நாஞ்சில்: சூடிய பூ சூடற்க

சூடிய பூ சூடற்க 2010-க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று அவரே சொல்லி இருக்கிறார். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹமி காணார்” என்று சொன்னதை – சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள் – அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம். நாஞ்சிலுக்கு எனக்குத் தெரிந்ததை விட நன்றாகவே ஹிந்தி/மராத்தி தெரியும் என்பதும் உண்மைதான், தவறாக நான் புரிந்து கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

எனக்கு மிகவும் பிடித்தது கதை எழுதுவதின் கதை என்ற கும்பமுனிக் கதை. Tour de force. மனிதருக்கு நக்கல் அதிகம், அதுவும் ஜெயமோகன் எழுதியதை நாஞ்சில் தன் பெயரில் போட்டுக் கொள்கிறார் என்கிறார் பாருங்கள், நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

தன்ராம் சிங் நல்ல சிறுகதை. நாம் பலரும் பார்த்த, வீடுகளையும், கடைகளையும் ராக்காவல் காக்கும் கூர்க்காவை உயிர் பெற வைத்திருக்கிறார்.

வளைகள் எலிகளுக்கானவை இன்னொரு நல்ல சிறுகதை. மஹாராஷ்டிரத்திலிருந்து பாரதத்தில் பல மூலைகளுக்கு தீர்த்தயாத்திரை செல்லும் கிழவ்ர்கள், பத்து மைல் தூரம் கூட பயணிக்காத தமிழர்களை அழகாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

பிற கதைகளும் படிக்கக் கூடியவைதான். ஆனால் கதை எழுதுவதின் கதை, யாம் உண்பேம், தன்ராம் சிங் இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் நாடனின் மிதவை

நாஞ்சில் நாடனின் நாவல்களில் (படித்த வரை) என்னை மிகவும் கவர்ந்த நாவல் இதுதான். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை, சதுரங்க குதிரை எல்லாவற்றையும் விட ஒரு மாற்று மேலாகவே மதிப்பிடுவேன்.

ஒரு மாலை தற்செயலாக புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க உட்கார்ந்தேன். கீழே வைக்கவே இல்லை.நாஞ்சில் எதிரிலே இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன். படித்து முடித்தபின் மனம் கலங்கி இருந்தது.

ஏன் மனம் கலங்கியது என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். சண்முகத்தின் நிலையிலிருந்து நான் சில இன்ச் தூரத்தில் தப்பியதால் மட்டும்தானா? என் தனிப்பட்ட அனுபவங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகில் இருப்பதால் மட்டும்தானா? கொஞ்சம் நிலை மாறி இருந்தால் இந்த மாதிரி வாழ்க்கையில் வீழ்ந்திருப்பேன், தப்பித்தேன் என்ற எண்ணத்தினாலா? இல்லை, சதுரங்க குதிரை நாராயணன் நிலைக்கு இன்னும் அருகிலே இருந்திருக்கிறேன். ஆனால் சதுரங்க குதிரையில் கூறியது கூறல் இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. என் வாழ்க்கைக்கு இன்னும் அருகே உள்ள புத்தகத்தில் நொட்டை சொல்பவனை இந்தப் புத்தகம் இப்படி தாக்குகிறது என்றால் அது என் அனுபவங்களுக்கு அருகில் இருக்கிறது என்பதனால் மட்டுமாக இருக்க முடியாது; சண்முகத்தின் இடத்தில் என்னை வைத்து பார்க்க முடிகிறது என்பதால் மட்டும் இருக்க முடியாது.

அதிலும் இந்தக் கதையை எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் பொருத்திப் பார்க்கலாம். மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து விவசாயக் கூலி வேலை பார்ப்பவர்கள்; சட்டபூர்வமாக H1-விசா பெற்றும் ஏறக்குறைய அடிமை வேலை பார்க்கும் பல IT பணியாளர்கள்; 1908-இல் கதிராமங்கலத்திலிருந்து சென்னைக்கு குடியேறி சட்டக் கல்லூரியில் குமாஸ்தா வேலை பார்த்து, மனைவிக்கும் தனக்கும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் இறந்த என் தாத்தா; நகரங்களுக்கு சாரிசாரியாக குடியேறி எப்படியோ பிழைக்கும் கோடிக்கணக்கானவர்கள்; இரவில் உலா வரும் கூர்க்கா; கட்டிட வேலை செய்யும் பிஹாரி; டாஸ்மாக்கில் சலம்புபவன்; சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பேரையும் ஒரே ஒரு மனிதன் சோற்றுக்கும் கழிப்பதற்கும் அல்லாடுவதை வைத்துக் காட்டிவிடுகிறார்.

