பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

(மீள்பதிவு, முதல் பதிவு ஜனவரி 2011-இல்)

பிரபஞ்சனுக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் –

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தாசாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல. கதை நடப்பது 1730-களின் பிற்பாதியில். டூமா என்பவர் புதுச்சேரியின் ஃபிரெஞ்சு கவர்னர். துபாஷிகள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. அடுத்த துபாஷாக வருவோம் என்று எதிர்பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு ஏமாற்றமே. தஞ்சையில் மராத்திய அரசுக்கு பெரும் போட்டி, பணம் கொடுத்து சந்தாசாஹிப் முதலியோரின் ஆதரவை நாடும் போட்டியாளர்கள். பணம் கொடுக்க வரி நிறைய கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த mercenary படைகள் சர்வசாதாரணமாக வயல்களை, கிராமங்களை சூறையாடுகின்றன. நிலையான ஆட்சி இல்லை. டூமா ஓரளவு நியாயமாக நடந்துகொள்கிறார். சந்தாசாஹிபின் மனைவிக்கு அடைக்கலம் கொடுக்கிறார். நாட்டில் ஜாதி, மதமாற்றப் பிரச்சாரம், கலவரங்கள் என்று பல உரசல்கள் ஏற்படுகின்றன. பிள்ளை இவை எல்லாவற்றையும் தன் நாட்குறிப்புகளில் எழுதி இருக்கிறாராம். அதை வைத்து இலக்கியம் படைத்திருக்கிறார் பிரபஞ்சன்.

அரசு சண்டைகள் பற்றி நிறைய வந்தாலும் கதையின் focus சாதாரண மக்களின் வாழ்வு முறையே. அதுவே இந்தக் கதையின் பெரிய பலம்.

நாவலில் குறைகள் இல்லாமல் இல்லை. பெரிய பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன் சம்பந்தியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான். தொடர்பில்லாத பல கிளைக்கதைகளை தொகுத்திருப்பது போல இருக்கிறது.

ஆனால் மிக அருமையான முயற்சி. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு) கல்கி போட்ட கோட்டிலிருந்து வெளியே வெற்றிகரமாக வந்திருக்கிறார். ஒரு புதுப் பாணியை உருவாக்கி இருக்கிறார். கல்கி நமக்கு காட்டுவது ஒரு fantasy உலகம். இவர் காட்டுவதுதான் நிஜமாக இருக்கிறது.

ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது சிறந்த தமிழ் இலக்கிய லிஸ்டில் இடம் பெறும் ஒரே சரித்திர நாவல் இதுதான். அவரது வார்த்தைகளில்:

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.

எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.

பிரபஞ்சன் வானம் வசப்படும் என்றும் இன்னொரு நாவல் எழுதி இருக்கிறார். அது இன்னும் கிடைக்கவில்லை…

ஆனந்தரங்கரின் டைரி இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா? (பத்ரி சேஷாத்ரி கொடுத்திருக்கும் லிங்க் இப்போது வேலை செய்யவில்லை) நண்பர் ராஜ் சந்திரா ஒரு சுட்டியைக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த பகுதி – பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து ஒரு excerpt – மதுவிலக்கு உத்தரவு
இன்னொரு excerpt – காலைக்கடன் உத்தரவு

பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவல்

ஆனந்தரங்கரின் டைரி

ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய விக்கி குறிப்பு
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகம் தலைவர் பத்ரி சேஷாத்ரி

தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்), பகுதி 3 (படிக்க விரும்புபவை)

பிரபஞ்சன் – அஞ்சலி

பிரபஞ்சனின் மறைவு வருத்தம் தந்த செய்தி. இரண்டு சிறந்த நாவல்களை எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைத்தவர். ஆனால் நான் படித்த வரைக்கும் அவர் எழுதிய பிற நாவல்கள் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. உலகியல் காரணங்களுக்காக இதழியலில் ஈடுபட்டது, வாழ்வின் பிரச்சினைகள் அவரை கொஞ்சம் முடக்கிவிட்டன என்று கேள்வி. அவரது சிறுகதைகள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, ஆனால் என் கண்ணில் படித்தே ஆக வேண்டிய முதல் வரிசை சிறுகதைகள் அல்ல.

மானுடம் வெல்லும் முன்னுரையில் அவர் சொல்வது:

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

நானே என் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிரபஞ்சன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டும் என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

வானம் வசப்படும் மானுடம் வெல்லுமின் நீட்சியே. இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கும். 1995-ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருதை வென்றது. ஆனால் என் கண்ணில், coherence குறைவாக இருந்தாலும் மானுடம் வெல்லுமே கலை ரீதியாக அதிக வெற்றி பெற்ற நாவல்.

