முத்துலிங்கத்துக்குப் பிடித்த சிறுகதைகள்

அ. முத்துலிங்கம் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் காலம் இதழுக்கு (மார்ச் 2005-இல்) அளித்த பேட்டியிலிருந்து:

உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல சிறுகதையைக் குறிப்பிட முடியுமா?

ஒரு கதையல்ல. ஞாபகத்தில் இருந்த பல கதைகளைச் சொல்ல முடியும்.

இவை நீங்கள் கேட்ட இந்தக் கணத்தில் நினைவில் இருப்பவை. இன்னும் பல உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில் நினைவு வரும்.

ஒரு நல்ல சிறுகதையை உதாரணம் காட்டி விளக்க முடியுமா?

புதுமைப்பித்தனுடைய பல கதைகள் ‘அன்று சம்பளம் போடவில்லை’ என்று ஆரம்பிக்கும். அவர் எழுதிய பொய்க்குதிரை என்ற கதையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அவருடைய அலுவலகத்தில் சம்பளம் போடாத ஒரு பட்டினி இரவு அவர் அதை எழுதியிருக்கலாம். இந்தக் கதையை நான் பத்து தடவையாவது படித்திருப்பேன். 11வது தரம் படித்தபோதுதான் திடீரென்று அது எவ்வளவு பெரிய கதை என்பது என் மூளையைச் சென்றடைந்தது. அதில் ஓடிய துயரம் சாம்பல் மூடிய நெருப்பு போல கண்ணுக்குத் தெரியாமலே கனன்று கொண்டிருக்கும். நடுத்தர குடும்பத்தில் புதிய கணவன் மனைவி. கணவன் வேலையிலிருந்து இன்னும் திரும்பவில்லை. மனைவி சமைப்பதற்கு காத்திருக்கிறாள். அன்றும் சம்பளம் போடவில்லை. அவர்கள் ஒரு பணக்கார நண்பன் வீட்டுக்கு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள். அங்கே சாப்பிட உட்காரும்போது மனைவி பரிமாறுகிறாள். ஒருவர் அவளிடம் ‘ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே’ என்று பரிகாசமாகக் கூறுகிறார். வீடு வந்த பிறகு அவள் விம்மி அழுகிறாள். அவளால் நிறுத்த முடியவில்லை. இதுதான் கதை.

சிலர் கதையை மூளையிலிருந்து எழுதுவார்கள். சிலர் இதயத்தில் இருந்து எழுதுவார்கள். இது இதயத்தில் இருந்து பிறந்தது. இதில் தொழில் நுட்ப வெற்றி இல்லை; நேர்த்தியும் இல்லை. அதுதான் சிறப்பு. படித்து முடிக்கும்போது அதில் மறைந்திருக்கும் துயரம் பெரிதாக எழும்பி உங்களைத் தாக்கும். அந்தத் துயரம் கூட பல தடவை சாம்பலை ஊதிய பிறகுதான் தெரிகிறது. நல்ல ஒரு சிறுகதையின் அம்சம்.

புதுமைப்பித்தன் கதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று எனக்கு சின்னதாக கர்வம் இருந்தது. முத்துலிங்கம் அதை உடைத்துவிட்டார். இந்த சிறுகதை நன்றாக நினைவிருந்தாலும் அதை நான் பெரிதாக எண்ணவில்லை. நேர்த்தி இல்லை, தொழில் நுட்பம் இல்லை, எளிய சிறுகதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முத்துலிங்கம் விளக்கும்போதுதான் புரிகிறது! அதுவும் பொதுவாக எனக்கு அடுத்தவர் சொல்லி இலக்கியத்தை விளங்கிக் கொள்ளும் சக்தி கிடையாது, ஆனால் இவர் சொல்வது நேராக மண்டையில் இடிக்கிறது. சரி முத்துலிங்கத்துக்கே 11வது தரம் படிக்கும்போதுதான் அது எவ்வளவு சிறப்பான சிறுகதை என்று புரிந்திருக்கிறது, என்னை மாதிரி சுண்டைக்காய்க்கு அது புரியாததில் வியப்பென்ன!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், முத்துலிங்கம் பக்கம்

ஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பேட்டி

முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அழைப்பது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று சொல்வது போலத்தான். இருந்தாலும் சுலபமாக அடையாளப்படுத்துவதற்காக அப்படி குறிப்பிடுகிறேன். அவர் எழுத்து அகில உலகத்துக்கும் உரியது. அதிலும் சிறப்பாக அவரது கதைகளின் பின்புலமும் உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. ஆஃப்ரிக்கா, கனடா, இலங்கை, ஏன் பாகிஸ்தான் பின்புலத்தில் கூட ஒரு சிறந்த சிறுகதை உண்டு.

