தேவனூரு மஹாதேவா: ஆர்எஸ்எஸ் ஆளா மட்டு அகலா

தேவனூரு மஹாதேவா கன்னட எழுத்தாளர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குசும பாலே என்ற நாவலுக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.

மஹாதேவா ஆர்எஸ்எஸ் ஆளா மட்டு அகலா என்ற சிறு நூலை 2022-இல் பதித்திருக்கிறார். “ஆளா மட்டு அகலா” என்றால் ஆழம் மற்றும் அகலம் என்று நினைக்கிறேன்.

மஹாதேவா ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர். புத்தகத்தின் முதல் பகுதியில் கோல்வால்கர், சவர்க்கார் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். சில மேற்கோள்கள் மட்டும் பதிவின் கடைசியில்.

ராஜேந்திர பிரசாத் ஹிந்து மத சார்புடையவர் என்று அங்கும் இங்கும் படித்திருக்கிறேன். அவர் சொல்கிறார்

I have been informed of the plans by the RSS to stir up trouble among the masses. They have got a number of men dressed as Muslims and looking like Muslims who are to create trouble with the Hindus by attacking them and thus inciting the Hindus
(Ref: Dr. Rajendra Prasad to Sardar Patel (March 14, 1948) cited in Neerja Singh (ed.), Nehru-Patel: Agreement Within Difference— Select Documents & Correspondences 1933-1950, NBT, Delhi, p. 43)

காந்தி இறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை, பிரசாத்துக்கு காந்தி தெய்வம், அந்த கோபம் இப்படி வெளிப்பட்டிருக்கலாம்தான்.

திப்பு சுல்தான் குடகுப் பகுதியில் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்எஸ்எஸ் கணக்குப்படி 69000 ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனராம். குடகுப் பகுதியில் அந்தக் காலத்தில் மக்கள் தொகையே 69000தான், இத்தனை பேரை மதம் மாற்றி இருந்தால் இன்று குடகுப்பகுதி முஸ்லிம்கள் நிறைந்தல்லவா இருக்க வேண்டும், 15% சதவிகித முஸ்லிம்கள்தான் என்று கேட்கிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடகில் 69000 பேர்தான் மக்கள் தொகை என்று எப்படித் தெரிய வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை திப்பு சுல்தான் காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதோ என்னவோ.

ஜெயப்பிரகாஷ் நாராயண் நெருக்கடி நிலை காலத்தில் சிறை வைக்கப்பட்டபோது சிறைவாசத்தின்போது அவரின் கண்காணிப்பாளராக இருந்து பின்னாளில் நண்பராக மாறியவர் அன்றைய கலெக்டர் தேவசகாயம். 1977-இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது வாஜ்பேயி, அத்வானி போன்றவர்கள் தாங்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிவிடுவதாக ஜேபியிடம் சொன்னார்கள், பிறகு ஏமாற்றிவிட்டார்கள், ஜேபி இவர்கள் ஏமாற்றியதை தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்று தேவசகாயம் பேட்டி கொடுத்திருக்கிறாராம். இந்தக் காலகட்டத்தில் நான் சிறுவன். ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் பத்திகளைத்தான் தினமும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்படி சொன்னதாக எங்கும் படித்த நினைவில்லை. மாறாக முன்னாள் ஜனசங்க உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகமாட்டேன் என்று சொன்னதால் தான் கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. அதுவும் நானாஜி தேஷ்முக் போன்றவர்கள் இப்படி ஒத்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஜேபி யதார்த்தமாக போகிற போக்கில் ஏதாவது சொல்லி இருக்கலாம்.

பிராமணன் தலை, க்ஷத்ரியன் கை, வைசியன் தொடை, சூத்திரன் கால் என்ற சுலோகம் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்கிறது என்று எளிய வாதத்தை முன் வைக்கிறார். தலை ஒஸ்தி என்றாலாவது என்ன நினைக்கிறார் என்று புரிகிறது. காலை விட கை என்ன உசத்தி? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மோடி ஸ்விஸ் வங்கிகளிலிருந்து ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொண்டு வருவேன் என்றாரே, எங்கே அந்தப் பணம் என்று கேட்கிறார். நியாயமான கேள்விதான். ஆனால் இது வரை எந்தக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி இருக்கிறது? கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர்கள் எல்லாரும் சத்தியசந்தர்களா என்ன? இல்லை ரூபாய்க்கு 3 படி அரிசி போட்டாச்சா?

ஆர்எஸ்எஸ்தான் மோடியைக் கட்டுப்படுத்துகிறது, மோடி வெறும் பொம்மைதான் என்கிறார். ஆர்எஸ்எஸ்ஸுக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவு மர்மமாகத்தான் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒத்துக் கொள்ளாவிட்டால் யாரும் தலைவர் ஆகிவிடமுடியாது, ஆனால் பொதுவாக நிர்வாகத்தில் தலையிடாது என்று தோன்றுகிறது. உண்மையாகவே இருந்தாலும் நான் நினைப்பதற்கும் ஆதாரம் இல்லை, மஹாதேவா நினைப்பதற்கும் அவர் எதுவும் ஆதாரங்களைத் தரவில்லை.

பள்ளிப் புத்தகங்களில் திப்பு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினார் என்பது கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறதாம். பௌத்தமும் ஜைனமும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று சித்தரிக்கப்படுகின்றனவாம். முரளி மனோகர் ஜோஷி ஜோசியத்தை கல்லூரிப் படிப்பாக்கிவிட்டதோடு நிற்கவில்லையாம், புத்ரகாமேஷ்டி யாகம் எப்படி செய்வது என்பதெல்லாம் கல்லூரிப் பாடமாக்கினாராம். அடப் பாவிங்களா!

கர்நாடக அரசு Karnataka Religious Freedom Protection Bill 2021 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறதாம். அதில் மத சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு பற்றி ஒரு வரி கூட இல்லையாம். மாறாக மதமாற்றத்தை தடை செய்வது பற்றித்தான் பக்கம் பக்கம் இருக்கிறது என்று கிண்டல் அடிக்கிறார்.

Women, Dalits, people of unsound mind who cannot make decisions, people with disabilities and children are treated the same in the Act

என்கிறார். சரியாக இருந்தால் பெரிய அநியாயம்தான்.

மஹாதேவாவின் வாதங்கள் பல எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. ஆனால் புத்தகத்தின் முதல் அத்தியாயம் – சவர்க்கார், கோல்வால்கர் மேற்கோள்கள் – வலுவானவையே. மேற்கோள்கள் out of context ஆக எடுத்தாளப்பட வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனாலும் இவற்றில் உண்மையே இலலாமல் இருக்கவும் வாய்ப்பில்லை.

இவற்றை நிராகரிப்பதே ஆர்எஸ்எஸ் முன் நகர வழி. ஆர்எஸ்எஸ் தலைமைக்கு அது கஷ்டம்தான், சாவர்க்கரும் கோல்வால்கரும்தான் ஹிந்துத்துவத்தின் முதன்மை சிற்பிகள். ஆனால் அவர்களும் நேராக திருப்பதி கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்துவிடவில்லை. எத்தனைதான் விதந்தோதினாலும் அவர்களும் மனிதர்கள்தான், அவர்கள் கண்ணோட்டத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்த மேற்கோள்கள் அவற்றைத்தான் காட்டுகின்றன. இவற்றை நிராகரிப்பதில் தயக்கம் காட்டவே கூடாது, அப்போதுதான் அரசியல் ஹிந்துத்துவத்தைப் பற்றிய மனத்தடை குறையும் என்று நான் கருதுகிறேன்.

புத்தகம் இங்கே கிடைக்கிறது


கோல்வால்கர் வர்ணாசிரம தர்மமே ஹிந்து மதம் என்று நம்பி இருக்கிறார்.

