Ma Rainey’s Black Bottom

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதைக்கு கரு மனதில் வந்தது. அதை எழுதிவிட்டு அதற்கப்புறம் பதிவுகளைத் தொடரலாம் என்று நினைத்தேன். சிறுகதை பாதியில் stuck ஆகி நிற்கிறது. சரி பதிவுகளையாவது தொடர்கிறேன்.

Ma Rainey’s Black Bottom திரைப்படத்தைத்தான் முதலில் பார்த்தேன். நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. வயோலா டேவிஸ், சாட்விக் போஸ்மன் நடித்தது. நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஆகஸ்ட் வில்சன் எழுதிய நாடகத்தைத்தான் திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நாடகத்தைத் தேடிப் பிடித்து படித்தேன். நல்ல நாடகமும் கூட. நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. திரைப்படம் நாடகத்தை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கிறது.

மா ரெய்னி உண்மை நபர். அமெரிக்கக் கறுப்பர். Blues இசைப்பாணியின் முன்னோடி. Mother of the Blues என்றே அறியப்பட்டவர். 150 வருஷங்களுக்கு முன் – 1886-இல் – பிறந்து 1939-இல் மறைந்தவர். Ma Rainey’s Black Bottom என்பது அவருடைய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. அதிலிருந்து ஒரு இசைத் துணுக்கு கீழே.

1927-இல் சிகாகோவில் ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் நாடகம். மா ரெய்னி அப்போது புகழ் பெற்ற பாடகி. பொதுவாக மா ரெய்னி அப்போது கறுப்பர்கள் நிறைந்த இடங்களில் நேரடியாக கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். கறுப்பர்கள் அதிகமாக இருந்த அமெரிக்காவின் தென் மாநிலங்களில்தான் அனேகமாக இந்த மாதிரி கச்சேரிகள் நடக்கும். ஆனால் இப்போது வெள்ளையர்கள் பிரக்ஞையிலும் நுழைந்து கொண்டிருந்தார். மேலும் ஒலிப்பதிவுகள், ரெகார்டுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த தருணம்.

சிகாகோவில் ஒரு ரெகார்டிங் கம்பெனி மா ரெய்னியின் சில பாடல்களை அன்று ஒலிப்பதிவு செய்யப் போகிறது. மா ரெய்னியின் வெள்ளைக்கார மானேஜர் இர்வின், ஸ்டுடியோவின் வெள்ளைக்கார அதிபர் ஸ்டர்டிவண்ட் ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பின்னணி இசைக்கலைஞர்களான டொலீடோ, கட்லர், ஸ்லோ ட்ராக் (Slow Drag), லெவீ வந்தாயிற்று. முதல் மூவரும் அனுபவம் உள்ளவர்கள், மா ரெய்னியுடன் பல நாட்களாக, ஆண்டுகளாக வாசிப்பவர்கள். லெவீ இளைஞன், குழுவுக்கு கொஞ்சம் புதியவன். தானே இசையை உருவாக்க விரும்புபவன். மா ரெய்னியின் புகழ் பெற்ற பாடல்களையே மாற்றி இசை அமைக்கிறான், அது மானேஜர் இர்வினுக்கு பிடித்தும் இருக்கிறது. ஆனால் கட்லரும் மற்றவர்களும் மா ரெய்னி அப்படி மாற்றுவதை அனுமதிக்க மாட்டார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள், லெவீயை அதை உணர வைக்க முயற்சி செய்கிறார்கள்.

லெவீக்கு ஒரு பின்கதை இருக்கிறது. அவனது சிறு வயதில் வெள்ளையர்கள் அவனுடைய அம்மாவை அவன் கண் முன்னாலேயே கற்பழிக்கிறார்கள். வீட்டுக்கு திரும்பும் அப்பா குடும்பத்தை பத்திரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்த்துகிறார். அதற்குப் பிறகு கற்பழித்தவர்களில் பாதி பேரைக் கொல்கிறார். மீதிப் பேரைக் கொல்வதற்கு முன் அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டது. நிறைய மன அழுத்தத்தில் இருக்கிறான். கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற இசைக்கலைஞர்களிடம் சின்னச் சின்ன பூசல்கள். கட்லருடன் கைகலப்பே ஏற்படுகிறது.

லெவீ வெள்ளையர்களிடம் சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கிறான். மா ரெய்னியிடம் வெள்ளையர்களுக்கு காரியம் ஆக வேண்டும், குறிப்பாக மானேஜர் இர்வினுக்கு காரியம் ஆக வேண்டும், அதனால் பணிந்து போகிறார்கள். அதே போல இப்போது வெள்ளையர்களிடம் பணிந்து போனாலும் மா ரெய்னி போன்ற இடத்துக்கு வர வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறான். குறிப்பாக புதிய பாடல்களை பதிவு செய்ய விரும்புகிறான், அது அவனை பிரபலமான கலைஞனாக்கினால் பிறகு இந்த மாதிரி கூழைக் கும்பிடு போட வேண்டாம் என்று உணர்ந்திருக்கிறான்.

மா ரெய்னி ஒலிப்பதிவுக்கு தாமதமாக வருகிறார். கூட அவரது பெண் காதலியும். அவரது காருக்கு சின்ன விபத்து, மா இறங்கி ஒரு போலீஸ்காரனோடு தகராறு செய்கிறார். போலீஸ்காரனுக்கு ஒரு கறுப்பரிடம் கார் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மானேஜர் இர்வின் வந்து சமாதானம் செய்கிறான். மாவின் உறவுக்காரப் பையனுக்கு திக்குவாய், ஆனால் அந்தப் பையனும் ஒலிப்பதிவில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஒத்திகையின்போது பையன் சொதப்பிக் கொண்டே இருக்கிறான்.

லெவீ மா ரெய்னியின் பெண் காதலிக்கு நூல் விடுகிறான். அந்தப் பெண்ணும் பதிலுக்கு நூல் விடுகிறாள். மா அவனை எச்சரிக்கிறாள். மா லெவீ தனக்கு ஒத்துவரமாட்டான் என்று உணர்ந்திருக்கிறாள், அவனை வேலையை விட்டு துரத்திவிடுகிறாள். மாவின் பிடிவாதங்களுக்கு எல்லாம் மானேஜரும் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மாவுக்கும் வேலை ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது.

ஒரு வழியாக ஒலிப்பதிவு முடிகிறது. லெவீ தன் புதிய பாடல்களைப் பற்றி ஸ்டர்டிவாண்டிடம் கேட்கிறான். ஸ்டர்டிவாண்ட் எனக்குப் பிடிக்கவில்லை, ஐந்து டாலர் தருகிறேன் என்கிறான். லெவீயால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவனது புதிய ஷூக்கள தற்செயலாக மிதித்துவிடும் டொலீடோவோடு பெரிய சண்டை ஏற்படுகிறது, மன அழுத்தத்துக்கு வடிகாலே இல்லாத லெவீ டொலீடோவை கத்தியால் குத்திவிடுகிறான்.

கறுப்பர்களின் மீது நடத்தப்பட்ட/நடத்தப்படும் அடக்குமுறை மிக சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. அதிகரித்துக் கொண்டே போகும் மன அழுத்தம் மிக அற்புதமாக. எம்விவியின் பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதை ஒன்றில்தான் இத்தனை அற்புதமாக மன அழுத்தத்தின் சித்தரிப்பை பார்த்திருக்கிறேன்.

அனேகமாக அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தாலும் குறிப்பாக சாட்விக் போஸ்மன், வயோலா டேவிஸ் பிரமாதம். திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் நாடகத்தையும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்