ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

மீள்மீள்பதிவு. குற்றவாளிகள் விடுதலை ஆகி இருப்பதால் மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவு இங்கே.

சட்டரீதியாகத்தான் விடுதலை நடந்திருக்கிறது. குறை எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இசைவில்லை. ரகோத்தமன் தன் புத்தகத்தில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். விடுதலை ஆனவர்கள் எல்லாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தெரிந்தேதான் ஈடுபட்டிருக்கிறார்கள். என் கருத்தில், they crossed the line in sand.


இது ஒரு மீள்பதிவு. முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை பற்றி சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருப்பதால் மீண்டும் பதித்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.

அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.

வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.

காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.

ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது.

ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.

ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.

புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:

  1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
  2. ராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
  3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
  4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.
  5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்

அரவிந்தன் நீலகண்டன்: கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

அரவிந்தன் நீலகண்டனுக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். அவரது அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்பது என் வருத்தம். நான் ஒரு முட்டாள் என்பது அவரது முடிவு.

அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்று நான் நினைப்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு முறை கி.ரா.வுக்கு பத்மஸ்ரீ விருது தர அ.நீ./ஜடாயு/ராஜமாணிக்கம் போன்றவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அ.நீ.யின் பதில் – கி.ரா.வுக்கு தகுதி இருந்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது தருவதில் தவறில்லை. பாவம் அ.நீ. கி.ரா.வின் இலக்கியத் தகுதி என்ன என்று இனி மேல்தான் தெரிந்து கொள்ளப் போகிறார். ஆனால் ஜடாயுவோ அவருக்கும் ஒரு படி மேல். என்ன மயிருக்கு இவருக்கு விருது தருவது என்றார்…

அதனால்தான் கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் என்னை வியப்படைய வைத்தது. இந்தப் புத்தகத்தில் அ.நீ. எழுதி இருப்பதோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன்!

முதல் கட்டுரை மதன்மோகன் மாளவியா பற்றி. 2014-இல் மாளவியாவுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. (பல ஆண்டுகள் முன் மறைந்த தலைவருக்கெல்லாம் பாரதரத்னா என்பது கேலிக்கூத்து என்பது வேறு விஷயம்) அப்போது தி.க. தலைவர் வீரமணி மண்ணுருண்டை மாளவியா என்று அவரை எள்ளி நகையாடி இருக்கிறார். ஏனென்றால் மாளவியா வட்ட மேஜை மாநாட்டுக்காக கடல் கடந்து சென்றபோது ஒரு மண்ணுருண்டையை எடுத்துச் சென்றிருக்கிறார். சாஸ்திரங்கள் கடல் கடந்து போவதைத் தடுக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த விதியை சமாளிக்க மாளவியா இப்படி செய்திருக்கிறார். அது முட்டாள்தனமான குறியீடாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அது அவரது நம்பிக்கை அல்லவா? அதில் அடுத்தவர் எப்படி மூக்கை நுழைக்கலாம்? நம்மூர் வெய்யிலில் கறுப்புச் சட்டை அணிவது புத்திசாலித்தனம்தானா? மாளவியா தலித் எதிர்ப்பாளர் என்று வீரமணி சொன்னாராம். ஆனால் மாளவியா ஹிந்து மகாசபையின் சிறப்பு மாநாட்டில் சொன்னாராம். (அ.நீ.யின் மொழிபெயர்ப்பு – தலித் என்ற வார்த்தையை மாளவியா பயன்படுத்தி இருக்க மாட்டார்…)

என் தலைப்பாகையை நான் ஹிந்து மதத்தை சார்ந்த என் தலித் சகோதரர்கள் காலடிகளில் ஏன் வைக்கக் கூடாது?… என் தலித் சகோதரர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடக் கூடாது என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

மாளவியாவை ஆசாரவாதியான ஹிந்துதான். ஆனால் அவரது கருத்துக்கள் மாறி இருக்கின்றன. அவர் பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்க்கவும் செய்தார், பின்னாளில் ஆதரிக்கவும் செய்தார். வேறென்ன வேண்டும்?

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே 1931-இலோ என்னவோ முசோலினியை சந்தித்தாராம். அ. மார்க்ஸ் இதைப் பற்றி குறையாக சொன்னாராம். 1936 வாக்கில் இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமிக்கும் வரை ஃபாசிசம் சர்வதேச அளவில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை. முசோலினி – ஏன் ஹிட்லர் கூட – அவரது நாட்டை சரியான திசையில் நடத்திச் செல்கிறார் என்ற எண்ணம் பொதுவாக சில வருஷங்களாவது இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மூஞ்சே முசோலினியை சந்தித்ததில் என்ன தவறு? அ.நீ. காந்தியே 1931-இல் முசோலினியை சந்தித்தாரே என்கிறார். சரிதானே?

சவர்க்கார் மன்னிப்பு கேட்டார் என்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டை அவ்வப்போது கேட்டிருக்கலாம். என்ன சிறையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? அதை விட வெளியே பயனுள்ள காரியம் எதையாவது செய்ய வேண்டுமென்றால் இந்த மாதிரி உத்திகளை பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை. போராடும்போது சிறைவாசம் என்பது அரசின் மனச்சாட்சியை – அதாவது பொதுப்புத்தியை – உறுத்தவோ, இல்லை சிறை சென்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து அரசுக்குப் பிரச்சினை எற்படுத்தினாலோ மட்டுமே பயனுள்ள உத்தி. சவர்க்காரின் சிறைவாசத்தால் அவருக்கு மட்டுமே பிரச்சினை, பிரிட்டிஷ் அரசுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அதனால் அவர் வெளியே வந்து வேறு ஏதாவது முறையில் பங்களிக்க முயன்றிருக்கிறார். அதனால் அவரது தியாகத்தை குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? இதெல்லாம் கேனத்தனமான பேச்சு. அதைத்தான் அ.நீ.யும் விவரிக்கிறார்.

இவை உதாரணங்கள் மட்டுமே. ஏறக்குறைய எல்லா கட்டுரைகளுடனும் முழுமையாக உடன்படுகிறேன். என் கண்ணில் அ.நீ., ஜடாயு போன்றவர்களின் முக்கியத்துவமே அரசியல் நிலைப்பாடுகளால் வேண்டுமென்றேயோ இல்லை உணராமலோ இப்படிப்பட்ட வாதங்களை முன் வைப்பவர்களை வன்மையாக மறுப்பதுதான். ஆனால் அவர்களும் இப்படியே அரசியல் நிலைப்பாட்டால் இதே போன்ற வாதஙகளை எதிர்ப்பக்கத்திலிருந்து முன் வைப்பதுதான் சோகம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

சீவலப்பேரி பாண்டி

சீவலப்பேரி பாண்டி திரைப்படமாகத்தான் பார்த்திருக்கிறேன். சுமார்தான். சமீபத்தில் எங்கோ புத்தகத்தைப் பார்த்தபோது இது புத்தகமாக வேறு வந்ததா என்று புரட்டிப் பார்த்தேன். பதிவாக எழுத ஒரே காரணம்தான். புத்தகத்தை விட எனக்கு புத்தகம் உருவான விதம் சுவாரசியமாக இருக்கிறது.

ஜூனியர் விகடனில் தொடராக வந்திருக்கிறது. எப்போதுமே இந்த மாதிரி “கள்ளபார்ட்” ஆளுமைகளுக்கு ஒரு கவர்ச்சி உண்டு. அது ஜம்புலிங்க நாடாராகட்டும், சம்பல் கொள்ளைக்காரர்களாகட்டும், ஃபூலான் தேவியாகட்டும், ஆட்டோ சங்கராகட்டும், வீரப்பனாகட்டும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இந்த பாண்டியைப் பற்றி சௌபா எப்படி கேள்விப்பட்டார்? ஜூனியர் விகடன் ஆசிரியர் இது ஏதோ பிரபலமாகாத, யாரம் கேள்விப்டாத, வெளியில் தெரியாத் கிராமத்து வெட்டு குத்து கொள்ளை கொலை, இதை எல்லாம் யார் படிப்பார்கள் என்று கேட்கவில்லையா? எப்படியோ பதிவாகி இருக்கிறது, வெற்றி பெற்றிருக்கிறது, திரைப்படமாக மாற்றினால் ஓடும் என்ற அளவுக்கு பிரபலம் ஆகி இருக்கிறது.

சௌபாவின் அணுகுமுறையை பாராட்ட வேண்டும். அவர் பாண்டிக்காக வாதிட்ட வக்கீல்களைப் பார்த்திருக்கிறார், விவர்ம் சேகரித்திருக்கிறார். வக்கீல்களில் ஒருவர் ரத்னவேல் பாண்டியன். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்.

பாண்டியின் வரலாறு என்ன? யாரோ தூண்டிவிட்டதால் பெரிய மனிதர் ஒருவரை கொலை செய்கிறார். சிறை. ஆனால் தூண்டிவிட்டவர்கள் தன் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டார்கள் என்று தெரிந்து தப்பி இருக்கிறார். கொடைக்கானல் பக்கத்தில் தலைமறைவு வாழ்வு. அவ்வப்போது சொந்த ஊர் பக்கம் வந்து திருடுவது. தற்செயலாக தன் மனைவியை “கொன்றுவிடுகிறார்”. அவரைத் தேடி அலையும் காவல்துறை. கடைசியில் பிடிக்கிறார்கள். அவர்தான் என்கவுண்டரில் சுடப்பட்ட முதல் ஆளாம். (அப்படி என்றால் ஜம்புலிங்க நாடார், மலையூர் மம்பட்டியான் எல்லாம் சுடப்பட்டு இறகக்வில்லையா?)

இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

சி. சுப்ரமணியத்தின் “திருப்புமுனை” – படிக்க விரும்பும் புத்தகம்

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)

என்னை fascinate செய்யும் தலைவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான். சி. சுப்பிரமணியம் அவர்களில் ஒருவர். இன்று மறக்கப்பட்ட தலைவர்தான், ஆனால் ஒரு 20 வருஷத்துக்காவது அவர் தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்.

அவர் எழுதிய “நான் சென்ற சில நாடுகள்” என்ற புத்தகம் கிடைத்தது. அதனால்தான் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன். 1960-இல் காமராஜ் மந்திரிசபையில் அவர் மந்திரியாக இருந்தபோது ஐரோப்பிய நாடுகளுக்கு – இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து – போய்வந்திருக்கிறார். எஸ்.எஸ். வாசன் அவரை வற்புறுத்தி தன் பயண அனுபவங்கள் விகடனில் எழுத வைத்திருக்கிறார்.

சி.எஸ். அப்போது நிதி, கல்வி இரண்டு துறைகளுக்கும் அமைச்சர். ஆனால் தொழிற்சாலை, விவசாயப் பண்ணை என்று சுற்றிப் பார்த்திருக்கிறார், நம்மூரில் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார். அவற்றை விவரமாக எழுதி இருக்கிறார். அங்கும் உல்லாசமாய் நாலு ஊர் சுற்றினோம் என்று இல்லாமல் வேலையைப் பற்றி யோசித்திருக்கிறார். அதுவே இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த அம்சம். இப்போது வெளிநாடு போகும் மந்திரிகள் இது மாதிரி எல்லாம் சிந்தித்து நேரத்தை வீணடிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். 🙂

வழக்கமான சில அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள். சுத்தத்தைப் பேணும் ஐரோப்பியர்கள், ஆரம்பப்பள்ளி ஒன்றை அமைக்க அன்றைய பணத்தில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் செலவு என்று கேட்டதும் அதில் தமிழகத்தில் ஒரு கல்லூரியைக் கட்டிவிடலாமே என்ற எண்ணம், அன்றைய முன்னோடி தொழில் நுட்பமான தொலைக்காட்சியைக் கண்டு இது நல்லதா கெட்டதா என்று குழப்பம்.

சி.எஸ். தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். சில பகுதிகளை இங்கே பதித்திருக்கிறார்கள் – பகுதி 1, பகுதி 2.  திருப்புமுனை என்று பேராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

முல்லைப் பெரியார் பற்றி இத்தனை பிரச்சினை இருக்கும் இன்றைக்கு சி. சுப்பிரமணியம் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தை கேரளத்தின் ஒத்துழைப்பை திறமையாகப் பெற்று செயல்படுத்திய இந்த சம்பவம் “அந்தக் காலம் மாதிரி வருமா” என்று ஏங்க வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்திலிருந்து சில பகுதிகள் – பகுதி 1, பகுதி 2
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைப் பற்றி சில பதிவுகள்
காமராஜைப் பற்றி சில பதிவுகள்

நால்வர்: திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சிவா, பாரதி

வெ. சாமிநாத சர்மா எழுதிய அருமையான புத்தகம் நான் கண்ட நால்வர் (1959) – திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதி இவர்கள் நால்வரோடும் தன் பழக்கத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். அவரது அனுபவங்கள் என்ற குறுகிய ஆடியிலேயே (lens) இவர்கள் நால்வரின் குணங்களை நன்றாகப் புரிய வைத்துவிடுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அவர் கண்ணில் திரு.வி.க. சீலர்; வ.வே.சு. ஐயர் வீரர்; சிவா போராளி; பாரதி? கொஞ்சம் பித்துப் பிடித்த கவிஞர்!

சர்மாவின் நடை, அதிலிருக்கும் வேகம், எளிமை, உண்மை (genuineness) எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானவை. அவை இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.

சர்மாவுக்கு ஒரு குறை. வ.உ.சி. இவர் வேலை பார்த்த அலுவலகத்துக்கு அடிக்கடி வருவாராம். ஆனால் அவரோடு நெருங்கிப் பழக முடியவில்லையாம். அவரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்.


சர்மாவுக்கு திரு.வி.க. குரு. பத்திரிகையாளராக, எழுத்தாளராக ஆக்கியவர் அவர்தான். தேசபக்தன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்து பழக்கம் ஆரம்பிக்கிறது. திரு.வி.க.வை ஒரு வார்த்தையில் விவரித்துவிடுகிறார் – சீலர்! வேலைகளை இழுத்துப் போட்டு செய்து திரு.வி.க.வின் அன்பைப் பெற்றிருக்கிறார். திரு.வி.க.வால் கண்டிப்பாக பேச முடியாது, அதற்கு சர்மாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சர்மாவே சில சமயம் திரு.வி.க. எழுத வேண்டிய தலையங்கம், பத்திகள் எல்லாவற்றையும் எழுதிவிடுவாராம் – அதுவும் திரு.வி.க.வின் பாணியிலேயே! திரு.வி.க. சர்மா குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார், தான் சாதிப்பதைக் கூட வெளியில் சொல்லிக் கொள்வதில்லை என்று வருத்தப்படுவாராம். திரு.வி.க.வோடு மாலை நேரத்தில் ராயப்பேட்டையிலிருந்து கடற்கரைக்கு லாயிட்ஸ் ரோடு வழியாக நடந்து போவார்களாம்; (பிற்காலத்தில் மாம்பலத்துக்கு நடை) அந்த நடையும் பேச்சும் சர்மாவுக்கு பொன்னான தருணங்கள்.

சர்மாவுக்கு திரு.வி.க. மேல் இருப்பது ஏறக்குறைய பக்தி. ஆனால் திரு.வி.க. சர்மாவோடு தன்னை நெருக்கமாக உணரவில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏனென்றால் திரு.வி.க.வின் தன்வரலாறான வாழ்க்கைக் குறிப்புகள் புத்தகத்தில் சர்மாவின் பேர் ஓரிரு பக்கத்தில் வந்திருந்தால் அதிகம்.


தேசபக்தன் பத்திரிகையிலிருந்து திரு.வி.க. விலகி நவசக்தி என்ற பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு பதிலாக வ.வே.சு. ஐயர் தேசபக்தன் பத்திரிகை ஆசிரியராக வந்திருக்கிறார். சர்மா திரு.வி.க. பத்திரிகையில் சேரப் போகிறேன் என்றதும் ஐயர் முதலியாரே போயிருக்கக் கூடாது, இப்போது நீங்களும் விலகினால் எப்படி, நான் முதலியாரோடு பேசிக் கொள்கிறேன் என்று இவரை நிறுத்திக் கொண்டாராம். திரு.வி.க. முடிந்த வரையில் தமிழில் எழுதுவார் என்றால் ஐயர் வடமொழி கலந்து எழுதுவாராம். (ஆனால் ஆங்கிலத்தை அறவே தவிர்ப்பாராம்.). சர்மா ஐயர் பாணியில் அவ்வப்போது தலையங்கம், பத்தி எழுதுவாராம். திரு.வி.க. காலத்தில் அவர் எழுதியதை திரு.வி.க.வே எழுதியது என்று படிப்பவர்களை நினைக்க வைத்தது போலவே இப்போது ஐயரே எழுதியது என்று நினைக்க வைத்தாராம்.

ஐயருக்கு ஆசிரியர் வேலைக்கு என்ன சம்பளம்? மாதம் 150 ரூபாய்! அது அப்போது பெரிய பணம்தான் என்று நினைக்கிறேன். ஐயர் சரித்திர நாவல்கள் பலவற்றை எழுதி தமிழர்களுக்கு வீரம் ஊட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குத்தான் சிறுகதைகள் எழுதிப் பழகிக் கொண்டாராம். ஐயர் கறாரானவரும் கூட. சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் நாடகத்துக்கு இது நாடகத்துக்கு நான் வைத்திருக்கும் வரையறைக்கு சரிப்படவில்லை, அணிந்துரை தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாரம். தனக்கு மிக நெருக்கமான பாரதியாரின் பாடல்களுக்கு – கண்ணன் பாட்டு – எழுதிய அணிந்துரையிலேயே நொட்டை சொல்லி இருக்கிறார் என்கிறார்.

1923-இல் காகிநாடா காங்கிரசில் ஐயர் பூரண ஸ்வராஜ்யமே நமது குறிக்கோள் என்று தீர்மானம் கொண்டு வந்தாராம். ஆனால் ஐயரின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட விழவில்லையாம். நேரு லாகூரில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பூரண ஸ்வராஜ்யத் தீர்மானம் ஆறு வருஷங்களுக்குப் பின்னால்தான் நிறைவேறி இருக்கிறது.

ஐயருக்கு ஜாதி ஆசாரமெல்லாம் கிடையாது, ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பார் என்கிறார். குருகுல விவகாரம் மிகைப்படுத்தப்பட்டது என்கிறார். கட்டுமஸ்தாக இருப்பார், தான் எழுதாத கட்டுரைக்கு பொறுப்பேற்று சிறை சென்றபோதுதான் அவர் உடல் நலம் கொஞ்சம் கெட்டது என்கிறார். ஐயர் அவருக்கு அடுத்த குரு.


