Daphne du Maurier: Birds

இன்று டு மாரியர் நினைவு கூரப்படுவதே Birds (1952) சிறுகதை மூலம்தான். அவரது Rebecca நாவலைக் கூட இன்று யாரும் படிப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன். இதுவும் திரைப்படமாக வந்திருக்காவிட்டால் பொதுப் பிரக்ஞையில் இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான்..

சிறந்த சிறுகதை. சிறுகதை ஏற்படுத்தும் பயங்கர உணர்வு அருமை.

கதையை ஒற்றை வரியில் சுருக்கிவிடலாம். திடீரென்று பறவைகள் – ஆயிரக்கணக்கானவை மனிதர்களைத் தாக்குகின்றன, கொல்கின்றன. அவ்வளவுதான் கதை. யோசித்துப் பாருங்கள், உங்கள் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள், ஏதோ ஒரு திறப்பு வழியாக நூறு குருவிகளும் காக்கைகளும் புறாக்களும் கழுகுகளும் உங்களை, உங்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன. அந்தக் காட்சி தரும் பயங்கர உணர்வை டு மாரியர் வெற்றிகரமாக சித்தரிக்கிறார்.

கதை திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

On December the third, the wind changed overnight, and it was winter

என்ற முதல் வரியிலேயே ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. மெதுமெதுவாக ஒரு கடல்புற விவசாய கிராமம், ஒரு பறவை இரவில் தாக்குவது, குழந்தைகள் அறையில் பல பறவைகள் தாக்குவது, பிரச்சினை விவரிக்கப்படும்போது யாரும் நம்பாதது, பிறகு நாடு முழுதும் இந்தப் பிரச்சினை என்று வானொலி மூலம் தெரிய வருவது என்று கதையை அருமையாகக் கட்டமைத்திருக்கிறார்.

டு மாரியர் ஒரு கடற்பறவை (sea gull) யோரோ ஒருவரைத் தாக்குவதைத் தானே பார்த்தாராம். அந்தக் கருதான் இந்தக் கதையானதாம். திரைப்படம் வெளியாவதற்கு முன் கலிஃபோர்னியாவில் பறவைகள் 1961-இல் மனிதர்களைத் தாக்கினவாம். (பிற்காலத்தில் கடற்பாசி விஷமாகிவிட்டதுதான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டதாம்.)

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தக் கதை நினைவு கூரப்படுவதற்கு திரைப்படம் (1963) முக்கியமான காரணம். திரைப்படம் ஒரு கிளாசிக். ஹிட்ச்காக் இயக்கியது. இத்தனைக்கும் முதல் ஒரு மணி நேரம் தேவை இல்லாத பில்டப் கொடுத்து நம் பொறுமையை சோதிப்பார். அழகான Bodega Bay, அழகான டிப்பி ஹெட்ரன்தான் அந்த முதல் ஒரு மணி நேரத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றுகிறார். (இன்றும் Bodega Bay-யில் இங்குதான் Birds திரைப்படம் படமாக்கப்பட்டது என்று சில இடங்களைக் காட்டுகிறார்கள்.) ஆனால் பறவைகள் தாக்குவதை என்னதான் வார்த்தைகளில் விவரித்தாலும் காட்சிப்படுத்துவதில்தான் அந்த பயங்கரம் இன்னும் நன்றாக மனதில் பதியும்.

சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். கொஞ்சம் தம் கட்டி திரைப்படத்தையும் பாருங்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
Birds சிறுகதை – மின்பிரதி
டாஃப்னே டு மாரியர் விக்கி குறிப்பு

உலகின் முதல் எழுத்தாளர் என்ஹெடுவன்னா

உலகின் முதல் கதையை, கவிதையை எழுதியவர்/சொன்னவர்/படைத்தவர் யார்? நமக்கு என்றும் தெரியப் போவதில்லை. ஆனால் முதன்முதலாக தெரிந்த பெயர் என்ஹெடுவன்னா.

என்ஹெடுவன்னா 4300-4400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராம். கி.மு. 23-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கிறார்கள். ஒப்பிடுவதற்காக ரிக்வேதத்தில் காலம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டது என்றும் தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டது என்றும் கணிக்கிறார்கள். இன்று கிடைக்கும் முதல் தொன்மம் என்று கருதப்படும் கில்கமேஷ் ஏடுகளே இவற்றுக்கு 300-400 ஆண்டுகள் பிற்பட்டவைதான். ஆனால் கில்கமேஷ் என்ஹெடுவன்னாவுக்கு 400-500 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர், வாய்வழித் தொன்மமாக அப்போதே ஆரம்பித்திருக்கும் என்று ஊகிக்கிறார்கள்.

