2017 பரிந்துரைகள்

2017-இல் நான் படித்தவற்றில், மீண்டும் படித்தவற்றில், நினைவு கூர்ந்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே.

தமிழ்:


ஆங்கிலம்:


கவிதைகள்:


காமிக்ஸ்:

  • அப்போஸ்டோலோஸ் டோக்சியாடிஸ்: Logicomix
  • ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்: Asterix and the Goths, Asterix the Gladiator, Asterix and the Banquet, Asterix the Legionary, Asterix and the Chieftain’s Shield, Asterix and the Olympic Games, Asterix and the Cauldron, Asterix and the Roman Agent, Asterix and the Laurel Wreath, Asterix and the Soothsayer, Obelix and Co., Asterix and the Golden Sickle, Asterix and Cleopatra, Asterix and the Big Fight, Asterix in Britain<, Mansions of the Gods, Asterix and the Caesar’s Gift, Asterix and the Great Crossing<, Asterix in Belgium, Asterix and the Great Divide, Asterix and the Black Gold
  • பில் வாட்டர்சன்: கால்வின் அண்ட் ஹாப்ஸ்
  • மதன் ஜோக்ஸ்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ராமானுஜர் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், பி.ஸ்ரீ.யின் புத்தகம்

சமீபத்தில் பி.ஸ்ரீ. எழுதிய ராமானுஜர் என்ற புத்தகத்தைப் படித்தேன். 1965-இல் இந்தப் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய இ.பா. தொகுத்திருக்கும் குருபரம்பரைக் கதைகளைத்தான் தொகுத்திருக்கிறார். ஆனால் பி.ஸ்ரீ. எழுதுவதற்கும் பழைய குருபரம்பரைக் கதைகளை நேராகப் படிப்பதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. புத்தகத்தைப் பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஏறக்குறைய ஒரு காலட்சேபத்தைப் படிப்பது போல இருந்தது. இதற்கு சாஹித்ய அகாடமி விருது என்று தெரிந்தபோது எவண்டா இதைப் பரிந்துரைத்தான் என்று கடுப்புதான் வந்தது.

pi_sriபி.ஸ்ரீ.யின் ராமானுஜர் ஒரு தொன்மத்தின் நாயகர். ஆனால் இ.பா.வின். ராமானுஜர் நம் காலத்தவர் – உண்மையில் எந்நாளும் சம்காலத்தவராகவே தோன்றுவார். காந்தி போன்றவர். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் படிக்கும்போது இ.பா. இந்த நிகழ்ச்சியை எப்படி விவரித்திருக்கிறார் என்றுதான் மனம் போய்க் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இ.பா.வின் நாடகம் எப்படியோ என் மனதில் ராமானுஜர் தொன்மம்+வரலாற்றுக்கு gold standard ஆகி இருக்கிறது! இத்தனைக்கும் குருபரம்பரைக் கதைகள் வரலாற்றை தொன்மமாக மாற்றுகின்றன என்றுதான் நினைக்கிறேன். வரலாற்று நிபுணர்கள் இந்த குருபரம்பரைக் கதைகளில் பலவற்றை மறுக்கிறார்கள். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் கட்டுரையைப் பாருங்கள்.

பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் பற்றி எழுதுவதை விட இ.பா.வின் நாடகத்தைப் பற்றி எழுதுவது உத்தமம் என்று அக்டோபர் 2010-இல் எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

ராமானுஜர் நான் admire செய்யும் ஆன்மீகவாதிகளில் ஒருவர். அவருடைய ஆன்மீகத்தை – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் – பற்றி பேசும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய எந்த ஆன்மீகவாதியும் என் பெருமதிப்புக்குரியவரே. எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் வைணவம் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், ஆனால் காலம் போகப் போக அந்த குடைக்கு கீழே வந்தவரெல்லாம் பிராமணர் – அதுவும் அய்யங்கார் – ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (பசவருக்கும் இப்படித்தான் ஆனது.) திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை ராமானுஜர் மற்றவருக்கு சொல்லும் கதை உண்மையோ பொய்யோ – ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது. இந்திரா பார்த்தசாரதியையும் ராமானுஜரின் சமூக நோக்கு கவர்ந்திருக்கிறது. அந்த நோக்கை emphasize செய்து ராமானுஜர் பற்றிய சுவாரசியமான வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளை (legends) அவர் ராமானுஜர் என்ற நாடகம் ஆக்கி இருக்கிறார்.

இ.பா.வின் வார்த்தைகளில்:

தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சமகாலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம். ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது.

குரு பரம்பரைப்படி: ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சி யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் கற்கிறார். சிஷ்யன் போகும் போக்கு பிடிக்காததால் காசிக்கோ எங்கோ போகும்போது யா. பிரகாசர் ராமானுஜரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் ராமானுஜர் தப்பிவிடுகிறார். அவர் மனைவி தஞ்சம்மா. தஞ்சம்மா ராமானுஜரின் சமூக நோக்கை ஏற்பவர் அல்ல, ஜாதி வித்தியாசம் பார்ப்பவர். ராமானுஜரின் பிராமண ஜாதியில் பிறக்காத குருமார்களை தஞ்சம்மா அவமதிப்பது அவர் துறவறம் ஏற்க இன்னுமொரு தூண்டுதலாக அமைகிறது. ஆளவந்தார் அவரை வைஷ்ணவர்களின் அடுத்த தலைவராக, தன் வாரிசாக நியமிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி என்று பல ஆசிரியர்கள். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ரகசியமான வைணவ தத்துவங்களை கற்கச் செல்கிறார் ராமானுஜர். தி. நம்பி இவற்றை யாருக்கும் சொல்லக்கூடாது, சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று எச்சரிக்கிறார். ஆனால் ராமானுஜரோ கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லாருக்கும் சொல்லித் தருகிறார். இத்தனை பேர் பிழைக்கும்போது நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார். தலித் மாறனேர் நம்பிக்கு உதவி செய்ததால் பிராமண பெரிய நம்பியை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் ரங்கநாதன் உற்சவமாக ஸ்ரீரங்கம் வீதிகளில் வரும்போது தேர் அவர் வீட்டு வாசலிலிருந்து நகரமாட்டேன் என்கிறது. பெரிய நம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை வாபஸ் வாங்கிய பிறகுதான் தேரை நகர்த்த முடிகிறது. பல ஜாதிக்காரர்களான முதலியாண்டான்+கூரேசர் (பிராமணர்கள்), உறங்காவில்லி-பொன்னாச்சி (மறவர்?) என்று பல சிஷ்யர்கள். ஜாதி சம்பிரதாயம் உடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் எதிரியான நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜன் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை ஸ்தாபிக்கிறார்/வலுப்படுத்துகிறார். துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயதில் மரணம்…