Golwalkar’s God: “There is a need for a living God who can arouse all the energy within us. That’s why our elders said: “Our society is our God…Hindu race is itself the (embodiment of) the Viraata Purusha (the Vedic first/primordial man), a form of the omnipotent”. Although they did not use the word ‘Hindu’, the description below that appears in the Purusha Sukta clarifies this – Sun and the moon are the eyes of the Lord, after mentioning that the stars and the skies originate from his navel – it goes on to describe the brahmin as his head, the king as his arms, the Vaishyas, his thighs and the Shudra, his feet. The people who follow this four-category system constitute the Hindu race, and our God. That is what is meant here
(Ref: Golwalkar, Chintana Ganga, 3rd Reprint, p.29


கோல்வால்கருக்கு மனுஸ்மிருதி பற்றி பெருமிதம்தான். அந்தப் பெருமிதத்தில் நான் தவறு எதுவும் காணவில்லை. மனுஸ்மிருதியில் நான் ஆட்சேபிக்கும் பல பகுதிகள் இருக்கின்றன, ஆனால் அப்படி ஒரு சட்டம்/நியதி தொகுக்கப்படுவது அறிவுத்தளத்தில் பெரும் சாதனையே. ப்ளேடோ பூமிதான் உலகத்தின் மையம் என்று பெரிய அறிவியலை உருவாக்கினார், அது தவறு என்று நிறுவப்பட்டதுதான். ஆனால் அதுவும் அறிவுத் தளத்தில் பெரும் சாதனைதான், இல்லையா? இன்றும் மனுஸ்மிருதியை – குறிப்பாக ஜாதிக் கோட்பாட்டை – ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லாதவர்களைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சாவர்க்கருக்கு மனுஸ்மிருதி ஹிந்து மதத்தின் முக்கிய புனித நூல்; ராமாயணம், மகாபாரதம் எல்லாம் பின்னால்தான் இருக்கிறது. மனுஸ்மிருதியை புனித நூல் என்று கருதுவதே வியப்பாக இருக்கிறது, அதற்கு ராமாயணம் மகாபாரதம் உபநிஷதம் அத்வைதம் எல்லாவற்றுக்கும் மேலான இடம் தருவதை என்னால் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

In our Hindu Rashtra (State), after the Vedas, the Manusmriti is the holiest religious text
(Ref: V.D.Savarkar, ‘Women in Manusmriti’ Savarkar Samagra, Vol. 4, Prabhat Publishers, Delhi)


There are only two courses open to the foreign elements, either to merge themselves in the national race and adopt its culture, or to live at its mercy so long as the national race may allow them to do so and to quit the country at the sweet will of the national race. That is the only sound view on the minorities’ problem. That is the only logical and correct solution
(Ref: Golwalkar’s ‘We or our nationhood defined’, 1939)

அதாவது இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கிறிஸ்துவர் எல்லாரும் ஹிந்துக்களின் தயவில் வாழும் இரண்டாம் நிலை குடிமகன்கள். அது என்னங்க இந்த லாஜிக் எல்லாம் அமெரிக்க வம்சாவளி இந்தியர்களுக்கு பொருத்திப் பார்க்க முடியவில்லை? அமெரிக்க அதிபர் தீபாவளி வாழ்த்து சொன்னால் ஹிந்துத்துவர்கள் எல்லாம் இத்தனை குஷிப்படுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் அமெரிக்கக் கலாசாரத்தோடு ஒன்றிப் போங்கள், தீபாவளியாவது மண்ணாவது, எல்லாரும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள், அப்படித்தான் கோல்வால்கர் சொல்லி இருக்கிறார் என்று ஒரு ஹிந்துத்துவரும் சொல்வதில்லையே?


நாசிசம், ஃபாசிசம் எல்லாம் ஹிந்துத்துவர்களுக்கு 1940-இல் கூட உவப்பாய்த்தான் இருந்திருக்கிறது. இது சாவர்க்கர் கூற்று. ஜப்பானியர்களோடு நின்று போராடிய சுபாஷ் போஸ் கூட அப்படி உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.

The very fact that Germany and Italy has so wonderfully recovered and grown so powerful as never before at the touch of Nazi or fascist magical wand is enough to prove that these ideologies were the most appropriate tonics their health demanded.
(Ref: V.D.Savarkar’s presidential address at the 1940 Hindu Mahasabha in Madurai)

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

யானை டாக்டர்கள்

ஜெயமோகனின் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)எனக்குப் பிடித்த புனைவுகளில் ஒன்று. ஊருக்கே பிடித்த புனைவுதான். அதன் நாயகரும் யானை டாக்டருமான டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) உண்மை மனிதர் என்பது அந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகம் ஜேனி சோடோஷ் எழுதிய “Elephant Doctor“. “கதாபாத்திரங்களின்” பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். வழக்கம் போலவே டாக்டர் கே என்றோ கிருஷ்ணமூர்த்தி என்றோ நினைவில்லை, யானை டாக்டர் என்றுதான் நினைவிருந்தது. அவரைப் பற்றிய புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். இவர் பெயர் டாக்டர் கேகே (கே.கே. சர்மா). கே, கேகே என்ற பெயர்களில் குழம்பி ஜெயமோகனின் உண்மை நாயகன்தானாக்கும் என்று படித்துப் பார்த்தேன்.

இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் அதிசயப்பட வைக்கின்றன. கேகே அஸ்ஸாமியர். கே தமிழர். கேகேவுக்கு குடும்பம் உண்டு. கேவுக்கு யானைகள்தான் குடும்பம் போலிருக்கிறது. கேகேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. கேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்காததுதான் யானை டாக்டர் சிறுகதையின் முன்புலம் (foreground). கேகேதான் மயக்கமருந்தை துப்பாக்கி போன்ற ஒரு கருவியின் மூலம் யானைகளுக்கு செலுத்துவதில் முன்னோடி. கே யானைகளின் சவப்பரிசோதனையின் முன்னோடி என்று யானை டாக்டர் கதையில் சொல்லப்படுகிறது. கேகே சர்க்கஸ் யானைகளின் பராமரிப்பு பரிசோதனைக் குழுவின் உறுப்பினர், சர்க்கஸ் யானைகளின் உடல் நலத்தைப் பேண பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறார்; கே கோவில் யானைகளுக்கு “விடுமுறை” போல காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று போராடி வென்றிருக்கிறார். கேகே காட்டு யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார், ஆனால் அவரது பணி பொதுவாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுடன்தான். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது, ஆளைக் கொல்கிறது, அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் கேகேவைத்தான் அழைப்பார்களாம். கேவின் பணி காட்டு யானைகளுடன்தான் அதிகம் போலிருக்கிறது, தமிழகம்/கேரளப் பகுதிகளில் அவர்தான் யானை டாக்டர். யானை டாக்டர் புனைவில் கே அழுகிய சடலம் ஒன்றை ஆராயும்போது அவர் உடல் முழுதும் புழுக்கள்; ஒரு யானைக்கு எனிமா கொடுத்து 10-15 கிலோ யானை மலம் கேகே மேல் கொட்டி இருக்கிறது. கே வயதில் மூத்தவர் – 1929-இல் பிறந்திருக்கிறார். கேகே 1961-இல்.

ஜேனி சோடோஷின் புத்தகம் சிறுவர்களைத்தான் குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதையைப் படித்திராவிட்டால் இதைப் புரட்டிக் கூட பார்த்திருக்கமாட்டேன். புத்தகம் பெரியவர்களுக்கு சுவாரசியப்படாது என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் தகவல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தன. சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றோடு சில வருஷம் வாழ்ந்ததால் யானை என்றால் கேகேவுக்கு கொள்ளை இஷ்டம். நன்றாகப் படித்திருக்கிறார், டாக்டராகப் போ என்று குடும்பத்தார் சொல்ல இவரோ கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். யானை மருத்துவம் அப்போது படிக்கும் நிலையில் இல்லை. (கே எழுதி இருந்தால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.) இருந்தாலும் இவர் ஆடு/மாடு/நாய்/பூனைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலாக யானைக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் யானையை நெருங்க முடியாத நிலை. மிருகக்காட்சி சாலை அதிகாரியின் உதவியுடன் மயக்கமருந்து தரும் துப்பாக்கியை பழகிக் கொண்டு யானையை மயக்கம் அடைய வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார். இவரது மைத்துனர், வனத்துறை அதிகாரி நாராயண் மதம் பிடித்த யானை ஒன்று மக்களைத் தாக்குகிறது என்று இவரை அழைக்க, இவர்கள் எல்லாரும் மயக்கமருந்து துப்பாக்கியோடு யானையை நெருங்கி இருக்கிறார்கள், யானை இவரது மைத்துனரை மிதித்தே கொன்றுவிட்டது. யானைகளுக்கு இலவச முகாம் எல்லாம் நடத்தி இருக்கிறார். மின்சாரம் தாக்கி காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் மருத்துவம் செய்த யானை ஒன்று 15-20 வருஷங்களுக்குப் பிறகு சர்க்கஸ் யானையாக இருக்கும்போதும் இவரை நினைவில் வைத்துக் கொண்டு துதிக்கையால் அணைத்துக் கொண்டிருக்கிறது!