உலகின் முதல் பேரரசு என்று கருதப்படும் அக்கடியன் அரசை – சுமேரிய நாகரிகம், இன்றைய இரான்/இராக் பகுதிகள் – உருவாக்கிய சக்ரவர்த்தி சார்கனின் மகள் என்ஹெடுவன்னா. அன்றைய அக்கடிய மதத்தையும் சார்கன் வென்ற பகுதிகளின் சுமேரிய மதத்தையும் ஒன்றிணைக்க சார்கனால் நியமிக்கப்பட்ட மதகுருவாம். அவர் எழுதியவற்றில் Exaltation of Inanna, Sumerian Temple Hymns ஆகியவை இன்று கிடைக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட இனான்னா ஸ்தோத்திரம் பிரதியில் – களிமண் ஏட்டில் க்யூனிஃபார்ம் எழுத்துக்கள் – “இந்த கவிதை என்னிடம் பிறந்தது உனக்காகவே. இதை நான் நள்ளிரவில் உனக்காகப் பாடுகிறேன், பாடகர்கள் நண்பகலில் இதை மீண்டும் பாடட்டும்” (என் மொழிபெயர்ப்பு) என்று இருக்கிறதாம். சுமேரியன் கோவில் துதிகளில் “இதை எழுதியது என்ஹெடுவன்னா, இதற்கு முன் இது எழுதப்படவில்லை” என்று இருக்கிறதாம்.

1927-இல் சர் லியோனார்ட் வுல்லி என்பவர் இந்த களிமண் ஏடுகளை கண்டெடுத்திருக்கிறார்.

சுமேரியக் கோவில் துதிகளின் மொழியை வைத்து அவை என்ஹெடுவன்னாவால் எழுதப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

இனான்னாதான் பிற்காலத்தில் இஷ்டார் என்று அழைக்கப்பட்ட தெய்வமாம்.

என்ஹெடுவன்னாவின் பேர் க்யூனிஃபார்ம் எழுத்துக்களில்: 𒂗𒃶𒌌𒀭𒈾

பிபிசி கட்டுரையைப் படிக்கும்போது எதற்காக தமிழர்கள்/ஹிந்துத்துவர்கள் சமஸ்கிருதமோ தமிழோதான் முன் தோன்றி மூத்த மொழி என்று நிறுவ முயன்று கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. குறைந்த பட்சம் சுமேரிய/எகிப்திய/சீன நாகரீங்களிலிலிருந்து நமக்கு இன்று என்னவெல்லாம் கிடைக்கிறது என்று தேடிப் பார்த்துவிட்டு பிறகு பேசலாம். மொழி கி.மு. 1000-த்தில் ஆரம்பித்ததா, பொ.யு. 1000-த்தில் ஆரம்பித்ததா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, என்ன கிடைக்கிறது, அவற்றின் தரம் என்ன என்பதைப் பற்றி பேசலாம். “அவரோ வாரார் முல்லையும் பூத்தன” என்பது எப்போது எழுதப்பட்டிருந்தால் என்ன? அது கவிதையா இல்லையா என்பதுதானே முக்கியம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
பிபிசி கட்டுரை

Wuthering Heights

wuthering_heights

(மீள்பதிவு)

Wuthering Heights-இல் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று விளக்க முடியவில்லை.

wuthering_heights_charactersதெரிந்த கதைதான். அனாதை ஹீத்க்ளிஃப் மிராசுதார் எர்ன்ஷா குடும்பத்தில் யார்க்‌ஷையரின் gothic சுற்றுச்சூழலில் வளர்கிறான். மிராசுதார் மகள் காதரீனுடன் மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதலை மிஞ்சிய ஒரு காதல். மிராசுதார் மகன் ஹிண்ட்லிக்கோ அனாதையை வேலைக்காரனாக வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், அப்பாவும் தங்கையும் நிறைய இடம் கொடுக்கிறார்கள் என்று கடுப்பு. அப்பா இறந்ததும் ஹீத்க்ளிஃபை வேலைக்காரனாகத்தான் நடத்துகிறான். இந்த சமயத்தில் நாகரீகமான நகரத்து வாலிபன் லிண்டனைக் கண்டு காதரீனின் மனம் கொஞ்சம் கலைகிறது. காதல் என்றால் ஹீத்க்ளிஃப்தான், ஆனால் அன்றைய சமூக சூழ்நிலையில் ஹீத்க்ளிஃப்பை மணந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்கிறாள். ஹீத்க்ளிஃப் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சில வருஷங்கள் கழித்து காதரின் லிண்டனை மணக்கிறாள். பொருள் ஈட்டி ஒரு கனவானாக ஹீத்க்ளிஃப் திரும்புகிறான். காதலுக்கு துரோகம் செய்த காதரீனை அவனால் வெறுக்க முடியவில்லை, ஆனால் ஹிண்ட்லி, லிண்டன் எல்லாரையும் பழி வாங்க நினைக்கிறான். ஹிண்ட்லியின் நிலங்களையும் சொத்துகளையும் பறிக்கிறான். லிண்டனின் தங்கையை ஏமாற்றி மணக்கிறான். காதரீன் இறந்துவிட அவனைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியும் அழிந்துவிடுகிறது. ஹிண்ட்லியின் மகன் ஹரேடனை ஹீத்க்ளிஃப் தன் வேலையாளாக வளர்க்கிறான். தன் மகனுக்கு காதரீனின் மகளை பலவந்தமாக மணமுடித்து லிண்டன் குடும்பத்து சொத்துகளையும் கவர்ந்து கொள்கிறான். ஹரேடன், மகள் காதரீன் இருவர் வாழ்வையும் சொடுக்குப் போடும் வேளையில் அழித்துவிடலாம் என்ற நிலையில் அவனுக்கு வாழ்வில் அலுப்புத் தட்டிவிடுகிறது. காதரீனின் ஆவி தெரிகிறது. சாப்பிடாமல் தூங்காமல் இறந்து போய்விடுகிறான்.

