தமிழறிஞர் வரிசை: ந. சுப்பு ரெட்டியார்

சுப்பு ரெட்டியார் திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர். தூரனுக்குப் பிறகு கலைக் களஞ்சியம் தொகுப்பு பணியில் இருந்தவர். கஷ்டப்பட்டு முட்டி மோதிதான் பதவிகளைப் பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் பொதுவாக யாரைப் பற்றியும் குறை சொல்வதில்லை. அடக்கியே வாசிக்கிறார்.

ரெட்டியார் சம்பிரதாயமான – அதாவது அந்தக் காலகட்டத்தின் politically correct கருத்துக்களை பிரதிபலிக்கிறார். பாரதியார் மகாகவி, பாரதிதாசனும் நல்ல கவிஞர் (பாண்டியன் பரிசுக்கெல்லாம் மதிப்பீடு எழுதி இருக்கிறார்), ராஜாஜியும் காமராஜும் நல்ல தலைவர்கள், ஈ.வே.ரா. வாழ்க, தான் வேலை செய்த பல்கலைக்கழகத்துக்கு மானியம் வழங்கிய கலைஞர் நல்ல முதல்வர். ஆனாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் உண்மை இருக்கிறது, அந்தக் காலகட்டத்தின் – 1915 வாக்கில் பிறந்தவர் – 1935இலிருந்து 1980 வரையான காலகட்டத்தின் சித்திரம் கிடைக்கிறது. என்ன, அவரது வாழ்க்கையைப் பற்றி நிறைய விவரங்களும் இருக்கின்றன. அதில் பல எனக்கு சுவாரசியமாக இல்லை.

நீங்காத நினைவுகள் புத்தகம் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கிய ஆளுமைகளைப் பற்றி பேசுகிறது. பிரபலமானவர்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் காலத்து கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், மற்றும் நெ.து. சுந்தரவடிவேலு. சுந்தரவடிவேலுக்கு ஈ.வே.ரா.வின் முழு ஆதரவு இருந்திருக்கிறது, அது அவருக்கு பதவி உயர்வு பெற உதவி இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஏ.எல். முதலியார் உதவி செய்யவே மாட்டாராம், பணக்கார வீட்டுப் பையன்களுக்கு மட்டும்தான் உதவுவாராம். ந. சஞ்சீவி இவரை விட ஜூனியராம், ஆனால் ஏ.எல். முதலியார் பரிந்துரையில் கல்லூரி விரிவுரையாளர் ஆனாராம். சஞ்சீவியே ஒரு முறை என்னை விட அதிக தகுதி இருந்தும் ரெட்டியாருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டாராம்.

பல்சுவை விருந்து அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. ராஜாஜி, காமராஜைப் பற்றி விதந்தோதுகிறார். கி.ஆ.பெ. விஸ்வநாதம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். எனக்கு இன்னும் கி.ஆ.பெ.யின் பங்களிப்பு என்ன என்று சரியாகப் புரியவில்லை. ஹிந்தியை எதிர்த்து நிறைய போராடி இருக்கிறார் போல.

பட்டினத்தடிகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். பட்டினத்தார் என்பவர் ஒருவர் அல்ல, மூன்று பேர் பட்டினத்தார் என்று அறியபப்டுகிறார்கள் என்று நிறுவுகிறார். பரணி பொழிவுகள் நல்ல விளக்கம். தமிழறிஞர் என்று தெரிகிறது.

வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் அவர் எழுப்பும் கேள்வி மிக சரியானது. எனக்கும் ரொம்ப நாளாகவே இந்தக் கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதையேதான் அவரும் கேட்கிறார். இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.

வடநாட்டு திருப்பதிகள், மலைநாட்டு திருப்பதிகள், பாண்டிநாட்டு திருப்பதிகள் புத்தகங்களை தமிழிற்கு நல்ல பயண இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம்.

வைணவ புராணங்கள் என்ற புத்தகத்தைப் படித்தபோது இந்த மாதிரி அரிய புத்தகங்களைத் தேடுவது அந்தத் தலைமுறையோடு போய்விட்டதோ என்ற வருத்தத்தை உண்டாக்குகிறது.

அவரது உழைப்பு வியக்க வைக்கிறது. இன்றும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அ.கா. பெருமாள், ஆ.இரா. வேங்கடாசலபதி மாதிரி இரண்டு மூன்று பேரைத்தான் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் வரிசை

தமிழறிஞர் வ.உ.சி.

அ.கா. பெருமாள் வ.உ.சி.யின் தமிழ்ப் பங்களிப்பை பற்றி ஒரு சிறப்பான கட்டுரை எழுதி இருக்கிறார். அதிலிருந்து சுருக்கமாக கீழே.

வ.உ.சி. சொந்தமாக நான்கு நூல்களை – செய்யுள் வடிவில் – எழுதி இருக்கிறார். சுயசரிதை (1916 முதல் பகுதி, 1930 இரண்டாம் பகுதி), மெய்யறிவு (1914), மெய்யறம் (1915), பாடற்றிரட்டு (1915) . இவற்றில் சுயசரிதையை மட்டுமே நான் புரட்டிப் பார்த்திருக்கிறேன்.

இவற்றைத் தவிர அவர் மறைந்த பிறகு “நான் கண்ட பாரதி” என்ற மிகச் சிறப்பான நூல் 1946-இல் வெளிவந்திருக்கிறது. இருவருடைய ஆளுமைகளையும் அருமையாக வெளிப்படுத்தும் புத்தகம். திலக மகரிஷி என்று ஒரு தொடரை எழுதி இருக்கிறார், அது பிற்காலத்தில் காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கிறது.

இன்னிலை (1917), திருக்குறள் அறத்துப்பால் (1935), சிவஞானபோதம் (1935) ஆகியவற்றுக்கு உரை எழுதி இருக்கிறார். இன்னிலையை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று நினைத்துப் பதித்தாராம். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல் இல்லை என்று பின் நிறுவப்பட்டதாம், வ.உ.சி. இந்த விஷயத்தில் ஏமாந்துபோனாராம்.

