க.நா.சு. புதுமைப்பித்தனை சந்திக்கிறார்

க.நா.சு. மணிக்கொடி அலுவலகத்துக்கு முதல் முறையாகப் போகிறார், தன் கதைகளை பிரசுரிப்பார்களா என்று தெரிந்து கொள்ள. அங்கே பி.எஸ். ராமையாவையும் புதுமைப்பித்தனையும் சந்திக்கிறார். இரண்டும் நிமிஷம் பேசிய பிறகு க.நா.சு.வும் தங்கள் கோஷ்டிதான், தேறாத கேஸ் என்று புதுமைப்பித்தன் தீர்ப்பு சொல்லிவிடுகிறார்! சுட்டி இங்கே.

அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும் அழியாச்சுடர்களுக்கும் நன்றி!

சுட்டி கொடுத்தால் போதும்தான், ஆனால் இதை சிலிகன் ஷெல்ஃபிலும் பதித்து வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.


முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.

இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள். கண் பி. எஸ். ராமையா என்றும், பல் சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் என்றும் அறிந்துகொண்டேன்.

“ராசா கதை எழுதப் போறாக, என்ன சொல்றீக?” என்று பல் கண்ணைக் கேட்டது.

“எழுதட்டுமே. நமக்கென்ன ஆட்சேபம்?” என்றது கண்.

“கதை போட்டால் ஏதாவது பணம் கொடுப்பதுண்டா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். சொ.வி. கடகடவென்று உள்பற்களும் தெரிய சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கண் ஆசிரியராக லட்சணமாகப் பதில் சொல்லிற்று. “மணிக்கொடியில் கதை போட நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் கதைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை” என்றார்.

“விலைமதிப்பில்லாத கதைகளாக எழுதுங்கள்” என்றது பல்.

“போன இதழில் ‘சில்பியின் நரகம்’ என்று ஒரு கதை வந்ததே… படித்தீரா?” என்று கேட்டது கண்.

“நல்ல கதை. படித்தேன். அதனால்தான் என் கதையையும் போடுவீர்களா என்று கேட்க வந்தேன்?”

“நல்ல கதைகளாக நான் ஒருவன் எழுதுகிறேனே, போதாதா?” என்று கேட்டது பல்.

“அவர்தான் அந்தக் கதையின் ஆசிரியர்.”

“அப்படியா? சந்தோஷம் உங்களைச் சந்தித்ததில்.”

“அப்படிச் சொல்லு ராசா!” என்றது பல்.

இது ‘ஹோப்லெஸ் கேஸ்’ என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். நல்ல சிவப்பாக, நல்ல உயரமாக, எடுப்பான மூக்குடன், தீட்சண்யமான கண்களுடன், பல்லுக்கும் கண்ணுக்கும் நல்ல காண்ட்ராஸ்ட்.

“இவர் என் ஆர்டிஸ்ட். கே. பாஷ்யம் ஆர்யா” என்றது கண்.

ஆர்யா என்று அவர் சொன்னது ஆர்.ஏ. என்று எனக்குக் காதில் விழுந்தது. ஆர்.ஏ. என்றால் கலை உலகில் ராயல் அகேடெமிசியன் என்பதன் சுருக்கம். கதைகளுக்குப் பணம் தராத பத்திரிகை ஒரு ஆர்.ஏ.யை வேலைக்கு…

“‘ஆர்யா’ என்கிற புனைப்பெயரில் சித்திரங்கள் போடுகிறார். பெரிய ஆர்டிஸ்ட். ஆனால் அதைவிடப் பெரிய தேசபக்தர். பாஷ்யம் சட்டையைத் தூக்கிக் காட்டுங்கள்.” என்று ராமையா பாஷ்யத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்குப் பழக்கப்பட்டவர் போல ஆர்யா தன் சட்டையைக் கழுத்துவரைத் தூக்கிக் காட்டினார். விரல் மொத்தம் குறுக்கும் நெடுக்குமாகத் தழும்புகள் – கசையடித் தழும்புகள். நான் பிரமித்துப்போய் நின்றேன். ஒவ்வொரு தழும்பும் ஒன்பது வாய்களுடன் ‘நீயும் இருக்கிறாயே’ என்று கேட்பது போலத் தோன்றிற்று.

