எழுத்தாளர் வலைப்பூக்கள், தளங்கள்

என் கண்ணில் பட்டவை, உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்கள்!

ஜெயமோகன்: நான் அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் தளம்

மறைந்த எழுத்தாளர்கள்:

ஃபேஸ்புக் பக்கங்கள்:

மற்றவை:

இன்னும் நிறைய இருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

சிலிகன் ஷெல்ஃபுக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் இந்தக் கட்டுரை என் மனதைத் தொட்டது, புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக கையால் he என்பதை she ஆகத் திருத்த வேண்டி இருந்த தேவை.

லலிதா அய்யலசோமயாஜுல போன்ற முன்னோடிகளை எத்தனை பாராட்டினாலும் தகும். 1930களில் விதவை, கையில் ஒரு குழந்தை வேறு அதற்குப் பிறகு படித்து எஞ்சினியரிங் சேர்ந்து…

1980களில் நான் எஞ்சினியரிங் படிக்கும்போது கூட பத்து-பதினைந்து ஆண்களுக்கு ஒரு பெண் படித்தால் அதிகம்.

வளர்த்துவானேன்? படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

விசித்திர நூலகங்கள்

படிக்க எத்தனையோ வழிகள். இந்த நூலகங்கள் புன்னகைக்க வைக்கின்றன. கழுதை மேல் நூலகம், ஒட்டக நூலகம், நூலகக் கப்பல் எல்லாம் சின்ன மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால் புல்லரிக்க வைப்பது Nanie’s Reading Club. அப்பா அம்மா நினைவாக தன் சொந்தப் புத்தகங்களை வீட்டிற்கு வெளியே வைத்தாராம். யார் வேண்டுமானாலும் கொண்டு போகலாம். புத்தகங்களை இரவல் வாங்கியவர்கள் அவர்கள் புத்தகங்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இன்று நானியின் வீடு முழுவதும் புத்தகங்கள். இப்போது பைக்கிலும் கொண்டு போய்க் கொடுக்கிறாராம். அப்பா அம்மாவை இதை விட எப்படி கௌரவப்படுத்த முடியும்?

அமெரிக்காவிலும் Little Free Library என்று ஒன்று உண்டு. சின்ன பெட்டி ஒன்று அங்கங்கு இருக்கும். யார் வேண்டுமானாலும் அதில் இருக்கும் புத்தகங்களை கொண்டு போகலாம், புத்தகங்களை அதில் வைத்துவிடலாம்.

நார்வேயில் இன்னொரு விசித்திர நூலகம். அங்கே எழுத்தாளர்கள் தங்கள் “புத்தகங்களை” சேர்க்கலாம். ஆனால் நூறு வருஷங்களுக்கு அப்புறம்தான் அவற்றைப் படிக்க முடியும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

புத்தகத்தில் ஓவியம்

சில நாட்களுக்கு முன்னால் கனடாவில் உள்ள வான்கூவர் நகரத்துக்கு விடுமுறைக்குப் போயிருந்தோம்.

எனக்குப் பொதுவாக கடை கடையாக ஏறி இறங்குவதில் விருப்பம் கிடையாது. ஆனால் என் மனைவிக்கும் என் மகள்களுக்கும் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதனால் நானும் மெதுமெதுவாக மாறிக் கொண்டிருக்கிறேன்.

வான்கூவரில் காஸ்டௌன் (Gastown) என்ற இடத்துக்குப் போயிருந்தோம். காஸ்டௌன்தான்
ஒரிஜினல் வான்கூவர். அது இன்று வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இருப்பது நீராவியால் ஓடும் கடிகாரம்.

நாலைந்து மணி நேரத்துக்குப் பிறகு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் முற்றிலும் களைத்திருந்தேன். திரும்பும் வழியில் Rare Books என்று ஒரு கடை கண்ணில் பட்டது. கடைக்குப் போக சாலையிலிருந்து இறங்கி அடித்தளத்திற்கு (basement level) போக வேண்டும். என் மனைவி அங்கே ஒரு பெஞ்சில் உட்கார, நானும் என் மூத்த பெண்ணும் கீழே போனோம்.

