நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)

இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:

தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.

சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.

அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.

இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )

சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.

திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?

நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?

ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!

கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.

இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.

கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?

அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்

என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.

ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.

“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.

திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?

ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.

மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.

இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடரும்…

அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்

முதல் பட்டியல்:

  1. பொன்னியின் செல்வன் — கல்கி
  2. சிவகாமியின் சபதம் — கல்கி
  3. மன்னன் மகள் — சாண்டில்யன்
  4. யவன ராணி — சாண்டில்யன்
  5. கடல்புறா — சாண்டில்யன்
  6. வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
  7. ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
  8. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
  9. வேங்கையின் மைந்தன் — அகிலன்
  10. மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி

இரண்டாம் பட்டியல்:

  1. பார்த்திபன் கனவு — கல்கி
  2. ஜலதீபம் — சாண்டில்யன்
  3. கன்னிமாடம் — சாண்டில்யன்
  4. மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
  5. ராஜ முத்திரை — சாண்டில்யன்
  6. கயல்விழி — அகிலன்
  7. வெற்றித்திருநகர் — அகிலன்
  8. ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
  9. கோபுர கலசம் — S.S. தென்னரசு
  10. <a href="https://siliconshelf.wordpress.com/2010/11/30/நா-பார்த்தசாரதியின்-ராண/">ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
  11. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
  12. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
  13. பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
  14. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
  15. திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)

சாண்டில்யனின் “கன்னி மாடம்”

கன்னி மாடம் எட்டு ஒன்பது வயதில் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. தண்டநாயகர், ஜகத்விஜயன், பராக்கிரம பாஹு, மழவராயர், அண்ணன் பல்லவராயன் போன்ற பேர்களே கவர்ச்சிகரமாக இருந்தன. அப்புறம் தலைய வெட்டி கோட்டை வாசலில் ஈட்டியில் குத்தி வைத்தல் மாதிரி action சீன்கள் வேறு.

பாண்டியர்கள் அரசு சண்டையில் ஈழ மன்னன் பராக்கிரம பாஹு தலையிட்டதும், இரண்டு தண்டநாயகர்கள் – இலங்காபுரன், ஜகத்விஜயன் – தலைமையில் ஈழப் படை வந்ததும், அவர்கள் முதலில் பல வெற்றிகள் அடைந்ததும், ஆனால் கடைசியில் சோழர்களிடம் தோல்வி அடைந்து அவர்கள் தலைகள் மதுரை கோட்டை வாசலில் வெட்டி வைக்கப்பட்டதும் வரலாறு. சாண்டில்யன் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஒரு படைத்தலைவன் அபராஜிதனை உருவாக்குகிறார். சிற்றரசன் மகள் ஒரு கன்னி மாடத்தில் வாழ்வதாகவும், அந்த கன்னி மாடம் பலம் வாய்ந்த கோட்டை என்றும், அந்த கோட்டையை பயன்படுத்தி அபராஜிதன் வீரபாண்டியனை வெல்வதாகவும் ஒரு ஐநூறு பக்கம் கதை போகிறது. முடிக்க வேண்டும் என்பதால் கடைசியில் சரித்திர நிகழ்ச்சிகளை சேர்த்து குலசேகர பாண்டியன் ஆட்சி பீடத்தில் அமர்வதாக முடித்துவிடுகிறார்.

கதையில் பெரிய relief நிறைய வர்ணனைகள், பேச்சு, காதல் இல்லாதது. ஒரு சிறு கோட்டை பாதுகாக்கப்படுவதை சுவாரசியமாக விவரிக்கிறார். ஓரளவு action இருக்கிறது. சரித்திரமும் இருக்கிறது. One of his better efforts.

ஜெயமோகன் இதை முக்கியமான இரண்டாம் நிலை historical romance என்று குறிப்பிடுகிறார்.

வானதி பதிப்பகம் வெளியீடு.

சாண்டில்யன் நூற்றாண்டு

இது சாண்டில்யனின் நூற்றாண்டாம். வாண்டு மாமாவைக் கடந்து வந்தபோது என்னைக் கவர்ந்த ஸ்டார் எழுத்தாளர் அவர். பத்து வயது வாக்கில் அவரைக் கடந்து வந்துவிட்டாலும், யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னி மாடம் போன்ற நாவல்கள்தான் நான் முதன்முதலாக விரும்பிப் படித்த பெரியவர்களுக்கான புத்தகங்கள். மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட வரலாறு பள்ளிகளில் கற்றுக் கொண்டதை விட நன்றாக நினைவிருக்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் வேஸ்ட்.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. சமயத்தில் போர்னோ மாதிரி எழுதுவார். ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? கிடுகிடுவென்று பக்கங்களை புரட்டிவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் இப்படி ஒருவர் பச்சை பச்சையாக எழுத முடிந்தது என்பது ஆச்சரியமே. ஒரு முறை குமுதத்தில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள் என்று முடிப்பார். டீனேஜ் காலத்தில் இதைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன். (கதை பெயர் நினைவில்லை, கடைசி நாயக்கர் ராணி மீனாட்சியின் மகன் விஜயகுமாரன் கதாநாயகன், சந்தாசாஹிபை பழி வாங்குவதாக சபதம் செய்திருப்பான்.)

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் சாண்டில்யனும் அவரது நெருங்கிய நண்பர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். கடல் புறா, மன்னன் மகள், ராஜயோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.

என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. இலக்கியத் தரம் இல்லை. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் அளவுக்குக் கூட அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் எழுதவில்லை. அவரது புத்தகங்கள் இன்னும் விற்கின்றன. அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்