அறத்துப்பாலுக்கு மணக்குடவர் உரை (1917), தொல்காப்பியம் எழுத்ததிகாரம், பொருளதிகாரத்துக்கு இளம்பூரணர் உரை (1928) ஆகியவற்றை பதித்திருக்கிறார்.

ஜேம்ஸ் ஆலன் படைப்புகளை விரும்பிப் படித்திருக்கிறார், மனம் போல் வாழ்வு (1909), அகமே புறம் (1914), வலிமைக்கு மார்க்கம் (1916), சாந்திக்கு மார்க்கம் (1934) என்ற பேர்களில் முறையே As a Man Thinketh, Out from the Heart, From Poverty to Power Part 1 & Part 2 ஆகிய ஜேம்ஸ் ஆலன் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

விவேகபானு, இந்துநேசன், National ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.

இவற்றைத் தவிர கட்டுரைகள், சொற்பொழிவுகள் எல்லாம் உண்டு. அவரது ஒரு உரை “எனது அரசியல் பெருஞ்செயல்” என்ற தலைப்பில் புத்தகமாகவும் வந்திருக்கிறதாம். அவரது ஒரு சொற்பொழிவை – கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும்இங்கே.

அவரது பல புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

வ.உ.சி. குடும்பத்துக்கே பரம்பரையாக கவிராயர் என்ற பட்டம் உண்டாம்.

அரசன் சண்முகனாரிடம் (அ.ச. ஞானசம்பந்தனின் அப்பாவோ?) முறையாக தமிழ் பயின்றிருக்கிறார்.

வ.உ.சி. மதுரை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் 1905-இல் பணியாற்றி இருக்கிறாராம். தமிழ்ச் சங்கத்தின் போஷகரான பாண்டித்துரைத் தேவர் பின்னாளில் கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர்.

2021-இல் சங்கர வள்ளிநாயகம் என்ற தமிழ் பேராசிரியரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அவரது வ.உ.சி.யும் தமிழும் என்ற புத்தகத்திலும் நிறைய விவரங்கள் உள்ளன.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள், ஆளுமைகள்

தமிழறிஞர் வரிசை – ரா.பி. சேதுப்பிள்ளை

மேம்படுத்தப்பட்ட மீள்பதிப்பு. ஒரிஜினல் பதிவு இங்கே.

சேதுப்பிள்ளையின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவரது நடைதான். தமிழறிஞர்தான், ஆனால் இன்றும் நிற்கும் எந்த ஆய்வையும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. அவருடைய பங்களிப்பு என்பது சுகமான சரளமான தமிழில் இலக்கியங்களைப் பற்றி பேசி எழுதியதுதான் என்றுதான் தோன்றுகிறது.

சேதுப்பிள்ளையின் தமிழ் அன்றைய திராவிட இயக்கத்தினரின் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதியின் அலங்காரத் தமிழை ஒத்திருந்தது. அண்ணாவின் தாக்கம் சேதுப்பிள்ளையிடம் இருந்ததா இல்லை பிள்ளையின் தாக்கத்தால் அண்ணா அப்படி எழுதினாரா என்று தெரியவில்லை. என்ன, அண்ணாதுரையின் தமிழில் இந்த செயற்கைத்தனம் இன்னும் அதிகம். கருணாநிதியோ, அடே அப்பா, செயற்கைத்தனம்தான் வியாபித்திருக்கிறது.

திரு.வி.க.வின் நடையும் இவரது நடையும் மட்டுமே எனக்கு ஆற்றொழுக்கு போல செல்கின்றன. வெ. சாமிநாத சர்மாவையும் வேண்டுமானால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். கருணாநிதியில் நடையில் தெரியும் செயற்கைத்தன்மை இவர்களது நடையில் தெரிவதில்லை. சொற்பொழிவாகக் கேட்கவும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்று இது போன்ற உரைகளைக் கேட்க ஆளில்லை என்று நினைக்கிறேன். நமது இலக்கியங்களில் இந்தத் தலைமுறையினருக்கு ஆர்வம் போய்விட்டதோ என்று கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்கு ஆர்வம் வந்தது நாற்பத்து சொச்சம் வயதுகளில்தான் என்பதும் நினைவில் இருக்கிறது.

அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த புத்தகம் ஆற்றங்கரையிலே. தமிழகத்தின் பல ஊர்களை இலக்கிய மேற்கோள்களை வைத்து விவரிக்கிறார்.

தமிழின்பம் புத்தகம் 1955-இல் சாஹித்ய அகடமி விருது பெற்றது. முதன்முதலாக சாஹித்ய அகடமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகம் அதுதான். உண்மையில் அது பல சொற்பொழிவுகளின், சில கட்டுரைகளின் தொகுப்பு. விருதுக்கு தகுதி அற்ற புத்தகம். 1955-இல் அதற்கு விருது அளித்தது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்றாலும் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு 30 வருஷங்களுக்காவது படைப்புகளை விட இலக்கிய வரலாறுகளுக்கும் ஆய்வுகளுக்கும்தான் சாஹித்ய அகடமி விருதுகளில் முன்னுரிமை தரப்பட்டது. இவற்றில் சில கல்லூரி தமிழ் பட்டப்படிப்பில் பாடப்புத்தகமாக இருக்கத் தகுதி உள்ளவை, அதுதான் அவற்றின் அதிகபட்ச தகுதியே.

கடற்கரையிலே புத்தகமும் உரையாகக் கேட்க நன்றாக இருந்திருக்கும். வள்ளுவரும் இளங்கோவும் கம்பரும் பட்டினத்தாரும் தாயுமானவரும் சிதம்பரம் பிள்ளையும் பாரதியும் கடற்கரையிலே நின்று பேசுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும். பள்ளியில் பாரதியார் பேசுவதாக வந்த கட்டுரை பாடமாக இருந்தது. பாரதியார் சேதுப்பிள்ளை பாணியில் தமிழ் பேசுவார். பாரதியாரின் பல கட்டுரைகளை அப்போதே படித்திருந்த நான் இது பாரதியார் பேசுவது மாதிரியே இல்லை என்று நக்கல் அடித்தேன் என்பதையும் பதிவு செய்கிறேன். எங்கள் வாத்தியார் ‘என்னா இவரு பாரதியார் தனியா கடற்கரையில் நின்னுக்கிட்டு தனக்குத் தானே பேசிக்கிட்டார்னு எழுதறார்? பாக்கறவன்லாம் பாரதியார் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டான்?” என்று ஜோக்கடித்தார்.