எந்தப் புத்தகமும் நான் வாங்கும் புத்தகம் இல்லை. விலையும் கட்டுப்படியாகாது. அனேகமாக பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த புத்தகங்கள். Memoirs of Eminent Etonians போன்ற புத்தகங்களை எல்லாம் நான் வாங்க வாய்ப்பே இல்லை. இரண்டு நிமிஷத்தில் திரும்ப இருந்தவனை விற்பனையாளர் இரண்டு மூன்று கிழவிகளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது நிறுத்தியது.

அவர் புத்தகத்தை பக்கவாட்டில் காண்பித்துக் கொண்டிருந்தார் – அதாவது மேலட்டைக்கும் கீழட்டைக்கும் இடைப்பட்ட பக்கங்களை. புத்தகம் மூடித்தான் இருந்தது. பக்கங்களை கொஞ்சம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அழுத்தினார். திடீரென்று ஒரு படகின் ஓவியம் தெரிந்தது!

இன்னொரு புத்தகத்தையும் காட்டினார். இதில் மீன்பிடிப்பவன் ஒருவனின் ஓவியம்.

புத்தகத்தை உருவாக்கிய பிறகு இப்படி அதில் ஓவியம் தீட்டுவார்கள் என்று விளக்கினார். சில பக்கங்களில் வண்ணங்கள் உள்ளே வந்திருக்குமாம். புத்தகத்தின் பக்கங்களை நாசமாக்காமல், இத்தனை சின்ன இடத்தில் இத்தனை சிறப்பான ஓவியம்! இந்தக் கலைக்கு Fore-edge Painting என்று பெயராம்.

இன்னும் பல ஓவியங்களை தளத்தில் காணலாம்.

என்னால் திறந்த வாயை மூட முடியவில்லை. புத்தகத்தை வாங்குவது கட்டுப்படி ஆகாது என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பார்த்ததே பெரிய அதிர்ஷ்டமாகத் தெரிந்தது. களைப்பெல்லாம் போயே போச்!

வான்கூவருக்கு சென்றால் போய்ப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: Rare Books புத்தகசாலை

மீண்டும்…

மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. என் குறைகள் பூதாகாரமாகத் தெரிகின்றன, வாழ்க்கையில் ஒன்றுமே கிழிக்கவில்லை, இதில் பதிவு போட்டு ஏன் என் நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணடிக்கிறோம் என்று தோன்றுகிறது.

ஏன் படிக்கப் பிடிக்கும் என்று நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மேற்கோள் கிடைத்தது. என் சிறு வயது புத்தகப் பித்தை நினைத்து புன்முறுவல் கொள்ள வைத்தது. எங்கே படித்தேன் என்பதுதான் நினைவில்லை, படித்ததை எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன்.

My love for books sprang from my need to escape the world I was born into, to slide into another where words were straightforward and honest, where there was clearly delineated good and evil, where I found (boys) and girls who were strong and smart and creative and foolish enough to fight dragons, to run away from home to live in museums, to become child spies, to make new friends and build secret gardens.

இத்தனை வயதாகியும் இன்னும் அந்த சிறுவன் எங்கோ என்னுள்ளே இருக்கிறான், அதனால்தான் இன்னும் ஹாரி பாட்டர் உள்ளிட்ட Young Adult புத்தகங்கள், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள் எல்லாவற்றையும் படிக்கப் பிடிக்கிறது. வால்டர் மிட்டியும் சுப்பையா பிள்ளையும் அதனால்தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஆரம்பித்துத்தான் பார்ப்போமே, எத்தனை நாள் ஓடுகிறதோ ஓடட்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: சிசிஃபஸ்

புத்தகப் பைத்தியங்கள்

புகைப்படங்களைப் பார்க்கும்போதே மன நிறைவாக இருந்தது. மாதிரிக்கு ஒன்றை இணைத்திருக்கிறேன்.

