அகிலனின் கயல்விழி

akilanஅகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. பின்னே என்னங்க, இரண்டு பெரிய படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராட தயாராக இருக்கிறதாம், அப்போது நடுவே ஒரு பெண் ஓடி வந்து போரை நிறுத்தி விடுகிறாளாம். காதில் பூ சுத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும். ஆனால் கயல்விழிக்கு அந்தக் காலத்தில் நிறைய விசிறிகள் இருந்தார்கள். போடா நீ சின்னப் பையன் உனக்கு இதெல்லாம் புரியாது என்பார்கள். சிறந்த வாசகரான ஜெயமோகன் கூட இந்த நாவலை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் வைக்கிறார். எனக்கு நாலு வார்த்தை எழுதவே அலுப்புத் தட்டுகிறது. இதெல்லாம் நாற்பதுகளின் மிகை மெலோட்ராமா நாடகம், ஐம்பதுகளின் சிவாஜி கணேசன் சினிமாதான். இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது சிவாஜி, பத்மினி, தங்கப்பதுமை சினிமா மாதிரி ஒரு பிம்பம் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” என்ற திரைப்படமாக எடுத்தார்.

ஒன்று சொல்ல வேண்டும். இந்த நாவல் எனக்கு நா.பா.வை அடிக்கடி நினைவுபடுத்தியது. மீண்டும் மீண்டும் இது நா.பா. எழுத்து இல்லை, அகிலனுடையது என்று நினைவுறுத்திக் கொண்டேன்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

படித்த மிச்சப் புத்தகத்துக்கு எல்லாம் தனித்தனியாக பதிவு எழுதுவதற்கில்லை. சகோதரர் அன்றோ என்று சிறுகதைத் தொகுதியில் ஒன்று கூட எனக்குத் தேறவில்லை. பொன்மலர் என்ற நாவலும் வழக்கமான புலம்பல்தான். சிநேகிதி எல்லாம் வாசகர்களை அதிர்ச்சி அடையவே எழுதப்பட்டவை. வயதான கணவன் தந்தை ஸ்தானத்தில் நின்று இளம் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறானாம். எதுக்கு கல்யாணம் செய்து கொண்டு பிறகு சேர்த்து வைக்க வேண்டும்? திருமணத்தைத் தவிர்த்திருக்க வேண்டியதுதானே?

ஜெயமோகன் பரிந்துரைகளில் உள்ள எல்லா நாவல்களையும் – வணிக நாவல்களையும் சேர்த்துத்தான் – படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டு. டிக் மார்க் போட என்றாவது பாவை விளக்கு, பெண் எல்லாம் படிக்க வேண்டுமென்று நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி ஜெயமோகன் இந்த மாதிரி எழுத்தை எல்லாம் ஒரு seminal பட்டியலில் சேர்த்தீங்க? ஏதாவது ஒரு விஷயமாவது இருக்க வேண்டாமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
வேங்கையின் மைந்தன்
சித்திரப்பாவை
அகிலனைப் பற்றி அவரது மகன்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

அகிலனின் “வெற்றித் திருநகர்”

அகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். அதுவும் சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

கிருஷ்ணதேவராயரை தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு மன்னராக – அதுவும் ஒன்றான பாரத நாடு என்ற எண்ணம் உடையவராகவும், ராஜபுதன நாடுகளோடு சேர்ந்து முகலாயரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவும் சித்தரித்திருக்கிறார். அவரது சபையில் இருக்கும் பிரபுக்கள் அதை உணர முடியாததால் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராயரால் அவர்களின் மனதை மாற்ற முடியவில்லை.

