சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்!

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
சுஜாதா: ரத்தம் ஒரே நிறம்
நா.பா.: ஆத்மாவின் ராகங்கள்
ப. சிங்காரம்: கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, ஆத்மாவின் ராகங்கள், கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

எம்எஸ்வி அஞ்சலி – ராணிமைந்தன் எழுதிய “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.”

எம்எஸ்வி என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவருக்கு கொஞ்சம் தாமதமான அஞ்சலியாக இந்த பழைய பதிவை மீள்பதிக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இசை சினிமாப் பாட்டுதான். அதுவும் பழைய தமிழ் பாட்டு என்றால் உயிர். என் பதின்ம வயதுகளில் தனியாக மொட்டை மாடியில் ஒரு நாப்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னை ஒன்று ரேடியோ ஸ்டேஷனில் இரவு பத்திலிருந்து பதினொன்று வரைக்கும் பழைய தமிழ் சினிமா பாட்டு கேட்டது இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம், அப்போது உச்சிக்குப் போய்க் கொண்டிருந்த இளையராஜா எல்லாரையும் ரசித்துக் கேட்டாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்பினேஷன்தான் எனக்கு first among several equals. அதிலும் எம்எஸ்விதான் ட்யூன், ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று தெரியவந்தபோது எம்எஸ்வி ரொம்பவும் பிடித்துவிட்டது. சின்ன வயதில் ஒன்று மனதில் அழுந்திப் பதிந்துவிட்டால் அது மாறுவது கஷ்டம். இளையராஜா, பின்னால் ரஹ்மான் எல்லாரும் மேதைகள்தான், ஆனால் என் மனதில் எம்எஸ்விக்குத்தான் முதல் இடம். ராணிமைந்தன் இந்தப் புத்தகத்தில் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை, அவர் பட்ட கஷ்டங்கள், அவருக்கு பாடல் எழுதும் கவிஞர்கள், நடிப்புலக ஸ்டார்கள், இயக்குனர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருடனும் இருந்த உறவு, சுவையான சம்பவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். இசையைப் பற்றிய டெக்னிகல் விஷயங்களோ, இல்லை குறை நிறை இரண்டையும் பார்க்கக் கூடிய வாழ்க்கை வரலாறோ இல்லை. எம்எஸ்வி இசைப் பாரம்பரியம் எதுவும் இல்லாதவர். ஆனால் சின்ன வயதிலேயே இசைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சினிமாப் பாட்டு கேட்பதற்காக டெண்டு கோட்டையில் முறுக்கு விற்றிருக்கிறார். சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வித்வானிடம் எடுபிடி வேலை பார்த்திருக்கிறார். சினிமாவில் சேர படாத பாடு பட்டிருக்கிறார். சுப்பையா நாயுடு இவரது மெட்டுக்களை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதே நாயுடுதான் இவருக்கு சிபார்சு செய்து சான்சும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கண்ணதாசனோடு ஒரு ஸ்பெஷல் பந்தம் இருந்திருக்கிறது. வாலியைக் கை தூக்கி விட்டிருக்கிறார். எம்ஜிஆர் சினிமா ஃபார்முலாவின் முக்கிய பங்களிப்பாளர். சிவாஜி, இயக்குனர் ஸ்ரீதரோடு நல்ல உறவில் இருந்திருக்கிறார். ஹிந்தி இசை அமைப்பாளர் நௌஷத்தின் பாராட்டுக்காக ஏங்கி இருக்கிறார். ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம். ஆனாலும் அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது. ஒரு சிம்பிளான, நன்றி உணர்வு மிகுந்த, இசை மட்டுமே தெரிந்த, அதை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பியவர் என்பது புரிகிறது. சினிமா பிரியர்களுக்கு மட்டும்தான்.

வாலியின் தேர்வுகள்

வாலி நல்ல சினிமா பாட்டு எழுதக் கூடியவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது “இலக்கிய” முயற்சிகள் எல்லாம் வெட்டி. மிகவும் வலிந்து எதுகை மோனை கண்டுபிடிப்பார், எரிச்சலாக இருக்கும்.