ஊரும் பேரும் அவரது முக்கியமான நூல். பல ஊர்களுக்கு பெயர் எப்படி வந்தது என்று விளக்குகிறார்.

கிறிஸ்துவத் தமிழ்த் தொண்டர் புத்தகம் நல்ல அறிமுக நூல். வீரமாமுனிவர், ஜி.யூ. போப் (திருக்குறள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்), கால்ட்வெல் (திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டவை என்று கண்டுணர்ந்து ஒப்பிலக்கணம் எழுதியவர்), எல்லிஸ் (திருக்குறளின் ஒரு பகுதியை மொழிபெயர்த்தவர், முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு முயற்சி), ரேனியஸ் (புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்தவர்), வேதநாயகம் பிள்ளை, வேதநாயகம் சாஸ்திரி, கிருஷ்ணப்பிள்ளை, அகராதிகள் எழுத முயற்சித்த ஃபாப்ரீசியஸ், வின்ஸ்லோ, பெர்சிவல் என்று பலரையும் அறிமுகப்படுத்துகிறார்.

தமிழர் வீரம், தமிழ் விருந்து, வேலின் வெற்றி, வீரமாநகர், தமிழ்நாட்டு நவமணிகள், சிலப்பதிகாரக் கதை, சிலப்பதிகார விளக்கம் போன்ற புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு காலத்தில் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. தேவையும் இருந்திருக்கும். இன்றும் சிலப்பதிகாரத்துக்கு நல்ல அறிமுகமாக விளங்குகின்றன.

பிள்ளை 1896-இல் பிறந்தவர். 61-இல் மறைந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்தவராம், ஆனால் தமிழால் வாழ்ந்திருக்கிறார். சொற்பொழிவாளராக பெருவெற்றி அடைந்திருக்கிறார். அவரது ராமாயணச் சொற்பொழிவுகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச் சுடர்மணிகள்

பத்து பக்கம் படிப்பதற்குள் வையாபுரிப் பிள்ளை எத்தனை சிறந்த ஆராய்ச்சியாளர் என்பது புரிந்துவிட்டது. பிள்ளைக்கு முன்முடிவுகள் இல்லை. தமிழே ஆதிமொழி, தமிழ்க் குரங்கே முதல் குரங்கு என்று நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. தன் கண்ணில் என்ன பட்டது, அதை வைத்து தனக்குத் தோன்றுவது என்ன, என்ன முடிவுகளுக்கு வந்தேன் என்று விவரிக்கிறார். அந்த அணுகுமுறையே பெரிய நிம்மதியாக (relief) இருக்கிறது.

தமிழ்ச் சுடர்மணிகள் (1949) க.நா.சு. படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் போட்ட பட்டியலில் இடம் பெறும் புத்தகம். மின்பிரதி இங்கே. பல நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். க.நா.சு.வுக்கு ஒரு ஜே!

பிள்ளைவாளின் நடையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அது ராகவையங்கார் போன்றவர்களின் பண்டித நடை அல்ல; சேதுப்பிள்ளை, திரு.வி.க. போன்றவர்களின் எளிமைப்படுத்தப்பட்ட பண்டித நடையும் அல்ல.எந்த விதமான style-உம் இல்லை. அதனால் நடை காலாவதியாகவில்லை. சொல்ல வருவதை தெளிவாக நேரடியாக சொல்கிறார்.


தொல்காப்பியர் இன்றைய கேரளத்தில், அதுவும் திருவிதாங்கூரில் பிறந்தவர் என்கிறார். அதங்கோட்டாசான் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படுவது, இன்றும் மலையாளத்தில் (மட்டுமே) பழக்கத்தில் உள்ள சொல்வடைகளை தொல்காப்பியத்தில் பயன்படுத்தி இருப்பது, அதுவும் அந்த சொல்வடைகள் சங்கப் பாடல்களில் கூட இல்லாமல் இருப்பது வலிமையான வாதங்கள்தான்.

சொல்லாராய்ச்சியின் அடிப்படையிலும் சமண சமயத்தில் மட்டும் காணப்படும் கருத்துக்கள் சில தொல்காப்பியத்தின் இருப்பதையும் சுட்டிக் காட்டி தொல்காப்பியர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று வலுவாகச் சொல்கிறார்.

ஆனால் தொல்காப்பியத்தின் காலம் பற்றி அவர் முன் வைக்கும் வாதங்கள் எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் வந்த ஒரு புத்தகத்தில் – எடுத்துக்காட்டாக, மனுஸ்மிரிதியில் – காணப்படும் கருத்து தொல்காப்பியத்தில் இருக்கிறது என்றால் தொல்காப்பியம் இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாது என்பது வலுவற்ற வாதம். இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் வந்த வேறு புத்தகத்திலும் அந்தக் கருத்துக்கள் இருந்திருக்கலாம். என்ன எல்லா பழைய புத்தகங்களும் நமக்கு கிடைத்துவிட்டனவா? அதற்கு முன் அந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? வாய்வழியாகக் கூட அவை பல நூறாண்டுகளாகத் தொடர்ந்திருக்கலாம் இல்லையா? மனுஸ்மிரிதி முற்றிலும் மனுவின் மூளையிலிருந்து மட்டுமே உதித்ததா என்ன? அதற்கு முன் இருக்கும் பல கருத்துக்களை அவர் தொகுத்திருக்கமாட்டாரா?