அமைச்சராக இருக்கும் சாளுவர் ராயருக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிற்காது என்பதை உணர்கிறார். மதுரையைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு தன் மாப்பிள்ளையை மன்னராக்க பல சதிகளை செய்கிறார். விஸ்வநாதனுக்கும் தன் மகள் லக்ஷ்மிக்கும் உள்ள ஈர்ப்பை ஊக்குவிக்கிறார். நாகமரைத் தூண்டிவிடுவதே அவர்தான். ராயர் விஸ்வநாதனையே மதுரை மன்னன் ஆக்கிய பிறகும் அவரது சதிக்கு பொருளே இல்லாமல் போய்விடுகிறது. இருந்தாலும் தான் வில்லன், அதனால் சதி செய்தாக வேண்டும் என்று தொடர்ந்து சதி செய்து கொண்டே இருக்கிறார். அவர் கடைசியில் லக்ஷ்மியை மணக்கக் கூடாது என்று விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொள்வது ஒன்றுதான் உருப்படியான வில்லத்தனமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வருவது போல (ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவகுமாரும் முத்துராமனும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதாக எனக்கு மங்கலான ஒரு நினைவு) நாகமரும் விஸ்வநாதனும் படைகளை மோதவிடாமல் தாங்கள் இருவரும் தனியாக கத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எதற்கு வீண் சண்டை என்று கோலி பம்பரம் ஏதாவது விளையாடி அதில் வெல்பவருக்கு தோற்றவர் அடிமை என்று சொல்லி இருக்கலாம். அகிலனுக்கு அது தோன்றாமல் போய்விட்டது.

கிருஷ்ணதேவராயரிடம் பல இன்றைய விழுமியங்களை – ஒன்றான பாரத நாடு இத்யாதி – ஏற்றி இருக்கிறார். ஜெயமோகனிடம் சமீபத்தில் இப்படி இன்றைய விழுமியம் அன்றைய மனிதர்களிடம் இருக்கிறதே என்று கமென்ட் அடிப்பதைப் பற்றி கொஞ்சம் இடி வாங்கினேன். நடக்கவே முடியாத விஷயம் என்று ஒன்றுமில்லை, அதற்கான சாத்தியக் கூறு இருந்தால் அது ஆசிரியரின் கற்பனை என்று விட்டுவிட வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கான சாத்தியக் கூறு உண்டு என்று நிறுவ கொஞ்சம் வலுவான ஆதாரம் வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. ராயர் ராணா சங்காவுக்கு உதவி செய்தார் என்று ஏதாவது இருந்தால் சரி, இல்லாவிட்டால் இப்படி எழுதுவது எனக்கு உறுத்தத்தான் செய்கிறது.

வெற்றித் திருநகர் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

ஆனால் என்ன குறை சொன்னாலும் இதுதான் எனக்கு அகிலனின் சிறந்த சரித்திர நாவல். இது மட்டுமே எனக்கு கொஞ்சமாவது அப்பீல் ஆகிறது.

வெற்றித் திருநகர் ஜெயமோகனின் வணிக சரித்திர நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுகிறது. என் கண்ணில் அது முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேங்கையின் மைந்தனை விட நல்ல நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

அகிலனின் “வேங்கையின் மைந்தன்”

மாற்றங்கள் வரும், இனி நல்ல புத்தகங்கள் என்று நான் கருதுபவை பற்றியே focus செய்யப் போகிறேன் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுத வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்தேன். ஜெயமோகனின் நாவல் சிபாரிசுகள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை; சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் புத்தகங்கள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இரண்டும் எழுத வைக்கின்றன.

வேங்கையின் மைந்தன் பேப்பருக்குப் பிடித்த கேடு. உலக மகா போர். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருப்பது மானம் போகும் விஷயம். நாவலில் சரித்திரமும் இல்லை, நாவலும் இல்லை. நல்ல பாத்திரப் படைப்பு, ஒரு காலகட்டத்தைச் சித்தரிப்பது, தகவல்கள், நுண்விவரங்கள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கல்கி எழுதிய கொஞ்சம் குழந்தைத்தனமான பார்த்திபன் கனவு இதை விட பல மடங்கு பெட்டர். எப்படி அகிலன் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பெருவெற்றி பெற்றார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கிறது. அதே காலத்தில் வெற்றி பெற்ற, இன்றைக்கு மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மு.வ., நா.பா., தேவன் மாதிரி “வணிக எழுத்தாளர்களில்” ஏதோ கொஞ்சமாவது இருக்கிறது. இவரது வெற்றி புரியவே இல்லை. இதில் ஞானபீடம், சாகித்ய அகாடமி என்று விருது வாங்கிக் குவித்திருக்கிறார். எப்படி? அந்தக் காலத்தின் இலக்கியத்தின் வால்யூ சிஸ்டம் என்ன என்று ஜீவி, ஜெயமோகன் மாதிரி யாராவது கொஞ்சம் விளக்குங்கள்!

