விசுவின் சிறுகதை – வலசை

விசு சிலிகன்ஷெல்ஃப் குழுமம் செயல்பட்டபோது அதன் core அங்கத்தினர். இவரும் முகின் என்ற முத்துகிருஷ்ணனும்தான் குழுமத்தில் இளைஞர்கள், அன்று திருமணம் ஆகாதவர்கள். சில முறை இந்த வயதில் இத்தனை தெளிவா, இத்தனை படிப்பா, நமக்கு நாலு கழுதை வயதாகியும் இன்னும் இதெல்லாம் வரவில்லையே என்று வியந்திருக்கிறேன்.

விசு எழுதிய சிறுகதை – வலசை – அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. விசுவும் (முகினும் கூட) நிறைய எழுத வேண்டும். பரிசுகளும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தவில்லை, அவர்களது அகத்தேடல்கள் பூர்த்தி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வலசை சிறுகதையின் மொழி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “பழங்குடிகளின் அழிவில்லாத கண்ணீர் அலபாமாவில் அனல் காற்றாகவும், ஓக்லஹோமாவில் புழுதிப் புயலாகவும் மாறியது”, “என்னைப் பிடித்த கிரகணம் நீ” போன்ற சில வரிகள் பிரமாதம். ஆனால் இப்படிப்பட்ட மொழிக்கு முயலும்போது சில தேய்வழக்குகள் உறுத்துகின்றன. Grapes of Wrath reference, மனித இனத்தின் இடம் பெயர்தலை பட்டாம்பூச்சிகள், சால்மன் மீன்களின் இடம் பெயர்தலோடு இணைப்பது போன்றவை நன்றாக இருக்கின்றன. ஆனால் கதை எனக்கு tight ஆக இல்லை. பல கருக்கள் இருப்பது போல தோன்றியது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: விசு பக்கம்

ஜெயமோகனின் “கொற்றவை”

Visuஎன் பதிவுகளைப் பற்றி எனக்கு ஒரு மனக்குறை உண்டு. பல வேறு காரணங்களால் (நேரக்குறை, வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது என்ற முடிவு…) என்னால் பொதுவாக புத்தக அறிமுகம் என்ற நிலையைத் தாண்ட முடிவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் நான் பொதுவாக அகலமாக உழுகிறேன். ஆழமாக உழ ஆளில்லை என்பதுதான் உண்மை நிலை.

அந்த மனக்குறையை பொதுவாக விசுவின் பதிவுகள் தீர்த்து வைக்கின்றன. விசுவின் பதிவுகள் பொதுவாக செறிவானவை, நல்ல ஆழமாகவே உழுகிறார். விஷ்ணுபுரத்தைப் பற்றி இன்னும் நினைவு கூரக் கூடிய பதிவுகளை எழுதினார், இப்போது கொற்றவைக்கு வந்திருக்கிறார். ஓவர் டு விசு!

jeyamohanமுதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்க தொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.

kannagiகடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]

jeyamohan_kotravaiவிஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.

மூன்று வாவிகள்:
சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

kannagi_kovalan_kavunthi_adigalகொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.

ilango_adigalகோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.

seermaiமூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த் எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]

காப்பியத்தின் மையம்:
kannagi_paandianதென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.

உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.

மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.

madhavi_kovalanசிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்

முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
அலமரல் அசைவிளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!

சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.

சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.

****

உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.

****

கொற்றவையும் விஷ்ணுபுரமும் :

சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
காலம் என்று ஒன்று உண்டம்மா

என்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,

பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?

என்பதும் கொற்றவைக்கான வரிகள்.

vishnupuram சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.

விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.

ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.

கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.

kannagi_kovil

சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்

என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.

****

காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.

******

பின்குறிப்பு :
[1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.

[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.]

[3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.

ஜடாயு:jatayu_rama
[வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.

[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.

வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

தாரை:tara_sugriva_lakshmana
மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.

[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.

[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.

….
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
…..
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
……..
‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
……
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்;…59

வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விசு பதிவுகள்

எழுத்தாளனைத் தேடி – ஸ்டோன் ரீடர் திரைப்படம்

stone_readerஎழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பலவிதமான புத்தகங்களை தேடிப் படிக்கின்றனர். ஒரு புத்தகம் வாசகர்களிடம் அறிமுகமாகும் சூழல் பெரும்பாலும் சிறு வேற்றுமைகளை கடந்து அடிப்படையில் பத்திரிகை விமர்சனங்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்த எழுத்தாளர்களின் சிபாரிசு, புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூட்டம், இணையதளம் போன்ற காரணிகளாலேயே ஏற்படுகின்றது. எந்த ஒரு நல்ல படைப்பும் பொதுவாகவே இவ்வெளிச்சங்களால் அடையாளம் காணப்படுகிறது.

dow_mossmanநல்லதொரு முதற்படைப்பு உருவாகி, அதற்கு மிக சாதகமான விமர்சனமும் ஒரு பிரபல பத்திரிக்கையால் கொடுக்கப்பட்டு, ஆனால் எவராலும் படிக்கப்படாமல், காலத்தின் சுழற்சியில் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொலைக்கப்பட்டு, பிறகு அதை ஒரு வாசகன் கண்டெடுத்து, அதன் எழுத்தாளனை தேடிச் செல்கின்ற பயணத்தின் பதிவே ‘தி ஸ்டோன் ரீடர் (The Stone Reader)’ என்கின்ற ஆவணப் படம்.

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘தி ஸ்டோன்ஸ் ஆப்ஃ ஸம்மர் (The Stones of Summer)’ என்ற நாவல் ‘டாவ் மோஸ்மென் (Dow Mossman)’ என்பவரால் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியானது. அக்காலத்தின் பிரபல நாளேடான ‘தி நியூயார்க் டைம்ஸ்‘ அந்நாவலுக்கு மிக சாதகமான விமர்சனம் கொடுத்து, பரிந்துரை செய்து செய்தி வெளியிட்டது.