இ.பா. இந்த குரு பரம்பரைக் கதையை நாடகம் ஆக்கி இருக்கிறார். பல supernatural legends-ஐ சாதாரண நிகழ்ச்சிகளாக காட்டுகிறார். (ராமானுஜர் பேய் ஓட்டும் காட்சி) ராமானுஜரின் சமூக சீர்திருத்த உணர்வுகளை தூக்கிப் பிடிக்கிறார். ராமானுஜர் வைணவத்தை ஆன்மீகமாக மட்டும் இல்லாமல் சமூகத்தை மாற்றும் ஒரு சக்தியாக பார்ப்பதாக நமக்கு தோன்ற வைக்கிறார் இ.பா. இது historically accurate-தானா என்று எனக்கு கேள்விகள் உண்டு. ராமானுஜருக்கு ஆன்மீகமே முக்கியம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவை இரண்டாம் பட்சமே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ராமானுஜரின் ஆன்மீகத்தைப் பற்றி – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி – எனக்கு தெரிந்தது பூஜ்யமே. இ.பா.வுக்கு என்னை விட ராமானுஜர் பற்றியும், அவரது ஆன்மிகம் பற்றியும், பொதுவாக வைஷ்ணவம் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ராமானுஜரின் வாழ்க்கை legends பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு revelation ஆக இருக்கலாம். படிப்பதை விட இந்த நாடகம் பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். ஆனால் இ.பா. எழுதி இருக்கும் விதம் அவ்வளவு exciting ஆக இல்லை. அதே போல நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்கும் கூரேசரிடம் ஆயிரம் ராமானுஜன் ஒரு கூரேசனுக்கு சமம் ஆகார் என்று சொல்லும் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்று. இவற்றை underplay செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இ.பா. அப்படி நினைக்கவில்லை. 🙂

இந்த நாடகத்துக்காக இ.பா. சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கிறார்.

படிக்கலாம். தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. அதனால் நிச்சயமாக படிக்கலாம். ஆனால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது.

பின்குறிப்பு: பி.ஸ்ரீ. எழுதிய மணிவாசகர் சரித்திரம் என்ற புத்தகமும் கிடைத்தது. இதுவும் தெரிந்த விஷயங்களைத்தான் திரும்பக் கூறுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், விருதுகள், இ.பா. பக்கம்

தொடர்புடைய பக்கம்: ராமானுஜரும் குலோத்துங்க சோழனும் – டாக்டர் ஆர். நாகசாமி

கால வெள்ளம் – இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல்

(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு – பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.)

ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள்.

குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.

அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன.

1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது.

பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

மீள்பதிப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2010-இல்.

இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பிரபலமானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.

இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.

குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது!

இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின்செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.

குருதிப்புனலில் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.

நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.

புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம். 🙂

ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:

ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமல் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.

குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்

.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

  • கீழ்வெண்மணி நாவல்கள்
  • ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை

    indira partthasarathiஇ.பா.வை நான் அவ்வளவாக ரசித்ததில்லை. அவருடைய பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆவது சில சமயம்தான். புகழ் பெற்ற நாவல்கள் – குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, கிருஷ்ணா கிருஷ்ணா, தந்திரபூமி, சுதந்திரபூமி, ஏசுவின் தோழர்கள் – எல்லாம் எனக்கு குறைபட்ட நாவல்களாகவே தெரிகின்றன. அவருடைய நாவல்களில் inside joke அதிகம் என்று நினைக்கிறேன். டெல்லி வாழ் தமிழ் அறிவுஜீவிக் கூட்டம் இது யார் அது யார் என்று புரிந்துகொண்டு அவற்றை ரசித்திருக்கலாம். இவற்றை எல்லாம் விட அறிவுஜீவித்தனம் அவ்வளவாக வெளிப்படாத அவருடைய முதல் நாவலான காலவெள்ளம் இயற்கையாக இருந்தது, எனக்குப் பிடித்திருந்தது.

    அவருடைய நாடகங்களைப் பார்க்க வேண்டும், படிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நந்தன் கதையைப் படித்தபோது இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பானேன் என்றுதான் தோன்றியது. ஆனால் அதை பார்த்தது – இத்தனைக்கும் வீடியோவில் பார்த்தது – ஒரு நல்ல அனுபவம். ராமானுஜர், அவுரங்கசீப் எல்லாவற்றையும் என்றாவது பார்க்க வேண்டும்.

    இப்படி குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும் இ.பா. என் கண்ணிலும் இலக்கியவாதிதான். அவர் படைப்பது இலக்கியம்தான். எல்லாவிதமான இலக்கியமும் எனக்கு பிடித்துவிடுவதில்லை என்பதை நான் அவர் மூலம் அறிந்து கொண்டேன், அவ்வளவுதான். அவர் மேல் மரியாதை இருக்கிறது, ஆனால் அவரது படைப்புலகம் எனக்கானதல்ல. அவரது வாரிசு என்று சொல்லக் கூடிய ஆதவனின் படைப்புலகமோ, ஆஹா, என்னுடையது, என்னுடையது, என்னுடையதேதான்!