நாலாவது முறை படிக்கும்போதும் முதல் முறை படித்தபோது மனதில் பட்ட விஷயங்களேதான் மீண்டும் மனதில் படுகின்றன. லிண்டன் மீது, காதரீன் மீது லிண்டன் கொண்டிருக்கும் காதல் மீது ஹீத்க்ளிஃப்புக்கு உள்ள இளக்காரம்; மனதில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்றிக் கொண்டு ஹீத்க்ளிஃப்பை மணக்கும் இசபெல்லா லிண்டன்; லாக்வுட்டுக்கு காதரீனின் ஆவி தென்பட்டது என்பதை அறிந்ததும் ஆவி தனக்கும் தெரியுமா என்று தேடும் ஹீத்க்ளிஃப்; ஹரேடன் ஹீத்க்ளிஃப்பின் பிம்பமாக வளர்வது; அம்மா காதரீனின் வாழ்க்கை எர்ன்ஷா-ஹீத்க்ளிஃப்-லிண்டன் என்று போனால் மகள் காதரீனின் வாழ்க்கை லிண்டன்-ஹீத்க்ளிஃப்-எர்ன்ஷா என்று போவது.

emily_bronteவாழ்வில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது என்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பது சித்தரிக்கப்படுவதாலா? போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா? நம்பகத்தன்மை நிறைந்த பாத்திரங்களாலா? யார்க்‌ஷையரின் குளிர்ந்த காற்றடிக்கும் குன்றுகளை உணர முடிவதாலா? நானும் நாலைந்து முறை படித்துப் பார்த்துவிட்டேன், சுவாரசியம் குறைவான இந்த நாவல் ஏன் இலக்கியமாகிறது என்று என்னால் articulate செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது?

ப்ராண்டே சகோதரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்டே எழுதி 1847-இல் வெளியான நாவல். இன்று பேரிலக்கியமாகக் கருதப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாம்.

wuthering_heights_filmபல முறை திரைப்படமாக வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த version லாரன்ஸ் ஒலிவியர் (ஹீத்க்ளிஃப்), டேவிட் நிவன் (லிண்டன்), மெர்லே ஓபரான் நடித்து 1939-இல் வெளிவந்த படம். ஹிந்தியிலும் தில் தியா தர்த் லியா (1966) என்று வந்தது. ஆனால் அதில் ஹீத்க்ளிஃப்பும் (திலீப் குமார்) காதரீனும் (வஹீதா ரெஹ்மான்) ஒன்று சேர்ந்துவிடுவார்கள்!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

கென் லியூவின் விருதுகள் பெற்ற சிறுகதை: Paper Menagerie

Paper Menagerie எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று.

இதை வகைப்படுத்துவது கஷ்டம். தொன்மக்கதை சாயல் உடையது. அறிவியல் சிறுகதை சாயல் உடையது. அறிவியல்/மிகுகற்பனை (fantasy) புனைவுகளுக்கான ஹ்யூகோ, நெபுலா மற்றும் World Fantasy விருதுகள் பெற்றது. ஆனால் என் கண்ணில் இது உறவுகளின் கதை. வெளிநாட்டுக்கு குடியேறுபவர்களின் கதை. இந்தக் கதையில் என்னால் என்னையும் என் அம்மா அப்பாவையும் என் மகள்களையும் காணமுடிகிறது.

என்ன கதை? ஏழை சீனப் பெண். Mail-order bride ஆக விளம்பரப்படுத்திக் கொள்கிறாள். அமெரிக்கனை மணக்கிறாள். கடைசி வரை ஆங்கிலம் சரியாகப் பேச வரவில்லை. மகன் பிறக்கிறான், தன்னை அமெரிக்கனாக உணர்கிறான், தனது சீன வம்சாவளியை ஒரு குறையாக நினைக்கிறான். ஆங்கிலம் பேச வராத, அமெரிக்க சூழலோடு ஒட்ட முடியாத அம்மாவிடம் கொஞ்சம் கடுப்பு.

அம்மா மகனுக்கு ஒரிகாமி முறையில் பொம்மைகள் – புலி, மான், சுறாமீன்… – செய்து தருகிறாள். அந்த பொம்மைகள் உயிர் பெறுகின்றன, ஓடி ஆடி விளையாடுகின்றன, இரண்டங்குல உயரப் புலி இரண்டங்குல உயர மானைத் துரத்துகிறது…

மகன் அம்மாவிடமிருந்து விலகிக் கொண்டே இருக்கிறான். அம்மா இறக்கும்போது அவனுக்கு ஒரு சிறு பெட்டகத்தைத் தருகிறாள். வருஷத்தில் ஒரு நாள் – சீனப் பண்டிகையான Qingming அன்று அதைத் திறந்து பார்க்கச் சொல்கிறாள், அன்று ஒரு நாள் தன்னை நினைவு கூரச் சொல்கிறாள். பல வருஷங்கள் அதை மறந்துவிடும் மகன் ஒரு வருஷம் அதைப் பார்க்கிறான். அவன் அம்மா அவனுக்கு சீன மொழியில் எழுதிய ஒரு கடிதம் இருக்கிறது.