நான் புத்தகங்களை வாங்குவது மிகவும் குறைந்துவிட்டது. சின்ன வீட்டுக்கு குடிபெயர்ந்து ஐந்து வருஷம் ஆகிவிட்டது, இடப்பற்றாக்குறை. மேலும் இருக்கும் புத்தகங்களை படித்து முடிக்கவே இன்னும் 10 வருஷம் ஆகும். ஆனாலும் என்னை விட பெரிய புத்தகப் பைத்தியங்களைப் பார்ப்பது பெரிய மகிழ்ச்சி!

நான் கஞ்சன். என்னிடம் இருக்கும் புத்தகங்களில் முக்கால்வாசி பழைய புத்தகங்கள்தான். இவற்றைப் பார்த்தால் புதிதாக வாங்கின மாதிரி இருக்கிறது. அது இன்னும் ஒரு சின்ன மகிழ்ச்சி…

என்னிடம் 2000-3000 புத்தகங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முயன்றால் நானும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவிடலாம்…

உங்கள் வீட்டு அலமாரிகளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? பின்னூட்டத்தில் எழுதுங்கள்! செந்தூரம் ஜெகதீஷ் போன்றவர்களின் வீடு முழுக்க இருக்கும் என நினைக்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

புத்தக அட்டைகள்

சாதாரணமாக நான் புத்தக அட்டைகளை கவனிப்பதில்லை. கவனிப்பதென்ன, அவை கண்ணில் படுவதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையைப் பார்த்தபோதுதான் இவற்றில் எத்தனை புத்தக அட்டைகள் மூளையில் பதிந்திருக்கின்றன என்று தெரிகிறது.

25 பிரபலமான புத்தக அட்டைகள் என்ற கட்டுரை; 25இல் ஒரு 20-ஆவது பார்த்த மாதிரி இருக்கிறது. Great Gatsby, Catcher in the Rye, Farenheit 451, Psycho, To Kill a Mockingbird, Catch-22, In Cold Blood, Godfather, I Know Why the Caged Bird Sings, Jaws, A Confederacy of Dunes, Jurassic Park, Grapes of Wrath… அதுவும் Atlas Shrugged புத்தக அட்டை மிக நன்றாக நினைவிருக்கிறது. மகிழ்ச்சிதான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

மாதம் மும்மாரி மழை

என் சிறு வயதில் இந்த வசனம் மிகவும் பிரபலம். திரைப்படங்களில், நாடகங்களில் கேட்கும் வசனம். முக்கியமாக தெருக்கூத்துகளில் ராஜா அறிமுகம் ஆகும் காட்சியில் மந்திரியைப் பார்த்து “மந்திரி, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா” என்று கேட்டே தீருவார். ஆண்டாள் திருப்பாவையில் கூட தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து என்று வருகிறது.

அது என்ன மாதம் மும்மாரி மழை? சமீபத்தில் தூக்குத்தூக்கி நாடகத்தின் வரி வடிவத்தைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

எல்லாவற்றுக்கும் ஏதாவது விளக்கம் இருக்கிறது, நமக்குத்தான் தெரிவதில்லை. விளக்கம் காலாவதி ஆன ஒன்றா இல்லையா என்ற வாதத்தின் பக்கம் நான் போகப் போவதில்லை. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்!

இரண்டு நாட்களுக்கு முன் என் அத்திம்பேர் (பிராமண வழக்கில் அத்தை கணவர்) டி.ஆர். கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.