    ஜெயமோகன் அவரது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், குருதிப்புனல், தந்திரபூமி, சுதந்திரபூமி ஆகியவற்றை இரண்டாம் வரிசைத் தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கப் காப்பி, குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும், இளஞ்செழியன் கொடுத்த பேட்டி ஆகியவற்றை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். (Disclaimer: இந்த சிறுகதைகள் அவரது அழகியல் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல, ஒரு திறனாய்வாளனின் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்.) எஸ்ரா குருதிப்புனல் நாவலை சிறந்த நூறு தமிழ் நாவல்கள் பட்டியலிலும், ஒரு கப் காப்பியை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

    ஒரு கப் காப்பியை பற்றி எழுதத்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். அது எங்கெல்லாமோ போய்விட்டது.

    இ.பா. பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆகும் சிறுகதை இது. கொடுமையான வறுமையில் வாழும் பிராமணக் குடும்பம். குடும்பத் தலைவன் ராஜப்பாவுக்கு புரோகிதம் செய்ய மந்திரம் தெரியாது. கல்யாணத்திலும், கருமாதியிலும் பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்ற நம்புபவர்களை வைத்து பிழைக்கிறார்கள். அதற்காக ராஜப்பாவுக்கு குடுமி, ஸ்ரீசூர்ணம், பஞ்சகச்சம் என்று வெளிவேஷம். ஒரு நாள் காலை எழுந்ததும் வீட்டில் காப்பிப்பொடி இல்லை, வாங்கப் பணமும் இல்லை, பக்கத்து, எதிர்வீட்டில் இனி மேல் இரவல் வாங்கவும் முடியாது. எதிர்பாராமல் பால்ய சினேகிதனை சந்தித்தால் அவன் ராஜப்பாவின் வெளிவேஷத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு பரம வைதிகன் ஹோட்டல் காப்பி குடிப்பானா என்று காப்பி வாங்கித்தர மாட்டேன் என்கிறான்! கொடுமையான வாழ்க்கையை சித்தரிக்கும்போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

    போன பாராவைப் திருப்பிப் படித்தால் இந்தக் கதையை எல்லாம் விவரிக்க முடியாது என்று புரிகிறது, படித்துக் கொள்ளுங்கள்! இ.பா. படைப்பது இலக்கியம்தான் என்பதில் எனக்குக் கூட கொஞ்சமும் சந்தேகம் இல்லை என்றால் அதற்கு இதைப் போன்ற சிறுகதைகளும் இன்னொரு காரணம்.

    கத்தி போலக் கூர்மையான வரிகளில் ஒன்று:

    காலத்தை அனுசரித்து கோயிலில் பெருமாளுக்கு காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.

    இதே மாதிரி ஒரு கருவை வைத்து பதினைந்து வருஷம் முன்னால் நானும் ஒரு கதை எழுதினேன். மனதிற்குள் நல்ல கதை எழுதிவிட்டேன் என்று பெருமை வேறு. அதற்கப்புறம் இந்தக் கதையைப் படித்தேன். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு என் கதையை வெளியே விடுவது என்று கம்மென்றிருக்கிறேன்.

    Irony-க்காகத்தான் அடிக்கடி முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. அவஸ்தைகள் சிறுகதையிலும் அப்படித்தான் தோன்றுகிறது.

    அவருடைய தேவர் வருக சிறுகதையைப் பற்றி தனியாக எழுத முடியாது, அவ்வளவு worth இல்லை. விஷ்ணு பதினோராவது அவதாரம் எடுக்கிறார் – அரசியல்வாதியாக! தவிர்க்கலாம். இதுவாவது பரவாயில்லை, தொலைவு போன்ற சிறுகதைகளில் என்னதான் சொல்ல வருகிறார்?

    தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

    இந்திய நாடகங்கள்

    திட்டமிடாமலே நாடகங்கள், ஜெயகாந்தன் என்று இரண்டு தீம்களாக சமீபத்தியப் பதிவுகள் அமைந்துவிட்டன. (ஜெயகாந்தன் பதிவுகள் முடியவில்லை, இன்னும் ஓரிரண்டு பதிவுகள் வரும்.) அடுத்த தீமாக சில பழைய+சமீபத்திய ஜெயமோகன் பதிவுகளை வைத்து எழுதத் திட்டம். (சில பழைய பதிவுகள் “என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு அறதப்பழசு.)

    jeyamohanநாடகங்கள் பற்றி என் பதிவுகளைப் (பரிந்துரைகள், நானும் நாடகங்களும், மேற்குலக நாடகங்கள், தமிழ் நாடகங்கள்) படித்துவிட்டு ஜெயமோகனும் நாடகங்களைப் பற்றி ஒரு கோடி காட்டி இருக்கிறார். அந்தப் பதிவைப் படிக்கும்போது என் வாசிப்பு எத்தனை மேலோட்டமானது என்று புரிகிறது.

    குறிப்பாக மலையாள நாடக உலகைப் பற்றி அவர் எழுதி இருந்தது எனக்கு கண்திறப்பு. வங்காள, மராத்தி, கன்னட, ஏன் ஹிந்தி நாடக உலகைப் பற்றிக் கூட ஓரளவு தெரிந்திருந்தது. சில பழைய சமஸ்கிருத நாடகங்களைக் கூடப் படித்திருக்கிறேன். ஆனால் மலையாளம் என்றால் சுத்தம். அவர் சொல்லி இருக்கும் நாடகங்களைத் தேட வேண்டும்.

