விசுவின் விஷ்ணுபுரம் பதிவுகள்

நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம் ஏழாம் உலகம். திலீப்குமாரின் மனைவி அதை என் கையில் கொடுக்கும்போதே சொன்னார், இது depressing ஆக இருக்கும், ஆனால் கீழே வைக்க முடியாது என்று. சரியாகத்தான் சொன்னார். ஆனால் எனக்கு அதைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம், உருப்படிகளுக்குக் கூட என்பது தெரிந்தது. அப்புறம் ரப்பரைப் படித்தேன். நல்ல நாவல், ஆனால் முழு வெற்றி இல்லை என்று தோன்றியது. பிறகு படித்த கன்யாகுமரி எனக்கு சரிப்படவே இல்லை. ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் சைஸ் பயமுறுத்தியதால் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், கன்யாகுமரி எல்லாம் படித்த பிறகு படிப்பதற்கான உந்துதலும் குறைவாகத்தான் இருந்தது. அப்புறம் வழக்கம் போல ஒரு நீளமான விமானப் பயணத்தில் விஷ்ணுபுரத்தைப் பிரித்தேன்.

ஆரம்பித்த சில பக்கங்களுக்குள் பெரிய பிரமிப்பில் மூழ்கிவிட்டேன். புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. நான் படித்த தமிழ் புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று. படிக்கும்போதே ஜெயமோகன், அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் லெவலுக்கு என் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகும் நான் விஷ்ணுபுரத்தின் பக்கம் போகவே இல்லை. கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்திருக்கிறேனே தவிர, இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை, எத்தனையோ நுட்பமான இடங்களை கவனிக்கத் தவறிவிட்டேனோ என்று ஒரு சந்தேகம்.இப்படி எல்லாம் சந்தேகப்படுபவனே இல்லை, அப்படியே அபூர்வமாக சந்தேகம் வந்தாலும் அதைப் பொருட்படுத்தவும் மாட்டேன். ஆனால் விஷ்ணுபுரத்தைப் பற்றி எழுதும் அளவுக்கு எனக்குப் பத்தாது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. விசுவின் பதிவுகளைப் படிக்கும்போது அந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

விஷ்ணுபுரத்தைப் பற்றி நல்ல மதிப்புரைகள் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் எழுதியது மதிப்புரையே கிடையாது. அது என் பிரமிப்பைப் பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான். பா.ராகவனின் மதிப்புரையை ஸ்ரீனிவாசின் உதவியோடு இங்கே பதித்திருக்கிறேன், ஆனால் அதுவும் நல்ல மதிப்புரை இல்லை. பாராட்டுபவர்களை, திட்டுபவர்களை, இந்தா தடிதடியா எழுதினா எவன் படிப்பான் என்று அலுத்துக் கொள்பவர்களை பார்த்திருக்கிறேன். சீர்தூக்கிப் பேசியவர்கள் அபூர்வம். நண்பர் பாலாஜி ஒரு முறை இஸ்லாமியத் தாக்கம் பற்றி பேசாததால் நாவல் முழுமை அடையாதது போல இருக்கிறது என்று சொன்னார், நான் கேட்ட ஒரே ஒரு உருப்படியான விமர்சனம் அதுதான். சரியோ தவறோ, அப்படியா என்று யோசிக்க வைத்த விமர்சனம்.

விசு அப்படி முயன்றிருப்பது முக்கியமான விஷயம். அதுவும் அனேகமாக எல்லாரும் கதைச்சுருக்கம் எழுதுவதிலேயே தாவு தீர்ந்து போய் அதற்கு மேல் தம் கட்ட முடியாமல் கிடுகிடுவென்று முடித்துவிடுவார்கள். விசு கதைச்சுருக்கத்தை ஒரு பகுதியாகப் பிரித்து இந்தப் பிரச்சினையைத் தாண்டி இருப்பது புத்திசாலித்தனமான விஷயம். விசுவின் பதிவுகளும் அப்படி முழுமையானவை அல்லதான். ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாரும் குருடர்கள் யானையத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் அவர் பகுதி பகுதியாகப் பிரித்தது நல்ல முயற்சி. வரலாறு, தத்துவம், கவித்துவம், காவிய மரபு, மொழி, கதாபாத்திரங்கள் என்று ஒரு taxonomy-ஐ உருவாக்கி இருக்கிறார். அப்படி பகுப்புகளை ஆரம்பித்து வைத்திருப்பதையே நான் விசுவின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

குறிப்பாகச் சொல்வதென்றால் தத்துவம் என்ற பகுப்பில் விசு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த பதிவு. சிறப்பான ஆரம்பம்.

எனக்கு இன்றும் விஷ்ணுபுரம் அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆடும் ஆட்டத்தை விவரிப்பதுதான் முக்கியமான கூறு. அநேகமானவர்களுக்கு தத்துவ விவாதங்கள்தான் முக்கியம். எனக்கோ தத்துவம் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு பத்தாது. தர்க்கத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தர்க்கத்தில் குறைகள் இருக்கின்றனதான், ஆனால் அதை விட சிறந்த கருவி நம்மிடம் இல்லை. தர்க்கத்தில் குறை இருக்கிறதே, அதனால் நான் தர்க்கத்தை பயன்படுத்த மாட்டேன் என்பதெல்லாம் எனக்கு பரம முட்டாள்தனமாகவே தெரிகிறது. குறை இல்லாத கருவி கிடைக்கும் வரைக்கும் நான் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. Occam’s Razor எப்போதாவது நம்மைத் தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும் சாத்தியக் கூறு இருக்கிறதுதான், அதற்காக அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. Godel’s Incomplete Theorem எல்லா உண்மைகளையும் ஒரு axiom based system நிறுவ முடியாது என்பதை நிறுவுகிறது, அதனால் கணிதத்தைத் தூக்கிப் போட்டு விடுவோமா? அப்படிப்பட்ட நானே விஷ்ணுபுரத்தின் தத்துவ விவாதங்களை நான் ரசித்துப் படித்தேன். எனக்குப் புரியாத இடங்கள் இருந்தனதான். ஆனால் புரியும்போதெல்லாம் தர்க்கம் என்ற முறையின் வெளிப்படுத்துதலை ரசித்தேன். தத்துவ விவாதங்களில் பெரிதாக அக்கறை இல்லாத என்னையே இப்படி கட்டிப் போட்டது ஜெயமோகனின் சாதனை!