முத்துலிங்கம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது எழுத்துக்களில் தெரியும் மெல்லிய நகைச்சுவை அபாரமானது. அவரது சிறந்த பேட்டி ஒன்றை இங்கே பார்த்தேன், வசதிக்காக கீழே பதித்திருக்கிறேன். தமிழ் ஹிந்துவுக்கு நன்றி!

ஏன் எழுதுகிறீர்கள்?

முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

அதிகாலை நேரத்தில்தான் எழுதுகிறேன். காலை 5.30 மணியிலிருந்து 9 மணி மட்டும் எழுதுவேன். காலை உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் எழுதலாம். ஆனால், ஊக்கம் குறைந்துவிடும். மதிய உணவுக்குப் பின்னர் சோர்வு ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் வாசிப்பேன். வாசிப்பின் வெற்றி கையில் இருக்கும் புத்தகத்தைப் பொறுத்தது. என்னுடைய எழுத்தாள நண்பரிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். அவரும் காலைதான் எழுதுகிறார். ஆனால், ஒரு நாளில் அவருக்கு இரண்டு காலைகள். அதிகாலையிலிருந்து மதியம் வரை எழுதுவார். மதிய உணவுக்குப் பின்னர் சிறு தூக்கம். எழுந்தவுடன் ஒரு நடைபோய்விட்டு வந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறார். ஒரு நாள், இரண்டு விடியல், இரண்டு எழுத்து. இதையும் முயன்றுபார்த்திருக்கிறேன். நான் வேக மான எழுத்தாளன் இல்லை. நான்கு மணி நேரத்தில் சிலவேளைகளில் ஒரு பக்கம்தான் தேறுகிறது.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

எழுத்தாளர்கள் திருப்தி அடைவதே இல்லை. டோல்ஸ்டோய் 1,300 பக்கங்கள் கொண்ட ‘போரும் சமாதானமும்’ நாவலை எழுதினார். எழுதி முடித்த பின்னர் பின்னுரை ஒன்று எழுதினார். அது திருப்தி தராமல் இன்னொரு பின்னுரை எழுதினார். மூன்றாவதாகவும் தன் நாவலை விளக்கி ஒன்று எழுதினார். இறுதிவரை அவருக்குத் திருப்தி கிடைத்ததாகத் தெரியவில்லை.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எப்போதும்தான். ஒரு புத்தகம்கூட எழுதிடாத பல சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். சிந்தனையில் அவர்கள் பல நூல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை எழுத்தில் மாற்றுவதற்கு சோம்பல் இடம்கொடுக்கவில்லை. எழுத்தாளருடைய உண்மையான வெற்றி சோம்பலைத் தோற்கடிப்பதுதான். நான் கணினியில் எழுதும்போது அடிக்கடி நினைப்பது 10,200 பாடல்களை இயற்றிய கம்பரைத்தான். ஓலையை ஒரு கையிலே பிடித்து மறுகையில் எழுத்தாணியை எடுத்து அத்தனை பாடல் களையும் எழுதினாரே அதற்கு எத்தனை உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்! அதிகமாக எனக்கு சோர்வு நேர்ந்தது நேர்காணல் செய்யும்போது. ஒருவரை முன்னும் பின்னும் துரத்தி தொந்தரவுபடுத்தி நேர்காணலுக்குத் தேதி வாங்கியிருப்போம். பல மைல்கள் பயணிக்க வேண்டி வரலாம். நேர்காணல் முடிந்து எழுதித் திருத்தி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்க வேண்டும். பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படும்போது மிகவும் மனச்சோர்வாக உணர்வேன். அதைக் கடந்து மீண்டும் எழுதவருவது சிரமம்தான்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

1999 என்று நினைக்கிறேன். பல மைல்கள் பயணித்து அமெரிக்காவில் சாந்தகுரூஸ் என்ற இடத்தில் சுந்தர ராமசாமியைச் சந்திக்கப் போயிருந்தேன். முதல் சந்திப்பு. நான் எழுதிய சில சிறுகதைகளை அவர் படித்திருந்தார். பாராட்டுகள் வந்திருந்தன. ஒன்றிரண்டு எதிர்மறையாகவும் இருந்தன. அப்போது அவர் சொன்ன அறிவுரை இன்றுவரை பயனுள்ளதாகவே இருக்கிறது. ‘திறனாய்வாளரை முற்றிலும் ஒதுக்கக் கூடாது. காழ்ப்புணர்வு விமர்சனம் என்றால் முதல் இரண்டு வரிகளிலேயே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்கள் படைப்புத் திறனை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். திறனாய்வாளர் வெளிப்படுத்திய கருத்தில் உண்மை இருந்தால், அதை மதிக்கப் பழக வேண்டும். நல்ல விமர்சனங்கள் எழுத்தை மேம்படுத்தும்.’

