கௌரி கிருபானந்தன் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதியை தெலுகில் மொழிபெயர்ப்பதற்காக அதில் என்னென்ன சிறுகதைகள் வெளியாகின என்று தேடிக் கொண்டிருக்கிறார், தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். கடைசியில் அவரே கண்டுபிடித்துவிட்டார். எப்படி? கு. அழகிரிசாமியின் மகன்களான திருவாளர்கள் சாரங்கராஜன் மற்றும் ராமச்சந்திரன் புத்தகத்தை இரவல் கொடுத்து உதவி இருக்கிறார்கள்!
சாதாரண விஷயம் என்று நான் நினைத்திருந்தது எத்தனை சிரமமான விஷயம் என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டுபிடிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகி இருக்கிறது. கடைசியில் புத்தகத்தின் பிரதி அழகிரிசாமியின் மகன்களிடமிருந்துதான் பெறப்பட்டிருக்கிறது. இதற்கே இவ்வளவு கஷ்டம் என்றால் எங்கெங்கோ சிறுகதைகளைத் தேடி தட்டச்சிடும் சென்ஷே, அழியாச்சுடர்கள் மாதிரி ஒரு தளத்தை நடத்தும் ராம், ஓப்பன் ரீடிங் ரூம் நடத்தும் ரமேஷ், தொகுப்புகள் தளத்தை நடத்தும் சிங்கமணி இவர்களை எல்லாம் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களை விடுங்கள், இவர்களாவது டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்கள், ஊர் ஊராக அலைந்து திரிந்து புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தேடி கையால் பிரதி எடுத்து பதிப்பித்த வேதசகாயகுமார், கிராமம் கிராமமாக அலைந்து நாட்டார் பாடல்களையும், கதைகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்யும் நா. வானமாமலை, அ.கா. பெருமாள் போன்றவர்களுக்கு எல்லாம் கோவில்தான் கட்ட வேண்டும்!
டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி மேல் இணைக்கும் சிறுகதைக்களுக்காவது பதிப்பு விவரங்களை – எந்தப் பத்திரிகை/புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, எந்தப் பதிப்பு, பதிப்பகம், வெளியான தேதி இத்யாதி – பதிவு செய்யுங்கள். எதிர்கால வேதசகாயகுமார்களுக்கு உதவியாக இருக்கும்.
அன்பளிப்பு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் திருவல்லிக்கேணி தமிழ்ப் புத்தகாலயம் (இன்னும் இருக்கிறதா?) முதல் பதிப்பு 1967இல் வந்திருக்கிறது. நான் அன்பளிப்பு எல்லாம் ஐம்பதுகளில் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். (அழகிரிசாமி எப்போது இறந்துபோனார்?)
அன்பளிப்பு கதை வரிசை
- அன்பளிப்பு
- ஏமாற்றம்
- ராஜா வந்திருக்கிறார்
- இரண்டு பெண்கள்
- இரண்டு ஆண்கள்
- சாப்பிட்ட கடன்
- கல்யாண கிருஷ்ணன்
- ஞாபகார்த்தம்
- அழகம்மாள்
- திரிவேணி
- தேவ ஜீவனம்
- எங்கிருந்தோ வந்தார்
புத்தகத்தில் உள்ள பதிப்புரை:
திரு கு. அழகிரிசாமி அவர்களின் 9வது கதைத் தொகுதி இது. தமிழில் 9 கதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
திரு. அழகிரிசாமி எழுதியுள்ள கதைகள் எண்ணிக்கையில் மட்டும் அதிகம் அல்ல. தரத்திலும் மிக உயர்ந்தவை. அவருடைய கதை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒரு உண்மையைத் தெளிவாக விளக்கும் ஆற்றல் படித்தவை. வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பலகோணங்களில் நின்று கவனித்தும் பல்வேறுபட்ட கதைகளைப் படைத்துள்ளார். இத்தொகுதில் அடங்கியுள்ள ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு போன்ற கதைகள் அவருடைய சிறந்த படைப்புகள். இரண்டு பெண்களுக்கு இணையான கதை தமிழ் மொழியில் அபூர்மாகவே கிடைக்கும்.
இந்த நல்ல தொகுதியை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியருக்கு நன்றி.
பின்குறிப்பு: இங்கே இருப்பது கௌரி அவர்களின் அறுபதாம் கல்யாண புகைப்படம். படு ஜோராக இருக்கிறது! தம்பதியருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள், அழகிரிசாமி பக்கம்