ஜெயமோகனே புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை தன் ஆரம்பப் புள்ளி என்று சொல்லி இருக்கிறாராம். எனக்கு விசு மூலம்தான் தெரியவந்தது. அதற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி!

விசுவின் பதிவுகளின் மீது எனக்கு விமர்சனம் என்று மூன்று உண்டு.

  1. ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் போகப் போக கொஞ்சம் குறைந்து விடுகிறது. பிந்தைய பதிவுகளில் விசு கொஞ்சம் களைத்துவிட்டது தெரிகிறது.
  2. விஷ்ணுபுரத்தில் வரலாற்றைத் தேடுவது என்னைப் பொறுத்த வரையில் வீண் முயற்சி. அப்படித் தேடுவதென்றால் தத்துவங்கள், சிந்தனா முறைகள் வளர்ந்த வரலாற்றைத்தான் பேச வேண்டும்.
  3. அதிகார ஆட்டம், தொன்மங்கள் உருவாவது போன்றவை விஷ்ணுபுரத்தின் முக்கியக் கூறுகள். அவற்றைப் பற்றி விசு இன்னும் விவரித்திருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் எல்லாமே குருடன் யானையைத் தடவி உணரும் கதைதான். ஒவ்வொருவரும் பேசும்போது இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்கிறேன். விசுவின் பதிவுகள் அளவுக்கு உபயோகமான அலசல் இன்னும் எனக்குத் தெரிந்து வரவில்லை. இனி மேல் வரும் அலசல்களும் அவர் உருவாக்கி இருக்கும் பகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

பின்குறிப்பு: ஜெயமோகன் முன்னிலையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பல சீரியஸ் வாசகர்கள் கலந்து பேசும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் ஜெயமோகன் அதைத் தவிர்த்துவிட்டார். அது நடந்திருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

விஷ்ணுபுரம் – முடிவுரை

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

“அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி.” – விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிக்கு அங்கீகார ரீதியாகவும், பொருளியல் ரீதியாகயும் இழப்புதான். மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக புரியும். மொழி பெயர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது. சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன் “இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. நான் படித்தவைகளில் முதன்மையானது”.

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – போரும் அமைதியும் (ஒருமுறை படித்திருக்கிறேன்), பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களோடும் ஒப்பிட்டு எப்போதாவது எழுத வேண்டும்.

நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்தான். ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயன் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை. டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது. தமிழைப் பொறுத்த வரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literatureல தமிழ்ல ஒண்ணும் பெருசா இல்லை போல’ என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பர் அருண் பரத், ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்-வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப் போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.

ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி, சித்ரா). இவர்களிடம் உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி.

நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுது கொண்டே பாதி படித்தார். இது மாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் :-). இப்போதுதான், கொற்றவையை ஒரு முறை படித்து முடித்தேன். விஷ்ணுபுரம் கல்யாண விருந்தென்றால், கொற்றவை தேன்குடம். ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு. இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்க்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)

புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.

சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.

அபுனைவு – சங்க சித்திரங்கள், இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள், கொடுங்கோளூர் கண்ணகி

விஷ்ணுபுரம் தொடர்பதிவுகள் நிறைவு பெறுகின்றன

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள்

விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா? ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா? பதில் எல்லாம்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து/பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப் பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் இங்கே. அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டது போல இருந்தது.)

கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் வைதீக மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வைதீகம், பின்பு ஐம்பதாண்டுகளுக்கு பௌத்தம், மீண்டும் வைதீகம், பின்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. பழைய கம்போடியாவில் அரச அதிகாரத்தின்/மதத்தின்/தத்துவத் தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர். குமெரையும், வடமொழியையும் எழுத அவர்கள் பயன்படுத்திய எழுத்துரு பல்லவ கிரந்தம். வைதீகம் எப்படி அங்கே வந்தது? கம்போடியர்களின் தொன்மத்தின்படி, சோமா என்ற நாக வம்சத்து இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜ தேசத்தை சேர்ந்தவர்கள். (விஷ்ணுபுரத்தில் செம்பி-அக்னிதத்தன் கதை). ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள், இந்து மதம் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள். இடிபாடுகளில் சூழ்ந்திருந்த அங்கோர் கோவில்களை, மீட்டெடுத்து புனரமைத்தது ஐரோப்பிய அறிஞர்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், அவர்களது ஆய்வுகளை நான் ஏற்கவில்லை. குமெர்களின் இலச்சினை நாகம். ஒரு சில கோவில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் உள்ள சிலைகள் நாகங்களும், யட்சிகளும்தான் (அப்சரஸ்).

அங்கோரிலிருந்து 50 கி.மி தொலைவில், ஒரு குன்றின் மீதுள்ள கபால் ஸ்பியன் (kbal spean) என்ற இடத்தில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது; ஆற்றுப்படுகை முழுவதும் லிங்கங்களும், பாறைகளில் அனந்தபத்மநாபன் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. ஏதாவது தாந்திரீக இடமா, சிற்ப பள்ளிக்கூடமா என்று தெரியவில்லை. அந்த இடத்தை பார்த்தபோது, பிரசேனரும் திருவடியும் தந்திர சமுச்சயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதுபோல ஒரு பிரமையேற்பட்டது. அங்கோர் வாட்டைச் சுற்றியுள்ள முக்கியமான முப்பது கோவில்களை பார்ப்பதற்கே நான்கு நாட்கள் போதாது. கம்போடியா பயணம் பற்றி, நேரம் கிடைக்கும்போது விரிவான பயணக் கட்டுரையாக எழுதிகிறேன்.

பாங்காக் அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு ஓவியத்தில், விஷ்ணு புத்தரை வணங்குகிறார். (பார்க்க படம் – picasa – 67 ). தாய்லாந்திலும், கம்போடியாவிலும் ராமர் புத்தரின் அவதாரம். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ஒன்பதாம் ராமர்) ராமர் பரம்பரையைச் சேர்ந்தவர். (உண்மையிலேயே அப்படித்தான் சொன்னார்கள்). அவர்களின் முந்தைய தலைநகரம் பாங்காக்கிற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள அயுத்தாயா (அயோத்யா). அதேசமயம், இந்தியாவின் சில இடங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இங்கு கேள்வி விஷ்ணுவா புத்தரா என்பதில்லை. நாம் கவனிக்கவேண்டியது ஒரு மரபு ஓங்கும் பொழுது, இன்னொன்றை அழிக்க முற்படவில்லை; தன்னுள் இழுத்துக் கொள்ளவே முற்படுகிறது. (விஷ்ணுவின் சிலைகளோ, புத்தரின் சிலைகளோ உடைக்கப்படவில்லை. அவதாரமாக மாற்றிக்கொள்ளப்படுகிறது). இந்த ‘இழுத்துக் கொள்ளல்’ எவ்வாறு நடைபெறுகிறது என்று விஷ்ணுபுரம் தெளிவாகவே விளக்குகிறது.

