் சென்னைக்கு வரும்போது பெண்ணை கடத்திப்போய் பம்பாய் விபச்சார விடுதியில் வில்லன்கள் விற்றுவிடுகிறார்கள். (ஆஹா என்ன ஒரு எதுகை மொகனை!). அண்ணன்காரன் தேடப்படும் ஒரு குற்றவாளியின் ஜாடையில் இருப்பதால் அவனை கைது செய்கிறார்கள். வசந்த் எம்ஜிஆர் பட ஸ்டைலில் பம்பாய் போய் பெண்ணைக் காப்பாற்றுகிறார். கணேஷோ ஒரு படி மேலே போய் அதே எம்ஜிஆர் படத்தில் தேங்காய் சீனிவாசன் காரக்டர் மாதிரி அண்ணனை காப்பாற்றுகிறார்.

சுஜாதா ஒரு முறை என் லாண்டிரிக் கணக்கைக் கூட தமிழ் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயாராக இருக்கின்றன என்று சொல்லி இருந்தார். (அடுத்த ஓரிரு வாரத்தில் சாவி அவரது லாண்டிரிக் கணக்கை உண்மையிலேயே பிரசுரித்தார்.) ராணி பத்திரிகை ஆசிரியர் சுஜாதா என்ற பேர் இருந்தால் போதும் என்று நினைத்திருக்க வேண்டும். குமுதம் எஸ்.ஏ.பி. மாதிரி, விகடன் பாலசுப்ரமணியன் மாதிரி தரக் கட்டுப்பாடு எதுவும் இல்லை, ஆசிரியர் ஏதாவது சொல்லிவிடப் போகிறார் என்று சுஜாதாவுக்கு எந்த பயமும் இல்லை என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் சுஜாதா உண்மையிலேயே ஒரு phenomenon-தான்.

இதெல்லாம் கணேஷ்-வசந்த் கதைகளின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்தான். கணேஷ்-வசந்த் இல்லாவிட்டால் நானும் இதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கமாட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்

சுஜாதாவின் “நிர்வாண நகரம்” – மீள்பதிவு

பத்து வருஷங்கள் முன்னால் எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருக்கின்றன.

நிர்வாண நகரம் போன்ற (சில) நாவல்களில் சுஜாதா சாகச நாவல், வணிக நாவல், வாரப் பத்திரிகை தொடர்கதை ஆகியவற்றின் எல்லைகளைத் (constraints) தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். அதிலும் அனாயாசமாகத் தாண்டி இருக்கிறார். வீரேந்தர் செவாக்கும் நிறைய செஞ்சுரி அடித்திருக்கிறார். ராஹுல் திராவிடும். ஆனால் திராவிட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவரது உழைப்பு தெரியும். செவாக் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ஒரு அலட்சியம், இதெல்லாம் என்ன ஜுஜுபி என்ற ஒரு attitude தெரியும். அதே போலத்தான் வாரப் பத்திரிகையில் எழுதினால் என்ன, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை வாராவாரம் ஒரு முடிச்சு போட்டு கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் என்ன, சாகசங்களை வைத்து பக்கத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்தால் என்ன, இதை எல்லாம் மீறி இலக்கியம் படைப்பது பிஸ்கோத் வேலை என்ற மாதிரி ஒரு attitude தெரிகிறது.

இந்த நாவலைப் பற்றி எழுதுபவர்கள் இதன் குறும்புத்தனத்தைத்தான் பெரிதும் சிலாகிக்கிறார்கள். ஆனால் அந்த குறும்புத்தனத்திலேயே ஆழ்ந்துபோய் அவை நகர வாழ்வின் வெறுமையையும் சிறப்பாகக் காட்டுவதை தவற விட்டுவிடுகிறார்கள். எனக்கு அந்த சித்தரிப்பால்தான் இது இலக்கியமாக உயர்கிறது.

இலக்கியம்தான், ஆனால் இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம். இது வாழ்வின் பெரிய தரிசனங்களைக் காட்டிவிடவில்லை. உங்களைப் பெரிதாக சிந்திக்க வைத்துவிடாது. விஷ்ணுபுரம் மைக்கேலாஞ்சலோவின் Sistine Chapel என்றால் இது ரெட்டைவால் ரங்குடு கார்ட்டூன். (நானும் குறும்புத்தனத்தை மட்டும்தான் இங்கே முன்வைக்கிறேனோ?)