சிவா மயிலாப்பூரில் இவர் வீட்டுக்கு அருகேதான் வாழ்ந்திருக்கிறார். அவ்வப்போது தேசபக்தன் அலுவலகத்துக்கு வந்து ஐந்து பத்து வாங்கிக் கொள்வாராம். அதுவும் எப்படி? திரு.வி.க.வை விளக்கெண்ணெய் முதலியார், வழவழா முதலியார் என்றுதான் அழைப்பாராம். உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்வாராம். திரு.வி.க.வும் எப்போதும் மறுத்ததில்லையாம். அன்னி பெசண்டுக்கு திரு.வி.க.வும் சர்மாவும் தந்த ஆதரவை வெறுத்தாராம். அடுத்த நாட்டுக்காரி நமக்கு விடுதலை வாங்கித் தரமுடியாது என்று நினைத்தாராம். சர்மா எப்போதும் “அன்னை பெசண்ட்” என்றுதான் எழுதுவாராம், அது சிவாவுக்கு கடுப்பைக் கிளப்புமாம். “அன்னிய பெசண்ட்” என்று எழுதும் என்பாராம். சிவா வறுமை, நோய் என்று படாதபாடு பட்டிருக்கிறார், ஆனால் பத்திரிகை, எழுத்து, போராட்டம், சிறை என்று சோர்வே இல்லாமல் உழைத்திருக்கிறார்.


பாரதியும் அவ்வப்போது தேசபக்தன் அலுவலகத்துக்கு வருவார். சர்மாவின் பத்திகளைப் படித்துவிட்டு எழுதியவர் இவரா என்று வியந்தாராம். பாரதியின் கவித்துவம் அப்போது தான் உட்பட்ட பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை என்கிறார். வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சிவா போன்ற வெகு சிலரே அவரது மேதமையை உணர்ந்திருந்தார்களாம். மறைவுக்குப் பிறகுதான் அவர் ஒரு படிமம் (icon) ஆனார் என்கிறார். அருமையாகப் பாடுவாராம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

வ.ரா.: தமிழ் பெரியார்கள்

வ.ரா. என்று பொதுவாக அறியப்படும் வ. ராமஸ்வாமி ஐயங்கார் 1943-இல் எழுதிய புத்தகம். அன்றைய பிரமுகர்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது.

வ.ரா. தமிழ் பெரியார்கள் என்று போட்டிருக்கும் பட்டியலே மிக சுவாரசியமானது. ராஜாஜி, ஈ.வெ.ரா., திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், ஜார்ஜ் ஜோசஃப், சத்யமூர்த்தி, வ.உ.சி. எஸ்.எஸ். வாசன், கே.பி. சுந்தராம்பாள், என்எஸ்கே, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.

யார் யார் இல்லை என்பது அதை விட சுவாரசியமானது. பாரதியோடு நெருக்கமாகப் பழகியவர், ஆனால் பாரதியைக் காணோம். உ.வே.சா. இல்லை. வ.ரா. மணிக்கொடிக்கு ஆசிரியராக இருந்தவர், ஆனால் புதுமைப்பித்தனைக் காணோம். வ.வே.சு. ஐயர் இல்லை. தியாகராஜ பாகவதர் இல்லை. கல்கி இல்லை. அரியக்குடி, எம்.எஸ்., ஜி.என்.பி., ராஜரத்தினம் பிள்ளை மாதிரி பெரிய பாடகர், இசை வல்லுனர் யாருமில்லை. பாலசரஸ்வதி மாதிரி நடனக் கலைஞர் இல்லை. ஒரு வேளை கலைக்கு கே.பி.எஸ்., என்எஸ்கே இரண்டு பேர் போதும் என்றூ நினைத்தாரோ? முத்துலக்ஷ்மி ரெட்டி மாதிரி சமூக சீர்திருத்தவாதி இல்லை. ராமானுஜன், சர் சி.வி. ராமன், ஜி.டி. நாயுடு, அண்ணாமலை செட்டியார், டி.வி. சுந்தரம் ஐயங்கார் இல்லை.

ஒரு வேளை அன்று உயிரோடு இருந்தவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொண்டாரோ? ஆனால் பட்டியலில் இருக்கும் வ.உ.சி. 36-இலேயே போய்விட்டார். (மிச்ச அனைவரும் 43-இல் இருந்தார்கள்.) புதுமைப்பித்தன், பாகவதர், கல்கி, எம்.எஸ்., அரியக்குடி, ஜி.என்.பி., ராஜரத்தினம் பிள்ளை, சி.வி. ராமன், ஜி.டி. நாயுடு எல்லாரும் இருந்தார்களே?

அவருடைய வார்த்தைகளிலேயே: ஜன சமூகத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள் தாங்கள் அறிந்தும் செய்யலாம்; அறியாமலும் செய்யலாம். அவர் கண்ணில் என்எஸ்கேயும் கேபிஎஸ்ஸும் ஜன சமூகத்தின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள், ஆனால் கல்கியும் ஜி.டி. நாயுடுவும் புதுமைப்பித்தனும் பாரதியும் உ.வே.சா.வும் மாற்றவில்லை. அது சரி, அவர் பட்டியல், அவர் கணிப்பு, அவர் இஷ்டம்.

வ.ரா.வின் பலம் கோட்டோவியம் போல சுருக்கமாக எழுதி குணாதிசயத்தை புரிய வைத்துவிடுவது. நடைச்சித்திரம் என்ற புனைவில் நான் முதன்முதலாக இதைப் பார்த்தேன். நம் கண்ணில் தினமும் படும் வேலைக்காரி, சித்த மருத்துவர், பியூன், வண்ணார வீரம்மாள் ஆகியோரை கண் முன்னால் கொண்டு வந்தார். இத்தனைக்கும் நான் படித்தபோதே அவர் காட்டியவர்கள் மறைந்து கொண்டிருந்தனர், ஆனால் எனக்கும் அவர் காட்டும் சித்திரம் புரிந்தது. அதே திறமையை வைத்து இந்தப் பிரமுகர்களையும் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார்.

அவரது கட்டுரைகள் புகழ்மாலைகள் அல்ல. தனக்குத் தோன்றியதை உண்மையாக எழுதி இருக்கிறார். ராஜாஜியிடம் தன்னம்பிக்கை குறைவு, எல்லாரையும் சந்தேகப்படுவார் என்கிறார். ஈ.வெ.ரா. வைதீகத்தை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு சலாம் போடுகிறாரே என்று வருந்துகிறார்.

புத்தகத்தின் மின்பிரதி இணையத்தில் கிடைக்கிறது..


ராஜாஜியைப் பற்றி அவரது கணிப்பு:

காலத்தை காந்தி எதிர்த்துப் போராடி முறியடித்ததைப் போல ஆச்சாரியாரால் அவ்வளவாக முடியாது. அவ்வளவு தன்னம்பிக்கை ஆச்சாரியாருக்கு இயற்கையாகக் கிடையாது. அதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும்…

காந்தி மகா மேதாவி; ஆச்சாரியார் மகா புத்திசாலி. காந்தியின் மூளை வேறு ரகம்; ஆச்சாரியாரின் மூளை வேறு வகை. மேதை வேறு; புத்தி வேறு. காந்திக்கு தனது சொந்த சக்தியில் மலையை நகரச் செய்யும் நம்பிக்கை உண்டு; பிறர் சக்தியிலும் காந்திக்கு அளவற்ற நம்பிக்கை. ஆச்சாரியருக்கு தம்மிடத்தில் சிறிது சந்தேகம்; பிறரிடத்தில் எல்லையற்ற சந்தேகம்… காந்தி சாஸ்திரம்; ஆச்சாரியர் சாஸ்திரி. சாஸ்திரம் காலத்துக்கு கட்டுப்பட்டதல்ல, சாஸ்திரம் வளரும். சாஸ்திரியோ சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். சாஸ்திரிக்கு சாஸ்திரம்தான் பிரதானம்.

ராஜாஜி தொட்டாற்சுருங்கி, உணர்ச்சிகள் இல்லாதவர் என்று பேர் வாங்கியவராம். ஆனால் கனிந்த உள்ளமாம், அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாராம். வரதராஜுலு நாயுடுவுக்காக ஒரு முறை இவரும் ஜார்ஜ் ஜோசஃபும் வாதாடியபோது கேஸ் தோற்றுவிட்டது. ராஜாஜி நாயுடுவுக்கு சிறையா என்று அழுதிருக்கிறார். ஆனால் ஒரு நிமிஷம்தான். ஜார்ஜ் ஜோசஃப் இதை நினைவு கூர்ந்திருக்கிறாராம். திடசித்தர். சத்யாகிரகத்தில் ஈடுபட்டு வக்கீல் தொழிலை கைவிட்ட முதல் சில நாட்களில் ஒரு கட்சிக்காரர் மூன்று நாள் வாதாடுங்கள் 3000 ரூபாய் தருகிறேன் என்று கெஞ்சி இருக்கிறாராம். மறுத்துவிட்டார். இதை வ.ரா.வே நேரில் பார்த்திருக்கிறார். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் காட்டிய தலைமைப் பண்பை பெரிதும் சிலாகிக்கிறார்.

ஈ.வெ.ரா.வின் உள்ளத்தில் தைரியத்தையும் தியாகத்தையும் தூண்டியவர் ராஜாஜி என்றாலும் ஈ.வெ.ரா.வின் முதல் குரு வரதராஜுலு நாயுடுதானாம். ஈ.வெ.ரா.வின் பேச்சில் உண்மை இருக்கும், அது காட்டாற்று வெள்ளம் போல கொஞ்சம் கரடுமுரடாகப் பொழியும் என்கிறார். வ.ரா.வின் கணிப்பு

செய்ய வேண்டும் என்று தோன்றுவதை தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் தன்மைக்கும் தேசத்தொண்டுக்கும் சம்பந்தமே இல்லை என்பது அவர் கொள்கை.