மேன்மக்கள், வேறென்ன சொல்ல? சிறுவர் புத்தகமாக இருந்தாலும் என்னைப் போலவே நீங்களும் தகவல்களால் கவரப்படலாம். யானை டாக்டர் கதையைப் படிக்கவில்லை என்றால் தவறவிடாதீர்கள்!

(டாக்டர் கேயின் புகைப்படம் கிடைக்கவில்லை)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், இந்திய அபுனைவுகள், சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஹுசேன் ஜெய்தி எழுதிய “Class of 83”

மும்பையின் குற்ற உலகம் “புகழ்” பெற்றது. கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம், அருண் காலி என்ற நீண்ட வரலாறு உள்ளது. சமீப காலமாக “பாய்” ஆக இருப்பது சமூகம் ஏற்கும் ஒரு வேலையாகவே மாறிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா?

ஹுசேன் ஜெய்தி எழுதிய Class of 83 (2019) அப்படி கட்டுப்படுத்த போராடிய ஒரு அதிகாரியைப் பற்றிய புத்தகம். ப்ரதீப் ஷர்மாவின் வாழ்க்கை வரலாறு என்றே சொல்லலாம். Class of 83-இல் இன்னும் பலர் இருந்தாலும் இந்தப் புத்தகம் ஷர்மாவைதான் பெரும்பான்மையாக விவரிக்கிறது.

ஷர்மா 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். அவருடைய சகாக்கள் விஜய் சாலஸ்கர். ஷர்மா, சாலஸ்கர், ரவி ஆங்கரே, ப்ரஃபுல் போசலே, அஸ்லம் மோமின் போன்றவர்கள் சட்டத்தை வளைத்து – “குற்றவாளிகளை” சுட்டுத் தள்ளி – மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சி எடுத்தவர்கள். பிற்காலத்தில் தயா நாயக் இவர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

இப்படி சுட்டுத் தள்ளினால் சட்டம் எதற்கு என்ற கேள்வி எல்லாம் எனக்கு இல்லை. அல் கபோனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். டைகர் மெமன், தாவூத் இப்ரஹிம் போன்றவர்களுக்கெல்லாம் வழக்கு, விசாரணை எல்லாம் ஒரு கேடா என்றுதான் தோன்றுகிறது. இது தவறுதான், ஆனால் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஷர்மாவின் முதல் என்கௌண்டர் ஏறக்குறைய சினிமாத்தனமானது. இரண்டு ரௌடிகள் வயதான கிழவன் கிழவியை வீட்டிலிருந்து இழுத்து வந்து வெளியே போடுகிறார்கள். தடுக்க வந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் வாளால் கையில் வெட்டு விழுந்து காயம் அடைகிறார்கள். மூன்றாமவரை வெட்டப் போகும்போது ஷர்மா அந்த ரௌடியை சுடுகிறார். அவனது நண்பன் இவரை வெட்ட வர அவனையும் சுடுகிறார். புலி ரத்தத்தின் ருசி கண்டுவிட்டது!

“குற்றவாளிகளை” சுட்டுத் தள்ள முதலில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். யாராவது துப்பு கொடுக்க வேண்டும். அப்படி துப்பு கொடுப்பவர்களும் சிறுசிறு குற்றங்களை – பிக்பாக்கெட், திருட்டு இப்படி ஏதாவது – செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தருவதன் மூலம் – சில பல சமயங்களில் பணமே தருவதன் மூலம்தான் – துப்பு கிடைக்கும் என்பதை ஷர்மா தன் வேலைக்காலத்தின் ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அதற்காக அப்படிப்பட்ட ஒரு நெட்வொர்க்கை கட்டி அமைத்திருக்கிறார்.

அப்புறம் என்ன? வரிசையாக துப்பு, சுட்டுக் கொலை என்றுதான் வாழ்க்கை போயிருக்கிறது. 312 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறாராம்.

சகா சாலஸ்கர் நெருங்கிய நண்பர் அப்போது. இருவரும் ஒன்றாகப் பணி ஆற்றி இருக்கிறார்கள். ஆனால் பின்னால் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவருக்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. சாலஸ்கர் 2008 மும்பை தாக்குதலில் கசப்-இஸ்மாயிலை எதிர்த்து மரணம் அடைந்திருக்கிறார்.

தாவூத் இப்ரஹிமின் சகோதரன் இக்பால் கஸ்கரை மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்திருக்கிறார். பொதுவாக தாவூத் இப்ரஹிமின் கும்பலை ஒழித்துக் கட்ட பாடுபட்டிருக்கிறார்.

மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் சும்மா இருக்குமா? நீதிமன்றங்கள் சில சமயம் அவரை கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால் மும்பையை அமைதியாக வைத்திருப்பதில் இவருக்கு பெரிய பங்கிருக்கிறது என்று உணர்ந்த மேலிடம் இவரை பொதுவாக ஆதரித்திருக்கிறது, அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இத்தனைக்கும் ஒரு முறையாவது ஒரு அப்பாவியை தவறுதலாக அடையாளம் கண்டு போட்டுத் தள்ளி இருக்கிறார் என்று தெரிகிறது.

மேலிடம் ஒரு காலத்தில் இவருக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்று இவரை ஒரு என்கௌண்டர் கேஸில் சேர்த்துவிட்டது. 3 வருஷம் சிறையில் இருந்திருக்கிறார். கடைசியில் ஜோடித்த கேஸ் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒருவர் அப்பழுக்கற்ற உத்தமராக இருக்க முடியுமா? நிச்சயமாக அடி உதை மூலம்தான் பல முறை துப்பு துலங்கி இருக்கும். அதில் நிரபராதிகள் மாட்டிக் கொள்ள மாட்டார்களா என்ன? ஜெய்தி அவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது என்று வேறு கோடி காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை மூலமாக வைத்து திரைப்படமும் வந்திருக்கிறது.

அங்கங்கே சுவாரசியத்துக்காக கொஞ்சம் சரக்கை சேர்த்துக் கொண்டிருக்கிறார். காற்றடித்து ஷர்மாவின் முடியைக் கலைத்தது என்றெல்லாம் படிக்கும்போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது. புத்தகம் பொதுவாக ஷர்மாவை நல்லவராகவும் வல்லவராகவும் காட்ட முயற்சி செய்கிறதுதான். ஆனாலும் அதில் உண்மை தெரிகிறது. விறுவிறுப்பாக செல்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

ஸ்வாதி சதுர்வேதி எழுதிய I Am a Troll

கடந்த நாலைந்து வருஷங்களாக சமூக ஊடகங்களில் – ஃபேஸ்புக், வாட்ஸப், தளங்களில் – போகிற போக்கில் எதையாவது அடித்துவிடும் போக்கு தென்படுகிறது. ஒன்றை நூறாக்கி ஊதிப் பெருக்கி உங்களுக்கு ஏற்கனவே இருக்கக் கூடிய சார்பு நிலையை வலுப்படுத்துவது, அப்படி ஊதிப் பெருக்குவதில் முரண்பாடுகள், தவறான தகவல்கள் எதையேனும் சுட்டிக் காட்டினால் நாகரீகமற்ற தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவது.