நான் எனது பதின்ம வயதுகளில் என் அத்தை வீட்டில் தங்கிப் படித்தவன். என் அத்தையோடு எப்போதும் ஒரு ஸ்பெஷல் பந்தம் உண்டு. என் அத்தையின் குடும்பத்தை என் இரண்டாவது குடும்பம் என்றே சொல்லலாம். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் பம்மிப் பதுங்குவேன்(வோம்). வளர வளர பயம் எல்லாம் போய்விட்டது, உரிமையோடு நிறைய எதிர்த்துப் பேசி இருக்கிறேன். அவருக்கும் நான் சொன்னால் மட்டும் தப்பாகவே தெரியாது. அவரது கனத்த குரலை மறக்கவே முடியாது. எத்தனையோ தூரத்தில் வசித்தாலும் அத்தை குடும்பம்தான் உறவினர் குடும்பம், சென்னை போகும்போதெல்லாம் தவறாமல் சென்று பார்க்கும் உறவினர்கள். இன்று அத்தையின் அருகில் இருக்க முடியவில்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது.

அவருக்கும் கோவிட். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டாராம். Post-covid complications அதிகரித்து இறந்திருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இன்னும் இரண்டு வருஷம் இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை, பயன்பட வாய்ப்பிருக்கிறது. போட்டுத் தொலையுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

நானும் ஹிந்து மதமும்

ஜெயமோகன் “ஹிந்து என உணர்தல்” என்று சமீபத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

அவரது பதிவை இப்படி சுருக்கிக் கொள்கிறேன்.

  • அறிவியக்கத்தில் செயல்படுபவன் மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாள வேண்டும்.
  • மரபின் சிந்தனைகளின் பெரும் பகுதி மதத்திலேயே உள்ளது.
  • மதம் வெறும் நம்பிக்கையோ, ஆசாரங்களின் தொகுதியோ, சட்ட திட்டங்களோ மட்டும் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது.
  • அதிலும் இந்து மதம் மிகத் தொன்மையானது. அதன் ஒரு பகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது.
  • இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து.
  • நான் அப்படி இந்து மதத்துடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்?
  • எந்த மதத்தின், சிந்தனை மரபின் நடைமுறை உலகியலுக்கும் அதன் லட்சியவாதத்துக்கும் தூரம் இருக்கத்தான் செய்கிறது. தூரம் மதத்துக்கு மதம், மரபுக்கு மரபு வேறுபடுகிறது. அந்த தூரத்தை வைத்து ஒரு மரபை நிராகரிப்பதில் பொருளில்லை.
  • தனிப்பட்ட முறையில் வேதாந்தம் ஜெயமோகனின் தேடலுக்கான வழி.

என் பதின்ம வயதுகளில் மனிதன்தான் கடவுளை உருவாக்கினான், கடவுள் எல்லாம் சும்மா டுமீல், ஆனால் எதற்கும் கொஞ்சம் பக்தியோடு இருந்து கொள்வோம், தப்பித் தவறி உண்மையிலேயே கடவுள் இருந்து தொலைத்துவிடப் போகிறார் என்றெல்லாம் நானே சொந்தமாக புரட்சிகரமாக யோசித்து சில முடிவுகளை அடைந்திருந்தேன். வயது அதிகரிக்க அதிகரிக்க சில சமயம் ஆஸ்திகனாக, சில சமயம் நாஸ்திகனாக, சில சமயம் இரண்டும்கெட்டானாக எல்லாம் இருந்திருக்கிறேன்.