சண்முகத்தின் தேவைகள் அதிகமில்லை. ஊரில் இருக்கும் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டும். அப்படி பணம் அனுப்ப சம்பாதிக்க வேண்டும். சம்பளத்தில் சோற்றுக்கும், படுக்கைக்கும் கொஞ்சம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் சம்பாதிக்க முடியாது. தேவைகளுக்கும் சம்பாத்தியத்துக்கும் இருக்கும் தூரம், பற்றாக்குறைதான் கதை. கதை முழுவதும் தின்பதிலும் கழிப்பதிலும் படுப்பதிலும் உள்ள சிரமங்கள்தான். இதனால் ஏற்படும் மன அழுத்தம், வெறுமை பற்றி அவர் ஒரு வார்த்தை எழுதவில்லை. ஆனால் கதை முழுவதும் வியாபித்திருப்பது அவைதான்.

நாஞ்சிலுக்கு இது கை வந்த கலை. ஹிந்தியில் பை(ன்) ஹாத் கா கேல் என்பார்கள். அவருக்கு இதற்கு இடது கை சுண்டுவிரலே போதும். சதுரங்க குதிரை, தன்ராம் சிங், கடன் வாங்கி கிராமத்துக்கு வந்து பந்தா காட்டி பிறகு கடனை அடைக்க உழைக்க வேண்டி இருக்கும் ஒருவன் (கதை பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது) என்று நிறைய இருக்கிறது. அந்தக் கலை இந்த நாவலில்தான் தன் உச்சத்தை அடைந்திருக்கிறது. கதை முழுவதும் புறவயமான தளத்திலேதான் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் சண்முகத்தின் உடலை, புற உலகத்தைக் காட்டுகிறார். அவர் எழுதாத கோடிக்கணக்கான வார்த்தைகள் சண்முகத்தின் உள்ளத்தை, அக உலகத்தைக் காட்டுகின்றன. அதில்தான் அவர் என் மனதையும் அசைத்துவிட்டார்.

கதை சுருக்கமாக; எழுபதுகளின் கிராமத்து, முதல் தலைமுறை பட்டதாரி. வேலை கிடைக்கவில்லை. பெரியப்பாவிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. துணிந்து பம்பாய்க்கு போகிறான். வேலை கிடைக்கிறது, ஆனால் முன்னால் சொன்ன மாதிரி பற்றாக்குறை. உண்பதிலும் கழிப்பதிலும் உள்ள சிரமங்கள்தான் கதை.

வாழ்க்கை மிகவும் எளிமையானது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நமக்கு என்ன வேண்டுமோ, எது நம்மை திருப்திப்படுத்துகிறதோ, எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை மட்டும் செய்தால் போதும். ஆனால் அது ஏன் சுலபமாக இருப்பதில்லை? நம் மீது நமக்கு இருக்கும் பிம்பமும் உண்மை நிலையும் ஏன் இத்தனை மாறுபடுகின்றன? காந்தி போல வாழ்வது மிகச் சுலபமாக இருக்க வேண்டும்; ஏன் நேருவாலும், படேலாலும், ராஜாஜியாலும் கூட அவ்வளவு சுலபமான வாழ்க்கை வாழ முடியவில்லை? Moon and Six Pence நாவலின் நாயகன் தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்கிறான். குடும்பம், மனைவி, சமூக விழுமியங்கள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படி வாழ்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? சண்முகத்தால் ஏன் தன் கிராமத்துக்கு திரும்ப முடியவில்லை? அல்லது குடும்பத்தை மறந்து ஏன் சௌகரியமாக வாழ முடியவில்லை? இந்த வாழ்க்கை எங்குதான் முடியும்? விடிவுண்டா?