என் பிரமிப்பை நீக்குவதற்கே போல பல் சொல்லிற்று, அவருடைய பேடண்ட் கடகடச் சிரிப்புடன். “என்ன ராசா? பேச்சு வரவில்லை? அவர் தழும்புகள் அவர் முதுகில் தெரிகின்றன. எங்கள் தழும்புகள் உள்ளத்தில் இருப்பதனால் வெளியே தெரிவதில்லை. பாரதியார் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ராசாவே!”

“படித்திருக்கிறேன்.”

“ஹா! ஹா! கேள்விப்பட்டது மட்டுமில்லை. படித்தும் இருக்கிறார் மனுஷன். இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ் என்றுதான் தோன்றுகிறது ராமையா” என்றார்.

இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக ‘மணிக்கொடி’ கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகாராஜர்கள் ராமையாவும் சொ.வி.யும் போய்விட்டார்கள். நான், அலாஸ் – இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிருஷ்டக்காரர். சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு

முன்றில் இதழ் 5 (க.நா.சு. நினைவு மலர்)

பின்குறிப்பு: வேலை மும்முரத்தில் இந்தப் பக்கம் வரமுடியவே இல்லை, இனி மேலாவது கொஞ்சம் ரெகுலராக எழுத வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புதுமைப்பித்தன் பக்கம்

புதுமைப்பித்தன் மறைவு – விகடன் ஆபிச்சுவரி

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது. சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள், சரியாக நாலே நாலு வாக்கியம்தான். எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: புதுமைப்பித்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
புதுமைப்பித்தன் நினைவு நாள்
புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமார் ஆய்வின் கதை
புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்

புதுமைப்பித்தன் நினைவு நாள்

விகடனில் எப்போதோ படித்தது. நன்றி, விகடன்!

ஜூன் 30-ம் தேதி, புதுமைப்பித்தனின் நினைவு நாள்.

சிறுகதையுலகில் இட்டு நிரப்ப முடியாத ஓர் இடத்தைப் பெற்றவர் சொ.விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். வேளூர் வெ.கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில், கவிதையுலகிலும் காலடி எடுத்து வைத்தவர் அவர்.

புதுமைப்பித்தனுக்கு கணேச சர்மா என்று ஒரு நண்பர் உண்டு. அவருக்குச் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு.

ஒரு தடவை, திருவீழிமிழலை சகோதரர்களான நாதசுர வித்வான்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். கணேச சர்மா அந்த வித்வத் சிரோன்மணிகளைப் பார்த்து, “உங்கள் வாசிப்பை யாராரோ கேட்டு ரசித்துத் தலையை ஆட்டினால் போதுமா? இங்கு ஒரு பெரிய ஞானஸ்தர் இருக்கிறார். அவர் சபாஷ் போட்டு விட்டால் அப்புறம் உங்களுக்கு வேறு பட்டயமே தேவையில்லை” என்று கூறினார். அவர்களும் அதிசயித்து, “அப்படியா? அவரைப் பார்க்க வேண்டுமே” என்று கூற, கணேச சர்மா, அவர்களைப் புதுமைப்பித்தன் குடியிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

“என்ன சோவி, திருவீழிமிழலை பிரதர்ஸ் உங்களிடம் நாதசுரம் வாசித்துக் காட்ட வேண்டுமாம்!” என்றார் சர்மா பணிவோடு.

“நாதசுரமா? சரி, வாசிக்கட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.

வித்வான்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். புதுமைப்பித்தன் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து வெற்றிலை போட்டபடி, ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார். வித்வான்கள் இருவரும் வெகுநேரம் ராக ஆலாபனை எல்லாம் பண்ணி முத்தாய்ச் சொரிந்து தள்ளினார்கள். ஆனால், புதுமைப்பித்தனின் முகத்தில் எந்த மாறுதலையும் காணோம்.