அவ்வளவுதான் கதை. அதற்கு மேல் நேராகப் படித்துக் கொள்ளுங்கள்!

கதையிலிருந்து சில மேற்கோள்கள்.

  • புது வீட்டுக்கு குடிபெயர்ந்த பிறகு பக்கத்து வீட்டு வெள்ளை இனப் பெண்கள் அறிமுகம் செய்துகொள்ள வீட்டுக்கு வருகிறார்கள். அப்பா வெளியே போக வேண்டி இருக்கிறது. அப்போது: She smiled at the women. The three of them stood in a triangle around me, smiling and nodding at each other, with nothing to say, until Dad came back
  • At dinner I asked Dad, “Do I have a chink face?”
  • “If I say ‘love,’ I feel here.” She pointed to her lips. “If I say ‘ai,’ I feel here.” She put her hand over her heart
  • …when I was in high school. By then her English was much better, but I was already at that age when I wasn’t interested in what she had to say whatever language she used
  • Because I have to write with all my heart, I need to write to you in Chinese
  • You know what the Chinese think is the saddest feeling in the world? It’s for a child to finally grow the desire to take care of his parents, only to realize that they were long gone
  • Son, I know that you do not like your Chinese eyes, which are my eyes. I know that you do not like your Chinese hair, which is my hair. But can you understand how much joy your very existence brought to me?
  • இந்த வயதில் இந்தக் கதையை சொந்த அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது, இரண்டு விதமாகவும் உணர முடிகிறது.

    20 வருஷமாக என் அப்பாவின் உலகமும் என் உலகமும் வெகு சில புள்ளிகளில்தான் தொட்டுக் கொண்டிருந்தன. எத்தனை அன்பு இருந்தாலும் பேசும்போதெல்லாம் என்ன பேசுவது என்று இருவருக்குமே யோசிக்க வேண்டி இருந்தது. அது ஒரு சின்ன அழுத்தத்தை உண்டாக்கியது.

    ஆனால் என் அம்மாவிடம் எனக்கு யோசிக்க வேண்டியதில்லை 🙂 பேச ஒன்றுமில்லை என்றால் அணைத்துக் கொள்ளலாம். அம்மா பதினாறாம் வாய்ப்பாட்டை ஒப்பித்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. அம்மாவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன், ஆனால் சில சமயங்களில் அம்மாவுக்கு யோசிக்க வேண்டி இருக்கிறதோ, ஏதாவது அழுத்தத்தை உணர்கிறாளோ என்று கொஞ்சம் சந்தேகம் உண்டு.

    என் அத்தை ஒருவரோடு எனக்கு மிக நெருக்கமான பந்தம் உண்டு. அவரோடு வருஷத்துக்கு ஒரு முறை பேசினால் அதிகம். இருவரின் உலகமும் விலகிவிட்டனதான், ஆனாலும் விலகலே இல்லை. பார்க்கும்போதெல்லாம் இருவருக்கும் வாய் முழுவதும் புன்னகைதான்.

    என் பெண்களின் உலகமும் என் உலகமும் விலகிக் கொண்டே இருக்கின்றன. என்னிடம் தகவல் சொல்வதைக் கூட கடனே என்றுதான் சொல்கிறார்கள். எனக்கு மிகவும் ஆர்வமூட்டும் கணிதம், படிப்பு, கற்பது கற்பதற்காகவே, மதிப்பெண்களுக்காக அல்ல, அதனால் காலம் முழுவதும் மகிழ்ச்சியோடு கற்கலாம் என்ற மனநிலை இவற்றை எல்லாம் என் பெண்களுக்கு என்னால் கைமாற்ற முடியவில்லை. நல்ல வேளையாக இன்னும் என் மனைவியின் உலகம் அவர்களின் உலகத்தோடு நெருங்கியதுதான். நான் என்ன செய்வது? குறைந்த பட்ச முயற்சியாக என் பெண்களையும் இந்தச் சிறுகதையை படிக்கச் சொல்லி இருக்கிறேன். 🙂 படிக்கிறார்களா, என் போலவே உணர்கிறார்களா என்று பார்ப்போம்.

    கென் லியூ சீன வம்சாவளி அமெரிக்கர். நிறைய எழுதி இருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார். நான் படித்தது கொஞ்சம்தான், ஆனால் எதுவும் சோடை போகவில்லை.

    படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    தொடர்புடைய சுட்டிகள்:

  • சிறுகதைக்கு சுட்டி
  • கென் லியூ – விக்கி குறிப்பு
  • கென் லியூவின் தளம்
  • பெண்ணிய (துப்பறியும்) சிறுகதை: A Jury of Her Peers

    சூசன் க்ளாஸ்பெல் எழுதிய A Jury of Her Peers (1917) ஓரளவு பிரபலமான சிறுகதை. இணையத்தில் கிடைக்கிறது.

    நான் அதை முதன்முதலாகப் படித்தது ஒரு துப்பறியும் சிறுகதைகள் தொகுப்பில். யாரடா இது அறிவுக் கொழுந்து இந்த சிறுகதையை துப்பறியும் சிறுகதை என்று வகைப்படுத்தி இருக்கிறாரே என்று சிரித்துக் கொண்டேன். கதையில் கொலை, ஏன் கொலை என்ற ஆய்வு எல்லாம் இருக்கிறதுதான், அதனால் அது துப்பறியும் கதை ஆகிவிடாது.