அமெரிக்க சூழலில் ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் இதை நிறையவே காணலாம். எத்தனையோ conspiracy theories சுற்றிக் கொண்டிருக்கின்றன. இன்றும் ட்ரம்ப் “நாமதான் ஜெயிச்சோம்” என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் கூட தேர்தல் மோசடி என்று ஒரு ஆதாரத்தைக் காட்டவில்லை. சில வழக்குகளில் மோசடி எதுவும் இல்லை, ஆனால் சில விதிமுறைகள் தவறு என்றுதான் வாதாடுகிறோம் என்றே வக்கீல்கள் சொன்னார்கள். ஆனால் இன்றும் கணிசமான கூட்டம் ட்ரம்பை நம்பத்தான் செய்கிறது, அவரும் ஊதிப் பெருக்குவதை நிறுத்தவில்லை.

இந்திய சூழலில் ஹிந்துத்துவ ஆதரவாளர்களிடம் இது நிறையவே தெரிகிறது. மற்ற அரசியல் சார்பு நிலைகள் உள்ளவர்களிடம் இது காணப்படவில்லை என்று பொருளில்லை. பாஜக பதவியில் இருப்பதால் இப்படி என்று அனுமானிக்கிறேன். அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் ஹிந்துத்துவ சார்புள்ளவர்களாக இருப்பதாலும் எனக்கு இப்படி தோன்றலாம், யார் கண்டது?

ஒருவர் எதையாவது சொல்வார் – மோதிலால் நேரு உண்மையில் ஒரு முஸ்லிம், நேரு குடும்பமே ரகசிய முஸ்லிம் குடும்பம் என்பார். இன்னொருவர் காந்தி ஹிந்துப் பெண்களை கூட்டிக் கொடுத்தார் என்று ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வார். சமயத்தில் அதற்கு பொய்யாக ஏதாவது “ஆதாரம்” வேறு காட்டுவார்கள். உடனே அதை வாட்சப்பில் நூறு பேர் பகிர்ந்து கொள்வார்கள். இரண்டு மாதத்தில் அது கல்வெட்டில் பதிக்கப்பட்ட செய்தி ஆகிவிடும். இதற்கு என்ன ஆதாரம் என்று ஒருவரும் கேட்க மாட்டார்கள். யாராவது தப்பித் தவறிக் கேட்டுவிட்டால் அவர் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவார்.

எனக்கு ஒரு அதி தீவிர ஹிந்துத்துவ நண்பர் இருக்கிறார். அவர் இப்படித்தான் எதையோ சொல்லி மாட்டிக் கொண்டார். இது பொய்யாச்சேய்யா என்று கேட்டதற்கு எங்கள் கட்சி வெல்ல பொய் சொன்னால் தவறில்லை என்றே சொன்னார்.

இது ஹிந்துத்துவர்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் என்பதில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி பாஜக பதவியில் இருப்பதால் அவர்கள் குரல் இன்று வலித்து ஒலிக்கிறது, அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று ஈ.வே.ரா.வுக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்தது என்பதெல்லாம் பல வருஷமாக சொல்லப்பட்டு வரும் பொய்கள்.

இதெல்லாம் எப்படி ஆரம்பிக்கின்றன என்று எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் உண்டு. இந்த மாதிரி கற்பனை செய்திகளை, பொய்த்தரவுகளை யார் உருவாக்குகிறார்கள்? வேலை வெட்டி கிடையாதா?

ஸ்வாதி சதுர்வேதி எழுதிய I Am a Troll இந்தக் கேள்விக்கு கொஞ்சம் பதில் அளிக்கிறது. பா.ஜ.க. இதற்காக ஒரு படையையே உருவாக்கி இருக்கிறது என்கிறார். சிலருக்கு சம்பளம் தரப்படுகிறது. சிலர் அவர்களாக பணத்தை எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள். தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. ஒருவர் எதையாவது சொல்வார், இந்தக் கூட்டத்தில் நூறு பேர் அதை பகிர்வார்கள், கேள்வி கேட்பவரை மிகக் கேவலமாக சொல்ல முடியாத வார்த்தைகளில் தாக்குவார்கள். இவர்களில் சிலரை மோடியே ட்விட்டரில் பின்தொடர்கிறார். பாஜக பிரமுகர்கள், சில மந்திரிகள் இவர்களை அவ்வப்போது சந்திக்கிறார்கள்.

சதுர்வேதியின் புத்தகம் முழு உண்மையா என்பதில் கொஞ்சம் சந்தேகம் உண்டு. பெரும் பகுதி உண்மை, கொஞ்சம் மிகைப்படுத்துதல் என்றுதான் நினைக்கிறேன். பாஜக மட்டும் அல்ல, எல்லா கட்சிகளும் இதை செய்யத்தான் செய்யும் என்று தோன்றுகிறது. ஓட்டு கிடைக்கும் என்றால் எத்தனை தூரம் வேண்டுமானாலும் இறங்குவார்கள்.

படிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் யோசிக்க வைத்த புத்தகம். உங்கள் அனுபவம் என்ன, உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள், இது எத்தனை தூரம் உண்மை என்று பார்ப்போம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தியோடோர் பாஸ்கரன்

தியோடோர் பாஸ்கரன் சினிமா ஆர்வலர். குறிப்பாக தமிழ் சினிமா ஆர்வலர். அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Message Bearers (1981) விடுதலைப் போராட்டத்தில் நாடக, திரைப்படங்களின் பங்களிப்பை விவரிக்கிறது. சிறப்பான ஆய்வு. பாடல்கள், குறிப்பாக நாடகப் பாடல்கள் போராட்டம் என்ற செய்தியை மக்களுக்கு சுலபமாக எடுத்துச் சென்றிருக்கின்றன. ஆனால் தியாகபூமி திரைப்படத்தைத் தவிர திரைப்படங்களுக்கு பெரிய பங்கு இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியமூர்த்தி ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் பாடல்கள், நாடகங்கள், சினிமாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதல் இருந்ததாகவும் தெரியவில்லை.

Eye of the Serpent (1996) விருது பெற்ற புத்தகம். நல்ல அறிமுகப் புத்தகம். தமிழ் சினிமாவைப் பற்றிய பருந்துப் பார்வை கிடைக்கிறது. குறிப்பாக, ஊமைப்படங்கள், 1950-க்கு முற்பட்ட படங்களைப் பற்றி பல அரிய தகவலகளைத் திரட்டி இருக்கிறார். திராவிட இயக்கங்கள் சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டன என்ற விமர்சனத்தை இன்று பரவலாகக் காண்கிறோம். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அதையேதான் செய்தாராம். அவர் இறப்புக்குப் பிறகு ராஜாஜி, காமராஜ் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். எனக்குப் பிடித்திருந்த பகுதிகளில் ஐம்பது சினிமாக்களைப் பற்றிய குறிப்புகள், பிரபல பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் பற்றிய அத்தியாயங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இரண்டு புத்த்தகங்களையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள், திரைப்படங்கள்

ராஜேந்திர பிரசாதின் “காந்திஜியின் காலடியில்” – மீள்பதிப்பு

2010-இல் எழுதிய பதிவு. அப்போது நண்பர் கிருஷ்ணமூர்த்தி நா.பா.வின் ஆத்மாவின் ராகங்கள் புத்தகத்தை படி என்று சொல்லி இருந்தார், இன்னும் முடியவில்லை…


ஜெயமோகன் படிக்க வேண்டிய வரலாற்று புத்தகங்கள் என்று பரிந்துரைத்திருந்த புத்தகங்களில் “காந்திஜியின் காலடியில்” – At the Feet of Mahatma Gandhi – ஒன்று. ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

காந்தியின் தலைமைக் குணம் (leadership) என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது. ஐம்பது வயது வரைக்கும் இந்தியாவில் அவ்வளவாக visibility இல்லாத மனிதர். திடீரென்று வருகிறார். இரண்டு மூன்று வருஷங்களில் காங்கிரஸ் அவர் பாக்கெட்டுக்குள். பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், லாலா லஜ்பத் ராய் எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். திலகர் கூட என் வழியை விட காந்தியின் வழி வேலை செய்கிறதே என்று சொன்னாராம். காந்தி சொன்னார் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும் பணக்காரர்களான படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற வக்கீல்கள் எல்லாம் சொத்து சுகத்தை விட்டுவிட்டு ஜெயிலுக்கு – ஜெயிலுக்கு! – போக க்யூவில் நிற்கிறார்கள். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போவது என்றால் இந்த படித்த, பணக்கார வர்க்கம் எப்படி பயப்பட்டிருக்கும்! வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்கள் பட்ட பாட்டை பார்த்த பிறகு எவனுக்கு தைரியம் வரும்? காந்தி வர வைத்திருக்கிறார். நாடே அவர் சொன்ன பேச்சை கேட்டிருக்கிறது. அவர் சொன்னால் ஒத்துழையாமை இயக்கம். சௌரி சௌராவில் வன்முறை, நிறுத்தி விடுங்கள் என்றால் நின்றுவிடுகிறது. இது என்ன மந்திரமா மாயமா?