நாஞ்சிலின் உச்சம் இதுதான். (படித்த வரை) கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: நாஞ்சிலே தன் நாவல்களை தரவரிசைப்படுத்தியபோது மிதவைக்கு மூன்றாம் இடம்தான் கொடுத்திருந்தார். சதுரங்க குதிரைக்கு இரண்டாம் இடம்; எட்டுத்திக்கும் மதயானைக்கு முதல் இடம்.

பின்குறிப்பு 2: மிதவை புத்தக அட்டையில் தாடியோடு நாஞ்சில்!

பின்குறிப்பு 3: ஜெயமோகன் மிதவையை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (முழு வெற்றி அடையாத, ஆனால் சிறந்த நாவல்கள்) சேர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை”

நாஞ்சில் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களன் நான் என் சொந்த அனுபவத்தில் நன்கறிந்தது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் என் வாழ்க்கையோடு என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நம்பகத்தன்மை அதிகம் உள்ள சித்தரிப்பு. இந்த நாவலை என்னால் சீர்தூக்கிப் பார்த்து நாலு வார்த்தை எழுதிவிட முடியும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.

நாயகன் ஏழ்மையிலிருந்து தப்பிக்க மும்பைக்கு வேலை தேடி வருகிறான். (நான் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க வேலை தேடி அமெரிக்கா வந்தவன்.) வேலையில் திறமைக்காரன், ஆனால் வேலையைத் தவிர மும்பையில் வேறு பிடிப்பு இல்லை. வெறுமை நிறைந்த வாழ்க்கை. சொந்த ஊர், உறவுகளோடு உள்ள பந்தம் பலவீனம் அடைந்து கொண்டே போகிறது. (அதே வெறுமை, பலவீனமாகிக் கொண்டிருக்கும் உறவுகளைக் கண்டு எனக்கு ஒரு காலத்தில் அச்சம் இருந்தது.) நாற்பத்து சொச்சம் வயதான நாயகன், திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்று திருமணத்தைக் கண்டும் பயம், மனைவி, குழந்தைகள், குடும்பம் எதுவும் இல்லாத எதிர்காலத்தைக் கண்டும் பயம். எனக்கு அவ்வளவுதான் takeaway.

நாவலின் பலம் நம்பகத்தன்மை. மிகப் பிரமாதமான சித்தரிப்புகள். மாமாவோடு உள்ள உறவாகட்டும், இன்று திருமணமான மாமா பெண்ணிடம் உன்னைக் கட்டிக் கொள்ளும்படி கேட்டிருந்தால் கட்டி இருப்பேன் என்று சொல்லும் இடமாகட்டும், அலுவலகத்தின் weak friendships ஆகட்டும், உறவுகளோடு வெடிக்கும் சண்டை ஆகட்டும், வேலையில் வரும் சிக்கல்கள் ஆகட்டும், அந்த சிக்கல்களை கடக்கும் விதம் ஆகட்டும் எல்லாமே மிகப் பிரமாதமாக சித்தரிக்கப்படுகின்றன. வாழ்க்கை பொருளிழந்து கொண்டிருப்பது மிக அருமையாக வந்திருக்கிறது. சிறப்பான “எதார்த்தவாத” நாவல்.

என்னைப் பொறுத்த வரையில் பலவீனமும் அதன் எதார்த்தவாத அணுகுமுறைதான். ஆமாம், வாழ்க்கையின் வெறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் நாராயணனின் வாழ்க்கை வெறுமை அடைந்தால் வாசகனுக்கு என்ன போச்சு? So what? என்ற கேள்விக்கு பதிலே இல்லை. மாஸ்லோவின் theory of needs-தான். சோற்றுக்கு அல்லாடும்போது வேலை தேவைப்பட்டது. இப்போது வேலை ஸ்திரமாக இருக்கிறது, வாழ்க்கையின் வெறுமை என்று அடுத்த தேடல். அவ்வளவுதானே?