உள்நாட்டு வைதீகத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அயல் நாட்டு ஏகாதிபத்தியத்தோடு நாயக்கர் உறவாடுவதைக் கண்டு நான் மிகுதியும் வருந்துகிறேன்.

திரு.வி.க.வின் தமிழைப் புகழ்கிறார். ஈ.வெ.ரா. காட்டாறு என்றால் இவர் தென்றல் போலப் பேசுவாராம். திரு.வி.க. சாது. யாரையும் சுலபத்தில் கடிந்து பேசிவிடமாட்டார். அதனால் எப்போது தர்மசங்கடத்தில்தான் இருப்பாராம். ராஜாஜிக்கும் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் அதிகாரப் போட்டி இருந்தபோது “ஐயங்கார் நல்லவர், ஆச்சாரியார் பெரியவர். யாரை தள்ளுகிறது, யாரைக் கொள்கிறது” என்று குழம்பினாராம். இப்படி குழம்பிக் கொண்டே இருப்பதால், ஓயாத சிந்தனைதானாம், காரியத்தில் இறங்கமாட்டாராம்.

வ.உ.சி. சிறை சென்ற பிறகு அன்றைய கவர்னர் பெண்ட்லண்ட் பிரபு ஏதோ அவமரியாதையாக பேசி இருக்கிறார். அரசு எதிர்ப்பு என்பது அப்போது வெற்றிடம்தான். வரதராஜுலு நாயுடுதான் ஏதோ துணிந்து எதிர்த்திருக்கிறாராம். அதுதான் அவர் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்ததாம். மிகச் செறிவாகப் பேசுவாராம். அவர் மீது பிற தலைவர்களுக்கு கொஞ்சம் பொறாமை உண்டாம். திராவிட இயக்கம் வகுப்புவாதத்தை வளர்க்கிறது என்று அதை எதிர்த்தாராம். பிற்காலத்தில் ஹிந்து மஹாசபாவில் சேர்ந்திருக்கிறார்.

டி.எஸ்.எஸ். ராஜன் டாக்டர். பர்மாவில் பணி புரியும்போது வெள்ளைக்கார மேலதிகாரி பிரச்சினை செய்ய ரோஷப்பட்டு இங்கிலாந்துக்கு சென்று மேல்படிப்பு படித்திருக்கிறார். அங்கே சவர்க்கார், வ.வே.சு. ஐயர், மதன்லால் திங்ராவோடு பழக்கம். இந்தியா திரும்பிய பிறகு வெற்றிகரமாக தொழில் நடத்தி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் சிறை, உடல்நிலை பதிப்பு. ராஜன் முரடராம், ஆனால் ராஜாஜிக்கு கட்டுப்பட்டு நடப்பாராம். ஆனால் அவரிடமிருந்து விலகியும் இருந்திருக்கிறார். ஆனால் ராஜாஜி முதல்வரானபோது ராஜனை அமைச்சராக்கி இருக்கிறார்.

ஜார்ஜ் ஜோசஃப் வக்கீல். மலையாளி, ஆனால் வாழ்ந்தது மதுரையில். மதுரை மக்கள் இவரை ரோஜாப்பூ துரை என்று அழைப்பார்களாம். ராஜாஜியும் இவரும்தான் காங்கிரசின் வேலைத்திட்டத்தை உருவாக்கினார்களாம். அவரது மனைவி (பெயர் தெரியவில்லை) இவரையே மிஞ்சினவராம். காந்தி 1919-இல் ரௌலட் சட்ட மறுப்பு இயக்க வேலையாக மதுரையில் இவர் வீட்டில் தங்கி இருக்கிறார். சிறை செல்ல யாரெல்லாம் தயார் என்று பட்டியல் போட்டிருக்கிறார்கள். ஜார்ஜ் ஜோசஃப் சேரவில்லை. முதலில் சேர்ந்தது அவர் மனைவி! மனைவி சிறை செல்கிறேன் என்று கையெழுத்து போட்டதால்தான் ஜோசஃப்பும் போட்டாராம். வைக்கம் போராட்டத்தில் இவரும் கலந்துகொண்டிருக்கிறார். பின்னாளில் காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். காந்தி ஜாதிக் கொடுமைகளை எதிர்த்தாலும் வைதீக மனப்பான்மை காங்கிரசில் தலை தூக்கி இருக்கிறது என்று கருதி விலகினாராம். நீதிக் கட்சியில் சேர்ந்து அதற்கு நல்ல ஒரு செயல் திட்டத்தை வகுக்க முயற்சித்தார், ஆனால் தோல்வி என்கிறார் வ.ரா.

சத்தியமூர்த்தி தர்க்கம் புரிவதில் ராஜாஜிக்கு இணையானவர்; அரசியல் அறிவில் நேருவுக்கு சமமானவர்; ஈ.வெ.ரா. போல பிரசங்க மழை பொழியக்கூடியவர்; வரதராஜுலு நாயுடு போல அனுபவம் மிக்கவர்; இலக்கிய ரசனை மிகுந்தவர். சிறந்த தேசபக்தர். சட்டசபை நிபுணர். ஆனால் அவரிடம் ஏதோ குறை இருக்கிறது, அவரை மக்கள் முழுமையாக நம்பவில்லை என்கிறார் வ.ரா. அவர் தீர்க்கதரிசனத்துடன் பேசினாலும் அவர் சொல்வது எடுபடவில்லையாம். எல்லாரிடமும் திட்டு வாங்குவாராம், ஆனால் மனம் சோர்ந்ததே இல்லையாம். காந்தியின் முக்கிய பங்களிப்பு சாதாரண மக்களிடம் பெரும் எழுச்சியை கிளப்பியதுதான், காந்தி அரசியல் நிபுணர் அல்லர் என்று கருதினாராம். வ.ரா. சத்தியமூர்த்தியையே ஏன் நீங்கள் சொல்வது எடுபடவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு சத்தியமூர்த்தி நான் பணக்காரன் இல்லை, என்னைப் போல தரித்திரன் நேர்மையானவனாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சொன்னாராம். சத்தியமூர்த்தி காந்தி, ராஜாஜி போன்றவர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் படாடோபமாகத்தான் இருப்பாராம். படாடோபம் என்றால் லட்சாதிபதி வாழ்க்கை அல்ல, தொழில் என்று ஒன்று இல்லாமல் நன்றாக உடுத்தி உண்பதே அந்த்க் காலத்தில் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சத்தியமூர்த்தியே ஒரு முறை எப்போதாவது பணம் வாங்கிக் கொண்டு சட்டசபையில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறேன், எங்கே கூட்டம், தேர்தல் என்றால் சத்தியமூர்த்தி வர வேண்டி இருக்கிறது, எந்தத் தொழிலையும் செய்ய நேரம் இல்லை, என் குடும்பமும் சாப்பிட வேண்டாமா என்று சொல்லி இருக்கிறார்.

வ.உ.சி. ஒரு காலத்தில் தூத்துக்குடியின் முடிசூடா மன்னராக விளங்கினாராம். தமிழ்நாட்டில் அக்காலத்தில் அதிகார வர்க்கம் கண்டு நடுங்கியது அவர் ஒருவரைத்தான் என்கிறார் வ.ரா. வ.உ.சி. உணர்ச்சிக் களஞ்சியமாம். சிறைவாசம் முடிந்த பிறகு பாரதியையும் அரவிந்தரையும் சந்திக்க பாண்டிச்சேரி வந்தாராம். அப்போது வ.ரா.வும் அங்கே இருந்திருக்கிறார். அரவிந்தர் ஏறக்குறைய அகதி. பாரதி வெறும் அகதி அல்லர், ஏழை அகதி. வ.உ.சி. சிறையில் படாதபாடு பட்டு திரும்பிய ஏழை. வ.ரா.வின் சொற்களில்:

அந்த சந்திப்பில் விசேஷம் என்னவென்றால் வானைப் பிளக்கும் நகைப்பு. இவ்வளவு சிரிப்பு இவர்களுக்கு என்னாமாய் இருக்க முடியும் என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன்… தன்னம்பிக்கையும் நகைச்சுவையும் ஒரு நாளும் பெரியார்களிடமிருந்து அகலவே அகலாது…

எஸ்.எஸ். வாசன் 1930-இல் சாதாரண நிலையில்தான் இருந்தாராம். 1943-இல் கோடீஸ்வரர் ஆகிவிட்டாராம். அவரை கோடீஸ்வரனாக்கியது விகடனாகத்தான் இருக்க வேண்டும். இருபது லட்சம் முதல் போட்டு திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தாராம். 1943 வரைக்கும் ஓரிரு திரைப்படங்கள்தான் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். குதிரைப் பந்தயத்திலும் நிறைய ஜெயித்தார் போலிருக்கிறது. அவரை கோடீஸ்வரனாக்கியது பரிசுப் போட்டிகளும் குதிரைப்பந்தயமும்தான் என்று மக்கள் சொல்வார்களாம். வாசன் மகா பிடிவாதக்காரராம். இதை வ.ரா. சொல்லவில்லை, ஆனால் வாசன் கோடீஸ்வரர், கல்கி லட்சாதிபதியாகக் கூட இருந்திருக்க மாட்டார். அது அவர்கள் பிரிவுக்கு அடிகோலி இருக்கும் என யூகிக்கிறேன்.