தொல்காப்பியம் பாணினி பற்றி குறிப்பிடவில்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பாணினிக்கு தொல்காப்பியர் முந்தையவர் என்று உறுதியாக சொல்வதற்கில்லை என்று வாதிடும் பிள்ளைவாள் ஒரு புத்தகத்தின் கருத்து தொல்காப்பியத்தில் இருப்பதால் தொல்காப்பியம் பிந்தையது என்று மட்டும் எப்படி உறுதியாகச் சொல்கிறார்? அதுவும் தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகத் தொன்மையான நூல் என்று கருதப்படுகிறது. தொல்காப்பியமே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் என்றால் குறள் தொல்காப்பியத்துக்கு 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டதா? (குறளின் காலம் கி.பி. 600 வாக்கில் என்று இன்னொரு கட்டுரையில் சொல்கிறார்.) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அத்தனை குறுகிய காலத்தில் – 150, 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டுவிட்டனவா? எனக்கு எங்கேயோ உதைக்கிறது.

ஆனால் ஒன்று. சங்கக் கவிதை சிறப்பாக இருக்கிறது என்றால் என் தாய்மொழியில் அருமையான கவிதை என்று பெருமைப்படலாம். சங்கக் கவிதை 2000 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன பெருமை, 200 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன இழிவு என்று எனக்கு விளங்கவில்லை. கறாராகப் பார்த்தால் இலக்கியத்தின் காலம் என்பது வெறும் தகவல்தான். ஷேக்ஸ்பியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதி இருந்தால் அவரது நாடகங்கள் சோபை இழந்துவிடுமா என்ன? அது என்னவோ தமிழகத்தில் தமிழ் எத்தனை பழைய மொழி என்று சொல்வதில் ஒரு பெருமை. வையாபுரிப் பிள்ளை தொல்காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வாதிட்டால் அவர் தமிழ் துரோகி ஆகிவிடுகிறார். அவர் வாதங்கள் வலுவற்றவை என்றால் மறுக்கலாம், பிரதிவாதங்களை முன்வைக்கலாம். தமிழுக்கு என்ன துரோகம் என்பது புரியவில்லை.


வள்ளுவரின் காலம் கி.பி. 600 வாக்கில் இருக்க வேண்டும் என்று சொல்லாராய்ச்சியின் அடிப்படையில் ஊகிக்கிறார். சொல்லாராய்ச்சி மிக அருமை. சில சொற்கள் பழக்கத்தில் எப்போது வந்தன என்பதை வைத்து இப்படி ஊகிக்கிறார். வள்ளுவர் சமணர் என்கிறார்.


மாணிக்கவாசகர் கிறிஸ்துவர்களை மதம் மாற்றி சைவர்கள் ஆக்கினார் என்று பலரும் பிள்ளைவாள் காலத்தில் கருதி இருக்கிறார்களாம். அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ஒரு கேரள (சேர?) அரசன் மணிக்கிராமம் என்று ஒரு செப்பேட்டில் குறிப்பிட்டிருப்பதும், சிரியன் கிறிஸ்துவர்களிடம் இப்படி மதமாற்றம் நடந்தது என்று இருக்கும் ஒரு கர்ணபரம்பரைக் கதையும். இதெல்லாம் ஜுஜூபி ஆதாரங்கள், பத்தாது என்று வெகு சுலபமாக நிறுவுகிறார்.


கம்பரின் கால ஆராய்ச்சி அருமை. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று நிறுவியேவிட்டார், மறுவாதமே இருக்க முடியாது. இந்தப் புத்தகத்தின் மிக அருமையான கட்டுரைகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதைத்தான் சொல்வேன்.


கபிலர், புகழேந்திப் புலவர், நன்னூல் இயற்றிய பவணந்தியார், பரிமேலழகர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, கனகசபை பிள்ளை, உ.வே.சா., ரா. ராகவையங்கார், பாரதியார், தேசிகவிநாயகம் பிள்ளை பற்றியும் நல்ல கட்டுரைகள். ஆனால் என் மனதைக் கவர்ந்தவை தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதுதான். அதுவும் கால ஆராய்ச்சியில் பிய்த்து உதறுகிறார். இவர் மாதிரி யாரிடமாவது தமிழ் கற்கும் பாக்கியம் இருந்திருந்தால் இளமையிலேயே தமிழின் அருமை பெருமை புரிந்திருக்கும்.

பிள்ளைவாளின் தொல்காப்பிய கால ஆராய்ச்சி, அதற்கு சீனி. வேங்கடசாமி போன்றவர்களின் மறுப்பு ஆகியவற்றை இன்னொரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

தமிழறிஞர் வரிசை – வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்

வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பேரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரது பங்களிப்பு என்ன என்று எனக்கு சரியாகத் தெரியாது. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சி. சுப்ரமணியம் என்பவர் எழுதிய புத்தகத்தை வைத்து கொஞ்சம் தெரிந்தது.

முதலியார் 19-ஆம் நூற்றாண்டில் – 1857-இல் பிறந்தவர். கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். செல்வச் செழிப்பான குடும்பம். தமிழில் ஆர்வம். மரியாதைக்காக அரசு உத்தியோகம், கால்நடைத் துறையில். சில கால்நடை மருத்துவ நூல்களை தமிழில் எழுதி இருக்கிறார். ராவ்சாகிப், தாலுகா போர்ட் உறுப்பினர் என்று பதவிகள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பிறகு தமிழில் இறங்கி இருக்கிறார். கம்பராமாயண சாரம், அகலிகை வெண்பா என்று எழுதி இருக்கிறார். அகலிகை வெண்பாதான் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதைக்கு inspiration என்று எங்கோ படித்திருக்கிறேன். மில்டனின் Paradise Lost புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவரது முக்கியப் பங்களிப்பு என்பது தமிழில் ஆர்வம் உள்ள ஒரு கூட்டத்தை தழைக்கச் செய்ததுதான் – குறிப்பாக, நெல்லை வட்டாரத்தில் தழைக்கச் செய்ததுதான் என்று தோன்றுகிறது. டி.கே.சி.க்கு முந்தைய தலைமுறை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தமிழறிஞர் வரிசை – செல்வகேசவராய முதலியார்

முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணாக்கர் இவர்தானாம். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை இருவரும் இவரிடத்தில் படித்தவர்களாம். 56-57 வயதில், 1921-ஆம் ஆண்டு மறைந்தார்.