இரண்டு இடங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நாராயணனிடம் எத்தனை பாண்ட், எத்தனை சட்டை, எத்தனை ஜட்டி இருக்கிறது, ஜட்டிக்கு இன்னும் எத்தனை நாள் ஆயுள் இருக்கிறது என்று கணிக்கும் இடம். நாராயணனின் வாழ்வின் பொருளின்மையை நாலு வரியில் உணர வைத்துவிடுகிறார். இன்னொன்று பயணம் போன இடத்தில் வெள்ளம் வந்து ரோடுகள் துண்டிக்கப்பட்டு நாராயணன் அல்லாடி திண்டாடி மும்பை திரும்பும் இடம். (இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கும் இருக்கிறது.) பயண சித்தரிப்புகள் எல்லாமே பிரமாதமாக வந்து விழுந்திருக்கின்றன.

சதுரங்க குதிரை நாவலை ஜெயமோகன் தன் இரண்டாம் பட்டியலில் வைக்கிறார்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் நான் தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பத்து வருஷம் முன்னால் வரை நான் பேரைக் கூட கேட்டதில்லை. அந்த காலகட்டத்தில் அவரைப் பற்றிய பில்டப் நிறைய ஆரம்பித்தது. ஜெயமோகன், நண்பர் ராஜன் மாதிரி நிறைய பேர் அவரை சிலாகித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பரிந்துரையின் மேல் படித்த இடலாக்குடி ராசா என்னை பெரிதும் கவர்ந்த ஒரு சிறுகதை. போதாதா? அவர் எழுதிய எண்பத்து சொச்சம் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ராஜனிடமிருந்து ஆர்வத்தோடு தள்ளிக் கொண்டு வந்தேன்.

எப்போதெல்லாம் பில்டப் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் நான் அனேகமாக ஏமாற்றம் அடைகிறேன். சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம், ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் இரண்டையும் உதாரணமாக சொல்லலாம். என் மனதின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிவிடுகின்றன என்று நினைக்கிறேன். இப்போதும் எனக்கு அப்படித்தான் ஆயிற்று. படித்த கதைகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் என் எதிர்பார்ப்புகள் இன்னும் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஒரு பத்து இருபது கதைகள் படித்த பிறகு என் மனநிலையை மாற்ற வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது கொஞ்சம் கஷ்டமான காரியம். புத்தகத்தை எடுத்து மூலையில் வைத்துவிட்டேன். அப்புறம் ஒரே மூச்சாக படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தேன்.

நாஞ்சிலிடம் நான் என்ன எதிர்பார்த்தேன், ஏன் ஏமாற்றம் அடைந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். நாஞ்சில் நேரடியாக கதை சொல்கிறார். அதுவே அவரது பலம் என்று புரிந்து கொள்ள எனக்கு நேரம் பிடித்தது. விட்டுவிட்டுப் படிக்கும்போது நன்றாகத்தானே எழுதி இருக்கிறார், அப்படி என்னதான் எதிர்பார்த்தேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் என்றே இன்று கருதுகிறேன்.

சிறந்த சிறுகதைகள் என்று லிஸ்ட் போட்டால் நினைவு வருவன:

இடலாக்குடி ராசா வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். அந்தஸ்து, பொருளாதாரம் என்ற வகைகளில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார்.

வனம். பஸ்ஸில் போகும் அவஸ்தைகளை விவரித்துக் கொண்டே வந்து கடைசியில் “போ மோளே பெட்டென்னு” என்று முடித்த விதம் ஒரு மாஸ்டருக்கு மட்டுமே கைவரும்.

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சைவப் பிள்ளைமார் பின்புலத்தில் எழுதப்படும் கதைகளில் சும்மா பிய்த்து உதறிவிடுகிறார்.

பாம்பு குறிப்பிட வேண்டிய சிறுகதை. மனிதருக்கு தமிழ்ப் பேராசிரியர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இந்த மாதிரி நக்கல் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

சாலப்பரிந்து இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. இதே கருவை வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதையிலும் தமயந்தியின் அனல்மின் மனங்கள் சிறுகதையிலும் கூட பிரமாதமாகக் கையாண்டிருப்பார்கள்.

இந்த ஐந்து சிறுகதைகளையுமே நாஞ்சிலின் மிகச் சிறந்த கதைகளாகக் கருதுகிறேன். இவற்றில் நான்கை ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்த ஐந்து சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று நினைக்கிறேன். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹம் காத்தேன்” என்று சொல்லி இருக்கலாம், சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள். அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம்.