இதேபோல சோட்டா நாக்பூர் மன்னர்கள், தங்களை நாக வம்ச ராஜபுத்திரர்கள் என்கிறார்கள். தொன்மங்களில் நாகங்களின் அரசனான கார்கோடகனுக்கும், காசியைச் சேர்ந்த பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து, மக்களால், அரச வம்சமாக கருதப்பட்டவர்கள். எல்லா இடங்களிலும் கதை ஒன்றுதான். மன்னர் ஷத்திரியராகி தர்மபரிபாலனம் பண்ண யமஸ்மிருதியோ, நாரதஸ்மிருதியோ இயற்றப்படுகிறது, பதிலுக்கு மன்னர் ஸ்மிருதி இயற்றிய அக்னிதத்தரையோ, கௌடின்யரையோ குலகுருவாக ஏற்று கோயில் கட்டுகிறார். இதன் மூலம் பெரிய அளவில் வன்முறையின்றி குலங்கள் தொகுப்பட்டு பேரரசாகின்றன.

“சிறுகுடிகளை ஒன்றிணைத்து, பேரரசுகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் தத்துவத்தின் அங்கீகாரம்; பின்பு அடைந்த அதிகாரத்தை தக்க வைக்க ஆடுப்படும் பகடையாட்டம்; இதற்கிடையில் மரணத்திற்கு பிறகென்ன? வாழ்க்கையின் பொருளென்ன? என்ற கேள்வியோடு ஓயாமல் தேடுபவர்கள் கண்டடைவதென்ன?” என்பதே விஷ்ணுபுரத்தின் மையக்கரு.

நிறைவு பெறுகிறது. நிச்சயமாக அடுத்த பதிவோடு முடிந்துவிடும்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்
விசுவின் கம்போடிய/தாய்லாந்து புகைப்படங்கள்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள்

விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி

விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். முதல் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…); இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள் (அஜிதன்); கவனமாகப் படித்தாலன்றி, இவற்றை நாம் தொடர முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி?) கதை மாந்தர்கள் மட்டுமல்லாது நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலில் எண்ணற்ற பண்டிதர்கள், கவிஞர்கள், குரு-சீடர்கள், யானைகள், தெருக்கள், சிலைகள் வந்தாலும், ஒன்றுடைய சித்தரிப்பு போல இன்னொன்று இல்லை. ஒரு உதாரணம்: கடலூர் சீனு ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் பொழுது புலர்வதை விவரிக்கிறார். (எப்படியெல்லாம் வாசிக்கறாங்கப்பா!!)

விஷ்ணுபுரத்தில் பொழுது புலரும் சித்திரங்கள் பல வருகின்றன. (பல வருகின்றன – திரும்பத் திரும்ப வரவில்லை) ஒரு பகல் அஜிதனின் புலர்வு. மற்றொன்று பவதத்தரின் பகல். மற்றொன்று புத்த பிட்சுக்களது. நாவலில் தனித்தனிப் பொழுது புலர்வு இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அது நமக்குப் புதிதாகவே இருக்கிறது. காரணம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம் ஆழ்மன பிம்ப அடுக்குகள் வேறு விதமாகக் கலைந்து அடுக்கப்படுகிறது. இன்னும் எத்தனை முறை படித்தாலும் விஷ்ணுபுரத்துப் பகல் புலர்வுக் காட்சிகள் புதிதாகவே இருக்கும்.

அடுத்த முறை விஷ்ணுபுரத்தை படிக்கும்போது, கதை மாந்தர்களை ஒட்டி வாசிக்கவேண்டும். இங்கு, ஒரு சிலரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

  1. சங்கர்ஷணன் சில இடங்களில் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கிறான். (தான் ஏன் காவியம் படைக்க வந்தேன் என்று அவன் விளக்கும் இடங்கள்.)
  2. லட்சுமி தன் மகன் அனிருத்தன் இறந்த பின் அடையும் வெறுமைகளையும், சங்கர்ஷணனின் மேல் அடையும் வெறுப்பையும், பின் பிங்கலனில் அனிருத்தனைக் கண்டடையும் தருணத்தையும் உளவியல் ரீதியாக ஆராயவேண்டும் என நினைக்கிறேன். (ஃபிராய்டிய நெடி? இல்லை யோகமரபு சொல்லும் ஆழ்மனதின் காரிருள்?) ஏழாம் உலகம் நாவலின் முடிவில் வரும் ‘ஒத்த விரலு’ காட்சியையும், காடு நாவலில், கிரிதரனின் தாய் அவன் வளர்ந்துவிட்டான் என்று உணர்த்தும் தருணமும், லட்சுமி-பிங்கலனோடு ஒப்பிடத்தக்கது. ஆனால், மற்ற இரண்டு நாவல்களின் தருணங்களையும் விட இது மிகத் தீவிரமானது.
  3. நரோபா-அஜிதர்-சங்ககீர்த்தி நிகழ்வுகள் ‘போதி‘ கதையை நினைவுபடுத்துகின்றன.

முதல் பகுதியிலும், மூன்றாம் பகுதியிலும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் வரும்போது, இரண்டாம் பகுதியில் ஏன் பெண்கள் யாரும் வருவதில்லை?