அன்று எழுதியது கீழே.


நான் சுஜாதாவின் பரம விசிறி ஆனது இந்தப் புத்தகத்தைப் படித்துதான். அந்த phase ஒரு பத்து வருஷமாவது நீடித்தது. இந்தக் கதை குங்குமத்தில் தொடராக வந்தபோது படித்தேன். சமீபத்தில் மீண்டும் படித்தேன்.

முதல் அத்தியாயத்திலேயே தூள் கிளப்பினார். தற்காலிக கிளார்க்காக இருக்கும் சிவராஜுக்கு மெடர்னிடி லீவில் போன பெண் திரும்பி வருவதால் நாளையிலிருந்து வேலை இல்லை. விஷயம் தெரிந்ததும் சிவராஜ் கேட்கும் கேள்வி: வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?” ஹோட்டலில் டேபிளுக்கு காத்திருக்கும் சிவராஜ் நினைக்கிறான் – “சினிமா இன்டர்வல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்” சென்னை என்ற நகரம் தன் தனித்தன்மையை அழிப்பதைப் பொறுக்க முடியாமல் சிவராஜ் சென்னையைப் பழி வாங்க தீர்மானிக்கிறான். அப்புறம் ஒரு ஜட்ஜ் கொலை, சிவராஜ் அடுத்தபடி ஒரு டாக்டரை கொல்லப் போகிறேன் என்று போலீசுக்கு ஜீவராசி என்ற பெயரில் லெட்டர் எழுதுவது, போஸ்டர் அடித்து கமிஷனர் ஆஃபீசுக்கு முன்னாலே ஓட்டுவது, டாக்டர் கொலை, ஒரு எம்.எல்.ஏ.க்கு மிரட்டல், வனஜா தன்னை கல்யாணம் செய்து கொள் என்று சிவராஜை கேட்பது, திருமணத்தால் சிவராஜுக்கு வாழ்க்கை நிலையாக அமையப் போவது, கணேஷ்-வசந்த் வருகை, எம்.எல்.ஏ. மரணம், கணேஷ் வசந்த் சிவராஜை கண்டுபிடிப்பது என்று கதை போகிறது.

மிகவும் கலக்கலான கதை. வசனம் பிரமாதம். ஒரு பம்மாத்து இன்டர்வ்யூவில் சிவராஜை கேட்கிறார்கள் – “நீங்கள் எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள்?” “என் வாழ்நாளின் ஆதர்சம் உங்கள் கம்பெனியில் ஒரு டெஸ்பாட்ச் கிளார்க்காக சேர வேண்டும் என்பதுதான்”. ஒரு டாக்டரை சிவராஜ் பார்க்கிறான். அவர் சொல்கிறார் – “சுவாமி நான் ஒரு ஜி.பி. மனசு சரியில்லைனா சைக்காட்ரிஸ்டிடம் போங்கோ.” சிவராஜின் பதில் “எனக்கு ரெண்டு கொட்டையும் வலிக்கிறது டாக்டர்.”

இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். சுவாரசியம் குன்றவே இல்லை. சின்ன சின்ன விஷயங்களில் ஒரு காட்சியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். உதாரணமாக டாக்டரை சிவராஜ் பார்ப்பதற்கு முன்னால் ஒரு அம்மாள் பச்சையா வெளிக்குப் போறான் டாக்டர் என்று குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவலையோடு சொல்லிக் கொண்டிருப்பார். கமிஷனர் பேட்டியில் ஹிந்து நிருபர் யோசித்து கேள்வி கேட்பதற்குள் கமிஷனர் போய்விடுவார். பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கும். சிவராஜின் தனிமை, கையாலாகாத்தனம் எல்லாம் சிறப்பாக வந்திருக்கும். வனஜா, எம்.எல்.ஏ., சந்தடி சாக்கில் பெண் ரோசலினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போலீஸ் அதிகாரி, எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருப்பார்.