இது காந்தி உத்தமர், தியாக் சீலர் என்பதானால் வந்த தாக்கம் இல்லை. என் கண்ணில் கோகலே காந்தியை விட பெரிய தியாக சீலர். கோகலேயின் தாக்கம் காந்தியின் தாக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. ஒரு இயக்கத்தின் தலைவன் தனி மனித சாதனையாக என்ன செய்துவிட முடியும்? அந்த செயல்களுக்கு ஒரு குறியீட்டு மதிப்பு (symbolic value) இருக்க வேண்டும். காந்தி அந்த gesture-களை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். உப்பெடுப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு இயக்கமாக இருக்கட்டும், உண்ணாவிரதமாக இருக்கட்டும், அது சாதாரண மனிதனுக்கு புரிகிறது, அவனுக்கும் செய்ய வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.

பிரசாத் பாபுவின் புத்தகத்தில் காந்தி மாஜிக்கைப் பற்றி நல்ல insight கிடைக்கிறது. பிரசாத் காந்தியை முதல் முறை சந்தித்ததிலிருந்தே காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிவிட்டார். சம்பரானில் அவுரி பயிர் செய்யும் பெரும் ஜமீன்தார்களுக்கும் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கும் தகராறு. பஞ்சம். காந்தி ஆஃப்ரிக்காவில் உழைத்திருக்கிறார் என்பதால் அவரை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏதோ ஒரு காங்கிரஸ் வருஷாந்திர கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரியாது, விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு சம்பரானுக்கு வந்திருக்கிறார். கூட உள்ளூர் பெரிய மனிதர்கள், பிரசாத் பாபு உட்பட. காந்தி சம்பரான் ஜில்லாவுக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை உத்தரவு. காந்தி இதை நான் ஏற்கப் போவதில்லை, நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை, நீங்கள் எல்லாம் போய்விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பிஹாரி பாபுக்கள் எல்லாம் கூடி பேசுகிறார்கள் – எங்கிருந்தோ வந்த ஒருவர் பிஹாரி மக்களுக்காக ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறார், நாம் திரும்பி போவது வெட்கக்கேடு என்று. காந்தி கூட சேர்ந்து நிற்கிறார்கள். அன்றிலிருந்து பிரசாத் பாபு காந்தியின் அடிமை. பிரசாத் வெளிப்படையாகவே சொல்கிறார் – சில சமயம் காந்தி சொல்வது எனக்கு புரிவதில்லை, பிடிப்பதில்லை, ஆனால் நான் அவர் பேச்சை தட்டுவதும் இல்லை என்று.

காந்தியின் ரகசியம் இதுதானோ? கஷ்டமான காரியத்தை – அது மலம் அள்ளுவதாக இருக்கட்டும், ஜெயிலுக்கு போவதாக இருக்கட்டும், உண்ணாவிரதம் இருப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு போராட்டமாக இருக்கட்டும் – தான் முன்னால் நின்று செய்து மற்றவர்களுக்கு தார்மீக அழுத்தத்தை (moral pressure) உருவாக்கி இருக்கிறார். அவர் பின்னால் ஒருவர் வந்தாலும் போதும், அது மேலும் peer pressure-ஐ உருவாக்குகிறது. ஒன்று இரண்டாகி பத்தாகி நூறாகி கோடியாகிறது.

அதே நேரத்தில் காந்தி ஒரே நிமிஷத்தில் எல்லாரையும் முழுவதாக மாற்றவும் முயற்சி செய்வதில்லை. படிப்படியாகத்தான். காந்தியுடன் கூடத் தாங்கும் பிஹாரி பாபுக்களை ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சேர்ந்து சமைத்து ஒன்றாக சாப்பிட வைக்கிறார். எல்லாருக்கும் – பிராமணரான பிரசாத் உட்பட – தயக்கம்தான், ஆனால் காந்தியின் மென்மையான அழுத்தம் அதை நடத்துகிறது. பிரசாத் சொல்கிறார், என்னை பிற ஜாதியினரின் மலத்தையும் அள்ள வேண்டும் என்று அப்போதே சொல்லி இருந்தால் நான் ஓடிப் போயிருப்பேன் என்று. அது நடக்க சில வருஷங்கள் ஆனதாம்.

மேலாண்மை (managment) குரு எல்லாரும் படிக்க வேண்டியது காந்தியின் வழிகளைத்தான்.

ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், விடுதலைப் போராட்டப் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
படிக்க வேண்டிய இந்திய வரலாற்று புத்தகங்கள் – ஜெயமோகன்

இந்தியத் தலைவர்கள் பற்றிய சில புத்தகங்கள்

ஆளுமைகள், தலைவர்கள் பற்றி வரும் இந்தியப் புத்தகங்கள் பொதுவாக சகிக்க முடியாத hagiography ஆக இருக்கின்றன. ஒரு உதாரணம்:

கார்ல் மார்க்ஸின் கனவு, நெப்போலியனின் ஆண்மை, விவேகானந்தரின் ஆத்மா, பெல்ஜியரின் லட்சியம், அசோகனின் அரசியலறிவு, சிவாஜியின் சிந்தனை, பாரதியின் பண்பு, ரவிவர்மாவின் ஓவியம், ஹிட்லரின் சித்தம், நிப்பானியரின் வீரம், லெனினின் முயற்சி, நேருவின் நேர்மை, நியூட்டனின் தத்துவம் இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, தேசபந்து தாஸின் ரத்தத் தேனின் ஊற வைத்து, அன்னையின் அமுதத்தில் கரைத்து, காந்தீயப் பரிதியொளியிலே காய வைத்து உருட்டித் திரட்டியதென்ன ஓர் மின்சார சஞ்சீவியை நமக்கு வங்கம் இன்று தந்திருக்கிறது.

ஆஹா! ஓஹோ! பேஷ் பேஷ்! என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? மிச்ச எல்லாம் கூட பரவாயில்லை, சம்பந்தமே இல்லாமல் ரவிவர்மாவும் நியூட்டனும் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை.

இந்த மேற்கோளில் குறிப்பிடப்படும் தலைவர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? சுதந்திரச் சூழல் என்ற புத்தகம், எழுதியவர் என்.ஆர். பத்மநாபன்.