கே.பி. சுந்தராம்பாளை கிட்டப்பா மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கிட்டப்பா இறந்ததும் கேபிஎஸ் விதவைக்கோலம் பூண்டார். எப்போதும் கிட்டப்பாவை “எங்க ஆத்துக்காரர்” என்றுதான் குறிப்பிடுவாராம். வ.ரா. பகிரங்கமாக கிட்டப்பாவை தன் கணவர் என்று சொல்கிறாரே என்று வியந்து அவரிடமே உங்களுக்கு திருமணம் ஆயிற்றா என்று விசாரித்திருக்கிறார். கேபிஎஸ் நிதானமாக இல்லை என்று பதிலளித்திருக்கிறார். அன்றைய சமூகம் அவர்கள் உறவை எப்படி பார்த்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அப்படி இருந்தும் கேபிஎஸ்ஸை தன் பட்டியலில் இணைத்தற்கு வ.ரா.வுக்கு ஒரு சபாஷ்!

கிட்டப்பாவை சந்திப்பதற்கு முன்பே கேபிஎஸ் பிரபல ஸ்திரீபார்ட் நடிகையாம். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்ற ராஜபார்ட் கிடைக்கவில்லையாம். கிட்டப்பாவைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் பலரும் கிட்டப்பாவுக்கு முன் உன் பாட்டு எடுபடாது என்று கேபிஎஸ்ஸை எச்சரித்திருக்கிறார்கள். கேபிஎஸ் “கிட்டப்பா கந்தர்வனாயிருக்கலாம்; ஆனால் சுந்தராம்பாள் அவருக்கு சளைத்தவளல்ல” என்று பதில் சொன்னாராம். முதல் சந்திப்பிலேயே காதலாம். கிட்டப்பா இறந்ததும் விதவைக்கோலம் என்றால் எப்படிப்பட்ட காதல் என்று விவரிக்கத் தேவையில்லை.

என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவையை முழுதாக உணர்ந்தவர் என்கிறார். அவர் இருந்தால் திரைப்படம் ஓடும் என்ற நிலை இருந்திருக்கிறது. அவர் செய்யும் கொனஷ்டைகள், மற்றவரைப் புண்படுத்தாத நகைச்சுவைக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. இன்று என்எஸ்கேயின் திரைப்படங்களைப் பார்த்தபோது அவர் அடைந்த வெற்றியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வெகு அபூர்வமாகவே சிரிப்பு வருகிறது.

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பாரதிக்குப் பிந்தைய காலத்தின் மூன்று சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று வ.ரா. கணிக்கிறார். (மற்ற இருவர் பாரதிதாசன், தேசிகவிநாயகம் பிள்ளை) அவரது கவிதைகளை வெகுவாக சிலாகிக்கிறார். (எனக்கு இவர் கவிதைகள் எதுவும் தேறவில்லை என்பதை பதிவு செய்கிறேன், ஆனால் கவிதைகளின் கற்பூர வாசனை எனக்குத் தெரியுமா என்பது எனக்கே சந்தேகம்.). மிகச் சிறந்த பேச்சாளராம். சாது, ஆனால் சண்டைக்குப் போனால் விடமாட்டார் என்கிறார்.

இன்னும் நிறைய பேரைப் பற்றி எழுதி இருக்கலாமே என்று தோன்ற வைத்த புத்தகம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

டி.எஸ்.எஸ். ராஜன்

வரவர எனக்கு சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும் காந்தி, நேரு, படேல், போஸ், ராஜாஜி போன்ற பெருந்தலைகளை விட இரண்டாம் நிலை தலைவர்ககள் – சத்தியமூர்த்தி, ஸ்ரீனிவாச ஐயங்கார், நாரிமன், கிச்லூ, மாளவியா போன்றவர்களின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறையவே வந்திருக்கிறது.

டி.எஸ்.எஸ். ராஜனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெரிந்தவர்கள் இன்று மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் முப்பது முப்பதைந்து வருஷம் முன்பு அவரது சுயசரிதையைப் பற்றி க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பார்த்தேன். பிறகு கல்கி அதற்கு எழுதிய முன்னுரையை – எப்படி அவர் இரவு முழுவதும் விழித்திருந்து படித்தார் – மட்டும் படித்தேன். அங்கும் இங்குமாகப் படித்ததில் ராஜன் லண்டனில் சவர்க்கார், வ.வே.சு. ஐயரோடு தங்கிப் படித்தவர், 1920களில் காங்கிரஸில் இரண்டாம் நிலை தலைவர், பிற்காலத்தில் ராஜாஜி மந்திரிசபையில் சுகாதார அமைச்சராக பணி புரிந்தார் என்பது மட்டும் தெரிந்தது.

இணையத்தில் அவரது சுயசரிதையின் – நினைவு அலைகள்மின்பிரதி கிடைத்தது.

ராஜன் ஏழைக்குடும்பத்தில் 1878-இல் பிறந்தவர். ராஜாஜிக்கு ஓரிரு வயது இளையவர். வ.வே.சு. ஐயரை விட ஓரிரு வயது மூத்தவர். உபகாரச் சம்பளம் வாங்கி மருத்துவப் படிப்பு படித்தார். அப்போதெல்லாம் அப்படி உபகாரச் சம்பளம் வாங்கினால் அரசு வேலை பார்த்து “கடனை” திருப்பி செலுத்த வேண்டும். ராஜன் பர்மாவில் பணியாற்றப் போயிருக்கிறார். அங்கே ஒரு வெள்ளைக்கார மேலதிகாரி இவரை அவமானப்படுத்த, உன்னை விட பெரிய படிப்பு படித்துக் காட்டுகிறேன் என்று ரோஷப்பட்டு லண்டனில் படிக்கப் போயிருக்கிறார். லண்டனில் இவரோடு தங்கி இருந்தவர்களில் வ.வே.சு. ஐயரும் சவர்க்காரும் உண்டு. ஒரு புறம் புரட்சியில் ஆர்வம், ஆனால் நடைமுறை வாழ்க்கையின் பிரச்சினைகள் இவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறது. இந்தியா திரும்பி மருத்துவராக வெற்றிகரமாக தொழில் நடத்தி இருக்கிறார். ஆனால் கடல் கடந்த பிராமணன் என்று ஜாதி விலக்கம், பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதில் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். வேண்டாவெறுப்பாக சில சடங்குகளை செய்து பிராமண ஜாதிக்கு “திரும்பி” இருக்கிறார். பிறகு காங்கிரஸ். ஈ.வெ.ரா.வும் இவரும் காங்கிரஸ் செயலாளர்களாக இருந்த காலம் காங்கிரஸின் பொற்காலம் என்கிறார் வ.ரா. ரௌலட் சட்ட எதிர்ப்பு, சிறை, கிலாஃபத் இயக்கம், உப்பு சத்தியாகிரகம், மீண்டும் சிறை. ராஜாஜியோடு நெருக்கம், பிறகு கொஞ்சம் விலக்கம். மத்திய சட்டசபை அங்கத்தினர். ராஜாஜி இவரை தனது மந்திரிசபையில் இழுத்துப் பிடித்து அமைச்சராக்கி இருக்கிறார். பின்னாளில் தங்குதூரி பிரகாசம் மந்திரிசபையிலும் அமைச்சர்.

உண்மையில் ராஜனின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து ராஜாஜியைப் பிரிக்க முடியாது. அத்தனை அணுக்க சீடர், அத்தனை நட்பு.

புத்தகத்தின் பலம் உண்மை. இளமைப் பருவத்து ஏழை வாழ்க்கையை மிகைப்படுத்தவும் இல்லை, romanticize செய்யவும் இல்லை. “வாத்தியார் சாகானா, வயிற்றெரிச்சல் தீராதா” என்றுதான் மாணவர்கள் பாடிக் கொண்டிருப்பார்களாம். அரசியல் செலவு பிடித்த விஷயம் என்பதை ஒத்துக் கொள்கிறார். ராஜாஜி மந்திரியாக வா என்று அழைத்தால் சம்பளம் பற்றாது என்று நழுவப் பார்த்திருக்கிறார். (1937-இல் மாதம் 500 ரூபாய் சம்பளம்.) நம்பகத்தன்மை நிறைந்த, சரளமான எழுத்து. மனதில் ஒன்று தோன்றிவிட்டால் நிறைவேற்றாமல் விடமாட்டார் போலிருக்கிறது. சுவாரசியமான ஆளுமை, வாழ்க்கை.

இளமைப் பருவத்தை மிக சுவாரசியமாக விவரிக்கிறார். ஸ்ரீரங்கம் கோவிலில் தோசையும் வடையும் பிரசாதமாக பெறுவதற்காக ஆழ்வார் சிலைகளைத் தூக்கி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, தனக்குத் திருமணம் என்றதும் தானே போய் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தது, ஏழை கல்யாண ஊர்வலம் என்ற மனக்குறை எல்லாம் மனைவியை பந்தலில் பார்த்ததும் தீர்ந்தது எல்லாம் அருமை.

பர்மாவில் மேலதிகாரியோடு சிறிய கைகலப்பே ஏற்பட்டிருக்கிறது. பிறகு ஒரு நீதிபதி இவர் ஒரு “சின்ன” டாக்டர் என்று ஒரு வழக்கில் குறிப்பிட ரோஷப்பட்டு லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கப் போயிருக்கிறார். அவருக்கு உதவியவர் வ.வே.சு. ஐயரின் மைத்துனரான பசுபதி ஐயர்.