இலக்கியம் தவிர்த்து – இசை, பயணம், சினிமா, ஓவியம்… – வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

கிடைக்கும் ஒவ்வொரு நிமிட அவகாசத்திலும் ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது வாசிக்க வேண்டும். ஆகவே, தொலைக்காட்சி பார்ப்பதோ, இசை கேட்பதோ அபூர்வமாகவே நடக்கிறது. வெங்கட் சாமிநாதன் கர்னாடக இசைக் குறுந்தகடு ஒன்று தந்தார். அதை அடிக்கடி கேட்பேன். துக்கமான சமயத்திலும் மகிழ்வான சமயத்திலும் அதே இசை மனதை சமநிலைப்படுத்துகிறது.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகியவற்றை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ‘மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பார்த்தேன். எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். படிக்க வேண்டும்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich அறம் பற்றிப் பேசுவது. இவான் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கிக் கீழே விழுந்து காயம்பட்டு தீர்க்க முடியாத நோயாளியாகப் படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டாவெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத் தைப் பற்றியும் அறத்தைப் பற்றியும் தன் இறுதிக் காலத்தில் சிந்திக்கிறார். வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

சொல்வனம் – முத்துலிங்கம் சிறப்பிதழ்

இந்த சொல்வனம் இதழ் முத்துலிங்கம் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குறிப்பாக பாவண்ணனின் கட்டுரை, மற்றும் கேசவமணியின் கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது. கட்டாயம் படியுங்கள்!

தமிழின் முதல் வரிசை எழுத்தாளர்கள் என்று ஒரு இருபது பேரைச் சொல்லலாம். அந்த வரிசையில் முத்துலிங்கத்துக்கு இடம் உண்டு. அவர் புலம் பெயர்ந்த எழுத்தாளரோ, இலங்கை எழுத்தாளரோ அல்லர். தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர், அவ்வளவுதான். இதற்கு மேல் நான் வளர்த்துவானேன்? சொல்வனத்தில் நிறைய பேர் வளர்த்தி இருக்கிறார்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: அழியாச்சுடர்கள் தளத்தில் சில முத்துலிங்கம் சிறுகதைகள்

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

அ. முத்துலிங்கம் பேட்டி

a_muthulingamசொல்வனத்தில் அ. முத்துலிங்கத்தின் ஒரு அருமையான பேட்டியைக் கண்டேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

முத்துலிங்கம் சொல்கிறார் –

ஒரு நேர்காணலில் ஒருவர் கேட்டார். ’நான் சொந்தமாக்கிய முதல் புத்தகம் என்ன?’ அதிர்ச்சியான கேள்வி. வீட்டிலே பாடப் புத்தகங்கள் இருந்தன. அதைத் தவிர பஞ்சாங்கம் இருந்தது. எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமும் கிடையாது.

அவருக்கு அடுத்த தலைமுறையினனான என் வீட்டிலும், படிக்கும் பழக்கம் இருந்த, பிள்ளைகள் புத்தகம் படிப்பதை ஊக்குவித்த பெற்றோர்கள் இருந்த போதிலும் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. அப்படி புத்தகங்கள் வாங்க முடியும் என்றே யாருக்கும் தோன்றியதில்லை. நான் வேலைக்குப் போன பின்னர்தான் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினோம். (இப்போது நானும் நிறுத்திவிட்டேன், புத்தகங்களை வைக்க இடமில்லை.) இன்றும் தமிழகத்தில் யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்கிறார்கள். ஏன் இப்படி? தமிழன் மரபணுவிலேயே ஏதாவது கோளாறா?

தன் எழுத்தின் கோட்பாடு பற்றி –

கோட்பாடு அப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. ஒரு படைப்பு வாசகரைச் சென்று அடையவேண்டும். அதுதான் முக்கியமானது. அது தேவையில்லை என்றால் எழுத்தாளர் கதையை எழுதி பெட்டியிலே பூட்டி வைப்பதற்கு சமம். ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்று இருக்க வேண்டும். ஆரம்பம் வாசகரை உள்ளே இழுக்கவேண்டும். முடிவு வாசகரை வெளியே போகாமல் தடுக்கவேண்டும். அதாவது கதை முடிந்த பின்னரும் அவர் சிந்தனை கதையின் பாதையில் தொடர்ந்து ஓடவேண்டும். கதை முடியும் சமயம் நீங்கள் புதுப்பிக்கப்பட்டதாக உணர வேண்டும்.
….
இன்னொரு முக்கியமான விடயம் எட்டாம் வகுப்பு மாணவனின் சொற்களில் எழுத வேண்டும் ஆனால் எட்டாம் வகுப்பு மாணவனின் வசன அமைப்பில் அல்ல. மாணவன் ’மாமரத்தின் உச்சிக்கு ஏறினான்’ என்று எழுதுவான். ஆனால் எழுத்தாளர் வித்தியாசமாக எழுதவேண்டும். ’அவன் ஏறினான், ஏறினான். மரம் முடியுமட்டும் ஏறினான்.’ இதுதான் வித்தியாசம்.

கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது.

சுந்தர ராமசாமி சொல்வார் நல்ல எழுத்து எழுதுவது சுலபம் என்று. தேய்வழக்கை நீக்கிவிட்டாலே நல்ல எழுத்து வந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து எளிமையாக எழுதுவதற்கே முயன்று கொண்டிருக்கிறேன். கடினமான ஒரு பொருளை இலகுவாக எப்படி கடத்துவது என்றே ஒரு நல்ல எழுத்தாளர் ஓயாமல் சிந்திக்கிறார்.
….
’புதியதைச் சொல். புதிதாகச் சொல்’ என்பார்கள். ‘என்னுடைய அம்மா ஓடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.’ இது ஒரு சிறுகதையின் ஆரம்ப வரிகள். வாசகரை உள்ளே இழுப்பதற்கான தந்திரம்.
….
புறநானூறு 305 இப்படிச் சொல்கிறது.

களைத்து, மெலிந்து
இரவில் வந்த
இளம் பார்ப்பனன்
அரண்மனைக்குள் புகுந்து
சில சொற்கள் சொன்னான்.
போர் நின்றது.

இதைவிட சிறந்த சிறுகதை உண்டா? பார்ப்பனன் எதற்கு வந்தான்? எங்கிருந்து வந்தான்? யார் அனுப்பிய செய்தி? என்ன சொன்னான்? யார் அரசன்? ஏன் போர் நின்றது?

புறநானூற்றுப் பாடல் அபாரம்! முத்துலிங்கம் சொன்னதால் என் கவிதை அலர்ஜியையும் தாண்டி நெடுநல்வாடை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

பிடித்த சிறுகதை – அ. முத்துலிங்கம் எழுதிய ‘கடவுச்சொல்’

a_muthulingamஇந்தச் சிறுகதையைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதப் போவதில்லை. படித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நெகிழ்ச்சியான புனைவுகள் இன்னும் பிடித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இருபது வருஷத்துக்கு முன்னால் இதே கதையைப் படித்திருந்தால் என்ன இப்படி நெஞ்சை நக்குகிறாரே என்று கமெண்ட் அடித்திருப்பேனோ என்னவோ. இப்போதெல்லாம் மனித உறவுகளைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. (சிறுகதையைப் பற்றித்தான் ஒரு வார்த்தை கூட எழுதப்போவதில்லை என்று சொன்னேன், என்னைப் பற்றி எழுதலாம்.:-))

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

அ. முத்துலிங்கத்தின் “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்” – பிடித்த சிறுகதை

a_muthulingamஇதில் என்னைக் கவர்வது அவரது craft. என்ன கச்சிதமான, நேர்த்தியான சிறுகதை! எத்தனை முறை படித்தாலும் ஒரு உற்சாகம் வருகிறது. கதை கிதை என்று ஒரு மண்ணும் கிடையாது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று ஒரு வரியை இப்படியும் எழுதலாம். ஆனால் இவ்வளவு நேர்த்தியாக எழுதவேண்டுமே! இப்படி ஒரு கச்சிதமான சிறுகதையாவது எழுதினால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்.

அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம், சிறுகதைகள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த அசோகமித்ரன் சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை : ஜெயமோகன் பட்டியல் பாகம் 2

ரொம்ப நாள் கழித்து இந்த சீரிசைத் தொடர்கிறேன். புதுமைப்பித்தன் என்ற ஜீனியசைப் பற்றி முதல் பகுதியில் எழுதினேன். இப்போது அசோகமித்ரன் என்ற ஜீனியஸ் எழுதிய சிறுகதைகளைப் பற்றி.

மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். அசோகமித்ரன் இந்த மூவரில் ஒருவர். அவரது பாணி அலாதியானது. அவர் சமுத்திரத்தைப் பற்றி எல்லாம் எழுதுவதில்லை, அவர் எழுதுவது ஒரு துளி தண்ணீரைப் பற்றி. அனாவசியமாக ஒரு வார்த்தை எழுதமாட்டார். அவரது பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், ஒருவனுக்கு திடீரென்று கார் டிரைவிங் வசப்படும் ஒரு நிமிஷம் பற்றிய சிறுகதை (திருப்பம்) என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

முதலில் ஒரு உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். அசோகமித்ரனின் எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. மிகவும் subtle ஆன எழுத்தாளர். வெளிப்படையாக எதையும் சொல்லும் பழக்கம் கிடையாது. தேவைக்கு அதிகமாக ஒரு சொல் இருக்காது. எனக்கோ நேரடியாக சொன்னாலே சில சமயம் புரிவதில்லை. ஆனால் புரியும்போது சில சமயம் மண்டையில் பல்ப் எரிகிறது, மணி அடிக்கிறது. அந்த அனுபவத்தை நான் அதிகமாகப் பெற்றது அசோகமித்ரன் கதைகளிலேயே. அதனால்தானோ என்னவோ எனக்கு இவரது கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடிகிறது.