    க்ளாஸ்பெல் ஒரு மெய்நிகர் அனுபவத்தை கண் முன் கொண்டு வருகிறார். சின்ன ஊர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு திருமணம், பிறகு குழந்தைகள், வீட்டு வேலைகள் தவிர வேறு எதுவும் வாழ்க்கை கிடையாது. ஆண்களுக்கும் பெரிய வாய்ப்புகள் இல்லைதான், என்றாலும் அவர்கள் உலகம் இன்னும் கொஞ்சம் விசாலமானது என்று சுலபமாக ஊகிக்க முடிகிறது. அந்த உலகத்தை சின்ன சின்ன அவதானிப்புகள் – பழங்களை வைத்து ஜாம் செய்வது, ரொட்டி (bread) உருவாக்குவது, திருமணத்துக்கு முன் சர்ச் இசைக்குழுவில் பாடும் பெண், அங்கங்கே உடைந்திருக்கும் நாற்காலி, தொலைபேசி தொடர்பு பெறுவதில் உள்ள பிரச்சினைகள் – மூலம் காட்டிவிடுகிறார்.

    என்ன கதை? திருமதி ரைட் கணவனை கொன்ற குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்கை நடத்த வேண்டிய அரசு வக்கீல் ஹெண்டர்சன் இன்றுதான் கொலை நடந்த ரைட் இல்லத்திற்கு போகிறார். அவரோடு காவல்துறை அதிகாரி (sheriff) பீட்டர்ஸ், கொலை பற்றி விவரம் சொன்ன சாட்சி ஹேல். சிறையில் இருக்கும் அவருக்கு சில துணிகளை எடுத்து வர ஷெரிஃபின் மனைவி திருமதி பீட்டர்ஸும் போகிறார். திருமதி பீட்டர்ஸுக்கு துணையாக முக்கிய சாட்சியின் மனைவி திருமதி ஹேலும் வருகிறார். ரைட் இல்லம் அக்கம்பக்கத்தில், அருகில் யாரும் இல்லாத வீடு. கணவர் ஹேல் முந்தைய நாள் தொலைபேசி தொடர்பு பெறுவது விஷயமாக ரைட்டைப் பார்த்து பேச வந்திருக்கிறார். அப்போது திருமதி ரைட் வினோதமாக நடந்து கொண்டிருக்கிறார், சிரிக்கிறார், ஏதோ பேசுகிறார். தான் அருகில் படுத்திருக்கையிலேயே யாரோ தன் கணவன் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொன்றுவிட்டதாக சொல்கிறார். பிணத்தைப் பார்த்துவிட்டு ஹேல் அதிகாரிகளை வரவழைக்கிறார். திருமதி ரைட் சிறைப்படுத்தப்படுகிறார். அரசு வக்கீல் அடுத்த நாள் வந்திருக்கிறார். எதற்காக கொலை (motive) என்று இந்த ஆண் அதிகாரிகளுக்கு புரியவில்லை. அது தெரியாவிட்டால், வழக்கில் சரியாக விளக்கப்படாவிட்டால், பொதுமக்கள் பஞ்சாயத்தார் (jurors) திருமதி ரைட்டை விடுதலை செய்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது.

    திருமதி ரைட் தன் வீட்டை வைத்திருக்கும் நிலையைப் பற்றி ஆண்கள் நக்கல் அடிக்கிறார்கள். பெண்களை இயல்பாக மட்டம் தட்டுகிறார்கள். திருமதி ஹேல் ஒரு காலத்தில் திருமதி ரைட்டின் தோழி. சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணாக அவரை திருமதி ஹேல் நன்றாகவே அறிவார். மகிழ்ச்சி இல்லாத திருமணம், குழந்தைகள் இலலாமை, மனைவியை ஒரு பொருட்டாக மதிக்காத கணவன் என்று திருமதி ரைட்டின் வாழ்க்கை ஒளியே இல்லாத வெறுமையாக மாறிவிட்டது அவருக்கு தெரியும். திரு ரைட் திருமதி ரைட வளர்த்த பாடும் பறவையை கழுத்தைத் திருகி கொன்றுவிட்டது அவர்கள் கண்ணில் படுகிறது. அது தெரிந்தால் எதற்காக கொலை என்று புரிந்துவிடும். திருமதி பீட்டர்ஸ் ஏறக்குறைய சட்டத்தின் மனைவி. திருமதி ஹேலுக்கு தான் நாலு முறை வந்து தன் தோழியைப் பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் அவளுக்கு கொஞ்சமாவது மனச்சாந்தி கிடைத்திருக்குமே என்ற குற்ற உணர்வு இருக்கிறது. அடுத்தது என்ன?