பிரபஞ்சனின் மொத்த பங்களிப்பும் இந்த இரண்டு நாவல்கள் மட்டுமே என்றுதான் நான் கருதுகிறேன். ஜெயமோகன் தனது seminal நாவல் பரிந்துரைகளில் மானுடம் வெல்லுமுக்கு பத்தாவது இடத்தை அளிக்கிறார். வானம் வசப்படும், மற்றும் மஹாநதி என்ற நாவல்களை தனது இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் மானுடம் வெல்லும் மற்றும் சந்தியா இடம் பெறுகின்றன.

மனசு, அப்பாவின் வேஷ்டி, மற்றும் கருணையினால்தான் என்ற சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. எஸ்ராவின் சிறுகதை பரிந்துரைகளில் அப்பாவின் வேஷ்டி மற்றும் மரி என்கிற ஆட்டுக்குட்டி என்ற சிறுகதைகள் இடம் பெறுகின்றன. மீன் என்ற சிறுகதையை சுஜாதா பரிந்துரைத்தார் என்று நினைவு.

மனசு யூகிக்கக் கூடிய கதைதான் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. அ. வேஷ்டியில் வேஷ்டியை அப்பாவின் குறியீடாக மாற்றி இருக்கிறார். கருணையினால்தான் கதையில் கோபத்தில் கொலை செய்தாலும் அழகை ரசிக்கும் இளைஞன் நல்ல பாத்திரப் படைப்பு. மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதையில் தனக்கிருக்கும் கடுப்பால் மற்றவர்களை கடுப்பேற்றும் பதின்ம வயதுப் பெண் அன்புக்குக் கட்டுப்படுவது நன்றாக விவரிக்கப்படுகிறது. மீன் எல்லாம் என்ன சிறுகதை என்றே புரியவில்லை. மிச்ச எல்லாம் நல்ல சிறுகதைகள்தான். இவற்றைத் தவிர பிரும்மம் என்ற சிறுகதையும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று என்றாவது ஒரு தொகுப்பு வெளியிட்டால் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

அவருடைய பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம். என்றாவது படிக்க வேண்டும். அவரது சிறுகதைகள் அவரது பிற நாவல்களை விட நன்றாக எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது.

மா. வெல்லும், மற்றும் வா. வசப்படும் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்ததால் வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்த புத்தகங்களின் தரம் – மகாபாரத மாந்தர்கள், காதலெனும் ஏணியிலே, நானும் நானும் நீயும் நீயும், சுகபோகத் தீவுகள், உள்ளங்கையில் ஒரு கடல், ஈரம் எல்லாம் சுமார்தான்.

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம். மகாபாரத மாந்தர்கள் என்ற தொடர் பல பாத்திரங்களை சுருக்கமாக விவரிக்கிறது. படிக்கலாம்தான், ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை.

காதலெனும் ஏணியிலே: நாயகன் சேது நல்லவன், வல்லவன். அவன் மீது உயிரையே வைக்கும், அவன் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும் ஏறக்குறைய தன் சொத்தை அவன் மேல் எழுதி வைக்கும் நாயகி சுமி. Go-getter ரேகா. முக்கோணக் காதல். வாரப் பத்திரிகைகளில் பெண்களை குறி வைத்து எழுதப்படும் தொடர்கதைகள் தரத்தில்தான் இருக்கிறது, சுவாரசியமே இல்லை. தவிர்க்கலாம்.

நானும் நானும் நீயும் நீயும்: திருமணம் நிச்சயமான பிறகு தனக்கு வேண்டியது என்ன என்பதை உணரும் பெண். டக்கென்று முடித்துவிட்டார்.

உள்ளங்கையில் ஒரு கடல்: நல்ல இயக்குனர் மூர்த்தி சினிமாத்துறையை விட்டு ஒதுங்குகிறான். ஒரு நிருபி அவனை மீட்டுக் கொண்டு வருகிறாள். இதே போன்று ஒரு நீளமான சிறுகதையைப் படித்த நினைவும் இருக்கிறது. சுமார்.