உடுமலை பதிப்பகத்தில் (இன்றும்) கிடைக்கிறது. விலை எழுபது நூறு ரூபாய். வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இது விஷ்ணுபுரமோ, கரைந்த நிழல்களோ இல்லை. ஆனால் என் கண்ணில் இது இலக்கியமே. ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை பொருட்படுத்துவதில்லை. இது ரசனை வேறுபாடா, இல்லை என் படிப்பு முறையின் குறைபாடா தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். சுஜாதா existential angst பற்றி ஒரு கதை எழுதி இருந்தால் தூள் கிளப்பி இருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு

இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.

கணேஷின் முதல் தோற்றம் நைலான் கயிறு நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.

வசந்த்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. பாதி ராஜ்யம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன். அனிதா இளம் மனைவி வரும்போது நீரஜாவை கழற்றிவிட்டார். அந்த சமயத்தில் கணேஷ் கொஞ்சம் ஈயடிக்கும் வக்கீல், நிறைய கேஸ்கள் கிடையாது. ஜேகே-யில் ஜாமீனில் எடுக்க வேண்டும் என்று கணேஷுக்கு ஃபோன் செய்வார்கள், ஆனால் கணேஷ் பங்கு அவ்வளவுதான்.

கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்த பிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் மாயாவில். காயத்ரி தொடர்கதையாக வந்தபோது ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? பிறகு ப்ரியாவில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம். அதில் வரும் கணேஷ் புத்திசாலிதான், ஆனால் சூப்பர்மான் அல்லர்.

நிர்வாண நகரம் வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன. மேற்கே ஒரு குற்றம் போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. வசந்த்! வசந்த்! நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.

வசந்த் தனியாக வரும் கதையும் உண்டு – மேகத்தைத் துரத்தினவன். காந்தளூர் வசந்தகுமாரன் கதையில் வசந்த் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு சென்று கணேச பட்டரையும் சந்திக்கிறார்.

பொதுவாக வசந்த் ஜொள்ளன், கணேஷ் சாமியார் என்று ஒரு impression இருக்கிறது. வசந்த் வருவதற்கு முன் கணேஷிடம் வசந்த் ஜாடை நிறைய உண்டு. வசந்த் வந்த பிறகும் கொலையுதிர்காலத்தில் கதாநாயகி லீனாவை உரசுவார். இதன் பெயரும் கொலை நாவலில் இன்ஸ்பெக்டர் இன்பாவோடு ஏறக்குறைய காதலே உண்டு.

பல நாவல்களில் இவர்கள் மைனர் ரோலில் வருவார்கள். யாருக்காவது வக்கீல் தேவைப்பட்டால் அது இவர்கள் இருவரும்தான். 24 ரூபாய் தீவு ஒரு நல்ல உதாரணம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.

எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சில்வியா, மெரீனா போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். (உயிர்மை குறுநாவல்களை இரண்டு வால்யூமாக வெளியிட்டிருக்கிறதாம்.)

ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்!

டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதிராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதிராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது. கொலையுதிர்காலமும் டிவி சீரியலாக வந்திருக்கிறதாம். அதில் வசந்தாக நடித்தவர் விவேக்காம். டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு டிவியில் வந்தபோது ராஜீவ் கணேஷாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் வசந்தாகவும் நடித்தார்களாம். (சரத்பாபு டாக்டராம்). இருவருக்கும் வேஷப் பொருத்தம் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி.க்கு வயதும் இமேஜும் உதைக்கிறது.

எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார்கள். இன்றைக்கும் பிரகாஷ்ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். பத்து வருஷத்துக்கு முந்தைய சிம்பு பொருத்தமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன், ஆனால் நண்பர் ரெங்கசுப்ரமணியும் சுந்தர் பத்மநாபனும் ஆட்சேபிக்கிறார்கள். சுந்தர் ஆர்யா பொருத்தமாக இருப்பார் என்கிறார். எனக்கென்னவோ அவருக்கு வயதாகிவிட்ட மாதிரி இருக்கிறது. மீண்டும் யோசித்துப் பார்த்தால் பத்து வருஷத்துக்கு முன்னால் பிரகாஷ் ராஜ்-மாதவன் பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. இன்று விஜய் சேதுபதி-பிரசன்னா?


தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த்: ப்ரியா

sujathaசின்ன வயதில் குமுதத்தில் ப்ரியாவைத் தொடர்கதையாக படித்த நினைவிருக்கிறது. எத்தனை வில்லன் வந்தாலும் அடித்து நொறுக்கும் எம்ஜிஆர், ஜெய்ஷங்கர் மாதிரி ஹீரோக்களைத்தான் அப்போதெல்லாம் தெரியும். கணேஷ் வில்லன்களை திருப்பி அடித்தாலும் நாலு வில்லன் இருந்தால் அல்லது பலமான வில்லன் இருந்தால் தோற்பார். அப்போது அது ஒரு பெரிய கண்திறப்பாக இருந்தது. சின்னச் சின்ன உத்திகள் – துணை ஹீரோ பரத்திடம் ‘தொலைபேசி எண்ணை மனனம் செய்து கொள்ளப் பார்’ என்று தூய தமிழில் பேசுவது, விமானத்தின் ஒலியை அடையாளம் காண்பது என்பதெல்லாம் அட! போட வைத்தன. அதுதான் முதன்முதலாக முழுமையாகப் படித்த சாகசக் கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எம்ஜிஆருக்கும் ஜெய்ஷங்கருக்கும் மேம்பட்ட சாகசக் கதைகள் உண்டு என்று புரிந்து கொண்டதுதான் அன்று முக்கியமான takeaway.

இந்த நாவலில் கணேஷின் சாகசங்கள் என்று ஒன்றும் பெரிதாகக் கிடையாது. வாசகர்களைப் போலவே அவரும் திருப்பங்களில் திடுக்கிடுவார், அவருக்கும் என்ன நடக்கிறது என்று முக்கால்வாசி நேரம் புரியாது, இரண்டு மூன்று இடங்களை விட்டுவிட்டால் ஏறக்குறைய சராசரி மனிதர்தான். கதையின் முக்கியத் துப்பறியும் நிபுணர் ஸ்காட்லாண்ட் யார்டின் ரோவன்தான்.

Police procedural என்று ஒரு sub-genre உண்டு. காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி அணுகும், எப்படி தீர்வு காணும் என்பதை விவரிக்கும் genre. இதை முழு police procedural என்று சொல்ல முடியாவிட்டாலும் அரை police procedural என்றாவது சொல்லலாம். வில்லன்களோடு சண்டை போடுவது வேறு, துப்பறிவது வேறு என்று புரிய வைத்த நாவல்.

திடுக்கிடும் திருப்பங்கள் அவ்வப்போது வந்தாலும், நம்ப முடியாத முடிச்சுகளை அங்கங்கே போட்டாலும் கதை வாழ்க்கைக்கு கொஞ்சமாவது அருகே இருக்கிறது. சுஜாதாவின் டச்கள் அங்கங்கே தெரிகின்றன. இன்று படிக்கும்போது பெரிதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய நிலைக்கு கொஞ்சமாவது கிளுகிளுப்பாக இருந்திருக்கும். அன்றைய குமுதம் லெவல், ஜெயராஜ் படங்கள் என்று நன்றாகத் தெரிகிறது.

ப்ரியா தமிழ் கூறும் நல்லுலகில் உலக மகா ஹிட். அதனால் கதைச் சுருக்கத்தை மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தமிழ் நடிகை ப்ரியாவைக் கட்டுப்படுத்தும் கணவன் ஜனார்த்தனன்; காதலன் பரத். அவள் லண்டனின் படப்பிடிப்புக்கு செல்லும்போது பாதுகாப்புக்கு கூடச் செல்லும் கணேஷ். இவர்களை எல்லாம் மீறி ப்ரியா லண்டனில் கடத்தப்படுகிறாள். அவளை மீட்கும் இங்கிலாந்து போலீஸ், உதவி செய்யும் கணேஷ்.