    கதையின் பலமே பத்து பக்கத்தில் ஆண்களின் உலகம், பெண்களின் உலகம் என்று இரண்டு உலகம் இருப்பதை காட்டிவிடுவதுதான். ஆண்கள் பெண்களை மட்டம் தட்டுவது அவர்களை இழிவுபடுத்த அல்ல, அவர்கள் கொஞ்சம் குறைவு என்று ஆழ்மனதில் பதிந்திருப்பதால்தான். நாம் நமது வளர்ப்புப் பிராணிகள் மேல் எத்தனை பிரியம் வைத்திருந்தாலும் அவர்கள் நமது அறிவுத்தரத்தில் (intellectual) இல்லை என்று நமக்குத் தெரியும், அவற்றைக் கொஞ்சும்போதும் அது வெளிப்படும், அது போலத்தான். திருமதி ரைட்டின் உலகம் வெறுமையானது. அது வெறுமையானது என்று அனேகமாக அவரது கணவனுக்கு புரிந்து கூட இருக்காது. அதில் அந்தப் பாடும் பறவை கொண்டு வரும் சிறு வெளிச்சம். இவற்றை அருமையாக சித்தரித்திருக்கிறார்.

    கதையில் குறியீடுகள் நிறைய. கொல்லப்பட்ட பாடும் பறவை திருமதி ரைட்டேதான் என்பது தெளிவு. ஜாம் செய்ய பழம் வைத்திருந்த புட்டிகள் குளிரில் வெடித்துப் போவது ரைட் குடும்பத்தில் வெறுமையால் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் குறிக்கிறது. சிறுகதை எழுதப்பட்ட காலத்தில் பெண்கள் ஜூரியாக இருக்க முடியாது. சிறுகதையின் தலைப்பும் திருமதி ரைட்டின் Peers – சக பெண்கள் – என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைப் பற்றித்தான். பொதுவாக குறியீடுகள் எனக்கு துருத்திக் கொண்டுதான் தெரியும், செயற்கையாக இருக்கும். ஆனால் இந்தச் சிறுகதையில் பாந்தமாக இருக்கிறது.

    க்ளாஸ்பெல் முதலில் இந்தக் கதையை ஒரு ஓரங்க நாடகமாக – Trifles – எழுதி இருக்கிறார். பிறகு இதையே 1917-இல் சிறுகதையாக மாற்றி இருக்கிறார்.

    க்ளாஸ்பெல் பத்திரிகை நிருபராக பணி ஆற்றியவர். பிற்காலத்தில் ஒரு நாடகத்துக்காக புலிட்சர் பரிசு வென்றவர். வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இருந்திருக்கிறார். ஒரு கதையை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் அவர் மறந்துவிட வேண்டிய எழுத்தாளர் அல்லர் என்றுதான் தோன்றுகிறது.

    க்ளாஸ்பெல் இதைப் போலவே ஒரு வழக்கை பற்றி – 1900-இல் நடந்த ஜான் ஹொஸ்ஸாக் கொலை – பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கிறார். முதலில் ஹொஸ்ஸக்கின் மனைவி மார்கரெட்தான் கொலைகாரி என்று பொருள் கொள்ளும்படிதான் எழுதிக் கொண்டிருந்தாராம். ஆனால் நாடகத்தில் வருவது போலவே ஹொஸ்ஸாக்கின் வீட்டுக்குப் போய் ஒரு முறை பார்த்த பிறகு அவரது அறிக்கைகளின் (reports) தொனி முழுவதாக மாறிவிட்டதாம்.

    சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    தொடர்புடைய சுட்டிகள்:
    இணையத்தில் A Jury of Her Peers சிறுகதை
    சூசன் க்ளாஸ்பெல் – விக்கி குறிப்பு

    வால்டர் டெவிஸ் – Queen’s Gambit

    வால்டர் டெவிஸ் எழுதிய Queen’s Gambit சமீபத்தில் நெட்ஃப்ளிக்சில் சீரிசாக வந்திருக்கிறது. சீரிஸ் புத்தகத்தை ஏறக்குறைய அப்படியே நகல் எடுத்திருக்கிறது.

    புத்தகத்தை ஒரு வரியில் சுருக்கிவிடலாம். ஒரு பிறவி மேதை – செஸ் விளையாட்டைப் பற்றி அறிந்த சில நாட்களிலேயே அதை நன்றாகப் புரிந்து விளையாடக் கூடியவர் – செஸ் சாம்பியனாகும் கதை.

    கொஞ்சம் விவரம் வேண்டும் என்பவர்களுக்காக: பெத் சிறு வயதில் அனாதை ஆகிவிடுகிறாள். அனாதை விடுதியில் வேலை செய்யும் ஷைபல் மூலம் செஸ் பற்றி அறிகிறாள். அவளால் நுணுக்கங்களை வெகு விரைவில் கிரகித்துக் கொள்ள முடிகிறது. அனாதை விடுதியில் tranquilizer மாத்திரை பழக்கம் ஏற்படுகிறது. அந்த tranquilizer மாத்திரைகள் அவளுக்கு நன்றாக விளையாட இன்னும் உதவுகின்றன. பயிற்சி பெற்ற பலரை தோற்கடிக்கிறாள். ஒரு குடும்பத்தில் ஸ்வீகாரம் போகிறாள். அங்கே அப்பா சீக்கிரம் வீட்டை விட்டு ஓடிவிட, கொஞ்சம் கஷ்ட ஜீவனம். அம்மாக்காரி பெத் செஸ் விளையாட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள். அனேகமாக எல்லா போட்டிகளிலும் வென்று கொண்டே போகிறாள். அன்றைய உலக சாம்பியனிடம் ஒரு முறை தோற்கிறாள். பிறகு அடுத்த முறை சில நண்பர்களின் உதவியோடு வெல்கிறாள்.