    என் போன்ற சோம்பேறிகளுக்காக அவர் குறிப்பிட்ட நாடகங்களின் பட்டியல் கீழே:

    • இந்திரா பார்த்தசாரதி – மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப், ராமானுஜர்
    • அம்பை: பயங்கள்
    • எஸ்.எம்.ஏ. ராம்: ஆபுத்திரன் கதை (இது என்னைக் கவரவில்லை)
    • பிரபஞ்சன்: முட்டை
    • ந. முத்துசாமி: நாற்காலிக்காரர் (இதை நடிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்)
    • எஸ். ராமகிருஷ்ணன்: அரவான்
    • தாகூர்: விசர்ஜனம், சித்ராங்கதா – ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே
    • குவெம்பு: பெரகெலெ கொரல் (நான் குவெம்புவின் “சூத்ர தபஸ்வி” மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் இப்போது சரியாக நினைவில்லை)
    • ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ்: மாதவி
    • சி.என். ஸ்ரீகண்டன் நாயர்: காஞ்சனசீதா, லங்காலட்சுமி
    • Chicago: (சிறந்த திரைப்படம்)
    • Guess Who Is Coming to Dinnerஸ்பென்சர் ட்ரேசி, சிட்னி பாய்டியர், காதரின் ஹெப்பர்ன் நடித்த சிறந்த திரைப்படம் பெர்னி மாக் நடித்து இந்தத் திரைப்படத்தின் உல்டா ஒன்றும் – Guess Who – வந்திருக்கிறது. (கறுப்பினப் பெண், வெள்ளை நிற காதலனாக ஆஷ்டன் குட்சர், அப்பாவாக பெர்னி மாக்)

    தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

    தமிழ் நாடகங்கள்

    எனக்குத் தெரிந்து தமிழ் நாடகங்களில் இலக்கியம் குறைவு. சுஜாதா, இ.பா., சோ ராமசாமியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜெயந்தன், ந. முத்துசாமி, மெரினா மூவரைத்தான் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியும். போனால் போகிறது என்று அண்ணாதுரையைச் (ஓரிரவுக்காக) சேர்த்துக் கொள்ளலாம். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், வெ. சாமிநாத சர்மா இவர்களின் முயற்சிகள் எல்லாம் முன்னோடி முயற்சிகள் என்பதைத் தாண்டாது. இதற்கு என்ன காரணம்?

    தமிழ் நாடகங்கள் என்ன தலைவிதியாலோ ஆரம்பத்திலிருந்தே மூன்று நான்கு டைப்களில் அடங்கிவிடுகின்றன. இதைத் தாண்டி நவீன நாடகம் எழுதி அதைப் பிரபலமும் ஆக்கக் கூடிய ஒரு ஆகிருதி, அதற்கு வேண்டிய பண வசதியை செய்து தரக்கூடிய புரவலர்கள் இன்னும் தமிழில் வரவில்லை என்பதுதான் எனக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.

    Sankaradas Swamigalஅது என்ன வகைகள்? முதல் டைப் புராண, தொன்மக் கதைகளை திருப்பி சொல்வது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் இதில்தான் ஸ்பெஷலைஸ் செய்தார்கள். ஒரே கதையை பெரும் வேறுபாடுகள் இன்றி பலரும் நாடகமாக்குவார்கள். பாட்டை மட்டும் மாற்றினால் போதும். வி.ஏ. தியாகராஜ செட்டியார் எழுதிய பக்த பிரஹலாதா, சாவித்ரி எல்லாம் இந்த ரகம்தான். வள்ளித் திருமணம் கதையை அறியாதவர் யார்? ஆர்.எஸ். மனோகர் வரைக்கும் இது தொடர்ந்தது. மறுவாசிப்பு என்பது மிகவும் அபூர்வம். (மனோகர் தான் செய்தது மறுவாசிப்பு என்று நினைத்திருக்கலாம்.) உண்மையான மறுவாசிப்பு என்றால் இ.பா. எழுதிய நந்தன் கதை ஒன்றுதான் எனக்கு நினைவு வருகிறது.

    இந்த வகை நாடகங்களில் ஒரு உட்பிரிவும் உண்டு. தமிழனின் (பழம்)பெருமை பேசும் நாடகம். பல கர்ண பரம்பரைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாடகம் ஆக்கிவிடுவார்கள். அவ்வையார் சிறந்த உதாரணம். நாரண. துரைக்கண்ணன் எழுதிய திருவள்ளுவர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கலைவாணர் (ஒட்டக்க்கூத்தர்-புகழேந்திப் புலவர் தகராறுகள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள்) நாடகங்களையும் குறிப்பிடலாம். தியாகராஜ செட்டியார் எழுதிய தூக்குத்தூக்கி (ஒரு கர்ணபரம்பரை வாக்கியத்தை நாடகமாக்கி இருப்பார்), ஞானசௌந்தரி (ஏசு அருள் புரிகிறார்) எல்லாம் இதே ரகம்தான். என் கண்ணில் இ.பா.வின் ராமானுஜரும் இதே வகைதான். எஸ்.டி. சுந்தரத்தின் இன்னொரு நாடகமான வீர சுதந்திரத்தையும் நான் இந்த வரிசையில் சேர்ப்பேன். அது சுதந்திரப் போராட்ட வீரர்களின் (வாஞ்சிநாதன், லாலா லஜ்பத் ராய், பகத் சிங், திருப்பூர் குமரன்…) கதைகளைத் தொகுப்பது.

    ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு வர வர பழைய தமிழ் மேடை நாடகங்கள் மீது ஒரு fascination. அதுவும் சங்கரதாஸ் சுவாமிகள் என்றால் விடாமல் படிக்கிறேன். அவரது மொழியை நான் மிகவும் ரசிப்பவன். அவருக்கு குசும்புத்தனமான நகைச்சுவை உணர்வும் உண்டு. உதாரணமாக பவளக்கொடி நாடகத்தில் அல்லியிடம் அர்ஜுனன் கிருஷ்ணன் தலையில் அடித்து சத்தியம் செய்கிறான். அதற்கு கிருஷ்ணன் இப்படி நீ சத்தியம் செய்து செய்து என் தலையில் நாலைந்து முடிதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்கிறான்!