அதைக் கண்டு இந்த ஆவண படத்தின் இயக்குனரான ‘மார்க் மொஸ்கொவிஸ் (Mark Moskowitz)’ என்ற இளம் வாசகன் அதை வாங்கி படிக்க முயன்றான். ஆனால் அவ்வெழுத்தின் ஆழத்தை தொடமுடியாததால் கைவிட்டு விட்டான். முப்பது வருடங்களில் வாசகனின் தரம் வெகுவாக உயர்ந்தது. இடையில் அந்நாவலை வாசிக்க தொடங்கி நேரமின்மை அல்லது வேறு அலுவல்கள் காரணமாக தொடர முடியாமல் கைவிட்டு விட்டான்.

mark_moskowitzஇறுதியில் அதை படித்து முடித்த பின்பு, தான் படித்த புத்தகங்களின் தரப் பட்டியலின் முதல் அடுக்கில் வைக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் அவை என உணர்ந்து, அந்த எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடுகின்றார். அப்பொழுதுதான் எழுத்துலகில் அந்த மனிதனை எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இணையதளம், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என எவரிடமும் மாஸ்மெனை பற்றிய தகவல் என்றில்லாது அடிப்படை பரிச்சயம் கூட கிடைக்கவில்லை. மேலும், அப்படி ஒரு நாவல் வெளிவந்ததாக கேள்விப்பட்டோர் கூட யாரும் இல்லை. இங்கிருந்து தொடங்குகிறது படத்தின் பயணம்.

பூமிப் பரப்பிலிருந்து காணாமல் போன ஒருவரை தேடுவது போல உள்ளது. இயக்குனர் சந்திக்கும் ஒவ்வொரு பதிப்பாளரும், விமர்சகரும் அந்நாவலை படித்து விட்டு, “எப்படி இது வெளியே தெரியாமலேயே போனது? இந்த மனிதனால் இப்படி எழுதிவிட்டு எங்ஙனம் அடுத்து எதுவுமே எழுதாமல் இருக்க முடிந்தது?”, என்று வியக்கிறனர். மிக முக்கியமான, தரம் மிக்க எழுத்துக்களை படித்து விட்டோம் அல்லது குறைந்தபட்சம் அவற்றை பற்றிய அறிமுகமாவது வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்தை உடைத்து தனக்கு தெரியாமலேயே இப்படி ஒரு நாவல் இருந்திருக்கிறது என்ற யதார்த்தத்தை நேரிடும் போது அவர்களின் வியப்பு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாஸ்மென் இறந்திருப்பார் என்ற எண்ணம் இயக்குனருக்கும், நமக்கும் மனதில் வருகிறது. மேலும், எந்த எழுத்தாளனும் ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வர வேண்டும், ஆனால் இந்த மனிதனுக்கு அது சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம் என சில எழுத்தாளர்களும், விமர்சகர்களும் அபிப்ராயப்படுகிறார்கள்.

stones_of_summerபின்னணி இசை வெகு குறைவாக இருந்தாலும், இப்படம் நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. இந்த தேடலில் மிக பிரபலமான நாவலான ‘காட்ச்-22 (Catch-22)’ என்ற நாவலின் பதிப்பாளருடன் ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளளது. இதுவும் முதலில் கவனிக்கப்படாமலேயெ இருந்து பிறகு அப்பதிப்பாளரின் முயற்சியால் வெளிக் கொணரப்பட்டு மிகவும் பிரபலமானது. அந்த உரையாடலில் ஒரு படைப்பு வெளிவருவதற்கு ஒரு பதிப்பாளரின் பங்கு மறைமுகமாக சொல்லப்படுகிறது.

ஒரு நிலையில், இனி மாஸ்மெனை கண்டுபிடிக்கவே முடியாது என்று முடிவெடுத்து இயக்குனர் கைவிட்டு விடுகிறார். பல நாட்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக ஐயோவா மாகாணத்தில் நடைபெற்ற எழுத்தாளர் பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தின் மூலம் ‘துப்பு’ கிடைத்து மறுபடியும் தேடல் தொடர்கிறது. இறுதியில் அதே மாகாணத்தில் ஒரு புறநகர் பகுதியில், கீழ் நடுத்தரவர்க்க சூழலில் மாஸ்மெனை கண்டடைகிறார்.

அது ஒருவிதமான சோகத்துடன் கூடிய அழகான தருணம்.

பிறகு சுமார் பத்து நிமிடங்கள் மாஸ்மெனுடன் இயக்குனரின் உரையாடல் மற்றும் அவருடைய வீட்டின் அறைகளும், மற்றும் அடித்தளத்தில் இருக்கும் அறையில் இருக்கும் தாள்களும், திருத்தி அமைக்கப்பட்ட படைப்புகளின் நகல்களும் இடம் பெறுகின்றன. அவை வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி சிதைந்து காணாமல் போன எல்லா கலைஞர்களின் பொது உதாரணங்களாகவே தோன்றுகிறது. அவர்களுடைய வீடுகளும் இப்படித் தான் இருந்திருக்குமா? எவ்வளவு தாள்களை எழுதி வைத்திருந்திருப்பார்கள்? எவ்வளவு பக்கங்களை விரக்தியில் வீசி எறிந்திருப்பார்கள்? தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவர்கள் தாங்கிக் கொண்ட வேதனைகளும், ஏமாற்றங்களும் எப்படி இருந்திருக்கும்? குடும்பம், பொருளாதார நிலை, கட்டுப்பாடுகள் என வேறொருவருக்காக கனவுகளை தொடராமல் வாழும் பொழுது, மற்றொருவர் மூலமாக தன் மனதில் தோன்றிய கருக்களின் சாயலில் படைப்புகளை பார்க்க நேரிடும்போது என்ன தோன்றியிருக்கும்? என்று பல கேள்விகளை அது கேட்கத் தோன்றுகிறது.

கொஞ்சம் அவதானித்தால் இது கலைஞன் என்ற வட்டத்திலிருந்து விரிந்து நாமும் நம்மை சுற்றியிருக்கும் பெரும்பான்மையானவர்களின் வாழ்கையை காட்டுவது போல உள்ளது. எந்த ஒரு மனதின் உள்ளே பார்த்தாலும் அந்த வீட்டில் கிடந்த தாள்களை போல திருத்தியமைக்கப்பட்ட கனவுகளும், நிறைவேறாத ஆசைகளும், நிராகரிக்கப்பட்ட சிறு சந்தோஷங்களும், சமரசம் செய்யப்பட்ட சுதந்திரங்களும் கிடந்து புழுங்கிக் கொண்டிருப்பதை காணலாம். அதனால் தான் என்னவோ, இப்படம் ஒரு தேர்ந்த எழுத்தாளனை ஒரு முதிர்ந்த வாசகன் கண்டெடுக்கும் பயணம் என்பதையும் தாண்டி, சக மனிதர்களின் மனதை தேடி அவர்களின் கனவுகளை கண்டெடுக்க வேண்டியதின் அவசியத்தை மறைமுகமாக உணர்த்துவது போல் தோன்றுகிறது.