எஸ்ரா இந்நாட்டு மன்னர் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். நான் இந்தக் கதையை பெரிதாக ரசிக்கவில்லை.

கிழிசல் சிறுகதையை விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். ஹோட்டலில் பில் கொடுக்காமல் ஏமாற்றும் அப்பாவை பையனின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் கதை. நல்ல சிறுகதை, ஆனால் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று சொல்லமாட்டேன்.

இவற்றைத் தவிர இந்தக் கதைகளையும் குறிப்பிடலாம்.

விலாங்கு ஒரு கண்ணோட்டத்தில் இது வலியவன் எளியவரிடம் ஆட்டையைப் போடும் கதைதான். நுண்விவரங்கள்தான் இந்தக் கதையை உயர்த்துகின்றன.

துறவு மாதிரி ஒரு கதையைத்தான் நான் எழுத ஆசைப்படுகிறேன். கடைசி வரியில் கதையின் உலகத்தையே மாற்றிவிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் நாஞ்சிலின் சிறுகதைகள் தவறவிடக் கூடாதவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் பேட்டி

nanjil-nadanநாஞ்சில் நாடனுடைய ஒரு பிரமாதமான பேட்டி. அவரது ஆளுமையை நன்றாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்ட விருப்பமாக இருக்கிறது. ஏதோ இந்தக் கணத்தில் தேர்ந்தெடுத்த மேற்கோள் கீழே.

Of late, எனக்கு அந்த நம்பிக்கை வலுவா இருக்கு. எனக்கு ஏதோ ஒரு guiding force இருக்கு. இப்ப வாழ்கைல, கடந்த ஒரு பத்து வருஷம், இருபது வருஷம், எனக்கு சோத்துக்குப் பஞ்சம் இல்ல. துணிமணிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனா எப்பவுமே பண நெருக்கடி இருந்திருக்கு. இந்த வீடு கட்டிக் குடிவந்ததுக்கப்புறம் – என் பையன் பெரும் பணம் செலவு பண்ணிக் கட்டியிருக்கான் – பின்னாடி வரக்கூடிய செலவுகள் இருக்கே, குடிநீர் இணைப்பு எடுக்கணும், அதுக்கு மோட்டர் வாங்கணும், ப்ளம்பர் 8000 கேட்கிறானோ,10000 கேட்கிறானோ! நான் ஐநூறு ரூபாய் நோட்டுப் பார்த்தே பல நாள் ஆச்சு. அதுக்காக பஸ்ல போகும்போது, கண்டக்டர்கிட்டப் பார்த்ததில்லையான்னு கேட்கக்கூடாது. இது ரெண்டு விதமா மனித மனதை இயக்குது. உங்களைத் தோற்றுப் போகச் செய்யும். தோல்வி மனப்பான்மையைப் பெருக்கும். உங்கள வலுவிழக்கச் செய்யும். நான், by nature, diehard species. வடிவேலு சொல்வாரில்லையா, எத்தனை வாட்டி அடிச்சாலும் அழமாட்டேங்கிறான்னு மறுபடி அடிச்சாங்க. ரொம்ப நல்லவன்டா இவன். அந்த ஜோக் மாதிரித்தான் இது.

கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சிலுக்கு இயல் விருது

நாஞ்சிலுக்கு இது பரிசு சீசன் போலிருக்கிறது. ஞானபீடமும் விஷ்ணுபுரம் விருதும்தான் பாக்கி.

ஜெயமோகன் தளத்திலிருந்து மீள்பதிப்பு

NN_GC1

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.

‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், நாஞ்சில் பக்கம்

தொடர்புடைய சுட்டி: நாஞ்சில் நாடன் தளம்

என்பிலதனை II

நாஞ்சிலின் “என்பிலதனை வெயில் போலக் காயுமே” புத்தகத்தைப் பற்றி ஜெயமோகன் மேலும் விவரங்கள் தந்திருக்கிறார். என் குறிப்புகளை ஜெயமோகன் கண்டுகொள்ளும்போது என்னவோ நல்ல வாத்தியார் வகுப்பில் மாணவனை அங்கீகரிக்கும்போது ஏற்படுவது போல ஒரு சின்ன திருப்தி ஏற்படுகிறது.