சுகபோகத் தீவுகள்: அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்கும் ஓரளவு படித்த மானேஜர் போன்ற ஒருவனை முன்னால் வைத்து (தொண்ணூறுகளின்) அரசியல் நிலையை நமக்கு சொல்ல ஒரு முயற்சி. கிராமத்து படித்த இளைஞன் தன் அரசியல்வாதி மாமாவிடம் வந்து சேர்கிறான். குறுகிய காலத்தில் விவசாயிகளை ஏமாற்றி நிலம் வாங்கும் ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்திக் கொடுக்கிறான். தலைவர் மாமாவை பின் தள்ளிவிட்டு இவனை முன்னே கொண்டு வருகிறார். விரைவில் நம்பகமான ஆலோசகன் ஆக மாறிவிடுகிறான். இன்னொரு முன்னாள் நடிகை, இந்நாள் அரசியல்வாதியின் மகளிடம் ஏற்படும் காதல் கொஞ்சம் குற்ற உணர்வைத் தருகிறது. காதல் வலுக்க வலுக்க கடைசியில் அரசியலை விட்டுவிடுகிறான். சுமாரான த்ரில்லர். அரைகுறையாக இருக்கிறது. அவரது திறமைதான் இதை காப்பாற்றுகிறது. அரசியல் நிகழ்வுகள் நன்றாக வந்திருக்கின்றன, அதை இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கலாம். நாவல் அனேகமாக வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

ஈரம் என்ற மினி-தொடர் சகிக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் இரண்டு நல்ல நாவல்கள், சில நல்ல சிறுகதைகள் எழுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறார்.

உங்கள் கண்ணில் வேறு நல்ல புத்தகங்கள் ஏதாவது எழுதி இருக்கிறாரா? நீங்கள் எவற்றை பரிந்துரைப்பீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அஞ்சலிகள், பிரபஞ்சன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

Chronologically, மானுடம் வெல்லும் புத்தகத்தின் தொடர்ச்சி. இரண்டு புத்தகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே கருத்து, ஒரே பின்புலம், ஏறக்குறைய அதே மனிதர்கள். மா. வெல்லும் நாவலின் அநேக பலங்களும் இதிலும் உண்டு. ஒரு பலவீனம் இல்லை. அதிலே கொஞ்சம் rambling, தொடர்பில்லாத பல துணைக் கதைகள் உண்டு. இது இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கிறது. அப்படி கோர்வையாக இருப்பதே ஒரு விதத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. சுவாரசியமான துணைக் கதைகள் இதில் கொஞ்சம் குறைவு.

பாண்டிச்சேரிக்கு ஒரு புது கவர்னர் – டூப்ளே. ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இன்னும் தலைமை துபாஷ் வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர்தான் தமிழர்களில் முக்கியஸ்தர். பெரிய வியாபாரி, நிர்வாகி, துபாஷ் எல்லாம் அவர்தான். ஒரே ஒரு பிரச்சினை. டூப்ளேயின் மனைவி பிள்ளையின் நலம் விரும்பி இல்லை. டூப்ளேக்கு பிள்ளையின் அருமை பெருமை எல்லாம் தெரிந்தும், பிள்ளை எத்தனையோ உண்மையாக உழைத்தும், பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய பதவி, நிலை முழுதாகக் கிடைப்பதில்லை. அவரை மையமாக வைத்து அன்றைய சமுதாயம், வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அரண்மனைச் சதி genre-இல் என்னதான் சுவாரசியம் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் புத்தகங்களைப் படிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி வருவதில்லை. தமிழர்-பறையர்-துருக்கர்-பரங்கியர் வாழ்க்கை, கிருஸ்துவப் பாதிரியார்கள் ஜாதி பார்ப்பது, (ஜாதி கிடையாது என்று பறையர்-மேல் ஜாதியாருக்கு நடுவில் இருக்கும் சுவரை உடைக்கும் பாதிரியாரும் உண்டு) வேதபுரீஸ்வரர் கோவிலை உடைக்க முயல்பவர்கள், டூப்ளேயின் மனைவி அப்பட்டமாகத் திருடுவது, தாசிகள், லஞ்சம் வாங்குவது அதிகார வர்க்கத்தின் சாதாரண நிகழ்ச்சியாக இருப்பது என்று பல நிகழ்ச்சிகளை அருமையாகக் கோர்த்திருக்கிறார்.

நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ள நாவலே, ஆனால் மா. வெல்லும் என் கண்ணில் இன்னும் கொஞ்சூண்டு பெட்டர். எந்த வருஷம் வெளியானது என்று தெரியவில்லை. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை இருநூறு ரூபாய்.

ஜெயமோகன் இதைத் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்) சேர்க்கிறார்.

என்னதான் மா. வெல்லும் கொஞ்சம் rambling என்றாலும் எனக்கு இதை விட அதுதான் ஒரு மாற்று ஒசத்தி. இருந்தாலும் சிறந்த வரலாற்று நாவல், சிறந்த நாவல். நிச்சயமாக தமிழின் டாப் மூன்று வரலாற்று நாவல்களில் ஒன்று. (மற்றவை, மானுடம் வெல்லும் – obviously. மற்றும் பொன்னியின் செல்வன். இதைப் படிப்பதற்கு முன்னால் மூன்றாவது இடத்தில் இருந்தது சிவகாமியின் சபதம்.) படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”