முதலியார் பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களை பதிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆசாரக்கோவை நூலுக்கு இவரது பதிப்பை செம்பதிப்பாகக் கருத வேண்டும். பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி ஆகிய பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். அறநெறிச்சாரம், ஹரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம் ஆகிய நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

முதலியார் எழுதிய அபிநவக் கதைகளை தமிழின் முதல் சிறுகதைகளாக எடுத்துக் கொள்ளலாம். கமில் சுவலெபில் அப்படித்தான் சொல்கிறார். என்ன, ஏறக்குறைய சிறுவர் கதைகள் மாதிரிதான் இருக்கும், அதனால் இவை சிறுகதைகள்தானா என்று கேள்வியும் கேட்கலாம். ஆனால் இந்தக் கதைகளின் வயது, நடை ஆகியவை எனக்கு charming ஆக இருந்தன.

ஆனால் முதலியாரின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவர் கட்டுரைகளைத்தான். அவை இன்றும் படிக்கக் கூடிய நடையில் இருக்கின்றன. சரளமாக எழுதி இருக்கிறார். இதே காலத்தில் எழுதிய பரிதிமால் கலைஞரை எல்லாம் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இந்த நடையை அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

தமிழ் (1904) என்ற தலைப்பில் தமிழ் மொழி, இலக்கண இலக்கியம், வடமொழி, தமிழரின் பூர்வீகம், பழமொழிகள், ஜாதிகள் என்று பலவற்றையும் பற்றி அன்று தெரிந்ததை வைத்து சிறப்பாக கட்டுரை எழுதி இருக்கிறார். இன்றும் படிக்கக் கூடியவையே. அவரது தமிழ்ப்பற்று தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அது வெறி ஆகிவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தமிழ் வியாசங்கள் (1915) என்றும் பலவும் எழுதி இருக்கிறார். இவை அனேகமாக அறிவுரைகள். நான் ரசித்தது அதில் அங்கும் இங்கும் வரும் பழமொழிகளைத்தான். சிறு வயதில் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள – “பிள்ளைக்கு வாத்தியார், பெண்ணுக்கு மாமியார்” ! என் பெண்களிடம் சொன்னால் அடிக்க வருவார்கள், ஆனால் இது மூன்று தலைமுறைக்கு முன் உண்மையாக இருந்திருக்கும்தானே! (என் அத்தை ஒருவருக்கு என் அம்மாவுடன் ஏதோ தகராறு வந்தபோது சிறுவனான என்னிடம் “நாத்தனாரை எதிர்த்துப் பேசுகிறாளே உன் அம்மா!” என்று குறைப்பட்டுக் கொண்டாள். நாத்தனார் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது என்று எனக்கு தோன்றிய அதே சமயம் என் அம்மாவுக்கு 20 வருஷம் மூத்த என் அத்தைக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தோன்றியது. தினமும் ஒரு அணா சேமித்தால் “ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை!” – அதாவது ஆயிரம் நாளில் 62.50 ரூபாய் சேருமாம்.

தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கம்பன் (1902), திருவள்ளுவர் சரித்திரம், கண்ணகி சரித்திரம் (1905), அக்பர், குசேலர் சரித்திரம், மஹாதேவ கோவிந்த ரானடே ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். பஞ்சலட்சணம் என்னும் இலக்கண நூலையும் (1903) மாணவர்களுக்காக எழுதி இருக்கிறார். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையில் கற்பலங்காரம் என்ற நாவலையும் எழுதினாராம். வ.உ. சிதம்பரம் பிள்ளை இவருடன் சேர்ந்து தமிழாராய்ச்சி செய்திருக்கிறார். ராபின்சன் க்ரூசோ நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

முதலியார் தமிழ் இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு பற்றி தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். குறுந்தொகையில் நான்கு விழுக்காடு வடமொழிச் சொற்களாம். ஔவையார் பாடல்களில் எட்டு விழுக்காடாம். நான்மணிக்கடிகையில் 20 சதவிகிதமாம். திருக்குறளில் அதிகாரத்துக்கு ஒன்றிரண்டு வடமொழி வார்த்தைகளாம். நாலடியாரில் ஐந்து பாடல்களுக்கு ஒரு வடமொழி சொல்லாம். கரைத்துக் குடித்திருக்கிறார்.

முதலியாரின் மகன்களின் பெயர்கள்: பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

அ .கா. பெருமாளின் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு சொல்லகராதி

அ .கா. பெருமாளின் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு சொல்லகராதி குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரது உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதுவும் உதவித் தொகை எதுவும் பெறாமல் சொந்தச் செலவில் அலைந்து திரிந்து 3000த்துக்கும் மேற்பட்ட சொற்களை சேகரித்திருக்கிறார். ஆனால் முன்னுரையில் சில சொற்றொடர்கள் ஏதோ ஒரு ஜாதியோடு அடையாளப்படுத்தப்படுகின்றன, அதனால் அவற்றை சேர்த்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்று அவர் எழுதி இருப்பது கொஞ்சம் சோகப்படுத்தியது. எதில்தான் ஜாதி என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போகிறது. வையாபுரிப் பிள்ளை அகராதியைத் தொகுத்தபோதும் இதே மாதிரி பிரச்சினைகளை எதிர்கொண்டார், ‘பார்ப்பனச்சேரி’, ‘சான்று’ (கள் என்று அர்த்தமாம்), ‘கும்பகோணம்’ (பித்தலாட்டம் என்று ஒரு அர்த்தம் இருப்பதாக வின்ஸ்லோ அகராதி சொல்கிறதாம்!) போன்ற வார்த்தைகள் அவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தினவாம்.

