ரெயினீஸ் ஐயர் தெருவைப் படிக்க சரியான மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன். படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் இந்த வயதில், இந்த மனநிலையில் எனக்கு கொஞ்சம் போரடித்தது. ஆனால் ஏன் இந்தப் படைப்பு பொதுவாக பாராட்டப்படுகிறது என்பதும் புரிந்தது. 20-25 வயதில் படித்திருந்தால் எனக்கும் இன்னும் பிடித்திருக்க வாய்ப்புண்டு.
நாவலின் பின்புலம் பெண்கள். அதுவும் “அடுக்களைப் பெண்கள்”. சில பெண்கள் டீச்சர் வேலைக்குப் போனாலும் அவர்களும் “அடுக்களைப் பெண்களே”. அன்பானவர்கள். ஆண்களுக்குக் கூட கொஞ்சம் பெண்தனம் உண்டு. குடிகார தியோடோராக இருந்தாலும் சரி. மெல்லிய சோகம் எல்லாருக்கும் உண்டு. சில சமயம் காரணம் உண்டு – நோயாளி கணவன், பெற்றோரை இழந்த டோரதி போல. ஆனால் காரணம் தேவையே இல்லை. மீண்டும் மீண்டும் இந்த template ரெயினீஸ் ஐயர் தெருவின் ஒவ்வொரு வீட்டுப் பெண்கள் மூலமும் விவரிக்கப்படுகிறது. கதை என்றோ நிகழ்ச்சிகள் என்றோ பெரிதாக எதுவும் கிடையாது.
கதையின் பலம் நெகிழ்ச்சிதான். அதை உருவாக்க வேண்டும் என்றுதான் வண்ணநிலவன் முயன்றிருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நோயாளி கணவன் மேல் பாசம் குறையாத மனைவி, வயதான தம்பதிகளுக்கு உதவும் தியோடர் என்று அது பல பாத்திரங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. பதின்ம வயது ஈர்ப்பும் நன்றாக விவரிக்கப்படுவது
நாவலின் சிறந்த இடம் வயதான தம்பதிகளுக்கு குடிகார தியோடர் உதவி செய்வது. ஃபிலோமிக்கு அத்தான் மேல் உள்ள ஈர்ப்பு விவரிக்கப்படும் விதம்.
நாவலில் வரும் கல்யாணி அனேகமாக வண்ணதாசனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எஸ்ரா இந்த நாவலால் கவரப்பட்டிருக்கிறார். ஜெயமோகன் இதை சிற்றிதழ் மொழியில் எழுதப்பட்ட பாலகுமாரத்தனமான நாவல் என்று நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறார். நான் எங்கோ நடுவில். கம்பாநதி, கடல்புரத்தில் இரண்டோடும் ஒப்பிட்டால் இதற்கு மேலான இடத்தை நிச்சயமாகத் தருவேன்.
கறாராகச் சொன்னால் படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. ஆனால் தமிழிலக்கியத்தில் ஒரு டிக்மார்க் அளவுக்கு முக்கியத்துவம் உண்டு.
தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்