    டெவிஸ் இதை மேதைகளின் உலகத்தைக் காட்ட என்று நினைத்து எழுதி இருக்கலாம். என் கண்ணில் அதெல்லாம் நன்றாகவே வரவில்லை. மேலும் எப்பேர்ப்பட்ட மேதாவியும் செஸ்ஸில் பெத் அளவுக்கு வென்றதில்லை. பாபி ஃபிஷரும் காஸ்பரவோவும் கார்ல்ஸனும் கூட. பெத் புத்தகம் முழுவதிலும் நாலு முறை தோற்றிருந்தால் அதிகம். அது நம்பகத்தனமையைக் குறைக்கிறது.

    குறைகள் இருந்தாலும் எனக்கு படிக்கத்தான் பிடித்திருந்தது.

    எனக்கு செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. நன்றாக விளையாட மாட்டேன் என்பது வேறு விஷயம். அதனால் படித்தேன். மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன்.

    பின்குறிப்பு: Queen’s Gambit என்பது செஸ்ஸில் ஒரு விளையாட்டு முறை. கிரிக்கெட்டில் yorker, square cut என்பதைப் போல. மிகவும் பிரபலமான விளையாட்டு முறை. நன்றாக விளையாடக் கூடிய எவரும் இந்த முறையின் நுணுக்கங்களை கரைத்துக் குடித்திருப்பார்கள்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    பிடித்த சிறுகதை – Southern Thruway

    இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் போக்குவரத்து நெரிசலில் (traffic jam) மாட்டிக் கொண்டேன். கார்கள் இஞ்ச் இஞ்சாக நகர்ந்து கொண்டிருந்தன. மனைவிதான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்து சீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகம் மாதிரி கழிந்தது. அரை மணி நேரம்தான், ஆனால் முள்ளின் மேல் உட்கார்வது போல இருந்தது.

    அன்றிரவு தற்செயலாகப் படித்த சிறுகதை Southern Thruway. பாரீஸுக்கு போகும் சாலையில் போக்குவரத்து நெரிசல். அதுவும் 12 வழிச் சாலை. நடுவில் சிக்கிக் கொண்டவர்களுக்கு எங்கேயும் போக முடியாது. நாட்கள் சில சென்றும் நெரிசல் அப்படியேதான் இருக்கிறது.

    என்ன நடக்கும்? அக்கம்பக்கத்திலிருக்கும் பத்து இருபது கார்களின் பயணிகள் சேர்ந்து சிறு சிறு குழுக்கள் உருவாகின்றன. கதையில் யாருக்கும் பெயரில்லை. எல்லாரும் அவர்களுடைய் கார்களின் பேரால்தான் குறிப்பிடப்படுகிறார்கள் – ப்யூகாட், சிட்ரோயன் இந்த மாதிரி. குழந்தைகள், பெண்களுக்குதான விசேஷத் தேவைகள். அவற்றை எப்படி பூர்த்தி செய்வது என்று போராடும் குழுத்தலைவர்கள். தண்ணீர், உணவுப் பிரச்சினைகள். இருப்பதை இரண்டு நாள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்கப்புறம் சாலைக்கு வெளியே போய் தண்ணீர் கொண்டு வர முயற்சி. வயதான ஒருவர் இறக்கிறார். டாக்டரைக் கூப்பிட்டு வைத்து இன்னொருவருக்கு வைத்தியம் பார்க்க ஒரு காரை ஆஸ்பத்திரி ஆக்குகிறார்கள். காரை விட்டுவிட்டு ஓடிவிடும் ஒரு பயணியின் காரை ஓட்ட இன்னொருவன் நியமிக்கப்படுகிறான். அடுத்த lane-இருக்கும் ஒரு பெண்ணோடு உறவு.

    ஏழெட்டு நாள் கழித்து நெரிசல் சரியாகிவிடுகிறது. கார்கள் நகர ஆரம்பிக்கின்றன. ஆனால் நாயகனின் lane, அவன் உறவு கொள்ளும் பெண்ணின் lane இரண்டும் வேறு வேறு வேகத்தில் போகின்றன. அவர்களின் பிரிவு நிரந்தரம்!

    சாதாரணமாக சொல்வோம் – ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அது உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு சொல்வடையை மிக சுவாரசியமான சிறுகதை ஆக்கி இருக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுத்தீயினால், வெள்ளத்தால், நிலநடுக்கத்தால், தைமூர், ஜெங்கிஸ் கான் போன்றோரின் படையெடுப்பால் தப்பி ஒரே இடத்தில் தங்க வேண்டி இருந்த அறிமுகமற்றவர்களின் சமூக உறவுகள் எப்படி பரிணமித்திருக்கும்? என்ன நடந்திருக்கும்? அவர்களுக்குள்ளே குழு உணர்வு எப்படி ஏற்பட்டிருக்கும்? அந்த மாதிரி உறவுகள் பலமானவையா? நிறைய கேள்வி கேட்க வைத்து சிறுகதை.

    ஹூலியோ கோர்த்தசார் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். போர்ஹே, மார்க்வெஸ் போன்றவர்கள் வரிசையில் உள்ளவராம். இனி மேல் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.

    கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    பிடித்த சிறுகதை – Eudora Welty’s “Why I Live at the P.O.”

    வெல்டி அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் பிறந்தவர். தெற்கு அமெரிக்காவை (American South, South America அல்ல) பின்புலமாக வைத்து எழுதுவார். Why I Live at the P.O. அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

    குடும்பத்தின் சண்டைகள், கோள் மூட்டுதல், மனத்தாங்கல்களின் மிகச் சிறப்பான சித்திரம். கதையின் களம் மிஸிஸிபி மாநிலமாக இருக்கலாம். ஆனால் இதை மகாபாரதத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் சிறு வயதில் போடும் சண்டையாக கற்பனை செய்து கொள்ளலாம்; அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட பிராமண அக்ரஹாரம் ஒன்றில் பொருத்திக் கொள்ளலாம்; திருமணத்திற்காக வந்து சண்டை போடும் உறவினரோடு பொருத்திக் கொள்ளலாம். எந்த ஊரிலும், நாட்டிலும், அண்ணனோடு தங்கையும், அக்காவோடு தம்பியும், பங்காளிகளும் சகலபாடிகளும் யாருக்குள்ள்ளும் ஏற்படக் கூடிய பிரச்சினைகள்தான்.

    கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    மெக்சிகோ நாட்டு சிறுகதை – ஹுவான் ருல்ஃபோ எழுதிய “Macario”

    ஹுவான் ருல்ஃபோ (Juan Rulfo – ஸ்பானிஷ் மொழியில் J எழுத்தை H மாதிரிதான் உச்சரிப்பார்கள்.) மெக்சிகோ நாட்டு எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனம் கவர்ந்த எழுத்தாளராம்.

    தற்செயலாக அவரது 3 சிறுகதைகள் கண்ணில் பட்டன. Remember சிறுகதையை என் கண்ணில் மறந்துவிடலாம். Tell Them Not to Kill Me! நன்றாக எழுதப்பட்ட சிறுகதை, படிக்கலாம். ஆனால் இந்தப் பதிவை எழுத Macario சிறுகதைதான் காரணம் உண்மையிலேயே disturbing சிறுகதை. சின்ன சிறுகதை, விளக்கும் நேரத்தில் படித்துவிடலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    3 சிறுகதைகளை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிட முடியாது. கருணையே அற்ற விவரிப்புதான் ருல்ஃபோவின் speciality-யோ என்று தோன்றுகிறது. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! குறைந்தபட்சம் Macario பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

    Shawshank Redemption

    மனம் நிறைவடையச் செய்யும் வெகு சில படைப்புகளில் ஒன்று Shawshank Redemption திரைப்படம். பல நாட்களாக அதன் மூலக்கதையை படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    மூலக்கதையை எழுதியவர் புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃப்ன் கிங். மூலக்கதையின் பேர் “Rita Hayworth and Shawshank Redemption” (1982). கதைச்சுருக்கம் எல்லாம் நான் எழுதப் போவதில்லை, தேவை என்றால் முழுக்கதையையும் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

    குறுநாவல் நன்றாகவே இருந்தது. ஆனால் திரைப்படத்தைப் பார்க்காமல் இதைப் படித்திருந்தால் இந்த அளவுக்கு ரசித்திருப்பேனா என்று தெரியவில்லை. படிக்கும்போது அங்கங்கே திரைப்படத்தில் இந்த வசனம் வரும் இடம், இந்தக் காட்சி திரைப்படமாக்கப்பட்ட விதம் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.

    குறுநாவலுக்கும் திரைப்படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அப்படி இருக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்களும் நகாசு வேலைகள் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக வார்டனின் பணமே கொள்ளை போவது என்று மூலக்கதையில் இல்லை, ஆனால் வார்டனுக்கு அப்படி ஒரு comeuppance கிடைப்பது திரைப்படத்தை இன்னும் உயர்த்துகிறது.

    Shawshank திரைப்படம் வெளியானபோது அவ்வளவு கவனம் பெறவில்லை. நான் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தேன். Pulp Fiction மற்றும் Forrest Gump திரைப்படங்களின் வெற்றி Shawshank-ஐ அமுக்கிவிட்டன. மார்கன் ஃப்ரீமனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபிறகுதான் இது என்னடா படம் என்று தேடிப் பிடித்துப் பார்த்தோம். அந்த வருஷம் வெளியான திரைப்படங்களில் இன்றும் என் ஃபேவரிட் Pulp Fiction-தான், ஆனால் Shawshank அன்றும் இன்றும் என் மனம் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று. மார்கன் ஃப்ரீமன், டிம் ராபின்ஸ், வார்டனாக நடிப்பவர், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சும் ப்ரூக்ஸ் ஹாட்லெனாக நடிப்பவர் – எல்லாருமே கலக்கி இருப்பார்கள்.

    திரைப்படத்தை பார்க்கவில்லை என்றால் குறுநாவலை இணைத்திருக்கிறேன், படித்துவிட்டு அப்புறம் பாருங்கள்! பார்த்துவிட்டீர்கள் என்றால் குறுநாவலை படித்துப் பாருங்கள்! (காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்)

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்