வேங்கையின் மைந்தனில் உள்ள சரித்திரம் ராஜேந்திரச் சோழர் காலத்தில் இலங்கையை வென்று பாண்டியர்களின் கிரீடம், ஆரம் ஆகியவற்றைக் கைப்பற்றியது, கங்கை கொண்டது அவ்வளவுதான். இதில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ, அவனோடு love-hate உறவுள்ள இலங்கை இளவரசி ரோஹிணி, அவனைக் காதலிக்கும் ராஜேந்திரரின் மகள் அருண்மொழி என்று சில பல கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து உலாவ விட்டிருக்கிறார்.

புத்தகத்தைப் படிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தம் கட்டித்தான் படித்தேன். இளங்கோ-ரோஹிணி சந்திக்கும்போதெல்லாம் அய்யய்யோ என்றுதான் மனம் போனது. எண்ணூறு பக்க நாவலில் இவர்கள் இருவரும் ஒரு இருநூறு முன்னூறு பக்கத்துக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கொடுமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்து பகல் கனவு கண்டபோது கூட இளங்கோவை விட வீர சாகசங்கள் புரிந்திருக்கிறேன். உண்மையில் கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என் இன்னும் பாப்புலராக இருக்கின்றன என்று புரிந்து கொள்ளத்தான் இந்தப் புத்தகம் உதவியது.

ஜெயமோகன் இதில் என்னத்தைக் கண்டார் என்று எனக்கு கொஞ்சம் கூடப் புரியவில்லை. சித்திரப்பாவையிலாவது அகிலன் முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இது மெகாசீரியலுக்குக் கூட லாயக்கில்லை. நாவல் சிபாரிசுகளில் இன்னும் நாலு அகிலன் புத்தகங்களை ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறாரே (கயல்விழி, வெற்றித்திருநகர், பெண், பாவை விளக்கு) என்று பயமாக இருக்கிறது.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 350 ரூபாய். நூலகம் தளத்தில் மின்னூலும் இலவசமாகக் கிடைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்: அகிலனின் “சித்திரப்பாவை

அகிலனின் “சித்திரப்பாவை”

இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுகள் ரெகுலராக வராது. இந்தியா வந்திருக்கிறேன், பல உறவினர்கள்/நண்பர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இன்டர்நெட் வேறு அவ்வப்போது வேலை செய்வதில்லை. தற்போதைக்கு ஒன்று.

எனக்கு அகிலனைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் எழுதிய எந்தப் புனைவும் என்னை எந்த வயதிலும் கவர்ந்ததில்லை. சாண்டில்யனை ஆர்வத்தோடு எட்டு ஒன்பது வயதில் படித்தேன். அந்த வயதில் கூட கயல்விழி போரடித்தது. பின்னே என்னங்க இரண்டு பக்கமும் பெரும் சேனைகள் திரண்டு போர் நடக்கும்போது கயல்விழி குறுக்கே புகுந்து அழுது புரண்டு போரை நிறுத்துகிறாளாம். அடப் போங்கய்யா!

ஆனால் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். விருது வாங்கிய எழுத்தைப் படித்துவிட வேண்டும் என்று ஒரு ஆசை. மேலும் ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். லட்சிய வேகம் அவரது எழுத்துகளில் நிறைய தென்படும் என்பார்கள்.

அண்ணாமலை ஓவியன். அவன் அப்பா மேஸ்திரி உலகாயத முறையில் முன்னேறத் துடிப்பவர். மாணிக்கம் அவருக்கு பிள்ளை மாதிரி. அண்ணாமலை கதிரேசன் என்ற பெரிய ஓவியரை சந்திக்கிறான். அவர் உதவியால் ஓவியக் கல்லூரியில் சேர்கிறான். கதிரேசனின் மகள் ஆனந்தியும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறார்கள். ஆனால் அண்ணாமலை அப்பாவி. தான் காதலிக்கிறோம் என்பது கூட அவனுக்கு சரியாக புரியவில்லை. மாணிக்கத்துக்கும் ஆனந்தி மேல் ஆசை. ஒரு நாள் ஆனந்திக்கு மாணிக்கம் முத்தம் கொடுத்துவிடுகிறான். ஆனந்தி தான் கறைபட்டுவிட்டோம் என்று எண்ணி மாணிக்கத்தை மணக்கிறாள். அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவியம் கீவியம் எதிலும் ஆர்வம் கிடையாது. இருவருக்கும் நடுவில் நிறைய பிணக்குகள். சண்டை முற்றிப்போய் சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் அண்ணாமலையை பண விஷயத்தில் ஏமாற்றிவிடுகிறான். ஆனந்தி அவனை கடியும்போது அவள் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. உடனே புரட்சி நடந்து ஆனந்தி அண்ணாமலை இணைகின்றனர்.