பின்னால் இதை ரஜினிகாந்துக்காக மாற்றி திரைப்படமாகவும் வந்தது. பாடல்கள் மட்டும்தான் இன்னும் நிற்கின்றன. ஆனால் திரைப்படம் வெளிவந்தபோது எங்கள் நண்பர் குழுவுக்கு நீச்சலுடை ஸ்ரீதேவி முக்கியமான அம்சம்.

ஜெயமோகன் இதை தன் வணிக நாவல் பட்டியலில் சேர்க்கிறார். என் கண்ணில் அவ்வளவு நல்ல வணிக நாவல் அல்ல. கொஞ்சம் போர்தான். ஆனால் அந்த காலகட்டத்துக்கு இதன் ஓரளவாது உண்மையான சித்தரிப்புகள் பெரிய மாற்றமாக இருந்திருக்கும். சங்கர்லால் நாவல்களோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் நடுவே உள்ள வித்தியாசம் தெரியும்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள், தமிழின் வணிக நாவல்கள் எப்படி பரிணமித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: ப்ரியா திரைப்படம் பற்றி சுஜாதா நினைவு கூர்கிறார்

கணேஷ்-வசந்த் கதை: “பேசும் பொம்மைகள்”

sujathaபேசும் பொம்மைகள் நாவலில் என்னவோ குறைகிறது.

கணேஷ்-வசந்த் சாகசங்கள் உண்டு. அறிவியல் புனைகதைக்குத் தேவையான சுவாரசியமான premise உண்டு. இருந்தாலும் ஏதோ குறைகிறது.

தொடர்கதை format-இன் குறைகள்தான் காரணம் என்று நினைக்கிறேன் (குங்குமம் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது). பத்திரிகை ஆசிரியர் சொல்லும்போது கதையை முடித்தாக வேண்டும் என்பது பிரச்சினைதான். ஆனால் வாரப் பத்திரிகைகள் இல்லை என்றால் சுஜாதா ஏது?

ganesh-vasanthஏறக்குறைய cliche ஆகிவிட்ட கருதான். மனிதர்களின் நினைவுகளை வேறு உருவத்துக்கு மாற்ற ஆராய்ச்சி நடக்கிறது. மனிதர்களையே அவர்கள் சம்மதம் இல்லாமல் பயன்படுத்துவதால் ரகசியமாக நடக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் மாயா. மாயாவின் அக்கா மேனகாவும் அங்கேதான் வேலை பார்த்தாள், ஆனால் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் காதலனோடு அமெரிக்கா போய்விடுகிறாள். அவ்வப்போது தொலைபேசுகிறாள், அத்தோடு சரி. நிறுவனம் சாரங்கபாணி, நரேந்திரநாத் என்று இரு குழுக்களாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. மாயா மீதும் பரிசோதனைகள் நடக்கின்றன. திடீரென்று மாயா அலுவலகத்திலேயே தங்க நேரிடுகிறது. கணேஷ்-வசந்த் நுழைகிறார்கள், சாகசங்கள் புரிகிறார்கள்.

கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் நாவல்: அனிதா இளம் மனைவி

sujathaஅனிதா: இளம் மனைவி சுஜாதாவின் புகழ் பெற்ற கணேஷ்-வசந்த் நாவல். ஜெயமோகன் பரிந்துரைக்கும் தமிழ் வணிக நாவல்.

1971-இல் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கதையின் விறுவிறுப்பு, மற்றும் முடிச்சு அப்போது இதன் பெரும் கவர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் படித்துவிட்டு ஒரு நிமிஷம் யோசித்தால் கூட முடிச்சின் செயற்கைத்தனம், பலவீனம் எல்லாம் புரியும்.

ஒரு பிணம் கிடைக்கிறது. இறந்தவர் பணக்கார ஷர்மா என்று அவரது அழகிய இரண்டாம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள். வேலைக்கார கோவிந்த் மேல் சந்தேகம் விழுகிறது. முதல் மனைவியின் பெண் மோனிகா கணேஷை கதைக்குள் இழுக்கிறாள். கணேஷ் அனிதாவால் கவரப்படுகிறான். சின்னச் சின்ன முரண்கள் (discrepancies) தெரிகின்றன. அவற்றைப் பின் தொடர்ந்து இறந்தது ஷர்மா அல்ல, கோவிந்த், கொன்றதே ஷர்மாதான் என்று கண்டுபிடிக்கிறான்.