ஆனால் அன்று தோன்றியவைதான் அனேகமாக இன்றும்; நான் ஹிந்துவாகப் பிறந்தது ஒரு விபத்து. ஹிந்துவாகப் பிறந்தது மட்டுமல்ல, ஆணாகப் பிறந்ததும் விபத்துதான்; தமிழனாக, இந்தியனாக, மத்தியதர வர்க்க குடும்பத்தில், அய்யர் ஜாதியில் பிறந்தது எல்லாம் விபத்துதான். விபத்தைப் பற்றி பெருமை அடைய எதுவுமில்லை, அதனால் “உயர்ந்த” அய்யர் ஜாதிக்காரன் என்றோ, பல நூறு ஆண்டுகள் முன்னால் ஓதப்பட்ட யஜுர்வேத மரபினன் என்றோ, விஸ்வாமித்ரரும் கடவுளின் அவதாரம் என்றே கருதப்படும் பரசுராமரும் என் குல மூத்தவர்க்ள என்றோ, கல்லானாலும் கணவன் என்று மனைவியை விட ஒரு படி உயரத்தில் இருக்கிறேன் என்றோ, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க் குடியினன் என்றோ, இந்தியன் என்றோ, ஹிந்து என்றோ எந்தப் பெருமிதமும் இல்லை; அதே நேரத்தில் எந்தச் சிறுமையும் இல்லை. யாதும் ஊரே; யாவரும் கேளிர். யாரோ எப்போதோ போட்ட எல்லைக் கோடுகளில் எனக்கென்ன பெருமிதம்? தீதும் நன்றும் பிறர் தர வாரா, அந்தப் பிறரில் ராமனும் கிருஷ்ணனும் வியாசனும் காந்தியும் புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் ஜெயமோகனும் இருந்தாலும் சரி; மாபெரும் மரபு ஒன்றின் தொடர்ச்சியான பல கோடி கண்ணிகளில் ஒருவனாக இருந்தாலும் சரி.

அதற்காக பெருமிதம் என்பதே இல்லையா? கொஞ்சூண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்தின் சாதனைகளுக்காக. என் பெண் கலிஃபோர்னியாவில் சாண்டா பார்பரா என்ற இடத்தில் படித்தாள். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேர கார் பயணம். ஒவ்வொரு முறையும் மலைகளை அகழ்ந்து ரோடு போட்டவர்களை நினைத்து வியந்திருக்கிறேன். சான் ஃப்ரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தைக் கண்டு பெருமிதம் கொண்டிருக்கிறேன். மகாபலிபுரத்தின் மகிஷாசுரன் புடைப்புச் சிற்பம் என் மனதை விம்மச் செய்கிறது. கைலாசநாதர் கோவிலைக் கண்டபோது என் மார்பு விரிந்ததை உணர்ந்தேன். கோடலின் தேற்றம், ரூதர்ஃபோர்டின் பரிசோதனைகள், Riemann’s hypothesis, NP vs P problems என்று மனித குலத்தின் சாதனைகளுக்காக பெருமிதம் கொள்கிறேன். தஞ்சை பெரிய கோவிலை வடிவமைத்த பெயரில்லாதவர்கள்; சிஸ்டைன் ஆலயத்தின் மேற்கூரையில் ஓவியம் தீட்டிய மைக்கலாஞ்சலோ; கோனிக்ஸ்பர்கின் ஏழு பாலங்களையும் ஒரே ரவுண்டில் கடக்க முடியுமா என்று சிந்தித்த ஆய்லர்; என்று பல ஆயிரம் சாதனையாளர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அந்தப் பெருமிதத்தில் “அவனே அறிவான்; ஒரு வேளை அறியானோ?” என்ற ரிக்வேதப் பாடலும் உண்டு; “அவரோ வாரார்; முல்லையும் பூத்தன” என்று குறுந்தொகைப் பாடலும் உண்டு; “உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்ற ஆண்டாள் பாசுரமும் உண்டு; “It tolls for thee” என்ற ஜான் டோன் கவிதையும் உண்டு. “How Dark?” என்ற வோலே சோயிங்கா கவிதையும் உண்டு. மகாபாரதமும் உண்டு. கில்கமேஷும் உண்டு. அர்த்தசாஸ்திரத்தின் இரக்கமே அற்ற லாஜிக்கும் உண்டு. ஷேக்ஸ்பியரும் உண்டு. மோபி டிக்கும் உண்டு. தியாகராஜரும் உண்டு. பீத்தோவனும் உண்டு. பீட்டில்ஸும் உண்டு. இட்லி தோசையும் உண்டு. கும்பகோணம் டிகிரி காப்பியும் உண்டு. அய்யர் வீட்டு பருப்பு ரசம் பிடிக்கும் என்பதால் அய்யங்கார் வீட்டு புளியோதரையோ, செட்டிநாடு கோழியோ,  கேரள சக்கைப் பிரதமனோ வங்காளத்து ரசகுல்லாவோ இத்தாலிய ரவியோலியோ ஜப்பானிய சுஷியோ பாஸ்டனின் க்ளாம் சௌடரோ ஃப்ரான்சின் க்ரீம் ப்ரூலேயோ விலக்கல்ல. அந்தப் பெருமிதத்தில் ஹிந்து மரபு, கிறிஸ்துவப் மரபு, யஜூர்வேத மரபு, திருப்புகழ் மரபு என்பதெலாம் தகவல்தான். உலகின் எந்த மூலையிலிருந்து வந்தது என்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