அகராதியைப் படிக்க முடியாது. 🙂 ஆனால் அங்கங்கே கண்ணில் பட்ட சில வார்த்தைகள் வியப்பூட்டின. ‘அக்கடா’ (அக்கடான்னு நாங்க உடை போட்டா என்று பிரபல பாட்டு வேறு இருக்கிறது), ‘அக்கி’ (அம்மை நோயில் உடலில் எழும் கொப்புளங்கள்), அசத்து (பிராமணர்கள் அசடு என்பதை இப்படியும் சொல்வார்கள்), ‘இளவட்டம்’, ‘உண்டாயிருத்தல்’ (கர்ப்பமாக இருப்பது – காசேதான் கடவுளடா திரைப்படத்தில் சென்னைத் தமிழ் பேசும் போலி சாமியார் தேங்காய் “மங்களம் உண்டாகட்டும்” என்று ஆசீர்வதிக்க, நாயகி லட்சுமி பக்கத்து வீட்டு மங்களம் கர்ப்பமா என்று கேட்பார்), ‘லங்கோடு’, ‘உண்டியல்’ எல்லாம் ஹிந்தியிலிருந்து வந்தவை, என்ன நாஞ்சில் நாட்டுக்கு மட்டும்தான் வந்தவையா? ‘உதிரிப்பூ’, ‘எலிப்பொறி’, ‘ஓட்டை’, ‘கண்மூடித்தனம்’, ‘கணிசம்’, ‘காக்காய்வலிப்பு’, ‘கும்பி’, ‘கெட்டிக்காரன்’, ‘சம்மணம்’, ‘மட சாம்பிராணி’, ‘சீம்பால்’ ‘டம்ளர்’, ‘பட்டாளம்’, ‘பப்படம்’, ‘பருக்கை’, ‘மத்தியானம்’, ‘மயிராண்டி’, ‘மல்மல்’, ‘மொக்குதல்’, ‘ரேக்ளா’, ‘ருசுப்படுத்தல்’, ‘வக்கணை’, ‘வயசுக்கு வருதல்’, ‘வழுக்கை’ (இளநீரின் தேங்காய் பருப்பு) எல்லாம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கா? சென்னையில் பிறந்து செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களிலும் சென்னையிலும் வளர்ந்து சேலத்தில் படித்த நானும் என் குடும்பத்தினரும் சரளமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை…

அ.கா. பெருமாள் நாட்டார் தெய்வங்கள் பற்றி எழுதிய சில கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

அன்னை மாயம்மா கன்யாகுமரியில் ஒரு பெண் ‘சாமியாரை’ பற்றி எழுதப்பட்டது. இதெல்லாம் அந்த சாமியாரின் பக்தர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

நாட்டுடமை ஆன எழுத்து 5: முன்னாள் நியூ காலேஜ் பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார்

பாலூர் கண்ணப்ப முதலியார் பேரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது 2009-இல் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். மறைந்த சேதுராமன் வழக்கம் போல படாதபாடு பட்டு அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிப் பதித்தார். மறைந்த டோண்டு ராகவன் முதலியார் அவருக்கு பாடம் எடுத்திருக்கிறார் என்று சொன்னார். பள்ளி மாண்வர்களின் பாடப் புத்தகங்களை நிறைய எழுதி இருப்பார் என்று அவரது புத்தகப் பட்டியலிலிருந்து தோன்றுகிறது. அகராதி ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அகராதியில் தொகை அகராதி என்று ஒரு பகுதி – அரசர் கொடி என்றால் சேரர்களின் விற்கொடி, சோழர்களின் புலிக்கொடி, பாண்டியர்களின் மீன்கொடி – என்றை தொகுத்திருக்கிறார். அகத்தியத்தில் ஆரம்பித்து புத்தகங்களைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. என் கண்ணில் இது முக்கியப் பங்களிப்பு, இதற்காக மட்டுமே இவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாம்.

சேதுராமனின் பதிவில்

“இவரது எழுத்துகளை எல்லாம் அரசே பதிப்பித்தல் ஒழிய திரும்பி வருவது அபூர்வம்தான். பதித்தாலும் நான் படிக்கப் போவதில்லை என்பது அடுத்த விஷயம்.”

என்று கமெண்ட் அடித்திருந்தேன். அதிகமான், இலக்கிய தூதர்கள், கட்டுரைக் கதம்பம், கட்டுரைக் கொத்து, கவி பாடிய காவலர், கிரேக்க நாட்டு பழமைப் பண்புகள், குமுதவாசகம், புதுமை கண்ட பேரறிஞர், பொய்யடிமை இல்லாத புலவர் யார்?, தமிழ்ப்புலவர் அறுவர், தூது சென்ற தூயர், தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள், பாண்டி நாட்டுக் கோவில்கள் போன்ற நூல்களை புரட்டியும் பார்த்தேன். படிக்க முடியவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் என் கமெண்டை திரும்பிப் படிக்கும்போது உண்மையாக இருந்தாலும் அதை கொஞ்சம் பணிவாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது. வயதாகிறது, எனக்கே தெரியாமல் எனக்கு கொஞ்சம் முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.

என் கண்ணில் ஒரு அட்டவணைக்கு தேவை இருக்கிறது – பாடல் பெற்ற ஸ்தலம்-கோவில், பாடிய ஆழ்வார்/நாயனார், பாடல். பலரும் – கி.வா.ஜ., பாஸ்கரத் தொண்டைமான், கண்ணப்ப முதலியார் என்று தாங்கள் சென்ற கோவில்/பாடல் என்று எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு அட்டவணை இருந்தால் மிக நன்றாக இருக்கும். ஏற்கனவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, யாருக்காவது தெரிந்தால் சுட்டி கொடுங்கள்!

சேதுராமனின் குறிப்புகள்:

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாலூரிலே, வேளாளர் குலத்திலே, 1908ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ம் தேதி பிறந்தவர். பெற்றோர்கள் துரைசாமி முதலியார், மாணிக்கம்மாள். துரைசாமி முதலியார் செந்தமிழ்ப் பற்றும், சிவபிரானிடத்திலே பேரன்புமுடையவர். தம்முடைய புதல்வருக்கும் இவை இனிதமைய வேண்டுமென்று பெரிதும் முயன்றவர்.