    இரண்டாவது டைப் சென்டிமென்டல் மெலோட்ராமா. இடையூறுகளை சந்திக்கும் காதல், தாய் சென்டிமென்ட், அண்ணன்-தங்கை பாசம், கல்லானாலும் கணவன் சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று இதில் பல வகைகள் இருப்பது போலத் தெரிந்தாலும் ஒரே கதைதான். நாயகன்/நாயகிக்கு சில ஸ்டாண்டர்ட் இன்னல்கள் (அடங்காப்பிடாரி அண்ணி, ஏமாற்றும் நண்பன், காதலைப் பிரிக்கும் அந்தஸ்து, தாசிகளின் மோசவலை என்று இதில் ஒரு பத்து பனிரண்டு உட்பிரிவுகள் உண்டு) வரும்; அவை தீர்ந்தால் இன்பியல் நாடகம்; தீராவிட்டால் துன்பியல் நாடகம். இதுதான் கதை. இதில் பி.எஸ். ராமையா போன்றவர்கள் கொஞ்சம் மெலோட்ராமாவைக் குறைத்து எழுதி இருப்பார்கள்.

    annaமூன்றாவது டைப் “சமூக” பிரக்ஞை உள்ள நாடகங்கள். டம்பாச்சாரி விலாசத்திலிருந்து வரும் மரபு இது. அன்றைக்கு சூடாக இருக்கும் ஒரு விஷயத்தை “முற்போக்கு” அணுகுமுறையில் பார்ப்பது. அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” மற்றும் “வேலைக்காரி“, வெ. சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்“, கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அந்தமான் கைதி“, எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு எல்லாம் நல்ல உதாரணங்கள். விடுத்லைப் போர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி, சர்வாதிகாரி, சிறையில் வாடும் கவிஞன், என்று பல தேய்வழக்குகள் (cliches). வெட்டி நாடகமே என்றாலும் இது அப்போது வெற்றி பெற்றிருக்கும். எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நாடகம் வந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டதால் நான் தேய்வழக்கு என்று உணர்கிறேனோ என்னவோ.

    crazy_mohanநான்காவது வகை நாடகம்தான் எனக்கு சின்ன வயதில் தெரிந்த நாடகம் – எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் டைப் நாடகங்கள். அதுவும் ஒரு காலத்தில் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் (எஸ்.வி. சேகர் நடித்தது), டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், ஒன் மோர் எக்சார்சிஸ்ட், மகாபாரதத்துல மங்காத்தா, காதுல பூ, காட்டுல மழை என்று தொடர்ச்சியாக வந்தன. இன்னும் சிரிக்கலாம். காத்தாடி ராமமூர்த்தியும் அப்போது இரண்டு நாடகங்கள் – ஐயோ அம்மா அம்மம்மா, இன்னொரு பெயர் நினைவு வராத நாடகம், அதில் அவர் ஊட்டிக்கு வயதான காலத்தில் ஹனிமூன் போவார் – இதே ஸ்டைலில் போட்டார். அதற்கப்புறம் ஜோக் தோரணமாகவே நாடகங்கள் மாறிவிட்டன. நல்ல நாடகம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வளர்ந்தோம். காலத்தால் பிந்தைய நாடகங்கள், எழுத்துக்கள் சலித்துவிடுகின்றன, இப்போதெல்லாம் சிரிக்கவும் முடிவதில்லை. க்ரேசி மோகனின் நாடகங்களாவது தேவலாம், அவர் நகைச்சுவைப் பத்திகள் தாங்கமுடிவதில்லை. அமெரிக்காவில் கிச்சா, ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை போன்றவை சகிக்க முடிவதில்லை.

    சோ ராமசாமியும் இந்த வகை நாடகம்தான் எழுத முயற்சித்தார், ஆனால் அவரது சமூகப் பிரக்ஞை அதில் பல சமயம் ஒரு அழுத்தமான சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது, சில சமயம் கொஞ்சம் நல்ல நாடகங்களை (சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன?) எழுத வைத்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மெரினாவும் இப்படிப்பட்ட ஹாஸ்ய நாடகங்களைத்தான் முன்வைத்தார், ஆனால் அவரது தத்ரூபமான சித்தரிப்பு – குறிப்பாக பிராமண சூழல்களின் சித்தரிப்பு, அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை முறுக்கு நாடகம் – அவரது நாடகங்களை உயர்த்துகிறது.

    sujathaஇ.பா.வுக்கும் சுஜாதாவுக்கும் இதை மீறக் கூடிய இலக்கிய ஆகிருதி இருந்தாலும் சுஜாதாவுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது. அவரது லாண்டிரி லிஸ்டைக் கூட படிக்க ஒரு கூட்டம் ஒரு காலத்தில் தயாராக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் சிறந்த நாடகங்களை எழுதி இருக்கிறார் (ஊஞ்சல், டாக்டர் நரேந்திரன்) என்றாலும் அது தமிழ் நாடக உலகில் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

    ந. முத்துசாமி போன்றவர்கள் இன்னொரு ட்ராக்கில் போனார்கள். சின்ன “அறிவுஜீவி” கூட்டம், சிறுபத்திரிகைகள் படிக்கும் கூட்டத்துக்காக நாடகம் போட்டார்கள். நான் நாற்காலிக்காரன் நாடகம் மட்டுமே படித்திருக்கிறேன். அதை எல்லாம் பார்க்க வேண்டும், படிக்கக் கூடாது என்று தெளிவாகத் தெரிந்தாலும், அது என்னை பெரிதாகக் கவரவில்லை.

    இந்த டைப்களைத் தாண்டிதான் தமிழ் நாடகம் உயிர்த்தெழ வேண்டும். காத்திருப்போம், வேறென்ன செய்ய?