அதனால்தானோ என்னவோ bal_gangadhar_tilakg_p_pradhanதிலகர் பற்றி ஜி.பி. ப்ரதான் எழுதிய இந்தப் புத்தகம் பெரிய relief ஆக இருந்தது. திலகரைப் பற்றிய நல்ல சித்திரத்தைக் கொடுக்கிறது. திலகரை விட எனக்கு கோகலேதான் பெரிய ஹீரோ. கோகலே பெரும் ஆளுமையாக இருந்தாலும் தலைவரா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். திலகர் நல்ல தலைவர், பெரும் ஆளுமை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பூசி மழுப்பாமல் திலகரின் குறைகளையும் குறிப்பிடுகிறது. திலகரால் சில பழைய பழக்க வழக்கங்களை விடமுடியவில்லை. அவருடைய முதல் குறிக்கோள் அரசியலே என்றாலும் தீண்டாமைக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திடமாட்டேன், பிராமணர்களை கொஞ்சம் உயர்த்திப் பிடிப்பேன் என்று சில சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. சின்னப் புத்தகம், pdf கோப்பை இணைத்திருக்கிறேன், கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஜி.டி. பிர்லா பாபு என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். புத்தகம் சுமார்தான். ஆனால் பிர்லாவுக்கு காந்தி மேல் அசாத்திய மரியாதையும் பிரமிப்பும் இருந்திருக்கிறது என்பது புரிகிறது. முதன்முதலாக காந்தியைப் பார்க்கும்போது பிர்லாவுக்கு 20 வயது இருக்கலாம். இவர் கோகலேதான் என் குரு என்று சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். இளைஞர்கள் அப்போதெல்லாம் திலகர் கட்சிதானாம், கோகலேவை கேலிக்குரியவராகத்தான் பார்த்திருக்கிறார்களாம். இவரும் என்னடா இது சோதனை என்றுதான் நினைத்திருக்கிறார். நிலைமை ஆனால் சீக்கிரமே மாறிவிட்டது. அம்பேத்காரோடு தகராறு ஏற்பட்டு உண்ணாவிரதம் இருந்த காலத்தில் பிர்லாதான் ஹரிஜன முன்னேற்ற சமிதியோ என்னவோ ஒரு அமைப்பின் தலைவர். இவர், ராஜாஜி, தேவதாஸ் காந்தி மூவரும்தான் காந்தி தரப்பிலிருந்து அம்பேத்கரிடம் பேசிக் கொண்டிருந்தார்களாம். கிழவர் மூவரையும் படாதபாடு படுத்தி இருக்கிறார். ஆனால் நடுவில் ஏதோ சின்ன தவறான புரிதலில் பிர்லா மீதும் தேவதாஸ் மீதும் கோபப்பட்டுவிட்டாராம். பிறகு அய்யய்யோ கோபப்பட்டுவிட்டேனே என்று புலம்பல் வேறு.

மு.வ. கூட காந்தி அண்ணல் என்ற ஒரு தண்டப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

வெறும் hagiography ஆக முடிந்திருக்க வேண்டிய புத்தகம் vallabhbhai_patelmavlankarசர்தார் படேலைப் பற்றி பர்ஷோதம் தாஸ் சக்கி (Parshotam Das Saggi) தொகுத்திருக்கும் Life and Times of Sardar Vallabhbhai Patel – பல தலைவர்கள் படேலைப் பற்றி எழுதியவை, படேலின் பல பேச்சுகளின் தொகுப்பு. ஆனால் ஜி.வி. மாவ்லங்கர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையை மட்டும் நான் பரிந்துரைப்பேன். அந்தக் கட்டுரையை மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். மாவ்லங்கர் பம்பாய் சட்டசபை, அரசியல் சட்ட நிர்ணய சபை (Constituent Assembly), இந்திய நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தவர். முதல் சபாநாயகர். 1920-இலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்ட்டவர்.

தங்கம்மாள் பாரதி எழுதிய அமரன் கதை அப்பாவைப் பற்றி உண்மையான பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாரதியைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான புத்தகம் இல்லை. ஒரு சுவாரசியமான தகவல் – பிராமணக் குடும்பத்தில் பிறந்த பாரதியின் குலதெய்வம் சுடலைமாடன்! எங்கள் குலதெய்வமும் கதிராமங்கலம் சுடலைமாடன் என்பது எனக்கே 10 வருஷங்களுக்கு முன்புதான் தெரிந்தது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகர ஆரம்பித்தபோது குலதெய்வத்தை காஞ்சி சங்கராசாரியர் அனுமதியுடன் கதிராமங்கலத்தை விட வந்து போக சௌகரியம் அதிகமான வைத்தீஸ்வரன்கோவிலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

நா. வானமாமலை எழுதிய “வ.உ.சி.: முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி” புத்தகத்தில் வ.உ.சி.யின் வாழ்க்கையைப் பற்றி புதிதாக விவரங்கள் எதுவுமில்லை. ஆனால் அனுபந்தமாக கப்பல் நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் நோக்கங்களை இணைத்திருக்கிறார், ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.

E.V. Ramasami Naickerஈ.வெ. ராமசாமி பற்றி கருணானந்தம் எழுதிய “தந்தை பெரியார்” புத்தகம் ஈ.வெ.ரா.வின் சுவாரசியமற்ற, சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு மட்டுமே. புத்தகத்தில் ஈ.வெ.ரா. எதையும் பார்ப்பனர்-மற்றவர் என்று மட்டுமே பார்த்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த மற்றவரில் தலித்களுக்குப் பெரிய இடமில்லை என்பதும் தெரிகிறது. உணர்ச்சிவசப்பட்டு தடாலடியாக எதையும் அணுகுபவர் என்பதும் தெரிகிறது. ஆனால் எப்போதும் தனக்கு சரி என்று படுவதை செய்ய/சொல்லத் தயங்காதவர், ஊர் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசிக்காதவர் என்றும் தெரிகிறது. (உதாரணம் – கள்ளை ஒழிக்க வேண்டும் என்றால் தென்னந்தோப்பையே வெட்டுவது). ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் ஆவண முக்கியத்துவம் உடைய புத்தகம்.

வ.வே.சு. ஐயர் பற்றி டி.எஸ்.எஸ். ராஜன் நல்ல புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். ராஜன் ஐயர் இங்கிலாந்தில் “படித்தபோது” அவருடன் படித்தவர். பிற்காலத்தில் காங்கிரசில் சேர்ந்து ராஜாஜி மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர். இங்கிலாந்து அனுபவங்கள், காந்தி அவர்கள வசித்த இடத்துக்கு விருந்துக்கு வந்தது, சவர்க்கார்-ஐயர்-காந்தி விவாதித்தது, போலீஸ் உளவாளியாக அனுப்பப்பட்டவரை கண்டுபிடித்தது, சேரன்மாதேவி குருகுலம் ஆகிய பலவற்றையும் நினைவு கூர்கிறார். சிறு புத்தகம், இணைத்திருக்கிறேன், படித்துப் பாருங்கள்!

சத்தியமூர்த்தியை பலரும் நினைவு கூரும் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. சிறந்த புத்தகம். Hagiography அல்ல. சத்தியமூர்த்திக்கு பதவி வேண்டும் என்று நிறைய ஆசை இருந்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு 1937 ராஜாஜி மந்திரி சபையில் இடம் தராதது ராஜாஜிக்கே ஒரு களங்கம்தான். இத்தனைக்கும் அவர்தான் முதல்வராக வரவேண்டும் என தொண்டர்கள் விரும்பியதாகவும், காந்தி சொன்னதால் அதை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தததாகவும் சாண்டில்யன் எங்கோ எழுதி இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்குகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்ததாம். மஞ்சரி பத்திரிகை நிறுவனர் ராமரத்னம் அவரிடமே இதைப் பற்றி கேட்டிருக்கிறார். சத்தியமூர்த்தியின் நேர்மையான பதில் அட்சரலட்சம் பெறும்.

நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தலென்றால் கூட அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்திய்மூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படி சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்காக ‘கார்னஜி நிதியா’ வைத்திருக்கிறீர்கள்? தேர்தல் தம்பட்டமடித்துவிட்டு நானும் என் குடும்பமும் வாயு பட்சணம் செய்ய முடியுமா? லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பிளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டி இருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்போதாவது இதைச் செய்தால் இது லஞ்சமாகுமா? ஒரு மனிதனைப் பிடிக்கவில்லை என்றால் அவனைத் தூற்றுவதற்கு ஒரு அளவு கிடையாதா?

kamarajarகாமராஜ் பற்றி டி.எஸ். சொக்கலிங்கம் எழுதி இருக்கும் புத்தகம் சிறப்பானது. முக்கியமான ஆவணம். காமராஜ்-சத்தியமூர்த்தி-ராஜாஜி பூசல்களை விவரிக்கிறது. கோஷ்டி சண்டை முப்பதுகளிலேயே ஆரம்பித்திருக்கிறது!