கண்ணப்பர், பள்ளிக் கல்வியைக் கற்று முடித்த பிறகு, செந்தமிழ்க் கல்வி கற்பதிலே சிந்தையைச் செலுத்தினார். சென்னை கலாநிலைய இதழாசிரியர் டி.என்.சேஷாசல ஐயர் இவருக்கு ஆங்கிலத்தையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நன்கு கற்பித்தார். மேலும் மே.வீ. வேணுகோபால பிள்ளையிடம் நன்னூல் விருத்தி, தண்டியலங்காரம், திருவிளையாடற் புராணம், அஷ்டப் பிரபந்தம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களைப் பயின்றார். இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியரான கோ.வடிவேல் செட்டியாரிடம் திருக்குறள், திருவாசகமும், சூளை வைத்தியலிங்கம் என்பவரிடம் தேவாரத்தையும் இசையுடன் கற்றார். சித்தாந்த நூல்களை தாமே பயின்றார், வேண்டுமளவு சைவ சித்தாந்த நூலறிவையும் பெற்றுத் தம் அறிவைப் பெருக்கிச் சிறந்த தமிழறிஞரானார்.

நல்ல தமிழ்ப் புலமையை அடைந்த இவர், பின்னர் ஆசிரியத் தொழிலில் ஈடுபடலானார். புரசைவாக்கம் லூதெரன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் துணைத் தமிழாசிரியராக எட்டாண்டுகள், முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளியில் நான்காண்டுகள், திருவல்லிக்கேணி கெல்லட் உயர் நிலைப் பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், இராயப்பேட்டை புதுக் கல்லூரியில்தொடக்க காலத்தில் இருந்து பதினாறாண்டுகள் வரை தமிழ்த்து ைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கினார்.

சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல பணிகள் புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழுவிலும் சிறந்த முறையில் நற்பணியாற்றினார்.

தெய்வானையம்மையார் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்தியவருக்கு ஏழு பெண்மக்கள் தோன்றினர். ஆசிரியராகப் பலருக்குக் கல்வி கற்பித்ததோடு நிற்காமல் பின் கண்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

  • அதிகமான்
  • அமலநாதன்
  • அறுசுவைக் கட்டுரைகள்
  • அன்புக் கதைகள்
  • இங்கிதமாலை உரை
  • இலக்கிய வாழ்வு
  • இலக்கியத் தூதர்கள்
  • இன்பக் கதைகள்
  • கட்டுரைக் கதம்பம்
  • கட்டுரைக் கொத்து
  • கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்
  • கலை வல்லார்
  • கவி பாடிய காவலர்கள்
  • சங்க கால வள்ளல்கள்
  • சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம்
  • சிறுவர் கதைக் களஞ்சியம்
  • சீவகன் வரலாறு
  • சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை
  • தமிழ் இலக்கிய அகராதி
  • தமிழ் நூல் வரலாறு
  • தமிழ் மந்திர உரை
  • தமிழ்த் தொண்டர்
  • தமிழ்ப் புதையல்
  • தமிழ்ப் புலவர் அறுவர்
  • தமிழர் போர் முறை
  • திருஈங்கோய் மலை எழுபது உரை
  • திருக்குறள் அறத்துப்பால் உரை நடை
  • திருமணம்
  • திருவருள் முறையீடு உரை
  • திருவெம்பாவை உரை
  • தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
  • தொழிலும் புலமையும்
  • நகைச்சுவையும் கவிச்சுவையும்
  • நானே படிக்கும் புத்தகம்
  • நீதி போதனைகள்
  • பல்சுவைப் பாமாலை குறிப்புரை
  • பழமை பாராட்டல்
  • பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
  • புதுமை கண்ட பேரறிஞர்
  • பொய்யடிமையில்லாத புலவர் யார்?
  • மாண்புடைய மங்கையர்
  • வையம் போற்றும் வனிதையர்
  • வள்ளுவர் கண்ட அரசியல்
  • ஜான்சன் வாழ்க்கை வரலாறு
  • மாணவர் தமிழ்க் கட்டுரை
  • மாணவர் திருக்குறள் விளக்கம்
  • தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • நடுநிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • பூந்தமிழ் இலக்கணம்
  • புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும்
  • நடுநிலை வகுப்பு குமுத வாசகங்கள்
  • உயர்நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு
  • உயர்நிலை வகுப்பு தமிழ்ப் புதையல்

கண்ணப்ப முதலியார் தம்முடைய இறுதிக் காலத்தில், சென்னை பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பணி நிறைவேறு முன்னரே தமது அறுபத்திரண்டாம் வயதில் 1971ம் ஆண்டு மார்ச்சு 29ம் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

(தகவல் — “தமிழ்ப் புலவர் வரிசை” பத்தாம் பகுதி, இருபத்தியொன்பதாம் புத்தகம் — ஆசிரியர் திரு சு.அ.இராமசாமிப் புலவர் — வெளியிட்டோர் ‘திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் – சென்னை 1973)

ஆர்வி: இவரது எழுத்துகளை எல்லாம் அரசே பதிப்பித்தல் ஒழிய திரும்பி வருவது அபூர்வம்தான். பதித்தாலும் நான் படிக்கப் போவதில்லை என்பது அடுத்த விஷயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து, தமிழறிஞர்கள்

 

நாட்டுடமையான எழுத்து 4: வள்ளியம்மாள் பள்ளி நிறுவனர் அ.மு. பரமசிவானந்தம்

பரமசிவானந்தம் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் எழுதிய சில நூல்களின் மூலமும், அவர் ஆற்றிய சில உரைகளின் மூலமும்தான். தமிழறிந்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது. தமிழ் உரைநடை என்ற புத்தகம் உரைநடையின் வளர்ச்சியை நன்றாகப் புரிய வைக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி போன்றவை முக்கியமான ஆவணங்கள். ஆனால் அவரது பல நூல்கள் – தாய்மை, மணிபல்லவம் போன்றவை – எனக்கானவை அல்ல. புனைவான துன்பச்சுழல் அவர் எழுதிய காலத்திலேயே படிக்க முடியாது.

