கமல் பரிந்துரை: பெருமாள் முருகனின் “கூளமாதாரி”

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் புத்தகங்களைப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூளமாதாரி புத்தகத்தை பரிந்துரைத்தாராம், அதனால் இதை மீள்பதித்திருக்கிறேன்.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்கள் நம்பகத்தன்மை அதிகம் உடையவை. அந்த உலகங்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாதவை. அவரது பலம் பலவீனம் இரண்டுமே அந்த உலகங்கள்தான். மெய்யாகத் தோன்றும் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டுகிறார். அதே நேரம் அந்த உலகங்கள் எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. நான் பண்ணையம் என்ற வார்த்தையையே நாலைந்து வருஷம் முன்னால்தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்த உலகம் எனக்கு முற்றிலும் அந்நியமானது.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்களில் வாழ்க்கை கொந்தளிப்பதில்லை, அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழாம் உலகத்தைப் படிப்பவர்களுக்கு அந்தப் போத்திக்கு தான் செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையே என்று நிச்சயமாகத் தோன்றும். அப்படி தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே போன்ற வசனங்களையும், உருப்படிகள் போத்திக்கு ஏறக்குறைய அஃறிணைதான் என்று நமக்கு உணர்த்தும் காட்சிகளையும் ஜெயமோகன் உருவாக்கி இருக்கிறார். இங்கே கவுண்டருக்கு குற்ற உணர்ச்சி கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருக்கு அப்படி குற்ற உணர்ச்சி இல்லையே என்பது படிப்பவர்களுக்கு தோன்றிவிடுமா என்பதே சந்தேகம்தான்.

நிழல் முற்றத்தில் ஒரு டெண்டுக் கொட்டாய் சூழல் என்றால் இங்கே பண்ணையம் பார்க்கும், அதுவும் குறிப்பாக ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர் சிறுமியரின் உலகம். பதின்ம வயதுகளில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏழ்மை மற்றும் ஜாதீய அடக்குமுறையை தினந்தோறும் சந்திப்பவர்கள். அது அவர்களுக்கு அடக்குமுறையாகத் தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அதுதான். அவர்களுக்கு கவுண்டரும் கவுண்டச்சியும் எஜமான் எஜமானி மட்டுமல்ல, வாழ்வாதாரமே அவர்கள்தான். சோறும் துணியும் கொடுப்பவர்கள். அப்பா, அம்மா, மற்ற உறவினர் எல்லாம் இரண்டாம் கட்ட பந்தங்கள்தான். அவர்கள் ஆடு மேய்ப்பதும் கிணற்றில் குதித்து நீந்துவதும் முனிக்கு பயப்படுவதும் ஆடுகள் விஷச்செடி சாப்பிட்டு இறக்கும்போது பயந்து ஊரை விட்டு ஓடிவிடுவதும் காமம் பற்றி புரிய ஆரம்பிப்பதும் தேங்காய் திருடுவதும் கவுண்டரிடம் அடி வாங்குவதும் முடியாதபோது வீட்டுக்கு ஓடுவதும் கவுண்டரின் மகனோடு ஒரு நட்பு உருவாக முயற்சிப்பதும், அந்த நட்பு உருவாகாமல் அவர்கள் அந்தஸ்து வித்தியாசம் தடுப்பதும்தான், சிறுவன் கூளையன் adult கூளமாதாரியாக மாறுவதும்தான் கதை. இதில் கதை இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. எனக்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

பெருமாள் முருகன் தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்
பெருமாள் முருகன் பக்கம்

பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகனுக்கு” விருதாம் – ஒய் திஸ் கொலவெறி?

perumal_muruganபெருமாள் முருகன் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்தான். மாதொருபாகனை எழுதியதற்காக அவர் மேல் கொடுக்கப்பட்ட அழுத்தம் வரம்பு மீறியதுதான். ஆனால் அதெல்லாம் அந்தப் புத்தகம் இலக்கியரீதியான தோல்வி என்பதை மாற்றிவிடாது.

யார் இந்த சமன்வே அமைப்பு? விருதுக்கான criteria என்ன? எதற்காக புத்தகம் வெளியாகி ஐந்தாறு வருஷம் கழித்து இந்த விருது? இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? அரசியல் நோக்கத்துக்காக மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

சமன்வே அமைப்பு ஜூரிகளில் ஒரே தமிழ்ப் பெயர் அருந்ததி சுப்ரமணியன். அவர்தான் இதற்கு தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். யார் இவர்? அரசியல் நோக்கத்துக்காக இலக்கியத்தை தரம் தாழ்த்துவது எப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணம் என்பது இவருக்குப் புரியவில்லையா?

ஹிந்துத்துவர்கள் அரசியலை இலக்கியத்தில் புகுத்தியது தவறு என்றால் இது என்ன? அவர்களாவது எங்கள் நோக்கம் அரசியல் அதிகாரம், மக்களின் விருப்பத்தை, (தவறான) கோபத்தைப் பிரதிபலிக்கிறோம் என்று சமாதானம் சொல்ல முடியும். இந்த “முற்போக்குவாதிகளுக்கு” அந்த fig leaf கூட இல்லை. இந்த கேனத்தனமெல்லாம் எப்போதுதான் ஒழியும் என்று அலுப்பாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

பெருமாள் முருகன் ஏமாற்றிவிட்டார்!

perumal_muruganமாதொருபாகனை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். பெருமாள் முருகன், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துகளில் (பகுதி 1, 2, 3) அணுவளவும் மாற்றமில்லை என்றாலும் பெ. முருகன் இந்த நாவலில் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கூளமாதாரி, நிழல் முற்றம் வழியாக நான் அறிந்த பெ. முருகன் சிறந்த இலக்கியம் படைத்தவர். ஆர். ஷண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், சுப்ரபாரதிமணியன், வா.மு. கோமு வரை தொடரும் கொங்குப் பகுதி எழுத்தாளர்களில் முதன்மை இரு எழுத்தாளர்களில் ஒருவர். அதுவும் நிழல் முற்றம் ஒரு க்ளாசிக்! எத்தனை இழிநிலையிலும் மானுட வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போய்விடுவதில்லை என்பதை அவர் உணர்த்திவிடுகிறார். அவர் காட்டும் புற உலகம் மட்டுமே நி. முற்றத்தை இலக்கியமாக்கிவிடுகிறதுதான். ஆனால் அந்தப் புற உலகத்திலிருந்து நாம் குறிப்புணரும் அக உலகம் அந்த டெண்டு கொட்டாய் இளைஞர்களைப் பற்றியதல்ல – காலம் காலமாக ஒடுக்கப்பட்டும் வாழும் உத்வேகம் அழியாத மானுடத்தைப் பற்றியது. தோழி அருணாவும் கங்கணம் நாவலை பாராட்டி இருந்தார். அவரது புத்தகப்பித்து அவர் ஒரு சஹிருதயர் என்று அடையாளம் காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புக்கு எதிர்ப்பா, அவர் கருத்து சுதந்திரத்துக்குத் தடையா என்றுதான் நானும் வரிந்து கட்டிக்கொண்டு பதிவு மேல் பதிவு (பதிவு 1, 2, 3) போட்டேன். ஆனால் மாதொருபாகனைப் படித்து முடித்த பிறகு இதற்குப் போயா இத்தனை அலட்டிக் கொண்டோம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பதிவோடு நிறுத்தி இருக்கலாம்.