காமராஜ் பற்றி அன்றைய பல முக்கியஸ்தர்களின் – பக்தவத்சலம், டி.எஸ்.எஸ். ராஜன், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், டாக்டர் சுப்பராயன், ஏறக்குறைய அன்றைய மந்திரிசபை – கருத்தைக் கேட்டு தொகுக்கப்பட்ட ஒரு புத்தகத்தைப் படித்தேன். எல்லாம் சம்பிரதாய பாராட்டு உரைகள்தான். ஆனால் யாரெல்லாம் இந்த ஜோதியில் கலக்கவில்லை என்பதுதான் சுவாரசியம். ராஜாஜி இல்லை, அன்றைய முதல்வர் ஓமந்தூரார் அல்லது குமாரசாமி ராஜா. இருவரும் இல்லை. கல்கி இல்லை. திரு.வி.க. இல்லை. ஈ.வெ.ரா., அண்ணாதுரை இல்லை. இரண்டாவது 1949-இலேயே, அவர் முதல்வர் ஆவதற்கு முன்பே, இந்த மாதிரி புத்தகம் வெளிவந்திருக்கிறது.

இளசை சுந்தரம் காமராஜ் பற்றி ஒரு புத்தகம் – “காமராஜ்: நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்” – எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.

கக்கன் பற்றி இளசை சுந்தரம் எழுதிய “தியாகசீலர் கக்கன்” என்ற புத்தகம் அமெச்சூர்தனமான முயற்சிதான். ஆனால் அந்த முயற்சி கூட வேறு யாரும் எடுக்கவில்லை என்பதுதான் இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக ஆக்குகிறது. கக்கன் நேர்மையைப் பற்றி பல சம்பவங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவர் திறமையான நிர்வாகியா என்று இந்தப் புத்தகத்தை வைத்து தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கக்கனிடம் தலைமைப் பண்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வளர்ப்பு மகனான கக்கனும் தன் வளர்ப்புத் தந்தையான வைத்தியநாத ஐயருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஐயரின் மனைவி பிள்ளைகள் உறுதியாக நின்ற நிகழ்ச்சி என் மனதைத் தொட்ட ஒன்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், இந்திய அபுனைவுகள்

அமிதவ் கோஷுக்கு ஞானபீடம்

என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா! என்பது மாதிரிதான் இந்தப் பதிவு. கோஷுக்கு விருது கிடைத்து ஒன்றிரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

அமிதவ் கோஷ் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். இது வரைக்கும் ஒரே ஒரு புத்தகம்தான் படிக்க முடிந்திருக்கிறது. அந்த புத்தக அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன். மின்னூலும் இணைத்திருக்கிறேன்.

இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் தேவையா? – அமிதவ் கோஷின் “Countdown”


இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத ப்ரோக்ராம்களைப் பற்றி. 1998 மே மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வெடித்து பரிசோதனை செய்த காலகட்டத்தில் எழுதப்பட்டது.

என்ன சொல்கிறார்?

  1. 74 பொக்ரான் சோதனைகளுக்குப் பிறகு அக்கம்பக்க கிராமங்களில் கான்சர் உட்பட்ட பல நோய்கள். கோஷ் கேடோலாய் (Khetoloi) என்ற கிராமத்துக்குப் போயிருக்கிறார், அங்கே எல்லாரும் மகா ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. 98 சோதனைகளும் பொக்ரானில்தான்.
  2. இந்தியா அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தியது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் நமக்கு அபாயம் என்ற எண்ணத்தால் இல்லை. வல்லரசுக் கனவுதான் காரணம். இதை கே. சுப்ரமண்யம் – ராணுவ நிபுணர் – உறுதி செய்திருக்கிறார். அந்நியர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா மீண்டும் தன் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை ஒரு முக்கிய காரணம். (அன்றைய பா.ஜ.க. அரசுக்கு ஆங்கிலேயர் மட்டும் அன்னியர் இல்லை)
  3. அன்றைய ராணுவ மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். 74 பொக்ரான் சோதனைகளை எதிர்த்த வெகு சிலரில் ஃபெர்னாண்டசும் ஒருவர். அவருக்கு இன்னும் தயக்கங்கள் இருந்தன. ஃபெர்னாண்டசின் “பேட்டி” மிகவும் பிரமாதம், அவரது ஆளுமையைக் காட்டுகிறது.
  4. சியாசென் பனி ஆறு பக்கம் ஃபெர்னாண்டஸ் கோஷையும் கூட்டி கொண்டு போயிருக்கிறார். மிகுந்த செலவில் சியாசெனில் இந்திய ராணுவம் தனது இருப்பைத் தொடர்கிறது. ஏன்? National prestige.
  5. கோஷ் பாகிஸ்தானுக்குப் போய் அங்கும் பலரை சந்தித்திருக்கிறார். பாகிஸ்தான் இந்தியாவின் அணு ஆயுதங்களை எப்படிப் பார்க்கிறது? பெருத்த அபாயமாகத்தான்.
  6. மொத்தத்தில் அணு ஆயுதங்களால் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பைசா பிரயோஜனமில்லை. ஆனால் national prestige இடிக்கிறது.

கோஷின் கருத்துகளோடு நான் அனேகமாக இசைகிறேன். அணு ஆயுதங்களின் பயனைப் பற்றி இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே எனக்கு உறுதியான கருத்துகள் உண்டு. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவை என்று நினைப்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கருத்துக்கள். ஆயுதம் கீயுதம் பற்றி எல்லாம் அக்கறை இல்லாதவர்களும் படிக்க சுவாரசியமான புத்தகம். குறிப்பாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அஸ்மா ஜஹாங்கீர் பற்றிய பக்கங்கள். pdf சுட்டியை இணைத்திருக்கிறேன். சின்னப் புத்தகம். நூறு பக்கம் இருந்தால் அதிகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கோஷ் எழுதிய Great Derangement (2016) என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சுனாமி, பூகம்பம், வெள்ளம் ஆகியவை அவ்வப்போது ஏற்படுத்தும் பெரும் அழிவுகளுக்கு மும்பை, நியூ யார்க், எந்தப் பெருநகரமும் தயாராக இல்லை, உலகம் வெப்பமயமாவது இந்தப் பேரழிவுகளின் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது என்கிறார். புதிய விஷயம் எதுவுமில்லை, சுவாரசியமாகவும் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Countdown மின்னூல்

மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் – முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நினைவு கூர்கிறார்

சில சமயம் புத்தகம் மகா போரடித்தாலும் அதன் உள்ளடக்கத்தின் மீது உள்ள ஆர்வத்தால் படித்து முடிக்க நேரிடும். ‘To the Brink and Beyond‘ அப்படிப்பட்ட ஒரு புத்தகம்.

காலம் 1991. ராஜீவ் இறந்து காங்கிரஸ் நரசிம்ம ராவின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மகாமோசமாக இருக்கிறது. கடனைக் கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது, ஆனால் டாலர்களில் கட்ட வேண்டும், டாலர்கள் குறைவாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் ராவுக்கு உதவியாளராக பிரதமரின் அலுவலகத்தில் சேர்கிறார். மன்மோகன் சிங், ராவ் இருவரையும் – அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, அவர்களது தீர்வுகளை – அருகிலிருந்து பார்க்கிறார். ஆனால் சில மாதங்களிலேயே அவரை திட்டக் குழுவுக்கு (Planning Commission) மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆறேழு மாத அனுபவங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்தப் பொருளாதார உத்திகள் எல்லாம் புரிவதே இல்லை. உதாரணமாக டாலருக்கு நிகராக உள்ள ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் என்ன பயன் விளைந்துவிடும்? ஒரு வளையலுக்கு ஒரு டாலர் விலை என்று வைத்துக் கொள்வோம். ரூபாயின் மதிப்பை பாதியாகக் குறைக்கிறோம். நமக்கு நூறு டாலர் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க முன்னால் நூறு வளையல் விற்றோம், இப்போது இருநூறு பொருள் விற்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு மலிவாகக் கிடைப்பதால் அதை அதிகமாக வாங்குகிறார்கள். சரி இதற்கு வளையலின் விலையை அரை டாலராகக் குறைத்துவிடலாமே! என்ன வித்தியாசம்?