அவர் கதைகள் எல்லாம் என்னவோ அவர் மறைந்து நின்று நடப்பதைப் பார்த்து அதை அப்படியே ரெகார்ட் செய்வது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன. எழுத்தாளர் குரல் எப்போதும் ஒலிப்பதில்லை. உபதேசம் என்ற பேச்சே கிடையாது. அவர் ரெகார்ட் செய்யும் சம்பவங்களோ சர்வ சாதாரணமானவை. ரயில் டிக்கெட் வாங்குவது, பொறியில் விழுந்த எலி, சிகரெட் பிடிக்க விரும்பும் ஒருவன் இதை எல்லாம் வைத்து என்ன எழுதுவது? ஒரு அசாதாரண சம்பவம் நடந்தால்தான் அதைப் பற்றி ஒரு கதை எழுதலாமா என்று என்னால் யோசிக்கக் கூட முடிகிறது.

அவருக்குப் பிடித்தமான தீம் மாறுதல் என்று நினைக்கிறேன். அது விமோசனம் சிறுகதையில் மனைவி உம் என்று சொல்லும் கணமாகட்டும், பெயர் நினைவு வராத ஒரு திருப்பம் சிறுகதையில் கிராமத்தில் இருந்து வந்து கார் ஓட்டக் கற்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு கணத்தில் கார் ஓட்டும் கலை பிடிபட்டு அவன் திடீரென்று நகரத்தில் வசிக்கும் தொழிலாளி ஆவதாகட்டும் அங்கிருந்துதான் உண்மையான கதையே தொடங்குகிறது. அப்படி தொடங்கும் கதையைப் பற்றி அவர் ஒரு வார்த்தை சொல்வதில்லை. அந்தக் கதை எல்லாம் Exercise to the reader என்று விட்டுவிடுவதில்தான் அவருடைய மேதமை தெரிகிறது. ஒரு ஜப்பானிய ஓவியத்தில் பெரிய வெள்ளைக் கான்வாஸின் இடது ஓரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையில் பின்பகுதி மட்டும் தெரியுமாம். மிச்சம் எத்தனைப் பறவை, அதெல்லாம் எங்கே என்றெல்லாம் பார்ப்பவர்களின் கற்பனைக்கு ஓவியன் விட்டுவிடுகிறானாம். அந்த ஓவியன் வம்சத்தில் இவர் வந்திருக்க வேண்டும்.

ஒரு கணம், நொடி, நக்மா இதைப் படம் பிடிப்பதில் சூரன். அந்தக் கணத்தை அவரை விட திறமையாக நமக்கு காட்டுபவர்கள் யாருமில்லை. காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம்.

அசோகமித்திரன் நகரத்து எழுத்தாளர். அவர் கதைகளில் நகரமும் ஒரு பாத்திரம். எனக்கு அவர் எழுதிய ஒரு கிராமத்துக் கதை கூட நினைவு வரவில்லை, உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்! ஒரு வேளை இருவர் என்ற குறுநாவலைச் சேர்த்துக் கொள்ளலாம். அது வைத்தீஸ்வரன் கோவில், அதன் அருகே உள்ள ஓரிரு சின்ன கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டது.

அசோகமித்ரனை மிஞ்சியவர் எவருமில்லை என்றாலும் அவரது பாணியில் எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்று நான் கருதுவது அ. முத்துலிங்கம் ஒருவரையே. முத்துலிங்கம் optimism என்ற கூறு உள்ள அசோகமித்திரன் என்று எனக்குத் தோன்றுகிறது. மெல்லிய நகைச்சுவை இருவருக்கும் பொதுவாக உள்ள இன்னொரு அம்சம். முத்துலிங்கம், அசோகமித்திரன் இருவரையும் ஒப்பிடுவதை articulate செய்ய எனக்கே இன்னும் கொஞ்சம் நாளாகும். இதைப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதினால் என் எண்ணங்கள் crystallize ஆக எனக்கு உதவியாக இருக்கும்.

அவரது பாணியில் எழுதும் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர்கள் என்று நான் கருதுவது திலீப்குமார், சுப்ரபாரதிமணியன், விமலாதித்த மாமல்லன் மூவரையும்தான். அதுவும் அசோகமித்ரனோடு ஒப்பிடக் கூடிய அளவு நகைச்சுவை உள்ளவர் திலீப்குமார்தான். அசோகமித்ரனைப் போல சர்வசாதாரணமான சம்பவங்களில் கதையைக் காண்பவர் சுப்ரபாரதிமணியன். ஆனால் இவர்கள் மூவரில் எவரும் அசோகமித்திரன் லெவலைத் தொட்டுவிடவில்லைதான்.