இப்படம் வெளியான பிறகு ‘பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்’ என்ற புத்தக நிறுவனம் ஸ்டோன்ஸ் ஆஃப் ஸ்ம்மரை மறுபதிப்பு செய்து வெளியிட்டது. மாஸ்மெனுக்காக மகிழ்ச்சி அடைந்தாலும் அதை அடுத்து இன்னும் அறியப்படாமல் கிடக்கும் படைப்புகளும், அதன் படைப்பாளிகளும், கனவுகளை தொலைத்த மனிதர்களும் ஒரு புகை படிந்த கண்ணாடியின் பின் தனக்கான வெளிச்சத்தை எதிர்பார்த்து நிற்பதை போன்ற காட்சியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
படத்தின் வலைதளம்
IMDB குறிப்பு
தி ஸ்டோன்ஸ் ஆப்ஃ ஸம்மர் – விக்கி குறிப்பு

நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

நண்பர் விசு நாஞ்சில்நாடனோடு பழகிய நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஓவர் டு விசு!

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :

***

கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை.

‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’
‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்?’
‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’
‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;’

“வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல்கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.

முதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன ? எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.

பிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன் நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)

மூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.

பின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.

முதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ?) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற புத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார்.

நீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜி இங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம்ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.

தொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.

தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.

“என்னால உணர்ச்சிகரமாக பேசமுடியும், ஆனா பேசமாட்டேன். என் தொழில் எழுத்து. அதனால, பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி எதிர்பார்க்க வேண்டாம்” என்று கம்ப ராமாயண உரைகளின்போது சொன்னவர், பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த பாராட்டு விழாவின் ஏற்புரையின்போது, ஒரு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். அதற்கு முன் நாங்கள் ஏழு பேர் பேசி, வந்தவர்கள் பொறுமையை சோதித்தோம். முதலில் ஏற்புரை வழங்கிய பி.ஏ.கே.வின் செறிவார்ந்த உரை, கூட்டத்தை சென்று சேர்ந்தா என்று தெரியவில்லை. ஆனால், அன்றைய விழா நாயகன் கடைசியாக பேசிய நாஞ்சில்தான். அவர் உரையை, சிறு சலனம் கூட இல்லாமல் மொத்தக் கூட்டமும் கேட்டது. (வீடியோ வடிவம் வலையேற்றப்படும்).

***

ஸ்டான்ஃபோர்ட் வானொலி நேர்காணலுக்காக, “நீங்கள் எழுதத் துவங்கியதற்கு என்ன காரணம்” என்று கேட்டோம். ஒரு கலைஞனுக்கே உரிய பெருமிதத்துடன் “நான் எழுதலைனா, என் மொழியில் சிலது எழுதப்படாமலேயே போயிடும். அதை என்னால் மட்டுமே சொல்லமுடியும். அதனால் எழுத வந்தேன்” என்றார். இந்தியா என்றால் வெளிநாட்டினருக்கு இருக்கும் பொது பிம்பம் எதிர்மறையானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘, அர்விந்த் அடிகாவின் ‘White Tiger‘ போன்றவை வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம், அவை அந்த பொதுப் புத்தியை பிரதிபலிப்பதனாலேயே. அதே சமயம் இந்தியாவிற்கு வந்து சென்ற வெளிநாட்டு நண்பர்கள், தங்கள் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இந்திய பயணத்தை நினைக்கிறார்கள். “நாங்க பிரச்சனைன்னு நினைக்கறதெல்லாம், ஒரு பிரச்சனையே இல்லைன்னு இங்க வந்து பாத்தப்ப புரியுது. இந்தளவு ஏற்றத்தாழ்வு இருந்தும், மக்களப் பாத்தா சந்தோஷமா இருக்காங்க. இது எப்படின்னு புரியலை” என்றார் ஒரு அமெரிக்கர். அவரை மீண்டும் சந்தித்தால், நாஞ்சிலின் “யாம் உண்பேம்“, “வனம்” போன்ற கதைகளை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கதைகளில் கடைசி வரி/பத்தியை தவிர்த்தால், அது கீழ்/நடுத்தர வர்க்கத்து நெருக்கடிகளை சொல்லும் பல நூறு படைப்புகளோடு ஒன்றாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையின் பசி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை பேசும் மற்றுமொரு படைப்பாளியாக மட்டுமே இருந்திருப்பார். “என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே.

அதே நிகழ்ச்சியில், “உரிய காலத்தில் அங்கீகரிக்கல, அல்லது மிகத் தாமதமாக அங்கீகரிச்சிருக்காங்கன்னு வருத்தமுண்டா ? உங்களுக்கு எப்பொழுதாவது எழுதுவதை விட்டுவிட்டு, உங்கள் தொழிலிலேயே கவனம் செலுத்தலாம் என்று தோன்றியிருக்கிறதா” என்ற கேட்டேன். “இல்லங்க.. வருத்தமெல்லாம் இல்லை. நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” என்றார். வேறோரு நாள், நானும் அருணும், ஸ்டான்ஃபோர்டு பல்கலை அருகே, அவரை ஒரு இனிப்பு கடைக்கு அழைத்து செல்லும்போது, “ஞானபீடம் வாங்கிட்டு, ஸ்டான்ஃபோர்டு உள்ள பேச வேண்டியவரை, பல்கலைக்கு வெளியே கூட்டிட்டு சுத்தறோம்” என்றேன். “ஞானபீடம்லாம் குடுக்கமாட்டானுங்க. விருது குழூல இருக்கவங்க எல்லாம் எழுதி தோத்துபோனவனுங்க. அவங்களால, வெற்றிகரமா எழுதறவங்கள சகிச்சிக்க முடியாது” என்றார். “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” என்று அவருடைய தளத்தில் உள்ள வாசகங்களை நினைத்துக்கொண்டேன்.