ஆவுடையம்மாள் பகுதியை வைத்துத்தான் இது சுயவரலாற்று நாவல் என்று யூகித்திருந்தேன். அந்தப் பகுதி நாஞ்சிலின் சொந்த அனுபவங்களோடு ஓரளவு ஒத்துப் போகிறது, ஆனால் நாவலின் பெரும்பகுதி நாஞ்சிலின் நண்பனின் வாழ்க்கை என்று ஜெயமோகன் சொல்கிறார். எப்படியோ நாஞ்சிலின் நண்பர் சுடலையாண்டியாக ரொம்ப நாள் ஜீவித்திருப்பார்! ஆவுடையம்மாளும்தான்.

நகுலனின் பரிந்துரையின் மேல் கடைசி இரு அத்தியாயங்களை நாஞ்சில் வெட்டிவிட்டார், அவை இருந்திருந்தால் என் மாதிரி ஆட்களுக்கு சுபம் போட்ட உணர்ச்சி கிடைத்திருக்கும் என்று ஜெயமோகன் மூலம் தெரியவந்ததும் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. எப்படி அந்த இரண்டு அத்தியாயங்களை படிப்பது? நாஞ்சில் இங்கே வந்திருந்தபோதே தெரிந்திருந்தால் அவரை நச்சரித்து எப்படியாவது வாங்கிப் படித்திருப்பேன். அடுத்த பதிப்பு வரும்போது நாஞ்சில் இவற்றை ஒரு அனுபந்தமாகவாவது வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
என்பிலதனை பற்றி ஆர்வியின் குறிப்பு, ஜெயமோகனின் குறிப்பு

நாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”

இது ஒரு autobiographical நாவல் என்று நினைக்கிறேன். முதல் நாவலான தலைகீழ் விகிதங்களை விட இதில் subtle ஆக சொல்ல முயற்சித்திருக்கிறார், வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு கணித பட்டப் படிப்பு படிக்கும் சுடலையாண்டியின் உணர்வுகள் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். சுடலையாண்டியின் உணர்வுகளைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அவன் கண்களின் மூலம் நம்மை சம்பவங்களைப் பார்க்க வைப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது. பணக்கார வீட்டு ஆவுடையம்மாளுக்கும் அவனுக்கும் நடுவில் இருக்கும் கவர்ச்சி, டென்ஷன், தாத்தா பாட்டியின் ஒரே நம்பிக்கை, அம்மா அப்பா இல்லாத வீடு, தாய் தந்தையரின் கலப்புத் திருமணம் மூலம் ஏற்படும் அவமானங்கள், கூடப் படிக்கும் எவருக்கும் இல்லாத வேலை செய்தாக வேண்டிய நிலை, அதனால் உணரும் அவமானம் என்று பிரமாதமான சித்தரிப்பு.

நாஞ்சில்நாட்டு பேச்சை, பழக்கவழக்கங்களை சித்தரிக்க ஜெயமோகனை நெருங்கக் கூட ஆள் கிடையாது என்று நினைத்திருந்தேன். நாஞ்சில்நாடன் என்று பேர் வைத்துக் கொண்டிருப்பவருக்கு அது கைவராமல் போய்விடுமா என்று யோசித்திருக்க வேண்டாமா?

பிரச்சினை என்னவென்றால் சித்தரித்து அப்புறம் என்ன? சித்தரிப்போடு நின்றுவிடுகிறது. கதை பாதியில் நின்றுவிட்ட மாதிரி இருக்கிறது. ராஜாராவின் காந்தபுராவைப் படிக்கும்போதும் இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கெல்லாம் சுபம் (அல்லது துக்கமாக ஒரு வணக்கம்) போட்டு படத்தை முடித்தால்தான் திருப்தி போலிருக்கிறது.

ஜெயமோகன் இதை தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா.வின் லிஸ்டில் இது இடம் பெறவில்லை.

சித்தரிப்பு மட்டுமே இருப்பது எனக்கு குறையாகப் பட்டாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது, விலை எழுபது ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

நாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்

நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் ஒரு வேளை ஏதாவது தெரிந்திருக்குமோ என்று benefit of doubt கொடுக்கிறார்.