ஜெயமோகன் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது தேர்வுகளும், என் சிறு குறிப்புகளும் கீழே.

  1. விமோசனம்: கதை பூராவும் டென்ஷன்தான். கணவனுக்கு அடங்கி வாழும் மனைவி ஒரு தருணத்தில் உம் என்று திருப்பி மிரட்டுகிறாள். கணவன் அவளுடன் பேசுவதையே நிறுத்திவிடுகிறான். ஒரு மகானை தரிசித்து முறையிட்டால் தனக்கு விமோசனம் கிடைக்கும் என்று அவரிடம் போகிறாள். அவரிடம் பேசக்கூட முடியவில்லை. திரும்புகிறாள். விமோசனம் கிடைக்கிறது. என்ன மாதிரி விமோசனம்?
  2. காத்திருத்தல்: தேர்தலில் தோற்ற கட்சித் தொண்டன் அவன். வீட்டில் கல்லெறிகிறார்கள். இதை விவரிப்பது கஷ்டங்க, என்னை விட்டுட்டுங்க! நேராக படிச்சுக்கங்க!
  3. காட்சி: இது ஜெயமோகன் ஸ்டைல் சிறுகதை.நாஜிகளின் யூத முகாம்களைப் பற்றி இத்தனை சிக்கனமாக எழுதி – பத்து வாக்கியம் இருக்கலாம், அவ்வளவுதான் – இப்படி அந்த அவலத்தை உணர வைப்பவர் யாருமில்லை. “பார்த்தால்தான் அவைகளில் நான் பங்கேற்றவனாவேனா?” என்ற வரி எனக்கு சாகும் வரை மறக்காது.
  4. பறவை வேட்டை: மிக subtle ஆன கதை. எனக்கு இரண்டு முறை படித்த பின்தான் புரிந்தது. (என்று நினைக்கிறேன்) அந்தக் கடைசி வரிகள் அற்புதம்!
  5. குழந்தைகள்: அற்புதம்! அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன என்று பிள்ளையார் கேட்டுவிட்டு சிவன் பார்வதியை சுற்றி வந்து மாம்பழத்தை வாங்கிக் கொள்வது போல சர்வ சாதாரண நிகழ்ச்சியில் உலகத்தையே, வரலாற்றையே காண்பிக்கிறார்.
  6. காலமும் ஐந்து குழந்தைகளும்: ஒரு கணத்தைக் காட்டுவதில் இவருக்கு இணை யாருமே இல்லை. நாரதர் விஷ்ணு இருவர் பற்றி ஒரு தொன்மம் உண்டு – நாரதரை தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி விஷ்ணு அனுப்ப, நாரதர் நதிக்கரையில் ஒரு பெண்ணைக் கண்டு, மணம் செய்து, குழந்தை பெற்று… என்று போகும். அந்தத் தொன்மத்தை நினைவுபடுத்துகிறது.
  7. புலிக்கலைஞன்: அற்புதமான சிறுகதை. ஒரு நாலு வரியில் டகர்ஃபைட் காதரை கண் முன்னால் நிறுத்திவிடுகிறார். எத்தனை சிக்கனமான எழுத்தாளர், நாலு வரியே அவருக்குப் போதும்! இந்தக் கதையின் உச்சம் கதையின் நடுவில் நிகழ்கிறது. சிறுகதை என்பது ஒரு உச்சத்தை நோக்கி சீராகச் செல்ல வேண்டும் என்ற விதி எல்லாம் மேதைகளுக்கு இல்லை!
  8. காந்தி: காந்தி எனக்கு சிறுகதையாகவே தெரியவில்லை. என்றைக்காவது மண்டையில் மணி அடிக்குமோ என்று ஏழெட்டு முறை படித்துப் பார்த்துவிட்டேன், இன்னும் அடிக்கவில்லை.
  9. பிரயாணம்: நான் படித்த தலை சிறந்த சிறுகதைகளில் ஒன்று. இந்தக் கதையைப் படித்த பிறகுதான் நான் அசோகமித்ரனின் பக்தன் ஆனேன் என்று நினைக்கிறேன். முதல் முறை படிக்கும்போது கடைசி வரிகளில் “ஆங்? என்னாது? ஓ மை காட்! வாத்யாரே, நீ மேதை!” என்று தோன்றியது. இது ஒரு வேளை காப்பி அடித்த கருவாகக் கூட இருக்கலாம். ஆனால் உன்னதமான படைப்பு.
  10. பார்வை: எனக்குப் புரியாத இன்னொரு சிறுகதை. இன்னும் மண்டைக்குள் பல்ப் எரியவில்லை.
  11. மாறுதல்: இன்னுமொரு சிறப்பான சிறுகதை. வேலை செய்யும் வீட்டில் வெள்ளித்தட்டைத் திருடிவிட்டு மாட்டிக் கொள்ளும் சாயனா மீண்டும் அங்கேயே வந்தால்?
  12. குகை ஓவியங்கள்: கஷ்டப்பட்டு மலை ஏறி குகை ஓவியத்தில் காண்பது என்ன? நல்ல சிறுகதைதான், ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
அழியாச்சுடர்கள் தளத்தில் அசோகமித்ரன் சிறுகதைகள்
ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில் அசோகமித்திரன் சிறுகதைகள்
அசோகமித்ரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
இரு நகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
ஜெயமோகனின் படிக்கும் அறையில் உள்ள படங்கள்
அசோகமித்ரன் பேட்டி, இன்னொரு பேட்டி
அசோகமித்ரனின் இன்றைய பொருளாதார நிலை – ஒரு pointer
நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர்
அசோகமித்ரன்-ஜெயமோகன் ஒரு சந்திப்பு
அசோகமித்ரனும் எஸ்.எஸ். வாசனும்