இந்நாவலில் வரும் ஜாதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இதில் வரும் விஷ்ணுவின் சிலை பழங்குடிகளின் சிலை, அதை மற்றவர்கள் அபகரித்துவிட்டார்கள் என்றே நாவல் சொல்கிறது. இதே கருவில் ஜெயமோகன் ‘மாடன் மோட்சம்‘ (மாடன் மோட்சம்) என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். சூர்யதத்தரோட சித்தரிப்பு, “ஞான விவாதங்களில் பங்கேற்கும் அளவிற்கு அறிவுவிருக்கறவங்கள, சோத்துக்கு அடிச்சிக்கறது போல சித்தரிப்பது” போன்றவற்றை காரணம் காட்டி, விஷ்ணுபுரம் பிராமணர்களைக் கிண்டலடிக்கிறது என்ற என் பிராமண நன்பர், அந்தப் பகுதிகளை திட்டிக்கொண்டே படித்தார். ஆமாம், பிராமணர்களை மட்டுமல்ல, ஆழ்வார்கள், மறக்குலம், பௌத்தர்கள், வணிக குலங்கள், பழங்குடிகள் என்று ஒருவரும் ஜெயமோகனின் அங்கதத்திலிருந்து தப்பவில்லை. (சுஜாதா, திருவடியின் சித்தரிப்பை படித்துவிட்டு, மேலும் நாவலை படிக்க மறுத்துவிட்டார் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.) இவராவது நாவலை படித்துவிட்டு திட்டினார், இன்னொருவர் (கழக அனுதாபி), செவிச்செல்வம் மூலமே நாவலை உய்த்துணர்ந்து, ‘ஒரு ‘வந்தேறி’ எப்படித் தமிழர்களக் கேவலப்படுத்தலாம்னு கேக்காம, இது மாதிரி ‘புல்லுருவிகள்’ தலைல தூக்கிவச்சி ஆடுதுங்க” என்று என்னையும் சேர்த்து வசை பாடினார். புனைவுகளை விடுங்கள், தரவுகள் அடிப்படையிலேயே கூட ஜாதிகள் / மதங்கள் பற்றி எழுதினாலும், எழுத்தாளர் வீட்டிற்கு ஆட்டோவோ/சுமோவோ வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

இதை எழுதத் தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். நான் பிராமணனோ, ‘வந்தேறி’யோ இல்லை. ‘அசல்’ தமிழன்தான் :-). இப்போதய தேவை, குல, இன, ஜாதி அடிப்படையிலெல்லாம் பார்க்காமல், ‘பொதிகை மலை பெருமை’ எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வரலாறை/பண்பாட்டை கறாரான பார்வையுடன் ஆய்ந்துவிட்டு கடந்து செல்லவேண்டும். தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தயாரில்லாத சமூகம் எப்படி ‘civilized’ என்று சொல்லிக்கொள்ள முடியும்? பிராமண காழ்ப்பு, வெள்ளையர்களின் ஆரிய-திராவிட ஆக்ரமிப்பு தியரி போன்றவை காலாவதியாகிவிட்டது. தமிழின் சிறந்த படைப்பாளியை ‘வந்தேறி’ என்று சொல்லும் மனநிலையை என்ன சொல்ல? இருவரும் என் நண்பர்கள்தான். என்றாவது புரியும் என்று நம்புகிறேன்.

தொடரும்… (அடுத்த பதிவோடு நிறைவு பெறுகிறது)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி

விஷ்ணுபுரம் – மொழி

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம்

இந்நாவலின் நடை, நமக்கு பரிச்சயமான யதார்த்த உரையாடல்களின் நடை மற்றும் பரிச்சயமில்லாத எண்ண ஓட்டங்களின் விரிவான காட்சி சித்தரிப்புகளின் நடை என்று இரு வகைப்பட்டது. (விஷ்ணுபுரத்தில் முதல் ஐம்பது பக்கங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதனால்தான் அது கடினமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன். கொஞ்சம் பழகிய பின், அது ஒன்றும் கடினமில்லை.) விஷ்ணுபுரத்தை ஜாலியாக படிக்க முடியவில்லையே என்று யாரோ கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதிலுடன் உடன்படுகிறேன். அதில் எனக்கு பிடித்த வரிகள்:

இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.

இப்போது, இலக்கிய எழுத்திற்கும் vs பொழுதுபோக்கு எழுத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு பரவலாகவே எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. இலக்கிய ஆக்கங்கள் கவனம் பெறுவது போலவே, பொழுதுபோக்கு/கேளிக்கை எழுத்துக்களின் காலகட்டம் முடிந்து அதை சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் Youtube ஆக்கிரமித்து வருடங்கள் பல ஆகின்றன. சுஜாதா போல ஜாலியாக, interesting ஆக எழுத இன்னொருத்தர் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். யோசிக்கும்போது, அதற்கான தேவை இன்று வேறு வழிகளில் நிறைவேறிவிட்டது, இனி ‘interesting’ எழுத்தாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று தோன்றுகிறது. (ஆனால் தமிழ் சினிமாவில் சுஜாதா போல ஒரு interesting வசனகர்த்தா மிஸ்ஸாகிறார்).

மேலும் நாவலில் வரும் காட்சிகள், ஒரு திரைப்படத்தை நம் மனதில் காணுமளவிற்கு, மிக விரிவாகவும், நுண்மையாகவும் சித்தரிக்கட்டிருக்கின்றன. (உதாரணம்: தோற்றுவாய் பகுதிகள், விஷ்ணுபுரம் போன்ற ஒரு கற்பனை நகரம் நம் கண் முன் எழுந்து வரும் சித்திரம். கதையில் வரும் கண்டாமணி, முதல் பகுதியின் ஆரம்பத்தில் ஓங்காரமிடுகிறது, அதன் இறுதியில் டங்காரமிடுகிறது, கடைசி பகுதியில் விளிம்புகள் உடைந்து சுரீலென்கிறது.) இந்த நாவலை பெரும் பகுதி சமஸ்கிருதத்திலும், மீதி தமிழிலும் எழுதியிருக்க வேண்டும். பெயர்கள் கூட கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மாறி மாறி வருகிறது. (உதாரணம் : விஷ்ணுபுரம் – அகல்வள நாடு; ஹரிததுங்கா – பசுங்குன்றம்/பச்சைமலை; பிரியதாரா – முத்தாறு; அக்னிதத்தன் – செந்தலைப்பட்டன்; வராகபிருஷ்டம் – பன்றிமலை; கஜபிருஷ்டம் – ஆனைக்கண்டி).

எல்லா காலத்திலும் விஷ்ணுபுரத்தின் அதிகார மொழியாக இருப்பது சமஸ்கிருதமே (அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழ்). ஞான விவாத சபையில் திபேத்திய நரோபா உட்பட சமஸ்கிருதம்தான் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் மறவர் குடிகளும், காணியக்காரர்களும் தமிழ் பெயருள்ளவர்கள், மற்றவர்கள் சமஸ்கிருதப் பெயருள்ளவர்கள். பழங்குடிகள் தமிழ் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் முதல் சர்வக்ஞரான அக்னிதத்தன் வட தேசத்தில் எங்கிருந்தோ வந்தவன் என்று விஷ்ணுபுரம் சொல்கிறது. நாவலிலே விஷ்ணுபுரத்தைப் பற்றிய கிட்டத்தட்ட நான்கு தோற்றக் கதைகள் வருகின்றது. நான்கிலுமே, அக்னிதத்தன் வடதேசமென்றும், பாண்டியன் தென்னவன் என்றும் சொல்கிறார்கள். தோற்றக் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியரி. ( “தென்னவன் தன் அதிகாரத்திற்காக அக்னிதத்தனை உபயோகித்துக்கொண்டான்” – சிற்பி , “செந்தலையன் பூசைகள் போட்டு பெருமூப்பனை கட்டி வைத்துள்ளான்” – மூப்பன், “பாண்டியன் மிலேச்சன். அவன் ஷத்திரியனானது யமஸ்மிருதி மூலம்” – பட்டர், “சமணக் குடும்பங்களிலிருந்து வைணவத்திற்கு மாறியவர்கள், வடமொழிக்கு உடன்பட மறுத்துவிட்டார்களாம். தனிக் கோயில் கட்டிக் கொண்டார்களாம். ஏன் நமக்கு அந்த கலை வராதோ?” – பீதாம்பரம், மாதரி-ஆத்தன் கதை சொல்லும் வீரநாராயணர்). இது பற்றி, நாவலில் மேலும் படித்து தெரிந்து கொள்க. இங்கே எழுத இடம் போதாது. நாவலில் ஆரிய-திராவிட இனங்கள், மொழிகள் பற்றி நிறைய புனைவு உண்மைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவை உண்மையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். (அதாவது, ஆரிய-திராவிட என இரு இனங்கள் கலந்தனவே தவிர ஆரிய – திராவிட ஆக்ரமிப்பெல்லாம் இல்லை; ஒன்றோடொன்று உரையாடுகிறது; அதிகாரத் தேவைகளுக்காக ஒன்றை ஒன்று ஏற்கிறது; கொண்டும் கொடுத்தும் வளர்கிறது.) இங்கேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன், நாவல், சமஸ்கிருதத்தையோ, தமிழையோ உயர்த்திப் பேசவில்லை; எல்லாமும் வெறும் அதிகார ஆட்டமாகிப் போகிறது. உதாரணம்: சூர்யதத்தரை அவமதிக்க, பாண்டியனின் அவைப் புலவரும், தமிழ் புலவருமான ஆலாலசுந்தரர் கோபிலபட்டரின் சமஸ்கிருதக் காப்பியத்தை அரங்கேற்ற உதவுகிறார்.

நாவலின் முன்னுரையில், தமிழ் வாசக சூழலை நினைத்து தயக்கங்கள் நிறைய இருந்தன (இருக்காதா பின்ன?), அதனால் பல பகுதிகள் சுருக்கப்பட்டு, சில பகுதிகள் நீக்கப்பட்டு நாவல் வெளியிடப்பட்டுள்ளது என்கிறார் ஆசிரியர். 1997 அப்படி இருக்கலாம், இன்றைய சூழல் மேம்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். அந்த நீக்கப்பட்ட பகுதிகள் தற்போது இருந்தால், அவற்றையும் இனைத்து ஒரு ‘unabridged version’ பதிப்பாக விஷ்ணுபுரத்தை வெளியிட வேண்டும் என்று ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அரங்கசாமி “முதல் பதிப்பில் (ஆரஞ்சு நிற அட்டை – அகரம்) மட்டும் தத்துவ விவாதப் பகுதிகள் நீக்கப்பட்டு வந்தது, அடுத்து வந்த (கவிதா) பதிப்புகளில் அது சேர்க்கப்பட்டது, இப்போதுள்ளது முழுமையானதுதான்” என்று தகவல் தருகிறார்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம்

விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம்

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு)

மிகைக்கற்பனை (fantasy), யதார்த்தவாதம் (realism), மாய யதார்த்தவாதம் (Magical Realism), நவீனத்துவம் (modernism), பின் நவீனத்துவம் (post-modernism) என்றால் ‘வைகைக்கரை நாணல் போல ஏதோவொன்று’ என்றுதான் நினைத்திருந்தேன். பல காலகட்டங்களைச் சேர்ந்த நாவல்களைப் படித்ததன் வாயிலாகவும், ஜெயமோகனின் இணையதளம் வாயிலாகவும் இப்போது ஓரளவு புரிகிறது. (‘மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத முரணியக்கம்’ தான் ரொம்ப படுத்துது 🙂 ). இந்த இலக்கிய கலைச்சொற்ககளை, நான் புரிந்துகொண்டவரை கீழ்கண்டவாறு சொல்வேன்.

யதார்த்தவாதத்தில் கதை சித்தரிப்பு தர்க்கரீதியானது (லாஜிக் மீறாது) என்றால் மிகைக் கற்பனை அதற்கு நேரெதிர் (லாஜிக்கெல்லாம் யோசிக்கக்கூடாது). இவை இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைவது மாய யதார்த்தவாதம். (மாய நிகழ்வுகள் யதார்த்தம் போலவே இருக்கும். இதை நம்பகத்தன்மையோடு சொல்வது எழுத்தாளனின் திறனைப் பொறுத்து). நவீனத்துவம் கதை சொல்லியின் குரலாகவோ, ஒரு காலகட்டத்தின் குரலாகவோ ஒலிக்குமென்றால், பின் நவீனத்துவம், பல தரப்புகளின், பல காலகட்டத்தின் குரல். எவ்வகையிலும் ஒற்றைப்படைத்தன்மை அற்றது.

ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா ‘மானுடத் தேடல்’ என்ற கருவில் எழுதப்பட்ட யதார்த்தவாத பாணிக் கதை. யதார்த்தவாத பாணியினாலேயே என்னால் அக்கதையில் ஒன்ற முடியவில்லை. இரண்டாவது முறை படிக்க முயற்சி செய்து மூடி வைத்துவிட்டேன். ஜெயமோகனின் வாசகனானதால், எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை, யதார்த்தவாத / நவீனத்துவ கதைகளில் நுழைய முடியாமை. தமிழில் சிறந்த யதார்த்தவாத நாவல் பதினெட்டாம் அட்சக்கோடு என்கிறார்கள். உண்மையில் வாசிப்பு அகங்காரக் கோடரியோடு, எந்த மரத்தை வெட்டி வீழ்த்தலாம் என்று பதினெட்டாம் அட்சக்கோட்டில் நுழைந்து, அங்கு ஒரு புல்வெளியைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். “அசோகமித்ரன் கதைப்புலத்தில், ஒரு இளம் வாசகன் தன் வாசிப்பு அகங்காரத்தைக் கொண்டு, தான் முட்டித் திறக்க வேண்டிய குறியீடு எது என்று தேடினால், ஏமாற்றம்தான் மிஞ்சும்” என்று “நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்” குறிப்பிடுகிறார் ஜெயமோகன். பதினெட்டாம் அட்சக்கோடு வாசித்தபின் இந்த வரிகளைப் படித்தேன். ஆச்சரியமாக இருந்தது. பிரச்சினை என்னிடம்தான், நாவலை அந்தக் காலகட்டத்திற்கு சென்று வாசிக்காமல், என்னை நோக்கி இழுக்க முற்படுகிறேன். எனக்கு கோபல்ல கிராமம், பதினெட்டாம் அட்சக்கோடு போன்றவை பின்பு எப்போதாவது திறக்கலாம். ஆனால், வாசிப்புக் கோடரி கொண்டு வருபவர்களுக்கு, விஷ்ணுபுரம் ஒரு அமேசான் காடு, வெட்ட வெட்ட மரங்கள் முளைத்தபடியே இருக்கும்.

நவீன இலக்கியத்தில், மிகைக்கற்பனை, யதார்த்தவாத கதை சொல்லும் முறைக்கு மாற்றாக, மாயா யதார்த்தவாதத்தை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறார்கள். காப்ரியேல் கார்ஸிய மார்க்வெஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude‘ அதில் புகழ் பெற்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மாயா யதார்த்தவாதம் அறிமுகம் ஆவதற்கு கால் நூற்றாண்டு முன்னரே, வங்க எழுத்தாளர் அதீன் பந்த்யோபாத்யாய, தன் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஜெயமோகன் – கண்ணீரைப் பின்தொடர்தல். அதிலிருந்து,

காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச் செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல் பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல் மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டு வரவேயில்லை.

விஷ்ணுபுரம் போன்ற, யுகயுகமாக முடிவின்றி ஓயாது சுழன்றலையும் மானுடத் தேடலை அள்ள முயலும் நாவலை, யதார்த்தவாத பாணியில் எழுதியிருக்க முடியாது. நாவலில் வரும் மாயா யதார்த்தவாத கூறுகள் வாசகனை நாவலில் ஒன்றச் செய்கின்றன; வாசிப்பு அனுபவத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. விஷ்ணுபுரத்தில் மாய யதார்த்தத் தருணங்கள் நிறைய உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது, அஜிதன் ஞான சபை விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெல்லும்போதும், ஞான ஸ்தம்பத்தில் ஒவ்வொன்றாக தானாகவே எரியும் சுடர். அஜிதனுடைய வெற்றியை அறிவிக்கவரும் கிருஷ்ணப் பருந்தும் அவ்வாறே. (தூய தர்க்கத்தின் அடிப்படையில் நடைபெறும் ஞான சபை விவாதத்தில் வெற்றியை அறிவிக்கும் முறைகள் தர்க்கத்தை தாண்டியதாக இருப்பது அழகிய முரண்.) அதே சமயம், அஜிதன் ஞான விவாதங்களில் வெல்வதை மாய யதார்த்தவாதமாக சித்தரிக்கும் ஆசிரியர், பத்மாட்சி அக்னிப்பரிட்சையில் ‘வெல்வதை’ யதார்த்தவாதமாக (தந்திரமாக) சித்தரிப்பதை கவனத்தில் கொண்டால், அவை உணர்த்தும் உட்பொருள் புரியும். நாவலில் வரும் மாயா யதார்த்தவாதத்திற்கு மேலும் சில உதாரணங்கள் – ஞானத் தேடலின் அதிதேவதையாக வரும் பச்சை நிற பார்வை கொண்ட மிருகநயனி, மரணத்தின் குறீயீடாக வரும் கரிய நாய், சித்திரைக்கு பத்தினித் தெய்வம் கொடுக்கும் செஞ்சுடர்… சொல்லிக் கொண்டே போகலாம்.

மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’க்கும், விஷ்ணுபுரத்திற்கும் மேலோட்டமாக சில ஒற்றுமைகள் உள்ளது. அந்த நாவலிலும், ஒரு ஊர் (மாசாண்டோ) தோன்றி அழிவதின் சித்திரம் உள்ளது. மாசாண்டோவின் கதை, பூயந்தியா என்ற கொலம்பியக் குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் கதை; மாசாண்டோவின் அழிவைப் பற்றி கடைசியில் மெல்சியாடஸ் எழுதி வைத்த சமஸ்கிருத குறிப்பை (ஜோசியம்?) படிக்கும் போதுதான் தெரிகிறது; மீண்டும் மாசாண்டோவோ, புயந்தியாக்களோ பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நூறாண்டுகளை தனிமையில் கழித்தவர்களுக்கு மண்ணில் வாழ மீண்டுமொரு வாய்ப்பில்லை. கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்கிறார் மார்க்வெஸ். இது ஓரளவு கிறித்தவ விழுமியம் சார்ந்த நோக்கு என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் ஒரு கோவில் நகரத்தின் பல நூற்றாண்டுக் கதை; விஷ்ணுபுரத்தில் பிரளயத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பல முறை விஷ்ணுபுரம் தோன்றி அழிந்துள்ளதாக கதைகள், காவியங்கள் கூறுகின்றன. விஷ்ணுபுரம் கீழை மரபின் தரிசனங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, இரண்டு நாவல்களுக்கும் வேறெந்த ஒற்றுமைகளும் இல்லை. வடிவத்தில் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’, தமிழ் நாவல்களில் பி.ஏ.கிருஷ்ணனின்புலி நகக் கொன்றை‘யுடன் தான் பெரிதும் ஒத்திருக்கிறது. (அதுவும் வடிவத்தில் மட்டும்தான், பேசு பொருளில் இல்லை).