இதற்குள் அறைக்கு வெளியே இருந்த சர்மா கடகடவென்று சிரித்தபடி உள்ளே வந்தார். “இவ்வளவுதானா உங்கள் சங்கீதம்? இவரை மயக்க முடியவில்லையே!” என்று வித்வான்களைக் கேலி செய்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. எல்லாம் சர்மாவின் கலாட்டா!

உண்மை என்ன தெரியுமா? புதுமைப்பித்தனுக்குச் சங்கீதத்தில் அட்சரம்கூடத் தெரியாது. சங்கீத விஷயத்தில் அவர் ஒரு ஒளரங்கசீப். எனவேதான், அந்த வித்வத் சிரோன்மணிகளின் சங்கீதம் புதுமைப் பித்தனைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.

புதுமைப்பித்தன் தினமணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், எவ்வளவுதான் கவனமாகப் புரூப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிடர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டு விடுவதைக் கண்டு எரிச்சலாகி, ஒருமுறை கடைசியில், ‘கடவுள் துணை!’ என்று எழுதி வைத்தார். கம்பாஸிடர் வந்து “ஸார், இதையும் கம்போஸ் செய்யவா?” என்று கேட்க, “இல்லையப்பா! நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனியும் தவறு விழுந்தால், ‘கடவுள்தான் எனக்குத் துணை. நீ அல்ல’ என்பதற்குத்தான் அப்படிப் போட்டேன்” என்றார்.

வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது முதல் பாட்டு ‘ஓடாதீர்!’ என்பது. இது கிராம ஊழியன் பத்திரிகையில் வெளிவந்த காலத்துக்கு முன்னர்தான் கு.ப.ரா. காலமாகியிருந்தார். அவரைச் செத்த பிறகு கவனிக்க முனைந்த, நிதி சேர்க்க முனைந்த தமிழர்களின் நிலையைக் கண்டு புழுங்கிப் பாடிய பாட்டு அது!

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலிலிருந்து…

புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை

வேதசகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவர். புதுமைப்பித்தனின் படைப்புகளை ஆய்வு நோக்கத்தில் அணுகியவர்களில் முதல்வர், முதன்மையானவர். அவர் கட்டிய மாளிகை மீது பின்னால் வந்த வெங்கடாசலபதி போன்றவர்கள் கொடியை மட்டும்தான் பறக்கவிட்டிருக்கிறார்கள். அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் கதைகள் என்ற புத்தகத்தில் அவர் பேர் போகிற போக்கில் சொல்லப்பட்டிருப்பது பெரிய அநியாயம்.

குமாரின் ஆய்வின் கதை இப்போது அழியாச்சுடர்கள் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் எழுபதுகளில் – பணம், பதவி, புகழ் எந்த விதமான அங்கீகாரமும் கிடைக்காத காலம் – இப்படி தேடி அலைவதற்கு பெரிய உந்துசக்தி வேண்டும். சும்மா ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் என் போன்றவைகளால் சலாம்தான் வைக்க முடிகிறது. Hats off!

தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

படிக்க வேண்டிய தமிழ் சிறுகதைகள் என்று ஜெயமோகன் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகள் தேறும். 75 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய reference-களில் ஒன்று இந்தப் பதிவு.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

பார்த்தவுடன் வழக்கம் போல என்ன இதில் படித்திருக்கிறோம் என்ன படிக்கவில்லை என்று கணக்கு ஆரம்பித்துவிட்டது. எனக்கு ஒரு எரிச்சலூட்டும், ஆனால் தீராத பிரச்சினை உண்டு. கதையை பற்றி இரண்டு வரி சொன்னால் தெரியும்; ஆனால் கதையின் தலைப்பு ஞாபகமே வராது.