அ. முத்துலிங்கம் விமர்சிக்கிறார் – “வாசகனுக்கு ஒரு வலை”

முழு கட்டுரை “அங்கே இப்போ என்ன நேரம்” தொகுப்பில் இருக்கிறது. முக்கால்வாசி கட்டுரை கீழே.

… எனக்கு இலக்கியம் பற்றி ஓர் உண்மை புலப்பட்டது. எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

பென் ஒக்கிரி (Ben Okri) என்பவர் புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர். இவருடைய The Famished Road என்ற நாவல் 1991-இல் புக்கர் பரிசு பெற்றது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரைப் பற்றி லிண்டா கிரான்ட் எழுதுகிறார். “ஒக்கிரி அலுப்பூட்டும் வசனம் ஒன்று கூட எழுத முடியாதவர்… (அவருடைய) இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். அந்தக் கணம் தெற்கு லண்டன் தெருக்களில் உள்ள மரங்களெல்லாம் தேவதைகளினால் நிரப்பப்பட்டு காட்சியளித்தன.”

தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இலக்கியக்காரர் இருக்கிறார். எவ்வளவு முயன்றாலும் அவரால் ஒரு அலுப்பூட்டும் வசனம் எழுத முடியாது. கண்ணாடித்தன்மையான வார்த்தைகள் கவிதையின் உள்ளே இருப்பதை சுலபத்தில் காட்டிவிடுவதைப்போல இவருடைய வார்த்தைகளும் கண்ணாடித்தன்மை கொண்டவை. அவற்றைக் கொண்டு தொடுக்கப்படும் வசனங்கள் அவர் சொல்ல வரும் கருத்தை துலாம்பரமாகக் காட்டிவிடுகின்றன.

இப்படி ரத்தினக் கற்களை நெருக்கி இழைத்தது போல வசனங்களை அடுக்கிச் செய்த இவருடைய சிறுகதை ஒன்றை சமீபத்தில் படித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த தமிழ் சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

இதன் தலைப்பு “வலை“. ஏழு பக்கத்தில் எழுதப்பட்ட கதை. கதாசிரியர் எழுதியது ஆறு பக்கமே. கடைசி ஏழாவது பக்கத்தை வாசகர்தான் பூர்த்தி செய்ய வேண்டும். கதை இதுதான்.

பெரிதாக், ஓயாமல் இருபத்து நாலு மணி நேரமும் சத்தம் எழுப்பும் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் கதைசொல்லி வேலை பார்க்கிறார். இவர் நிர்வகிக்கும் ‘எண்ணிக்கை’ பகுதியில் இன்னும் நாலு பேர் பணி செய்கிறார்கள். இந்தப் பகுதியை எலெக்ட்ரானிக்ஸ் முறைக்கு மாறுவதற்கு அதிகாரம் முயற்சி செய்கிறது. ‘முப்பத்தியெட்டு வருடங்கள் உழைத்தும் பிழை போகாத உபகரணங்கள்; மகத்துவமான தடையில்லாத செயல்பாடு. இன்னும் இருபத்தைந்து வருடங்கள் தாக்குப் பிடிக்கும். ஆனபடியால் அரிதான மூலதனத்தை இதில் செலவு செய்வது வியர்த்தமாகும்.’ இப்படியெல்லாம் சொல்லி காரணம் காட்டி, எண்ணிக்கைப் பகுதியை மூடும் ஆலோசனையைத் தகர்த்தாகிவிட்டது; கதைசொல்லியின் வேலையும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இது வரை நாலு கண்டம் தாண்டிவிட்டது. இனி மேல் ஒரு கண்டமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலை சுலபமானது. மனக்கோட்டை கட்டலாம். கவிதை எழுதலாம். புத்தகம் படிக்கலாம். ஈ, எறும்பை அவதானிக்கலாம்.