எத்தனை முட்டாள்தனம்? போலீஸ் இறந்தது ஷர்மா என்று நம்பிவிட்டாலும் ஷர்மா தன் கம்பெனியை எப்படி நடத்துவார்? எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு புது வாழ்க்கை தொடங்கினாலும் இது வரை சேர்த்து வைத்த சொத்து ஷர்மாவுக்கு எப்படி கிடைக்கும்? சரி மனைவியை மிரட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் இனி மேல் அனிதாவுடன் சேர்ந்து வாழ்வது எப்படி? உற்றார் உறவினர் இல்லாத கோவிந்தின் பிணத்தை வீட்டின் பின்னால் புதைத்தால் பிரச்சினைகள் வராமல் இருக்குமே? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பானேன்? இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்ப நேரமில்லாமல் விறுவிறுவென்று போவதுதான் புத்தகத்தின் வெற்றி. இன்றும் கூட இதைப் போல குற்றப் பின்னணி உள்ள ஒரு நாவல் தமிழில் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இது எப்படி இருக்கு என்று ஜெய்ஷங்கர், ஸ்ரீதேவி நடித்து திரைப்படமாகவும் வந்தது. ஓடவில்லை.

வணிக நாவல்கள் தமிழில் எப்படி வளர்ந்தன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், சுஜாதா ரசிகர்கள் தவறவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்

கணேஷ்-வசந்த் குறுநாவல்கள்

என் தலைமுறை, எனக்கு அடுத்த தலைமுறைக்காரர்களுக்கு கணேஷ்-வசந்த் கதைகள் முக்கியமான படிப்பு அனுபவம். இன்றும் தமிழில் இதை விடச் சிறந்த குற்றப் பின்னணி கதைகள் வரவில்லை. ஆனால் உலக அளவில் பார்த்தால் கணேஷ்-வசந்த் ஷெர்லாக் ஹோம்ஸின் அருகே வராது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய இளைஞர்கள் இவற்றால் பெரிதும் கவரப்படுவார்கள் என்று தோன்றவில்லை. யாராவது இளைஞர்/இளைஞி என்ன நினைக்கிறீர்கள் என்றூ சொல்லுங்கப்பு!

sujathaநண்பர் ஸ்ரீனிவாஸ் பல சமயங்களில் பின்னூட்டங்கள் வழியாக பல கணேஷ்-வசந்த் குறுநாவல்கள் பற்றி சின்னக் குறிப்புகளைத் தந்திருந்தார். அவற்றைத் தொகுத்து இங்கே பதித்திருக்கிறேன். இவற்றில் கணிசமானவற்றைப் பற்றி நானும் இங்கே எழுதி இருக்கிறேன். (பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி, காயத்ரி, மேற்கே ஒரு குற்றம்,  மீண்டும் ஒரு குற்றம், கொலையரங்கம், எதையும் ஒரு முறை, மலை மாளிகை, மாயா, மேகத்தைத் துரத்தினவன், விதி, ஐந்தாவது அத்தியாயம், நில்லுங்கள் ராஜாவே!) உன்னைக் கண்ட நேரமெல்லாம், மேலும் ஒரு குற்றம், மெரீனா ஆகியவற்றுக்கும் என்றாவது எழுத வேண்டும். உ.க. நேரமெல்லாம், மே. ஒ. குற்றம், மே. துரத்தினவன், விதி நான்கும் என் பதின்ம வயதில் சுஜாதாவை எனக்கு ஒரு icon ஆக்கியவற்றில் பங்குள்ளவை. புகார் புகார் புகார் போன்றவை சரியாக நினைவில்லை. யாராவது சுட்டி கொடுத்தால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள்!

ganesh-vasanthகணேஷ்-வசந்த் குறுநாவல்கள் எல்லாம் உயிர்மை பதிப்பகத்தால் இரண்டு வால்யூமாகப் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.

பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி இரண்டிலும் வசந்த் கிடையாது. நீரஜா என்ற ஒரு பெண் பாதி ராஜ்யத்தில் க்ளையண்ட். ஒரு விபத்தின் அனாடமியில் அவள்தான் உதவியாளர்.

ஓவர் டு ஸ்ரீனிவாஸ்!

பாதி ராஜ்யம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.

ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் போது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். A very excellent story.

மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:
“ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.
“ஓ.கே.”
“இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.
“ஓ.கே”
“மூன்று: ஒரு பாட்டில் பீர்”.
“பீரா? எப்பொழுது?”
“இப்பொழுதே!”
“ரெடி” என்றான் சிரித்துக்கொண்டே.
இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை – கூர்ந்து வாசித்தால்.

காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படமும் உண்டு. ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.

விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.

மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.

மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.

உன்னைக் கண்ட நேரமெல்லாம்:ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.

மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது… படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.

அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கத்தோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப்படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.

மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.

புகார் புகார் புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskolnikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.

ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும் பொது கணேஷின் மூளை இன்ஷூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.

மேகத்தைத் துரத்தினவன்: ‘மாலைமதி’ இதழில் 1979-ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசியமான நாவல் இது.

நில்லுங்கள் ராஜாவே!: “நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!” இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை… எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.

கொலையரங்கம்: குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.

எதையும் ஒரு முறை: குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ்-வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீனிவாஸ் குறிப்பிடாத இரண்டு குறுநாவல்களைப் பற்றியும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.

மலை மாளிகை: Gerontology-யை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சொதப்பல் கதை.

மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்: ஒரு சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் நாயகனை எல்லோரும் வேறு யாரோ என்கிறார்கள், என்ன மர்மம் என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

கணேஷ்-வசந்த் கதை – நில்லுங்கள் ராஜாவே

sujathaசிறந்த கணேஷ்-வசந்த் சாகசக் கதைகளுள் ஒன்று. அதுவும் எழுதப்பட்ட காலத்தில் – ஒரு முப்பது வருஷத்துக்கு – முன் படித்த பதின்ம வயதினர் நிச்சயமாக இம்ப்ரஸ் ஆகி இருப்பார்கள்.

nillungal_rajaveஅட்டகாசமாக ஆரம்பிக்கிறது. நான்தான் தொழிலதிபர் விட்டல் என்று ஒருவன் விட்டல் வீட்டிலும் அலுவலகத்திலும் கலாட்டா செய்கிறான். அவனுக்கு விட்டலின் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் விட்டல் குடும்பத்தினர், அவன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், வீட்டு நாய் கூட அவன் விட்டல் இல்லை என்கிறார்கள். கைது செய்யப்படுபவனுக்கு கணேஷும் வசந்தும் ஆஜராகிறார்கள். ஜாமீன் வாங்கித் தருகிறார்கள். ஹோட்டல் அறையில் தங்கச் செல்பவன் திரும்ப வரவேயில்லை.

காணவில்லை விளம்பரத்திலிருந்து அவன் விட்டல் இல்லை, ஐசிஎஃப்பில் வேலை செய்யும் ராஜா என்று கண்டுபிடிக்கிறார்கள். ராஜாவுக்கோ தான் விட்டல் என்று சாதித்தது, ஜாமீனில் வெளிவந்தது எதுவும் தெரியவில்லை. யார் நீங்கள் என்று கணேஷ்-வசந்தைக் கேட்கிறான்.

இதற்கு மேல் கதையைப் பற்றி எழுதுவதாக இல்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

பல வருஷங்களுக்குப் பின் இந்தப் பதிவுக்காக மீண்டும் படித்துப் பார்த்தேன், நல்ல சாகசக் கதை என்பது மீண்டும் உறுதிப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முடிச்சு, கணேஷும் வசந்தும் மர்மங்களை அவிழ்க்கும் விதம் பிரமாதமாக இருந்தது, இப்போது சர்வசாதாரணமாக இருக்கிறது. வாத்தியார் முடிச்சை ரிச்சர்ட் காண்டன் எழுதிய Manchurian Candidate (1959) நாவலிலிருந்து லவட்டிவிட்டாரோ என்று தோன்றியது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் கதைகள், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் நாவல் – யவனிகா

sujathaயவனிகா அத்தனை சுவாரசியமான நாவல் இல்லை. கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்காக மட்டுமே. ஒவ்வொரு கணேஷ்-வசந்த் நாவலைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் உண்டு, அதனால்தான் இந்தப் பதிவு.