    பிற்சேர்க்கை: நான் இங்கே நடிக்கப்படும் நாடகங்களைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஜெயமோகன் வடக்கு முகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6) மற்றும் பதுமை என்ற இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார், இரண்டுமே சிறந்த நாடகங்கள்தான். ஆனால் அவற்றை யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்.

    கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழ் நாடக வரலாறு” பழைய தமிழ் நாடகங்கள், நாடக நடிகர்கள் பற்றி நிறைய விவரங்களைத் தருகிறது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

    நானும் நாடகங்களும்

    நண்பர் முத்துகிருஷ்ணன் மேற்குலக நாடகங்கள் பற்றி கேட்டிருந்தார். அப்போது நாடகம் பார்த்த படித்த என் அனுபவங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், அதையே ஒரு பதிவாகவும் எழுதுகிறேன்.

    எனக்கு நாடகத்தைப் பார்த்த அனுபவம் எல்லாம் சென்னை சபா வட்டங்களில் பதினேழு-பதினெட்டு வயதுக்குள் ஒரு நாலைந்து வருஷம் பார்த்தது மட்டும்தான். உறவினர்களுக்குள் நாலைந்து சபா memberships இருந்ததால் ஏதோ சில நாடகங்களைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் மௌலி, ஒய்.ஜி.பி. எல்லாருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆனால் சோவுக்கு மவுசு இருந்தது. க்ரேசி மோகன், எஸ்.வி. சேகர் போன்றவர்களுக்கு ஏறுமுகம். நான் நாடகங்களை சீரியசாகப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குத் தெரிந்த நாடக உலகம் இது மட்டும்தான். வேண்டுமென்றால் ஒரு ஏழெட்டு வருஷம் கிராமங்களில் வருஷத்துக்கு ஒரு கூத்து பார்த்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    பதினைந்து வயதுக்கு முன் நான் படித்த தமிழ் நாடகங்களோ (பாரதிதாசனின் பிசிராந்தையார், பள்ளி ஆண்டு விழாவில் எப்போதும் நடிக்கப்படும் சி.பி. சிற்றரசின் சாக்ரடீஸ் நாடகம் (விஷக்கோப்பை), சில பல சிறுவர் நாடகங்கள்) எதுவும் எனக்கு அப்போதே தேறவில்லை. என் அப்பா ஆங்கில இலக்கியம் M.A. படித்துக் கொண்டிருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நாடகங்களோ (பென் ஜான்சனின் Volpone the Fox, ஜான் வெப்ஸ்டரின் Duchess of Malfi) தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. போரடித்தன. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலமோ அந்தக் காலத்தில் ஒத்துவரவில்லை.

    நாடகத்தின் சாத்தியங்களைப் பற்றி நான் முதலில் புரிந்து கொண்டது பெர்னார்ட் ஷாவிடமிருந்துதான். ஷாவின் நாடகங்களைப் பார்க்கலாம், ஆனால் படித்தால் ஒன்றும் குறைந்துவிடாது. மேலும் நாடகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் எனக்கு ஓரளவு பிடிக்கும், அவற்றை படிக்கத்தான் முடியும். ஷாவிடமிருந்து இப்சன், டென்னசி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரைக் கண்டடைந்தேன். அவர்களிடமிருந்துதான் ஷேக்ஸ்பியருக்கு மீண்டும் போனேன். அங்கிருந்து கிரேக்க நாடகங்களுக்குத் தாவினேன். அதற்குப் பின்னால் பலரைக் கண்டடைந்தாலும் (செகாவ், ஆஸ்கார் வைல்ட், அயனஸ்கோ, பெக்கெட், லுயிஜி பிராண்டெல்லோ…) இன்னும் ஷா, இப்சன், வில்லியம்ஸ், மில்லர், ப்ரெக்ட், ஷேக்ஸ்பியர்தான் எனக்கு முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

    மேற்குலகமே எனக்கு நாடகத்தில் சாத்தியங்களைக் காட்டியது என்றாலும் இந்தியர்களுக்கும் நீண்ட நாடக பாரம்பரியம் இருக்கிறது. மிருச்சகடிகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்று. ஆனால் முத்ராராக்ஷசம் எல்லாம் அந்தக் காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல இருந்திருக்கும். (காளிதாசனை நான் இன்னும் படிக்கவில்லை, ரொம்ப வர்ணனையாக இருக்கும் என்று ஒரு நினைப்பு) ஆனால் நடுவில் எங்கேயோ மறைகழன்று போய் மத்தவிலாசப் பிரகடனம் மாதிரி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். (இது எல்லா ஊரிலும் நடந்திருக்கிறது. மேற்குலகில் harlequin என்று சில நூற்றாண்டுகளுக்கு முன் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்). அதற்குப் பிறகு பாதல் சர்க்காரும் (ஏவம் இந்த்ரஜித்) விஜய் டெண்டுல்கரும் (ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே! மற்றும் காஷிராம் கொத்வால்) கிரிஷ் கார்னாடும் (துக்ளக், நாகமண்டலா, ஹயவதனா) வந்துதான் நாடகத்தை மீட்டிருக்கிறார்கள். இது குருஜாதா அப்பாராவ் (கன்யாசுல்கம்) போன்ற முன்னோடிகளை குறைத்து மதிப்பிடுவதல்ல, கறாராக மதிப்பிடுவது.

    மிருச்சகடிகத்தின் சிறந்த திரைப்பட வடிவம் – கிரிஷ் கார்னாட் இயக்கத்தில் ரேகா, சஷி கபூரி, சேகர் சுமன், நீனா குப்தா, சங்கர் நாக் நடித்த உத்சவ் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

    கார்னாடின் துக்ளக் நாடகத்தை இங்கே பார்க்கலாம். (மெட்ராஸ் ப்ளேயர்ஸ் நடித்தது)

    ஹிந்தி நாடகங்களைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார்கள் (உதாரணம் – தரம்வீர் பாரதி) ஆனால் நான் படித்ததில்லை.