250+ சிறுகதைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் பகுதி பகுதியாகத்தான் இவற்றைப் பற்றி எழுத முடியும். முதல் பகுதியில் அவர் சொல்லி இருக்கும் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள். தமிழின் முதன்மையான எழுத்தாளர் யார் என்றால் நான் புதுமைப்பித்தனைத்தான் ஒரு கணம் கூட யோசிக்காமல் கை காட்டுவேன். அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர் ஹெமிங்க்வே, மார்க்வெஸ், ஃபாக்னர், ஷா மாதிரி பிரபலமாக வேண்டும். தரமான மொழிபெயர்ப்பு, உலக அளவில் மார்க்கெடிங் வேண்டுமே! என்றாவது நான் பணக்காரன் ஆனால் இதுதான் முதல் வேலை…

கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் அழியாச்சுடர்கள் தளத்தில் கதையைப் படிக்கலாம். அன்றிரவு, வேதாளம் சொன்ன கதை, பால்வண்ணம் பிள்ளை ஆகியவை தவிர மிச்ச எல்லாம் அங்கே கிடைக்கிறது.

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்: இந்தக் கதையில் அவர் என்னதான் சொல்ல வருகிறார், கடவுள் எதற்கு வந்தார், இங்கே வந்து என்ன சாதித்தார், moral of the story என்ன, ஓ. ஹென்றி ட்விஸ்ட் எங்கே, சிறுகதைக்கு இருக்க வேண்டிய உச்சம் எங்கே, இது என்ன genre என்றெல்லாம் கேட்டால் பதில் கிடையாது. அட் லீஸ்ட் என்னிடம் கிடையாது. மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் விதிகளை உருவாக்குபவர்கள். இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! கதை பூராவும் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை, (பிள்ளை சிவ பெருமானிடம் சொல்கிறார் – என் பத்திரிகைக்கு ஒரு ஆயுள் சந்தா வாங்கிக்கங்களேன்! சிவ பெருமானின் கவுண்டர் – யார் ஆயுள்?) சரளமான நடை, கந்தசாமிப் பிள்ளையின் பெண்ணின் சித்தரிப்பு எல்லாம் சேர்ந்து இந்த கதையை உன்னதமான ஒன்றாக்குகிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு – நடராஜனையும் பார்வதியையும் தெரியாத அயல் நாட்டினர் இந்தக் கதையை முழுமையாக ரசிக்க முடிக்க முடியாது, எந்த மொழிபெயர்ப்பும் இதன் கலாசார ஆழத்தை இந்தியாவுக்கு வெளியே கொண்டு போக முடியாது என்பது மட்டும்தான்.
  2. கயிற்றரவு: மனித இனத்தின் பெரும் தத்துவக் கேள்வியை – நான் யார்? – கேட்கிறது இந்தக் கதை. ஆனால் எனக்கு பிரமாதமாக ரசிக்கவில்லை.
  3. செல்லம்மாள்: இறந்துகொண்டிருக்கும் மனைவி என்று சுருக்கமாக கதையை சொல்லிவிடலாம். அதற்கு மேல் கதையை விவரிக்க ஒரு ஜெயமோகன்தான் வர வேண்டும். “குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்” என்ற வரி இன்னும் பேசப்படுவது.
  4. சிற்பியின் நரகம்: நாலைந்து முறை படித்தும் எனக்கு இந்தக் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. கலை அழகு மிகுந்த சிற்பம் கடவுளாக மாறிவிட்டதில் சிற்பிக்கு ஏற்பட்ட இழப்பு என்று நினைக்கிறேன்.
  5. கபாடபுரம்: மிக நல்ல fantasy. இன்று கூட அந்த மாதிரி ஒரு சிறுகதையை யாரும் தமிழில் எழுதவில்லை.
  6. ஒரு நாள் கழிந்தது: நான் முதன்முதலில் படித்த புதுமைப்பித்தன் சிறுகதை இதுதான். பள்ளிப்பருவத்தில் துணைப்பாடமாக இருந்தது. இதை எல்லாம் விவரிக்கக் கூடாது, படித்துக் கொள்ளுங்கள்!
  7. அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது?ஜடாயு நினைவுபடுத்தினார், பிறகு பாஸ்கர் தந்த சுட்டியிலும் போய்ப் பார்த்தேன். எனக்கு இந்தக் கதை சுமார்தான். என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை. அலகிலா விளையாட்டு என்கிறாரா? எனக்கு இந்த லீலா வினோதம் எல்லாம் புரிவதில்லை. புரிந்தால் நான் ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன்? நான் மனக்குகை ஓவியங்கள் என்ற கதையில் வரும் மனிதன் கட்சி. 🙂
  8. சாமியாரும் குழந்தையும் சீடையும்: இதில் என்ன இருக்கிறது என்று ஜெயமோகன் இதைப் புகழ்கிறார்? அவரே கோனார் நோட்ஸ் எழுதினால்தான் புரியும்…
  9. காலனும் கிழவியும்: கதையின் நகைச்சுவை இதை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
  10. சாப விமோசனம்: இதுவும் அயல்நாட்டினர் புரிந்து கொள்வது கஷ்டம் என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லாதது. பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களை விட இந்த ஒரு கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. படித்தவர்களுக்கு கதையை விவரிக்க வேண்டியதில்லை, படிக்காத அதிர்ஷ்டக்காரர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  11. வேதாளம் சொன்ன கதை: என்ன சார் இதையெல்லாம் லிஸ்டில் சேர்க்கிறீர்களே?
  12. பால்வண்ணம் பிள்ளை: அவ்வளவு பிரபலம் ஆகாத, ஆனால் உலகத் தரம் வாய்ந்த சிறுகதை. அசூயைக்கு ஒரு கதை என்று தி.ஜா.வின் பாயசத்தைப் பற்றி சொல்லி இருந்தேன். வீம்புக்கு ஒரு கதை என்று இதை சொல்லலாம்.