பலமான கதைக்கரு. ஆனால் குழந்தை இல்லை குழந்தை இல்லை என்று கணவன் மனைவி வருத்தப்படுவதும் அம்மாவும் பாட்டியும் மாமியாரும் வருத்தப்படுவதும் அடுத்த வீட்டுக்காரனும் எதிர்த்த வீட்டு பங்காளியும் குத்திக் காட்டுவதும் சில சமயம் வெளிப்படையாக ஏசுவதும்தான் பக்கம் பக்கமாக வருகிறது. திருவிழாவில் “சாமியிடம்” பிள்ளை பெற்றுக் கொள்வதைப் பற்றி கணவனுக்கு கடுமையான ஒவ்வாமை இருப்பதும் மனைவிக்கு ஏதோ விடிந்தால் சரி என்று இருப்பதும் கடைசி ஐம்பது பக்கத்தில் வருகிறது. அவ்வளவுதான் கதை. அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைப் பற்றி புரிய வைக்க அவர்கள் வருத்தம், சமூக வம்புகள் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்பது புரிகிறது என்றாலும் கதை பூராவும் இதேதானா?

ஒரு வேளை திருவிழா பற்றி சர்ச்சை மூலம் தெரியாமல் இருந்திருந்தால் வேறு மாதிரி தோன்றி இருக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன். இல்லை. திருவிழா பழக்கம் பற்றி புத்தகத்தில் தெரிய வரும்போது இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அவ்வளவுதான். திருவிழா விவரிப்பில் இருக்கும் ஓட்டைகள் அப்போதும் கண்ணில் பட்டிருக்கும். கணவனும் அவன் சிறு வயதில் போய் “அனுபவித்த” திருவிழா, ஆனால் இப்படியும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணர்ந்து அதிர்ச்சி அடைகிறானாம். மீண்டும் மீண்டும் வம்பு பேசும், குத்திக் காட்டும் ஊர்க்காரர்கள் யாரும் “உன் பொண்டாட்டியை பதினாலாம் நாள் திருவிழாவுக்கு அனுப்பேண்டா!” என்று சொல்வதே இல்லை. அப்போதுதானே வாசகர்கள் இப்படி ஒரு பழக்கமா என்று அதிர்ச்சி அடைய முடியும்? குத்திக் காட்டுவதால் இப்படி ஒரு முடிவெடுத்த பொன்னா 12 வருஷம் கழித்து தாயாகும்போது ஊர்க்காரர்கள் பேசாமல் இருப்பார்களா?

பெ. முருகனுக்குக் கொடுக்கப்பட்ட நிதிக்கொடை திருச்செங்கோட்டின் வரலாற்றை புனைவாக எழுதவாம். வரலாறாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. Anecdotal history என்பது கூட இல்லை. திருச்செங்கோட்டுத் திருவிழா, ஒரு வெள்ளைக்காரன் வைக்கும் போட்டி, பாவாத்தாதான் மாதொருபாகன் என்று சொல்லும் ஐயர், அறுபதாம்படி முருகன் என வெகு சிலவே இருக்கின்றன. அவற்றை folklore என்று சொல்லிக் கொள்ளலாம். நாவல் இப்போது இருக்கும் நிலையில் ஊர் எப்படி மாறியது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாது.

நாவலில் சிறப்பான விஷயங்களாக நான் கருதுவது பாவாத்தாவின் படுத்திருக்கும் மண்சிலை, மச்சானும் காளியும் தனியாக உட்கார்ந்து பேச, குடிக்க, சாப்பிடச் செல்லும் பாறைகளின்/குகைகளின் விவரிப்புதான். அறுபதாம்படி முருகன், கல்லை ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு எறிந்த நாச்சிமுத்துக் கவுண்டர், பாண்டீஸ்வரர் கோவில் என்று அவர் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம். இது யூகம்தான். ஆனால் “சாமி கொடுத்த பிள்ளை” என்ற சொற்றொடருக்கு ஒரு மறைபொருள் இருக்கிறது என்று கேட்டவுடன் அதை மட்டும் வைத்துக் கதை எழுத முயன்றிருக்கிறார், கதை முழுதாக உருவாவதற்குள் deadline அழுத்தத்தால் என்னத்தையோ எழுதி ஒப்பேற்றி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

நாவலைப் பாதி படித்திருந்தபோது எனக்கு என்னைப் பற்றி ஒரு விஷயம் திடீரென்று புரிந்தது. நண்பர் ராஜன் அவ்வப்போது பெருமாள் முருகனைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் நீ ஏன் ஹெ.ஜி. ரசூலைப் பற்றி எழுதுவதில்லை என்று கேட்பார். நான் பெரிய சோம்பேறி. எனக்குப் புத்தகம்தான் முக்கியம். மாதொருபாகனை முன்னாலேயே படித்திருந்தால் இதை எல்லாம் எதிர்த்து ஒரு போராட்டம், ஆதரித்து நான் எழுதத்தான் வேண்டுமா என்று ஒரு கணமாவது என் சோம்பேறித்தனம் என்னை யோசிக்க வைத்திருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவு எழுதி இருப்பேனோ என்னவோ. பெ. முருகன் உன்னதமான நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதுதான் நான் எழுதுவதில் பைசா பிரயோஜன்ம் இல்லை என்று தெரிந்தாலும் எனக்கு நீட்டி முழக்க ஊக்கம் தந்தது. தஸ்லிமா நஸ் ரீன் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று தெரிந்து கொள்ளாமல் லஜ்ஜா நாவலுக்காக பொங்குவது எனக்குக் கஷ்டம். என்னை யாராவது கூப்பிட்டு கருத்து கேட்டால், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசத்தான் செய்வேன், ஆனால் அப்படி ஒரு உந்துவிசை இல்லாமல் (ஹெச்.ஜி. ரசூலின் ஃபேஸ்புக் பதிவு போல) நானாக எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டம். டாவின்சி கோட் தடை செய்யப்பட்டதைப் பற்றி என்னால் ஒரு முழுப்பதிவு எழுத முடியாது. என்றாவது டான் பிரவுனைப் பற்றி எழுதினால் அந்தப் பதிவில் இந்தப் புத்தகம் ஒரு தண்டம், ஆனால் இதைத் தடை செய்வது மஹா முட்டாள்தனம் என்று இரண்டு வரி மட்டும்தான் எழுத முடியும்.

பெருமாள் முருகன் மீண்டும் ‘உயிர்த்தெழுந்து’ ஏற்கனவே அடைந்த உச்சங்களைத் தாண்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால் இந்தப் புத்தகம் அவருக்கு சாதனை அல்ல, ஏதோ முயற்சி செய்திருக்கிறார் அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

perumal_muruganஆளை விடுங்கடா சாமி என்று பெருமாள் முருகனே களத்திலிருந்து போய்விட்டாலும், எனக்குத் தெரிந்த சில ஹிந்துத்துவர்கள் கடையை மூட மறுக்கிறார்கள். நண்பர் ராஜன் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை தடை செய்திருக்கக் கூடாது, பெ. முருகன் விவரித்திருக்கும் சர்ச்சைக்குரிய திருவிழா ஹிந்து மதத்தின் நெகிழ்வைக் காட்டுகிறது என்று ஆரம்பித்த ஜடாயு கூட இப்போது கட்சி மாறிவிட்டது போலத் தெரிகிறது. உண்மையான அறிவுஜீவி, scholar என்று நான் மதிக்கும் அரவிந்தன் நீலகண்டனும் பெ. முருகன் ஆதாரம் தரவேண்டும் என்று நினைக்கிறார்.

எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள்:

  1. வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
  2. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
  3. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் பெண் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், ஆணுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று நினைப்பவர் நீங்கள் என்பது தெளிவு. உங்களுக்குப் பெண் என்பவள் சொத்து. அவளைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறீர்கள். நம் வீட்டு/ஜாதி/ஊர்ப் பெண் அவள் இஷ்டப்படி வேறொருவனுடன் உறவு கொள்வதா என்று பொங்குவீர்கள், அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.  நம்ம வன்னியப் பொண்ணு திவ்யாவை இளவரசன் மாதிரி ஒரு தலித் மணப்பதா என்று கிளம்பியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்தளவில் வித்தியாசம் இல்லையே?
  4. அதுவும் கேவலம்தான் என்று நினைத்தால் அடுத்த கேள்வி. ஏறக்குறைய அதே பக்கங்களில் ஊர்த் தேவடியாள்கள் இன்று யார் நம்மிடம் வருவார்கள் என்று அலுத்துக் கொள்கிறார்கள். திருச்செங்கோட்டில் தாசிகள் இருந்தார்கள், திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களுக்கு தொழில் நன்றாக நடக்கும் என்று பெருமாள் முருகன் எழுதி இருப்பது திருச்செங்கோட்டுக்குக் கேவலம் என்று ஏன் உங்கள் குரல் எழவில்லை? ஒருவருக்குக் கூட – ஒரு கவுண்டருக்குக் கூட, ஒரு திருச்செங்கோட்டுக்காரருக்குக் கூட, ஒரு ஹிந்துத்துவருக்குக் கூட அது ஊரைக் கேவலப்படுத்துகிறது என்று தோன்றாதது ஏன்?
  5. சரி என்னவோ தோன்றவில்லை, இப்போது நான் எடுத்துக் கொடுத்த பிறகு தோன்றிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆதாரம், தரவு வேண்டும் என்று நிறைய ஹிந்துத்துவர்கள் எழுதி இருந்தார்கள். சரி. ஊரில் தாசிகள் இருந்ததற்கும் ஆதாரம் கேட்டால் பெ. முருகன் எங்கே போவார்?
  6. நாளை பெருமாள் முருகனுக்கு பதில் ஒரு சிவன் கணபதி பதினேழாம் நூற்றாண்டில் ராசிபுரத்தின் சமூக வரலாற்றை புனைவாக எழுதுகிறேன் என்று கிளம்பி அங்கே ஓரினச்சேர்க்கை நடைபெற்றது என்று எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்து ஓரினச்சேர்க்கை (ஆண்-ஆணாக இருந்தாலும் சரி, பெண்-பெண்ணாக இருந்தாலும் சரி) பற்றி தமிழில் எந்தக் குறிப்பும் கிடையாது. சங்கத் தமிழில், இடைக்காலத் தமிழில், அம்மானைகளில், சிந்துகளில், நாட்டுப் பாடல்களில், தமிழ் நீதி நூல்களில், கல்வெட்டுகளில், தமிழ்நாட்டு கோவில் சிற்பங்களில் எங்கும் கிடையாது. தமிழ்நாட்டிலேயே இல்லாத ஓரினச்சேர்க்கை ராசிபுரத்தில் இருந்ததாக எழுதி ராசிபுரத்தை கேவலப்படுத்திவிட்டாய், ராசிபுரத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நடந்ததற்கு ஆதாரம் காட்டு என்றால் என்ன செய்ய?
    எத்தனையோ ஜாதி, ஊர்ப் பழக்க வழக்கங்கள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. எல்லா ஜாதியினருக்கும், எல்லா ஊருக்கும் ஒரு அ.கா. பெருமாள் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் பாலியல் உறவுகள் பற்றி சிலவற்றைத்தான் வெளிப்படையாக எழுதலாம் என்று ஒரு எழுதப்படாத விதி ஒன்று எப்போதுமே நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. அதற்காக பதிவு செய்யப்படாத எந்த விஷயமும் நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்ள முடியுமா?
  7. தரவு தரவு என்றால் என்னதான் தரவு எதிர்பார்க்கிறீர்கள்? இது என்ன நடக்க முடியாத நிகழ்ச்சியா? வாய்மொழி வரலாறு, “சாமி கொடுத்த பிள்ளை” என்பதற்கு என்ன ரகசிய அர்த்தம் என்பதைப் பெரியவர்கள் சொன்னார்கள் என்கிறார். யார் அந்தப் பெரியவர்கள், சொல்லு சொல்லு என்றால் – கல்லூரிப் பேராசிரியர், ஹிந்துத்துவர்கள் எண்ணத்தில் (பொய் சொல்லியே) உலகமெல்லாம் பேரும் புகழும் பெற்றவர், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆதரவு பெற்றவர் – அவரே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கப் பிரதிநிதிகள் (கலெக்டரா தாசில்தாரா?) கூப்பிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தகவல் கொடுத்த பல்லுப் போன கிழங்கள் யார் யாரென்று பெ. முருகன் அடையாளம் காட்டிவிட்டால் அந்தக் கிழங்களின் கதி என்ன? சரி அடையாளம் காட்டுகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அந்தப் பெரிசுகள் பயத்தில், ஜாதியினர், ஊர்க்காரர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டால் பெ. முருகன் கதி என்ன? பெ. முருகன் முன்னெச்சரிக்கையாக ஆடியோ வீடியோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் பிழைத்தார்! வெறுமனே நோட்புக்கில் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்தால்? தன் ஞாபக சக்தியை மட்டுமே நம்பி இருந்தால்?
  8. புனைவுக்காக பெ. முருகன் அங்கும் இங்கும் மாற்றி இருக்கலாம். 1940களில் நடந்ததாக எழுதி இருக்கிறார், அது 1920களில் நடந்திருக்கலாம். திருச்செங்கோட்டில் நடக்காமல் பக்கத்து ஊரில் நடந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாதிடுபவர்கள் இன்றும் திருச்செங்கோட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் என்ன நடக்கிறது என்று நினைத்துப் பார்த்தீர்களா? கூவாகம் பற்றியும் கல்வெட்டு கிடையாது, இலக்கியம் கிடையாது, ஒரு பத்து இருபது வருஷமாகத்தான் வெளியேவே தெரிகிறது. இந்த இன்டர்நெட் யுகத்தில், இன்றும் உயிரோடு இருக்கும் பழக்கத்துக்கே இவ்வளவுதான் ஆவணம் என்றால் ஒரு நூறு வருஷத்த்துக்கு முன்னால் நடந்த, இன்று மறைந்துபோன ஒரு பழக்கத்துக்கு என்ன ஆதாரம் எதிர்பார்க்க முடியும்?
  9. சரி பெ. முருகன் வாய்மொழி வரலாறு, சொன்ன பெரிசுகள் இவ்விவர்கள் என்று பட்டியலே தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தரவுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?
  10. சரி இப்படி நடக்கவில்லை, இது முழுப்பொய், பெ. முருகன் திட்டமிட்டு பணம் வாங்கிக் கொண்டு திருச்செங்கோட்டைக் கேவலப்படுத்துகிறார் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். என்ன ஆதாரம்? ஆதாரம் கேட்பவர்களுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் தார்மீகக் கடமை இல்லையா? ஃபோர்ட்? அறக்கட்டளை மூன்று நான்கு லட்சம் தந்தது என்றால் போதுமா? (கல்லூரிப் பேராசிரியர்களின் மாதச்சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல் என்கிறார் நண்பர் ராஜன். அரை லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் பெ.மு.வின் ஆறேழு மாதச் சம்பளம்தான் இது.) பூமணி கூடத்தான் அதே அறக்கட்டளையில் நிதிக்கொடை பெற்று அஞ்ஞாடி எழுதி இருக்கிறார், அதற்கு சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்திருக்கிறது. பூமணியைப் பற்றியும் குற்றச்சாட்டா? இப்படி இந்த நிறுவனத்திலிருந்து நிதிக்கொடை பெறுவதே ஹிந்துத்துவர்கள் கண்ணில் தேசத்துரோகம் என்றால் எப்படி ஒரு தேசத்துரோகத்தை தூண்டும் நிறுவனத்தை நாட்டில் செயல்பட விட்டிருக்கிறீர்கள்? பெ.மு. பற்றி போடும் கூச்சலை விட நூறு மடங்கு அதிகமாக அல்லவா அந்த நிறுவனத்த்தை எதிர்த்துப் போராட வேண்டும்?
    இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அறக்கட்டளையில் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நிதிக்கொடையை பெ.மு. பெற்று அது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது தவறு என்று உங்களுக்குக்குத் தோன்றினால் அறக்கட்டளை பற்றிய சட்ட திட்டங்களை மாற்றுங்கள். பெ.மு. செய்த தவறு என்ன?
    தரவாக சொல்லப்படுவது தொண்ணூறு வயதுப் பெரியவர் ஒருவர் (ஒரே ஒருவர்தான்) இப்படி எதையும் கேள்விப்படவில்லையாம். அந்தப் பெரியவரும் community leader-ஆம். எந்தக் community முன்னின்று எதிர்க்கிறதோ, அந்தக் community-யின் பெருசு ஒருவர் சொன்னால் போதும், இது பொய் என்று நிரூபணம் ஆகிவிடுகிறது!
  11. அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் பெ. முருகனிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டியதால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது.
  12. என் முப்பாட்டன் தன் முப்பாட்டன் சொன்னது என்று என்னிடம் சொல்வதை வரலாற்றுத் தரவு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சமூக வரலாற்றுப் புனைவு என்பதற்கு அது போதும். என் உறவினர் ஒருவர் சொன்னது – 1967 தேர்தலில் ராஜாஜி மயிலாப்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் “என் பூணூலை பிடிச்சிண்டு சொல்றேன், நீங்கள்ளாம் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கோ” என்று அங்கே நிரம்பி இருந்த பிராமணர்களைக் கேட்டுக் கொண்டாராம். நாட்டுக்கே தலைவரான ராஜாஜி ஒரு ஜாதியின் தலைவராகத் தன்னை குறுக்கிக் கொண்ட நிகழ்ச்சி என்றே நான் அதைக் காண்கிறேன். அதை நான் என் பேத்திக்குச் சொல்லலாம். இன்னும் நூறு வருஷம் கழித்து ராஜாஜியைப் பற்றி ஒரு புனைவில் அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்படலாம். ஆதாரம் கேட்டால் என் பேத்தி என்ன செய்வாள்?
  13. ஒரு புறம் தஸ்லிமா நஸ் ரீனுக்கும் சல்மான் ருஷ்டிக்கும், சார்லி ஹெப்டோவுக்கும் ஆதரவு. இன்னொரு பக்கம் பெ. முருகனுக்கு எதிர்ப்பு. இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டை எப்போது ஹிந்துத்துவர்கள் உணரப் போகிறார்கள்?