    தமிழில் உலகத் தரத்தில் மூன்றே பேர்தான் நாடகங்கள் எழுதி இருக்கிறார்கள். (சங்கரதாஸ் ஸ்வாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் முக்கியமான முன்னோடிகள் மட்டுமே.) சுஜாதா, சோ ராமசாமி மற்றும் இந்திரா பார்த்தசாரதி. சுஜாதா, இ.பா. முக்கியமான தமிழ் நாடக எழுத்தாளர்கள் என்றால் யாரும் பெரிதாக ஆட்சேபிக்கப் போவதில்லை, ஆனால் சோவா என்று புருவம் தூக்குபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சோ ஒரு கோமாளி என்ற நினைப்பு பரவலாக இருக்கிறது, அதில் உண்மையும் இருக்கிறது. சோவின் நாடகங்களைக் கெடுப்பதே அவர் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும் கோமாளி பாத்திரம்தான். ஆனால் சென்னை சபா வட்டாரத்தில் அவர் நாடகங்கள் வெற்றி பெற அதுதான் முக்கியமான காரணம். அவருக்கே அந்த கோமாளி பாத்திரம்தான் தனது நாடகங்களைக் கெடுக்கிறது என்ற பிரக்ஞை இருக்கிறதா என்று சந்தேகம்தான். ஆனால் பெரிதும் கொண்டாடப்படும் அரிஸ்டோஃபனசின் தரத்தில்தான் அவர் சில நாடகங்களையாவது – உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை – எழுதி இருக்கிறார். குறிப்பாக சாத்திரம் சொன்னதில்லை எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் ஒன்று. ந. முத்துசாமியின் நாடகங்கள் எல்லாம் (நாற்காலிக்காரன்) எனக்கு கொஞ்சம் செயற்கையாகத் தெரிகின்றன. ஒரு வேளை பார்த்தால் என் எண்ணம் மாறுமோ என்னவோ. விட்டுப்போன ஒரு பெயர் ஜெயந்தன். ஆனால் கணக்கன் போன்ற நாடகங்கள் எல்லாம் மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. என்றாவது மீண்டும் படிக்க/பார்க்க முடிந்தால்தான் என் எண்ணங்கள் உறுதிப்படும்.

    முஹமது பின் துக்ளக் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

    ஆனால் என்னதான் படித்தாலும் நாடகங்களைப் பார்த்தால்தான் நாடகம் என்றால் என்னவென்று உண்மையில் புரிந்து கொள்ள முடியும். காஷிராம் கொத்வால் நாடகத்தை (மோஹன் அகாஷே நடித்து) பார்க்கும் வரையில் எனக்கு நாடகம் என்றால் என்னவென்ற புரிதல் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எஸ்.வி. சேகர் நாடகங்களைத்தான் சிறந்த நாடகங்கள் என்று நினைத்திருந்தவனுக்கு அது பெரிய கண்திறப்பு. எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. காலமெல்லாம் சஹாரா பாலைவனதத்தில் தொண்டை வறட்சியோடு வளர்ந்த ஒருவனை; தொண்டை வரண்டிருக்கிறது என்ற பிரக்ஞை கூட இல்லாமல் அதுவே இயல்பு நிலை என்று உணர்ந்திருக்கும் ஒருவனை; திடீரென்று நயாகராவின் நடுவில் இறக்கிவிட்டது போன்ற கண்திறப்பு அது. இன்று வரையில் நான் பார்த்திருக்கும் வெகு சில நாடகங்களில் சிறந்தது காஷிராம் கொத்வாலே. அதைப் பின்னால் படித்தும் பார்த்தேன், சிறந்த படைப்புதான், ஆனால் நாடகத்துக்கும் புத்தகத்துக்கும் நடுவே தூரம் அதிகம்.

    இந்த அனுபவம் பல முறை நிகழ்ந்திருக்கிறது. கிரிஷ் கார்னாடின் தலேதண்டா, நாகமண்டலா ஆகியவற்றையும் எனக்கு படித்தத்தை விட பார்ப்பதுத்தான் பிடித்திருந்திருந்தது. இ.பா.வின் நந்தன் கதையைப் பார்த்த பிறகுதான் என்னால் அதன் நாடக சாத்தியங்களை உணர முடிந்தது. ஒதெல்லோ நாடகம் படித்துப் பார்க்கும்போது போரடித்தது; ஆனால் ஓம்காரா என்ற திரைப்படத்தைப் பார்த்ததோ மறக்க முடியாத அனுபவம். பொதுவாக ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. Comedy of Errors-உம் அப்படித்தான். ஆனால் அதன் திரைப்பட வடிவான அங்கூர் நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று.

    காஷிராம் கொத்வால் நாடகத்தை இங்கே பார்க்கலாம்.

    சினிமாவுக்கும் நாடகங்களுகும் நடுவே உள்ள எல்லைகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாடகங்களில் வசனமும் நடிப்பும் மகா முக்கியம். சினிமாவில் visual ஆக கதையை நகர்த்த வேண்டும், நாடகத்தில் வசனம்-நடிப்பு மூலம்தான் அதை நகர்த்த முடியும். அதனால் கொஞ்சம் மிகை நடிப்பு அவசியமாக இருக்கிறது. மேலும் சினிமாவில் இல்லாத பல constraints நாடகங்களில் உண்டு. அவற்றை எவ்வளவுக்கவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்களோ அத்தனைக்கத்தனை நாடகம் சிறக்கிறது. உதாரணமாக முகமூடிகள் இந்த constraints-ஐ புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றன (கமல் மாதிரி எல்லா வேஷத்தையும் தானே போட வேண்டுமென்றால் சுலபமாகச் செய்யலாம்). காஷிராம் கொத்வாலில் அரண்மனைக் கதவை காட்ட வேண்டுமா, கோரஸிலிருந்து இரண்டு பேர் கையைத் தூக்கி இணைத்துக் கொள்ள அவர்கள் நடுவே போக வேண்டும் அதுதான் கதவு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    ஆனால் அமெரிக்காவைப் பொறுத்த வரை நாடகம் கொஞ்சம் பணக்காரர்களுக்கான விஷயம். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நியூ யார்க் பிராட்வேயில் குடும்பத்தோடு ஒரு இசை நாடகம் (musical) – Once – பார்த்தோம். ஏறக்குறைய சொத்தையே எழுதி வைத்துத்தான் ஆறு டிக்கெட் வாங்க வேண்டி இருந்தது. டிக்கெட்டுக்கு கிட்டத்தட்ட நூறு டாலர் கொடுத்து கடைசி வரிசையில் உட்கார்ந்து பார்த்தோம். நாள் முழுதும் நியூ யார்க் நகரத்தில் நடந்த களைப்பில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். இடைவேளையில் எழுந்து “என்னாச்சு?” என்று விஜய் சேதுபதி ஸ்டைலில் கேட்டதை என் இரண்டு பெண்களும் இன்னும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பணம் கொடுத்து நாடகம் பார்ப்பானேன், Glengarry Glen Ross, A Few Good Men எல்லாம் சினிமாவாகப் பார்த்த மாதிரி பேசாமல் சினிமாவாக வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது!

    தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

    கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

    nhmbadri_seshadriசமீபத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது கிழக்கு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தமிழ் நாவல்களை பற்றிய ஒரு சுட்டி கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவற்றில் முக்கால்வாசியாவது தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெறுபவை, அதிகமாக விற்காத இலக்கியப் புத்தகங்கள். இவை எல்லாம் பிரமாதமாக வியாபாரம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கிழக்கு பதிப்பகம் லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நிறுவனமோ, சாகித்ய அகாடமியோ, நேஷனல் புக் ட்ரஸ்டோ இல்லை. அப்படி இருந்தும் இதைச் செய்திருக்கும் பதிப்பகத்துக்கும் அதன் நிறுவனர் பத்ரி சேஷாத்ரிக்கும் ஒரு ஜே போட வேண்டுமென்று தோன்றியது, அதனால்தான் இந்தப் பதிவு.

    தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள்!

    மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் நாவல்களின் பட்டியல்: ஆங்கிலப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

    சா. கந்தசாமியின் “சூர்ய வம்சம்” (Sons of the Sun)
    இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” (Surrendered Dreams)
    கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”
    இரா. முருகனின் “அரசூர் வம்சம்” (Ghosts of Arasur)
    யூமா. வாசுகியின் “ரத்த உறவு” (Blood Ties)
    இ.பா.
          Ashes and Wisdom
          சுதந்திர பூமி (Into this Heaven of Freedom)
          தந்திர பூமி (Wings in the Void)
          கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
    சிவசங்கரி
          Deception
          பாலங்கள் (Bridges)
    ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம்வீடு” (Lizzie’s Legacy)
    விஜயராகவனின் “Twice Born”
    ஜெயகாந்தன்
          ரிஷிமூலம் (Rishimoolam)
          ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (Once an Actress)
          உன்னைப் போல் ஒருவன்
    நீல. பத்மநாபனின்பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps)
    அசோகமித்ரன்
          இன்று (Today)
          கரைந்த நிழல்கள் (Star-Crossed)
    பி.எஸ். ஸ்ரீயின் “Temple Elephant” (சிறுவர் புத்தகம் என்று யூகிக்கிறேன்.)
    ஆதவன்
          காகித மலர்கள் (Paper Flowers)
          என் பெயர் ராமசேஷன் (I, Ramaseshan)
    வாசந்தியின் ஆகாச வீடுகள் (A Home in the Sky) – நன்றி, ஜடாயு!

    கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”, விஜயராகவனின் “Twice Born” எல்லாம் தமிழ் நாவல்தானா? ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

    இ.பா.வின் “Ashes and Wisdom”, சிவசங்கரியின் “Deception”, வாசந்தியின் “A Home in the Sky” ஆகியவற்றுக்கு ஒரிஜினல் தமிழ்ப் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

    TamBrahm Bride மற்றும் Ashes and Wisdom இரண்டும் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவை, TamBrahm Bride சும்மா pulp என்று ஜடாயு தகவல் தந்திருக்கிறார். இவற்றைத் தவிர ஜெயமோகனின்காடு” (Forest) புத்தகமும் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.


    தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

    பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

    பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

    படித்த நாவல்கள்:

    1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
    2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
    3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
    4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
    5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
    6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
    7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
    8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
    9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
    10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
    11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
    12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
    13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
    14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
    15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
    16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
    17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
    18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
    19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
    20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
    21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
    22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
    23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
    24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

    படிக்காதவை:

    1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
    2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
    3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
    4. புதிய கோணங்கி – கிருத்திகா
    5. கடலோடி – நரசையா
    6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
    7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
    8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

    சிறுகதைகள், தொகுப்புகள்:

    1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
    2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
    3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
    4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
    5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
    6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
    7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
    8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
    9. தேவன் வருகைசுஜாதா
    10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
    11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
    12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
    13. பச்சைக்கனவுலா.ச.ரா.
    14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
    15. மௌனி சிறுகதைகள் – மௌனி
    16. நினைவுப் பாதை – நகுலன்
    17. சம்மதங்கள் – ஜெயந்தன்
    18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
    19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
    20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
    21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
    22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

    கவிதைகள்

    1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
    2. பெரிய புராணம் – சேக்கிழார்
    3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
    4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
    5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
    6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
    7. வரும் போகும் – சி. மணி
    8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
    9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
    10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
    11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

    கட்டுரைகள்

    1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
    2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
    3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
    4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
    5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
    6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

    வாழ்க்கை சரித்திரம்

    1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
    2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

    நாடகங்கள்

    1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

    மொழிபெயர்ப்புகள்:

    1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
    2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
    3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
    4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

    இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்