சரி என் குழப்பங்களை விடுவோம், இந்தப் புத்தகத்துக்கு வருவோம். ஜெய்ராம் ரமேஷ் ராவ் சிங்கை நிதி அமைச்சராக ஆக்கும்போது நடந்த விஷயங்களை விவரிக்கிறார். அன்றைய காங்கிரஸ் இன்னும் சோஷலிசம் பேசும் காங்கிரஸ்தான். நிதி நிலைமை மோசமாக இருப்பது தெரிந்ததும் ராவ் ஒரு நிபுணரைத்தான் நிதி அமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறார். அன்று முக்கியத் தலைவராக இருந்த பிரனாப் முகர்ஜி தான்தான் அடுத்த நிதி அமைச்சர் என்று நினைப்பில் இருக்கிறார், ஆனால் முகர்ஜிக்கு திட்டக் குழுவின் தலைவர் பதவிதான். சிங் அமைச்சரானதும் நிலைமையை சமாளிக்க ஐஎம்எஃபிடம் கடன் வாங்க வேண்டும், பல மானியங்களை ஒழிக்க வேண்டும், ஏற்றுமதிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும், அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார். சோஷலிச நினைவு போகாத காங்கிரஸ் எதிர்க்கிறது. ராவ் அவ்வப்போது கொஞ்சம் ஜகா வாங்கினாலும் சிங்கின் திட்டங்கள் நடந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவ்வளவுதான் இந்தப் புத்தகம் காட்டும் காட்சி.

ஆனால் ஜெய்ராம் ரமேஷ் போரடிக்கிறார். தனக்கு எத்தனை முக்கிய மனிதர்களைத் தெரியும், தான் எப்படி பேச்சை எழுதிக் கொடுத்தேன், (ராவ் இவர் எழுதிக் கொடுத்ததை பயன்படுத்துவதே இல்லை), தான் தான் என்று தன்னிலேயே முழுகிக் கிடக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வேறு புத்தகமே இல்லாததால்தான் தம் கட்டிப் படித்தேன்.

ஆவணம் மட்டும்தான். ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

பெரிசு – ராஜாஜி பற்றி ஒரு வெள்ளைக்காரி

rajajiமோனிகா ஃபெல்டன் பிரிட்டிஷ் பெண். எம்.பி.யாக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 1955-56 வாக்கில் இந்தியா வந்து ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்றிருக்கிறார். இரண்டு மூன்று வருஷம் இந்தியாவில் தங்கி, ராஜாஜியை அடிக்கடி சந்தித்திருக்கிறார். அந்த நினைவுகளைத்தான் ‘I Meet Rajaji’ என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

Intimate Portrait என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்தின் charm அதுதான். பெரிசு அவ்வப்போது செய்யும் குசும்பு, விடாமல் செய்த முயற்சிகள், நேருவை விமர்சிக்கும்போதும் அதன் ஊடாகத் தெரியும் அவர்களது பரஸ்பர அன்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்த ஒருவரின் நினைவுகள்.

ராஜாஜி அப்போது அரசியலிலிருந்து விலகி இருந்த நேரம். தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஏறக்குறைய வெளியேற்றப்பட்டிருந்தார். வியாசர் விருந்து, ராமாயணம் எல்லாம் அப்போது வெளியாகி இருந்தன. அவருக்கு வாழ்க்கை வரலாறு போன்றவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் மோனிகா ஃபெல்டனோடு நட்பு உருவாகி இருக்கிறது. முதலில் மரியாதைக்காக சந்தித்திருப்பார், மோனிகா கண்ணில் தான் ஒரு ஹீரோ என்பது அந்த நட்பு உருவாக வழிவகுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தக் கட்டத்தில் ராஜாஜி பெரிதாக எதையும் செய்யவில்லை. அதனால் இன்றைக்கு நமக்கு சுவாரசியமாக இருக்கக் கூடிய வம்புகள் எதுவும் இல்லை. காமராஜின் பேர் ஒரே ஒரு இடத்தில் வருகிறது. நேருவை விமர்சித்தாலும் அடக்கித்தான் வாசித்திருக்கிறார். லைசன்ஸ் கோட்டா பர்மிட் ராஜ் என்று கடுமையான வார்த்தைகள் இல்லை. நேருவும் ராஜாஜியின் விமர்சனத்துக்கு பதிலாக தான் ராஜாஜியை பெரிதும் மதிப்பதாகவும், பெரிசு கொஞ்சம் தாட்சணியம் காட்ட வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.

ராஜாஜி அப்போது சென்னையில்தான் வசித்தார். அவருடைய நேரம் எல்லாம் ஸ்வராஜ்யா பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதிலும் அவ்வப்போது கூட்டங்களில் பேசுவதிலும்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் எல்லாரும் கிழவர்கள். மோனிகா உடனிருந்த இரண்டு மூன்று வருஷங்களில் அவருடைய நண்பர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள். ராஜாஜிக்கும் ஆரோக்கியம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. வாழ்க்கை வரலாறு என்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த நிலையில் அவரை தினமும் தேடி வந்து பேசும் ஒரு பெண்ணோடு அவருக்கு நட்பு உருவாகாதா என்ன?

அந்தக் காலத்தில் ராஜாஜி அணு ஆயுதங்களை உலகம் கைவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். மோனிகாவும் இதில் தீவிரமாக இருந்தார். ஆனால் ராஜாஜி அரசியல் அதிகாரம் இல்லாத ஒரு வயதான கிழவனால் எதையும் பெரிதாக கிழித்துவிட முடியாது என்பதை மோனிகாவை விட நன்றாகவே உணர்ந்திருந்தார். World Peace Council மாதிரி சில அமைப்புகளுக்கு தந்தி அனுப்புவது, நியூ யார்க் டைம்ஸ் மாதிரி பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவது, குருஷ்சேவுக்கு கடிதம் எழுதுவது இது மாதிரி முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். குருஷ்சேவ் இவருடைய கடிதங்களுக்கு தொடர்ச்சியாக பதில் எழுதி இருக்கிறார். காந்தி மாதிரியே சின்னச் சின்ன வெற்றிகளுக்கு முயன்றிருக்கிறார். ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு சோதனைகளை குருஷ்சேவ் ஒரு வருஷம் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்.

ராஜாஜிக்கு அப்போது ஓரளவு fan following இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது ராஜாஜியின் பழைய நண்பர்கள், வயதானவர்கள், பிராமணர்களோடு குறுகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசி இருக்கிறார். மாறாக ஹைதராபாத், கல்கத்தாவில் அவரைப் பார்க்க, அவர் சொல்வதைக் கேட்க இளைஞர்கள், ஏழைகள் கூடி இருக்கிறார்கள்.

ராஜாஜி நேருவுக்கு சமமான ஆகிருதி உள்ள தலைவர் இல்லாதது நேருவை பலவீனப்படுத்துகிறது என்று நினைத்திருக்கிறார். ஒரு இடத்தில் சொல்கிறார் – காந்தி இருந்திருந்தால் பின்னணியில் அவரது தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். படேல் போய்விட்டார்; ஆசாத் அவ்வளவு பயன்படமாட்டார். (useless என்று சொன்னதாக நினைவு). நானோ ஓய்வு பெற்றுவிட்டேன். யாராலும் நேருவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.

1959-இல் ஸ்வதந்திரா கட்சி அறிவிப்புடன் புத்தகம் முடிகிறது.

புத்தகம் எல்லாருக்குமானது இல்லை. மோனிகா ராஜாஜி ஒதுங்கி இருந்த நாட்களைத்தான் விவரிக்கிறார். அதனால் சுவாரசியம் குறைவு. ஆனால் அவரது ஆளுமை வெளிப்படுகிறது. என் புத்தக அலமாரிக்காக நான் வாங்குவேன்.

நாரண. துரைக்கண்ணனும் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மோனிகா ஃபெல்டன் பற்றிய விக்கி குறிப்பு