விகடனில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது தேர்வுகள் என்னை வியப்படைய வைத்தன. விந்தனையும் கருணாநிதியையும் ஒரு லிஸ்டில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அதுவும் கருணாநிதி இப்போது ஆட்சியில் கூட இல்லை. அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

  1. காண்டேகரின் – ‘யயாதி’
  2. லா.ச.ரா.வின் – ‘ஜனனி’
  3. கண்ணதாசனின் – ‘அர்த்தமுள்ள இந்து மதம்’
  4. பழநிபாரதியின்- ‘காற்றின் கையெழுத்து’
  5. விந்தனின் – ‘பாலும் பாவையும்’
  6. கல்கியின் – ‘கள்வனின் காதலி
  7. ஜெயகாந்தனின் – ‘ஜயஜய சங்கர ஹரஹர சங்கர!’
  8. கலைஞரின் – ‘நெஞ்சுக்கு நீதி’
  9. வ.ரா-வின் – ‘கோதைத் தீவு’
  10. புஷ்பா தங்கதுரையின் – ‘திருவரங்கன் உலா’

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

ஜெயகாந்தனின் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்”

புதுமைப்பித்தன், அசோகமித்திரன் மாதிரி பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துகளால் மட்டும்தான் அறியப்படுகிறார்கள். ஜெயகாந்தனோ ஹீரோ. சுந்தரராமசாமி ஜெயகாந்தன் ஒரு பொது மேடையில் மந்திரிகள் எதிரில் (காமராஜும் இருந்தாரோ என்னவோ நினைவில்லை) கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்கிறார். அண்ணாதுரை இறந்து தமிழ்நாடே அழுது புலம்பும் வேளையில் நேற்று வரை விமர்சித்தவர் இன்று இறந்துவிட்டதால் பொய்யாகப் பாராட்டிப் பேச முடியாது என்று முழங்கியவர் அவர். விகடனும் குமுதமும் அவர் எழுத்துக்களை விரும்பிப் பதித்தன. அக்னிப்பிரவேசம் போன்ற ஒரு சிறுகதையை விகடனில் பதிப்பதற்குத் தர துணிச்சல் வேண்டும். இன்றும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அவருடைய ஆளுமை என்பது என் தலைமுறைக்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாத விஷயம். ஆனால் எழுத்தை மீறிய ஆளுமை உண்டு என்று தெரிந்திருக்கும். இந்தப் புத்தகம் அதை ஓரளவு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1945-75 காலகட்ட அனுபவங்களை இதில் எழுதி இருக்கிறார். எனக்கு விசேஷமாகத் தெரிவது அவர் உண்டாக்கிக் கொண்ட உறவுகள், சமரசம் அற்ற நேர்மை, தன நிறைகுறைகளை, நெருங்கிப் பழைய நண்பர்களின் குணங்களை மறைக்காமல் பேசும் தைரியம்.

சிறு வயதிலேயே கலை உலகத் தொடர்பு துவங்கிவிட்டது. சின்னச் சின்ன வேஷம் போட்டுப் பார்த்திருக்கிறார். சிறு வயதினருக்கே உரிய naivete இருந்திருக்கிறது. நல்லதம்பி திரைப்படத்தில் மதுவிலக்கைப் பற்றி ஆயிரம் பேசிவிட்டு வீட்டுக்குள் தண்ணி அடிக்கும் பிரமுகர்களை (என்எஸ்கே, அண்ணா?) பேர் சொல்லாமல் சாடுகிறார். தமிழ் ஒளியுடன் நண்பராக இருந்து அவர் போட்ட வேஷத்தை வெளிப்படையாக விவரிக்கிறார். விந்தன், சந்திரபாபு போன்றொரு இருந்த நட்பைப் பற்றி பேசுகிறார். திரைப்படம் இயக்கியது, வெற்றி/தோல்வி அடைந்த படங்கள், செலவு, கதைகளை கொடுத்த அனுபவங்கள், பீம்சிங், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல அனுபவங்களை எழுதி இருக்கிறார். தான் இயக்கிய “யாருக்காக அழுதான்” படத்தையே கிழிகிழி என்று கிழிக்கிறார்.

தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.

புத்தகத்தின் சிறந்த பகுதி என்று சந்திரபாபுவின் நட்பைப் பற்றிப் பேசும் பகுதியைத்தான் சொல்வேன். இரண்டு சுவாரசியமான ஆளுமைகளின் நட்பு அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கக் கேட்பானேன்? சினிமா ஆசையால் நீர்த்துப் போனவர் என்று விந்தனைப் பற்றி குறிப்பிடுகிறார், அது உண்மைதான் என்று நினைக்கிறேன்.

வேறு சில titbits: விந்தனின் “அன்பு அலறுகிறது” என்ற புத்தகத்தின் முதல் இரண்டு சாப்டர் மட்டும்தான் அவர் எழுதினாராம், மிச்சத்தை எழுதியது ஜெயகாந்தன்தானாம். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கா.மு. ஷெரிஃப், பேரை வேறு யாரோ தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று இவர் எழுத, கண்ணதாசன் தான்தான் எழுதினேன் என்று மறுத்திருக்கிறார்.

எனக்கு நா.பா.வின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவரது கனவு இப்படிப்பட்ட ஒரு மனிதனாக வாழ்வதுதான் என்று சமுதாய வீதி புத்தகத்திலிருந்து யூகிக்கிறேன்.

முக்கியமான ஆவணம். சுவாரசியமும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன், சினிமா

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயகாந்தனும் சினிமாவும்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – திரைப்படம்
ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’
அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை

கண்ணதாசனின் புனைவுகள்

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. தரம் அப்படி!

சில கதைகளை சமீபத்தில் படித்தேன். ஏண்டா படித்தோம் என்று ஆகிவிட்டது. எல்லா கதைகளுமே இப்படித்தானா என்று தெரியவில்லை. பொதுவாக சினிமாவுக்கு எழுதும்போது கொஞ்சம் சிம்பிளாக எழுதினால்தான் சரியாக வரும். இவர் கதைகளையும் அப்படியே சிம்பிளாக எழுத வேண்டும் என்று நினைத்துவிட்டார் என்று தோன்றுகிறது. மகா போர்!

சேரமான் காதலி என்ற சரித்திர நாவல் சாகித்ய அகாடமி விருதெல்லாம் பெற்றிருக்கிறது. எனக்கு ஒரு அசட்டுத்தனம் உண்டு. தண்டமான புத்தகத்தில் ஒரு ஐம்பது பக்கம் படித்துவிட்டால் எப்படியாவது தம் கட்டி படித்துவிடுவேன். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரையில் வடிவேலு மாதிரி “முடியல!”

படித்த சில புத்தகங்கள் பற்றி கீழே:
ஆயிரங்கால் மண்டபம்: ஹீரோவைப் பார்த்து உலகில் உள்ள எல்லா பெண்களும் சொக்குகிறார்கள், என் கூட படு என்று கெஞ்சாத குறைதான். இதில் சரத்பாபு (சரத் சந்திர சாட்டர்ஜி) மாதிரிதான் எழுத வருகிறது என்று பீற்றல் வேறு. என்றைக்காவது சரத்சந்திரரை படிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன், இவர் பீற்றலைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
ஊமையன் கோட்டை: ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி வந்து மீண்டும் போரிட்டதை வைத்து எழுதி இருக்கிறார். கொடுமை!
மனம் போல் வாழ்வு: மகா தண்டம். இதற்கெல்லாம் கதைச்சுருக்கம் எழுத வேண்டும் என்றால் கடுப்புதான் வருகிறது. இதில் சரத்சந்திரர் பேரை வேறு இழுக்கிறார்!
பாரிமலைக்கொடி: பாரி, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?
வேலங்குடித் திருவிழா: இன்னொரு உலக மகா தண்டம். வழக்கம் போல பெண்கள் வந்து மேலே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். அக்காவைக் கட்டியவனுக்கு தங்கையும் கேட்கிறது.
சிவப்புக்கல் மூக்குத்தி: உலகமகா தண்டம்.

சரி அபுனைவுகளைப் படித்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதுவும் ஒரு நண்பர் வனவாசம் பற்றி அடிக்கடி சொல்லுவார். அது ஒரு உருப்படாத சுயசரிதை. ஆவண முக்கியத்துவம் மட்டுமே உள்ள புத்தகம். கண்ணதாசனின் ஆரம்பகால வாழ்க்கை (1950கள் வரை). கருணாநிதியுடன் நட்பு. தி.மு.க.வில் கருணாநிதி எப்படி ஆதிக்கம் செலுத்தினார், சம்பத்அண்ணாதுரை தகராறு ஆகியவற்றை ஒரு insider விவரிக்கிறார். கருணாநிதியின் பலவீனங்கள், அரசியல் சூழ்ச்சிகள் பேசப்படுவதால் மட்டுமே இது இன்னும் படிக்கப்படுகிறது. மனவாசம் இதை விட உருப்படாத சுயசரிதை. 1960கள். என்னை எல்லாரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற புலம்பலைத் தவிர வேறு எதுவுமில்லை. கருணாநிதி மீது கொஞ்சம் காழ்ப்பு, ஈ.வெ.கி. சம்பத் மீது சில வருத்தங்கள் என்று சில பக்கங்கள். எம்ஜிஆரின் உள்ளும் புறமும் எம்ஜிஆர் மீது தாக்குதல். கட்டாயமாகத் தவிருங்கள்.

முழுதாக தவிர்க்க வேண்டிய புனைவுகள், அபுனைவுகள். கண்ணதாசனின் சினிமா பாடல்களை மட்டும் கேட்டால் போதும். என்ன எனக்கு ஒரு பிடிவாதம், சாஹித்ய அகடமி விருது பெற்ற எல்லா தமிழ் நாவல்களையும் படிக்க வேண்டும் என்று. என்றாவது ஒரு நாள் சேரமான் காதலியை முடிக்க வேண்டும்.

உங்களுக்குப் பிடித்த புத்தகம் ஏதாவது உண்டா? எதையாவது பரிந்துரைப்பீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)

இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:

தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.

சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.

அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.

இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )

சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.

திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?

நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?

ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!

கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.

இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.

கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?

அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்

என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.

ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.

“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.

திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?

ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.

மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.

இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடரும்…

அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்

முதல் பட்டியல்:

  1. பொன்னியின் செல்வன் — கல்கி
  2. சிவகாமியின் சபதம் — கல்கி
  3. மன்னன் மகள் — சாண்டில்யன்
  4. யவன ராணி — சாண்டில்யன்
  5. கடல்புறா — சாண்டில்யன்
  6. வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
  7. ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
  8. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
  9. வேங்கையின் மைந்தன் — அகிலன்
  10. மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி

இரண்டாம் பட்டியல்:

  1. பார்த்திபன் கனவு — கல்கி
  2. ஜலதீபம் — சாண்டில்யன்
  3. கன்னிமாடம் — சாண்டில்யன்
  4. மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
  5. ராஜ முத்திரை — சாண்டில்யன்
  6. கயல்விழி — அகிலன்
  7. வெற்றித்திருநகர் — அகிலன்
  8. ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
  9. கோபுர கலசம் — S.S. தென்னரசு
  10. <a href="https://siliconshelf.wordpress.com/2010/11/30/நா-பார்த்தசாரதியின்-ராண/">ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
  11. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
  12. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
  13. பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
  14. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
  15. திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)