அவருடைய கப்பல் பயணப் பகுதி எனக்குப் பிடித்தமான ஒன்று. வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி மூலமாக முதலில் கொழும்பு. சுதேசிக் கப்பலில் வருபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று போகிறபோக்கில் சொல்கிறார். முற்றிலும் “அன்னியர்கள்” நிறைந்த கப்பலில், பழக்கவழக்கங்கள் தெரியாத இடத்தில் அற்ப விஷயங்கள் தெரியாமல் எத்தனையோ அவஸ்தைகள். அதிலும் சைவ உணவுப் பிரச்சினைகள்.

லண்டனில் ஏற்கனவே பழக்கமான வ.வே.சு. ஐயர் வரவேற்றிருக்கிறார். வந்த இரண்டாம் நாளே ஐயர் விடுதலை, புரட்சி, நான் பாரிஸ்டர் ஆவதும் நீ மருத்துவம் படிப்பதும் வீண் என்றெல்லாம் பேசி இருக்கிறார். ராஜன் ஐயர், சவர்க்காரோடு தங்கினாலும் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகளால் புரட்சி பக்கம் போகவில்லை. ஆனால் போலீஸ் கண்காணிப்பு இருந்திருக்கிறது. இந்தியா திரும்பியபோது தன் தொண்டை, மலத்துவாரம் வரைக்கும் சோதனை நடந்தது என்று குறிப்பிடுகிறார்.

ஜாதிப்பிரஷ்டம். வேண்டாவெறுப்பாக சில “பிராயச்சித்தங்களை” செய்திருக்கிறார். காலப்போக்கில் வைதீகத்தின் தூணாகவே இருந்தாராம். ஆனாலும் அவரை எப்போதும் கொஞ்சம் தாழ்வாகத்தான் பார்த்திருக்கிறார்கள்.அன்றைய பிராமணர்கள் பலருக்கும் வைதீகத்தை முழுவதும் விடவும் முடியாமல், அதே நேரத்தில் நியாயத்தின் அழுத்தத்தையும் சமாளிக்க முடியாத நிலை இருந்திருக்கும். அ.ச.ஞா. உள்ளிட்ட பல அபிராமணர்களுடன் தந்தை மாதிரி பழகிய வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியே ஹரிஜன ஆலயப் பிரவேச மசோதாவை எதிர்த்தாராம். இவர் வைதீகத்தை விட இந்த நிகழ்ச்சிகளின் கசப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஹரிஜன சேவா சங்கத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தும் அளவுக்கு பின்னாளில் மாறி இருக்கிறார்.

1914-இல் காங்கிரஸ் மாநாட்டுக்கு முதல் முறை போயிருக்கிறார். அப்போதெல்லாம் கோழைத்தனத்தால் நான் ஒருவன் தியாகம் செய்து என்ன பயன் என்று சப்பைக்கட்டு கட்டுவேன் என்கிறார். 1916 வாக்கில் காந்தி சென்னை வந்தபோது சந்தித்திருக்கிறார். ஏற்கனவே லண்டனில் சந்தித்திருந்தாலும் காந்தி அவரை மறந்துவிட்டாராம். ராஜாஜியோடு அப்போது பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

பிறகு தமிழில் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்திருக்கிறார். அப்போதெல்லாம் பிரமுகர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்களாம். இவர் விடாக்கண்டர், தமிழில் நிறைய பேசி ஓரளவு பிரபலம் ஆகி இருக்கிறார், உள்ளூர் அளவிலாவது பிரமுகர் ஆகிவிட்டார்.

1916-இல் இன்று ராமஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்துக்கு போயிருக்கிறார். ஒரு மசூதி இருந்தது, அதற்குப் பின் பத்தடிக்கு பத்தடி சதுரமான இடத்தில் பூமிக்கு கீழே சின்ன தளத்தில் ராமர் சிலை இருந்தது என்கிறார்.

அவரது முதல் சிறை அனுபவத்தில் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். உயிர் போகும் நிலை இருந்திருக்கிறது. அவரோடு ஏற்கனவே நட்பாயிருந்த வெள்ளைக்கார டாக்டர் அவரை சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ரணசிகிச்சை நடந்து அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. கையை வெட்டிவிடும் நிலை இருந்திருக்கிறது. மருத்துவர்கள் கை போனால் இனி இவரால் ரணசிகிச்சை செய்ய முடியுமா என்று கவலைப்பட்டிருக்கிறார்கள். இவர் நான் சமாளித்துக் கொள்வேன், தேவை என்றால் வெட்டுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நல்ல வேளையாகப் பிழைத்துக் கொண்டார். 1920களிலேயே இத்தனை பிரச்சினை என்றால் வ.உ.சி.யும் சிவாவும் திலகரும் என்ன பாடு பட்டிருப்பார்கள்?

வெளியே வந்த பிறகு கையில் பணமில்லை. அரசியலை மறந்து டாக்டர் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். கறாராக பணம் வசூலித்துவிடுவாராம். காந்தி தமிழகம் வந்தால் அவ்வப்போது அவரோடு சுற்றுவாராம்.

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை. அப்புறம் 1934-இல் மத்திய சட்டசபை தேர்தலில் நின்றிருக்கிறார். 22000 ரூபாய் செலவாயிற்றாம். அதற்கப்புறம் தொழிலை விட்டுவிட்டு சிம்லா, டெல்லி என்று அலைந்தேன், சம்பாதித்த பணம் எல்லாம் போயிற்று என்கிறார். சத்தியமூர்த்தி சட்டசபை பிஸ்தா, அவர்தான் இந்த விஷயத்தில் என் குரு என்கிறார்.

சில்லறை அரசியல் தகராறு ஒன்றில் – திருச்சி நகராட்சி தேர்தல் – ஒன்றில் ராஜாஜியோடு பிரச்சினை. தன் மீதுதான் தவறு, ராஜாஜியின் மனதைப் புண்படுத்தினேன், என் முரட்டு சுபாவம்தான் காரணம் என்கிறார். நேரு தன்னை நேரடியாக சந்தித்து காங்கிரசுக்கு திரும்பும்போது கேட்டுக் கொண்டும் மறுத்தாராம். காங்கிரசில் இருந்து விலகினாலும் காந்தியின் ராடாரில் இருந்திருக்கிறார். நீ காங்கிரசில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உன் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதே என்று காந்தி அவரிடம் சொல்லி இருக்கிறார்.

ராஜாஜி திருச்சிக்கு வந்தால் ராஜன் வீட்டில்தான் தங்குவாராம். ஓரிரு வருஷம் கழித்து ராஜாஜி 1937 தேர்தலுக்காக திருச்சி வந்தபோது ராஜன் தன் காரை அனுப்பினாராம். ராஜாஜி தங்க வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் ராஜாஜி காரில் ஏறி நேராக ராஜன் வீடு வந்து சேர்ந்தாராம். கடந்த கால கசப்புகள் பற்றி எதுவுமே கேட்கவில்லையாம். அரசியல் பற்றியே பேசவில்லையாம். அதுதான் அவரது பெருந்தன்மை என்கிறார் ராஜன். ராஜன் முரடர், ஆனால் சாதாரணமாக ராஜாஜிக்குக் கட்டுப்படுவார் என்கிறார் வ.ரா. ஏன் கட்டுப்படுகிறார் என்பது புரிகிறது…

ராஜன் 1937 தேர்தலில் இருந்து விலகியே இருந்தார். ஆனால் ராஜாஜி முதல்வர் ஆனதும் அவரை மேல்சபை உறுப்பினர் ஆக்கி சுகாதார அமைச்சர் ஆக்கி இருக்கிறார். ராஜன் படாடோப வாழ்க்கை வாழ்பவர் போலிருக்கிறது. மாதம் 500 ரூபாய் சம்பளம் பற்றவில்லை, இரண்டு வருஷத்தில் கையிலிருந்து 15000 ரூபாய் செலவழித்தேன், டாக்டர் தொழிலின் வரவும் போயிற்று என்கிறார். அந்தக் காலத்திலேயே மாதம் ஆயிரம் ஆயிரத்து இருநூறு ரூபாய் செலவு இருந்திருக்கும் போலிருக்கிறது.

இதில் காந்தி வேறு நடுவில் குட்டையை குழப்பி இருக்கிறார். மாதம் 500 என்பதெல்லாம் ரொம்ப அதிகம், நான் மந்திரிசபை அமைத்தால் 75 ரூபாய்தான் தருவேன் என்றிருக்கிறார். ராஜனின் வார்த்தைகளில்:

சென்னை மாகாண மந்திரிகள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் மாதம் 75 ரூபாய்க்குள் மந்திரியாக வேலை பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இம்மாதிரி ராஜாஜிக்கு காந்திஜியிடமிருந்தும் பார்லிமெண்டரி போர்டாரிடமிருந்தும் எண்ணற்ற தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. என் அபிப்ராயப்படி இதற்கு விமோசனம் ஒன்றேதான்; காந்திஜி அவர்களே ஒரு சிறிய மாகாணத்தை (ஒரிஸ்ஸா போன்றது) தாமே எடுத்துக் கொண்டு நடத்தினாலொழிய வேறு வழி இல்லை.