அடுத்த முறை அவரைப் பார்த்தால் சண்டை போட வேண்டும் 🙂 – எப்படி மனித இயந்திரம், பொன்னகரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள் மாதிரி கதைகளை விடலாம்? இந்த லிஸ்டை அவர் இங்கே வருவதற்கு முன்பே பார்த்திருந்தால் அவர் இங்கே வந்திருந்தபோது கேட்டிருக்கலாம். எனக்கு நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை. பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது. பக்கம் பக்கமாக பேசினாலும் பதியாத கருத்தை ஆறு வார்த்தைகளில், ஒரே ஒரு வரியில் கற்பு எவ்வளவு செயற்கையான கருத்து என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்!

எஸ்.ரா. க.க. பிள்ளை, செல்லம்மாள் மற்றும் காஞ்சனை ஆகியவற்றை தன் தேர்வுகள் என்று சொல்கிறார். காஞ்சனை படிக்கக் கூடிய கதைதான்; அவர் எழுதிய ஒரே பேய்க்கதையோ? ஆனால் காஞ்சனையை நான் சிறந்த சிறுகதை என்று சொல்லமாட்டேன்.

சுஜாதா மனித எந்திரம் கதையைத்தான் நிறைய மாணிக்கங்களில் தலை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னுடைய anthology-யில் க.க. பிள்ளை, செல்லம்மாள், ஒரு நாள் கழிந்தது, சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை சிறுகதைகள் இடம் பெறும். மேலே சொன்ன சு. பிள்ளையின் காதல்கள், பொன்னகரம், மனித எந்திரம் ஆகியவை இடம் பெறும். எனக்கு புதிய கூண்டு என்ற கதை ஒரு tour de force. கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது.

சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதை சென்னை லைப்ரரி தளத்தில் முழுமையாக இல்லை. கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பராசக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை. உணர்ச்சிகரமான துன்பக்கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம். மிச்சத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். (கூடிய விரைவில் anthology-யை பதிக்க வேண்டும்.)

நண்பர் பாஸ்கர் சென்னை லைப்ரரி தளத்தில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இருக்கின்றன என்ற தகவலைக் கொடுத்திருக்கிறார். மகாமசானம் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகாமசானத்தை விட செல்லம்மாள் சிறுகதை பிடிக்கும். ஓரளவு ஒத்த தீம் உள்ள கதைகள். சுந்தர ராமசாமி மகாமசானம் கதையை தனக்கு எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. க.க. பிள்ளை, ஒ.நா. கழிந்தது ஆகியவற்றில் வரும் பெண் குழந்தைகளின் சித்தரிப்பைப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகனின் சிறுகதை தேர்வுகள்
புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும்