லக்ஷ்மி

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)

சும்மா இருக்காமல் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ் புத்தகத்தைத் திருப்பிப் படித்தேன். அதனால் இந்த மீள்பதிவு.

மிதிலாவிலாஸ் எளிய நாவல். ஆனால் இன்றும் இது போன்ற எளிய நாவல்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தக் கூடியவர்களின் (அனுராதா ரமணன், சிவசங்கரி, கமலா சடகோபன் என்று ஒரு நெடிய வரிசை இன்று ரமணி சந்திரன் வரை தொடர்கிறது) வழக்கமான சூத்திரத்திலிருந்து – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – கொஞ்சம் முன்னகர்ந்து “திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” என்ற சூத்திரத்தை வைத்து இந்த நாவலை எழுதி இருக்கிறார். அன்றைய விகடன், கல்கி, கலைமகள் மாதிரி பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, வேறென்ன, சுபம்தான்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

நாவலை மீண்டும் படிக்கும்போது தோன்றிக் கொண்டிருந்த விஷயம் இதுதான். இதே கதையை, இதே சம்பவங்களை தேவகியை சூழ்ச்சி செய்பவளாக, கிரிஜாவை நாயகியாக வைத்து எழுதலாம். வம்பு பேசும் மதனி மைதிலியை எல்லாரும் கொடுமைப்படுத்துவதாக வெகு சுலபமாக மாற்றிவிட முடியும். கிரிஜாவும் மைதிலியும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் –  வீட்டின் சமையல் வேலையை கவனித்துக் கொண்டால் போதும்! அது சரி, காதலொருவன் காரியம் யாவிலும் கை கொடுப்பது வரைதான் புரட்சி எண்ணங்கள் கொண்ட பாரதியால் கூட யோசிக்க முடிந்தது.

ஆனாலும் மிதிலாவிலாஸ் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யத்தான் செய்திருக்கும். இன்றும் நாவலின் சரளம், சுலப்மாகப் படிக்கக் கூடிய தன்மை அதன் பலமாக இருக்கிறது. நாவலின் எந்த எதிர்மறைப் பாத்திரத்திமும் முழு வில்லன் இல்லை, ஏதாவது நல்ல குணம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி யாரையும் முழுதும் கறுப்பு வெள்ளையாக கறுப்பாக சித்தரிக்காததே அன்று பெரிய முன்னகர்தலாக இருந்திருக்க வேண்டும்.

லக்ஷ்மியின் சிறந்த நாவல்களில் ஒன்று. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது. தமிழில் வணிக நாவல்கள் அதுவும் பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.


லக்ஷ்மி ஒரு காலத்தில் நட்சத்திர எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த சூத்திரத்தை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று சூத்திரத்தை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் கறாராகப் பார்த்தால் அவை எல்லாமே வீண்தான்.

அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா இறக்கிறார். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946): ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை வடிவத்துக்குப் பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை வடிவத்துக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் மூலப்பதிவை எழுதும்போது படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: நாயகனை ஏமாற்றும் நாயகியின் அப்பா. நாயகன்-நாயகிக்கு தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க நாயகியை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த தண்டம்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: தண்டம். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. தண்டம்.

ரோஜா வைரம்: தண்டம் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் அனாவசியம். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு தண்டம். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ்நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, விடுதி வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறு மாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுயசரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார். அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில்தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்துகொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்திஇரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்திஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென்மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆனந்த விகடன் 11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்சபோது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு
தமிழ் விக்கி குறிப்பு

மு. ராஜேந்திரனுக்கு சாஹித்ய அகடமி விருது

2022-க்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி (2021) புத்தகத்திக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலா பாணி என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. காலா பானியைத்தான் ஒரு வேளை காலா பாணி என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. அதுவும் நாடு கடத்தலைப் பற்றிய புத்தகம் என்றால் அந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது. ஆனால் இத்தனை எளிய எழுத்துப் பிழையை யாரும் அவரிடம் சொல்லாமலா இருப்பார்கள்?

ராஜேந்திரன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதற்கு முன்னும் வடகரை, 1801 ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். 1801, காலா பாணி இரண்டும் மருது சகோதரர்களை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன.

நடுவர் குழு திலகவதி, கலாப்ரியா, மற்றும் ஆர். வெங்கடேஷ் இருந்திருக்கிறார்கள். வெங்கடேஷ் யாரென்று தெரியவில்லை. குற்ம்பட்டியலில் ராஜேந்திரனின் இன்னொரு நாவலான 1801-உம் இருந்திருக்கிறது. குறும்பட்டியலில் இருந்த மற்ற புத்தகங்கள்:

  1. ஞானசுந்தரம் எழுதிய ராமன் கதை (இலக்கிய விமர்சனம்)
  2. ஷண்முகம் எழுதிய ஏற்பின் பெருமலர் (கவிதைகள்)
  3. சந்திரசேகரன் எழுதிய கருவறை தேசம் (கவிதைகள்)
  4. குமரிமைந்தன் எழுதிய குமரிக் கண்ட வரலாறும் அரசியலும் (வரலாறு)
  5. சுப்ரபாரதிமணியன் எழுதிய மூன்று நதிகள் (சிறுகதைகள்)
  6. கோணங்கி எழுதிய நீர்வளரி (நாவல்)
  7. ராஜாராம் எழுதிய நோம் சோம்ஸ்கி (வாழ்க்கை வரலாறு)
  8. சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் (தன் வாழ்க்கை வரலாறு)
  9. முத்துநாகு எழுதிய சுளுந்தீ

சுப்ரபாரதிமணியனுக்கு இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. கோணங்கிக்கும் இன்னும் கிடைக்கவில்லையா? பாமா, யுவன் சந்திரசேகருக்கும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாரும் இன்னும் என்னதான் எழுத வேண்டும்? இந்தியக் குடிமகன் என்ற விதி எதுவும் இல்லாவிட்டால் இவர்களுக்கும் முன்னால் கௌரவிக்கப்பட வேண்டியவர் முத்துலிங்கம்!

பெருமாள் முருகனின் பூனாச்சி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தற்காக என். கல்யாணராமனுக்கும், கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதிய யாத் வேஷம் நாவலை தமிழில் மொழிபெயர்த்தற்காக கே. நல்லதம்பிக்கும் மொழிபெயர்ப்பு விருது கிடைத்திருக்கிறது. எம்.ஏ. சுசீலா (அருண் ஷர்மா எழுதிய அஸ்ஸாமிய நாவல் ஆஷிர்வாதர் ரங்), கே.வி. ஷைலஜா (ஷாபு கிளித்தட்டில் எழுதிய மலையாள தன்வரலாற்று நாவல் நிலாச்சோறு) இருவரும் குறும்பட்டியலில் இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு விருதுக்கான குறும்பட்டியலில் இருக்கும் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் ஜெயமோகன்! அவரது யானை டாக்டர் (பகுதி 1, 2, 3) புதினத்தை மலையாளத்தில்  மொழிபெயர்த்தற்காக!

யுவபுரஸ்கார் விருது பி. காளிமுத்துவுக்கு அவரது கவிதைத் தொகுப்பான தனித்திருக்கும் அரளிகளின் மத்தியம் என்ற நூலுக்கும் பாலபுரஸ்கார் விருது ஜி. மீனாட்சிக்கு அவரது சிறுகதைத் தொகுப்பான மல்லிகாவின் வீடு என்ற நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

எல்லா மொழிகளுக்குமான விருது விவரங்கள் இங்கே, இங்கே (மொழிபெயர்ப்பு), இங்கே (யுவபுரஸ்கார்), இங்கே (பாலபுரஸ்கார்)

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

ஜெயமோகன் நாவலை மொழிபெயர்க்க நிதிக்கொடை

வெள்ளை யானை எனக்குப் பிடித்த ஜெயமோகன் நாவல்களில் ஒன்று. அது சரி, பிடிக்காத ஜெயமோகன் நாவல் அபூர்வ்ம்தான்.

வெள்ளை யானை நாவலை மொழிபெயர்க்க PEN அமைப்பு நிதிக்கொடை அளித்துள்ளது. அறிவிப்பிலிருந்து:

Priyamvada Ramkumar’s translation from the Tamil of White Elephant by B. Jeyamohan

From the judges’ citation: Within the vast sub-genre of anticolonialism literature, White Elephant, a novel by the Tamil author and literary activist B. Jeyamohan, is a rarity because it gives us a fictionalized account of, arguably, the earliest Dalit uprising in India. Set in 1878 against the backdrop of the great famines in British India, the story unfolds, interestingly, from the point of view of an Irish police officer of the British Crown. Most importantly, through the character of Kathavarayan, the novel brings to the fore the forgotten legacy of Pandit C. Iyothee Thass, the first anti-caste leader from the Madras Presidency, who laid the groundwork for several other Dalit leaders like B. R. Ambedkar. Jeyamohan is a prolific and much-lauded Tamil writer, but he is mostly unknown to the Anglophone readership. This landmark historical novel, translated with much care by Priyamvada Ramkumar (who recently published the first ever book-length English translation of Jeyamohan) is a crucial intervention in our understanding of subaltern lives in India and a much-needed inclusion in anticolonial literature.

PEN அமைப்பு இலக்கியம் + மனித உரிமை, அதிலும் குறிப்பாக கருத்துரிமை இரண்டும் ஒன்றின் மூலம் மற்றொன்று முன்னே செல்லவேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் இவர்களுக்கு மாதொருபாகனுக்கும் வெள்ளை யானைக்கும் உள்ள தர வித்தியாசம் தெரியுமா என்று ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் எந்த வழியாக ஜெயமோகனின் எழுத்து ஆங்கிலம் பேசும் மேலை உலகுக்கு சென்றாலும் அதை முழு மனதாக வர்வேற்கிறேன். பிரியம்வதாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்ப்ட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
PEN அமைப்பின் அறிவிப்பு
ஜெயமோகன் குறிப்பு

அஞ்சலி: தெளிவத்தை ஜோசஃப்

காலம் தாழ்ந்த அஞ்சலிதான், தெளிவத்தை ஜோசஃப் மறைந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எந்த எழுத்தாளனுக்கும் அஞ்சலி என்பது அவர் எழுத்துக்களைப் பற்றி பதிவு செய்வதுதான் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அவரது சில எழுத்துக்களைப் பற்றி.

தெளிவத்தை ஜோசஃப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டது அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். தமிழகத்தில் அதிகம் தெரியாத நல்ல எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விருது கொடுத்த ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலகம் தளத்தில் ஜோசஃப்பின் சில புத்தகங்கள் கிடைத்தன. சில சிறுகதைகள் – மனிதர்கள் நல்லவர்கள், கத்தியின்றி ரத்தமின்றி – இணையத்தில் கிடைக்கின்றன.


நாமிருக்கும் நாடே 1979-இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. மீன்கள் சிறுகதை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஜெயமோகன் இந்தச் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

என்னுடைய நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் – விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத் தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும் துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.

பாவண்ணன் இந்த சிறுகதையை இங்கே விலாவாரியாக அலசுகிறார்.

இந்தத் தொகுப்பில் சில கதைகள் சாதாரண – தீட்டு ரொட்டி, மண்ணைத் தின்று – கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கும் “முற்போக்கு” கதைகள்தான், ஆனால் அவற்றிலும் உண்மையான சித்திரம் தெரிகிறது. நம்பகத்தன்மை, உண்மை எல்லா கதைகளிலும் நிறைந்திருக்கிறது. தேய்வழக்காகிவிட்ட கூப்பாடுகள் இல்லை. பள்ளியை சோதனை செய்ய வரும் அதிகாரி (சோதனை), கடன் வாங்கி சினிமா பார்க்க கிளம்பும் விடலைகள் (ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்), கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தமிழகத்தில் நிலம் வாங்கி அதை அனுபவிக்க முடியாத கிழவன் (நாமிருக்கும் நாடே), பேத்தியை இளமைக் கனவு பற்றி எச்சரிக்கும் பாட்டி (பாட்டி சொன்ன கதை), உயர்தர தேயிலையை அடுக்கும் இடத்தில் வேலை செய்தாலும் மோசமான தேனீரைக் குடிக்கும் தொழிலாளி (கூனல்), குரங்கு பற்றிய ஒரு கதை (அது!) எல்லாவற்றையுமே சொல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது ஜோசஃபின் சில சிறுகதைகளை ஜெயமோகனே மீன்கள் என்ற பேரில் தொகுத்திருந்தார்.

மீன்கள் சிறுகதையைத் தவிர மழலை என்ற சிறுகதை அருமையான முத்தாய்ப்பு கொண்டது. அறைக்குள் குழந்தை மாட்டிக் கொள்கிறது. கொண்டியைத் திறக்க படாதபாடு படுகிறார்கள், தாத்தா ஒருவர் எப்படியோ குழந்தைக்கு கதவைத் திறக்க சொல்லித் தருகிறார், குழந்தை வெளியே வந்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று குழம்புகிறார்கள். குழந்தை எனக்குத்தான் கதவைத் திறக்கத் தெரியுமே என்று நினைத்துக் கொள்கிறது!

அம்மா என் மனதைத் தொட்ட சிறுகதை. என் அம்மாவையே கண்டேன். சுலபமாக வந்து போகக் கூடிய செலவில், தூரத்தில் மூத்த மக்ன் இல்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பதின் சிரமங்கள். பாசமுள்ள குடும்பம் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. கோழி வெட்டும் தம்பி, இடப்பற்றாக்குறை வீடு, பேத்தி மீது பாசத்தைப் பொழியும் பாட்டி…

சிலுவை சிறுகதையும் நல்ல் முத்தாய்ப்பு கொண்டது. வர வேண்டிய பணம் வரவில்லை, கிறிஸ்துமஸ் அன்று உடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆலயத்துக்கு லாரியில் செல்ல அழைப்பு வருகிறது, அப்பா மறுக்கிறார். பிள்ளைகளுக்கு லாரியில் செல்ல கொள்ளை ஆசை. அப்பா கடுப்பில் தண்ணி அடித்து மட்டையாகிவிட, அம்மா கிளம்பச் சொல்கிறாள்!

இருப்பியல் (மகள் திருமணத்துக்காக அப்பா மதம் மாற வேண்டிய சூழ்நிலை, பாதிரியாருக்கு சம்மதமில்லை), மனிதர்கள் நல்லவர்கள் (பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் பிச்சை கிடைக்க அவன் திருடிவிட்டான் என்று நினைக்கிறார்கள்), பயணம் (நெரிசல் பஸ்ஸில் சிங்களருக்கு சலுகை), கத்தியின்றி ரத்தமின்றி (காந்தி பற்றி உரையாற்ற இருப்பவர் அநியாயத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்), பாவசங்கீர்த்தனம் (பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பெரிய மனிதர்..) என்றும் சில சிறுகதைகள். படிக்கலாம்.

ஆனால் மீன்கள் உட்பட்ட எந்த சிறுகதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று நான் தொகுத்தால் இடம் பெறாது. அது சுவையின் வேறுபாடுதான் என்று நினைக்கிறேன்.

படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் நாவல் குடை நிழல். எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

முக்கியமான (இலங்கை) தமிழ் எழுத்தாளர், ஏதாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள்! நூலஹம் தளத்தையாவது எட்டிப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தெளிவத்தை ஜோசஃப் பக்கம், அஞ்சலிகள்

பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

2022-க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சாரு நிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.

விஷ்ணுபுரம் விருது பிரபலமான ஒருவருக்கு அளிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். பூமணியையும் ஞானக்கூத்தனையும் ஒரு சிறு வட்டத்திற்குள்தான் தெரியும், சாருவின் பெயரை ஆயிரத்தில் ஒரு தமிழனாவது கேள்விப்பட்டிருப்பான்/ள் என்றுதான் கணிக்கிறேன். ஆனால் சாருவும் இது வரை விருது என்றெல்லாம் அங்கீகாரம் பெறாதவர்தான்.

என் எண்ணத்தில் முத்துலிங்கமே இந்த கௌரவத்துக்கு உரியவர், அவருக்குப் பிறகுதான் மற்றவரெல்லாம். ஆனால் நானா விருது யாருக்கு என்று முடிவெடுக்கிறேன்? 🙂

சாருவை நான் அதிகமாகப் படித்ததில்லை, படித்த வரை அவர் என் மனதை பெரிதாகக் கவர்ந்ததில்லை என்றாலும் அவரும் விருதுக்கு தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பெரிதாக மனதைக் கவராத எழுத்தாளர் விருதுக்கு தகுதியானவர் என்பது முரண்பாடாக இல்லையா என்று நீங்கள் கேட்க்லாம். சில சமயம் அப்படித்தான். உதாரணமாக காஃப்கா எனக்கான எழுத்தாளர் அல்லர். Metamorphosis நாவலை என்னால் ரசிக்க முடியவில்லை. aதனால் அவரின் எழுத்தின் தரம் தாழ்வானது அல்ல.

For the record: சாருவின் புனைவுகளில் நான் ஜீரோ டிகிரி மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும். ஜெயமோகன் சொல்வது போல பிறழ்வெழுத்துதான். படிக்கும்போது சித்தரிப்புகளால், குறிப்பாக பாலியல் சித்தரிப்புகளால் அதிர்ச்சி அடையத்தான் செய்தேன். ஆனால் அந்த முதல் அதிர்ச்சி அடங்கியதும் வாசகனை அதிர்ச்சி அடையச் செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டவை என்றுதான் மதிப்பிட்டேன். அப்படிப்பட்ட எழுத்துகளுக்கு என் மனதில் பெரிய மதிப்பு இல்லை. அதனாலேயே நான் அவரது பிற புனைவுகளைத் தேடிப் பிடித்து படிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது பழுப்பு நிறப் பக்கங்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களை நான் அறிமுக நூலாகவே மதிப்பிடுகிறேன். விரிவான அலசலாக அல்ல. இந்த மாதிரி அறிமுகங்களை நான் கூட எழுத முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அசட்டு நம்பிக்கையாக இருக்கலாம் 🙂 நானே எழுதக் கூடியது என்று மதிப்பிடுபவை எனக்கு சாதனைகளாகத் தெரிவதில்லை 🙂 க்ரௌச்சோ மார்க்ஸ் சொன்ன மாதிரிதான் –

I refuse to join any club that would have me as a member!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்
விஷ்ணுபுரம் விருது தமிழ் விக்கி பக்கம்

ஜெயமோகன் 60

ஜெயமோகனுக்கு அறுபது வயதாகப் போகிறது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கில்லை. செப்டம்பர் 18 பிறந்த நாளாம். ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு virgo. இந்திய முறைப்படி ராசி தெரியவில்லை.

ஜெயமோகனை எழுத்தாளராக நன்றாகவே அறிவேன். தமிழில் பல நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று பேரை நான் மேதைகள் என்று மதிப்பிடுகிறேன். இன்று இருப்பவர் ஜெயமோகன் மட்டுமே. (மற்ற இருவர்: புதுமைப்பித்தன், அசோகமித்திரன்) ராட்சசன் என்று செல்லமாக நினைத்துக் கொள்வதுண்டு. 🙂 என் கண்ணில் நோபல் பரிசுக்கு தகுதியானவர், ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரபலம் ஆனால்தான் அதெல்லாம் நடக்கும். இப்படி மதிப்பிட வேண்டும் என்றால் அவர் எழுத்தை கணிசமான அளவில் படித்திருக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் எழுத்தாளராக நன்றாகவே அறிவேன் என்கிறேன்.

எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்று அவர் ஒரு இயக்கமாகவே மாறிவிட்டிருக்கிறார். ஒரு குழுவை தன் வழிகாட்டுதலில் பணியாற்ற வைத்திருக்கிறார். இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்று கனவு கண்ட க.நா.சு. பார்த்திருந்தால் பூரித்துப் போயிருப்பார்.

விஷ்ணுபுரம் விருது பல குடத்திலிட்ட விளக்குகளை சின்னக் குன்றிலாவது ஏற்றி இருக்கிறது. கவிஞர்களைப் பற்றி கருத்து சொல்லும் அருகதை எனக்கு இல்லை, படிக்காதவர்கள் உண்டு, ஆனால் எனக்கு பரிச்சயமான எழுத்துக்கள் அங்கீகாரத்துக்கு முற்றிலும் தகுதியானவை. சாஹித்ய அகடமி போன்று வச்சா குடுமி சிரைச்சா மொட்டை என்ற arbitrary அளவுகோல்கள் கிடையாது. எழுத்தின் தரம் ஒன்றே தகுதி. அதிலும் அவர் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது மிகச் சிறந்த பணி.

தமிழ் விக்கி அடுத்த பெரிய பணி. ஏழெட்டு மாதங்களில் இதை உருவாக்கியது இயக்கமாக மாறியதால்தான் நடந்திருக்கிறது.

ஜெயமோகனை ஒரு ஆளுமையாக சுமாராக அறிவேன். அவரோடு வருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று நினைத்தால் இதற்கெல்லாமா சண்டை போட்டோம் என்றுதான் தோன்றுகிறது. நினைவில் இருப்பது நெகிழ்வான தருணங்கள் மட்டுமே, என் இங்கிதக் குறைவான கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக பதில் சொன்னது மட்டுமே. அவரோடு கழித்த நாட்களின், பேசிக் கொண்டிருந்த தருணங்களின் மனதில் புன்முறுவலை வரவழைக்கின்றன. குறிப்பாக அவர் பகவத்கீதையைப் பற்றி என்னோடு தொலைபேசியில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது. பிறகு வெண்முரசில் அதெல்லாம் வந்தது. கோடம்பாக்கம் ஹைரோடில் ஏதோ ஒரு விடுதியில் தங்கி இருந்தார், நான் பத்து நிமிஷம் தொலைவில் கோடம்பாக்கம் ஹைரோடில் இருக்கிறேன் என்று சொன்னபோது அந்த ரோட் எங்கே இருக்கிறது என்று என்னை திருப்பிக் கேட்டது.

நீடூழி வாழ்க, இன்றைய சாதனைகளை எல்லாம் கடந்து செல்க என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன்

எனக்கு சிறு வயதிலிருந்தே கவிதை என்றால் கொஞ்சம் ஒவ்வாமை. பாரதியைத் தவிர்த்து வேறு யார் கவிதைகளையும் விரும்பிப் படித்ததில்லை. 20-22 வயதில் பாரதியின் கவித்துவத்தை, உத்வேகத்தை மலையாளி நண்பன் ஒருவனுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போன நொடியிலிருந்து பாரதியே நல்ல கவிஞர்தானா என்று கொஞ்சம் சந்தேகம். தமிழில் பாரதியையும் பிச்சமூர்த்தியையும் விட்டால் சுமாரான கவிஞர்கள் கூட கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன். (அப்போது சங்க இலக்கியம், கம்பன் பற்றி எல்லாம் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.) பத்து வருஷத்துக்கு முன்பு கூட எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் சேர்த்து 20-30 சொல்ல முடிந்தால் அதிகம். 50 வயதுக்குப் பிறகுதான் எனக்கு நற்றிணையும் குறுந்தொகையும் அகநானூறுமே பிடிபட ஆரம்பித்தது. (ஏ.கே. ராமானுஜன் வாழ்க!)

விஷ்ணுபுரம் விருதை தமிழின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.  விருது பெற்றவர்கள் பற்றி வரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால் என் கவிதை ஒவ்வாமையால் கவிஞர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் அந்தக் கட்டுரைகளை புறம் தள்ளிவிடுவேன்; அப்படியே படித்தாலும் மேலோட்டமாக skim செய்வேன், அவ்வளவுதான்.

இந்த முறை விக்ரமாதித்யன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அப்படித்தான். ஆனால் நாளை அமெரிக்கா திரும்ப வேண்டும், இரவு தூக்கம் பிடிக்கவில்லை. விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன் எழுதியதை படிக்க ஆரம்பித்தேன். அவரது கண்ணில்:

லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.

ஜெயமோகனின் இந்த முத்தாய்ப்பை நான் வன்மையாக மறுக்கிறேன். விக்ரமாதித்யன் மது அருந்தினால் எனக்கென்ன, மாடு மேய்த்தால் எனக்கென்ன? எழுத்தாளனும் கவிஞனும் தன் எழுத்தின் வீச்சை எப்படி வந்தடைகிறான் என்பது வெறும் மேலதிகத் தகவல் மட்டுமே. அது சில சமயம் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆளுமையும் வாழ்க்கையும்தான் அவனது வரிகளை கவிதை ஆக்குகின்றன என்றால் அது கவிதையே அல்ல என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

மேலும்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது!

இதோ
இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்
இந்த
பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்
இவன்
அர்ச்சுன மகாராசா வேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்
இன்னும்
இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை
குடிக்கூலி பாக்கி
கொடுத்துவிடலாம்
கொஞ்சம்
அரிசி வாங்கிப் போட்டுவிடலாம்
வீட்டுச் செலவுக்கும்
திட்டமாகத் தந்துவிடலாம்
பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்
சொர்க்கம் ஒயின்ஸில்
கடன் சொல்ல வேண்டாம்
இன்னொரு நாள் இன்னொரு திருவிழாவில்
கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து
காத்திருக்கவேண்டிய மனசு
இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று

கற்பூர வாசனை சரியாகத் தெரியாத எனக்கே இது கவிதை என்று புரிகிறது. ஆளுமைதான் இதை எல்லாம் கவிதை ஆக்குகிறது என்பது விக்ரமாதித்யனை குறைத்து மதிப்பிடுவது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சில சமயம் கவிதையும் எழுத்தும் உருவான process சுவாரசியமாக இருக்கிறதுதான். ஆனால் ஷேக்ஸ்பியரின், பெர்னார்ட் ஷாவின், பிரேம்சந்தின், தி.ஜா.வின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களது output-தான் முக்கியம், எழுத்து உருவான process ஒரு அடிக்குறிப்பு (footnote) மட்டுமே. விக்ரமாதித்யனுக்காக வேறு விதிகள் இருக்க முடியாது.

என் போன்ற ஞானசூன்யங்களை விடுங்கள், “ஆகாசம் நீல நிறம்” தொகுப்பை 1987-இல் படித்தபோதே ஜெயமோகன் விக்ரமாதித்யனின் ஆளுமையைப் பற்றி அறிவாரா? இல்லை படித்த பிறகு அண்ணாச்சியை அறிமுகம் செய்துகொண்டாரா? அறிமுகம் ஆன பிறகு கவிதைத் தொகுப்பைப் பற்றி ஜெயமோகனுடைய எண்ணங்கள் மாறினவா என்ன? அவற்றை முதலில் அவர் குப்பை என்று நினைத்தார், பிறகு அண்ணாச்சி பழக்கம் ஆன பிறகு அவை உன்னதமான கவிதைகளாக மாறிவிட்டனவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?

ஜெயமோகன் தேர்ந்த வாசகர், விமர்சகர். இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர். சில சமயம் அப்படி அலசாமல் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலை எடுக்கிறார், எடுத்திருக்கிறார். உதாரணமாக நவீனத்துவம், பின்நவீனத்துவம் இதெல்லாம் என்ன என்று புரியாதவர்களுக்கு பாலகுமாரனிலிருந்து அசோகமித்திரனுக்கு போவது கடினம் என்பார். பாலகுமாரனைக் கடந்து அசோகமித்திரனையே படிக்க முடியாதவன், அசோகமித்திரன் எழுத்தே புரியாதவன், நவீனத்துவம் theory பற்றி எங்கே படிக்கப் போகிறான், எப்படி புரிந்து கொள்வான்? அப்படி முதலில் theoretical foundation-ஐ நன்கு கற்று பிறகுதான் அசோகமித்திரனைப் படிப்பான் என்பது பகல் கனவு. அவரே கூட புனைவுகளைப் படித்த பிறகுதான் புனைவுகளை வகைப்படுத்தி இருப்பார், அப்படி வகைப்படுத்துவதின் அடிப்படைகளைப் பற்றி படித்திருப்பார், புரிந்து கொண்டிருப்பார் என்பதுதான் என் யூகம்.

அண்ணாச்சியின் ஆளுமை அவரது கவிதைகளின் கவர்ச்சியை ஜெயமோகனுக்கு இன்னும் அதிகரித்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவை நல்ல கவிதைகளாக இல்லாவிட்டால் ஒரு நாளும் எழுதுபவரின் ஆளுமை அவற்றை கவிதைகளாக மாற்ற முடியாது. குடிகாரர்கள், நிலையான வாழ்க்கை அமையாதவர்கள் எழுதுவதெல்லாம் நல்ல கவிதை ஆகிவிடுமா என்ன? ஆளுமை, பின்புலம் தனக்கு இன்னும் ஆழ்ந்த புரிதலைத் தருகிறது என்று சொல்ல வந்தவர் இந்த வரிகளை கவிதை ஆக்குவது அண்ணாச்சியின் ஆளுமைதான் என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.

வேறு வழியில்லை 🙂 விக்ரமாதித்யனின் கவிதைகளை நானேதான் படித்து எனக்கு ஒத்து வருமா என்ற முடிவுக்கு வரவேண்டும். ஜெயமோகன் போட்டிருக்கும் கோட்டை என்னால் ரோடாக மாற்றிக் கொள்ள முடியாது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: விமர்சனம்

பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு. ஒரிஜினல் பதிவு இங்கே.

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் பழைய பாதைகள் போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

கதை மிகவும் எளிமையானது. ஊரின் (பழைய) பெருந்தலையின் வயல்களை கொஞ்சமாவது அழித்துத்தான் ரோடு போட முடியும். பெருந்தலை தடுக்கிறார். ஹேமசந்திரன் மண்வெட்டியை எடுத்து வந்து வயலை வெட்டி பாதை உருவாக்குகிறார். அவ்வளவுதான் கதை.

ஹேமசந்திரன் பாதை அமைப்பதற்காக ஊருக்கு வரும் காட்சி அருமையானது. சகாவு பஸ்ஸில் வந்து இறங்குகிறார். பீடி பிடிக்கிறார். பிறகு டீ. ஒரு மண்வெட்டியை இரவல் வாங்கிக் கொண்டு நடக்கிறார். அவர் பின்னால் பலதரப்பட்ட ஜாதியினரின் கூட்டம் மெதுமெதுவாக சேர்கிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல் வயலை வெட்டுகிறார். ஓடி வந்து அவரை மிரட்டும் பெருந்தலையிடம் பாதை இங்கேதான், என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் பாதை மேல் கை வைத்தால் தலை இருக்காது என்கிறார்.

ஜெ.எச். உரக்கக் கூவினார் ‘டேய்….டேய் தம்பி…இதோ இந்த ரோடு இங்கதான் கிடக்கும். உனக்கு சங்கிலே ஊற்றம் இருந்தா இதிலே மண்வெட்டியாலே ஒரு வெட்டு வெட்டிப்பாரு…டேய், எந்தப்போலீஸும் பட்டாளமும் காவல் நின்றாலும் உன்னை தேடிவந்து வெட்டுவோம். உன் வீட்டு முற்றத்திலே உன்னை வெட்டிப் போடுவேன்…இந்தா நூறுபேரு கேக்கத்தான் இதைச் சொல்லுதேன்…’

தம்பிசார் விழுந்துவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக ஊன்றிநடக்கும் குடை வைத்திருந்தார். தள்ளாடியபடி அவர் போய் மறைந்தார். சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள். சட்டென்று பொன்னுமணிக்கிழவர் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கூச்சலிட்டார். மொத்தக்கூட்டமும் ‘ஜே’ என்று கூச்சலிட்டது.

உன்னை வெட்டிப் போடுவேன் என்றவரை வாழ்த்த காந்திக்கு ஜே போடுவது கவிதை. இதில் எந்த முரணும் இல்லை என்பது இந்தியர்களுக்குத்தான் புரியும்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி: பழைய பாதைகள் சிறுகதை

வளைகுடா பகுதியில் வெண்முரசு திரைப்படம்

விசுவிடமிருந்து வந்த செய்தி: வாருங்களேன், எல்லாரையும் பல நாள் கழித்து பார்த்த மாதிரியும் இருக்கும்…

We are organizing the screening of a 90 minute documentary to celebrate Venmurasu on Saturday, Jun 19, 2021 at 3:00 PM in Fremont. If you are interested, please register: https://tinyurl.com/venmurasu-BayArea

Eventbrite
Venmurasu Tribute – Bay Area Screening

Where
43917 Pacific Commons Boulevard, Fremont, CA 94538
When
Sat, Jun 19, 2021 at 3:00 PM
Ticket: $20
Payment: Venmo / Paypal @ visumrs@gmail.com or we can collect cash in the event.

We will be following covid guidelines issued by Alameda county and request everyone to follow the safety protocols.
Teaser: https://youtu.be/Wc7G3j-4YV4

About Venmurasu:

Tamil writer Jeyamohan has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum) on July 16, 2020. The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. Venmurasu is based on the Indian epic, the Vyasa-Mahabharatham.

Broadly, what Venmurasu does to the Mahabharatham is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic.

Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools.

Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist.

Venmurasu Tribute Documentary: https://www.jeyamohan.in/147966/

Readers of Venmurasu have created a 90 minutes documentary as a tribute to Venmurasu, to celebrate the astonishing achievement of writer Jeyamohan. Actor Kamal Hassan, Maestro Ilayaraja, Director Vasantha Balan, Tamil Writers – A.Muthulingam, Nanjil Nadan, Su.Venugopal, Paavannan and readers of Venmurasu have shared their views on Venmurasu. The documentary also includes an operatic poem composed by Musician Rajan Somasundaram of North Carolina using verses from “Neelam” novel of Venmurasu sung by Kamal Hassan, Saindavi, Sriram Parthasarathy in collaboration with North Carolina Symphony.

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி ஃப்ரீமாண்ட் நகரில் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.

கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு.

திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 55 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu
வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/

Thanks,
https://visu.me/

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்