வளர்ந்த நாடுகளில் முக்கால்வாசி இலக்கியவாதிகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்; ஏதோ ஒரு வகையில் அமைப்போடு (பள்ளி, பல்கலை, அரசு) தொடர்புடையவர்கள். சில விதிவிலக்குகளை தவிர்த்தால், தமிழ்/இந்திய அமைப்பு, பெயர் சொல்லும்படியான இலக்கியவாதிகளை உருவாக்கவில்லை. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே, அமைப்பிற்கு வெளியே இருந்து வந்தவர்கள்தான்.அந்த விதிக்கு நாஞ்சிலும் விலக்கல்ல. நாஞ்சில், கணிதத்தில் பட்டம் பெற்றவர் (தமிழில் அல்ல) ; தொழிலோ, ஓயாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய விற்பனை பிரதிநிதி; வாழ்விடமோ ‘யாதும் ஊரே’ வகைதான். இருப்பினும், அன்றாட நெருக்கடிகளுக்கிடையே, எப்படியோ அவருக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது; எப்படியோ தரம் வாய்ந்த படைப்புகளை எழுத முடிந்திருக்கிறது; இந்த ‘எப்படியோ’வை தேடிக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு, நாஞ்சிலோடு செலவிட்ட இந்த சில நாட்கள், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.

பின்குறிப்பு: தோழி காவேரி விஜய் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டது, ஒரு வேளை உணவுக்கும் விஜயை சந்திப்பதற்கும் ஃபோட்டோவுக்கும் சேர்த்தும் இருபது டாலர் என்று சொன்னார். ஒரு வேளை சாப்பாட்டுக்கு பத்து பதினைந்து டாலர் ஆகலாம், இந்த ஊரில் ஃபோட்டோவை யாராவது எடுத்தால் அதை வாங்கவே பத்து பதினைந்து டாலர் ஆகும்.

நண்பர் முத்துகிருஷ்ணன் தரும் தகவல் – எதுகை அகராதியை தொகுத்த நெசவாளர் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை என்ற ஊரில் பிறந்த பசுபுல இராமசாமி அப்பாய் செட்டியார் – வருடம் 1938. இப்போது சந்தியா பதிப்பகம் மீள் பதிப்பு வெளியிட்டுள்ளது.

பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய “கலங்கிய நதி”

நண்பர் விசு ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியது

நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில் வாசித்துவிடக்கூடிய எளிய நாவல். கதை நடக்கும் காலம் அதிகபட்சம் சில வருடங்கள், கதையின் களம் பெரும்பகுதி அஸ்ஸாம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். குணமடைந்து கொண்டிருக்கும் ஓய்வு நேரத்தில், தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘This street has no other side’ என்ற நாவலை எழுதுகிறார். ‘This street has no other side’ நாவல், அந்த நாவலில் சொல்லப்படாத நிகழ்வுகள் மற்றும் நாவலின் விமர்சனத்தை உள்ளடக்கியதே ‘கலங்கிய நதி’. இந்த நாவலுக்குள் நாவல் வடிவத்தில், எது புனைவு, எது நிஜம் என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். நாவலில் மூன்று சரடுகள் உள்ளன. (அவை)

  1. அஸ்ஸாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளரை மீட்கப் போராடும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன்
  2. Transmission tower கட்டுமானத்தில் நடைபெறும் நுண்மையான ஊழலை கண்டுபிடித்து ஆராயும் ரமேஷ் சந்திரன்
  3. ரமேஷ் சந்திரனுக்கும் அவர் மனைவி சுகன்யா, செக்ரட்டரி அனுபமா, திருமதி. கோஷ் உள்ளிட்ட மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவு

அரசு அதிகார வரைமுறைகளில் உள்ள அபத்தத்தை, தமிழ் நாவல்களிலேயே, இந்நாவல் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கும் வேறோரு நாவல் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அரசு அதிகாரிகளின் தோரனை, ஜூனியர் அதிகாரிகளை ஏவலர்களாக நடத்தும் மனப்பாங்கு போன்றவற்றை சித்தரிக்கும் பகுதிகள் சிறந்த நகைச்சுவை கதைகள் போல உள்ளன. இதில் உள்ள அங்கத அம்சத்திற்கு ஒரு உதாரணம்: உயர் அதிகாரியின் தேநீர் ஆறிப்போவதை அவருக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நினைவுபடுத்த அலாரம் நிறுவ பரிந்துரைக்கும் பகுதி. அதே சமயம், இந்தக் கூட்டம்தான் இந்தியாவை ஆள்கிறது என நினைக்கும்போது, comedy, dark comedyயாக மாறுகிறது.

நாவலின் ஒரு சரடான ஊழல் பற்றி பார்ப்போம். விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற சொல்லாட்சியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழலை இந்நாவலில் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான், Transmission tower கட்டுமான ஊழல் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்றே புரிகிறது. அஸ்ஸாமிய மின்பகிர்மான கம்பெனிக்காக, Transmission towerகள் கட்டுவதை குத்தகைக்கெடுத்த நிறுவனம், அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகிற்கு வரிவிலக்கு பெறுகிறது. ஆனால், வரிவிலக்கு பெற்ற தொகையை வரி கட்டியதாக கணக்குகாட்டி ஊழல் செய்கிறார்கள். ஊழலின் அளவு முப்பது கோடிதான். 2ஜி காலத்தில் இந்த ஊழல் ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மிக நுட்பமான முறையில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும், அந்த சிறிய தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலையும் நம்பகத்தன்மையோடு சித்தரித்திருக்கிறார். (இதுவும் ஒரு உண்மையில் நடைபெற்ற ஊழலின் புனைவு வடிவமே).

