வெண்முரசு முடிந்துவிட்டது. 7-8 வருஷம். இடைவிடாத எழுத்து. மகாபாரதத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார். ஏழெட்டு வருஷம் கை சலிக்காது எழுதுவதே பெரிய விஷயம். என்னென்னமோ மன உளைச்சல்களில் மனம் சலித்துப் போய் என்னால் முழுவதுமாக படிக்கக் கூட முடியவில்லை. இவர் மனம் சலிக்காது எழுதி இருக்கிறார். Quantity ஒன்றை மட்டுமே வைத்து இது அவருடைய சாதனை என்று சொல்லிவிடலாம். இந்த ராட்சசனைப் பற்றி பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
Quality-யும் உயர்தரத்தில்தான் இருக்கிறது (நான் படித்த வரையில்). குறிப்பாக – தமிழ் எழுத்தாளர்களில் 3 பேர் மேதைகள், அதில் ஜெயமோகன் ஒருவர் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவராலேயே இனிமேல் அவர் நீலம் பகுதியில் தொட்ட உச்சத்தை மீண்டும் தொட முடியுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் நீலம் பகுதியை நான் முழுவதாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று சொல்லமுடியாது. நீரில் மூழ்கி இருக்கும் பனிப்பாறை, எனக்குத் தெரிவது நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிதான். அடியில் பெரும்பாறை இருக்கிறது என்று தெரியும், ஆனால் எவ்வளவு பெரிது என்று சரியாகத் தெரியாது.
என் கண்ணில் முதற்கனல் ஒரு சாதனை. அதை மழைப்பாடலில் மிஞ்சினார். வண்ணக்கடல் அதையும் தாண்டியது. நீலம் இன்னொரு படி மேலேறி வேறு லெவலுக்குப் போனது. அதற்குப் பிறகு அந்த உச்சத்தை அவராலேயே மீண்டும் அடையமுடியவில்லை என்றுதான் கருதுகிறேன்.
நான் மீண்டும் மீண்டும் படிப்பது வண்ணக்கடல். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது மீள்வதற்காக ஏதாவது ஒரு அத்தியாயத்தை படிப்பேன்.
என் மன உளைச்சல்களாலோ, இல்லை மகாபாரதப் பாத்திரங்களைப் பற்றி என் பிம்பங்களிலிருந்து அவர் அவ்வப்போது சற்று விலகுவதாலோ, இல்லை எனக்கு தர்க்கரீதியான முரண்பாடுகள் சில அவ்வப்போது தெரிந்ததனாலோ நீலத்துக்குப் பிறகு நான் அவ்வப்போதுதான் படித்தேன். என் காக்காய்கடி படிப்பில் குறிப்பாக துரோணரை தேவையில்லாமல் குறைக்கிறார், கர்ணனுக்கு அளவுக்கு அதிகமான பில்டப் கொடுக்கிறார், இருமை/ஆடிப்பாவை என்ற கருத்தை எல்லா இடங்களிலும் வலிந்து புகுத்துகிறார் (அர்ஜுனன் கர்ணன், பீமன் துரியோதனன் என்றால் சரிதான், கண்ணன் கணிகர், சாத்யகி கிருதவர்மன் என்று பல…) என்று தோன்றியது. சில சமயம் எனக்கு மெகாசீரியல் போல இழுக்கிறார் என்றும் தோன்றத்தான் செய்தது. தினமும் படிக்காமல் ஒரே மூச்சில் படித்தால் இழுக்கிறார் என்று தோன்றாது என்று நினைக்கிறேன்.
ஆனால் மனிதன் கரப்பான் பூச்சியாக எப்படி மாறமுடியும், Metamorphosis-ஐ சிறுகதையாக எழுதி இருந்தால் போதாதா, நாவலாக இழுக்க வேண்டுமா என்றும் கேட்கலாம். Guernica ஓவியத்தில் இடது மூலையில் இரண்டு விரலை வரைந்தால் போதாதா, ஐந்தும் வேண்டுமா மாதிரி எண்ணம்தான் அது. மேதைகளின் படைப்பில் நாம் கண்டுபிடிக்கும் குறைகள் நம்மைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.
குறைகளே அற்ற படைப்பு, விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்று நான் சொல்ல வரவில்லை. இத்தனை பெரிய நாவலில் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பொருட்படுத்தக் கூடிய குறைகள் இருக்கும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் எழுதுவதில் சிறு உறுத்தல் இருந்தாலும் எனக்கு பூதாகாரமாகத் தெரியும் என்பதும் உண்மைதான்.
படிப்பதற்கு நிறைய இருக்கிறது. அது ஒரு சின்ன சந்தோஷம்…
ராட்சசனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: வெண்முரசு பக்கம்