உண்மையில் அதுதான் நடந்தது.

செத்த புழு ஒன்று ஒரு கம்பித்துண்டில் ஒட்டியபடி கிடந்தது. ஓர் எறும்பு இழுத்துப் போகிறது. இன்னொரு எறும்பு சேர்க்கிறது. பார்த்தால் அது எதிர்த்திசையில் இழுக்கிறது. ஒரு சிறு போர். கதைசொல்லி இந்த விவகாரத்தில் கவரப்பட்டு இதையே பார்த்துக் கொண்டு அந்த எறும்பின் பின்னால் போகிறார்.

சிறிது நேரத்தில் அலுப்பு வந்துவிடுகிறது. ஏதாவது செய்து சமனைக் குலைத்து சுவாரஸ்யம் ஏற்படுத்த நினைக்கிறார். ஓர் எறும்பைக் கொன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அல்லது இரண்டையும் நசுக்கி அந்தத் தருணத்தை தீர்மானிக்கலாம். அல்லது நசுக்காமல் உயிர் கொடுத்து புதுத் தருணத்தையும் சிருஷ்டிக்கலாம். இந்த மூளைப் போராட்டம் அடுத்த கனத்தை நோக்கி நகர்கிறது. ஒரு வினாடி அவருடைய சிருஷ்டிப் பிரம்மாண்டத்தில் மயங்கி பார்வை தடைப்படுகிறது.

புழுவையும் எறும்புகளையும் காணவில்லை. ஒரு மெல்லிய நீக்கலுக்குள் அவை மறைந்துவிட்டன. எதிர்பாராதது.

அலாரம் வீறிடத் தொடங்கியது. எண்ணிக்கை ரிலேயில் ஃப்யூஸ் போய்விட்டது. சிவப்பு விளக்குகள் மின்னின. ராட்சத மெசின்கள் உராய்ந்து ஓய்வுக்கு வந்தன. பேரிரைச்ச்சல்கள் அடங்கின. கற்பனைக்கும் மீறிய அமைதி உண்டாகியது.

இப்படி கதை முடிகிறது. பேரிரைச்சலில் தொடங்கி பெரும் அமைதியில் முடிகிறது.

வலை என்ற தலைப்பு. ஆண் பெண்ணுக்கு வலை வீசலாம்; பெண் ஆணுக்கும் வலை வீசலாம். மனிதன் விலங்குக்கு வலை வீசலாம்; சில சமயம் விலங்கு மனிதனுக்கு வலை வீசலாம்.

ஒரு நுட்பமான கணத்தில் எறும்பின் உயிர் கதைசொல்லியின் கையில்; ஆனால் மன்னித்து கடவுள் போல சிருஷ்டியின் உன்னதத்தை அனுபவிக்கிறார். அடுத்த கணம் இவருடைய எதிர்காலத்தை செத்துப் போன ஓர் அற்பப் புழு தீர்மானித்துவிடுகிறது.

வெகு விரைவில் எண்ணிக்கை பகுதியின் தகுதியின்மை ஆராயப்படும். எலெக்ட்ரானிசின் ஆக்கிரமிப்பில், கதைசொல்லியையும் சேர்த்து ஐந்து பேர் சீக்கிரத்தில் வேலை இழக்க நேரிடலாம்.

இவை வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய பகுதிகள். செப்புக்கம்பி ஒட்டியபடி செத்துப்போன ஒரு புழு, மிகவும் சாமர்த்தியமாகப் பேசும், நுட்பமான அறிவு பெற்ற புத்திசாலிக்கு வலை விரித்துவிடுகிறது.

கதைசொல்லி விட்டதை நிரப்பியதும் கதை புரிகிறது. இப்பொழுது அந்தக் கதை எனக்கும் சொந்தமாகிவிடுகிறது. இன்னொரு முறை படித்துப் பார்க்கிறேன்.

அந்த ஆசிரியருடைய பெயர் ஜெயமோகன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம், ஜெயமோகன் பக்கம்

இந்திரா பார்த்தசாரதி புதிய ப்ளாக் தொடங்கி இருக்கிறார்

நாலைந்து நாளாக ஊரில் இல்லை. அவ்வப்போது இந்த மாதிரி ஒரு gap விழுந்துவிடுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு quickie போஸ்ட்.

இந்திரா பார்த்தசாரதி இப்போது ஒரு ப்ளாக் எழுதத் தொடங்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

எழுத்தாளர் தளங்கள் போஸ்டிலும் இப்போது இ.பா.வின் தள முகவரியை சேர்த்துவிட்டேன். மேலும் முத்துலிங்கத்தின் தள முகவரி மாறி இருக்கிறது, அதையும் அப்டேட் செய்துவிட்டேன். (தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!)