அடுத்ததாக தீவிரவாதப் பிரச்சனை. உல்ஃபா தீவிரவாதிகள், அஸ்ஸாமிய மின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் நியமிக்கப்படுகிறார். பிரச்சனை சூடாக இருக்கும் வரை ஊடங்களும், அரசும் மீட்பில் முனைப்பாக இருக்கின்றனர். பின்பு, ரமேஷைத் தவிர யாரும் வேறு யாரும் கண்டுகொள்விதில்லை. கடைசியில், யாரும் கண்டு கொள்ளாமல் போவதாலேயே, தீவிரவாதிகள் முதலில் கேட்ட பணயத் தொகையில் இருபது மடங்கு குறைவான தொகைக்கு விடுவிக்கின்றனர். இந்நாவலில், பகதத்தனின் கதை, ஜதிங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் கன்றுகள் என பல்வேறு விதமாக தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறை, லட்சியவாதம், சித்தாந்தம் என்றால் பூச்சிக்கொல்லிகளில் வீரியமான ரகங்கள் என்றே நினைக்கிறோம். சித்தாந்தத்தினாலோ, லட்சியத்தாலோ ஈர்க்கப்படுதல் என்றால் என்னவென்றே புரியவில்லை. சென்ற ஆண்டு கம்போடியா சென்று வந்தேன். மார்க்சிய சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பிழையின் வடுவாக, கம்போடியத் தலைநகர் ப்னோம்பென்னில் ஐந்து மாடி கட்டிட உயரத்திற்கு, மண்டையோடுகளால் ஆன ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. அதைப்பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கம்போடிய கொலைக்களங்கள், நாஜிக்களின் ஆஸ்விட்ச் கொலைமுகாம், இலங்கையில் நடைபெறும் அழிவுகள் போன்றவற்றை பார்க்கும்போது, எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டாலும், நாளடைவில் அழிவிற்கு இட்டுச்செல்லாத சித்தாந்தங்களே இல்லையோ என்று தோன்றுகிறது. விதிவிலக்காக காந்தி இருக்கிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் சேவைக்காக வந்த அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா சாயலில் அமைக்கப்பட்ட ராஜவன்ஷி, இந்நாவலில் உள்ள ஒளிமிக்க பாத்திரம். சரத் சந்திர சின்ஹா பற்றி, ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘ என்று காலச்சுவடில் கட்டுரை எழுதியிருக்கிறார் கிருஷ்ணன். சின்ஹாவை பற்றி படிக்கும்போது, இப்படி ஒருவர் இருந்தாரா என்று மனம் நம்ப மறுக்கிறது; அவ்வையின் ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ தான் நினைவிற்கு வருகிறது.

நாவலில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அடையும் வழியாக காந்தியம் குறிப்பிடப்படுகிறது. இந்திய மதப் பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும், தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி நம்பிக்கையோடு சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்த பின் நதி தெளிவாகிவிடும், முன்பை விட மிகத் தெளிவாக” என்று. கலங்கிய நதி தெளிவடையும் என்ற நம்பிக்கையோடு, திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

[தமிழிங்கிலீஷில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்]

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
கலங்கிய நதி பற்றி பாலாஜி
புலிநகக் கொன்றை, திரும்பிச் சென்ற தருணம்
சரத் சந்திர சின்ஹா பற்றி பி.ஏ. கிருஷ்ணன் – ‘கிழவருடன் இரண்டு நாட்கள்

சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு)

(விசு எழுதிய பாகம் – என்ன பேசப்பட்டது என்பதை பற்றிய குறிப்புகள் அடங்கியது)

திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00  – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.

பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக,  சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.

அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும்,  அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.

பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).

எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது.  சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.

நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின்  கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.

மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.

விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..)  இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.

பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.

ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.

தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.

தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).

புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும்  உரையாடினோம்.

ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்

தொடர்புடைய பிற இடுகை:
பாகம் 1
‘கலங்கிய நதி

விசுவின் விஷ்ணுபுரம் பதிவுகள்

நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம் ஏழாம் உலகம். திலீப்குமாரின் மனைவி அதை என் கையில் கொடுக்கும்போதே சொன்னார், இது depressing ஆக இருக்கும், ஆனால் கீழே வைக்க முடியாது என்று. சரியாகத்தான் சொன்னார். ஆனால் எனக்கு அதைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம், உருப்படிகளுக்குக் கூட என்பது தெரிந்தது. அப்புறம் ரப்பரைப் படித்தேன். நல்ல நாவல், ஆனால் முழு வெற்றி இல்லை என்று தோன்றியது. பிறகு படித்த கன்யாகுமரி எனக்கு சரிப்படவே இல்லை. ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் சைஸ் பயமுறுத்தியதால் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், கன்யாகுமரி எல்லாம் படித்த பிறகு படிப்பதற்கான உந்துதலும் குறைவாகத்தான் இருந்தது. அப்புறம் வழக்கம் போல ஒரு நீளமான விமானப் பயணத்தில் விஷ்ணுபுரத்தைப் பிரித்தேன்.

ஆரம்பித்த சில பக்கங்களுக்குள் பெரிய பிரமிப்பில் மூழ்கிவிட்டேன். புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. நான் படித்த தமிழ் புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று. படிக்கும்போதே ஜெயமோகன், அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் லெவலுக்கு என் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகும் நான் விஷ்ணுபுரத்தின் பக்கம் போகவே இல்லை. கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்திருக்கிறேனே தவிர, இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை, எத்தனையோ நுட்பமான இடங்களை கவனிக்கத் தவறிவிட்டேனோ என்று ஒரு சந்தேகம்.இப்படி எல்லாம் சந்தேகப்படுபவனே இல்லை, அப்படியே அபூர்வமாக சந்தேகம் வந்தாலும் அதைப் பொருட்படுத்தவும் மாட்டேன். ஆனால் விஷ்ணுபுரத்தைப் பற்றி எழுதும் அளவுக்கு எனக்குப் பத்தாது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. விசுவின் பதிவுகளைப் படிக்கும்போது அந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

விஷ்ணுபுரத்தைப் பற்றி நல்ல மதிப்புரைகள் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் எழுதியது மதிப்புரையே கிடையாது. அது என் பிரமிப்பைப் பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான். பா.ராகவனின் மதிப்புரையை ஸ்ரீனிவாசின் உதவியோடு இங்கே பதித்திருக்கிறேன், ஆனால் அதுவும் நல்ல மதிப்புரை இல்லை. பாராட்டுபவர்களை, திட்டுபவர்களை, இந்தா தடிதடியா எழுதினா எவன் படிப்பான் என்று அலுத்துக் கொள்பவர்களை பார்த்திருக்கிறேன். சீர்தூக்கிப் பேசியவர்கள் அபூர்வம். நண்பர் பாலாஜி ஒரு முறை இஸ்லாமியத் தாக்கம் பற்றி பேசாததால் நாவல் முழுமை அடையாதது போல இருக்கிறது என்று சொன்னார், நான் கேட்ட ஒரே ஒரு உருப்படியான விமர்சனம் அதுதான். சரியோ தவறோ, அப்படியா என்று யோசிக்க வைத்த விமர்சனம்.