ganesh-vasanthகதைச்சுருக்கத்தை இரண்டு வரியில் எழுதிவிடலாம். சோழர் காலத்து அபூர்வச்சிலை ஒன்று – யவனிகா – பெரிய பணக்காரக் குடும்பத்து உறுப்பினரின் தனிப்பட்ட கலெக்‌ஷனில் இருக்கிறது. அதை வைத்து குடும்ப பிசினசின் தலைவர் அன்னியச் செலாவணிக்காக கேம் விளையாடுகிறார். கணேஷும் வசந்தும் நடுவில் புகுந்து குட்டையைக் குழப்புகிறார்கள். சுவாரசியத்துக்காக அந்தச் சிலையை கவனித்துக் கொள்ள கொஞ்சம் புத்திசாலி, ஆனால் சுமாரான தோற்றம் உள்ள ஒரு பெண் பாத்திரம். அவ்வளவுதான்.

வழக்கமான வசந்த் துள்ளல் கூட இதில் மிஸ்ஸிங். கணேஷ் வழக்கம் போல புத்திசாலித்தனமாக எந்த முடிச்சையும் அவிழ்க்கவில்லை. வில்லன்களுக்கு தண்டனையும் கிடையாது. தொடர்கதையாக எழுதும்போதே கைகழுவிவிட்டார் என்று தோன்றுகிறது.

தீவிர கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த்: ஐந்தாவது அத்தியாயம்

sujathaகணேஷ்-வசந்த் கதைகளில் மீண்டும் மீண்டும் தெரியும் ஒரு தீம் – சென்சேஷனல், இது எப்படி என்று வியக்க வைக்கும் முடிச்சு. சில சமயம் அந்த மர்மம் ஜுஜுபியாக அவிழ்ந்தாலும் அது அவருக்கு பெரிய வாசகர் வட்டத்தை சேர்த்தது.

ganesh-vasanthஇந்த குறுநாவலும் அப்படித்தான். அபூர்வாவின் வாழ்க்கை விவரங்களை அப்படியே எடுத்து (கணவன் ஒரு டாக்டர், அபூர்வாவுக்கு மச்சம் எங்கே, கணவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணைத் தடவுவது, சொத்துத் தகராறு) ஒரு தொடர்கதை வெளிவருகிறது. தொடர்கதையின் ஐந்தாவது அத்தியாயம் வெளிவருவதற்குள் அபூர்வா கொல்லப்படுவாள் என்று முதல் நான்கு அத்தியாயங்களில் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்படுகிறது. யார் எழுதுவது என்று வெளியிடும் பத்திரிகைக்கே தெரியாது, ஈமெயில் மூலம் அத்தியாயங்கள் வருகின்றன. அபூர்வா கணேஷ்-வசந்தை அணுக, அவர்களுக்கு டாக்டர் கணவன் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்படுகிறது. அதற்குள் அபூர்வாவே கணேஷ்-வசந்தை அழைத்து கணவன் தன்னைக் கொல்ல வந்ததாகவும், கைகலப்பில் தற்செயலாகக் கணவனைக் கொன்றுவிட்டதாகவும் அழுகிறாள். அபூர்வா மீது கேஸ் நிற்காது என்ற நிலையில் கணேஷுக்கு இந்தத் தொடர்கதை எல்லாம் அபூர்வாவின் செட்டப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்தைத் தீர்க்காமல் கதையை முடித்துவிட்டார்.

Lady or the Tiger என்று ஒரு பிரமாதமான சிறுகதை உண்டு. சுஜாதா அதைப் படிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சும்மா அந்த டெக்னிக்கைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதி இருக்கிறார். எனக்கென்னவோ இங்கே அந்த டெக்னிக் பொருந்தவில்லை. பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய கணேஷ்-வசந்த் நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்