என்னளவில் விஷ்ணுபுரம் மிகச் சிறந்த பின்நவீனத்துவ, மாயா யதார்த்தவாத நாவல். ஜெயமோகன் தான், மாயா யதார்த்தவாதம் எழுதவில்லை, செவ்வியல் வடிவிற்குள் நிற்கும் மிகைக் கற்பனையைத்தான் எழுதுகிறேன்; நவீன செவ்வியல்வாதியாகவே அறியப்பட விழைகிறேன் என்கிறார். காவிய மரபும், செவ்வியலும் கற்கும்போது அவர் சொல்வது எனக்குப் புரியலாம்.

தொடரும்…

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – தத்துவம்
விஷ்ணுபுரம் – கவித்துவம்+காவிய மரபு

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்

சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுரம்  நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

ஓய்வெனும் மரணம்
இரவெனும் இடைவெளி
ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலை நுனிகளால்
அமுதூட்டும் கருணை.

தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன.

இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.

தொடரும்…

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – தத்துவம்

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – தத்துவம்

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)

“நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை” – விஷ்ணுபுரத்தில் யாரோ.

இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு. தெரிந்த வரை எழுதுகிறேன்.

மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது.

  1. “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக் கொள்ளும்.”
  2. தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது.
  3. காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது.
  4. உள்ளூர் பண்டிதர்கள், ஞானம் என்றால் வைகைக் கரை நாணல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்.

தன் இணைய தளத்தில் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். இந்து மதம் போன்ற தொன்மையான மதங்களை ஆய்வதற்கு நம்மிடையே இருக்கும் சிறந்த கருவி மார்க்ஸிய முரணியக்கம் என்கிறார். ஒரே நேரத்தில் விஷ்ணுபுரத்தை ஹிந்துத்துவ நூல் என்றும், மார்க்ஸிய நூல் என்றும் சொல்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் விஷ்ணுபுரத்தில் சேவை சாதிப்பது, விஷ்ணுவோ, ததாதகரோ, பெருமூப்பனோ இல்லை, அது மார்க்ஸ் என்கிறார் :-). ஆனால், நாவலின் மையம் தாந்திர சமுச்சையம் சொல்லும் ‘செய்தி’ அல்ல. ஒரு முனையில், எல்லாம் வல்ல பரம்பொருளோ, அறியவே முடியாத இருள் சூழ்ந்த சூன்யமோ, ஏதோ ஒன்று இருக்கிறது. மறு முனையிலிருந்து அதை அறிவதற்கு விட்டில் பூச்சிகள் போல, மனிதர்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். யுக யுகமாக தொடரும் இந்தப் பயணத்தை அள்ள முயலும் நாவலே விஷ்ணுபுரம்.

விஷ்ணுபுரம் ஒரு தத்துவ நூலும் கூட. முதல் பகுதியில் வரும் பிங்கலன்-சிரவண மகாபிரபு, பிங்கலன்-சாருகேசி, சங்கர்ஷணன்-பத்மாட்சி உரையாடல்களும், நாவலின் இரண்டாம் பகுதியும் தத்துவச் செறிவு நிறைந்தவை. விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் சாமானியர்களின் கண்களுக்கு முப்பது அடுக்குகளுக்கு மேல் தெரிவதில்லை. ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. விஷ்ணுபுரத்திலே, சுடுகாட்டுச் சித்தன் மட்டும்தான் ராஜகோபுரம் மேல் ஏறி இறங்கியவன். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை மனிதன் கண்டடைந்த ஞானம் என்று உருவகித்தால், கோபுரத்தின் பின்னால் உள்ள ஹரிதுங்கா மலையை ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உருவகிக்கலாம். ஒரு வேளை, சித்தன் ராஜகோபுரத்தின் மீதேறி, ஹரிதுங்காவைக் கண்டதால்தான், கோபுரத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஞான நூல்களை எரித்துவிட்டானோ?

வைதீக மரபை உயர்த்தியோ, பௌத்தத்தை உயர்த்தியோ நாவல் பேசவில்லை. மொத்த நாவலில், சித்தனும், நீலியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். அனைத்தையும் கற்று, அனைத்தையும் உதறி, சூன்யத்தை உணர்ந்தவன் சித்தனென்றால், செங்கழல் கொற்றவையின் பேருருவம் கொள்பவள் நீலி. ஜெயமோகனின் கதைப்புலத்தில் நீலிக்கும் சித்தனுக்கும் தனி இடமுண்டு. காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, எண்ணற்ற சிறுகதைகளில் வரும் பெண் தெய்வமாக நீலியும், ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரத்தில் சித்தனும் அவர் நாவல்களைப் பினைக்கும் சங்கிலி என மீளமீள வருகிறார்கள். (நான் காந்தியை பித்தனாகக் கருதுவதால் சித்தன் வரிசையில் இன்றைய காந்தியையும் சேர்த்துக்கொள்வேன்).

இன்னொன்றையும் கவனித்தேன். விஷ்ணுபுரத்தில் வரும் சில வரிகளைக் கூட சாராம்சமாகக் கொண்டு தன் தளத்தில் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ஒரு வகையில் அவர் மீளமீள விஷ்ணுபுரத்தைத்தான் தன் கட்டுரைகளில், கதைகளில் வெவ்வேறு வடிவங்களில் எழுதுகிறார். பேரிலக்கியவாதிகளும் அதைத்தான் செய்தார்களா? என்னால், தர்க்கத்தை விடவும் முடியவில்லை, அதேசமயம் தர்க்கத்தை தாண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்றும் அகம் இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இருபது வயதில் எல்லோரும் தேடுகிறார்கள், நாற்பது வயதில் கண்டடைகிறார்கள் என்று இந்நாவலில் ஒரு வரி வேறு வருகிறது! (ஆர்வி தத்துவ விவாதெமெல்லாம் தியரிடிக்கல் எக்ஸைஸ் என்கிறார் :-)).