விசு அப்படி முயன்றிருப்பது முக்கியமான விஷயம். அதுவும் அனேகமாக எல்லாரும் கதைச்சுருக்கம் எழுதுவதிலேயே தாவு தீர்ந்து போய் அதற்கு மேல் தம் கட்ட முடியாமல் கிடுகிடுவென்று முடித்துவிடுவார்கள். விசு கதைச்சுருக்கத்தை ஒரு பகுதியாகப் பிரித்து இந்தப் பிரச்சினையைத் தாண்டி இருப்பது புத்திசாலித்தனமான விஷயம். விசுவின் பதிவுகளும் அப்படி முழுமையானவை அல்லதான். ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாரும் குருடர்கள் யானையத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் அவர் பகுதி பகுதியாகப் பிரித்தது நல்ல முயற்சி. வரலாறு, தத்துவம், கவித்துவம், காவிய மரபு, மொழி, கதாபாத்திரங்கள் என்று ஒரு taxonomy-ஐ உருவாக்கி இருக்கிறார். அப்படி பகுப்புகளை ஆரம்பித்து வைத்திருப்பதையே நான் விசுவின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

குறிப்பாகச் சொல்வதென்றால் தத்துவம் என்ற பகுப்பில் விசு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த பதிவு. சிறப்பான ஆரம்பம்.

எனக்கு இன்றும் விஷ்ணுபுரம் அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆடும் ஆட்டத்தை விவரிப்பதுதான் முக்கியமான கூறு. அநேகமானவர்களுக்கு தத்துவ விவாதங்கள்தான் முக்கியம். எனக்கோ தத்துவம் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு பத்தாது. தர்க்கத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தர்க்கத்தில் குறைகள் இருக்கின்றனதான், ஆனால் அதை விட சிறந்த கருவி நம்மிடம் இல்லை. தர்க்கத்தில் குறை இருக்கிறதே, அதனால் நான் தர்க்கத்தை பயன்படுத்த மாட்டேன் என்பதெல்லாம் எனக்கு பரம முட்டாள்தனமாகவே தெரிகிறது. குறை இல்லாத கருவி கிடைக்கும் வரைக்கும் நான் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. Occam’s Razor எப்போதாவது நம்மைத் தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும் சாத்தியக் கூறு இருக்கிறதுதான், அதற்காக அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. Godel’s Incomplete Theorem எல்லா உண்மைகளையும் ஒரு axiom based system நிறுவ முடியாது என்பதை நிறுவுகிறது, அதனால் கணிதத்தைத் தூக்கிப் போட்டு விடுவோமா? அப்படிப்பட்ட நானே விஷ்ணுபுரத்தின் தத்துவ விவாதங்களை நான் ரசித்துப் படித்தேன். எனக்குப் புரியாத இடங்கள் இருந்தனதான். ஆனால் புரியும்போதெல்லாம் தர்க்கம் என்ற முறையின் வெளிப்படுத்துதலை ரசித்தேன். தத்துவ விவாதங்களில் பெரிதாக அக்கறை இல்லாத என்னையே இப்படி கட்டிப் போட்டது ஜெயமோகனின் சாதனை!

ஜெயமோகனே புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை தன் ஆரம்பப் புள்ளி என்று சொல்லி இருக்கிறாராம். எனக்கு விசு மூலம்தான் தெரியவந்தது. அதற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி!

விசுவின் பதிவுகளின் மீது எனக்கு விமர்சனம் என்று மூன்று உண்டு.

  1. ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் போகப் போக கொஞ்சம் குறைந்து விடுகிறது. பிந்தைய பதிவுகளில் விசு கொஞ்சம் களைத்துவிட்டது தெரிகிறது.
  2. விஷ்ணுபுரத்தில் வரலாற்றைத் தேடுவது என்னைப் பொறுத்த வரையில் வீண் முயற்சி. அப்படித் தேடுவதென்றால் தத்துவங்கள், சிந்தனா முறைகள் வளர்ந்த வரலாற்றைத்தான் பேச வேண்டும்.
  3. அதிகார ஆட்டம், தொன்மங்கள் உருவாவது போன்றவை விஷ்ணுபுரத்தின் முக்கியக் கூறுகள். அவற்றைப் பற்றி விசு இன்னும் விவரித்திருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் எல்லாமே குருடன் யானையைத் தடவி உணரும் கதைதான். ஒவ்வொருவரும் பேசும்போது இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்கிறேன். விசுவின் பதிவுகள் அளவுக்கு உபயோகமான அலசல் இன்னும் எனக்குத் தெரிந்து வரவில்லை. இனி மேல் வரும் அலசல்களும் அவர் உருவாக்கி இருக்கும் பகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

பின்குறிப்பு: ஜெயமோகன் முன்னிலையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பல சீரியஸ் வாசகர்கள் கலந்து பேசும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் ஜெயமோகன் அதைத் தவிர்த்துவிட்டார். அது நடந்திருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

விஷ்ணுபுரம் – முடிவுரை

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

“அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி.” – விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிக்கு அங்கீகார ரீதியாகவும், பொருளியல் ரீதியாகயும் இழப்புதான். மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக புரியும். மொழி பெயர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது. சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன் “இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. நான் படித்தவைகளில் முதன்மையானது”.

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – போரும் அமைதியும் (ஒருமுறை படித்திருக்கிறேன்), பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களோடும் ஒப்பிட்டு எப்போதாவது எழுத வேண்டும்.

நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்தான். ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயன் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை. டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது. தமிழைப் பொறுத்த வரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literatureல தமிழ்ல ஒண்ணும் பெருசா இல்லை போல’ என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பர் அருண் பரத், ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்-வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப் போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.

ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி, சித்ரா). இவர்களிடம் உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி.

நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுது கொண்டே பாதி படித்தார். இது மாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் :-). இப்போதுதான், கொற்றவையை ஒரு முறை படித்து முடித்தேன். விஷ்ணுபுரம் கல்யாண விருந்தென்றால், கொற்றவை தேன்குடம். ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு. இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்க்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)

புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.

சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.

அபுனைவு – சங்க சித்திரங்கள், இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள், கொடுங்கோளூர் கண்ணகி

விஷ்ணுபுரம் தொடர்பதிவுகள் நிறைவு பெறுகின்றன

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள்

விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா? ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா? பதில் எல்லாம்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து/பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப் பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் இங்கே. அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டது போல இருந்தது.)

கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் வைதீக மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வைதீகம், பின்பு ஐம்பதாண்டுகளுக்கு பௌத்தம், மீண்டும் வைதீகம், பின்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. பழைய கம்போடியாவில் அரச அதிகாரத்தின்/மதத்தின்/தத்துவத் தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர். குமெரையும், வடமொழியையும் எழுத அவர்கள் பயன்படுத்திய எழுத்துரு பல்லவ கிரந்தம். வைதீகம் எப்படி அங்கே வந்தது? கம்போடியர்களின் தொன்மத்தின்படி, சோமா என்ற நாக வம்சத்து இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜ தேசத்தை சேர்ந்தவர்கள். (விஷ்ணுபுரத்தில் செம்பி-அக்னிதத்தன் கதை). ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள், இந்து மதம் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள். இடிபாடுகளில் சூழ்ந்திருந்த அங்கோர் கோவில்களை, மீட்டெடுத்து புனரமைத்தது ஐரோப்பிய அறிஞர்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், அவர்களது ஆய்வுகளை நான் ஏற்கவில்லை. குமெர்களின் இலச்சினை நாகம். ஒரு சில கோவில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் உள்ள சிலைகள் நாகங்களும், யட்சிகளும்தான் (அப்சரஸ்).

அங்கோரிலிருந்து 50 கி.மி தொலைவில், ஒரு குன்றின் மீதுள்ள கபால் ஸ்பியன் (kbal spean) என்ற இடத்தில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது; ஆற்றுப்படுகை முழுவதும் லிங்கங்களும், பாறைகளில் அனந்தபத்மநாபன் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. ஏதாவது தாந்திரீக இடமா, சிற்ப பள்ளிக்கூடமா என்று தெரியவில்லை. அந்த இடத்தை பார்த்தபோது, பிரசேனரும் திருவடியும் தந்திர சமுச்சயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதுபோல ஒரு பிரமையேற்பட்டது. அங்கோர் வாட்டைச் சுற்றியுள்ள முக்கியமான முப்பது கோவில்களை பார்ப்பதற்கே நான்கு நாட்கள் போதாது. கம்போடியா பயணம் பற்றி, நேரம் கிடைக்கும்போது விரிவான பயணக் கட்டுரையாக எழுதிகிறேன்.

பாங்காக் அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு ஓவியத்தில், விஷ்ணு புத்தரை வணங்குகிறார். (பார்க்க படம் – picasa – 67 ). தாய்லாந்திலும், கம்போடியாவிலும் ராமர் புத்தரின் அவதாரம். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ஒன்பதாம் ராமர்) ராமர் பரம்பரையைச் சேர்ந்தவர். (உண்மையிலேயே அப்படித்தான் சொன்னார்கள்). அவர்களின் முந்தைய தலைநகரம் பாங்காக்கிற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள அயுத்தாயா (அயோத்யா). அதேசமயம், இந்தியாவின் சில இடங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இங்கு கேள்வி விஷ்ணுவா புத்தரா என்பதில்லை. நாம் கவனிக்கவேண்டியது ஒரு மரபு ஓங்கும் பொழுது, இன்னொன்றை அழிக்க முற்படவில்லை; தன்னுள் இழுத்துக் கொள்ளவே முற்படுகிறது. (விஷ்ணுவின் சிலைகளோ, புத்தரின் சிலைகளோ உடைக்கப்படவில்லை. அவதாரமாக மாற்றிக்கொள்ளப்படுகிறது). இந்த ‘இழுத்துக் கொள்ளல்’ எவ்வாறு நடைபெறுகிறது என்று விஷ்ணுபுரம் தெளிவாகவே விளக்குகிறது.

இதேபோல சோட்டா நாக்பூர் மன்னர்கள், தங்களை நாக வம்ச ராஜபுத்திரர்கள் என்கிறார்கள். தொன்மங்களில் நாகங்களின் அரசனான கார்கோடகனுக்கும், காசியைச் சேர்ந்த பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து, மக்களால், அரச வம்சமாக கருதப்பட்டவர்கள். எல்லா இடங்களிலும் கதை ஒன்றுதான். மன்னர் ஷத்திரியராகி தர்மபரிபாலனம் பண்ண யமஸ்மிருதியோ, நாரதஸ்மிருதியோ இயற்றப்படுகிறது, பதிலுக்கு மன்னர் ஸ்மிருதி இயற்றிய அக்னிதத்தரையோ, கௌடின்யரையோ குலகுருவாக ஏற்று கோயில் கட்டுகிறார். இதன் மூலம் பெரிய அளவில் வன்முறையின்றி குலங்கள் தொகுப்பட்டு பேரரசாகின்றன.

“சிறுகுடிகளை ஒன்றிணைத்து, பேரரசுகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் தத்துவத்தின் அங்கீகாரம்; பின்பு அடைந்த அதிகாரத்தை தக்க வைக்க ஆடுப்படும் பகடையாட்டம்; இதற்கிடையில் மரணத்திற்கு பிறகென்ன? வாழ்க்கையின் பொருளென்ன? என்ற கேள்வியோடு ஓயாமல் தேடுபவர்கள் கண்டடைவதென்ன?” என்பதே விஷ்ணுபுரத்தின் மையக்கரு.

நிறைவு பெறுகிறது. நிச்சயமாக அடுத்த பதிவோடு முடிந்துவிடும்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்
விசுவின் கம்போடிய/தாய்லாந்து புகைப்படங்கள்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள்

விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி

விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். முதல் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…); இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள் (அஜிதன்); கவனமாகப் படித்தாலன்றி, இவற்றை நாம் தொடர முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி?) கதை மாந்தர்கள் மட்டுமல்லாது நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலில் எண்ணற்ற பண்டிதர்கள், கவிஞர்கள், குரு-சீடர்கள், யானைகள், தெருக்கள், சிலைகள் வந்தாலும், ஒன்றுடைய சித்தரிப்பு போல இன்னொன்று இல்லை. ஒரு உதாரணம்: கடலூர் சீனு ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் பொழுது புலர்வதை விவரிக்கிறார். (எப்படியெல்லாம் வாசிக்கறாங்கப்பா!!)