பின்குறிப்பு: இதை தமிழ் ஹிந்துவில் பிரசுரிப்பீர்களா என்று ஜடாயுவிடம் கேட்டேன். (எனக்கு கொஞ்சம் இங்கிதம் குறைவு). எதிர்பார்த்தபடியே அவர் மறுத்துவிட்டார். 🙂

தொடர்புடைய சுட்டிகள்:
இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது
மீண்டும் பெருமாள் முருகன்

மீண்டும் பெருமாள் முருகன்

perumal_muruganமாதொருபாகன் புத்தகத்தை நான் படிக்கவில்லை. அதில் எவ்வளவு தூரம் வரலாறு, எவ்வளவு தூரம் உண்மை என்று பெருமாள் முருகன் விளக்கி இருக்கிறாரா என்றெல்லாம் நான் அறியேன். அவர் விளக்கம் கொடுத்திருந்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் என் புரிதலில் மாற்றம் இருக்காது என்பதால் இதை எழுதுகிறேன்.

பெ. முருகன் திருச்செங்கோடு பற்றி எழுதியதற்கு தரவுகள் வேண்டும் என்று பலர் – குறிப்பாக ஹிந்துத்துவர்கள் – கேட்டிருப்பது அங்கும் இங்கும் கண்ணில் பட்டது. எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.

என்ன மாதிரி தரவு எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. கல்வெட்டில் திருவிழா அன்று எந்தப் பெண்ணும் யாருடனும் படுக்கலாம் என்று இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏதாவது புத்தகத்தில் பதித்திருக்க வேண்டுமா? வாய்மொழியாக ஆயிரம் விஷயம் கேட்கிறோம், அது கதைக்களத்தில் இடம் பெறுவது அத்தனை ஆச்சரியமா? ஊரில் பெரிசுகள் மலக்காட்டுப் பக்கம் ஒதுங்கும்போது ஆயிரம் பேசிக் கொள்வார்கள், அதைக் கேட்டு பெ. முருகன் எழுதி இருக்கலாம். அட மொத்தமும் அவர் கற்பனையாகவே இருக்கலாம். அதனால் என்ன?

சரி அவர் பணம் வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே திருச்செங்கோட்டையும் கவுண்டர்களையும் கோவில் திருவிழாவையும் “கேவலப்படுத்தவே” இப்படி எல்லாம் எழுதினார் என்றே வைத்துக் கொள்வோம். பிடித்திருப்பவனோடு உறவு கொள்வது பெண்ணுக்குக் கேவலமா? இதே திருச்செங்கோட்டில் தாசி வீட்டில் கவுண்டன் விழுந்து கிடந்தான் என்று எழுதினால் அதற்கும் ஆதாரம் கேட்பீர்களா? அப்போது கேவலம் இல்லையா? நம் வீட்டுப் பெண்கள், நம்ம ஜாதிப் பெண்கள், நம்ம ஊர்ப் பெண்கள் புனைவில் கூட “கற்பு” நிலை தவறிவிடக் கூடாது அவர்கள் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், இதெல்லாம் மாறவே மாறாதா?

முன்னூறு நானூறு பக்கம் புத்தகத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு மட்டும் தரவு கொடுத்தாக வேண்டும், மிச்ச இருநூத்தி சொச்சம் பக்கத்துக்குத் தரவு வேண்டாமா? சரி தரவு தந்தார் என்றே வைத்துக் கொள்வோம், அது திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?

இலக்கியத்துக்கு, புனைவுக்கு என்ன தரவு? எப்படித் தர? இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்களா? கண்ணெதிரில் கூவாகத்தில் வருஷாவருஷம் பாலியல் உறவுகள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கின்றன என்று கேள்வி. அப்படி நடப்பதற்கு என்ன ஆதாரம் தர முடியும்? என்ன கல்வெட்டில் பதித்திருக்கிறார்களா இல்லை சங்க காலப் பாடல் இருக்கிறதா? எத்தனை வருஷமாக கூவாகத்தில் இப்படி நடக்கிறது என்று கூட சொல்வது கஷ்டம்.

என் சிறு வயதில் நான் கேள்விப்பட்ட ஒரு சமாசாரம் – ஆசாரமான மாமிகள் எல்லாம் வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் போடும்போது அம்மணமாக நின்று கொண்டுதான் போடுவார்களாம், அப்போதுதான் அதில் மணம் குணம் காரம் எல்லாம் சரியாக வருமாம். அதாவது போடும்போதே மானம் போய்விட்டால் பிறகு ஊறுகாய் சரியில்லை என்று மானம் போகாதாம். (என் சின்ன வயதில் கிளுகிளு விஷயம் என்று யாரோ சொன்னது, அதைக் கேட்ட பிறகு கொஞ்ச நாள் ஆவக்காய் ஊறுகாயா? உவ்வே என்று அந்தப் பக்கமே போகாமல் இருந்ததுதான் மிச்சம்.)  சிவசங்கரி பாலங்கள் என்ற நாவலில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். அவரிடமும் என்னிடமும் ஆதாரம் கேட்டால் எங்கே போவது? யார் சொன்னது என்று கூட நினைவில்லை. வாய்மொழி வரலாற்றுக்கெல்லாமா ஆதாரம் கேட்பீர்கள்?

வம்ச விருக்‌ஷா பிராமணர்களைத் “தவறாகப்” பிறந்தவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது, தலைமுறைகள் செட்டியார்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது என்று கிளம்புவீர்களா? அடப் போங்கய்யா!

அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் அவரிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டினால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான்.

அறிவுஜீவி ஹிந்துத்துவர்களிடமிருந்து (அ.நீ., அருணகிரி…) போன்றவர்கள் எல்லா விஷயங்களையும் தங்கள் அரசியல் அஜெண்டா மூலம் பார்க்காமல் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. நல்ல வேளை ஜடாயு ஆயிரம் ஆனால்களை போட்டுக் கொண்டாலும் புத்தகத்தைத் தடை செய்யக் கோருவது தவறு என்று சொல்லி இருக்கிறார். நண்பர் ராஜன் ஊரில் இல்லை, அதனால் அவரின் கருத்துக்கள் தெரியவில்லை. ஒரு பக்கம் தஸ்லிமா நஸ் ரீனைப் பற்றி புலம்பிக் கொண்டே இன்னொரு பக்கம் பெ.முருகனுக்கு எதிராகப் பேச மாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது

இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது

perumal_muruganபெருமாள் முருகன் வெறுத்துப் போய் நான் எழுதறதையே விட்டுடறேன் ஆளை விடுங்கடா சாமி என்று அறிவித்திருக்கிறார். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது இல்லையா?

யார் மனதும் புண்படவே கூடாது என்றால் “வாலைக் குழைத்து வரும் நாய்தான் அதுதான் மனிதர்க்குத் தோழனடி பாப்பா” என்று பாப்பாவுக்குக் கூட சொல்லித் தர முடியாது. அது என்ன தோழன்? தோழிகள் என்னானார்கள் என்று இரண்டு பெண்ணியவாதிகள் கிளம்புவார்கள். புத்தகம் பிடிக்கவில்லையா வாங்காதீர்கள். இல்லை காசு கொடுத்து வாங்கி கொளுத்துங்கள். அதை விட்டுவிட்டு அவர் மீது இப்படி அழுத்தம் கொடுப்பது அற்பத்தனம்.

என் குரல் எங்கும் கேட்கப்போவதில்லை என்று நான் அறிவேன். இதனால் பெ. முருகனுக்கு பைசா பிரயோஜனமில்லை என்றும் நான் உணர்கிறேன். ஆனால் இந்த சமயத்தில் நான் குரல் எழுப்பவில்லை என்றால் மாய்ந்து மாய்ந்து புத்தகங்களைப் பற்றி இத்தனை பதிவு எழுதுவதில் அர்த்தமே இல்லை.

பெ. முருகன் எழுதுவதை நிறுத்தினால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை விட தமிழுக்கு ஏற்படும் நஷ்டம் அதிகம். நிழல் முற்றம் தமிழ் நாவல்களில் ஒரு கிளாசிக். கூளமாதாரி முக்கியமான இலக்கிய முயற்சி. தோழி அருணா கங்கணம் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். அடுத்த சாஹித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைக்கும் என்று எண்ணி இருந்தேன்.

கல்லூரி காலத்தில் எனக்கு நிறைய கவுண்டர் ஜாதி நண்பர்கள் ஏற்பட்டனர். ஒருவன் திருச்செங்கோட்டில்தான் வாழ்கிறான். (அவனைப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.) என்னால் முடிந்தது அவர்களிடம் பேசப் போகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

நிழல் முற்றம் – பெருமாள் முருகன்

ஸ்ரீ விஜயா தியேட்டரில் உள்ள சோடா கடையில் வேலை பார்க்கும் சத்தி என்கிற சக்திவேல், இடைவெளி நேரத்தில் சோடா நிரப்பி, விற்று, கழுவி என ஆரம்பித்து அடுத்ததாக வெளியிடப்படும் படத்திற்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டும் வேலை வரை செய்து அங்கேயே வாழ்ந்து வருபவன். சத்தியோடு அவனுடைய நெருங்கிய நண்பன் நடேசன், கணேசன், பூதன் என மற்ற பையன்களும் அந்த தியேட்டரின் வளாகத்திற்க்கு உள்ளே உள்ள டீக்கடை, சைக்கிள் நிறுத்தும் இடம், டிக்கெட் கவுன்டர்களில் சொல்லப்படும் வேலைகளை செய்து அங்கேயே தங்கி வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நண்பகல் ஆட்டம் தொடங்குவதோடு ஆரம்பம் ஆகி இரண்டாம் ஆட்டம் முடிந்து சோடா கடை மூடும் வரை ஓடிக் கொண்டேயிருக்கிறது. அந்த வாழ்க்கையின் ஒரு கால பகுதியை அதில் சம்பந்தப்பட்ட மனிதர்களை, அவர்களுக்கிடையே உள்ள உறவுகளை சத்தியின் வழியே சொல்கிறது பெருமாள் முருகனின்நிழல் முற்றம்’ நாவல்.

விளிம்பு நிலை என்று சொல்லத் தக்க வறுமையில் இருக்கும் வாழ்க்கையிலும் மற்ற எவரைப் போலவே கிடைக்கும் நேரங்களில் அந்த வாழ்க்கையின் உள்ளே எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கும் மனிதர்களாக தான் அவர்கள் உள்ளனர். கிடைக்கும் சொற்ப பணத்தில் சாப்பாட்டை குறைத்துக் கொண்டு போதை மாத்திரைகளையும், கஞ்சாவையும் புகைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தையை பார்க்கும் போது உண்டாகும் விளையாட்டு தனமும், பசியாறிய பிறகு கிணற்றில் சென்று விழுந்து கும்மாளமிடுவதும் என எங்கும் காணகிடைக்கும் மனிதர்களின் அதே ஆசைகளும் உணர்வுகளும் அவர்களுக்கும் உள்ளது, அவைகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுது அனுபவித்தும் கொள்கிறார்கள்.