ராஜாஜிக்கு காந்தியால் தொல்லை என்று ராஜன் எழுதி இருப்பதை மிகவும் ரசித்தேன். கிழவர் தொல்லை பிடித்தவர்தான். மந்திரியாகி 75 ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தால் பத்து ரூபாய் மிச்சம் பிடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் உழைத்தது போல எப்போதும் உழைக்கவில்லை என்கிறார். குறிப்பாக தொற்றுநோய் பரவுவதை, தொற்ற்றுநோயை கட்டுப்படுத்த மிகவும் உழைத்திருக்கிறார். தானே மருத்துவர் என்பதால் அதிகாரிகளால் ஓபி அடிக்க முடியவில்லை. ராஜாஜிதான் நிதி மந்திரியாம், பணம் பெயர்வது மகா கஷ்டமாம். அதுவும் “என்ன ராஜன்! வைத்தியம் தேவை வைத்தியர்கள் தேவை, எதற்கு ஆஸ்பத்திரி கட்ட பணம் செலவழிக்க வேண்டும்?” என்பாராம். ராஜாஜி நோயைத் தடுப்பது வைத்தியம் பார்ப்பதை விட உத்தமம் என்பதை உணர்ந்தவராம். குடிநீர் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை ராஜனிடம் தந்தாராம்.

1940-இல் மீண்டும் சிறை. ஆனால் அதற்கப்புறம் சிறை செல்லுவதில் ராஜாஜிக்கும் ராஜனுக்கும் விருப்பமில்லை. ஒதுங்கிக் கொண்டுவிட்டார்கள். அதற்கப்புறம் விவ்சாயம் செய்ய முயற்சித்திருக்கிறார். செலவுதான் என்று அலுத்துக் கொள்கிறார். ஆனால் செலவைக் கண்டு ஒதுங்கவில்லை, வருஷக்கணக்கில் முயன்று ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்.

1944 வரைதான் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் பத்து வருஷம் வாழ்ந்திருக்கிறார். 1946-51 காலத்தில் மீண்டும் அமைச்சர். ராஜாஜி 1952-இல் முதல்வராக வந்தபோது ராஜனை மீண்டும் அமைச்சராக்கவில்லை.

ராஜன் வ.வே.சு. ஐயர் பற்றியும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு எழுதி இருக்கிறார்.

உண்மையை சுவாரசியமாக எழுதுவது சுலபமல்ல. ராஜன் அதை அனாயாசமாக செய்திருக்கிறார். புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: நினைவு அலைகள் மின்பிரதி

நா. வானமாமலை எழுதிய “உரைநடை வளர்ச்சி”

உரைநடை வளர்ச்சி நல்ல புத்தகம். கல்வெட்டு காலத்திலிருந்து தமிழ் உரைநடை வரலாற்றை விவரிக்கிறது. சுருக்கமாக.

  • கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் உள்ள கல்வெட்டுகள் பிராமி வரி வடிவத்தில் இருந்தாலும் தமிழ் கல்வெட்டுகளே என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு ஒன்று கூறுகிறதாம்.
  • அனேகமானவை சமணத் துறவிகளுக்கு படுகை, உணவு ஏற்பாடு நான் செய்தேன் என்று இருக்குமாம்.
  • எடுத்துக்காட்டாக “இ படுகை செய்விதான் பிட்டன் கொற்றன்“, “கணைகால் இறும்பொறை மகன் பொறைய இ அறை அறுத்தான்
  • அதனால் தமிழ் உரைநடை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.
  • கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் கழித்து தமிழ் செய்யுள்களின் விளக்கங்கள் செய்யுளின் அடியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை கி.பி. 200-600 காலகட்டத்து உரைநடை.
  • உதாரணம்: நற்றிணை 157க்கான விளக்கம் – “பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது
  • இதே காலத்தில் ஆரம்ப கால பல்லவர் சாசனங்களின் உரைநடை எளிதாக, பேச்சுத்தமிழில் இருக்கிறதாம்.
  • அதாவது இலக்கிய வழக்கு உரைநடை, உலகியல் வழக்கு உரைநடை இரண்டும் இந்தக் காலகட்டத்திலாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.
  • சோழர் கல்வெட்டுகளில் புதிய வரி வடிவம் பயன்படுத்தப்பட்டதாம்.
  • சோழர் கால இறுதியில் சங்க நூல்கள், குறள், சிந்தாமணிக்கு சிறந்த உரைகள் எழுதப்பட்டன. பரிமேலழகர், மணக்குடவர், பேராசிரியர், இளம்பூரணர் ஆகிய பேர்களைக் கேள்விப்பட்டிருப்போம்.
  • மணிப்பிரவாள நடையை சமணர்கள் உருவாக்கினார்கள். பின்னாளில் வைணவர்கள் இதைப் பின்பற்றினார்கள்.
  • ஹென்ரிகே ஹென்ரிகஸ் தம்பிரான் விளக்கம் என்ற முதல் தமிழ் அச்சு நூலை பதினாறாம் நூற்றாண்டில் வெளியிட்டார். வீரமாமுனிவர் எழுத்துக்களை நவீனப்படுத்தினார்.
  • ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு முக்கியமான உரைநடை நிகழ்வு.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விக்ரமாதித்தன், மதனகாமராஜன், மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள் அச்சில் வந்தன.
  • ஆறுமுக நாவலர், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ராமலிங்க அடிகள் ஆகியோரை உரைநடை முன்னோடிகள் என்று சொல்லலாம். தெளிவாக புரியக் கூடிய வகையில் எழுதினார்கள்.
  • வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மாதவையா முதல் நாவல்களை எழுதினார்கள்.
  • பாரதியையே நவீன தமிழ் உரைநடையின் தந்தை என்று சொல்ல வேண்டும்.
  • ஈ.வெ.ரா.வின் பேச்சிலும் எழுத்திலும் வேகம் இருந்தது, ஆனால் செறிவு குறைவுதான்.
  • திரு.வி.க.வின் நடை எளிமைப்படுத்தப்பட்ட பண்டித நடை.
  • மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் முக்கிய முன்னோடி.
  • மணிக்கொடி காலம் தமிழ் உரைநடை வளம் பெற முக்கிய காரணி.
  • திராவிட இயக்கத்தினர் அலங்கார, அடுக்குமொழி தமிழை பிரபலமாக்கினர். விஷயத்தை விட ஓசை நயமே காலப்போக்கில் முக்கியமாகிவிட்டது. இப்போது இந்த நடை காலாவதி ஆகிவிட்டது.

வேறு சில புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

வ.உ.சி.: முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி புத்தகத்தில் வ.உ.சி.யின் வாழ்க்கையைப் பற்றி புதிதாக விவரங்கள் எதுவுமில்லை. ஆனால் அனுபந்தமாக கப்பல் நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் நோக்கங்களை இணைத்திருக்கிறார், ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.

பாரதியும் தொழிலாளரும் என்ற புத்தகத்தைப் பற்றி பெரிதாகப் பேச ஒன்றுமில்லை. அதனால் தனியாக எழுதப்போவதில்லை. பாரதி எகிப்தில் வேலை நிறுத்தம் பற்றியும், ரஷியாவில் புரட்சி பற்றியும் எழுதிய சில கட்டுரைகளை, கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கங்கள். ஆனால் பாரதியைப் பற்றி இப்படி எத்தனை புத்தகங்கள், பாரதியின் தாக்கம் எத்தனை பெரிது என்று யோசிக்க வைத்தது.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்/strong> நாத்திகம் வேத காலத்திலிருந்தே இந்தியாவில் பழக்கத்தில் இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

ம.பொ.சி. எழுதிய “கப்பலோட்டிய தமிழன்”

இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள். (செப்டம்பர் 5). அதனால் மீள்பதித்திருக்கிறேன். புத்தகத்தின் மின்பிரதி இங்கே.

வ.உ. சிதம்பரம் பிள்ளை தீவிரமாக இயங்கிய 1905-1908 காலத்துக்குப் பிறகு அவரை தமிழர்கள் மறந்தே போனார்கள். மறக்காதவர் ம.பொ.சி.

ம.பொ.சி.க்கு வ.உ.சி. மீது பக்தியே இருந்திருக்கிறது. சிதம்பரத்தின் தியாகங்களை இந்தியாவும் தமிழகமும் மறந்துவிடக் கூடாது என்று அவர் படாதபாடு பட்டிருக்கிறார். அன்றைய காங்கிரசாருக்கு – ராஜாஜி, சத்தியமூர்த்தி உட்பட – இதில் பெரிதாக அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ராஜாஜி வ.உ.சி.யோடு பழக்கம் உள்ளவர். சூரத் காங்கிரசுக்கு அவரோடும் பாரதியோடும் சென்றிருக்கிறார். ஆனால் முப்பதுகளின் இறுதியில் காங்கிரஸ் அலுவலகத்தில் சிதம்பரத்தின் சிலை வைக்க வேண்டுமென்று ம.பொ.சி. முயன்றதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. ஒரு பத்து பதினைந்து வருஷத்தில் இந்த நிலை மாறி இருக்கிறது. அதற்கு ம.பொ.சி.தான் காரணம்.

ம.பொ.சி. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பெரிய படிப்பு எல்லாம் கிடையாது. பிராமணர்களுக்கு இருக்கக் கூடிய நெட்வொர்க்கும் இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு நாற்பதுகளில் இந்த புத்தகத்தின் (வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தகமும் கூட) முதல் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறார். புத்தகம் விற்கவில்லை.

இரண்டு மூன்று வருஷம் கழித்து சின்ன அண்ணாமலை என்ற காங்கிரஸ்காரரைப் போய்ப் பார்த்திருக்கிறார். சி. அண்ணாமலை ஒரு பதிப்பகம் நடத்தி வந்திருக்கிறார். சி. அண்ணாமலை சாணி நிற காகிதத்தில் மோசமான முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பார்த்திருக்கிறார். புத்தகத்தை நல்ல முறையில் பதித்து பெரிதாக விளம்பரம் செய்திருக்கிறார். புத்தகம் விற்றது, கப்பலோட்டிய தமிழன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. சிதம்பரம் பிள்ளையை மறக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. (கட்டபொம்மன் புத்தகமும் பிரபலமானது.)