விஷ்ணுபுரத்தில் பொழுது புலரும் சித்திரங்கள் பல வருகின்றன. (பல வருகின்றன – திரும்பத் திரும்ப வரவில்லை) ஒரு பகல் அஜிதனின் புலர்வு. மற்றொன்று பவதத்தரின் பகல். மற்றொன்று புத்த பிட்சுக்களது. நாவலில் தனித்தனிப் பொழுது புலர்வு இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அது நமக்குப் புதிதாகவே இருக்கிறது. காரணம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம் ஆழ்மன பிம்ப அடுக்குகள் வேறு விதமாகக் கலைந்து அடுக்கப்படுகிறது. இன்னும் எத்தனை முறை படித்தாலும் விஷ்ணுபுரத்துப் பகல் புலர்வுக் காட்சிகள் புதிதாகவே இருக்கும்.

அடுத்த முறை விஷ்ணுபுரத்தை படிக்கும்போது, கதை மாந்தர்களை ஒட்டி வாசிக்கவேண்டும். இங்கு, ஒரு சிலரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

  1. சங்கர்ஷணன் சில இடங்களில் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கிறான். (தான் ஏன் காவியம் படைக்க வந்தேன் என்று அவன் விளக்கும் இடங்கள்.)
  2. லட்சுமி தன் மகன் அனிருத்தன் இறந்த பின் அடையும் வெறுமைகளையும், சங்கர்ஷணனின் மேல் அடையும் வெறுப்பையும், பின் பிங்கலனில் அனிருத்தனைக் கண்டடையும் தருணத்தையும் உளவியல் ரீதியாக ஆராயவேண்டும் என நினைக்கிறேன். (ஃபிராய்டிய நெடி? இல்லை யோகமரபு சொல்லும் ஆழ்மனதின் காரிருள்?) ஏழாம் உலகம் நாவலின் முடிவில் வரும் ‘ஒத்த விரலு’ காட்சியையும், காடு நாவலில், கிரிதரனின் தாய் அவன் வளர்ந்துவிட்டான் என்று உணர்த்தும் தருணமும், லட்சுமி-பிங்கலனோடு ஒப்பிடத்தக்கது. ஆனால், மற்ற இரண்டு நாவல்களின் தருணங்களையும் விட இது மிகத் தீவிரமானது.
  3. நரோபா-அஜிதர்-சங்ககீர்த்தி நிகழ்வுகள் ‘போதி‘ கதையை நினைவுபடுத்துகின்றன.

முதல் பகுதியிலும், மூன்றாம் பகுதியிலும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் வரும்போது, இரண்டாம் பகுதியில் ஏன் பெண்கள் யாரும் வருவதில்லை?

இந்நாவலில் வரும் ஜாதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இதில் வரும் விஷ்ணுவின் சிலை பழங்குடிகளின் சிலை, அதை மற்றவர்கள் அபகரித்துவிட்டார்கள் என்றே நாவல் சொல்கிறது. இதே கருவில் ஜெயமோகன் ‘மாடன் மோட்சம்‘ (மாடன் மோட்சம்) என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். சூர்யதத்தரோட சித்தரிப்பு, “ஞான விவாதங்களில் பங்கேற்கும் அளவிற்கு அறிவுவிருக்கறவங்கள, சோத்துக்கு அடிச்சிக்கறது போல சித்தரிப்பது” போன்றவற்றை காரணம் காட்டி, விஷ்ணுபுரம் பிராமணர்களைக் கிண்டலடிக்கிறது என்ற என் பிராமண நன்பர், அந்தப் பகுதிகளை திட்டிக்கொண்டே படித்தார். ஆமாம், பிராமணர்களை மட்டுமல்ல, ஆழ்வார்கள், மறக்குலம், பௌத்தர்கள், வணிக குலங்கள், பழங்குடிகள் என்று ஒருவரும் ஜெயமோகனின் அங்கதத்திலிருந்து தப்பவில்லை. (சுஜாதா, திருவடியின் சித்தரிப்பை படித்துவிட்டு, மேலும் நாவலை படிக்க மறுத்துவிட்டார் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.) இவராவது நாவலை படித்துவிட்டு திட்டினார், இன்னொருவர் (கழக அனுதாபி), செவிச்செல்வம் மூலமே நாவலை உய்த்துணர்ந்து, ‘ஒரு ‘வந்தேறி’ எப்படித் தமிழர்களக் கேவலப்படுத்தலாம்னு கேக்காம, இது மாதிரி ‘புல்லுருவிகள்’ தலைல தூக்கிவச்சி ஆடுதுங்க” என்று என்னையும் சேர்த்து வசை பாடினார். புனைவுகளை விடுங்கள், தரவுகள் அடிப்படையிலேயே கூட ஜாதிகள் / மதங்கள் பற்றி எழுதினாலும், எழுத்தாளர் வீட்டிற்கு ஆட்டோவோ/சுமோவோ வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

இதை எழுதத் தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். நான் பிராமணனோ, ‘வந்தேறி’யோ இல்லை. ‘அசல்’ தமிழன்தான் :-). இப்போதய தேவை, குல, இன, ஜாதி அடிப்படையிலெல்லாம் பார்க்காமல், ‘பொதிகை மலை பெருமை’ எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வரலாறை/பண்பாட்டை கறாரான பார்வையுடன் ஆய்ந்துவிட்டு கடந்து செல்லவேண்டும். தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தயாரில்லாத சமூகம் எப்படி ‘civilized’ என்று சொல்லிக்கொள்ள முடியும்? பிராமண காழ்ப்பு, வெள்ளையர்களின் ஆரிய-திராவிட ஆக்ரமிப்பு தியரி போன்றவை காலாவதியாகிவிட்டது. தமிழின் சிறந்த படைப்பாளியை ‘வந்தேறி’ என்று சொல்லும் மனநிலையை என்ன சொல்ல? இருவரும் என் நண்பர்கள்தான். என்றாவது புரியும் என்று நம்புகிறேன்.

தொடரும்… (அடுத்த பதிவோடு நிறைவு பெறுகிறது)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி