தேவனூரு மஹாதேவா கன்னட எழுத்தாளர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குசும பாலே என்ற நாவலுக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.
மஹாதேவா ஆர்எஸ்எஸ் ஆளா மட்டு அகலா என்ற சிறு நூலை 2022-இல் பதித்திருக்கிறார். “ஆளா மட்டு அகலா” என்றால் ஆழம் மற்றும் அகலம் என்று நினைக்கிறேன்.
மஹாதேவா ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர். புத்தகத்தின் முதல் பகுதியில் கோல்வால்கர், சவர்க்கார் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். சில மேற்கோள்கள் மட்டும் பதிவின் கடைசியில்.
ராஜேந்திர பிரசாத் ஹிந்து மத சார்புடையவர் என்று அங்கும் இங்கும் படித்திருக்கிறேன். அவர் சொல்கிறார்
I have been informed of the plans by the RSS to stir up trouble among the masses. They have got a number of men dressed as Muslims and looking like Muslims who are to create trouble with the Hindus by attacking them and thus inciting the Hindus
(Ref: Dr. Rajendra Prasad to Sardar Patel (March 14, 1948) cited in Neerja Singh (ed.), Nehru-Patel: Agreement Within Difference— Select Documents & Correspondences 1933-1950, NBT, Delhi, p. 43)
காந்தி இறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை, பிரசாத்துக்கு காந்தி தெய்வம், அந்த கோபம் இப்படி வெளிப்பட்டிருக்கலாம்தான்.
திப்பு சுல்தான் குடகுப் பகுதியில் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்எஸ்எஸ் கணக்குப்படி 69000 ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனராம். குடகுப் பகுதியில் அந்தக் காலத்தில் மக்கள் தொகையே 69000தான், இத்தனை பேரை மதம் மாற்றி இருந்தால் இன்று குடகுப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்தல்லவா இருக்க வேண்டும், 15% சதவிகித முஸ்லிம்கள்தான் என்று கேட்கிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடகில் 69000 பேர்தான் மக்கள் தொகை என்று எப்படித் தெரிய வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை திப்பு சுல்தான் காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதோ என்னவோ.
ஜெயப்பிரகாஷ் நாராயண் நெருக்கடி நிலை காலத்தில் சிறை வைக்கப்பட்டபோது சிறைவாசத்தின்போது அவரின் கண்காணிப்பாளராக இருந்து பின்னாளில் நண்பராக மாறியவர் அன்றைய கலெக்டர் தேவசகாயம். 1977-இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது வாஜ்பேயி, அத்வானி போன்றவர்கள் தாங்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிவிடுவதாக ஜேபியிடம் சொன்னார்கள், பிறகு ஏமாற்றிவிட்டார்கள், ஜேபி இவர்கள் ஏமாற்றியதை தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்று தேவசகாயம் பேட்டி கொடுத்திருக்கிறாராம். இந்தக் காலகட்டத்தில் நான் சிறுவன். ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் பத்திகளைத்தான் தினமும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்படி சொன்னதாக எங்கும் படித்த நினைவில்லை. மாறாக முன்னாள் ஜனசங்க உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகமாட்டேன் என்று சொன்னதால் தான் கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. அதுவும் நானாஜி தேஷ்முக் போன்றவர்கள் இப்படி ஒத்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஜேபி யதார்த்தமாக போகிற போக்கில் ஏதாவது சொல்லி இருக்கலாம்.
பிராமணன் தலை, க்ஷத்ரியன் கை, வைசியன் தொடை, சூத்திரன் கால் என்ற சுலோகம் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்கிறது என்று எளிய வாதத்தை முன் வைக்கிறார். தலை ஒஸ்தி என்றாலாவது என்ன நினைக்கிறார் என்று புரிகிறது. காலை விட கை என்ன உசத்தி? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
மோடி ஸ்விஸ் வங்கிகளிலிருந்து ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொண்டு வருவேன் என்றாரே, எங்கே அந்தப் பணம் என்று கேட்கிறார். நியாயமான கேள்விதான். ஆனால் இது வரை எந்தக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி இருக்கிறது? கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர்கள் எல்லாரும் சத்தியசந்தர்களா என்ன? இல்லை ரூபாய்க்கு 3 படி அரிசி போட்டாச்சா?
ஆர்எஸ்எஸ்தான் மோடியைக் கட்டுப்படுத்துகிறது, மோடி வெறும் பொம்மைதான் என்கிறார். ஆர்எஸ்எஸ்ஸுக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவு மர்மமாகத்தான் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒத்துக் கொள்ளாவிட்டால் யாரும் தலைவர் ஆகிவிடமுடியாது, ஆனால் பொதுவாக நிர்வாகத்தில் தலையிடாது என்று தோன்றுகிறது. உண்மையாகவே இருந்தாலும் நான் நினைப்பதற்கும் ஆதாரம் இல்லை, மஹாதேவா நினைப்பதற்கும் அவர் எதுவும் ஆதாரங்களைத் தரவில்லை.
பள்ளிப் புத்தகங்களில் திப்பு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினார் என்பது கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறதாம். பௌத்தமும் ஜைனமும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று சித்தரிக்கப்படுகின்றனவாம். முரளி மனோகர் ஜோஷி ஜோசியத்தை கல்லூரிப் படிப்பாக்கிவிட்டதோடு நிற்கவில்லையாம், புத்ரகாமேஷ்டி யாகம் எப்படி செய்வது என்பதெல்லாம் கல்லூரிப் பாடமாக்கினாராம். அடப் பாவிங்களா!
கர்நாடக அரசு Karnataka Religious Freedom Protection Bill 2021 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறதாம். அதில் மத சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு பற்றி ஒரு வரி கூட இல்லையாம். மாறாக மதமாற்றத்தை தடை செய்வது பற்றித்தான் பக்கம் பக்கம் இருக்கிறது என்று கிண்டல் அடிக்கிறார்.
Women, Dalits, people of unsound mind who cannot make decisions, people with disabilities and children are treated the same in the Act
என்கிறார். சரியாக இருந்தால் பெரிய அநியாயம்தான்.
மஹாதேவாவின் வாதங்கள் பல எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. ஆனால் புத்தகத்தின் முதல் அத்தியாயம் – சவர்க்கார், கோல்வால்கர் மேற்கோள்கள் – வலுவானவையே. மேற்கோள்கள் out of context ஆக எடுத்தாளப்பட வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனாலும் இவற்றில் உண்மையே இலலாமல் இருக்கவும் வாய்ப்பில்லை.
இவற்றை நிராகரிப்பதே ஆர்எஸ்எஸ் முன் நகர வழி. ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அது கஷ்டம்தான், சாவர்க்கரும் கோல்வால்கரும்தான் ஹிந்துத்துவத்தின் முதன்மை சிற்பிகள். ஆனால் அவர்களும் நேராக திருப்பதி கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்துவிடவில்லை. எத்தனைதான் விதந்தோதினாலும் அவர்களும் மனிதர்கள்தான், அவர்கள் கண்ணோட்டத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்த மேற்கோள்கள் அவற்றைத்தான் காட்டுகின்றன. இவற்றை நிராகரிப்பதில் தயக்கம் காட்டவே கூடாது, அப்போதுதான் அரசியல் ஹிந்துத்துவத்தைப் பற்றிய மனத்தடை குறையும் என்று நான் கருதுகிறேன்.
புத்தகம் இங்கே கிடைக்கிறது
கோல்வால்கர் வர்ணாசிரம தர்மமே ஹிந்து மதம் என்று நம்பி இருக்கிறார்.