முக்கியமான புத்தகம், ஆனால் நல்ல biography இல்லை. ம.பொ.சி.க்கு சிதம்பரம் பிள்ளை ஏறக்குறைய தெய்வம். தெய்வத்தைப் பற்றி பாரபட்சமில்லாமல் எங்கே எழுதுவது? அதுவும் இது ஒரு propaganda புத்தகம், சிதம்பரம் பிள்ளையைப் பற்றி எல்லாரும் நல்லபடியாக நினைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகம். இதில் குறை காண்பது என்ற பேச்சே கிடையாது. சுருக்கமாக பிறப்பு, வக்கீல் தொழில், ஹார்வி (கோரல்) மில் ஸ்ட்ரைக், கப்பல் கம்பெனி, தூத்துக்குடி+திருநெல்வேலி வட்டாரத்தில் அவர் இட்டதே சட்டம் என்ற நிலை, மக்கள் ஆதரவு, கலெக்டர் வின்ச், கொடூரமான ஜெயில் தண்டனை, ஜெயிலிருந்து திரும்பிய பிறகு பட்ட கஷ்டங்கள் என்று எழுதி இருக்கிறார்.

பிள்ளையை ஒழித்து விடவேண்டும் என்று ஆங்கில அரசு முனைந்தது தெரிந்த விஷயம். உதாரணமாக சுப்ரமணிய சிவாவுக்கு பத்து வருஷமோ என்னவோ சிறைத்தண்டனை. அவருக்கு உதவியதற்காக பிள்ளைக்கு இருபது வருஷம் சிறைத்தண்டனை. குற்றம் செய்தவனை விட உதவி செய்தவனுக்கு அதிக தண்டனை என்ற விசித்திரம் எல்லாம் நடந்தது. பிள்ளையின் சொத்து சுகம் எல்லாம் போனது. ஜெயிலிலிருந்து வந்ததும் அடுத்த 24 வருஷம் கஷ்ட ஜீவனம்தான். அரசியலில் தீவிரமாக ஈடுபடமுடியாத நிலை. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்றால் நிச்சயமாக பயந்திருப்பார். காந்தி வந்து எல்லாரும் ஜெயிலுக்குப் போகலாம் என்றால் பிள்ளை என்ன சந்தோஷத்தில் குதித்திருப்பாரா? ம.பொ.சி. இதை காந்தியின் வழியை வ.உ.சி. நிராகரித்தார் என்று நாசூக்காக சொல்ல முயற்சிக்கிறார்.

ஜெயிலிலிருந்து திரும்பி வந்ததும் நெருங்கிய நண்பர்களாக இருந்த பிள்ளையும் பாரதியும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லையா? (தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று வ.உ.சி.யே தகவல் தருகிறார்.) ஜெயிலில் தனக்கு பிள்ளை அல்லது பிராமண ஜாதியை சேர்ந்த ஒருவனே சமைக்க வேண்டும் என்று அவர் போராடியது உண்மையா? (ம.பொ.சி. அவர் ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறார், ஆனால் இதுவும் உண்மையே.) ஈ.வே.ரா.வின் தி.க. இயக்கத்தை – குறிப்பாக பிராமண எதிர்ப்பு நிலையை – அவர் ஆதரித்தாரா? (ம.பொ.சி. இல்லை என்கிறார், ஆனால் சில சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.) இதற்கெல்லாம் நீங்கள் இங்கே விடை பெற முடியாது.

சின்ன புத்தகம். ஆனால் முக்கியமான ஆவணம். ம.பொ.சி.யின் பக்தி வலிமையாக வெளிப்படுகிறது. கட்டாயமாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

மயிலாப்பூர் பூங்கொடி பதிப்பகத்தில் கிடைக்கிறது. (இது கபாலீஸ்வரர் கோவில் அருகில் இருக்கிறது)

ஆதாரங்கள்: சின்ன அண்ணாமலையின் memoirs – சொன்னால் நம்பமாட்டீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் non-fiction

தொடர்புடைய பதிவுகள்:
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் – ஆர்வியின் விமர்சனம்

அ. மார்க்ஸ்

(மீள்பதிவு, முதல் பதிவு 2014-இல்)

a_marxஅ. மார்க்ஸ் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். அவரது சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன். மார்க்ஸைப் பற்றிய என் எண்ணங்கள் எல்லாம் இந்தப் புத்தகங்கள் மூலம் உருவானவையே. மூன்று புத்தகங்கள் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு மேல் படிக்க எனக்குப் பொறுமை இல்லை. அரசியல் சித்தாந்த விளக்கம் எல்லாம் படிக்க நிறையவே பொறுமை வேண்டும்.

அ. மார்க்ஸ் கம்யூனிச சார்புடைய பெரியாரிஸ்ட் என்று தெரிகிறது. கம்யூனிசம் வேலைக்காகாது என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஈ.வெ.ரா. மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட இயக்கமும், அவரது சித்தாந்தங்களும் தோல்வி அடைந்துவிட்டன என்று நினைத்தாலும் அவர் ஒரு காலகட்டத்தின் தேவை, தமிழகத்தில் ஜாதியின் தாக்கம் வட மாநிலங்களை விட குறைவாக இருக்க ஈ.வெ.ரா. ஒரு முக்கிய காரணம் என்றும் கருதுகிறேன். அதாவது எனக்கும் சில முன்முடிவுகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் என்ற ஒரு புத்தகமே மார்க்ஸைப் புரிந்துக் கொள்ளப் போதும் என்று நினைக்கிறேன். இவை எல்லாம் 2004-2008 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள். மார்க்ஸ் இடதுசாரி பெரியாரிஸ்ட் சட்டகத்தின் மூலமே எந்தப் பிரச்சினையையும் அணுகினாலும், கம்யூனிச, திராவிடக் கட்சிகளையும் விமரிசிக்கிறார் – மென்மையான விமர்சனம்தான், ஆனால் அதையே நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு இடதுசாரி சார்புடையவர் லெனின், ஸ்டாலினின் தவறுகள் பற்றி வாயைத் திறந்திருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். மேற்கு வங்க கம்யூனிச அரசை நந்திகிராமம் பிரச்சினைக்காக கண்டிக்கிறார். அமெரிக்க எதிர்ப்பு எப்போதும் உள்ளாடுகிறது. கருணாநிதிக்கு மறைமுகமான ஆதரவு. (புத்தகம் வெளிவந்த பிறகு நிலை மாறி இருக்கலாம்.) ஜெயலலிதாவிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன, ஆனால் இவருக்குத் தெரியும் ஒரே குறை அவர் பிராமணர் என்பதுதான். அதை ஈ.வெ.ரா. மாதிரி நேரடியாக சொல்லவும் தைரியம் கிடையாது, நாமேதான் between the lines படித்துக் கொள்ள வேண்டும். சில பல இடங்களில் ஊரோடு ஒத்து ஊதாமல் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார். (குஷ்புவின் safe sex கருத்துக்கு ஆதரவு, மும்பை நடன பார்களை மூடுவதற்கு எதிர்ப்பு இத்யாதி)

சில ஸ்டேட்மெண்டுகள் சிரிக்கவும் வைக்கின்றன – “திராவிட” என்று அடைமொழி வைத்துக் கொண்டதால் inclusive nationalism-த்தை திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்துகின்றனவாம்! 2G, 3G என்று வந்தால்தான் inclusive nationalism எல்லாம் மேடைக்கு வருகிறது என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தும் இப்படி அடித்துவிடும் வாத்யாரே, நீ மேதை!

நான் புரிந்து கொண்ட நபிகள் மாதிரி ஒரு சப்பைக்கட்டை நான் பார்த்ததே இல்லை. முகமதின் சர்ச்சைக்குரிய செயல்கள் (மருமகள் உறவுள்ளவளை மணந்தது, சிறு குழந்தைகள் உட்பட்ட யூதர் குழுக்களை முழுமையாக வெட்டிச் சாய்த்தது…) எல்லாம் அவருக்கு வேறு வழியில்லாததால் செய்யப்பட்டவை என்று சுலபமாக முடித்துவிடுகிறார். என்னதான் நடந்திருந்தாலும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்.பெரியாரிஸ்ட் எப்படி ஒரு மதத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்றே புரியவில்லை. ஆனால் ஈ.வெ.ரா.வே அப்படி இஸ்லாமை புகழ்ந்து பேசினார் என்று அவர் காட்டுகிற மேற்கோள்களைப் பார்த்தபோது புரிந்தது.

ஈழத்தமிழ் சமூக உறவுகளும் அரசியல் தீர்வும் ஓரளவு சமநிலையோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இன்றைய சூழ்நிலையில் ராஜபக்சேயின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற்றமோ, தீர்வோ இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார். புலிகளின் ஃபாசிச அணுகுமுறையை சுட்டிக் காட்டுகிறார்.

எதையும் சுயமாக சிந்தியுங்கள் என்று சொன்ன ஈ.வெ.ரா.வை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் அவரது raison d’etre-யே கேலிக்கூத்தாக்கிவிடுகிறார்கள். மார்க்ஸ் அப்படி முழுமையாக ஜோதியில் ஐக்கியமாகிவிடவில்லை. அதே நேரத்தில் ஈ.வெ.ரா. என்னதான் சொல்ல் வந்தார் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதுதான் அவரது முக்கியத்துவம் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்