நாஞ்சிலாரின் பேச்சு உணர்வுபூர்வமானது, அவரது இதயத்திலிருந்து எழுகிறது. ஜெயமோகனுடைய பேச்சு அறிவுபூர்வமானது, நமது தர்க்க புத்திக்கு appeal ஆகிறது. இதை குறிப்பாக கவிதைகள் பற்றி அதுவும் கம்பன் பற்றி பேசும்போது கவனிக்கலாம்.

நாஞ்சிலாருக்கு தன்னடக்கம் அதிகம், தனது எழுத்துக்களைப் பற்றி பேச அவர் கொஞ்சம் தயங்குகிறார். இது தனது எழுத்து என்ற பிரக்ஞை அவரிடம் இருக்கிறது. ஜெயமோகனால் தன் எழுத்தை ஒரு வாசகன் மட்டுமே என்ற நிலையில் இருந்து சுலபமாக விவாதிக்கிறார். இதன் corrolary: ஜெயமோகனின் எழுத்தை அவரிடம் சுலபமாக விமரிசிக்க முடிகிறது. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இது எனக்குப் பிடிக்கவில்லை, இப்படி நீங்கள் எழுதுவதால் ஒரு பயனும் இல்லை என்று அவர் முகத்துக்கு நேராக சொல்லி இருக்கிறேன். அவருக்கு பிரச்சினையே இல்லை. அது ஏன் என்று கேட்டார். என் விளக்கம் எதுவும் அவருக்கு சுவாரசியமாக இல்லை என்பது வேறு விஷயம். 🙂 ஆனால் நாஞ்சில்நாடனிடம் அவரது எழுத்துகளை விமரிசிக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

ஜெயமோகனுக்கு நேரத்தைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை கிடையாது. நாலு மணிக்கு போக வேண்டும் என்றால் ஐந்தாகலாம், ஆறாகலாம், ஏழு கூட ஆகலாம். நாஞ்சிலாருக்கு அது ரொம்ப முக்கியம். நான் நாஞ்சிலாரை சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் சென்றிருந்தேன். படகில் கோல்டன் கேட் பாலம் அடியில் எல்லாம் போகலாம், அப்படி போக வேண்டும் என்று எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நாஞ்சிலார் நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்து திரும்பலாம் என்று சொல்லிவிட்டார். ஜெயமோகன் இப்படி சொல்லமாட்டார் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். 🙂

ஜெயமோகன் எல்லாரையும் இழுத்து வைத்துப் பேசுவார். சாதாரணமாக எங்கள் வீடுகளில் கூடும்போதெல்லாம் குழந்தைகள் மாடியில் விளையாடுவார்கள், மனைவிகள் சமையலறையில் பேசிக்கொண்டிருப்பார்கள், ஆண்கள் சோஃபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஜெயமோகனால் எல்லாரையும் கவரும்படி பேச முடிகிறது. இலக்கியத்தில், படிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவர்கள் எல்லாம் கூட ஜெயமோகனின் பேச்சில் கட்டுண்டு கிடந்தார்கள். நாஞ்சிலாருக்கும் அது முடியும்தான், ஆனால் அவரிடம் நீங்கள்தான் போய்ப் பேசவேண்டும்.

நாஞ்சிலாரின் வாழ்க்கையில் ருசி மிகவும் முக்கியம். சாப்பாட்டின் ருசி அறிந்தவர் என்றாலும் ஜெயமோகன் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ஜெயமோகனிடம் ஒரு அண்ணனிடம் உரிமையோடு பேசுவது போல பேச முடிகிறது. நாஞ்சிலாரிடம் சித்தப்பாக்களிடம் இருக்கும் மரியாதை கொஞ்சம் தடுக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தமிழ் எழுத்தாளர்கள்

நாஞ்சில்நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

இதே கருவை ஒரு லக்ஷ்மியோ சிவசங்கரியோ பாலகுமாரனோ கையாண்டிருந்தால் கதையின் ஓட்டம், சம்பவங்கள் இதே மாதிரிதான் இருந்திருக்கும், ஆனாலும் அது எனக்கு இலக்கியம் ஆகி இருக்காது. நாஞ்சில்நாடன் எழுதினால் மட்டும் ஏன் இலக்கியம் ஆகிறது? அவரை நான் சந்தித்திருக்கிறேன், அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்பதாலா என்று எனக்கே ஒரு சந்தேகம்.