இது பெருமிதமா, வியப்பா, சாதனையாளர்கள் முன் தலை தாழ்த்துவதா? எல்லாம் சேர்ந்து கட்டி அடித்த ஒரு உணர்வு என்பதுதான் சரி.

மரபுத் தொடர்ச்சி மகா முக்கியம்தான். யூக்ளிட் இல்லையேல் நியூட்டன் இல்லை. கியோட்டோ இல்லையேல் டாவின்சி இல்லை. வியாசர் இல்லையேல் ஜெயமோகன் இல்லை. திருப்பதி மலை ஏறும்போது இது வரை எத்தனை கோடி பேர் ஏறிய மலை, எத்தனை ஆயிரம் ஆண்டு ஏறிய மலை, எத்தனை ஆண்டு காலம் தரிசித்த சிலை என்ற எண்ணம் பெருநிறைவை எனக்கும் ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன்கோவிலில் என் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிறந்த சூழலையும் தாண்டி இருப்பதும் என் மரபே. தாய்மொழியும், பாஸ்போர்ட்டும், (சில சமயம்) வணங்கும் தெய்வமும் என் மரபைக் குறுக்கி விடுவதில்லை.

ஜெயமோகனும் இதை கோடி காட்டுகிறார். அவருக்கு என் கருத்துகளில் ஆட்சேபணை எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அவர் சொல்ல வருவதை இப்படி புரிந்து கொள்கிறேன். ஹிந்து மதம் மாபெரும் அறிவுச் சிந்தனை தொடர்ச்சி. நம்முடைய விழுமியங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் நியாயமாகத் தெரிந்தது அநியாயம் என்று இன்று தெரியலாம். திருத்திக் கொள்வோம். அன்று உலகியல் ரீதியாக நடந்த அநியாயத்துக்காக இன்று ஹிந்து மதத்தை நிராகரிப்பதில் பொருளில்லை. அப்படி அவர் சொல்வதில் எனக்கு முழு சம்மதமே.

ஜெயமோகன் ஹிந்து மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறார், அவரது அடையாளத்தைக் உருவாக்கிக் கொள்கிறார்., பெரும் கனவுகளைக் காண்கிறார், அதை ஏன் தவிர்க்க வேண்டும், வேறு எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும் என்று கேட்கிறார். அவரோடு நான் வேறுபடுவது இந்த ஒரு இடத்தில்தான், அதிலும் ஒரு சிறிய புள்ளியில்தான். நான் ஹிந்து மதத்திற்கும் வெளியே உள்ளதும் என் மரபேதான், அப்படி மனித இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும்போது இன்னும் மகத்தான மரபோடு இணைகிறேன், இன்னும் பெரும் கனவுகளைக் காண்கிறேன், அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று கேட்கிறேன். அதாவது ஹிந்து என்று மட்டும் அடையாளப்படுத்திக் கூடாது என்பதல்ல, அது மட்டும் எனக்கு போதவில்லை, அதற்கு மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

இப்படி சொல்கிறேனே! நான் அய்யர் ஜாதியில் பிறந்தவன். பொடி அடைத்த கத்திரிக்காய் கறியை சாப்பிடும்போது இதை எப்படிரா கண்டுபிடித்தார்கள் என்று மகிழ்ந்து கொள்கிறேன். நான் தமிழன்; “பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியலற்றே” என்று படிக்கும்போது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே கவிதை எழுதிய என் முப்பாட்டனை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் இந்தியன். மகாபாரதத்தை விட உயர்ந்த இலக்கியம் உலகில் இல்லை என்று பெருமிதம் கொள்கிறேன். நான் மனிதன். டீகார்டஸ் வடிவ கணிதத்தை அல்ஜீப்ராவின் ஒரு பகுதியாக ஆக்கியதைப் பார்த்து ஆஹா! என்று வியக்கிறேன்.

ஆனால் ஹிந்துவாக இருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. எதற்கு வேண்டுமானாலும் ஒரு முன் உதாரணம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். கடவுள் இல்லை என்று சொன்னாலும் ஹிந்துதான். மதநூல் , ஒரே குரு, என்று எதுவுமில்லை, அதனால் சிந்தனைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அதனால் பதின்ம வயதிலிருந்தே – நான் சொந்தமாக மண்டையைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே – நான் ஹிந்துவேதான். பைபிளில் அங்கங்கே தெரியும் லட்சியவாதம் என்னைக் கவர்ந்தாலும், யூத பார்சி மதங்களின் தொன்மை என்னைக் கவர்ந்தாலும் நான் ஹிந்துவேதான். எனக்கு வேண்டிய ஆன்மீகத் தேடலை நானேதான் முட்டி மோதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஒரே மதம்; எனக்கு ஆன்மீகத் தேடலே கிடையாதா, அது என் சொந்தப் பிரச்சினை என்று சொல்லும் ஒரே மதம் எனக்குத் தெரிந்த வரையில் ஹிந்து மதம் ஒன்றுதான். அதனால் நான் ஹிந்துவேதான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்; அப்போதும் ஹிந்துவாகவேதான் பிறக்க விரும்புகிறேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதுதான் எனக்கு மதக் கோட்பாடு. (நாளை அதுவும் மாறலாம்.) கிருஷ்ணனும் அல்லாவும் ஏசுவும் ஜெஹோவாவும் கூட எனக்கு தீதையும் நன்றையும் தந்துவிட முடியாது என்றுதான் கருதுகிறேன். அந்தக் கோட்பாட்டை நான் ஹிந்து மதத்தில்தான் கடைப்பிடிக்க முடியும்.

நான் எழுதியதை மீண்டும் படித்தால் அறிவு, இலக்கிய, கலை சாதனைகள்தான் எனக்கு பெரிதாகத் தெரிகிறது என்பது எனக்கே தெளிவாகிறது. காந்தியைத் தவிர வேறு எந்த தலைவரும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. அலெக்சாண்டரும் சீசரும் ராஜராஜனும் ஜெங்கிஸ் கானும் பீட்டர் சக்ரவர்த்தியும் அக்பரும் சிவாஜியும் எனக்கு இரண்டாம்பட்சம்தான். ஒரு வேளை அறிவியல் சாதனைகள் என்று இந்திய மரபில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால்தான் என் மனம் சுலபமாக இந்தியாவிற்கு வெளியே செல்கிறதோ என்னவோ. ஜெயமோகனுக்கு அறிவியல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு பஞ்ச் டயலாக்! – “எனக்கு அழகியல்தான் முக்கியம், அறிவியல் அல்ல”

மறுபடியும் சொல்கிறேன். இதெல்லாம் கொஞ்சூண்டுதான். என் மரபு, என் குலம், என் இனம் இத்தனை சாதனைகள் புரிந்ததா என்ற வியப்புதான். (இதே மனித குலத்தின் சிறுமைகள் ஏன் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை, நான் ஏன் ஹிட்லரையும் ஔரங்கசீப்பையும் கோட்சேயையும் நினைத்து சோர்வடைவதில்லை என்பது எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.) நான் உண்மையில் பெருமிதம் கொள்வதும் சிறுமை கொள்வதும் என் செயல்களுக்காக மட்டுமே. அப்படி பெருமிதப்படும்படி இனி மேல்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் சோகம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்