அறிய முடியாமை (சூன்யம்) என்பதை எப்படி பதிலாக ஏற்க முடியும், அடுத்த வேளை உணவில்லையென்றால் ஞானத்தை பற்றியெல்லாம் யோசிப்போமா என்றெல்லாம் யோசித்தாலும், இதுவரை பொருளாதார ரீதியாக அடைந்தவற்றில் சிறிதைக் கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை என்று உணர்ந்து என் மனம் சிறுமை கொள்கிறது. இலக்கியம், அறிதல் என்றெல்லாம் பேசினாலும், ஆழ்மனதில், என் ஊழ், பொருள் ஈட்டுவதுதான் என்று அறிந்தே இருக்கிறேன். நாளை, ஒரு வேளை பெரும் பணம் ஈட்டினால், புண்ணியம்/மறுபிறவி என்றெல்லாம் யோசித்து, எந்த மடத்திற்கோ, மடாதிபதிக்கோ, கோவிலுக்கோ ஒரு பைசா கொடுக்கப் போவதில்லை. ஏனோ, விஷ்ணுபுரம், இந்தக் கருத்தை என்னுள் வலுப்படுத்துகிறது.

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)

தொடரும்

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – வரலாறு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)

“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத் துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால்? நினைத்தாலே சிரிப்பாக இல்லை? சரி, இதே லாஜிக்கின்படி நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் யோசித்தால்? ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது. (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ]

இந்தியா புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myths) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளை கொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளை கொண்டார்கள். புராணங்கள் கடவுளால் அருளப்பட்டவை, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை, அதுவே ஒரு தனி காவியம். இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டி.டி. கோசம்பி மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. (youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது, தற்போது காணவில்லை.) ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள் சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்க முடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில் இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக் காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறு யாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில் யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் முடிவு பதிநான்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர்? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்க வேண்டும். என் யூகம், இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு, தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும், “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன். நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக் காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ? (இல்லை புரண்டு படுத்துவிட்டாரா?)

விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப் பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இது போலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால் தமிழக வாசகர் மனதில் தமிழ் மன்னர்கள் சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம் ஜெயமோகன் கருவறை புகுந்து சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப் போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான். இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலப்பிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான், இருந்தாலும் நல்ல குரு அமையாத மன்னர்கள் கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ், 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்! தமிழ் வேறு பாண்டியன் வேறா? இதை எழுதியதற்கு எப்படி அடி வாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை 🙂 அது சரி, இது புனைவுதானே :-)]

நாவலில் நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூல நூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில் யோகவிரதர் நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும் தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டு சென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலும் பல திறப்புகள் கிடைக்கலாம்.

பிற்சேர்க்கை: (ஆர்வியின் எண்ணங்கள்) – இதற்கு விசு வரலாறு என்று தலைப்பு கொடுத்திருந்தாலும் அவருடைய பேசுபொருளும் தொன்மங்களே என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை விஷ்ணுபுரத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. விஷ்ணுபுரம் புனைவு. தொன்மங்கள் உருவாகும் process-ஐ விவரிக்கிறது. முதல் பகுதியில் தொன்மங்களாக இருப்பவை இரண்டாவது பகுதியில் சமகால நிகழ்ச்சிகள்; மூன்றாவது பகுதியின் தொன்மங்கள் முதல் பகுதியில் சமகால நிகழ்ச்சிகள். இதில் வரலாற்றைத் தேட வேண்டாம் என்றே கருதுகிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகளுக்கான inspiration சுவான்சாங்கின் பயணத்திலிருந்தும், யாக்ஞவல்கியர், சார்வாகன், ஆதி சங்கரர் தொன்மங்களில் ஏன், நா.பா. எழுதிய மணிபல்லவம் புத்தகத்தில் கூட விவரிக்கப்படும் ஞான சபை வாதங்களிலிருந்தும் வந்திருக்கலாம். அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

ஆனால் எனக்கும் இரண்டு கேள்விகள் உண்டு. ஒன்று, விஷ்ணுபுரம் ஞான சபை போல மன்னனை விட ஒரு படி மேலாக தன்னை உணர்ந்த, காண்பித்துக் கொண்ட, மன்னனும் ஏற்றுக் கொண்ட ஹிந்து “ஆன்மீக” அமைப்புகள் இந்தியாவில் இருந்தனவா என்பது. இரண்டு ஞான சபை வாதத்தில் வெற்றி, தோல்வி என்பதை யார், எப்படி நிர்ணயித்தார்கள் என்பது. ஜெயமோகனே, அல்லது தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

விசு கபாடபுரத்தைப் பற்றி பேசும் வரையில் இவற்றுக்குள்ள தொடர்பு எனக்கு strike ஆகவில்லை. இப்படி தொடர்புகளை கண்டுபிடிப்பது விசுவின் பெரிய பலம்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா. ராகவன்
புதுமைப்பித்தனின் சிறுகதை – கபாடபுரம்

விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு

நண்பரும் சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினருமான விசு விஷ்ணுபுரம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார், பகுதி பகுதியாக வெளிவரும்.

விசு என்கிற விஸ்வநாதன் இளைஞர். மயிலேறி என்ற பேரில் வலைத்தளம் நடத்துகிறார். அங்கே சில அருமையான பயணக் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் வயதில் எனக்கு அவருக்கு இருப்பதில் பாதி கூட விவேகம் இருந்ததில்லை, அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை, அப்ளிகேஷன் போட விரும்புவர்களுக்கு வசதியாக இங்கே புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.

நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:

  

“யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக் காட்டும்.” – சங்கர்ஷணன்

விஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக டைம் பாஸ் நாவல் இல்லை). குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத் தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்து வரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார்.

ஒரு புதிய கலை வடிவுக்குள் ஒரு புதிய அறிவுத் துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒரு வருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக் கொண்ட பொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது. அதை விட அது போடக் கூடிய விரிவான கோலம். முன்னும் பின்னும் கதை பின்னிச் செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக் கொண்டு வாசித்தால் பெரிய விஷயம் அல்ல.

கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பல நூல்களை ஒரு முறை படித்திருக்கிறேன். மீண்டும் பல முறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம் முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்து கொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]

நாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா?’, ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா’ என்று மட்டும் ஆராயாமல், நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன்.

  1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
  2. விஷ்ணுபுரம் – வரலாறு
  3. விஷ்ணுபுரம் – தத்துவம்
  4. விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு
  5. விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்
  6. விஷ்ணுபுரம் – மொழி
  7. விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்
  8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு
  9. விஷ்ணுபுரம் – முடிவுரை

விசுவின் பதிவுகளைப் பற்றி என் விமர்சனத்தை இங்கே எழுதி இருக்கிறேன்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்