அகிலன் அளவில் – அவரது மற்ற புத்தகங்களோடு ஒப்பிட்டால் – சாதனைதான், புரட்சிதான். ஆனால் cliche பாத்திரங்கள், உபதேசங்கள், கலை-பணம், நகரம்-கிராமம் வழக்கமான ஒப்பிடல்கள், அய்யகோ நாட்டின் நிலை இப்படி ஆகிவிட்டதே புலம்பல்களைத் தாண்டவில்லை. ஒரு நல்ல புனைவுக்கு வேண்டிய எந்த நயமும் இல்லை. இதுதான் தமிழின் சிறந்த புனைவு என்று இதை எல்லாம் மொழிபெயர்த்து வேற்று மொழிக்காரன் படித்தால் – அதுவும் கன்னட, மலையாள, வங்காள வாசகர்கள் படித்தால் நம் மானம் போகும்.

இது டிவி தொடராக வந்தது என்று சாரதா தகவல் தருகிறார்.

அவரது வேறு சில புத்தகங்களைப் பற்றி தனியாக பதிவு எழுத பொறுமை இல்லை, அதனால் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

துணைவி: சித்திரப் பாவையின் forerunner மாதிரி இருக்கிறது. கல்லூரி காலத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாயகி வேறு ஒருவனை மணக்கிறாள். வாழ்வு சுகப்படவில்லை. நாயகன் எதிர்பாராத விதமாக அடுத்த வீட்டுக்கு குடிவருகிறான். அவனுக்கும் அப்போது ஆசை இருந்தது என்று தெரியவருகிறது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல, இவன் மறுக்க, அது தெரிந்ததும் நாயகியின் கணவன் திருந்துகிறான். டைம் பாஸ். எப்படி சித்திரப்பாவை உருவானது என்று புரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்கலாம்.

நெஞ்சின் அலைகள்: புகழ் பெற்ற, ஆனால் ஏமாற்றம் தரும் நாவல். இந்திய தேசிய ராணுவ பின்புலம் என்றால் நேதாஜி ஒரு சீனில் வந்தால் போதும் என்று நினைத்து எழுதுபவரை என்ன சொல்வது? அம்பிகாபதி அமராவதி நாடகம் பின்னால் தொங்கும் படுதாவில் பாலைவனக் காட்சி இருந்தால் லைலா மஜ்னு நாடகம் ஆகிவிடுமா? அதே உப்பு சப்பில்லாத காதல், அதே முக்கோணம், நாயகன் என்ற ஒரே காரணத்துக்காக காதல் வசப்படும் பெண்கள், அதே உபதேசங்கள், படுதாவை மட்டும் மாற்றிவிட்டு ஆஹா ஓஹோ என்றால் எந்த சுவரில் போய் முட்டிக் கொள்வது?

அவளுக்குஅகிலன், ஆர்வி உட்பட நான்கு பேர் எழுதி இருக்கிறார்கள். நான்கு கடிதங்கள். ஒரு எழுத்தாளன், ஒரு மண முறிவு ஏற்பட்ட பாடகி இருவருக்கும் “காதல்”. ஆனால் பாடகி எழுத்தாளனை சந்தேகித்து விலகிவிடுகிறாள். இது அகிலன் “அவளுக்கு” எழுதிய கடிதத்தில் வருகிறது. அப்புறம் யாரோ செல்லம் என்ற வாசகர் மிகவும் இம்ப்ரஸ் ஆகி பாடகி “அவருக்கு” எழுதுவது போல ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சந்தேகப்பட வேண்டியதில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே என்கிறாள். எழுத்தாளன் தன் முதல் காதலை சொல்கிறான். கடைசியில் ஆர்வி எல்லா முடிச்சுகளையும் சம்பிரதாயமாக தீர்க்கிறார். டைம் பாஸ் கிம்மிக்தான், என்றாலும் படிக்கலாம்.

இப்போது வேங்கையின் மைந்தன் படித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப போரடிக்குது சார்!

பாவை விளக்கு வேறு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது பயமாக இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
அகிலனுக்காக ஒரு தளம்

கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)

இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:

தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.

சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.

அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.

இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )

சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.

திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?

நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?

ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!

கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.

இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.

கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?

அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்

என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.

ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.

“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.

திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?

ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.

மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.

இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். கோவிந்தராஜன் கிருஷ்ணராவ் எழுதிய விக்கிரமனின் சபதம் கற்றுக்குட்டித்தனமாக இருக்கிறது.

தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடரும்…

அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்

முதல் பட்டியல்:

  1. பொன்னியின் செல்வன் — கல்கி
  2. சிவகாமியின் சபதம் — கல்கி
  3. மன்னன் மகள் — சாண்டில்யன்
  4. யவன ராணி — சாண்டில்யன்
  5. கடல்புறா — சாண்டில்யன்
  6. வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
  7. ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
  8. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
  9. வேங்கையின் மைந்தன் — அகிலன்
  10. மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி

இரண்டாம் பட்டியல்:

  1. பார்த்திபன் கனவு — கல்கி
  2. ஜலதீபம் — சாண்டில்யன்
  3. கன்னிமாடம் — சாண்டில்யன்
  4. மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
  5. ராஜ முத்திரை — சாண்டில்யன்
  6. கயல்விழி — அகிலன்
  7. வெற்றித்திருநகர் — அகிலன்
  8. ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
  9. கோபுர கலசம் — S.S. தென்னரசு
  10. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
  11. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
  12. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
  13. பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
  14. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
  15. திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)

ஞானபீட விருதும் தமிழும்

சாகித்ய அகாடமி விருதை துவைத்து காயப் போட்டாயிற்று. இப்போது ஞானபீடம்.

இது வரை இரண்டே இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்தான் ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். அகிலன் சித்திரப்பாவை நாவலுக்காகவும், ஜெயகாந்தன் தன் எழுத்துக்களுக்காகவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அசோகமித்திரன், லா.ச.ரா., அழகிரிசாமி, கி. ரா, தி.ஜா., சா. கந்தசாமி, ஜெயமோகன் யாரும் விருது கமிட்டி கண்ணில் படவில்லையா?

ஜெயகாந்தன் கவுரவிக்கப்பட வேண்டியவரே. அவரது தாக்கம் அவரது எழுத்துகளை விட பெரிது. ஆனால் வயதாகிக்கொண்டே போகும் அசோகமித்திரன், கி.ரா. மாதிரி ஆட்களை கவனிங்கப்பு!

சித்திரப்பாவை அகிலனின் எழுத்துகளில் சிறந்தது என்று நினைக்கிறேன். முழுமையான வெற்றி அடையவில்லை என்றாலும் நாவல் வந்த காலத்தில் அது ரசிக்கப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் நிற்காது என்று அப்போதே யூகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை.

அகிலன் 1977-இல் இந்த விருதைப் பெற்றார். அப்போது விகடனில் வந்த செய்தி: (சித்திரப்பாவை விகடனில் தொடர்கதையாக வந்தது.)

‘அகிலன் எழுதிய சித்திரப் பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு’ என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்:

‘நாலரைக் கோடி தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று, வானபீடமளவுக்கு அல்லவா உயர்ந்துவிட்டது!’

அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப் பரிசு தமிழுக்குக் கிடைத் திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் ஒரு நூல் ‘மிகச் சிறந்தது’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்த படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டார். “பாரதத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் ‘எங்கே போகிறோம்‘ நாவலுக்கென ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்” என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.

அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும் (இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய், அகிலனுக்கு வழங்கினார்.

“இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை!” என்று ‘ஞானபீடம்’ அகிலன் குறிப்பிட்டார்.

அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு, “தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளை விடச் சிறந்த மொழி. இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால், இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இந்தி பேசுகிறார்கள்” என்று பிரதமர் ரொம்ப வும் நாசூக்காக இந்திப் பிரச்னையை நினைவுபடுத்தினார்.

“சித்திரப்பாவைக்கு இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்” என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்.

இது வரை இந்த விருதை வென்றவர்கள் லிஸ்டை இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  • ஞானபீட தளம்
  • ஞானபீட விருது வென்றவர்கள் லிஸ்ட்
  • ஜெயகாந்தன் பக்கம்
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் பகுதி I, பகுதி 2
  • சாகித்ய அகாடமி பற்றி ஜெயமோகன்