அப்புறம் தோன்றிய காரணங்கள்:

  • நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் – சிவதாணு, பார்வதி, மாமனார் சொக்கலிங்கம் பிள்ளை, கொழுந்தியாள் பவானி, நண்பர்கள் ராமநாதன்+காந்திமதி, பெரியவர் சண்முகம் பிள்ளை என்று எல்லாருமே நாம் பார்க்கக் கூடிய, நம்மவர்கள். அவர்களின் உணர்ச்சிகள், வினைகள்+எதிர்வினைகள் எல்லாமே நாம் அனுபவித்தவை, அனுபவிக்கக் கூடியவை.
  • நுட்பமான சித்தரிப்புகள் – கோலப்பப் பிள்ளை கலகம் மூட்ட முயற்சிக்கும் ஒரு இடம் போதும்.
  • நுட்பமான அவதானிப்புகள் – சைவப் பிள்ளைமார்களின் பல பழக்க வழக்கங்களை கவனமாக எடுத்தாண்டிருக்கிறார். கொழுந்தியா சமைஞ்சது, துஷ்டியின் முக்கியத்துவம் எல்லாம் இன்றைக்கு குறைந்து போயிருக்கலாம், ஆனாலும் அவற்றை தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்.
  • ஆனாலும் எனக்கு குறைகள் தெரியத்தான் செய்கின்றன. இது ஓரளவு கீழ்மட்டத்திலேயே நின்றுவிடுகிறது. செண்டிமெண்ட் மெலோட்ராமா என்ற நிலையிலிருந்து ஒரு மயிரிழையில்தான் தப்பிக்கிறது. வாரப் பத்திரிகைகளில் வந்திருந்தால் பெருவெற்றி பெற்றிருக்கும். ஒரு சிவாஜி கணேசன் நடித்து அறுபதுகளில் வந்திருந்தால் நன்றாக ஓடி இருக்கும். ஏன் இப்போது கூட ஒரு மெகாசீரியலாக வந்தால் வெற்றி பெறும். தரிசனம் என்று ஒன்று இல்லவே இல்லை.

    சுருக்கமாகச் சொன்னால் மிகவும் promising படைப்பு. எப்போதும் நினைவில் இருக்கும் படைப்பு, சுலபமாக மறந்துவிடாது. ஆனால் உங்கள் சொந்த அனுபவங்களோடு ஒத்துப் போனால் ஒழிய மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கும் படைப்பு இல்லை.

    தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன், ரதி, பிரமிட் நடராஜன், ஜனகராஜ் நடித்து “சொல்ல மறந்த கதை” என்று திரைப்படமாகவும் வந்தது. பச்சான் இதை வன்னியர் பின்புலத்துக்கு மாற்றி இருந்தார்.

    ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். அவரது வார்த்தைகளில்:

    சமத்காரம் மிக்க கதை சொல்லியான நாஞ்சில் நாடனின் கூரிய அவதானிப்பு கதாபாத்திரங்களையும் சூழலையும் கண் முன் நிறுத்த, அங்கதம் அதில் ஊடுருவிச் செல்லும் படைப்பு இது. வேளாள வாழ்வின் பெருமிதமும், சரிவும், செழிப்பும், அற்பத்தனமும் மாறி மாறித் தெரிந்து நமது புதையுண்ட ஞாபகப் பதிவுகளை கிளர்த்துகின்றன. தங்கைகளை கரையேற்ற பணக்கார வீட்டில் பெண்ணெடுத்த சிவதாணு வீட்டோடு மாப்பிள்ளையாகி படும் அவமானங்களில் நாஞ்சில்நாடனின் பாசத்திற்குரிய கருவாகிய, ’வறுமையின் அவமானம்’ கூர்மை கொள்கிறது.

    எஸ்.ரா.வும் இதை தமிழின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார்.

    புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 225 ரூபாய்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்