Golwalkar’s God: “There is a need for a living God who can arouse all the energy within us. That’s why our elders said: “Our society is our God…Hindu race is itself the (embodiment of) the Viraata Purusha (the Vedic first/primordial man), a form of the omnipotent”. Although they did not use the word ‘Hindu’, the description below that appears in the Purusha Sukta clarifies this – Sun and the moon are the eyes of the Lord, after mentioning that the stars and the skies originate from his navel – it goes on to describe the brahmin as his head, the king as his arms, the Vaishyas, his thighs and the Shudra, his feet. The people who follow this four-category system constitute the Hindu race, and our God. That is what is meant here
(Ref: Golwalkar, Chintana Ganga, 3rd Reprint, p.29
கோல்வால்கருக்கு மனுஸ்மிருதி பற்றி பெருமிதம்தான். அந்தப் பெருமிதத்தில் நான் தவறு எதுவும் காணவில்லை. மனுஸ்மிருதியில் நான் ஆட்சேபிக்கும் பல பகுதிகள் இருக்கின்றன, ஆனால் அப்படி ஒரு சட்டம்/நியதி தொகுக்கப்படுவது அறிவுத்தளத்தில் பெரும் சாதனையே. ப்ளேடோ பூமிதான் உலகத்தின் மையம் என்று பெரிய அறிவியலை உருவாக்கினார், அது தவறு என்று நிறுவப்பட்டதுதான். ஆனால் அதுவும் அறிவுத் தளத்தில் பெரும் சாதனைதான், இல்லையா? இன்றும் மனுஸ்மிருதியை – குறிப்பாக ஜாதிக் கோட்பாட்டை – ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லாதவர்களைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சாவர்க்கருக்கு மனுஸ்மிருதி ஹிந்து மதத்தின் முக்கிய புனித நூல்; ராமாயணம், மகாபாரதம் எல்லாம் பின்னால்தான் இருக்கிறது. மனுஸ்மிருதியை புனித நூல் என்று கருதுவதே வியப்பாக இருக்கிறது, அதற்கு ராமாயணம் மகாபாரதம் உபநிஷதம் அத்வைதம் எல்லாவற்றுக்கும் மேலான இடம் தருவதை என்னால் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
In our Hindu Rashtra (State), after the Vedas, the Manusmriti is the holiest religious text
(Ref: V.D.Savarkar, ‘Women in Manusmriti’ Savarkar Samagra, Vol. 4, Prabhat Publishers, Delhi)
There are only two courses open to the foreign elements, either to merge themselves in the national race and adopt its culture, or to live at its mercy so long as the national race may allow them to do so and to quit the country at the sweet will of the national race. That is the only sound view on the minorities’ problem. That is the only logical and correct solution
(Ref: Golwalkar’s ‘We or our nationhood defined’, 1939)
அதாவது இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கிறிஸ்துவர் எல்லாரும் ஹிந்துக்களின் தயவில் வாழும் இரண்டாம் நிலை குடிமகன்கள். அது என்னங்க இந்த லாஜிக் எல்லாம் அமெரிக்க வம்சாவளி இந்தியர்களுக்கு பொருத்திப் பார்க்க முடியவில்லை? அமெரிக்க அதிபர் தீபாவளி வாழ்த்து சொன்னால் ஹிந்துத்துவர்கள் எல்லாம் இத்தனை குஷிப்படுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் அமெரிக்கக் கலாசாரத்தோடு ஒன்றிப் போங்கள், தீபாவளியாவது மண்ணாவது, எல்லாரும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள், அப்படித்தான் கோல்வால்கர் சொல்லி இருக்கிறார் என்று ஒரு ஹிந்துத்துவரும் சொல்வதில்லையே?
நாசிசம், ஃபாசிசம் எல்லாம் ஹிந்துத்துவர்களுக்கு 1940-இல் கூட உவப்பாய்த்தான் இருந்திருக்கிறது. இது சாவர்க்கர் கூற்று. ஜப்பானியர்களோடு நின்று போராடிய சுபாஷ் போஸ் கூட அப்படி உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.
The very fact that Germany and Italy has so wonderfully recovered and grown so powerful as never before at the touch of Nazi or fascist magical wand is enough to prove that these ideologies were the most appropriate tonics their health demanded.
(Ref: V.D.Savarkar’s presidential address at the 1940 Hindu Mahasabha in Madurai)
தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்
தொடர்புடைய சுட்டி: மின்பிரதி