இடையில் குஷ்டரோகம் பிடித்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சத்தியின் அப்பா அவனைக் காண வருகிறார். தன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாத சத்தி, தன் தந்தை ஒரு பிச்சைகாரன் என்பது வெளியே தெரிந்துவிடுமோ என்கிற பயத்திலும், எரிச்சலிலும் திட்டி அனுப்பி விடுகிறான். அவர் கை வைக்காமல் கொண்டு வந்த சோற்றை தின்னாமல், அவர் கொடுத்த காசை மட்டும் வாங்கிக் கொண்டு இனிமேல் தியேட்டருக்கு வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறான். நடேசனின் பாட்டி – அப்பாவின் தாயார் – அவனுக்கு சமைத்து எடுத்து வருகிறார். அதை சாப்பிட்டு விட்டு செலவிற்க்கு காசு தர முடியாது, போய் அப்பனிடம் வாங்கி கொள்ளுமாறு விரட்டி விடுகிறான். அதை பார்க்க பொறுக்காமல் சத்தி பாட்டிக்கு தன் பணத்தை கொடுத்து விடுகிறான்.

தினமும் தியேட்டர் கலெக்ஷனில் கமிஷன் வாங்கி போகும் படக் கம்பெனிகாரன் ஒரு நாள் சத்திக்கு மதுவும், மிக்சரும் கொடுத்து உடலுறவு கொள்கிறான். “அண்ணே..அண்ணே..” என்பதை தவிர சத்தி எதுவும் சொல் இயலவில்லை. பிறகு அதுவே படக்காரனுக்கு பழக்கமாகி விடுகிறது.

ஒருவரிலிருந்து மற்றவர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எடுத்துக் கொள்ளும் ஆதாயங்கள் நாவல் முழுவதும் கதையோட்டமாக வருகிறது. தியேட்டர் தண்ணி தொட்டியிலிருந்து சோடாக்காரர் தன் கடைக்கு தெரியாமல் திருடிக் கொள்ளும் தண்ணீர், காசில்லாமல் குடித்த கலருக்காக டிக்கெட் வாங்காமல் சோடாகடை காரருக்கு தெரிந்தவர்களை அனுப்பும் மானேஜர், எம்ஜியார் படத்திற்க்கு கூட்டம் அதிகமாகும் சமயத்தில் முன்னரே டிக்கெட்டை வாங்கி பிளாக்கில் விற்கும் சத்தி, நடேசன் மற்றும் கூட்டாளிகள், இரண்டாம் ஆட்டத்தில் தூங்கி கொண்டிருப்பவனின் புதிய செருப்பை பையன்களும், சோடாகடைகாரருமாக திருடி கடைக்குள் ஒளித்து வைத்து கொள்வது என தினப்படி விஷயங்களாக அவை நடைபெறுகின்றன. இவை எதிலும் குற்றவுணர்வோ, தன்னிரக்கமோ, நியாயபடுத்துதல்களோ எதுவும் இல்லை.

சோடா கடைகாரருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நிலப் பிரச்சனை நடக்கிறது. மற்றவன் காட்டில் தடம் போடுவதற்கு சம்மதிக்காததால் சோடா கடைகாரருக்கு இடைஞ்சல். இரவோடு இரவாக வேலையாட்களை வைத்து சண்டைக்காரனின் இடம் வழியே தடம் போட்டு விடலாம் என திட்டமிடுகிறார். அப்போது பிரச்சனை ஏற்பட்டால் அடி கொடுக்கவும், வாங்கவும் தியேட்டர் பையன்களுக்கு வீட்டில் தண்ணியும் , சாப்பாடும் போட்டு காவலுக்கு கூட்டி செல்கிறார்.

ஒரு நாள் இரவு சோடா கடைக்கு உள்ளே யாரோ நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நாசப்படுத்தி விடுகிறார்கள். யாரென தெரியாமல் அடுத்த நாள் அவர் எல்லோரையும் பிடித்து அடிக்கிறார். சத்தியும் மதியம் அரை தூக்கத்தில் போய் அடி வாங்குகிறான், அப்போது தான் வேலைக்கு வருகிற வாட்ச்மேன் கிழவனும் அடி வாங்குகிறான். இறுதியில் பூதன் தான் அங்கிருந்து ஓடிப் போவதற்கு முன் இதை செய்திருக்க வேண்டும் என எல்லோரும் கண்டுபிடிக்கிறார்கள். விரக்தியில் நடேசனும் இல்லாமல் – நடேசன் தடம் போன போது நடந்த சண்டையில் இறந்திருக்கலாம் என யூகிக்கலாம் – சத்தி தியேட்டரை விட்டுக் கிளம்புகிறான். சோடா கடைகாரர் திரும்ப வரும்படி கூப்பிடுகிறார், வேண்டாம் என்று நினைத்தாலும் மறுபடியும் சத்தி தியேட்டரை நோக்கி போகிறான்.

ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகமறியா மனிதர்களின் கதைகளுக்கு மாதிரியாக இந்த நாவலின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு விரிவான சித்தரிப்பும், உளப்போராட்டங்களும் நாவலில் சொல்லப்படவில்லை. அந்த தியேட்டரின் வாடிக்கையாக வந்து போகும் பார்வையாளர்களை குறித்தும் பெரிதாக சொல்லப்படவில்லை. இவை வாசிப்பதற்கு ஒரு போதாமை உணர்வை கொடுக்கிறது.

நிழல் முற்றத்தின் சிறப்பாக தோன்றியது என்னவென்றால் அதில் காட்டப்படும் வாழ்க்கை வாசிப்பவருக்காக வாழ்ந்து காட்டப்படவில்லை. அதில் உள்ள மகிழ்ச்சியும், துயரங்களும், கோபங்களும் மிக இயல்பாக எல்லா நிலையிலும் உள்ள மனிதர்களுக்கிடையில் நடப்பவைகளாகவே உள்ளன. கதை மாந்தர்கள் எவரும் தங்களுடைய நிலையை எண்ணி தன்னிரக்கத்துடன் பேசிக்கொண்டும், சமூக அவலங்களை பார்த்து விரக்தியுடன் புலம்பிக் கொண்டும் அவ்வாழ்க்கைக்கு வெளியே நிற்கவில்லை. அதில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு உள்ளே மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள், யதார்தத்தை போல. அவ்விதத்தில் எனக்கு இந்த நாவல் அதிகம் அறியப்படாத வாழ்க்கையை, உலகை ஒரு துளியேனும் நேர்மையுடன் காட்டியது என்றுதான் கூற வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்:
பெருமாள் முருகன் பக்கம்
முத்துகிருஷ்ணன் பதிவுகள்
தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
பெருமாள் முருகனின் தளம்
நிழல் முற்றம் பற்றி ஆர்வி
நிழல் முற்றம் பற்றி ரெங்கசுப்ரமணி

பெருமாள் முருகனின் புத்தகப் பைத்தியம்

perumal_muruganபெ. முருகனின் இந்தக் கட்டுரை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. எனக்கும் இப்படித்தான் புத்தகப் பைத்தியம் இருந்தது. (என் மனைவி பின்னாலிருந்து இப்ப மட்டும் என்ன தெளிஞ்சிருச்சா என்கிறாள்) ஆனால் பெருமாள் முருகனைப் போல் இல்லாமல் என் அம்மாதான் என்னை ஏழு வயதில் கிராம நூலகத்தை அறிமுகம் செய்து வைத்தாள். சிறு வயதில் படிக்க ஊக்கம் தந்ததும் அம்மாதான். அப்போதெல்லாம் நானும் வேர்க்கடலை சுற்றிய காகிதத்தைக் கூட விடமாட்டேன்.

பெ. முருகன் மொடாவில் புத்தகம் வைத்திருந்தது மாதிரி எனக்கும் ஒரு காலம் இருந்தது. திருமணம் ஆவதற்கு முன்னால் நண்பர்களுடன் ஒரு வீடு/அபார்ட்மெண்டில் சேர்ந்து வசிப்பது வழக்கம். என் அறையில் ஒரு சின்ன மெத்தை தரை மீது விரித்திருப்பேன்.நான்கு சுவர்களிலும் புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைத்திருப்பேன். தூங்கி எழுந்து கையை நீட்டினால் தட்டுப்படும் புத்தகத்தைப் படிப்பேன். இன்று அலமாரிகள் நிறைந்து வழிகின்றன, ஆனால் தேட வேண்டி இருக்கிறதே!

கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்

பெருமாள் முருகனின் “கங்கணம்”

அருணாவின் இன்னொரு புத்தக அறிமுகம். புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 235 ரூபாய்.

பெருமாள் முருகனின் ஏறுவெயில் மற்றும் மாதொருபாகன் படித்திருக்கிறேன். இப்போது கங்கணம். அவர் நாவல்கள் வாழ்க்கையைப் பற்றிய மாபெரும் தரிசனம் எல்லாம் அளிக்க முற்படுவதில்லை. சமுதாய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, அதனால் விளையும் குடும்ப/சமுதாய அமைப்பின் சிதிலங்களை, கொங்கு நாட்டு பின்புலத்தில், நுட்பமான நுண்விவரணைகளோடு சொல்கிறார். மாற்றத்தின் நடுவே இருக்கும் ஒரு சமுதாயத்தின் snapshot என சொல்லலாம்.

என் மாமாவின் பையன் 37 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கிறான். தில்லியில் ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜில் பி.ஏ ஹானர்ஸ் படித்த, மாடர்னான, விளம்பர நிறுவனம் ஒன்றில் காபிரைட்டராக, குடும்ப சொத்து எதுவும் இல்லாத நல்ல பையன். இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது சொன்னான், கடைசியாக பார்த்த சென்னை பெண் சொந்த வீடு கூட இல்லாமல் கல்யாணம் என்ன தைரியத்தில் பண்ணிக் கொள்ள நினைக்கிறாய் என்று கேட்டதாக. சிறு நகர, கிராமத்து பெண்களுக்கு தனக்கு ஒத்து வராது என சொல்லிக்கொண்டிருந்தவன் இப்போது அதற்கும் தயார். ஆனால் சொந்த வீடில்லாத காபிரைட்டர் என்பதோடு 2 வருடங்களும் அதிகரித்து விட்டது.

கொங்கு நாட்டு கவுண்டர்கள் மத்தியில் சில தலைமுறைகளாக இருக்கும் பெண் சிசுக் கொலை வழக்கம் அச்சமூகத்தில் சம காலத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, 35 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் தத்தளிக்கும், வசதியான நிலவுடமையாளனான மாரியப்ப கவுண்டரின் பார்வையில் சொல்கிறது கங்கணம். பெண் குழந்தையை கவுத்து போட்டு கொல்லும் வழக்கம் கவுண்டர் குடும்பங்களில் பல தலமுறைகளாக இருந்ததை பற்றி பாட்டி, “பின்ன, இல்லாதயா? நம்ம கவண்டமூட்டு வைராவல பாரு. ரண்டு மூணுக்கு மேல எப்பவும் பிள்ளைங்க இருக்காது. பலவரட்ட சாதிலயெல்லாம் பத்துப் பதினஞ்சுன்னு கூட வெச்சிருப்பாங்க. நாம அப்படி வெச்சிருந்தா ஒவ்வொருத்தனுக்கும் காடு ஒரு வெலாகூட வராது பாத்துக்க” என படு காஷுவலாக அத்தரப்பு நியாயத்தை சொல்கிறாள். இன்று இருபது ஆண்களுக்கு மூன்று பெண்களே இச்சமூகத்தில் உள்ளனர் என பெருமாள் முருகன் பதிவு செய்கிறார்.

மாரியப்பன் என்னேரமும் தான் பார்த்து தனக்கு அமையாத பெண்களைப் பற்றி, தனக்கு காலாகாலத்தில் ஆகியிருக்க வேண்டிய கல்யாணம், குடும்பம் பற்றி யோசித்துக் கொண்டே தனது காடுகளில் சுற்றி வருகிறான். தனக்கு கல்யாணம் ஆனால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறான். தானாவதி தாத்தா, பூடுதி, முன்னாள் வாத்தியார் மற்றும் இன்னாள் modern கல்யாணத்தரகர், பண்ணையாள் ராமன் என யார் கல்யாண யோசனைகள் கொண்டு வந்தாலும் விடாமல் பின் தொடர்ந்து ஒன்றும் நடக்காமல் விரக்தியின் விளிம்பில் நிற்கிறான். ஒரு நேர்ச்சை/பரிகாரம் விடாமல் செய்கிறான். வயலில் படுத்து தூங்கி பொறுப்பில்லாமல் அலையும் குப்பனின் 17 வயது மகனிற்கு ஒரு சிரமமும் இல்லாமல் கல்யாணம் நிச்சயிக்கப்படும்போது அவனுக்குள் வெறி ஏறுகிறது. அம்மாயியை வீட்டை விட்டே வெளியேற வைக்கக் கூடிய வார்த்தைகளை அவ்வன்மம் கூறுகிறது.

பாட்டி அச்சமுதாயத்தின் கடந்த தலைமுறையின் பிரதிபலிப்பாக வருகிறாள். எவ்வளவு காசிருந்தாலும் நல்ல புடவைகளையும், காசையும் பொந்தில் ஒளித்து வைத்து விட்டு கந்தல் உடுத்தி காட்டு வேலைக்குப் போகும் கடும் உழைப்பாளி. கடைசி வரை தனியாக குடிசையில் வாழ்ந்து, முதுகொடிய தென்னை ஓலையைக் கூட விடாமல் கீறி வாரியலாக விற்று பணம் சேர்க்கும் உழைப்பும், சிக்கனமும், தைரியமும் உள்ள கிழவி. சின்னத்தாத்தாவின் பேரன் செல்வராசு மாறி வரும் சமூகத்தின் பிரதிநிதி. ரிக்ஷா வண்டி ஓட்டி காட்டில் வேலை பார்க்கும் கடினமில்லாமல் காசு சேர்த்து, அதை நுகர்தலுக்கு செலவழிக்கும் தலைமுறை. கூடவே கீழ் சாதி பெண்ணை தைரியமாக காதலித்து, தன் சமுதாயம் அதை எதிர்க்கும், தன் குடும்பம் தனக்கு சொத்து கொடுக்காமல் நிராகரிப்பார்கள் என்ற நிதர்சனம் உணர்ந்து, தன் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள, இரண்டு தலைமுறை சண்டையை பொருட்படுத்தாமல் மாரியப்பனிடம் நன்றி பாராட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும், அவனுக்கு பதிலுக்கு உதவும் சாமர்த்தியசாலி.

சாதி பற்றிய பேச்சுகள் நாவல் நெடுகிலும். கிராம வாழ்வில் இன்றும் சாதி அழிவில்லாமல் இருப்பதை காட்டிக் கொண்டு. பொருளாத ரீதியாக மாறி வரும் உலகில், ரிக்ஷா வண்டி ஓட்டி, மற்ற விதங்களில் சம்பாதிப்பதற்கான சாத்தியங்களால், விவசாயக் கூலி வேலையில் நாட்டமில்லாத சக்கிலியர்கள், இம்மாற்றங்கள் தம் வாழ்க்கையை மிகச் சீக்கிரமே பாதிக்கும் என உணர்ந்த நிலவுடமையாளர்கள் என்ற மற்றொரு சமுதாய மாற்றத்தையும் இன்னொரு இழையில் பதிவு செய்கிறார். ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் ஒரு கறுப்பர் கதாபாத்திரம் திரும்பத் திரும்ப வரும். வெள்ளைக் கதாபாத்திரங்களின் வாழ்வியல் சிக்கல்களை அகற்ற, அவர்களுக்கு தகுந்த ஆலோசனயை சமயோசிதமாக வழங்கும், அவர்களை விட சமுதாய பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் ஆனால் ஆன்மீகமாக தேறிய பாத்திரங்கள். இக்கதையில் வரும் சக்கிலியர்களான வத்தனும், ராமனும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

குடும்ப அமைப்பின் வன்முறையை பற்றிய சித்திரங்களை நன்றாக அளிக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உறவும் காரியம், காசு சார்ந்ததாகவே இருக்கிறது. பாசம், பகிர்தல் எல்லாம் ஒன்றும் கிடையாது. சொற்களில், செயல்களில் கொப்பளித்து வரும் வன்மம். தாத்தாவின் தலைமுறையில் சொத்துக்காக உக்கிரமாக போடப்படும் பங்காளி சண்டைகள். தன் கல்யாணம் நடப்பதற்கு இதுவே பெரும்பாலும் கடைசி சந்தர்ப்பம் என மாரியப்பன் உணர்ந்து தன் தாய் தந்தையிடம் அதைப் பற்றி பேசப் போகும் போது கூட உச்சபட்ச வன்முறையை கையாண்டே அச்சம்மதம் வாங்கப்படுகிறது. உரையாடலே சாத்தியமில்லாத, நிதானமாக தம்மிடையே பேசுவதெப்படி என்றே அறியாத ஒரு சமுதாயக் குடும்ப அமைப்பு. காத்திருந்து அமைந்த கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கிப் போட்ட பிறகும், அவள் விலை உயர்ந்த கூறைப்புடவை எடுக்கும் போது, கல்யாணம் ஆகி ஒரு மாதம் அனுபவித்து விட்டு உன்னைக் கந்தலுடன் பனங்காட்டில் நிற்க வைக்கிறேன் பார் என கறுவும் வன்மம். மாரிமுத்துவிற்கும் அவன் தாய்க்குமான உறவு நாம் வழக்கமாக பார்த்துப் படித்துப் பழகிய லட்சிய உறவெல்லாம் கிடையாது. அவன் கல்யாண ஆசையை அவள் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூர்க்கமாக சீண்டுகிறாள். சமுதாய அமைப்பில் இருந்த, கல்யாணம் என்ற அமைப்பை மீறிய பாலியல் உறவுகளை, பாட்டிக்கு வேலைகாரனுடன் அவள் கணவர் அறிந்தே இருந்திருக்கக் கூடிய உறவை போகிற போக்கில் அரைப் பக்கத்தில் சொல்லிவிட்டு போகிறார்.

மாரியப்பன் தனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என என்னென்னவோ செய்கிறான். கல்யாணம் நிற்பதற்க்கு காரணமாக இருந்தது என அவன் நினைக்கும் பழைய மாடல் பைக்கை, கள்குடியலை, கோவணம் கட்டி தென்னை ஏறும் வழக்கத்தை அனைத்தையும் விடுகிறான். வீட்டில் டி.வி வாங்கி வைக்கிறான். தன்னை முற்றிலும் ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்கிறான். படித்து முடிக்கையில் திருமணம் என்ற அமைப்பே எவ்வளவு அபத்தம் என தோன்ற வைக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: பெருமாள் முருகன் பக்கம், அருணா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்

பெருமாள் முருகனின் “கூள மாதாரி”

பெருமாள் முருகன் காட்டும் உலகங்கள் நம்பகத்தன்மை அதிகம் உடையவை. அந்த உலகங்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாதவை. அவரது பலம் பலவீனம் இரண்டுமே அந்த உலகங்கள்தான். மெய்யாகத் தோன்றும் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டுகிறார். அதே நேரம் அந்த உலகங்கள் எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. நான் பண்ணையம் என்ற வார்த்தையையே நாலைந்து வருஷம் முன்னால்தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்த உலகம் எனக்கு முற்றிலும் அந்நியமானது.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்களில் வாழ்க்கை கொந்தளிப்பதில்லை, அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழாம் உலகத்தைப் படிப்பவர்களுக்கு அந்தப் போத்திக்கு தான் செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையே என்று நிச்சயமாகத் தோன்றும். அப்படி தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே போன்ற வசனங்களையும், உருப்படிகள் போத்திக்கு ஏறக்குறைய அஃறிணைதான் என்று நமக்கு உணர்த்தும் காட்சிகளையும் ஜெயமோகன் உருவாக்கி இருக்கிறார். இங்கே கவுண்டருக்கு குற்ற உணர்ச்சி கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருக்கு அப்படி குற்ற உணர்ச்சி இல்லையே என்பது படிப்பவர்களுக்கு தோன்றிவிடுமா என்பதே சந்தேகம்தான்.

நிழல் முற்றத்தில் ஒரு டெண்டுக் கொட்டாய் சூழல் என்றால் இங்கே பண்ணையம் பார்க்கும், அதுவும் குறிப்பாக ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர் சிறுமியரின் உலகம். பதின்ம வயதுகளில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏழ்மை மற்றும் ஜாதீய அடக்குமுறையை தினந்தோறும் சந்திப்பவர்கள். அது அவர்களுக்கு அடக்குமுறையாகத் தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அதுதான். அவர்களுக்கு கவுண்டரும் கவுண்டச்சியும் எஜமான் எஜமானி மட்டுமல்ல, வாழ்வாதாரமே அவர்கள்தான். சோறும் துணியும் கொடுப்பவர்கள். அப்பா, அம்மா, மற்ற உறவினர் எல்லாம் இரண்டாம் கட்ட பந்தங்கள்தான். அவர்கள் ஆடு மேய்ப்பதும் கிணற்றில் குதித்து நீந்துவதும் முனிக்கு பயப்படுவதும் ஆடுகள் விஷச்செடி சாப்பிட்டு இறக்கும்போது பயந்து ஊரை விட்டு ஓடிவிடுவதும் காமம் பற்றி புரிய ஆரம்பிப்பதும் தேங்காய் திருடுவதும் கவுண்டரிடம் அடி வாங்குவதும் முடியாதபோது வீட்டுக்கு ஓடுவதும் கவுண்டரின் மகனோடு ஒரு நட்பு உருவாக முயற்சிப்பதும், அந்த நட்பு உருவாகாமல் அவர்கள் அந்தஸ்து வித்தியாசம் தடுப்பதும்தான், கூளையன் கூள மாதாரி என்று அழைக்கப்படுவதும் கதை. இதில் கதை இல்லை என்றால் இல்லை. இருக்கிறது என்றால் இருக்கிறது. எனக்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

பெருமாள் முருகன் தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்
நிழல் முற்றம்