பரமசிவானந்தம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை முதல்வராக இருந்திருக்கிறார். அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. வள்ளியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியை 1968-இல் நிறுவி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து, தமிழறிஞர்கள்

தமிழறிஞர் வரிசை – பெ.நா. அப்புசாமி

என் பதின்ம வயதுகளில் Men of Mathematics என்றால் ஏழெட்டு வயதில் பெ.நா. அப்புசாமி விஞ்ஞானிகள் பற்றிய எழுதிய இரண்டு தொகுப்புகள். அந்தக் காலத்தில் என் வயதுப் பையன்களிடம் நீ பெரியவனாகி என்ன ஆகப்போகிறாய் என்று கேட்டால் கலெக்டர், டாக்டர், அரசு வேலை, 4 figure salary, கிரிக்கெட் வீரன், நடிகன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் விஞ்ஞானி ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அறிவியல் பற்றிய பிரக்ஞையை உருவாக்கியவர் அப்புசாமிதான். (எனக்கு ஒரு பிம்பமும் இருந்தது – குறுந்தாடியோடு கண்ணாடியும் வெள்ளை நிற ஏப்ரனும் அணிந்து டெஸ்ட் ட்யூப்களில் வண்ண வண்ண திரவங்களை கலந்து கொண்டிருப்பதுதான் விஞ்ஞானிக்கு முக்கிய அடையாளம், டெஸ்ட் ட்யூப்களிலிருந்து புகை வர வேண்டியது மிக அவசியம்)

பெ.நா. அப்புசாமியின் இரண்டு வால்யூம் புத்தகங்களையும் ஏழெட்டு வயதில் கிராம நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது எனக்கு இன்றும் அழியாத நினைவுதான். இன்னும் எந்த அத்தியாயத்தில் யாரைப் பற்றி எழுதினார் என்பது கூட நினைவிருக்கிறது. அரிஸ்டாட்டில் (நான்காவது அத்தியாயம்), கேலன் (ஆறாவது அத்தியாயம்), வெசாலியஸ் (ஒன்பதாவது அத்தியாயம்), ராபர்ட் ஹூக் (17-ஆவது அத்தியாயம்?), நியூட்டன் (18ஆவது அத்தியாயம்) பற்றி எழுதியவை இன்னும் நினைவிருக்கின்றன. எனக்கு அறிவியலில், கணிதத்தில் ஆர்வம் பிறந்ததற்கு முக்கியமான காரணம் இந்தப் புத்தகங்கள். முக்கியமான விஷயம், ஏழெட்டு வயது பையனுக்கு எல்லாம் புரிந்துவிடவில்லை, ஆனால் நிறைய புரிந்தது. அதனால் அறிவியலில் ஆர்வம் வலுத்தது.

அப்புசாமி அசப்பில் என் பெரியப்பா பி.எஸ்.ஒய். நாராயணன் போல இருப்பார். அதுவும் அவரது கவர்ச்சிக்கு ஒரு காரணம்.

பிற்காலத்தில் நினைத்ததுண்டு – இந்தப் புத்தகங்கள் நூலகங்களில் ஆயிரம் பிரதிகள் இருந்திருக்குமா? இரண்டாயிரம் பேர் படித்திருப்பார்களா? 100 பேருக்காவது அறிவியலில் ஆர்வம் பிறந்திருக்குமா? 100 பேர் வாழ்க்கையை தன் புத்தகங்கள் மூலம் மாற்றினார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை!

அவரைத் தவிர அந்தக் காலத்தில் “கல்வி” கோபாலகிருஷ்ணன் என்று ஒருவரும் அறிவியல் பற்றி எழுதினார். குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் மகன் ஏதோ மாத்திரையை சாப்பிட்டுவிட்டு மினியேச்சர் சிறுவனாக மாறி மனித உடலுக்குள் சென்று ரத்தம், குடல், பாக்டீரியாவைப் பார்ப்பது என்று போகும். ஆனால் அவர் சிறுவர்களுக்காக எழுதுகிறார் என்பது அந்த வயதிலேயே தெளிவாகவே தெரியும். அவ்வப்போது குழந்தைத்தனமாக இருக்கும். அப்புசாமி வேறு லெவலில் இருந்தார். அவர் எழுதியது சிறுவர்களுக்காக அல்ல, ஆனால் சிறுவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றைத் தவிர தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுதிய “அப்போலோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்” என்ற புத்தகமும் என் கனவுகளைத் தூண்டியது. நாசாவைப் பற்றிய புத்தகம், நிறைய புகைப்படங்கள். அன்றைய விலை பத்து ரூபாய்!

தமிழில் அறிவியலை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் முனைந்தவர் அப்புசாமி. வேறு சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கலைக்கதிர் என்ற அறிவியல் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அவருக்கு எத்தனை ஜே போட்டாலும் தகும்.

சீனிவாச கோபாலனின் மறுமொழியிலிருந்து: (அவருக்கு நன்றி!)

தமிழிணையம் இணைய நூலகத்தில் இவரது நூல்கள் கிடைக்கின்றன. தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொகுதிகள் மூன்றும் ரயிலின் கதை நூலும் கிடைக்கின்றன. அப்புசாமிக்குப் பெரியப்பா அ. மாதவையா. பெரியப்பா சொல்லி எழுதத் தொடங்கினாராம். அப்படி அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பே வசீகரமானது. பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?. வசனமும் கவிதையும் என்ற பெயரில் அமெரிக்க இலக்கிய வரலாறும் எழுதியிருக்கிறார். சில நூல்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். விஞ்ஞானமும் விவேகமும் என ஜேம்ஸ் கோனன்ட் நூலின் மொழியாக்கமும் தமிழிணையத்தில் கிடைக்கிறது. இலக்கியப் பூந்துணர் என பாடப்புத்தகத்துக்கு படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். அதில் அவரது தேர்வுகள் அவரது ஆளுமைக்குச் சான்று பகர்கின்றன. நினைவுகூர்ந்து போற்ற வேண்டிய அறிவியல் தமிழ் முன்னாடி.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்